Showing posts with label எமதர்மன். Show all posts
Showing posts with label எமதர்மன். Show all posts

Saturday, September 11, 2010

மரணத்திற்கு அப்பால் - 18



"மரணத்திற்குபிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர். சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப் பயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்". - எமதர்மன்.

மூலப் ப்ருக்ருதியான அண்டத்தின் மகா சக்தியை சாதகங்களை செய்தவர்கள் மட்டுமே காண முடிகிறது. ஆன்மாவை உணர்ந்து இறைவனின் ஆற்றலை உணர்ந்தவர்கள் மகா சக்தியை தரிசிக்கிறார்கள். மகா சக்தியை எந்தெந்த லோகத்தில் எந்தெந்த நிலையில் நம்மால் காணமுடியும் என்பதை நசிகேதனுக்கு உரைக்கிறார் எமதர்மன்.

"நசிகேதா! புத்தியில் கண்ணாடியில் போலவும், பித்ரு லோகத்தில் கனவில் போலவும், கந்தர்வ லோகத்தில் தண்ணீர்ல் போல் தெளிவற்றும் பிரம்ம லோகத்தில் நிழலும் வெயிலும் போல் தெளிவாகவும் அகக்காட்சி வாய்க்கிறது"

இவ்வாறான அகக்காட்சி தெளிவுற்று மனம் குழப்பங்களிலிருந்து விடுபட்டு நான் ஆன்மா என்பதை எவன் நிலையாக உணர்கிறானோ அவனே ஞானியாவான். அவ்வாறு குழப்பங்களில் இருந்து விடுபட மனிதன் தான் கொண்ட உடலும், உடலால் உணரப்படும் விஷயங்களையும் தனித்தனியே பிரித்தறிந்து அவை ஆன்மாவிலிர்ந்து வேறுபட்டது என்றும் ஆன்மாவே நிலையானது என்றும் உணர வேண்டும். அதை எவ்வாறு செய்வதென்பதை எமதர்மன் எடுத்துரைக்கிறார்.

"புலன்களின் தனித்தன்மை, அவற்றின் எழுச்சி மற்றும் ஒடுக்கம், தனித்தனியான உற்பத்தி ஆகியவற்றைப் பகுத்தறிகின்ற விவேகி கவலையிலிருந்து விடுபடுகிறான்."

மனிதர்கள் உட்பட உலகில் உள்ள யாவும் ப்ரபஞ்சத்திலிருந்து பிரிந்து வந்த ஒரே தன்மையிலான பொருளே! எனவே மனித உடலின் ஒவ்வொரு உறுப்பும் பிரபஞ்சத்தின் வெவ்வேறு பொருள்களின் தன்மைகளைக் கொண்டதாக இருப்பதே இயல்பு.

உதாரணமாக பெரியோர்கள் இவ்வாறு பகுக்கிறார்கள்!

காது ஒலியை பெறுவதற்கு வின்னை நோக்கி இருக்கும் செலுத்து சக்தி.
மூக்கு காற்றின் அழுத்தத்தத நோக்கி இருக்கும் வாயு சக்தி!
கண் ஒளியை நோக்கி இருக்கும் அக்கினியின் சக்தி!
நாக்கு சுவையைத் தேடி இருக்கும் தண்ணீரின் சக்தி!
உடம்பு மணத்தினால் இயங்கும் பூமியைப் போன்ற இயங்கு சக்தி!

இப்படி ஒவ்வொரு புலனும் பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றிலிருந்து தனித்தனியாகத் தோன்றின, தனித்தனி செயல்களைச் செய்கின்றன எனலாம். இவைகள் விழிப்பு நிலையில் செயல்பட்டு கனவிலும் தூக்கத்திலும் ஒடுங்கி இருக்கின்றன. இவ்வகைப் புலன்கள் அனைத்தும் உயிர்சக்தியோடும் பிராணனோடும் சம்பந்தப்பட்டவை. இவ்வகைப் புலன்களுக்கும் ஆன்மாவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதே இதன் மூலப்பொருள் என்பதை உணரவேண்டும்.



"நசிகேதா! புலன்களைவிட உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை. பொருட்களைவிட மனம் வலிமை வாய்ந்தது. மனத்தைவிட புத்தி வலிமை வாய்தது. மகிமை வாய்ந்ததான ஆன்மா புத்தியைவிட வலிமை வாய்ந்தது."

"மகிமை வாய்ந்ததான ஆன்மாவைவிட அவ்யக்தம் வலிமை வாய்ந்தது.(அவ்யக்தம் என்றால் ப்ரபஞ்சத்தின் ஆற்றல்) அவ்யக்தத்தைவிட இறைவன் வலிமை வாய்ந்தவர். இறைவனைவிட வலிமை வாய்ந்தது எதுவும் இல்லை. அவர் எங்கும் நிறைந்தவர், எந்த அடையாளமும் இல்லாதவர். அவரை அனுபூதியில் உணர்வதால் மனிதன் விடுபடுகிறான்; மரணமிலாப் பெருநிலையையும் அடைகிறான்"

இவ்வாரு உலக நிகழ்விகளிலிலிருந்து இறைவன் வரை உயர்வானதை எடுத்துக் கூறுகிறார் எமதர்மன். இவ்வாறு கூறக்காரணம் இறைவனை அடையும் லட்சியத்திலிருந்து அதாவது இறைநிலையை நம் ஆன்மா பெற்று, நாமே இறைவன் என்று இரண்டர கலக்கும் நிலையிலிருந்து நாம் எவ்வளவு தூரம் கீழே இருக்கிறோம் என்பதை இதை வைத்தே நாம் புரிந்து கொள்ளலாம்.

'புலன்களை விட உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை' என்கிறார். அதாவது உலகத்தில் இருக்கும் பொருட்கள் எல்லாமே நம் புலன்களைக் கவரக்கூடியதாக இருக்கிறது. இயற்கைக்கு மயங்குகிறோம். மலரைப் பார்த்தால் கண் மயங்குகிறது. வாசனை நாசியை இழுக்கிறது. அழகிய பறவைகள் கவனத்தை இழுக்கின்றன. அதன் சப்தங்கள் செவியை கவர்கின்றன. உணவின் சுவை நாவை கட்டுப்படுத்துகிறது. காமம் உடலைக் கவர்கிறது. ஆனால் இவ்வாறு புலன்கள் செயல்படுவது அவற்றின் தனித்தன்மையே அன்றி இதயக் குகையில் உரைந்திருக்கும் ஆன்மாவிற்கும் புலன் இயக்கங்களுக்கும் சம்பந்தம் இல்லை. இதை யார் ஆழ்ந்து உணர்கிறார்களோ அவர்களது புலன்கள் மீதான மோகமும் இயக்கமும் இயல்பாகவே தங்கள் வேகத்தை இழக்கின்றன.

மேலும் மரணமில்லா நிலையை அடையும் வழியை நசிகேதனுக்கு உரைக்கிறார் எமதர்மன்.

"நசிகேதா! இறைவனுடைய உருவம் புறத்தில் காணக்கூடியதாக இல்லை. யாரும் அவரைக் கண்களால் காண்பதில்லை. இதயக் குகையிலுள்ள ஆன்மாவால் விழிப்புற்ற புத்தியில், மனத்தின் தொடர்ந்த முயற்சியால் உணரப்படுகிறார். அவரை அறிபவர்கள் மரணமற்றவர்களாக ஆகின்றனர்."

இறைவன் எனப்படுவது அண்டவெளியின் மைய சக்தி எனக்கொண்டால் அதை அனுவிலும் அனுவான மனிதக்கண்களால் காண முடியாது என்பதே உண்மை. இதனை ஆன்மாவை உணர்ந்தவர்கள் ஆன்மரூபத்தில் பிரபஞ்சத்தோடு கலந்தவர்கள் மட்டுமே காண முடியும்.

இதையே கீதையில் பகவான் அர்ஜுனனிடம் இவ்வாறு கூறுகிறார்...

"அர்ஜுனா! உனது இந்த ஊனக்கண்ணால் என்னை நீ காண முடியாது. உனக்கு ஞானக்கண் கொடுக்கிறேன். என்னுடைய ஈஸ்வர யோக நிலையைப் பார்."



ஸ்ரீ க்ருஷ்ணர் அருஜுனன்னுக்குத் தன்னுடைய மேலான ஈஸ்வர வடிவத்தைக் காட்டி அருளினார். அவ்வடிவம் அநேக முகங்கள் கண்கள் உடையது. தெய்வீக ஆபரணங்கள் பல அணிந்தது. தெய்வீக ஆயுதங்கள் பல ஏந்தியது.

திவ்யமான மாலைகளையும் ஆடைகளையும் அணிந்து கொண்டும் திவ்யமான வாசனையைப் பூசிக்கொண்டும், பெரும் வியப்பூட்டும் வகையிலும் ஒளி வீசிக்கொண்டும் எல்லாத் திசைகளிலும் முகங்களைக் கொண்டதாயும் இருந்தது. வானத்தில் ஒரே நேரத்தில் ஆயிரம் சூரியர்கள் ஒளி வீசினால் எவ்வளவு பேரொளி தோன்றுமோ, அவ்வளவு ஒளியோடு அந்த மகாத்மாவின் உருவம் பிரகாசித்தது.



"எதைப் பற்றி பலரால் கேட்க முடியவில்லையோ, கேட்டும் பலரால் எதனை அறிய முடியவில்லையோ அந்த ஆன்மாவைப் பற்றி உபதேசிப்பவரும் அபூர்வம். கேட்பவரும் அபூர்வம். அத்தகைய அபூர்வமான ஒருவரைப் பின்பற்றி அதனை அறிபவரும் அபூர்வம்."


(ஆன்மாவை அறிவோம்...)


மரணத்திற்கு அப்பால் - 19



Sunday, August 15, 2010

மரணத்திற்கு அப்பால் - 17





"மரணத்திற்குபிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர். சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப் பயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்". - எமதர்மன்.

ஆன்ம அனுபூதி, இறையனுபூதி, இறைக்காட்சி என்றெல்லாம் பொதுவாக நாம் கேள்விப்படுபவைகள் எல்லாம் உண்மையில் என்ன என்பது பற்றி யாராலும் கூற முடியாது. ஏனினெல் அது அராய்ச்சி செய்து விளக்கமுடிவதில்லை. அவை அனுபவத்திற்கு உரியது. அத்தகைய அனுபவத்தை பெறுவதற்கு சுய ஆராய்ச்சி தேவை. அவ்வாறான ஆராய்ச்சியின் காரணமாக நசிகேதன் இங்கே அதுபற்றி கேட்க எமதர்மனும் சிறுவனான நசிகேதனுக்கு சிறந்ததொரு பதிலைக் கொடுக்கிறார்.

"குறிப்பிட்டு சொல்ல முடியாததும் மேலானதுமான அந்த ஆனுபூதி இன்பத்தை நேரடியாக அனுபவிக்கின்றனர். அந்த அனுபவம் தானாக ஒளிர்கிறதா அல்லது வேறொன்றால் ஒளிரச் செய்யப்படுகிறதா? இது பற்றி நான் அறிய விரும்புகிறேன்" என்று கேட்கிறான் நசிகேதன்.

எமதர்மன் கூறுகிறார்! "நசிகேதா! அங்கே சூரியன் ஒளிர்வதில்லை. சந்திரனும் நட்சத்திரங்களும் ஒளிர்வதில்லை. மின்னல் ஒளிர்வதில்லை. இந்த அக்கினி எப்படி ஒளிர முடியும்? ஒளிர்கின்ற ஆன்மாவை அனுசரித்தே மற்ற அனைத்தும் ஒளிர்கின்றன. அனைத்தும் அதன் ஒளியால் ஒளிர்கின்றன."

ஆன்ம ஒளியைக் காட்ட புற ஒளியால் இயலாது என்கிறார் எமதர்மன். ஆன்ம அனுபூதி என்பது ஒரு புறக்காட்சி அல்ல என்று இங்கே கூறப்படுகிறது. அனைத்தையும் காண ஒரு விளக்கு தேவை. ஆன்ம ஒளியே நாம் புறப்பொருளைக் காணும் விளக்காக இருக்கின்றது. ஆன்ம ஒளியால் தான் நாம் அனைத்தையும் உணர்கிறோம். ஆகையால் சாதகத்தால் ஆன்ம ஒளியை நீ உணர்வாய் என்கிறார் எமதர்மன். எவனொருவன் ஆன்ம ஒளியை காண்கிறானோ அவன் மரண பயத்தை வெல்கிறான்.

மரணத்தை விட கொடியது மரண பயம். ஆனால் அத்தகைய மரண பயத்தை ஒருவன் எப்படி வெல்ல முடியும் என்பதற்கு எமதர்மன் வழி கூறுகிறார். வாழ்க்கையின் துவக்கத்தையும் முடிவையும் பற்றிய உண்மை நிலையை உணர்பவன் மரண பயத்தை வெல்கிறான் என்கிறார்.

உதாரணமாக ஆற்றங்கரையில் ஒரு அரச மரம் இருப்பதாய்க் கொள்வோம். நாம் அதைப் பார்க்கிறோம். அதன் பிரதிபிம்பம் நீரில் தெரிகிறது. நிலத்தில் வேர்கள் கீழேயும் கிளைகள் மேலேயும் தெரியும், ஆனால் நீரில் அவை தலைகிழாகத் தெரியும். மரம் நீரின் பிரதிபிம்பத்தில் வேர்கள் மேலாகவும் கிளைகள் கீழாகவும் போல! அதாவது வாழ்க்கையில் நாம் இன்பமாகக் காண்பவை உண்மையில் இன்பம் அல்ல. அதுபோலவே துன்பமாகக் காண்பவை துன்பம் அல்ல. பிறப்பை நாம் இன்பமாகக் காண்கிறோம். மரணத்தை துன்பமாகக் காண்கிறோம். அதனைக் கண்டு அஞ்சுகிறோம். ஆனால் உண்மையை உணர்ந்த மகான்கள் பிறப்பு துன்பம் என்றும் மரணத்தை இன்பம் என்றும் கூறுகிறார்கள். இதுவே மரம் நீரில் பிரதிபிம்பமாக தலைகீழாக தெரிவதற்கு எடுத்துக்காட்டு.



அதுவே உண்மை எனப்படுகிறது. துறவி மரணத்தை நேசிக்கிறான். சாதாரண மனிதர்கள் வாழ்வை நேசிக்கிறார்கள். அது போலவே உலகம் அதன் உறவுகள் அது தரும் சுகங்கள் எல்லாவற்றையும் உண்மை நிலையானவை என்று நம்புகிறோம். ஆனால் அது உண்மை இல்லை. இவ்வாறு நாம் காணும் உண்மைக்கு ஒரு தலைகீழ் நிஜம் இருப்பதை, நாம் வாழும் வாழ்க்கைக்கு ஒரு பிரதிபிம்பமான இன்னொரு கோணம் இருப்பதை நீரில் காணும் மரத்தோடு ஒப்பிட்டு விளக்குகிறார் எமதர்மன்.

"நசிகேதா! இந்த அரச மரம் பழமையானது. மேலே வேரும், கீழே கிளைகளும் உடையது. அதுவே தூயது. அதுவே இறைவன். அது அழிவற்றது. எல்லா உலகங்களும் அதையே சார்ந்திருக்கின்றன. அதை யாரும் கடந்து செல்ல முடியாது. நீ கேட்ட உண்மை அதுவே!"

"இந்த உலகங்கள் அனைத்தும் பிராணனிலிருந்து வெளிப்படுகின்றன. பிராணனால் இயங்குகின்றன. வஜ்ராயுதத்தை உயர்த்திப் பிடித்திருப்பது போல் இறைவன் இருக்கின்ற பெரும் பயம் காரணமாகத் தான் இந்த இயக்கங்கள் நடைபெறுகின்றன. இதனை அறிபவர்கள் மரணமற்றவர்களாக ஆகின்றனர்."

இறைவன் மிகப்பெரிய பிரம்மாண்டத்தன்மை கொண்டவன் என்கிற உண்மையை உணர்வதாலேயே இயக்கங்கள் தடங்கலின்றி நடைபெறுகின்றன. பேராற்றலின் சக்தியே பிரபஞ்சத்தின் அனைத்து இயக்கத்தையும் தொடர்ந்து நடைபெறச் செய்கின்றது என்பதை விளக்குகிறார் எமதர்மன்.

"நசிகேதா! இறைவன் மீதுள்ள பயத்தினால் அக்கினி எரிக்கின்றது; சூரியன் சுடுகிறது. இந்திரனும் வாயுதேவனும் தத்தம் வேலைகளைச் செய்கின்றனர். ஐந்தாவதான மரண தேவனும் அந்த பயத்தினால் தான் தன் தொழிலைச் செய்கின்றன."



இங்கே இறைவன் என்ற பதத்தை மூலப் ப்ருக்ருதி எனக்கொள்ளலாம். அளவிட முடியாத அண்டவெளியும் பிரபஞ்சங்களும் ஒருவித ஈர்ப்பு சக்திக்குக் கட்டுப்பட்டும் ஏதோ ஒரு செலுத்துப் பாதையிலேயே வலம் வந்து கொண்டிருப்பதையும் காணும் போது, இவைகள் எல்லாம் எதிலிருந்து உருவானதோ அந்த மூலப் ப்ருக்ருதியின் ஆற்றல் மிகப்பெரியது. எல்லையற்ற பரப்பளவையும் அவை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது என்பதை நாம் உணர முடிகிறது. ஆகவே அந்த மூலப் ப்ருக்ருதியின் ஆற்றலின், கட்டுப்பாட்டின் காரணமாகவே அக்னி எரிக்கின்றது என்றும் சூரியன் சுடுகின்றது என்றும், வாயு அதன் வேலைகளைச் செய்துகொண்டு இருக்கின்றது என்றும் எமதர்மன் கூறுவதாகக் கொள்ளலாம்.

"இங்கே உடம்பு வீழ்வதற்கு முன்பு இந்த உண்மைகளை உணர முடியுமானால் அவர்களுக்கு அகக்காட்சி வாய்க்கிறது. உணர முடியாவிட்டால் உலகில் மீண்டும் மீண்டும் பிறக்க நேர்கிறது" - எமதர்மன்.



ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே!

விளக்கம்: ஓம். அது பூர்ணம். இதுவும் பூர்ணம். பூர்ணத்திலிருந்து பூர்ணம் உதயமாயுள்ளது. பூர்ணத்தினின்று பூர்ணத்தை எடுத்தாலும் பூர்ணமே எஞ்சி நிற்கின்றது.


ஆன்மாவை அறிவோம்....


மரணத்திற்கு அப்பால் - 18

Wednesday, July 7, 2010

மரணத்திற்கு அப்பால் - 16


ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமே வாவசிஷ்யதே!

விளக்கம்: ஓம். அது பூர்ணம். இதுவும் பூர்ணம். பூர்ணத்திலிருந்து பூர்ணம் உதயமாயுள்ளது. பூர்ணத்தினின்று பூர்ணத்தை எடுத்தாலும் பூர்ணமே எஞ்சி நிற்கின்றது.

ஆம், இந்தப் பிரபஞ்சத்தின் அனுப்பொருளும் அதன் சக்தியும் எதுவோ அதுவே நாமும் நம்முள்ளிருக்கும் ஆன்மாவும். நம் உடலும் ஆன்மாவும் இறுதியில் பிரபஞ்சத்திலே தான் ஐக்கியமாகிறது. தனித்து எங்கும் செல்வதில்லை. இவற்றை எமதர்மன் படிப்படியாக நசிகேதனுக்கு விளக்கி வருகிறார்.

"நசிகேதா! பதினோரு வாசல்களை உடையதான உடம்பு, பிறப்பற்ற, மாறுபாடற்ற உணர்வை உடைய ஆன்மாவின் கருவியாகும். உடல் ஆன்மா வசிக்க உதவும் ஒரு கருவிதான் என்பதை தியானித்து உனர்ந்தவன் கவலைகளிலிருந்து விடுபடுகிறான். சுதந்திரனாகி பிறவிகளிலிருந்து விடுபடுகிறான். இவ்வாறு உடலை ஒரு கருவியாக உபயோகித்துப் பின் அதிலிருந்து நீங்கும் உட்பொருள் எதுவோ அந்த ஆன்மாவே நீ கேட்டது!"

கண்கள், நாசிகள், செவி, குதம், பிறப்புக்குறி, தொப்புள் மற்றும் கருவுருவாகும் போது ஆன்மா உடலுக்குள் புகும் வாயிலாக கருதப்படும் உச்சந்தலை ஆகியவற்றையே எமதர்மன் உடலின் பதினோரு துவாரங்களாக குறிப்பிடுகிறார். இதில் தொப்புள் மற்றும் உச்சந்தலை துவாரங்கள் அடைக்கப்பட்ட நிலையில் இருக்கும். பிறந்த குழந்தையின் உச்சந் தலையை சிறிது காலத்திற்கு யாரையும் தொட விடமாட்டார்கள். ஏனெனில் தலைப்பகுதியானாலும் மிகவும் மென்மையான ஒரு பகுதியாக அப்பகுதி விளங்குவதே அதற்கு காரணம். மனிதர்கள் கருவாக உருவெடுக்கும் மண்டைஓட்டுடன் கூடிய தலைப்பகுதி வளருகையில் தலை ஒரு உருண்ட பஞ்சு போல இருக்கும். உச்சந்தலையின் அப்பகுதி மூலமாகவே ஆன்மா கருவினுள் புகுவதாக பெரியோர்கள் கூறுவார்கள். உடலைப் பேணிப்பாதுகாப்பதில் உச்சந்தலைக்கு முக்கியப் பங்கு இருக்கிறது என்பதும் அதனால் தான். ஆக எமதர்மன் இது போன்ற இடங்களையும் சேர்த்தே பதினோரு துவாரங்கள் கொண்ட உடல் என்று கூறுகிறார்.



எனவே உடலை வெறுக்கவும் கூடாது, அதன் சுகங்கள் மீதும் மயக்கம் கொள்ளக் கூடாது. இந்த உடல் பாதுகாக்கப்படுவது உள்ளே அசைவற்று இருக்கும் ஆன்மாவுக்காகவே என்று உணர்ந்து மயக்கமற்ற வாழ்க்கை வாழ வேண்டும். அவ்வாறு எந்த ஆன்மாவிற்காக நாம் உடலைக் காக்கும் கடமையை மேற்கொண்டிருக்கிறோமோ அதுவே நீ அறிய விரும்புவது என்று நசிகேதனுக்கு எமதர்மன் விளக்குகிறார்.

"நசிகேதா! இந்த ஆன்மா எங்கும் செல்வது. தூய ஆகாயத்தில் சூரியனாக இருப்பது, அனைத்திற்கும் ஆதாரமானது, அண்ட வெளியில் காற்றாக இருப்பது, அக்கினியாக பூமியில் உறைவது, தேவனில் உறைவது, உண்மையில் உறைவது, ஆகாயத்தில் உறைவது, நீரில் தோன்றுவது, பூமியில் தோன்றுவது, யாகத்தில் தோன்றுவது, மலையில் தோன்றுவது, பிரபஞ்ச நியதியாக விளங்குவது. பெரியது."

"நசிகேதா! பிராணனை மேலே இயக்குவதும், அபானனைக் கீழே தள்ளுவதுமான ஜீவன் உடம்பின் நடுவில் உள்ளது. எல்லா புலன்களும் அதனைச் சார்ந்திருக்கின்றன."

பிராணன் உடலின் உள்ளிருந்து மேலே எழும்பி வெளியேறக்கூடிய சக்தி. மூச்சு வெளியேறுவது அந்த மேல் நோக்கிய சக்தியால் தான். அபாணன் என்பது கீழ் நோக்கிய இயக்கம். உடலில் இருந்து வாயு குதம் வழியாக வெளியேறுவது. உடலில் இருக்கும் வாயு இந்த இரண்டு மார்கம் வழியாக சீரான அழுத்தத்தில் பிரிவதும் அது தடையற்ற முறையில் தொடர்ந்து நிகழ்ந்து வருவதுமே இந்த உடல் சரியாக இயங்குவதை வெளிப்படுத்தும். பூமிப்பந்தில் மட்டுமல்லாமல் பிரபஞ்சத்தின் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும் இந்த வாயுவானது உடலில் பத்து வகையான இயக்கங்களாக செயல்படுகிறது என ரிஷிகள் வகைப்படுத்தி இருக்கின்றனர்.

அவற்றைப் பார்ப்போம்.

பிராணன் - தொப்புளிலிருந்து மேல் நோக்கிய இயக்கம்.
அபானன் - தொப்புளுக்கு கீழ் நோக்கிய இயக்கம்
வியானன் - எல்லா பக்க இயக்கம்
உதானன் - மரண வேளையில் ஜீவன் வெளியேற உதவுதல் (சில வயோதிகர்கள் கழிவறையில் உயிர் நீப்பதை கேள்விப்பட்டிருப்போம், சிலருக்கு ஜீவன் வாய் வழியாகப் பிரியலாம், சிலர் கண்களை அகல விரித்து ஜீவனைத் துறப்பர். இத்தகைய வழிகளில் ஆன்மா வெளியேற உதவும் வாயு
உதானன்)
ஸமானன் - உணவு ஜீரணம், உனவை ரத்தம்போன்றவையாக மாற்றுதல். (உடல் செல்கள் ஆக்ஸிஜன் இல்லை என்றால் உயிர் வாழாதல்லவா, அவ்வாறு உடலின் ரத்த ஓட்டம் முதல் அனைத்து செல்களிலும் இருக்கும் வாயு ஸமானன்)
நாகன் - வாந்தி, ஏப்பம்
கூர்மன் - கண் இமைகளின் இயக்கம்
க்ருகலன் - பசி
தேவதத்தன் - கொட்டாவி
தனஞ்ஜயன் - உடம்பிற்கு ஆரோக்கியம் அளித்தல்

இவ்வாறு பத்து வகையாக வாயு நமது உடம்பில் செயல்பட்டு வருகின்றது என்கிறார்கள் ரிஷி முனிவர்கள். இந்த வாயுக்கள் அதனதன் வேலையை சீராக செய்யாமல் போனால் உடல் நோயுறக்கூடும். ஆக உடலின் அனைத்து இயக்கங்களும் இந்தப் பிராணனையே சார்ந்துள்ளன என்கிறார் எமதர்மன்.

"நசிகேதா! இவ்வாறான உடம்பிலிருந்து உயிர் பிரிந்தால் அங்கே என்ன மிஞ்சுமோ அதுவே நீ கேட்ட பொருள்."

"எந்த மனிதனும் பிராணனாலோ அபானனாலோ வாழ்வதில்லை. எதனை ஆதாரமாகக் கொண்டு இந்தப் பிராணனனும் அபானனும் இயங்குகின்றனவோ அதனை ஆதாரமாகக் கொண்டே அனைத்தும் வாழ்கின்றன."

வெறும் மூச்சு விடுவதால் நாம் வாழ்வதில்லை. உடலினுள்ளே இருக்கும் நிலையான பொருளான ஆன்மாவின் சக்தியே இந்த இயக்கங்களுக்கு காரணமாகிறது என்கிறார் எமதர்மன். அதாவது ஒரு மின் விசிறி ஓடுகிறாது என்றால் அதன் இறக்கையால் அல்ல. அதனுள்ளே ஓடும் கண்ணுக்குத் தெரியாத மின்சாரத்தால் தான் அல்லவா! அது போலவே உடலை ஆன்மா என்ற சக்தி இயக்குகிறது என்கிறார் எமதர்மன்.

"நசிகேதா! நல்லது. மரணத்திற்குப் பின்னால் உயிர் என்ன ஆகும் என்பது பற்றியும், ரகசியமானதும் அழிவற்றதுமான ஆன்மா பற்றியும் உனக்கு இப்போது சொல்கிறேன். மரணத்திற்குப் பிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர். சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப் பயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்"

"புலன்கள் தூங்கும் போது தனக்கு விருப்பமானவற்றை உருவாக்கியபடி எது விழித்திருக்கிறதோ அதுவே தூய, மரணமற்ற ஆன்மா என்று சொல்லப்படுகிறது. எல்லா உலகங்களும் அதனையே சார்ந்திருக்கின்றன. அதனைக் கடந்தவனாக யாரும் இல்லை."

உறக்கத்திலும் உயிர்ப்புடன் இருக்கிறோம், கனவுகளையும் நிஜம் போல உணர்கிறோம், விழிப்பு நிலையையும் உணர்கிறோம். இப்படி எல்லா நிலைகளிலும் நாம் உணர்வுடன் இருப்பதற்கு காரணமாக எப்போதும் நிலையான விழிப்புடன் இருப்பது எதுவோ அதுவே ஆன்மா என்கிறார்
எமதர்மன்.

"நசிகேதா! ஒன்றான அக்கினி உலகில் வந்து எவ்வாறு பல்வேறு பொருட்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறதோ அவ்வாறே எல்லா உயிர்களிலும் இருக்கின்ற ஆன்மா ஒன்றாக இருந்தாலும் பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது. அதே வேளையில், அந்த வடிவங்களுக்கு வெளியிலும் நிகழ்கிறது."


எந்தப் பொருளை எரித்தாலும் நெருப்பு ஒரே வடிவானதாகவே இருக்கிறது. அதே போலவே ஆன்மா மனிதன், விலங்குகள், பறவைகள் மற்றும் செடி கொடிகள் அனைத்திலுமே ஒரே தன்மை உடையதாகவே இருக்கிறது. மரத்தையும் நாம் கடவுளாக வணங்குவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக ஆன்மாவின் தன்மையை எமதர்மன் விளக்குகிறார்.

"எதைப் பற்றி பலரால் கேட்க முடியவில்லையோ, கேட்டும் பலரால் எதனை அறிய முடியவில்லையோ அந்த ஆன்மாவைப் பற்றி உபதேசிப்பவரும் அபூர்வம். கேட்பவரும் அபூர்வம். அத்தகைய அபூர்வமான ஒருவரைப் பின்பற்றி அதனை அறிபவரும் அபூர்வம்."

ஆன்மாவை அறிவோம்....


மரணத்திற்கு அப்பால் - 17

Sunday, June 27, 2010

மரணத்திற்கு அப்பால் - 15




"மரணத்திற்குபிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர். சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப் பயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்". - எமதர்மன்.

ஆன்மாவை உருவகப்படுத்த முடியாது. மிகவும் நுட்பமானது. மிகவும் சூட்ஷமமானது. எப்படி காற்றைக் காட்ட முடியாதோ அது போலவே ஆன்மாவையும் காட்ட முடியாது. ஆனால் காற்றை நம்மால் சாதாரணமாக உணரமுடியும். ஆன்மாவை அப்படி உணர்ந்து விடுவதும் கடினம். எனவே ஆன்மாவை பல கோணங்களில் உருவகித்து விளக்குகிறார் எமதர்மன்.

"நசிகேதா! யார் தண்ணீர் முதலான பஞ்ச பூதங்களுக்கும் முன்னால் தவத்தினால் தோன்றியவரோ, யார் உயிர்களின் இதயக் குகையில் உறைபவரோ அவரே அனைத்தையும் காண்கிறார். அதுவே நீ கேட்ட பொருள்."

பொதுவாக தியானம் எனப்படுவது புலன்களை உள்நோக்கி செலுத்துவது என்பார்கள். பார்த்தலையும், கேட்டலையும், முகர்வதையும், சுவையறிதலையும் இந்த உடலின் உள்நோக்கி செலுத்த முயற்சித்தால், அதில் ஒருவர் வெற்றியடைந்தால் அவரே ஆன்மாவை தரிசனம் செய்ய முடிபவர் ஆகிறார் என்கிறார் எமதர்மன். இதற்கு முதல் படி புலன்களை நாம் நினைக்கும் இடத்திற்கு செலுத்த நாம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அவ்வாறான பயிற்சிக்கு தியானம் உதவுகிறது.

உதாரணமாக ஒரு துறவியிடம் ஒருவர் தியானம் கற்க வந்தார். அவரிடம் அந்தத் துறவி "காட்டுக்குள் அமைதியாக அமர்ந்து அங்கே நீ என்னவெல்லாம் கேட்கிறாயோ அவற்றை என்னிடம் வந்து சொல்" என்று கூறி அனுப்பினார். தியானம் கற்க வந்த அந்த நபரும் அடர்ந்த காட்டுக்குள் சென்று அமர்ந்தார். ஓரிரு நாட்களில் மீண்டும் துறவியிடம் வந்து "காட்டுக்குள்ளே பறவைகளின் சப்தங்களைக் கேட்டேன், மிருகங்களின் கர்ஜனைகளைக் கேட்டேன், பறவைகளின் இறைச்சலைக் கேட்டேன், மரம் செடிகொடிகள் மற்றும் சறுகுகள் காற்றில் ஆடுவதன் சப்தத்தைக் கேட்டேன்" என்கிறார்.

துறவியோ, "நீ தியானம் செய்ய இன்னும் ஆரம்பிக்கவில்லை. மனதை இன்னும் ஒரு நிலைப்படுத்தி இன்னும் அமைதியாக இன்னும் புதியனவாக என்னவெல்லாம் கேட்கிறாயோ அவற்றைச் சொல்" என்கிறார். மீண்டும் காட்டுக்குள் போய் அமர்ந்து புலன்களை கூர்மையாக்கி சூழலை உணரத் துவங்குகிறார் அந்த சீடர். சில நாட்களுக்குப் பின் துறவியிடம் திரும்பி வந்து "ஐயா! தூரத்தில் அருவித் தண்ணீர் கீழே விழும் சப்தத்தைக் கேட்டேன். காற்றி கிளைகளுக்கிடையே ஓடிடும் சப்தத்தைக் கேட்டேன். எறும்புகள் ஊறும் சப்தத்தைக் கேட்டேன், மொட்டுக்கள் மலர்ந்திடும் சப்தம் கேட்டேன்" என்கிறார்.

துறவியோ இது போதாது மீண்டும் செல் என்கிறார். மீண்டும் சென்று பல நாட்கள் கழித்து திரும்பி வந்தவர் "இத்தனை நாள் காதில் கேட்க முடியாத மிகச்சிறிய சப்தங்களைக் கூட கேட்க முடிந்த நான் இந்த முறை எதையுமே கேட்கவில்லை. மனம் லயித்த நிலையில் என்னுள்ளேயே நான் இருந்து விட்டேன். என்னால் என் சூழலை உணரக்கூட முடியவில்லை. நான் முழுமையான நிசப்தத்தையே உணர்ந்தேன்" என்கிறார். துறவி கூறினார் "நீ தியானம் கற்றுக்கொண்டாய், இனி இதைத் தொடர்ந்து செய்துவா, உன்னை நீயே தரிசிப்பாய்" என்று கூறி ஆசிவழங்கி அனுப்பி வைத்தார்.

இவ்வாறு புலன்களை ஒரு இலக்கை அடையும் நோக்கோடு, இலக்கை நோக்கிச் செலுத்தும் பயிற்சியை மேற்கொள்ளும் போது அது தானாகவே நம் மனதுள் அடங்கும் என்பதை விவரிக்கிறது இந்தக்கதை. இவ்வாறு புலன்களை யார் உள்நோக்கிச் செலுத்திகிறாரோ அவரே ஆன்மாவை தரிசிக்கிறார் என்கிறார் எமதர்மன்.

எமதர்மன் மேலும் தொடர்கிறார், "நசிகேதா! பிராண வடிவானவளும், எல்லா தெய்வங்களின் வடிவானவளும், பஞ்ச பூதங்களுடன் தோன்றியவளுமாகிய எந்த தேவி உயிர்களின் இதயக் குடையில் புகுந்து உறைகிறாளோ அந்த தேவியின் வடிவாக இருப்பதே நீ கேட்ட பொருள்"

"கருவுற்ற பெண்கள் கருவை எச்சரிக்கையாகக் காப்பது போல் அரணிக்கட்டைகளில் அக்கினி பாதுகக்கப்படுகிறது. விழிப்புணர்ச்சி பெற்ற யோகிகள் ஆன்ம அக்கினியை அதுபோல் கவனமாக நாள்தோறும் வழிபடுகின்றனர். அந்த ஆன்ம அக்கினியே நீ கேட்ட பொருள்."




அரணிக்கட்டை என்பது நெருப்பை பற்ற வைக்க உதவும் ஒரு மரப்பொருள். அரணிக்கட்டைகள் இரண்டை எடுத்து ஒன்றாக உரசும் போது அதிலிருந்து அக்னி வெளிப்படும். யாக குண்டத்தில் தீமூட்ட இந்த கட்டைகளை பயன்படுத்துவார்கள். எமதர்மன் ஆன்மா ஒரு மனிதருக்குள்ளே எப்படி உரைந்திருக்கிறது என்பதை இந்த அரணிக்கட்டையை உதாரணமாகக் கொண்டு விளக்குகிறார். அரணிக்கட்டையை உரசும் போது அக்கினி தோன்றுகிறது. அதாவது அரணிக்கட்டைக்குள்ளே அக்னி கருப்பொருளாக உரைந்து இருக்கிறது. இரு கட்டைகளை உரசும்போது அது வெளியே வருகின்றது. அல்லாமல் அந்த மரத்துக்குள் அக்னி இருப்பதை கண்ணால் பார்க்க முடியாது. அதைப்போலவே நமக்குள்ளே உரைந்திருக்கும் அக்னி போன்றதே ஆன்மா என்கிறார் எமதர்மன்.

"நசிகேதா! யாரிலிருந்து சூரியன் உதிக்கிறானோ, எங்கே மறைகிறானோ, அந்த இறைவனை எல்லா தெய்வங்களும் போற்றுகின்றனர். அவரை மீறி யாரும் நடப்பதில்லை. நீ கேட்ட பொருள் அந்த இறைவனே."

"யாரிலிருந்து சூரியன் உதிக்கிறானோ" என்று எமதர்மன் கூறுவதிலிருந்தே இறைவன் எனப்படுவது பிரபஞ்சம் முழுவதிலும் வியாபித்திருக்கும் ஒருவகை சக்தி என்பது தெளிவாகப் புலப்படுகிறது. ஆக அளப்பறிய பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி எதுவோ அதுவே இறை சக்தி எனக் கொள்க. பிரபஞ்சத்தின் சக்தியால் தான் பூமியின் சுழற்சியும் அதன் மாற்றங்களும் உண்டாகிறது. பூமியின் அந்த மாற்றங்களால் தான் நம் உடலிலும் மனதிலும் மாற்றங்கள் உண்டாகின்றன. இவ்வாறு பிரபஞ்ச சக்தியை மீறி தனியாக எதுவும் நிகழ்வதில்லை என்பதையும் அத்தகைய பிரபஞ்சத்தின் சக்தியாக எதை நம்மால் ஊகிக்க முடிகிறதோ அதுவே நம்முள்ளில் இருக்கும் ஆன்மா என்று விளக்குகிறார்.

"நசிகேதா! இங்கே எது இருக்கிறதோ அதுவே அங்கே இருக்கிறது. அங்கே எது இருக்கிறதோ அதுவே இங்கும் இருக்கிறது. இந்த உலகில் வேறுபாடு இருப்பது போல் யார் காண்கிறானோ அவன் மரணத்திலிருந்து மரணத்தை அடைகிறான்."

"அண்டத்தில் இல்லாதது பிண்டத்தில் இல்லை" என்பதை சித்தர்கள் மொழியாகக் கூறுவார்கள். அதைத்தன் உபநிஷத்தின் மூலமாக எமதர்மனும் விளக்குகிறார். நமது அறிவால் அளக்க முடியாத மிகப்பெரிய சக்தியான சூரியன், பூமி மற்றும் கால அளவைகளில் அடங்காத மிகப்பெரிய இந்த பிரபஞ்சத்தின் சக்தி எதுவோ அதுவே நம்முள் இருக்கும் சக்தி. அதன் பெயரே ஆன்மா என்று எமதர்மன் கூறுகிறார். அதையே இன்னும் விளக்கி நம்முள் என்ன சக்தி இருக்கிறதோ, நம்முள் இருக்கும் ஆன்மாவின் சக்தி எதுவோ அதுவே பிரபஞ்சத்தின் சக்தியாகும். பிரபஞ்சத்தின் சக்தி எதுவோ அதுவே நம்முள்ளும் இருக்கிறது. இதை யார் உணர்ந்து கொள்கிறார்களோ, அவர்கள் தான் தனக்குள்ளே ப்ரபஞ்சத்தின் முழுமை இருப்பதை உணர்வார்கள். அவர்களே நிரந்தரமான அந்த சக்தியோடு கலக்கிறார்கள் என்கிறார் எமதர்மன்.

"நசிகேதா! இந்த உண்மை மனத்தினால் உணரப்படுகிறது. இந்த உலகில் வேறுபாடு எதுவும் இல்லை. இங்கே வேறுபாடு இருப்பது போல் யார் காண்கிறானோ அவன் மரணத்திலிருந்து மரணத்திற்குச் செல்கிறான்"

"இறைவனுக்குப் பிரியமானவனே! எங்கும் நிறைந்தவரும், இறந்த மற்றும் எதிர் காலங்களுக்குத் தலைவரும் ஆன இறைவன் உடம்பின் நடுவில் இதயக் குகையில் பெருவிரல் அளவில் இருக்கிறார். அவரை அறிந்தவன் யாரையும் வெறுப்பதில்லை. நீ கேட்ட பொருள் அவரே. புகையற்ற ஒளி போல் பெருவிரல் அளவினராக உள்ளார். இப்போது இருப்பவர் அவரே, என்றென்றும் நிலைத்திருப்பவரும் அவரே, நீ கேட்ட பொருளும் அவரே!"



ஆன்மாவை புகையில்லாத ஒரு தீபம் எப்படி நிலைத்தெரியும் ஒரு வடிவத்தைக் கொண்டதோ அத்தகைய வடிவமாக இதய மையத்தில் நிலைத்திருக்கும் சக்தியாக எமதர்மன் கூறுகிறார். இதயக்குகை என்பது எது...? உடம்பிற்கு உள்ளே ரத்த ஓட்டத்தை சீர்படுத்த துடித்துக் கொண்டிருக்கிறதே அந்த இதயமா என்றால் இல்லை. அது இல்லை. இது ஆன்மீக இதயம். ஒவ்வொரு மனிதருக்குள் இருக்கும் சக்தி மையம். தொப்புளுக்கு மேலே ஒரு சாண் தூரத்தில் இருக்கும் இடம் தான் இதயக் குகை. மார்பின் மத்தியில் இருக்கும் சக்தி மையம். இது சுடர் விடும் தன்மை கொண்டது. இது பிரகாசமானது. அதை உணர்பவர் ஆன்மாவை உணர்பவராகிறார் என்கிறார் எமதர்மன்.

"நசிகேதா! மலைகளின் உயர்ந்த பகுதியில் பெய்த மழை நீர் எவ்வாறு தாழ்ந்த பகுதிகளுக்கு ஓடிவிடுகிறதோ, அவ்வாறே உயிரினங்களை வெவேறாகக் காண்பவன் மீண்டும் மீண்டும் அவையாகப் பிறக்கிறான்"

ப்ரபஞ்சத்தின் நிலையான சக்தி எதுவோ அதுவே ஆன்மாவின் சக்தி என்பதை புரிந்து கொள்ளாமல் பிரபஞ்சம் வேறு, நான் வேறு என்று நினைப்பவர்கள், நிலையாக இருக்கும் அந்த சக்தி வேறு நான் என்ற நினைப்பவர்கள் நிரந்தரமான சக்தியுடன் ஐக்கியம் ஆகாமல் மீண்டும் மீண்டும் பிறப்பெய்துகிறார்கள்.

"நசிகேதா! தெளிந்த நீரில் விடப்பட்ட தெளிந்த நீர் எவ்வாறு அதுவாகவே ஆகிறதோ அவ்வாறு உண்மையை உணர்கின்ற மகான் ஆன்ம வடிவாகவே ஆகிறார்"

தண்ணீர் கடலில் இருந்தாலும், கிணற்றில் இருந்தலும், குளத்தில் இருந்தாலும் அது தண்ணீர் தான். எந்த பாத்திரத்தில் இருந்தாலும் தண்ணீரின் இயல்பு ஒன்றாகவே இருக்கிறது. அது போலவே பிரபஞ்சத்தின் சக்தியும் நம்முள் இருக்கும் ஆன்மாவும் ஒன்றே. அதுவே உலகின் சகல ஜீவராசிக்குள்ளும் இருக்கிறது. அவை வெவ்வேறு உடலைப் பெற்றிருக்கிறதே தவிற அதன் குணங்கள் ஒன்றே. அத்தகைய ஆன்மா ப்ரபஞ்சத்துடன் ஐக்கியமாகும் போது தண்ணீரின் இரண்டு துளிகள் ஒன்றாக இணைந்து ஒரே துளி ஆவதற்குச் சமமாகும் என்று விளக்குகிறார் எமதர்மன்.

ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே!

விளக்கம்: ஓம். அது பூர்ணம். இதுவும் பூர்ணம். பூர்ணத்திலிருந்து பூர்ணம் உதயமாயுள்ளது. பூர்ணத்தினின்று பூர்ணத்தை எடுத்தாலும் பூர்ணமே எஞ்சி நிற்கின்றது.

மேலே கூறப்பட்டதில் பூர்ணம் என்பதற்கு பதிலாக தண்ணீர் என்று கூறி படித்துப் பாருங்கள். ஆன்மாவின் தன்மையை அறிவீர்கள்!


"தத்வம் அஸி" - "நீ தான் அது" (அது = ஆன்மா) - இதை முதலில் உணர்ந்தால் அடுத்த கட்டமான "அஹம் ப்ரம்மாஸ்மி" என்பது உணரப்படும்.



மரணத்திற்கு அப்பால் - 16

Saturday, June 19, 2010

மரணத்திற்கு அப்பால் - 14





"எதைப் பற்றி பலரால் கேட்க முடியவில்லையோ, கேட்டும் பலரால் எதனை அறிய முடியவில்லையோ அந்த ஆன்மாவைப் பற்றி உபதேசிப்பவரும் அபூர்வம். கேட்பவரும் அபூர்வம். அத்தகைய அபூர்வமான ஒருவரைப் பின்பற்றி அதனை அறிபவரும் அபூர்வம்."

மரணத்திற்கு அப்பால் மனிதன் என்ன ஆகிறான் என்ற கேள்வி நசிகேதனைத் துளைத்தெடுக்க அதே கேள்வியை ஒரு வேள்வியாகவே நினத்து எமதர்மனிடத்தில் விடாமல் கேட்கிறான் நசிகேதன். அதற்கு எமதர்மன் நசிகேதனுக்கு விளக்கியதை சுருக்கமாக பார்ப்போம்.

இதுவரை நசிகேதனுக்கு ஆன்மா பற்றி எமதர்மன் விளக்கியது:

1. மனிதன் உடல் வேறு ஆன்மா வேறு.
2. ஆன்மா என்பது சலனமற்றது. நிரந்தரமானது. அது அழியாதது. மீண்டும் பிறப்பெய்தக் கூடியது.
3. ஆன்மா தொப்புளிலிருந்து ஒரு ஜான் உயரத்தில் இதயக்குகையில் ஒரு கட்டைவிரல் அளவில் இருக்கக்கூடியது.
4. புலன்களை ஒரு தேரோட்டி போல கட்டுப்படுத்துபவன் மட்டுமே அதனை உணர முடியும்.
5. உலகப் பொருட்கள், மனம், புத்தி, ப்ரபஞ்ச ஆற்றல் இவற்றையெல்லாம் முழுமையாக வசப்படுத்தினால் கடைசிப் புகலிடமான இறைசக்தியை அடையலாம்.
6. பேச்சைக் குறைத்தால் மனம் வசப்படும், மனம் வசப்பட்டால் புத்தி விழிப்புற்றிருக்கும், புத்தி விழிப்புற்றவன் ஆன்மாவை அறிவான்,

என்று எமதர்மன் போதிக்கிறார். இனி எமதர்மன் நசிகேதனுக்கு "அதுவே நீ"" என்று ஆன்மாவை வெவ்வேறு கோணங்களில் விளக்குகிறார்.

எமதர்மன் நசிகேதனுக்கு ஆன்மாவை புரியவைக்க முயற்சிக்கிறார். மரணம் என்பது உடம்புக்கு மட்டுமே நிகழுகிறது. மரணத்தால் பாதிக்கப்படாத ஒன்று இந்த உடம்பினுள் உள்ளது. "அதுவே நீ " என்கிறார் எமதர்மன். "அது" எனப்படுவது ஆன்மாவைக் குறிக்கும் சொல்லாக உருவகித்து ஆன்மாவை பல கோணங்களில் எமதர்மன் உபதேசிக்கிறார்.

நமக்கு உள்ளே இருந்தாலும், ஆன்மாவை நம்மால் உணரமுடியாமல் இருப்பதற்கான காரணத்தை முதலில் விளக்குகிறார் எமதர்மன்.

"நசிகேதா! வெளியில் உள்ளவைகளை உணருவதற்காகவே புலன்களை புறநோக்குடனேயே இறைவன் அமைத்துள்ளார். அதனால் அவை வெளியில் பார்க்கின்றன. அகத்திலுள்ள ஆன்மாவைப் பார்ப்பதில்லை. மரணமற்ற நிலையை விரும்புகின்ற யாரோ விவேகி அக நோக்கு உடையவனாய் ஆன்மாவைப் பார்க்கிறான்."

"மனப்பக்குவம் இல்லாதவர்கள் புறத்திலுள்ள சுகபோகப் பொருட்களை நாடுகின்றனர். எங்கும் இருக்கின்ற மரண வலையில் அவர்கள் வீழ்கின்றனர். ஆனால், நிலையற்ற உலகில் அழிவற்ற நிலையான பொருள் ஒன்று இருப்பதை விவேகிகளே அறிகின்றனர். எனவே அவர்கள் சுகபோகப் பொருட்களை விரும்புவதில்லை." என்கிறார் எமதர்மன்.

அதாவது கண் காது மூக்கு வாய் போன்ற உடலின் அவயவங்கள் யாவும் உடலுக்கு வெளியே இருப்பதை உனரவே உதவுகின்றன என்கிறார் எமதர்மன். கண் புறப்பொருளைப் பார்க்கிறது. குறைந்த பட்சம் கண்ணை உள்பக்கமாக உருட்டி மூளையை பார்க்க முடியுமா? முடியாதே! காது வெளியின் சப்தத்தைக் கேட்கிறது. நமது காது தான், ஆனாலும் நம் காதால் நமது இதயத் துடிப்பையே கேட்க முடியவில்லையே! மேலும் மூக்கு வாய் போன்ற உறுப்புக்கள் யாவும் புறப் பொருளை நுகரவே பயன்படுகின்றன என்பதை யோசிக்க வேண்டும். அதனால் தான் இவைகள் புறப்பொருட்கள் மீது ஒரு மோகத்தை நம்மனத்தில் வளர்த்து விடுகிறது. அவ்வாறு மனம் மயங்கி விடுவதால் ஆன்மதேடுதலை மறந்து உலக நாட்டத்தில் மனம் சிக்கிக் கொள்கிறது என்கிறார் எமதர்மன். மேலும் இவற்றை நன்றாக உணர்ந்து கொள்ளும் விவேகி எவனோ அவன் புலன்களால் உண்டாகும் போகத்தில் மயங்கமாட்டார் என்று விளக்குகிறார் எமதர்மன்.



ஆன்மாவை உருவகப்படுத்த முடியாது. மிகவும் நுட்பமானது. மிகவும் சூட்ஷமமானது. எப்படி காற்றைக் காட்ட முடியாதோ அது போலவே ஆன்மாவையும் காட்ட முடியாது. ஆனால் காற்றை நம்மால் சாதாரணமாக உணரமுடியும். ஆன்மாவை அப்படி உணர்ந்து விடுவதும் கடினம். எனவே ஆன்மாவை பல கோணங்களில் உருவகித்து விளக்குகிறார் எமதர்மன்.

"நசிகேதா! காட்சி, சுவை, மணம், ஒலி, தொடு உணர்ச்சி, உடலின்பம் முதலியவற்றை எதனால் ஒருவன் உணர்கிறானோ, இந்த அனுபவங்கலில் என்ன எஞ்சியிருக்கிறது என்பதையும் எதனால் தெரிந்து கொள்கிறானோ அது வே நீ கேட்ட பொருள்"

உதாரணமாக நாம் உணவைச் சுவைக்கிறோம், அதன் சுவையை சுவைத்து பின் மறந்து போகிறோம். சுவையின் நினைவு நாக்கிலேயே ஒட்டிக் கொள்வதில்லை. அந்த உணவு நன்றாக இருந்தது என்பது மட்டுமே நம் மனதில் வைத்திருக்க முடியும். நாக்கால் உணரப்பட்ட எந்த சுவையையும் நாம் வார்த்தையால் விளக்கி விட முடியாது. ஒரு மாதிரி புளிப்பாய், உப்பாய், கொஞ்சம் துவர்ப்பாய் என்று இழுப்போமே ஒழிய எந்த சுவையையும் வார்த்தைப்படுத்த முடியாது. காரணம் சுவை என்ற புற உணர்வு ஒரு மாயையாகவே இருந்து விடுகிறது. மீண்டும் அதே உணவை சுவைக்கும் போது தான் அந்த சுவையை நம் நாக்கு உணரும். இப்படி ஒரு மாயையான உணர்வை நாம் உணரக் காரணமாக இருப்பது நம்முள் உயிர்ப்புடன் இருக்கும் ஆன்மாவே! ஆக சுவையை மறந்த பின்னும் எஞ்சி இருக்கும் உணர்வு எதுவோ அதுவே ஆன்மா என்று உணர்க என போதிக்கிறார் எமதர்மன்.

"நசிகேதா! கனவு, விழிப்பு ஆகிய இரண்டு நிலைகளையும் எதனால் ஒருவன் உணர்கிறானோ அதுவே ஆன்மா. அது மகிமை வாய்ந்தது. எங்கும் நிறைந்தது. அதனை அனுப்பூதியில் உணர்கின்ற விவேகி கவலையிலிருந்து விடுபடுகிறான்."

உறக்கத்திலும் உயிர்ப்புடன் இருக்கிறோம், கனவுகளையும் நிஜம் போல உணர்கிறோம், விழிப்பு நிலையையும் உணர்கிறோம். இப்படி எல்லா நிலைகளிலும் நாம் உணர்வுடன் இருப்பதற்கு காரணமாக எப்போதும் நிலையான விழிப்புடன் இருப்பது எதுவோ அதுவே ஆன்மா என்கிறார்
எமதர்மன்.

"நசிகேதா! கர்ம பலன்களை அனுபவிக்கின்ற உயிருக்கு ஆதாரமான இந்த ஆன்மாவை அருகில் இருப்பதாகவும், அதே வேளையில் இறந்த காலம் மற்றும் எதிர்காலத்திற்குத் தலைவனாகவும் அறிபவன் யாரையும் வெறுப்பதில்லை. அதுவே நீ கேட்ட பொருள்."

நமது கடந்த காலங்களின் செய்கைகளே நிகழ்கால விளைவாகிறது. நிகழ்கால நமது நடத்தைகளே எதிர்கால வினையை நிர்ணயிக்கிறது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் விருப்பு மற்றும் வெறுப்பு சார்ந்த உணர்ச்சிகளே அவன் கர்மம் செய்யத் தூண்டுதாலாக இருக்கிறது. இவற்றை உணர்பவர்கள் யாரையும் வெறுப்பதில்லை. இதை உணர்பவர்கள் யாரோ அவர்கள் கடந்த காலங்கள் பற்றிய துக்கத்தையும் எதிர்காலம் பற்றிய கவலையையும் துறந்து நிகழ்காலத்தில் வாழ்பவர்களாக திகழ்வார்கள். இவ்வாறு காலக்கட்டுகளைக் கடந்து நிலையாக உணரப்படக் கூடிய பொருள் எதுவோ அதுவே ஆன்மா என்கிறார் எமதர்மன்.

ஆன்மாவை தரிசிப்போம்...




மரணத்திற்கு அப்பால் - 15

Wednesday, April 14, 2010

மரணத்திற்கு அப்பால் - 13



எங்கு சென்றால் மீண்டும் இங்கே திரும்பமுடியாதோ, அந்த மேலான நிலையை அப்பால் தேட வேண்டும். - பகவான் ஸ்ரீ க்ருஷ்னர்.

மரணத்திற்கு அப்பால் தொடரின் அடுத்த கட்டத்திற்கு போகும் முன் சில விஷயங்களை சற்றே கவனிப்போம். மரணத்திற்கு அப்பால் என்ன நடக்கிறது என்பதை நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கேள்வி நம்மிடம் எழலாம். அப்படித் தெரிந்து கொள்வதால் என்ன பலன் என்றும் தோன்றலாம். சிலரோ மரணத்திற்கு அப்பால் ஒன்றும் இல்லை. மறுபிறவி என்பதே பொய் என்றும் கூறலாம்.

சரி மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை நாம் ஏன் இப்போது தெரிந்து கொள்ள வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

உதாரணமாக ரிடையர்மென்ட்க்கு பிறகு நம் வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது என்று இப்பொழுது நினைத்துப் பார்த்தால் மிகவும் அச்சமாக இருக்கும். அப்பறம் பணத்திற்கு என்ன செய்வோம் என்று மனதில் ஒரு சிந்தனை உண்டாகும்.

அப்படி ஒரு காலம் வரும் போது அதை எப்படி சமாளிப்பது என்று நினைத்து இப்பொழுதே பணம் சேர்க்கத் துவங்குவோம். நிலத்தில் முதலீடு செய்வோம். தங்கம் வாங்கி வைப்போம். வங்கியில் நிலையான முதலீடுகள் இடுவோம். அவற்றின் மதிப்பு பின்னாட்களில் அதிகரிக்கும் போது அதை வைத்து நமது ரிட்டையர்மென்ட் வாழ்க்கையை சமாளிப்போம்.

எப்படி ரிடயர்மென்டுக்குப் பின்னால் எப்படி வாழவேண்டும் என்பதை நாம் முன்கூட்டியே தீர்மானிக்கிறோமோ அப்படித்தான் மரணத்திற்குப் பின்னாலும் எப்படி வாழவேண்டும் என்பதை தீர்மானித்துக்கொள்ள வேண்டும். ரிட்டையர்மெண்ட்க்கு பிறகு என்ற வாழ்க்கை இப்போதே நம் கண்களுக்கு எப்படி தெரிவதில்லையோ அப்படித்தான் மரணத்திற்கு பின்னால் வரப்போகும் வாழ்க்கையும் நம் கண்களுக்குத் தெரிவதில்லை.

ஆம். நம்முடைய பிறப்பும் இந்த வாழ்க்கையும் ஒரு இடைக்கால நிகழ்வுதான். எப்படி நாம் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு செருவதற்க்கு முன்னும் நமக்கு வாழ்க்கை இருந்ததோ, எப்படி நாம் ரிட்டையர் ஆன பின்பும் வாழப்போகிறோமோ, அதே போல் தான் பிறப்பும் இறப்பும்.

நாம் பிறப்பிற்கு முன்னாலும் வாழ்ந்துகொண்டிருந்தோம். இறப்பிற்கு பின்னாலும் வாழப்போகிறோம். அதுவே உண்மை. இந்த இடைப்பட்ட காலத்தில் நாம் செய்யும் நல்ல காரியங்களும் சேர்த்து வைக்கும் புண்ணிய பலன்களும் தான் நாம் இறந்ததற்குப் பின்னால் என்னவாகப் போகிறோம் என்பதை தீர்மானிக்கப்போகிறது.

கண்களுக்குத் தெரிவதில்லை என்பதற்காக நாம் எதிர்காலத்திற்காக சேர்த்துவைக்காமல் இருந்துவிடுகிறோமா என்ன? அதே போலத்தான் கண்களுக்குத் தெரிவதில்லை என்பதற்க்காக மரணத்திற்கு பின்னால் வாழ்க்கை இல்லை என்று ஆகிவிடாது. அதனால் அதைப்பற்றி பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே அவற்றை ஆராய்ந்து எடுத்துரைத்த பெரியோர்களின் விளக்கங்களை புறந்தள்ளியும் விடமுடியாது. எனவே தொடர்ந்து பார்ப்போம்.

கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் போன்ற மார்கங்களில் மறுபிறப்பு தத்துவம் ஏற்கப்படுவதில்லை. அதுவும், ஆதிகால கிறிஸ்தவத்தில் மறுபிறப்பு பற்றிய நம்பிக்கை இருந்ததாகவும் பின்னால் கிறிஸ்தவம் மார்கெட்டிங் மதமாக்கப்பட்ட பிறகு கிறிஸ்துவை நம்பினால் தான் மோட்ஷம் என்ற கோட்பாட்டை கிறிஸ்தவத்தின் மார்கெட்டிங்க் எக்ஸிகியூட்டிவ்கள் பரப்ப முனைந்த பொழுது மறுபிறப்பு என்ற நம்பிக்கை அவர்களுக்கு இடைஞ்சலாக இருந்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது. அதனாலேயே பின்னாட்களில் கிறிஸ்தவத்தில் மறுபிறப்பு என்பது கிடையாது என்ற கொள்கை மாற்றம் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

மறுபிறப்பு இல்லை என்ற தர்கத்தை நாம் ஏற்கவேண்டுமென்றால் சில கருத்துக்களை விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதாவது எல்லா ஜீவராசிகளுக்கும், மனிதன் உட்பட ஒரே முறை ஜனனம் மற்றும் ஒரே முறை மரணம் என்றால் அவைகளை இறைவன் தான் படைத்தான் என்றால், அப்படிப்பட்ட ஜீவராசிகளை இறைவன் ஏன் ஏற்றத்தாழ்வுடன் படைக்க வேண்டும். ஒரு ஜீவனை மிருகமாகவும் இன்னொன்றை மனிதனாகவும் ஏன் படைக்க வேண்டும். எல்லா ஜீவராசிகளையும் உயர்ந்த பிறப்பாகக் கருதப்படும் மனிதப்பிறப்பாகவே படைத்திருக்கலாமே!

ஒரே ஒரு முறை மட்டுமே மனிதனை இறைவன் படைக்கிறான் என்றால் ஏன் ஒருவனை குருடனாகவும், ஒருவனை முடவனாகவும் படைக்க வேண்டும். பாவ புண்ணியத்திற்கு தகுந்தாற்போல மனிதன் உயர்வுதாழ்வு அடைகிறான் என்ற தத்துவம் நிராகரிக்கப்பட்டால், எல்லா மனிதர்களும் இறைவனின் விருப்பத்திற்கினங்கவே ஒரே முறை மட்டுமே படைக்கப்படுகிறார்கள் என்றால் அந்த இறைவனுக்கு ஏன் ஓரவஞ்சனை இருக்க வேண்டும்?

இதற்கு முன்னால் பிறக்காதவரான இப்போது தான் முதன்முதலில் பிறக்கப்போகும் இருவரில் ஒருவனை அழகாகவும் ஒருவனை முடமாகவும் படைக்குமளவிற்கு இறைவன் கருனை இல்லாதவனாக ஏன் இருக்க வேண்டும்? ஒரே முறை மட்டுமே இறைவன் படைக்கிறான் என்றால் ஒருவனுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையையும் ஒருவனுக்கு துக்கமாக வாழ்க்கையையும் கொடுக்கும் அளவிற்கு ஏன் கருனையற்றவனாக இருக்க வேண்டும் என்ற கேள்விகள் எழுகிறது.

ஆனால் இந்து தர்மத்தில் மட்டுமே இதற்கான தெளிவான பதில் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

உபநிஷத்தில் இப்படி கூறப்படுகிறது "மரணத்திற்குபிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர். சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப் பயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்".

இந்துதர்மத்தைப் பொறுத்தவரை உயிர்கள் பல்வேறு பிறவிகளை எடுத்து கடைசியில் நிறைநிலையை அடைகின்றன என்று மறுபிறவிக் கோட்பாடு கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நிறைவான நிலையை அடைய அவன் என்ன செய்யவேண்டும் என்ற வழிகாட்டலே கீதையும் உபநிஷத்துக்களும். மனதை அமைதியாகவைத்து தீவினைகள் அகற்றி ஆத்ம சாந்தி அடைபவனே பிறப்பறுந்த நிலை எய்த முடியும் என்ற வழிகாட்டுதல் கூறப்படுகின்றது.

கீதையில் ஸ்ரீ க்ருஷ்னர் கூறுகிறார் "அர்ஜுனா! அகங்காரம், பலம், இறுமாப்பு, காமம், கோபம் முதலிய தீயகுணங்களை மேற்கொண்டு அவர்கள், தங்களுடைய உடலிலும் மற்றவர்களுடைய உடலிலும் இருக்கும் என்னை வெறுத்து அவமதிக்கின்றனர். அத்தகைய நிந்திக்கும் கொடிய குணம் கொண்டவர்கள் மனிதகுலத்திற்கும் கீழானவர்கள். இழிவானவர்கள். அவர்கள் அசுர இயல்புள்ளவர்களின் கருப்பையிலேயே தள்ளப்படுவார்கள். அப்படி அசுரகுணம் கொண்டவர்களின் வழியாக பிறப்பெய்துபவர்கள் ஒவ்வொரு பிறப்பிலும் மேலும் மேலும் கீழ்த்தரமான நிலையையே அடைவார்கள்!" என்கிறார்.

அதாவது குணங்களுக்கேற்றபடி தான் பிறப்பு நிர்ணயிக்கப்படுகிறது என்பதை பகவான் தெளிவுபடுத்துகிறார். மேலும் அத்தகைய இழிகுணத்துடன் பிறப்பெய்துபவர்களாலேயே பாபங்கள் பரவுவதும் நடக்கின்றது. இதன் காரணமாகவே பூமியில் இன்ப துன்பங்களும் நிர்ணயிக்கப்படுகின்றன. அதனாலேயே ஒருவன் மகிழ்ச்சியாக வாழ்வதும் ஒருவன் துன்புற்று அழிவதும் ஒரு காலச் சக்கரமாக நடைபெறுகின்றன. எனவே இந்த சக்கரச்சுழற்சியைத் தடுக்க வேண்டுமானால் பிறக்கும் ஒவ்வொரு மனிதர்களும் ஒரே மாதிரியான நல்ல தர்மங்களைக் கடைபிடித்து அந்த இறைவனையே நினைத்து அவனை அடையமுயல வேண்டும். ஒவ்வொரு தனிமனிதரும் அத்தகைய முயற்சியின் பாதையில் வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக் கொண்டால் முழு சமூகமுமே சொர்கமான வாழ்க்கைச் சூழலை அடையும் என்பதும் தெளிவாகிறது.

என்வே மறுபிறவி என்பது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது என்பதும் அதைத் தடுத்து பரம் பொருளை அடைவதற்கான வழியை இந்து தர்மம் உபநிஷத்துக்கள் மூலம் எடுத்துரைக்கின்றது. அதைத் தொடர்ந்து பார்ப்போம்.



"எதைப் பற்றி பலரால் கேட்க முடியவில்லையோ, கேட்டும் பலரால் எதனை அறிய முடியவில்லையோ அந்த ஆன்மாவைப் பற்றி உபதேசிப்பவரும் அபூர்வம். கேட்பவரும் அபூர்வம். அத்தகைய அபூர்வமான ஒருவரைப் பின்பற்றி அதனை அறிபவரும் அபூர்வம்." - எமதர்மன்



மரணத்திற்கு அப்பால் - 14