
ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமே வாவசிஷ்யதே!
விளக்கம்: ஓம். அது பூர்ணம். இதுவும் பூர்ணம். பூர்ணத்திலிருந்து பூர்ணம் உதயமாயுள்ளது. பூர்ணத்தினின்று பூர்ணத்தை எடுத்தாலும் பூர்ணமே எஞ்சி நிற்கின்றது.
ஆம், இந்தப் பிரபஞ்சத்தின் அனுப்பொருளும் அதன் சக்தியும் எதுவோ அதுவே நாமும் நம்முள்ளிருக்கும் ஆன்மாவும். நம் உடலும் ஆன்மாவும் இறுதியில் பிரபஞ்சத்திலே தான் ஐக்கியமாகிறது. தனித்து எங்கும் செல்வதில்லை. இவற்றை எமதர்மன் படிப்படியாக நசிகேதனுக்கு விளக்கி வருகிறார்.
"நசிகேதா! பதினோரு வாசல்களை உடையதான உடம்பு, பிறப்பற்ற, மாறுபாடற்ற உணர்வை உடைய ஆன்மாவின் கருவியாகும். உடல் ஆன்மா வசிக்க உதவும் ஒரு கருவிதான் என்பதை தியானித்து உனர்ந்தவன் கவலைகளிலிருந்து விடுபடுகிறான். சுதந்திரனாகி பிறவிகளிலிருந்து விடுபடுகிறான். இவ்வாறு உடலை ஒரு கருவியாக உபயோகித்துப் பின் அதிலிருந்து நீங்கும் உட்பொருள் எதுவோ அந்த ஆன்மாவே நீ கேட்டது!"
கண்கள், நாசிகள், செவி, குதம், பிறப்புக்குறி, தொப்புள் மற்றும் கருவுருவாகும் போது ஆன்மா உடலுக்குள் புகும் வாயிலாக கருதப்படும் உச்சந்தலை ஆகியவற்றையே எமதர்மன் உடலின் பதினோரு துவாரங்களாக குறிப்பிடுகிறார். இதில் தொப்புள் மற்றும் உச்சந்தலை துவாரங்கள் அடைக்கப்பட்ட நிலையில் இருக்கும். பிறந்த குழந்தையின் உச்சந் தலையை சிறிது காலத்திற்கு யாரையும் தொட விடமாட்டார்கள். ஏனெனில் தலைப்பகுதியானாலும் மிகவும் மென்மையான ஒரு பகுதியாக அப்பகுதி விளங்குவதே அதற்கு காரணம். மனிதர்கள் கருவாக உருவெடுக்கும் மண்டைஓட்டுடன் கூடிய தலைப்பகுதி வளருகையில் தலை ஒரு உருண்ட பஞ்சு போல இருக்கும். உச்சந்தலையின் அப்பகுதி மூலமாகவே ஆன்மா கருவினுள் புகுவதாக பெரியோர்கள் கூறுவார்கள். உடலைப் பேணிப்பாதுகாப்பதில் உச்சந்தலைக்கு முக்கியப் பங்கு இருக்கிறது என்பதும் அதனால் தான். ஆக எமதர்மன் இது போன்ற இடங்களையும் சேர்த்தே பதினோரு துவாரங்கள் கொண்ட உடல் என்று கூறுகிறார்.

எனவே உடலை வெறுக்கவும் கூடாது, அதன் சுகங்கள் மீதும் மயக்கம் கொள்ளக் கூடாது. இந்த உடல் பாதுகாக்கப்படுவது உள்ளே அசைவற்று இருக்கும் ஆன்மாவுக்காகவே என்று உணர்ந்து மயக்கமற்ற வாழ்க்கை வாழ வேண்டும். அவ்வாறு எந்த ஆன்மாவிற்காக நாம் உடலைக் காக்கும் கடமையை மேற்கொண்டிருக்கிறோமோ அதுவே நீ அறிய விரும்புவது என்று நசிகேதனுக்கு எமதர்மன் விளக்குகிறார்.
"நசிகேதா! இந்த ஆன்மா எங்கும் செல்வது. தூய ஆகாயத்தில் சூரியனாக இருப்பது, அனைத்திற்கும் ஆதாரமானது, அண்ட வெளியில் காற்றாக இருப்பது, அக்கினியாக பூமியில் உறைவது, தேவனில் உறைவது, உண்மையில் உறைவது, ஆகாயத்தில் உறைவது, நீரில் தோன்றுவது, பூமியில் தோன்றுவது, யாகத்தில் தோன்றுவது, மலையில் தோன்றுவது, பிரபஞ்ச நியதியாக விளங்குவது. பெரியது."
"நசிகேதா! பிராணனை மேலே இயக்குவதும், அபானனைக் கீழே தள்ளுவதுமான ஜீவன் உடம்பின் நடுவில் உள்ளது. எல்லா புலன்களும் அதனைச் சார்ந்திருக்கின்றன."
பிராணன் உடலின் உள்ளிருந்து மேலே எழும்பி வெளியேறக்கூடிய சக்தி. மூச்சு வெளியேறுவது அந்த மேல் நோக்கிய சக்தியால் தான். அபாணன் என்பது கீழ் நோக்கிய இயக்கம். உடலில் இருந்து வாயு குதம் வழியாக வெளியேறுவது. உடலில் இருக்கும் வாயு இந்த இரண்டு மார்கம் வழியாக சீரான அழுத்தத்தில் பிரிவதும் அது தடையற்ற முறையில் தொடர்ந்து நிகழ்ந்து வருவதுமே இந்த உடல் சரியாக இயங்குவதை வெளிப்படுத்தும். பூமிப்பந்தில் மட்டுமல்லாமல் பிரபஞ்சத்தின் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும் இந்த வாயுவானது உடலில் பத்து வகையான இயக்கங்களாக செயல்படுகிறது என ரிஷிகள் வகைப்படுத்தி இருக்கின்றனர்.
அவற்றைப் பார்ப்போம்.
பிராணன் - தொப்புளிலிருந்து மேல் நோக்கிய இயக்கம்.
அபானன் - தொப்புளுக்கு கீழ் நோக்கிய இயக்கம்
வியானன் - எல்லா பக்க இயக்கம்
உதானன் - மரண வேளையில் ஜீவன் வெளியேற உதவுதல் (சில வயோதிகர்கள் கழிவறையில் உயிர் நீப்பதை கேள்விப்பட்டிருப்போம், சிலருக்கு ஜீவன் வாய் வழியாகப் பிரியலாம், சிலர் கண்களை அகல விரித்து ஜீவனைத் துறப்பர். இத்தகைய வழிகளில் ஆன்மா வெளியேற உதவும் வாயு
உதானன்)
ஸமானன் - உணவு ஜீரணம், உனவை ரத்தம்போன்றவையாக மாற்றுதல். (உடல் செல்கள் ஆக்ஸிஜன் இல்லை என்றால் உயிர் வாழாதல்லவா, அவ்வாறு உடலின் ரத்த ஓட்டம் முதல் அனைத்து செல்களிலும் இருக்கும் வாயு ஸமானன்)
நாகன் - வாந்தி, ஏப்பம்
கூர்மன் - கண் இமைகளின் இயக்கம்
க்ருகலன் - பசி
தேவதத்தன் - கொட்டாவி
தனஞ்ஜயன் - உடம்பிற்கு ஆரோக்கியம் அளித்தல்
இவ்வாறு பத்து வகையாக வாயு நமது உடம்பில் செயல்பட்டு வருகின்றது என்கிறார்கள் ரிஷி முனிவர்கள். இந்த வாயுக்கள் அதனதன் வேலையை சீராக செய்யாமல் போனால் உடல் நோயுறக்கூடும். ஆக உடலின் அனைத்து இயக்கங்களும் இந்தப் பிராணனையே சார்ந்துள்ளன என்கிறார் எமதர்மன்.
"நசிகேதா! இவ்வாறான உடம்பிலிருந்து உயிர் பிரிந்தால் அங்கே என்ன மிஞ்சுமோ அதுவே நீ கேட்ட பொருள்."
"எந்த மனிதனும் பிராணனாலோ அபானனாலோ வாழ்வதில்லை. எதனை ஆதாரமாகக் கொண்டு இந்தப் பிராணனனும் அபானனும் இயங்குகின்றனவோ அதனை ஆதாரமாகக் கொண்டே அனைத்தும் வாழ்கின்றன."
வெறும் மூச்சு விடுவதால் நாம் வாழ்வதில்லை. உடலினுள்ளே இருக்கும் நிலையான பொருளான ஆன்மாவின் சக்தியே இந்த இயக்கங்களுக்கு காரணமாகிறது என்கிறார் எமதர்மன். அதாவது ஒரு மின் விசிறி ஓடுகிறாது என்றால் அதன் இறக்கையால் அல்ல. அதனுள்ளே ஓடும் கண்ணுக்குத் தெரியாத மின்சாரத்தால் தான் அல்லவா! அது போலவே உடலை ஆன்மா என்ற சக்தி இயக்குகிறது என்கிறார் எமதர்மன்.
"நசிகேதா! நல்லது. மரணத்திற்குப் பின்னால் உயிர் என்ன ஆகும் என்பது பற்றியும், ரகசியமானதும் அழிவற்றதுமான ஆன்மா பற்றியும் உனக்கு இப்போது சொல்கிறேன். மரணத்திற்குப் பிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர். சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப் பயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்"
"புலன்கள் தூங்கும் போது தனக்கு விருப்பமானவற்றை உருவாக்கியபடி எது விழித்திருக்கிறதோ அதுவே தூய, மரணமற்ற ஆன்மா என்று சொல்லப்படுகிறது. எல்லா உலகங்களும் அதனையே சார்ந்திருக்கின்றன. அதனைக் கடந்தவனாக யாரும் இல்லை."
உறக்கத்திலும் உயிர்ப்புடன் இருக்கிறோம், கனவுகளையும் நிஜம் போல உணர்கிறோம், விழிப்பு நிலையையும் உணர்கிறோம். இப்படி எல்லா நிலைகளிலும் நாம் உணர்வுடன் இருப்பதற்கு காரணமாக எப்போதும் நிலையான விழிப்புடன் இருப்பது எதுவோ அதுவே ஆன்மா என்கிறார்
எமதர்மன்.
"நசிகேதா! ஒன்றான அக்கினி உலகில் வந்து எவ்வாறு பல்வேறு பொருட்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறதோ அவ்வாறே எல்லா உயிர்களிலும் இருக்கின்ற ஆன்மா ஒன்றாக இருந்தாலும் பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது. அதே வேளையில், அந்த வடிவங்களுக்கு வெளியிலும் நிகழ்கிறது."

எந்தப் பொருளை எரித்தாலும் நெருப்பு ஒரே வடிவானதாகவே இருக்கிறது. அதே போலவே ஆன்மா மனிதன், விலங்குகள், பறவைகள் மற்றும் செடி கொடிகள் அனைத்திலுமே ஒரே தன்மை உடையதாகவே இருக்கிறது. மரத்தையும் நாம் கடவுளாக வணங்குவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக ஆன்மாவின் தன்மையை எமதர்மன் விளக்குகிறார்.
"எதைப் பற்றி பலரால் கேட்க முடியவில்லையோ, கேட்டும் பலரால் எதனை அறிய முடியவில்லையோ அந்த ஆன்மாவைப் பற்றி உபதேசிப்பவரும் அபூர்வம். கேட்பவரும் அபூர்வம். அத்தகைய அபூர்வமான ஒருவரைப் பின்பற்றி அதனை அறிபவரும் அபூர்வம்."
ஆன்மாவை அறிவோம்....
மரணத்திற்கு அப்பால் - 17

