Showing posts with label பஞ்சாங்கம். Show all posts
Showing posts with label பஞ்சாங்கம். Show all posts

Sunday, June 13, 2010

பஞ்சாங்கக் கணிப்பும் பூகம்பமும்!



மே மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி கல்யாணப்பத்திரிக்கையும் காலக்கணக்கும் என்ற தலைப்பில் பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டிருக்கும் சில விஷயங்கள் துல்லியமாக கணிக்கப்படுகின்றன என்பதைப் பற்றி இவ்வாறு எழுதியிருந்தேன்.

"இந்த வருட தமிழ் புத்தாண்டின் போது வாசிக்கப்பட்ட பஞ்சாங்கத்தில் கூட இந்த வருட அக்னி நட்சத்திரத்தின் போது வெயில் இருக்காது என்று தெரிவித்தார்களாம். வெயிலின் ஆரம்பத்தில் நம்பவில்லையென்றாலும் வழக்கத்திற்கு விரோதமாக இந்த மாதத்தில் வந்து நடனமாடிய லைலா பஞ்சாகத்தில் கூறியதை ஊர்ஜிதம் செய்து விட்டாள் என்பதை நினைவு கூறுகிறேன்.

அது மட்டுமல்ல தமிழகத்தில் இந்த வருடம் பூகம்ப பாதிப்பு உண்டாகும் வாய்ப்பு இருப்பதாக பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டதாம். பக்கத்து வீட்டுப் பாட்டி தாடையில் கைவைத்து சொல்லிக்கொண்டிருந்தார். யாருக்கேனும் பஞ்சாங்கம் பார்க்கத் தெரிந்தால் நம்பலாமா என்பதைச் சொல்லுங்கள். மற்றபடி நம் கையில் என்ன இருக்கிறது?"

நம்பலாமா என்று கேள்வி எழுப்பி இருந்தேன். இன்று நம்ப வேண்டியதாகி விட்டது. இதோ இன்று பூகம்பம் எங்கள் வீட்டையும் ஆட்டியது. நள்ளிரவில் தரை ஆடுகிறதா அல்லது எனக்குக் கனவா என்ற நினைப்பில் எழுந்து உட்கார்ந்தேன். அதே நேரத்தில் கட்டிலில் படுத்திருந்த எனது தந்தையும் கட்டில் ஆடுவதாக உணர்ந்திருக்கிறார். பூகம்பமாக இருக்கும் என்றேன். அடுத்த வார்த்தை அவர் சொன்னது, "இந்த வருடம் தமிழகத்தில் பூகம்பம் வரும் என்று பஞ்சாங்கம் படிக்கும் போது வாசித்தார்கள். அதுதான் நடக்கிறது போலிக்கிறது" என்றார்.

ஆனால் நாம் அமெரிக்கனின் வானிலை ஆராச்சியைத் தானே நம்புவோம்! கோவில்களில் பஞ்சாங்கம் வாசிக்க தடை வேறு பிறப்பிக்கிறார்கள்.

ஆனால், யார் என்ன கணித்தாலும் சரி, இயற்கையின் சீற்றம் நம்மைத் தாக்க வேண்டும் என்று நினைத்து விட்டால் எந்த எச்சரிக்கையாலும் நாம் தப்ப முடியாது. ஏதோ இன்று தலை தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.

இதோ பஞ்சாங்கம் பற்றிய ஒரு தினமலர் செய்தியைப் பார்ப்போம்!
____

மார்ச் 06,2010,00:00 IST

சூரியன் மற்றும் சந்திரனின் இயக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள, "விக்ரம சம்வத்ஸரம்' பஞ்சாங்கம் மிகவும் நுட்பம் உடையதாக, மிகச் சரியாக இருப்பதாக ஜோதிட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இந்த ஆண்டு ஹோலிப் பண்டிகை, மார்ச் 1ம் தேதி வந்துள்ளது. இதை வைத்து வட மாநிலங்களில் அனுசரிக்கப்படும் "விக்ரம சம்வத்சரம்' எனும் பஞ்சாங்கம் மிகச் சரியாகக் கணிக்கப்பட்டுள்ளதாக, அப்பகுதி ஜோதிட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இந்தியப் பருவங்கள் சூரியனை அடிப்படையாகக் கொண்டும், மாதங்கள் சந்திரனை அடிப்படையாகக் கொண்டும், நாட்கள் சூரிய சந்திரர்களை அடிப்படையாகக் கொண்டும் கணிக்கப்படுகின்றன.பொதுவாக இந்தியப் பஞ்சாங்கங்களின் படி, சந்திரனை அடிப்படையாகக் கொண்டு 12 மாதங்கள் கணிக்கப்படுகின்றன. ஒரு மாதம் என்பது சந்திரனின் இயக்கப்படி 29 நாட்கள், 12 மணிநேரம், 44 நிமிடங்கள், 3 வினாடிகள் கொண்டது. ஆக, இந்தக் கணிப்பின்படி, ஒரு ஆண்டு என்பது, 354 நாட்கள், 8 மணிநேரம், 48 நிமிடங்கள், 36 வினாடிகள் கொண்டதாக இருக்கும்.


ஆனால், ஐரோப்பிய நாடுகளின் காலண்டர் படி, ஒரு ஆண்டு சூரியனை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகிறது. அதன்படி ஒரு ஆண்டு என்பது, 365 நாட்கள், 5 மணிநேரம், 48 நிமிடங்கள், 46 வினாடிகள் கொண்டதாக இருக்கும். இந்த இரண்டு கணிப்புகளுக்கும் இடையில் 10 நாட்கள் வித்தியாசம் இருக்கிறது.இதைச் சுட்டிக்காட்டும் பிரபல ஜோதிடர் பரத் பூஷன் பத்மதேவ் கூறியதாவது:சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையில் உள்ள தூரத்தின் அடிப்படையில் இந்தியப் பஞ்சாங்கங்கள் கணிக்கப்படுகின்றன. மேலும் ஆண்டில் நிகழும் பருவங்களை மையமாகக் கொண்டும் கணிக்கப்படுகின்றன. அதன்படி, கடந்த ஆண்டு மார்ச் 11ம் தேதி வந்த ஹோலிப் பண்டிகை, இந்த ஆண்டு 10 நாட்கள் முன்னதாக மார்ச் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது.

அதன்படி, இந்தியப் பஞ்சாங்கம் மிகச் சரியாகக் கணிக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.மேலும், இந்தியப் பஞ்சாங்கங்களின் படி, பண்டிகைகள் பருவகாலத்தோடு தொடர்புடையவை. அதனால் அந்தந்தப் பருவத்துக்குரிய பண்டிகைகள் மிகச்சரியாக அந்தப் பருவகாலத்தில்தான் கொண்டாடப்படும். ஆனால், ஐரோப்பிய காலண்டர் படி, தேதிகளின் அடிப்படையில் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அதனால், பருவகாலப் பண்டிகைகளை அவர்கள் பருவம் தப்பியும் கொண்டாட நேரிடுகிறது.இவ்வாறு பரத் பூஷன் தெரிவித்தார்.

____


இப்படி நிரூபணங்களுடன் எடுத்துக்கூறினால் கூட நம்மவர்களின் போலி பகுத்தறிவு நமது பாரம்பரிய அறிவை ஒத்துக்கொள்ளத் தயாராக இல்லை என்பது வெட்க்கக்கேடு. இதாவது பரவாயில்லை, புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்ததே ஐசக் நியூட்டன் தான் என்று வெட்கமில்லாமல் பாடங்களில் சொல்லிக்கொடுக்கச் செய்கிறார்கள் இந்த போலி பகுத்தறிவு வாதிகள். நம்முடைய ஆன்மீகம் மற்றும் பாரம்பரிய அறிவைப் பற்றி ஆயிரம் கேள்விகள் கேட்கும் போலி பகுத்தறிவு வாதிகள் "ஐசக் நியூட்டனுக்கு முன்னாடி யாருமே புவியின் ஈர்ப்பு விசைக்கு ஆளானதே கிடையாதா அல்லது அதை உணர்ந்திருக்கவே முடியாதா?" என்று ஏன் கேட்கவில்லை.

நியூட்டன் "பழம் ஏன் கீழே விழுகிறது?" கேள்வி கேட்டுக்கொண்டிருந்த வருடம் 1666. ஆனால் கி பி 1000 வது வருடங்களிலேயே வானுயர கோபுரம் கட்டினானே ராஜராஜ சோழன் அவனுக்கு இந்த புவி ஈர்ப்பு விசை பற்றி அறிவில்லாமல் தான் இருந்ததா? மிகப்பெறிய பாறைகளைச் செதுக்கி வானுயர சாரங்களை அமைத்து ஆயிரக்கணக்கான யானைகளை வைத்து உயரே கொண்டு போய் கோபுரங்களைக் கட்டிய சோழர்காலத்து கட்டிடக்கலை வல்லுனர்கள் புவியீர்ப்பு விசையை உணராமல் தான் இருந்திருப்பரா? அந்த அறிவே இல்லாமல் தான் வானுயர்ந்த கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டனவா?

மேலே கொண்டு போக வேண்டிய ஒரு பாறையின் கணம் என்ன?, புவியீர்ப்பு விசைக்கு எதிராக அந்தப் பாறையை கொண்டு போக எதிர் விசை எவ்வளவு பயன் படுத்த வேண்டும்?, புவியீர்ப்பு விசைக்கு எதிரான விசையைக் கையாள எளிய வழி என்ன? என்பதை எல்லாம் அறிவுடன் யோசித்து தான் மர உருளைகளைக் கொண்ட சாரங்களைக் கட்டி, பெரிய யானைகளைக் கொண்டு இழுத்துச் செல்ல வைத்து கற்களை அடுக்கி கோபுரம் அமைத்தனர்! ஆனால் நம் பாட புத்தகத்தில் புவியீர்ப்பு விசையைக் கண்டு பிடித்ததே ஐசக் நியூட்டன் தான் என்று சொல்லித் தருவார்கள். வெள்ளைக்காரன் சொன்னான் என்ற ஒரே காரணத்திற்காக நம்மூர் போலி பகுத்தறிவு வாதிகள் எதிர்க்கேள்விகள் கேட்காமல் ஆமாம் சாமியும் போடுவார்கள். நம் பிள்ளைகளிடமும் வெள்ளையன் தான் அறிவாளி, நீ ஒரு மகா மக்கு என்ற ரேஞ்ச்சுக்கு பாடம் சொல்லித்தருவார்கள்! என்றைக்கு நம் பாரம்பரிய அறிவை மதிக்கக் கற்றுக் கொள்கிறோமே அன்றைக்குத்தான் நிஜமான சுதந்திர பாரதம் நமக்குக் கிடைக்கப் போகிறது என்றால் மிகையாகாது!

சிரியுங்கள்! ஆங்கிலத் தேதிப்படி பிறந்தநாள் கொண்டாடிய தமிழினத் தலைவர்!

நன்றி தினமலர்!

வழக்கம் போல நான் சொல்வதைச் சொல்லி வைக்கிறேன், -


"இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்."


Friday, May 21, 2010

கல்யாணப் பத்திரிக்கையும், காலக்கணக்கும்!




வானவியல் ஆராய்ச்சியாளர்கள் பூமி தோன்றியகாலத்தை அறியவும், காலச்சுழற்சி பற்றியும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்துகொண்டே இருக்கிறார்கள். ஆனால் ஸ்ரீமத் பாகவதத்தை புரட்டிப் பார்த்தால் பல லட்சம் ஆண்டுகளின் சுழற்சி பற்றிய கணக்குகளை மிக தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

மைக்ரோ லெவல் முதல் மேக்ரோ லெவல் வரை காலத்தை மிக அற்புதமாக கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

வெள்ளைக்காரனுக்கு மட்டுமே மூளை இருப்பதாக மார்தட்டிக்கொள்ளும் நம் நாட்டு அறிவு ஜீவிகளையும், கால கணக்கு முறையையே வெள்ளைக்காரன் தான் கண்டு பிடித்தான் என்று நம்மை நம்ப வைக்கும் ஏமாற்றுக்காரர்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் சொல்லப்பட்ட வேதங்களில் துல்லியமான காலக்கணக்குகள் உள்ளன. பிரபஞ்சத்தின் கால அளவிலிருந்து நானோ ஸெகண்டுகள் வரை நம்மவர்கள் துல்லியமாக கணித்திருப்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

அதைப் பற்றி சிறிது பார்ப்போம்!

முதலில் அனு. இதை விட சிறியதாக பிளக்க முடியாத ஒன்றை அனு என்கிறோம் அல்லவா. காலமும் அப்படியே என்கிறார்கள் பெரியோர்கள். இதை விட சிறியதாக கணிக்க முடியாத காலத்தை அனு என்று கூறி அங்கிருந்தே துவங்குகிறார்கள்.

அதாவது ஒரு வினாடியை விட மிகச்சிறியது அனு.

2 பரம அனுக்கள் = 1 அனு

(அனுவிலும் சிறிய காலம் இருக்கிறது, எனவே இரண்டு பரம அனு சேர்ந்தால் ஒரு அனுவாகிறதாம்)

3 அனுக்கள் = 1 த்ரிசரனு
3 த்ரிசரனு = 1 த்ருடி
100 த்ருடிகள் = 1 வேதம் (இது ஒரு கால அளவிற்கான பெயர். ரிக் யஜுர் அப்படியல்ல)
3 வேதங்கள் = 1 லவம்
3 லவங்கள் = 1 நிமிஷம்

(இப்போதிருக்கும் நிமிஷத்திற்கு நாம் இன்னும் வரவில்லை. இது அதை விட சிறிய அளவு)

4 நிமிஷங்கள் = 1 க்ஷனம் (ஒரு க்ஷனம் கூட பொறுக்கமாட்டான் என்பார்களே, அதுதான்.)
5 க்ஷனங்கள் = 1 காஷ்டா
15 காஷ்டா = 1 லகு
15 லகுக்கள் = 1 நாழிகை
2 நாழிகை = 1 முகூர்த்தம்
30 முகூர்த்தங்கள் = 1 நாள்

ஆக ஒரு நாளை மைக்ரோ முதல் மேக்ரோ வரை எப்படி பிரித்திருக்கிறார்கள் என்று பாருங்கள். சரி இவற்றை தற்பொழுதைய ஆங்கிலேயனின் நேரப்படி எப்படி பொருந்துகிறது என்று பார்ப்போம். ஒரு முகூர்த்தம் என்பது எத்தனை நேரம் தெரியுமா? நாற்பத்தெட்டு நிமிஷங்கள் ஆகும். அதாவது 30 முகூர்த்தங்கள் என்பது ஒரு நாள்.

30 முகூர்த்தங்கள் (பெருக்கல்) 48 நிமிடங்கள் = 1440 நிமிடங்கள்.

அவற்றை ஆங்கில மணிநேரத்தில் கொண்டு வரலாம்.

1440 நிமிடங்கள் / 60 நிமிடங்கள் = 24 மணி நேரம். (அதாவது ஒரு நாள்)

ஆக 48 நிமிடங்கள் கொண்ட முப்பது முகூர்த்தங்களை ஒரு நாள் என கணக்கிட்டு இருக்கிறார்கள்.

சரி நாழிகை?

60 நாழிகை = 1 நாள், அதாவது ஒரு நாழிகை என்பது ஒரு முகூர்த்தத்தில் பாதி.

1 நாழிகை = 24 நிமிடங்கள், 2 1/2 நாழிகை = 1 மணி நேரம். (48 + 12 = 60 நிமிடங்கள்).

சரி இதையெல்லாம் இப்போது பார்ப்பதில் என்ன பலன் என்கிறீர்களா? இந்த நாழிகை மற்றும் முகூர்த்தம் என்ற கால அளவை நாம் இன்னும் உபயோகப்படுத்திக் கொண்டு தானே இருக்கிறோம். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், கல்யாணப் பத்திரிக்கைகளில் நாம் இன்னும் தமிழர் முறைப்படியான காலக்கணக்கிலேயே நமது கல்யாண நேரத்தை அச்சடித்து கல்யாணத்தை நடத்திக் கொண்டு இருக்கிறோம்.

அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா? நம் பாரம்பரிய கால அளவைகளை நாம் அப்படியே விட்டு விட்டு மறந்து போய் விடுதல் ஒரு வாழ்க்கையா? இப்படிப்பட்ட கணிதப் பாரம்பரியம் கொண்ட வரலாறு கொண்ட மனிதர்கள் நாம் என்பதை உணர்ந்து பார்க்கக் கூட நேரம் இல்லாமல் மடிந்து போனால் அதனால் நம் சந்ததி இழக்கப் போகும் விஷயங்களின் மதிப்பை நாம் அறிவோமா? நமது பாரம்பரிய அறிவை நம்மிடம் இருந்து அழித்து, நமது பொக்கிஷத்தைத் திருடி நம்மிடமே வேறு பெயரில் விற்று காசாக்கும் வெள்ளையனின் வாழ்க்கை முறைக்கு அடிமையாகி வாழ்வதும் ஒரு வாழ்வா? ஆக நாம் இன்னும் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் முகூர்த்தம் என்ற கால அளவை பற்றி குறைந்த பட்சம் தெரிந்து கொள்ளவாவது செய்வோமே!




திருமண பத்திரிக்கைகளில் இத்தனை நாழிகையிலிருந்து இத்தனை நாழிகை வரை என்று முகூர்த்தத்தை குறிப்பிடுவோம். உதாரணமாக 7 1/2 (ஏழரை) நாழிகையிலிருந்து 10 நாழிகைக்குள் என்று எழுதியிருக்கும். சூரியோதயத்தின் போது முதல் நாழிகை துவங்குகிறது.

அப்படியெனில் சூரியோதயத்தில் இருந்து 7 1/2 யாவது நாழிகை என்றால், நம் கடிகாரப் படி காலை 9 மணி ஆகிறது. அதாவது 6 மணிக்கு சூரியோதயம் என்று வைத்துக் கொண்டால், நாழிகை 7.5 (பெருக்கல்) 24 நிமிடங்கள் = 180 நிமிடங்கள். அதாவது மூன்று மணி நேரம் (180 / 24 = 3). எனவே, சூரியோதயம் 6 மணி (கூட்டல்) 3 மணி = காலை 9 மணி.

ஆக 7 1/2 நாழிகையிலிருந்து 10 நாழிகை என்பது இரண்டரை நாழிகை. இரண்டரை நாழிகை என்பது ஒரு மணி நேரம் என்பதால் காலை ஒன்பது மணி முதல் பத்து மணி வரை முகூர்த்தம் வைத்திருக்கிறோம் என்று சிம்பிளாக GMT நேரத்தை சொல்லி விடுகிறோம்.

இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், நாழிகையை கூறும் முன்னர் உதயாதி என்று எழுதுவார்கள். உதயாதி என்றால் சூரியன் உதயமாகும் நேரம் என்று பொருள். சூரியன் உதயமான நேரத்திலிருந்து ஏழரையாவது நாழிகையில் நமது முகூர்த்தம் என்று அர்த்தம் கொள்ள வேண்டும். சூரியன் உருவாவதிலிருந்து தான் நமக்கு ஒரு நாள் பிறக்கிறது. அதையே உதயாதி என்று குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்.

எனவே உதயாதி 6 மணிக்கு எனக்கொண்டால், சூரிய உதயத்திலிருந்து முதல் 24 நிமிடங்கள் ஒரு நாழிகை. 48 நிமிடங்கள் இரண்டாவது நாழிகை. இப்படியே ஏழரையாவது நாழிகை வந்தால் காலை 9 மணியாகிறது. 60 வது நாழிகை முடியும் போது அந்த நாள் முடிகிறது. பின் மீண்டும் சூரியோதயத்தில் புதிய நாள். இப்படியே மைக்ரோவிலிருந்து எழுந்து மேக்ரோவிற்கு சென்றால் அது இன்னும் விரிவடைகிறது.

சூரியனின் முதல் கதிர்கள் பூமியைத் தொடும் நேரம் (உதயம்) நாள் ஆரம்பிக்கும் நேரம்.
நாள் என்றால் சூரியனும், பூமியும் சேருவது. .
மாதம் என்றால், சூரியனும், சந்திரனும் சேர்ந்தவுடன் ஆரம்பிப்பது.
வருடம் என்றால், பூமி சூரியனை சுற்றும் ஒரு முழுச்சுற்று.

நமது காலக்கணக்கு என்பது முழுக்க முழுக்க இயற்கை சார்ந்ததாகும். பூகோள ரீதியாகவும் ப்ரபஞ்சத்தின் போக்கையும் கொண்டே காலக்கணக்கு உண்டாக்கப்பட்டது. இப்போது நாள் கணக்கிலிருந்து மாதக்கணக்கிற்கு வருவோம். மாதத்தை இரண்டு பதினைந்து நாட்களாக
பிரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனை "பக்ஷம்" என்று அழைக்கிறார்கள். ஒரு பக்ஷம் என்றால் பதினைந்து நாள்.

சந்திரனின் வளர் பிறை, தேய் பிறை நாட்களை பக்ஷம் என்கிறார்கள். அதனை சுக்ல பக்ஷம், க்ருஷ்ண பக்ஷம் என்று கூறுகிறார்கள். நமது நாட்காட்டிகளில் பார்த்திருப்போமே, ஓரிடத்தில் "சுக்ல" என்று எழுதியிருக்கும். அமாவாசையிலிருந்து துவங்கி பௌர்ணமி வரை பதினைந்து நாட்கள் சுக்ல பக்ஷம் என்றும், பௌர்ணமியிலிருந்து மீண்டும் அமாவாசை வரை வரும் பதினைந்து தினங்களை க்ருஷ்ண பக்ஷம் என்றும் கூறுகிறார்கள்.

க்ருஷ்ண பக்ஷம் என்று ஏன் கூறுகிறார்கள் தெரியுமா? க்ருஷ்ண என்றால் கருப்பான என்று பொருளாம். அமாவாசை என்பது இருட்டு அல்லவா. எனவே அமாவாசையை நோக்கிச் செல்லும் பதினைந்து தினத்தை க்ருஷ்ண பக்ஷம் என்று அழைக்கிறார்கள்.

க்ரகங்களின் சுற்றுப்பாதையை எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் கணக்கீடுகளும் அதற்கான பெயர்களும் வைத்திருக்கிறார்கள். ஒருவருக்கு எதிர்வரும் நாள் அமாவாசையா அல்லது பௌர்ணமியா என்று சந்தேகம் வந்தால் மற்றவரிடம் "நாம் என்ன பக்ஷத்தில் இருக்கிறோம்?" என்று கேட்கிறார் எனக்கொள்வோம். அவரும் "க்ருஷ்ண பக்ஷம் 5 வது நாள்" என்று கூறினால், அடுத்த பத்தாவது நாள் அமாவாசை என்று பொருள். சுக்ல பக்ஷம் 7 வது நாள் என்றால் அடுத்த 8 வது நாள் பௌர்ணமி என்று கொள்ளலாம். க்ரகங்களின் சுற்றுப்பாதையை இப்படி நடைமுறை வாழ்க்கையோடு பழக்கப்படுத்தி வைத்திருந்தார்கள் நம் முன்னோர்கள் என்பது விளங்குகிறது.




இப்படிப்பட்ட காலக்கணக்குப் படிதான் பஞ்சாங்கம் மற்றும் ஜோடித சாஸ்திரங்கள் கணிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் பெரியோர்கள். பஞ்சாங்கத்தில் குறிப்பிட்ட நாழிகையில் சரியாக சூரிய கிரகணம் துவங்கும் என்றும் சந்திர கிரகணங்கள் துவங்கும் மற்றும் முடியும் என்றும் துல்லியமாக கணக்கிட்டுச் சொல்லப்பட்டிருக்கிறது. குறுகிய காலத்திற்கு மட்டும் அல்ல, இன்னும் எத்தனை வருடங்களுக்குப் பிறகு வரப்போகும் சூரிய கிரகனத்தை வேண்டுமானாலும் இப்போதே கணக்கிட்டு சொல்லி விடமுடியும் என்கிறார்கள் காலக்கணக்கீட்டு நிபுணர்கள். வெள்ளைக்காரன் அதை வாங்கி வைத்து வின்நோக்கியைக் கொண்டு ஆராய்ச்சி செய்து பின்னர் ஆம் என ஒத்துக்கொள்ளலாம். ஆனால் இத்தகைய காலக்கணக்கீட்டை அடிப்படையான பஞ்சாங்கத்தை அவமதித்தும் தமிழ் வருடப்பிறப்பின் போது கோவில்களில் அதைப் படிக்கக்கூடாது என்று அவற்றை அடியோடு அழிக்கப்பார்கிறார்கள் தமிழக ஆட்சியாளர்கள்.

நமது பாரம்பரியத்தைப் புரிந்து கொண்டு நாம் தான் நம் பொக்கிஷங்களைக் காக்க வேண்டும்.

இந்த வருட தமிழ் புத்தாண்டின் போது வாசிக்கப்பட்ட பஞ்சாங்கத்தில் கூட இந்த வருட அக்னி நட்சத்திரத்தின் போது வெயில் இருக்காது என்று தெரிவித்தார்களாம். வெயிலின் ஆரம்பத்தில் இந்த கணிப்பு சந்தேகத்திற் குரியதாக இருந்தது என்றாலும் வழக்கத்திற்கு விரோதமாக இந்த மாதத்தில் வந்து நடனமாடிய லைலா பஞ்சாகத்தில் கூறியதை ஊர்ஜிதம் செய்து விட்டாள் என்பதை நினைவு கூறுகிறேன்.

அது மட்டுமல்ல தமிழகத்தில் இந்த வருடம் பூகம்ப பாதிப்பு உண்டாகும் வாய்ப்பு இருப்பதாக பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டதாம். பக்கத்து வீட்டுப் பாட்டி தாடையில் கைவைத்து சொல்லிக்கொண்டிருந்தார். யாருக்கேனும் பஞ்சாங்கம் பார்க்கத் தெரிந்தால் நம்பலாமா என்பதைச் சொல்லுங்கள். மற்றபடி நம் கையில் என்ன இருக்கிறது?

எல்லாம் அவன் செயல். ஈஸ்வரோ ரக்ஷது!

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.

(அடுத்தது யுகம் பற்றிய கணக்கை பார்ப்போம்)