Showing posts with label தாம்பூலம். Show all posts
Showing posts with label தாம்பூலம். Show all posts

Friday, January 14, 2011

சுபகாரியங்களில் வெற்றிலை பாக்கு பழம் கொடுப்பது ஏன்?




ஒரு முறை ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளை தரிசிக்க ஒரு மாணவன் வந்திருந்தான். அவனிடம் பெரியவர் "என்ன படிக்கிறாய்?" என்றார். அவன் தாவரவியல் படிப்பதாகக் கூறினான். சுவாமிகள் தன் முன் வைத்திருந்த பழம் பாக்கு வெற்றிலைத் தட்டில் இருந்த வெற்றிலையைக் காட்டி "அதன் பெயர் என்ன?" என்று வினவினார்.

மாணவனும் 'வெற்றிலை' என்றான்.

"அதற்கு ஏன் வெற்றிலை என்று பெயர் வந்தது?" என்று சுவாமிகள் கேட்க மாணவன் சொல்லத் தெரியாமல் திகைத்தான்.

சுவாமிகள் கூறினார் "எல்லாக் கொடிகளும் பூவிடும், காய் காய்க்கும். ஆனால் வெற்றிலைக் கொடி பூக்ககாது, காய்க்காது. உண்ணக்கூடிய வெறும் இலை மட்டும் தான் விடும். அதனால் அது வெற்று இலை ஆயிற்று' என்றார்.

இறைவனுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு வெற்றிலையில் 'A' டு 'Z' எல்லா வைட்டமின்களும் இருக்கிறது. வெற்றிலையில் இரும்பு, சுண்ணாம்பு, பி.கரோட்டின், அஸ்கார்பிக் அமிலம், லைகோபின், டோட்டல் பினால்ஸ், டோட்டல் ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆக்டிவிட்டி போன்ற 'டங்க் ட்விஸ்டர்கள்' இருக்கிறதென்று மருந்துகடை அன்னாச்சி நாக்கை சுழற்றினார்.

வெற்றிலை பாக்குடன் சுன்னாம்பு சேர்த்து சாப்பிட்டால் நீண்ட நேரம் நல்ல எனர்ஜி இருக்கும். வயிறு செரிமானத்திற்கு பெரிதும் உதவும். சுபநிகழ்ச்சிகளில், விருந்துக்குப் பிறகு ஜீரணத்துக்காக வெற்றிலை பாக்கு கொடுத்து வழியனுப்பும் வழக்கம் ஏற்பட்டது. வாயுத் தொல்லை நீங்கும். வெற்றிலையுடன் சுன்னாம்பு சேர்த்து சாப்பிடுவதால் கால்ஷியம் உடலில் சேரும்.

வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும். தலை வலித்தால் பலர் வெற்றிலையை கிள்ளி தலையில் ஒட்டிக்கொள்வதை பார்த்திருப்போம்.

வெற்றிலைச் சாறும் சீரகமும் வயிற்று வலிக்கு நல்லது.

சளி இருமல் போன்றவற்றிர்கு வெற்றிலையுடன் சுக்கு கஷாயம் குடிப்பார்கள்.

வெற்றிலையையும் மிளகையும் சேர்த்து தின்றால் தேள் விஷம் கூட முறியும் என்பார்கள்.

வெற்றிலை பாக்கு சுன்னாம்புக் கலவை ஆண்மையின் உந்துதலுக்கு நல்லது. கணவனுக்கு மனைவி வெற்றிலை மடித்து கொடுத்து சந்தோஷப்படுத்துவது ஏன் என்று இப்போது புரிந்திருக்கும்.

அதனால் தான் சிறு வயது பிள்ளைகள் வெற்றிலை போட்டால் மாடு முட்டும் என்று பயமுறுத்துவார்கள். ஏதோ அடல்ஸ் ஒன்லி இலை போல கைவைக்க விடமாட்டார்கள். வாழைப்பழமும் வெற்றிலையும் ஆண்மைக்கு நல்ல தென்பதாலேயே கல்யாணம் மற்றும் சுபகாரியங்களுக்கும் ஒருவருக்கொருவர் வெற்றிலைபாக்கு பழம் கொடுத்து பரிமாரிக்கொள்கிறார்கள். குறிப்பாக பெண்கள் வீட்டிற்கு வரும் பிற பெண்களுக்கு வழியனுப்பும்போது வெற்றிலை பாக்கு பழம் வைத்து கொடுத்து வழியனுப்புகிறார்கள். அதாவது இதனால் எனக்கு கிடைத்த இன்பத்தை நீயும் உன் வீட்டில் அனுபவி என்பது பெண்களுக்குள்ளான சிம்பாலிக் 'கோட் வேர்ட்'.

ஏனெனில் கணவன் மனைவி உறவு எந்தளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறதோ அந்தளவிற்கு குடும்பம் பலப்படும். அதனால் வெற்றிலை பாக்கு பழம் இல்லாத சுபகாரியங்களும் நற்காரிய பரிமாற்றங்களும் நம் சமூகத்தில் பார்க்கவே முடியாது. நமக்கு குடும்பமே கோவில் அல்லவா!



கொசுறு: அந்த காலத்து ராஜாக்களெல்லாம் இப்படி பக்குவமாக வெற்றிலையை மடித்து கொடுப்பதர்கே சம்பளத்திற்கு ஆள் வைத்திருந்தார்களாம். சம்பளத்தில் வெற்றிலையும் அடங்குமாம்!




இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் பகுத்தறிவும் ஆகும்!

.