Showing posts with label உபநிஷது. Show all posts
Showing posts with label உபநிஷது. Show all posts

Tuesday, October 5, 2010

மரணத்திற்கு அப்பால் - 19




"மரணத்திற்குபிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர். சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப் பயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்". - எமதர்மன்.

ஆன்ம சஞ்சாரத்தில் மேலான நிலை எது என எமதர்மனிடம் வினவுகிறான் நசிகேதன்!


"நசிகேதா! எப்போது ஐந்து புலன்களும் மனமும் ஓய்வு நிலையில் இருக்கின்றனவோ, புத்தி முயற்சியற்று இருக்கிறதோ அது மிக மேலான நிலை என்று கூறப்படுகிறது"


செயலற்ற நிலை எனப்படுவது சோம்பலாக வேலை செய்யாமல் உட்கார்ந்திருக்கும் நிலை என எடுத்துக்கொள்வது தவறு. புத்தி விழிப்படைந்த நிலையில் புற உடலும் இகலோக வாழ்வும் வேறு என்றும் உள்ளிருக்கும் ஆன்மா வேறு என்ற நிலையான உண்மையை புரிந்து கொண்டு மனமும் உடலும் ஆழ்ந்த அமைதி கொள்ளும் நிலையை செயலற்ற நிலை என எமதர்மன் விளக்குகிறார். இந்நிலையில் ஆசைகளின் உந்துதலால் மனம் செயல்பட வேண்டிய அவசியம் உண்டாவது தடுக்கப்படுகிறது. எனவே இந்நிலையை ஐந்து புலன்களும் ஓய்வு நிலையில் இருக்கும் சமயமாக எமதர்மன் எடுத்துக் கூறுகிறார்.


"நசிகேதா! புலன்கள் வசப்பட்டு, நிலையாக நிற்கின்ற அந்த நிலை யோகம் என்று கருதப்படுகிறது. அந்த நிலையை அடைந்தவன் தன்னுணர்வு உடையவனாக ஆகிறான். ஆனால் யோக நிலை வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் உட்பட்டது."


ஆன்மாவை உணரும் தருனத்தை தன்னுணர்வு என்று கீதையில் கூறப்படுகிறாது. சுவாமி விவேகானந்தர் 'உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள், அது எவ்வாறு விழித்தெழுகிறது என்பதை பாருங்கள். உறங்குகின்ற ஆன்மா மட்டும் விழித்தெழுந்து தன்னுணர்வுடன் செயலில் ஈடுபடுமானால் சக்தி வரும். பெருமை வரும், நன்மை வரும், தூய்மை வரும், எவை எல்லாம் மேலானதோ அவை அத்தனையும் வரும்' என்கிறார் அவர்.


எமதர்மன் மேலும் தொடர்கிறார் "நசிகேதா! வாக்கினாலோ மனத்தினாலோ கண்களாலோ அந்த அறுதி உண்மையை அடைய இயலாது. 'இருகிறது' என்று சொல்பவனைத் தவிர வேறு யார் அதனை அடைய முடியும்?"


"இந்த உண்மை 'இருக்கிறது' என்று முதலில் அறிய வேண்டும். பிறகு அதன் உண்மைநிலையில் உணர வேண்டும். 'இருக்கிறது' என்ற நிலையில் ஆழமாக உணரும் போது, அதிலிருந்து உண்மை நிலை அனுபூதி, இயல்பாக வாய்க்கிறது".


ஒரு மலை ஏறப்போகிறோம். அடிவாரத்தில் இருந்து கொண்டு 
மலையைப் பார்த்தால் உச்சிக்குப் போக பாதையே இல்லாதது போல தெரியும்.
ஆனால் அருகே செல்லச்செல்ல மலையை ஏறி உச்சியை அடைய அங்கேயும் 
ஒரு பாதை இருந்தே தீரும். பாதை இருக்கிறது என்று நம்பிச் செல்பவனுக்கே
அப்பாதைகள் தெரியவரும். அல்லாமல் பாதை இருக்குமா என்ற 
ந்தேகத்துடனும் பாதை கிடையாது என்று நினைப்பவனும் அடிவாரத்தை
தாண்ட மாட்டார்கள்.


அது போல எல்லையற்ற சக்தி மற்றும் ஆன்மா போன்றவற்றை சந்தேகக் கண்ணோடு மட்டுமே பார்ப்பதும் அதை அறியும் முயற்ச்சியே இல்லாமல் அதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருப்பவனாலும் ஆன்மாவை அடையமுடியாது. எல்லையற்ற இறை சக்தியை அறிய முடியாது. எவன் ஒருவன் 'இருக்கிறது' என்று தீர்க்கமாக நம்பி அதை அறியும் பொருட்டு முயற்சிக்கிறானோ அவனே அளப்பறிய இறை சக்தியையும் ஆன்மாவையும் அறிகிறான் என்கிறார் எமதர்மன்.


மனிதன் எப்போது மரணமற்றவன் ஆகிறான் என்று நசிகேதன் கேட்க


எமதர்மன் தொடர்கிறார் "நசிகேதா! மனத்தைச் சார்ந்திருக்கும் எல்லா ஆசைகளும் விலகும் போது மனிதன் மரணமற்றவன் ஆகிறான். இங்கேயே இறைநிலையை அடைகிறான்."


"இதயத்தின் நாடிகள் நூற்றொன்று. அவற்றுள் ஒன்று உச்சந்தலையைப் பிளந்து செல்கிறது. அதன் வழியாக மேலே செல்பவன் மரணமற்ற நிலையை அடைகிறான். மற்ற நாடிகளின் வழியாக வெளியேறுபவன் பல்வேறு கீழ் உலகங்களில் உழல்கிறான்."


ஆக ஆன்மாவை ஆசைகளைக்கடந்த மன ஆழ்மன அமைதியுடன் அடைந்து அது தான் நாம் என்பதை உணர்ந்து உச்சந்தலை நாடி மூலம்உடலை விட்டுப் பிரிந்து மரணமற்ற தன்மையை அடையலாம் என்றும் அவ்வாறு அடையும் நிலையை அடைபவன் பிறவித் துன்பத்தில் இருந்து விடுபடுவான் என்று எமதர்மன் கூறுகிறார்.


கடைசியாக ஆன்மா பற்றி எமதர்மன் இவ்வாறு கூறுகிறார்..


"நசிகேதா! உடம்பில் உறைவதான ஆன்மா பெருவிரல் அளவுடையது; மக்களின் இதயத்தில் எப்போதும் உள்ளது. முஞ்சைப் புல்லிலிருந்து ஈர்க்கும் குச்சியைப் பிரிப்பது போல் அதனைச் சொந்த உடம்பிலிருந்து பொறுமையுடன் பிரிக்க வேண்டும். அந்த ஆன்மா தூயது,  அழிவற்றது என்று அறிந்து கொள். அந்த ஆன்மா தூயது, அழிவற்றது என்று அறிந்து கொள்"


நசிகேதனுக்கு எமதர்மன் கூறிய கடைசி உபதேசம் இது. பெருவிரல் அளவுடைய ஒளிப்பொருள் ஒன்று நம்முள் இதயக் குகையில் உள்ளது. அதுவே ஆன்மா. அதனை உடம்பிலிருந்து பிரித்தறிய வேண்டும். அந்த ஆன்மாவே எங்கும் நிறைந்த பரம்பொருள் என்பதை உணர வேண்டும். இதுவே இந்த இரண்டு வித்யைகளின் பொதுவான கருத்து ஆகும். இந்தக் கடைசி மந்திரத்தில் மீண்டும் ஒருமுறை எமதர்மன் அதை நினைவு நசிகேதனிடம் நினைவுகூறுகிறார்.


இவ்வாறு நசிகேதன் கேள்வி கேட்க எமதர்மன் பதில் கூற கட உபநிஷத்தின் ஆன்மாவை அறிய உதவும் பாடம் இத்துடன் நிறைவு பெறுகிறது.


"எமதர்மனால் சொல்லப்பட்ட இந்த வித்யைகளையும், எல்லா யோக விதிகளையும் ஏற்றுக் கொண்டு நசிகேதன் தூயவனாகி மரணமற்றவன் ஆனான். பிறகு இறைவனை அடைந்தான். மற்றவர்களும் இந்த வித்யையை அறிந்து பின்பற்றும் போது இறைநிலையை அடைகிறார்கள்."


ஆக உபதேசத்தை கேட்பதுடன் நில்லாமல் நசிகேதன் அதை சாதகம் செய்து இறைநிலையை அடைகிறான்.


கடைசியாக நீங்கள் தான் ஆன்மா என்பதை கீழ்கண்டவாறு தொடர்ந்து சிந்துப்பது ஆன்மாவை உணர்வதற்கு உதவும்.


1. அனைத்திற்கும் சாட்சி நான்
2. காலத்தின் தலைவன் நான்
3. ஆதியில் தோன்றியவன் நான்
4. பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி நான்
5. ஆன்ம அக்கினி நான்
6. ஆணையிடுபவன் நான்
7. உடம்பைக் கடந்தவன் நான்
8. உடம்பு வீழ்ந்து, உயிர் வெளியேறிய பிறகும் மாற்றமின்றி இருப்பவன் நான்.
9. அனைத்தும் தூங்குகின்ற போதும் விழித்திருப்பவன் நான்
10. வாழ்க்கையே நான்.


மேலே உள்ளவைகளை படிக்கும் போது 'நான்' என்ற பதம் வாசிப்பவராகிய நீங்கள் தான் என்பதை நினைவில் நிறுத்துங்கள். அந்த 'நான்' என்பதே இறைவன். கீதையில் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் கூறுகிறார் 'எல்லா உயிர்களிடத்திலும் உறைந்திருப்பவன் நானே' 'நான்' என்று யாரெல்லாம் கூறிக்கொண்டாலும் அவற்றின் உருவகம் ஒன்றே! ஏனெனில் எல்லா உயிர்களிலும் உரைந்திருப்பதும் அழிக்கமுடியாததும் அடையாளம் அற்ற 'நான்' என்ற ஒரே "ஆன்மா".  


"அதுவே நீ"


(முற்றும்)