Friday, March 26, 2010

குஷ்புவும் திருமணத்திற்கு முன்னால் உடலுறவும்!


இனி தமிழ் சமுதாயம் இவர் போன்ற நடிகைகளிடமிருந்துதான் ஒழுக்கத்தையும் கலாச்சாரத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும்.


சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குஷ்புவின் வழக்கிற்கான தீர்ப்பில் திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வது தவறல்ல என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை உண்டு பண்ணி இருக்கிறது.

பொதுவாக ஒரு வழக்கிற்கான தீர்ப்பை வெளியிடும் முன்னர் தீர்ப்பு அவ்வாறு வழங்கப்பட்டதை விளக்கி அதனால் இந்தத் தீர்ப்பை கொடுக்கிறோம் என்ற வண்ணத்தில் நீதிபதிகள் சில கருத்தை முன் வைப்பதுண்டு. அப்படித் தெரிவிக்கப்படும் கருத்து அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இருவர் சார்ந்ததாக இருக்கும். ஆனால் ஒரு சமூகத்தைச் சார்ந்ததாக இருந்தால் அந்த தீர்ப்பினால் சமூகத்தில் ஏற்படப்போகும் தாக்கம் எத்தகையது என்பதை நீதிபதிகள் யோசிக்க வேண்டும்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை சட்டப்படி தவறல்ல என்பதால் திருமணத்திற்கு முன்னால் உடலுறவு கொள்ளலாம் என்கிறார்கள் நீதிபதிகள். ஆனால் சட்டப்படி தவறில்லை என்பதற்காகவே எல்லோரும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற எண்ணம் பரப்பப்படுவது சமூகத்திற்கு நல்லதல்ல. தாயும் மகனும் உடலுறவு கொண்டால் கூட சட்டப்படி தவறில்லை என்பதற்க்காக நீதிபதியின் இந்தத் தீர்ப்பை வரவேற்றுப் பேசுபவர்கள் அவ்வாறு தங்கள் வீட்டில் நடந்து கொள்வார்களா? அப்படி ஒரு முறையற்ற உறவு பற்றிய வழக்கு வந்தால் அதற்கும் இந்த நீதிபதிகள் இதே போல சட்டப்படி தவறில்லை என்றே தீர்ப்பு சொல்வார்களா?

நித்தியானந்தா கூட சட்டப்படி குற்றம் செய்யவில்லை. ஆனால் ஆத்திகர் நாத்திகர் என்ற பேதமில்லாமல் அதற்கு மட்டும் அனைவரும் கொதிப்பது ஏன்? சட்டப்படி குற்றம் அல்ல என்பதற்காக எல்லா குற்றச் செயல்களையும் நாம் சட்டமாக்கி விட முடியாது தானே!

இந்து திருமணச் சட்டம் மற்றும் இஸ்லாம் திருமணச் சட்டம் போன்றவை திருமணத்திற்கு முன்பான வாழ்க்கையை எப்படி வரையறுத்துள்ளது என்பதை நீதிபதி விளக்கி இருக்க வேண்டும். இந்து மற்றும் இஸ்லாமியர்களுக்கான திருமணச் சட்டங்களில் திருமணத்திற்கு முன்பான உடலுறவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பதை தெளிவாகக் குறிப்பிட்டு பின்னர் இந்த தீர்ப்பை வெளியிட்டிருக்க வேண்டும்.

அப்படி இல்லாமல் பொதுப்படையாக எல்லோருக்கும் இந்தத்தீர்ப்பு செல்லுபடியாகும் என்றால் எதற்கு ஒவ்வொரு மதத்திற்கும் அவரவர் மத உணர்வுகளை மதிக்கும் பொருட்டு தனித்தனியாக திருமணச்சட்டம் வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நீதிபதிகள் தான் விளக்க வேண்டும்.

சமூகத்தின் கட்டமைப்பைப் பாதுகாக்கவும், மனிதர்களின் உணர்வுகளைப் பாதுகாக்கவும் மனிதர்களால் எழுதப்பட்டது தானே சட்டம் என்பது. ஆனால் அத்தகைய சட்டம் சமூகத்திற்கு எதிராகவும் மனிதர்களின் உணர்வுகளை பாதிப்பதாகவும் இருந்தால் அந்தச் சட்டம் எதற்காக? அப்படி ஒரு சட்டம் புத்தகத்தில் எதற்காக இருக்க வேண்டும்? மனிதர்களின் உணர்வுகளையும் வாழ்க்கையையும் பாதுகாப்பதற்க்காக உருவாக்கப்பட்ட சட்டம் அவர்களுக்கு எதிராகவே செயல்படும்போது அத்தகைய சட்டம் இருக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

உலகின் எல்லா நாடுகளும் தங்கள் மத மற்றும் சமூகக் கட்டுப்பாடுகளைச் சார்ந்தே தங்கள் சட்டங்களை இயற்றி இருக்கின்றன. இந்தியாவில் மட்டும் தான் மத ரீதியாகவும் இல்லாமல் சமூகக் கட்டுப்பாடு சார்ந்தும் இல்லாமல் கார்பரேஷன் குப்பைத்தொட்டி போல ஒரு சட்டத்தை வைத்திருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை சமூகக்கட்டுப்பாடு என்றாலே அது இந்துமதக் கட்டுப்பாடு என்றே புரிந்துகொள்ளப்பட்டிருப்பதால் அவற்றை மதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற விதத்திலேயே சட்டத்தைக் கையாள்கிறார்கள் என்பது இந்த சமூகத்திற்கு வாய்த்த கொடுமை.

தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த ஒரு முஸ்லீம் பெண் இந்த தீர்ப்பை கடுமையாக கண்டித்தார். இது குடும்பம் என்கிற அமைப்பை உடைக்கும் தீர்ப்பு என்றும், பணப்பரிமாற்றம் இல்லாத விபச்சாரத்தை இந்த தீர்ப்பின் மூலம் தூண்டிவிடப்பார்க்கிறார்கள் என்று வன்மையாக கண்டித்தார். மேலும் குஷ்பு பற்றிய பேச்சு வரும்போது, ஏற்கனவே ஒழுக்கம் இல்லாதவர்கள் ஒழுக்கம் இல்லாத வாழ்க்கையைத்தான் மற்றவர்களிடமும் போதிப்பார் என்றும் போட்டுத் தாக்கினார்.



கலாச்சார ஆசிரியை

அதே நிகழ்ச்சியில் பேசிய இந்து அமைப்பிலிருந்து வந்த ஒருவரோ, குஷ்பு திருமணத்திற்கு முன்னாடியோ பின்னாடியோ உடலுறவு வைத்துக் கொள்வது சரி என்று நினைத்தால் அது சுந்தர் சி யின் பிரச்சனை. சுந்தர் சி அனுமதித்தால் அவர் எப்படி வேண்டுமானாலும் வாழலாம். ஆனால் அந்தக்கருத்து சமூகத்தின் மீது திணிக்கப்படுவது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று வாதிட்டார்.

திருமணத்திற்கு முன்னால் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றால் திருமணத்திற்கு அவசியமே இல்லையே. அதைத்தானே இந்த இத்தாலி நாட்டு அரசாங்கமும் நாத்திக அரசாங்கமும் விரும்புகிறது. ஏற்கனவே இந்தியாவின் கலாச்சாரப் பாரம்பரியத்தை அழிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மிஷனரிகள் இந்தத் தீர்ப்பினால் ஒயின் விருந்து வைத்துக் கொண்டாடி இருப்பார்கள்.

இப்படிப்பட்ட சூழல் பெருகவேண்டும் என்று நினைத்தால் நிம்மதியான ஒரு மன வாழ்க்கையை எல்லோரும் பெறுவது சாத்தியமில்லாத ஒன்றாகி விடும். ஒவ்வொருவரும் திருமணத்திற்குப் பின்னால் தன் மனைவியையோ கணவனையோ எப்படியும் யாருடனோ வாழ்ந்தவ(ள்)ர் தானே என்ற ஒரு அலட்சியப் போக்குடனேயே வாழ்க்கை நடத்துவார்கள். ஒருவர் மீது ஒருவருக்கு அக்கரை இருக்காது. பின்னர் மேலை நாட்டு விபச்சாரக் குடும்ப வாழ்க்கை போல இங்கேயும் அலட்சியமான ஒரு குடும்ப வாழ்க்கையே மிஞ்சும். பிறக்கும் பிள்ளைகளும், எப்படியும் இவர்கள் நம்மைப் பெற்றவர்கள் இல்லை. இவர்களுக்காக நாம் ஏன் கஷ்டப்பட வேண்டும் என்று தன் போக்கில் வாழத்துவங்கி விடுவார்கள். குடும்பம் என்ற அஸ்திவாரம் ஆட்டம் கண்டு போகும். பிறகு அமெரிக்கா போன்றே குடும்பமும் நாடும் ஸ்திரத்தன்மையற்ற வாழ்க்கையையே எதிர் நொக்கி இருக்கும்.

யாருக்கும் நாகரீகமோ பாரம்பரியமோ இருக்காது. உலக நாடுகள் எல்லாம் பொருளாதாரத்தில் கீழே விழுந்து சிதறிய போது இந்தியா பெரிய பாதிப்பு இல்லாமல், விழாமல் தனது பொருளாதாரத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறதே, அதற்குக் காரணம் நமது குடும்பம் குடும்பமாக வாழும் அமைப்புதான் என்று உலகத்தின் அனைத்து பொருளாதார நிபுணர்களும் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாமோ கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் எரிவதை பெருமையாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

குஷ்புவுக்கும் இரண்டு பெண்குழந்தைகள் இருக்கிறார்கள். சுந்தர் சியும் குஷ்புவும் மேலை நாட்டு ஸ்டைலில் தன் பெண்பிள்ளைகளின் புத்தகப் பையில் கருத்தடை மாத்திரைகளை இன்று முதல் கொடுத்து அனுப்புவார்கள் என்று நம்பலாம். ஆனால் அது அவர்கள் வீட்டோடு போகட்டும்.



கலாச்சார ஆசிரியை

விவேகானந்தரின் சொற்பொழிவுத் துளிகள்!


என் துடிப்பு மிக்க சகோதர சகோதரிகளே, இந்நாட்டின் இளம்பிராயத்தவர்களே! ஒன்றை மட்டும் நன்றக கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஆன்மீக லட்சியத்தைப் புறக்கணித்துவிட்டு மேலை நாட்டு லௌகீக நாகரீகத்தின் பின்னால் நீ செல்வாயானால் அதன் விளைவாக மூன்றே தலைமுறைகளில் உனது இனம் அழிந்து போய்விடும். ஏனென்றால், நமது நாட்டின் முதுகெலும்பு முறிந்து, எந்த அடிப்படையின் மீது இந்நாட்டின் கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளதோ அந்த அடித்தளம் ஆட்டம் கண்டுவிடும். மேலை நாட்டு நாகரீகத்தின் பின்னால் சென்றால் நாலா பக்கங்களிலும் அழிவைத்தான் நீ காண்பாய்.

இந்துக்கள் தங்களுடைய கடந்த கால வரலாற்றை ஆழ்ந்து படிக்கும் அளவிற்கு ஏற்ப, அவர்களின் எதிர்காலம் மேலும் மேலும் பெருமைக்கு உரியதாக அமையும்.

யார் ஒருவர் இந்தியாவின் கடந்த காலப் பெருமைகளை வீடுதோறும் கொண்டு சென்று போதிக்கிறாரோ, அவரே நம் தாய்நாட்டிற்கு மிகப் பெரிய அளவில் நன்மை செய்தவராவார்.

இந்தியக் கலாச்சாரத்தின் வீழ்ச்சி பண்டைக் காலத்தில் நிலவிய சட்டங்களும் பழக்க வழக்கங்களும் தவறானவையாக இருந்த காரணத்தால் ஏற்பட்டுவிடவில்லை. மாறாக, அவற்றுக்கு உரிய ஞாயமான முடிவு கிட்டும் வரையிலும் அவற்றைக் கடைப்பிடிப்பதற்கு அனுமதி அளிக்கப்படாத
காரணத்தால் தான் இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

செய்து முடிக்கப்பட வேண்டிய பணிகள் மிகவும் ஏராளமாக இருக்கின்றன. நம்மிடம் அறிவு இருக்கிறது. ஆனால் பணி புரிவதற்கான கைகள் தான் இல்லை. நம்மிடம் வேதாந்தக் கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய ஆற்றல் இல்லை. நமது நூல்களில் உலக சமத்துவம் பற்றிய கொள்கை கூறப்பட்டிருக்கிறது. ஆனால் நடைமுறை வாழ்க்கையிலோ நாம் பெருமளவுக்கு வேற்றுமை பாராட்டுகிறோம்.

இதே இந்தியாவில் தான், மிகவும் உயர்ந்த சுயநலமற்ற பயன்கருதாத பணியைக் குறித்த உண்மைகள் போதிக்கப்பட்டன. ஆனால் நடைமுறையில் நாம் மிகவும் கொடூரமானவர்களாக இருக்கிறோம். இதயம் இல்லாதவர்களாக இருக்கிறோம். நமது சதைப் பிண்டமாகிய உடலைத் தவிர வேறு எதைப்பற்றியுமே நினைக்க முடியாதவர்க்ளாக இருக்கிறோம்.

செல்வச் செழிப்பை இழந்து, அதிர்ஷ்டத்தை இழந்து, பகுத்தறிவையும் அறவே இழந்து, நசுக்கப்பட்டு என்றைக்கும் பட்டினியால் வாடியபடி சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டவர்களாகவும் பொறாமை கொண்டவர்களாகவும் உள்ள இந்த இந்திய நாட்டு மக்களை, யாரேனும் ஒருவர் மனப்பூர்வமாக நேசித்தால், இந்தியா மீண்டும் விழித்துக்கொள்ளும் என்று நான் தீர்க்கமாக நம்புகிறேன்.

எப்போது, பரந்த இதயம்படைத்த நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் வாழ்க்கையின் ஆடம்பரங்களைத் துறந்துவிட்டு, ஆதரவற்ற நிலை மற்றும் அறியாமை ஆகிய நீர்ச்சூழலில் சிறிது சிறிதாக மூழ்கிச் சென்று கொண்டிருக்கும் நம் நாட்டின் கோடானு கோடு மக்களின் நல்வாழ்விற்காக வருந்தி முழு ஆற்றலையும் கொடுத்து உழைக்க முன்வருவார்களோ, அப்போது தான் இந்தியா விழித்தெழும்.

- சுவாமி விவேகானந்தர்