Thursday, March 29, 2012

விதுர நீதி - தீயவர்களுடன் பழகாதீர்கள்!



எவன் துன்பமும் எதிர்ப்பும் கண்டு வருந்துவதில்லையோ, எவன் தேடிச்சென்று கவனமாகவும், கடுமையாகவும் உழைக்கிறானோ, சூழ்நிலை கருதித் துன்பங்களைப் பொறுத்துக் கொள்கிறானோ அவனே மனிதர்களில் முதன்மையானவன். அவன் எல்லா எதிரிகளையும் வென்று விடுவான்.

எவன் காரணமின்றித் தன் வீட்டை விட்டு வெளியே சென்று வசிப்பதில்லையோ, தீயவர்களுடன் பழகுவதில்லையோ, பிறர் மனைவிக்குக் கெடுதல் செய்வதில்லையோ, கர்வப்படுவது கபடமாக நடந்து கொள்வது என்பதில்லையோ, பிறரை நிந்திப்பதில்லையோ, குடிப்பழக்கம் வைத்துக் கொள்ளவில்லையோ அவன் எப்பொழுதும் மகிழ்ச்சியாக விளங்குவான்.

எவன் வாழ்க்கையின் குறிக்கோள்களாகிய அறம் பொருள் இன்பத்தை அடைய அவசரப்பட்டுச் செயல்படுவது இல்லையோ, எப்பொழுதும் உண்மை பேசுகிறானோ, தன் நண்பனுக்காகக் கூட யாருடனும் தகராறு செய்வதை விரும்புவதில்லையோ, மற்றவர்கள் மதிக்காவிடிலும் கோப்ப்படுவது இல்லையோ அவனே அறிவாளி!

எவன் யாரிடமும் பொறாமை கொள்வதில்லையோ, எல்லோரிடமும் கனிவாக இருக்கிறானோ, தனது பலக்குரைவை உணர்ந்து யாரையும் எதிர்க்காமல் உள்ளானோ அவன் எங்கும் புகழ் பெருவான்.

எவன் பிறரை இகழ்ந்து தன்னை மெச்சிக்கொள்வதில்லையோ, உணர்ச்சி வசப்பட்ட நிலையில் தன்னை மறந்து பிறரைக் கடுஞ்சொல் கூறுவதில்லையோ அவன் எல்லோராலும் விரும்ப்பப்படுகிறான்.

நடுத்தரமான மனிதன் வாக்குறுதிகள் கொடுப்பான். அவற்ரை நிறைவேற்றியும் தருவான். எதுவும் கொடுப்பதாக வாக்களித்தால் அவ்வாறே கொடுட்தும் விடுவான். பிறரிடம் குற்றம் கண்டுபிடித்த வண்ணம் இருப்பான். மனிதர்களில் கீழானவர்கள் யாருக்கும் அடங்க மாட்டார்கள். எப்போதும் ஆவேசமாக இருப்பார்கள். பாவச் செயல்களில் ஈடுபடுவார்கள். பயங்கரமாகக் கோபப்படுவார்கள். நன்றி கெட்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் யாருக்கும் நண்பர்கள் அல்லர். சில சமயம் நல்லவர்கள் போல் பழகினாலும் அவர்கள் கொடிய மனம் உடையவர்களே.

கீழ்தரமானவன் பெரியவர்கள் கூறும் நல்ல ஆலோசனைகளின் படி நடந்து கொள்ள மாட்டான். அந்த ஆலோசனைகளால் நன்மை விளையுமென அவன் நம்புவதில்லை. அவன் தன்னையே சந்தேகப்படுபவனாக இருப்பான். தன்னுடைய நண்பர்களைக் கூடக் காட்டிக்கொடுத்துவிடுவான்.

பொறாமை கொள்ளாதிருத்தல், நேர்மையான பேச்சு, உள்ளத் தூய்மை, போதுமென்ற மனத்திருப்தி, எரிச்சலூட்டாத இனிய பேச்சு, மனக்கட்டுப்பாடு, வாய்மை, மனவுறுதி இம்மாதிரியான நற்பண்புகளைத் தீயவர்களிடம் எதிர்பாக்க முடியாது.

வாழ்க்கையில் வளம் பெற்று முன்னேற விரும்புகிறவன் மேற்கூறிய மூவகை மனிதர்களில் உத்தமமான மனிதர்களை மட்டும் அணுக வேண்டும். தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில் நடுத்தரமான மனிதர்களை அணுகலாம். ஆனால் ஒரு போதும் கீழ்த்தரமான மனிதர்களைச் சார்ந்திருக்கக் கூடாது.

- மகான் விதுரர்

Saturday, March 24, 2012

காலம் தீர்மானிக்கிறது!


"காலமும் நிகழ்வுகளும் எப்போதும் ஒன்றாகவே இருக்கிறது.
அவற்றை அனுபவிக்கும் மனிதர்கள் மட்டுமே மாறிக்கொண்டே இருக்கிறார்கள்"

நாம் ஒன்று நினைத்தால் இறைவன் ஒன்று நினைப்பான் என்பார்கள். என் விஷயத்தில் பல முறை அவ்வாறு நடந்திருக்கிறது. சில முடிவுகளைத் தேடி நாம் ஏதாவது காரியம் செய்வோம். நிகழ்வதோ வேறொன்றாக இருக்கும். இதற்கான காரணங்கள் எப்பொழுதும் நமக்குப் புலப்படாதவையாகவே பெரும்பாலும் இருக்கும்.

எனது பெரும்பாலான எதிர்பாராத நிகழ்வுகள் நல்லவையாகவே இருந்திருக்கிறது. அது கடவுள் என் மீது காட்டிய கருணையாகவே கருதியிருக்கிறேன். எதிர் வரும் காலம் வெற்றாகவும், எந்த வித யோசனைகளற்றும் வாழ்வைக் கடத்திக் கொண்டிருக்கையில் அடுத்து வரும் வருடங்கள் என்னவாக இருக்கும், என் எதிர்காலம் என்னவாகப் போகிறது என்றெல்லாம் முடிவே தெரியாமல் வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் காலங்களில், எதிர்பாராத பல மாற்றங்களை கண்ணில் காட்டி வியக்க வைப்பான் இறைவன். இப்படிப் பலமுறை நடந்திருக்கிறது.

அவை எதுவும் நாம் திட்டமிட்ட வகையில் நடக்காது. அல்லது நாம் ஒன்றைத் திட்டமிட்டுச் செல்லுவோம் அவை வேறொன்றாக நடந்து விடும். சிலருக்கு அந்த எதிர்பாரா நிகவுகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். சிலருக்கு துன்பத்தைக் கொடுத்து விடும். அந்த முடிவுகள் யாவும், நாம் எதை நோக்கிச் செல்கிறோம், நம் பயணத்தின் நோக்கம் நன்மையைக் குறித்தா, அல்லது தீமையக் குறித்தா என்பதைப் பொறுத்தே முடிவுகள் அமைகின்றன.

இதையே சுருக்கமாக எல்லாம் அவன் செயல் என்பார்கள் பெரியோர்கள். பொதுவாக எது நடந்தாலும் நமக்கு மட்டும் தான் இப்படி நடக்கிறதா அல்லது எல்லோருக்கும் நம்மைப் போன்றே தான் நடக்கிறதா என்று சந்தேகங்கள் அடிக்கடித் தோன்றும். புராணங்களும் இதிகாசங்களும் இது போன்ற கேள்விகளுக்கு விடை அளிப்பவையாகவே இருந்திருக்கிறது. காலத்தால் மாறுபடாத சில நிதர்சனமான உணர்வுகளை அல்லது உண்மைகளை அவை நமக்கு என்றும் போதிக்கின்றன!

அவைகள் கூறும் படிப்பினை எல்லாம் இதுதான்..."காலமும் நிகழ்வுகளும் எப்போதும் ஒன்றாகவே இருக்கிறது. அவற்றை அனுபவிக்கும் மனிதர்கள் மட்டுமே மாறிக்கொண்டே இருக்கிறார்கள்"

அப்படி ஒரு நிகழ்வை மகாபாரத்தில் காணலாம். பாண்டவர்கள் நாடிழந்து காட்டில் வாழ்ந்து கொண்டிருந்த காலம். அவர்களைக் காட்டிற்கு துரத்தியனுப்பினாலும் துரியோதனனுக்கு அவர்களைச் சீண்டிக் கொண்டிருப்பதில் ஏனோ தனி விருப்பம் இருந்து கொண்டே இருந்தது. தான் அரச மாளிகையில் இன்பமாக இருப்பதால் இருமாப்பு கொண்டு, அதனை வெளிக்காட்டுவதன் மூலமாக காட்டில் வசித்துக் கொண்டிருந்த பாண்டவர்களை பரிகசிக்க வேண்டும் என்று மிகவும் விரும்பினான்.

பாண்டவர்கள் வாழ்ந்து வந்த த்வைத வனத்திற்கு உல்லாச யாத்திரை போய் வரத் தீர்மானித்தான் துரியோதனன். தன்னுடைய மந்திரிகள். சகோதரர்கள், அந்தப்புரத்துப் பெண்கள், செல்வங்கள், சேனைகள் ஆகிய இவற்றுடன் பாண்டவர்கள் முன் அவர்கள் காணுமாறு ஊர்வலம் சென்று அவர்கள் மனதில் பொறாமை உணர்ச்சியைத் தூண்ட வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் அந்த வனத்திற்கு வந்து சேர்ந்தான்.

யுதிஷ்டிரர் குடிசை அமைத்துக் கொண்டு வசித்து வந்த இடத்திற்கு அருகில் ஒரு குளக்கரை இருந்தது. அந்தக் குளத்தில் பாண்டவர்கள் காணும்படியாகக் குளித்துக் கும்மாளமிட்டு ஆடிப்பாடி மகிழ்ந்து காட்டி ஒரு வேடிக்கையை நிகழ்த்த வேண்டுமென தீர்மானித்திருந்தான் துரியோதனன். இவ்வாறெல்லாம் செய்தால் பாண்டவர்கள் தம்மைப் பார்த்துப் பொறாமை கொண்டு நாணி வருந்துவார்கள் என்பது அவன் எண்ணம். அதனால் தனது பெண்கள், படைகள் சூழ அந்தக் குளக்கரைக்குச் சென்றான்.


அங்கே தான் ஆண்டவன் வைத்தான் ஒரு 'ட்விஸ்ட்'. அவன் ஒன்று நினைத்து வந்து சேர அங்கே வேறொரு காட்சி அரங்கேறிக்கொண்டிருந்தது. துரியோதனன் வருகைக்கு முன்னே அங்கே கந்தர்வர்கள் அந்தக் குளக்கரையை ஆக்கிரமித்திருந்தனர். அவர்கள் குளத்தில் குளித்து குதூகளித்துக்கொண்டிருந்தனர்.

இதனை சற்றும் எதிர்பாராத துரியோதனனுக்கு கடும் கோபம் உண்டாக அவர்களை வெளியேறுமாறு அழைத்தான். ஆனால் கந்தர்வர்களோ துரியோதனனை மதிக்கவில்லை. இத்தனை படைப் பரிவார ஆரவாரத்துடன் வந்த தனக்கு வந்த நோக்கம் நிறைவடையாது போனால் அசிங்கமல்லவோ என்றெண்ணிய துரியோதனன் அவர்களுடன் போரிடலானான்.

கந்தர்வர்களோ துரியோதனனின் செயல் கண்டு கொதித்தெழுந்து, துரியோதனன் படைகளை அடித்துதைத்து துரியோதனனையும், அவன் அந்தப்புரப் பெண்களையும் கைது செய்து, அவன் சேனைகளையும், பகட்டாய் அவன் கொண்டு வந்திருந்த செல்வங்களையும் கைப்பற்றிக் கொண்டார்கள்.

சிலருக்குச் சிலரை வஞ்சம் தீர்த்தால் மட்டும் போதாது, அதன் மூலம் தான் வென்று விட்டேன் என்பதை விடாது பரைசாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்களது ஆழ்மன வன்மம் தீரவே தீராது. அத்தகைய தீயவர்கள் அதே வன்மத்தால் தண்டிக்கப்படவும் செய்வார்கள். அது காலத்தின் சூக்ஷமம். அது தானே நடக்கும். ஏன் எதற்கு எப்படி எப்போது என்பதை இறைவனே தீர்மானிக்கிறான். அது நடக்கப் போவதும், நடந்து முடிவதும் நமக்குத் தெரியாமலே கூடப் போகலாம்! அல்லது காலம் கடந்து புரியவரலாம்! ஆனால் அந்தப் பொறுப்பை ஆண்டவன் கச்சிதமாக முடித்து வைக்கிறான்! துரியோதனனுக்கு இப்போது நிகழ்ந்ததும் அது தான்.

துரியோதனன் தோற்றதையும், அவன் செல்வங்கள் பறிக்கப்பட்டதையும் அறிந்த யுதிஷ்ட்டிரன் காலையுற்றான். அவன் தம்முடைய தம்பிகளை அழைத்து துரியோதனனுக்கு உதவுமாறு வேண்டினான். மற்றவர்கள் தயங்கினார்கள். துரியோதனன் நம்மை கூண்டோடு அழிக்க நினைத்தவன். அவனுக்கு உதவச் சொல்கிறீர்களே என்று குமுறினார்கள். ஆனால் யுதிஷ்ட்டிரரோ "இவர்கள் நம் அழிவை விரும்பிய படியால் நம் பகைவர்களாகிறார்கள் என்றாலும், அவர்களும் நம் சகோதரர்களே! நாம் இருக்கும் போது இவர்களுக்குப் பிறர் கெடுதல் செய்தால் நாம் அதை எப்படிப் பார்த்துக் கொண்டிருப்பது? அதனால் அவர்களை உடனடியாகக் காக்க வேண்டியது நம் கடமை" என்று எடுத்துக் கூறலானார்.


 சும்மா அழகுக்கு!
 

அண்ணனின் அன்புக் கட்டளைக்குப் பணிந்த அர்ஜுனனும் மற்ற சகோதரர்களும் புறப்பட்டு கந்தர்வர்களை வெற்றி கொண்டு துரியோதனனையும் பிறரையும் பத்திரமாக மீட்டு ஊருக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.

யாரிடம் தம் செல்வச் செழிப்பைக் காட்டி சுகபோகத்தைக் காட்டி அவர்களை வெட்கித் தலைகுனிந்து நிற்கச் செய்யும் எண்ணத்துடன் ஊர்விட்டு வந்தானோ, அவர்கள் உதவியாலேயே உயிர்பிழைத்து அவர்கள் முன்பாக வெட்கித் தலைகுனிந்து ஊர் திரும்பிப் போனான் துரியோதனன்.

துரியோதனன் ஒன்று நினைத்தான் காலம் அதனை வேறாக செய்து முடித்தது! துரியோதனனின் வருகையும் அவனது நோக்கமும் யுதிஷ்ட்டிரனுக்கும் தெரிந்தே இருந்தது. வந்தால் வரட்டும் என்றிருந்த யுதிஷ்ட்டிரனுக்கும் அவனே எதிர்பாராத வகையில் துரியோதனனுக்கே உதவி செய்து தன் பெருந்தன்மையைக் காட்டும்  சம்பவம் நடந்து விட்டது.

இதிகாசகாலம் ஆனாலும் சரி, இந்தக் கலிகாலம் ஆனாலும் சரி, மனிதனின் முடிவுகளை அவன் மட்டுமே தீர்மானிப்பதில்லை!

காலம் அதனை தீர்மானிக்கிறது. தீர்மானிக்கும் அந்தச் சக்தியையே இறைவன் என்பர் பெரியோர்!


Sunday, March 11, 2012

ஸ்ரீ கணேச அதர்வசீர்ஷ உபநிஷத்து!


இந்து தர்மத்தில் வேதங்களும் உபநிஷத்துக்களும் உயர்ந்த படைப்புக்களாக பெரியவர்களால் போற்றிக் கூறப்படுகின்றன. இவற்றில் உபநிஷத்து என்பது நேரடியாக ஆன்மா பற்றியும் ப்ரும்மம் பற்றியும் எடுத்துக்கூறும் வேதம் ஆகும்.

உபநிஷத்துக்கள் நேரடியாக பிரம்மத்தைப் பற்றியும் படைப்பை பற்றியும் ஆன்மா பற்றியும் எடுத்துக் கூறி புரியவைக்க முயற்ச்சி செய்கிறது!.

அதென்ன முயற்ச்சி செய்கிறது? என்று கேட்கிறீர்களா? ஆம், ஆன்மா என்பது எந்த விதத்திலும் ஒரு அறிவியல் ஃபார்முலா போலவோ, ஒரு பொருளைக் காட்டிவிடுவது போலவோ உருவகித்தோ எடுத்துச் சொல்லியோ காட்டிவிட முடியாது, புரியவைத்து விட முடியாது.

எனவே பலவிதமான வழிகளில் அவற்றை சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.
உதாரணமாக கட உபநிஷத்து என்பது நசிகேதன் என்கிற பாலகனுக்கும் எமதர்மனுக்கும் நடக்கும் உரையாடல் போல அமைத்து அதன் மூலம் எமதர்மனே ஆன்மா என்றால் என்ன? இறப்பிற்குப் பின்னால் ஆன்மா என்னவாகிறது என்பதை எடுத்துச் சொல்வது போல் அமைகப்பட்டிருக்கும்.

அது போல கணேச அதர்வசீர்ஷம் என்கிற இந்த உபநிஷத்தும் கூட முழுமுதற்க் பெருமானான கணேசப் பெருமானை துதிப்பது போல 'நீ'என்கிற பதத்தைச் சொல்லி நம்முள் இருக்கும் ஆன்மாவை உணரச் செய்ய முயற்சிக்கிறது.

அது பற்றி கொஞ்சம் சுருக்கமாகப் பார்ப்போம். இந்த உபநிஷத்தில் இருக்கும் ஸ்லோகங்கள் கணபதியைப் போற்றிக் கூறுவதே ஆகும். முழுக்க முழுக்க கணபதியை ப்ரும்மத்தின் ரூபமாகவே பாடல்கள் போற்றிக் கூறுகின்றன. அவ்வாறு கூறும்போது சர்வமும் ப்ரும்மம் என்கிற வகையில் அதனைப் படிக்கும் நாமும் அதுவாகவே இருந்து கேட்பது போல அமைக்கப்பட்டிருக்கும்.

கணபதியைக் குறித்துச் சொல்லி கூடவே நம்முள் இருக்கும் ப்ரும்மத்தையும் உணரச் செய்யும் அற்புதமான உபநிஷத் இது! அவற்றில் சில வரிகளைப் பற்றிப் பார்ப்போம்!

இந்த ஸ்லோகங்கள் இப்படித் துவங்குகின்றன.

முதலில் கனபதியை வணங்கித் துவங்குகிறது.

கணபதியை உருவகித்து இப்படி ஆரம்பிக்கிறது.

த்வம் ஏவ ப்ரத்யக்ஷம் தத்வம் அஸி! -
'த்வம்' என்கிற சமஸ்கிருத வார்த்தைக்கு 'நீ' என்று பொருள்!
'அஸி' என்றால் 'இருக்கிறது' அல்லது 'இருக்கிறாய்' என்று வாக்கியத்திற்கேற்ப பொருள்படும்!

நீ ஒருவனே கண்கண்ட தத்துவமாக இருக்கின்றாய்!

த்வம் ஏவ கேவலம் கர்த்தா அஸி!
நீ ஒருவன் மட்டுமே படைப்பவனாக இருக்கின்றாய்!

இப்படியாக...

நீ ஒருவன் மட்டுமே யாவற்றையும் தாங்குபவனாக இருக்கின்றாய்!
நீ ஒருவன் மட்டுமே அழிப்பவனாகவும் இருக்கின்றாய்!
நீ ஒருவனே எல்லாமக இருக்கிற பிரம்மமாக இருக்கின்றாய்!
நீயேதான் நித்யமாக இருக்கும் ஆத்மாவாக இருக்கின்றாய்!
ஒழுங்குடன் பேசுகிறவன்!
ஸத்யம் பேசுகிறவன்!
நீ எல்லாவற்றையும் காப்பவன்!
நீயே வாக்கைக் காப்பாற்றுகின்றவன்!
நீயே கேட்பவற்றைக் காப்பாற்றுகின்றவன்!
நீயே செயல்களைக் காப்பாற்றுகின்றவன்!
நீயே சித்தத்தைக் காப்பாற்றுகின்றவன்!
நீயே குருவைக் காப்பாற்றுகின்றவன்!
நீயே சிஷ்யரைக் காப்பாற்றுகின்றவன்!
நீயே மேற்குதிசையிலிருந்து காப்பவன்!
நீயே கிழக்கு திசையிலிருந்து இருந்து காப்பவன்!
நீயே தெற்கிலிருந்துக் காப்பவன்!
நீயே வடக்கிலிருந்துக் காப்பவன்!
நீ மேலே இருந்துக் காப்பவன்!
நீ கீழே இருந்தும் காப்பவன்!
சர்வ திசையிலிருந்தும் சுற்றிச் சுற்றி எப்போதும் காப்பவன்!

நீ வாக்குமயமானவன்
நீ ஞானமயமானவன்
நீ ஆனந்தமயமானவன்
நீ ப்ரம்மமயமானவன்
நீ நித்யமானதும் ஆனந்தமானதும் இரண்டற்ற மூலப்பொருளாக இருக்கிறாய்!
கண்முன்னால் தெரியும் ப்ரம்மமாக இருப்பதும் நீயே!
ஞானத்தால் உணரக்கூடியவனும், விஞ்ஞானத்தால் அறியப்படுபவனும் நீயே!

ப்ரும்த்தின் ரூபத்தை உணரச்செய்யும் வாக்கியங்கள்!

எல்லா உலகங்களும் எல்லாம் உன்னிடமிருந்தே தோன்றின!
எல்லா உலகங்களும் எல்லாம் உன்னாலேயே நிலைபெற்று இயங்குகிவருகிறது!

எல்லா உலகங்களும் உனக்குள்ளேயே ஒரே பொருளாய் அடங்கி இருக்கிறது!

நீயே பூமி, தண்ணீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிறாய்!
நீ நான்கு நிலைகளான வாக்கின் படிகளாக ஆகிறாய்!
நீ மூன்று குனங்களுக்கும் பேலானவன்!
நீ மூன்று தேஹங்களுக்கும் மேலானவன்!
நீ மூன்று காலங்களுக்கும் மேலானவன்!
நீ மூலாதாரத்தில் நித்யமாக நிலைபெற்று இருக்கிறாய்! (லிங்கம் மற்றும் குதத்திற்கு நடுவிலான குண்டலினியில் நிலைத்திருப்பவன்)

நீயே மூன்று சக்திகளுமாகிறாய்! (படைத்தல், காத்தல், அழித்தல்)
உன்னை யோகிகள் நித்யமாக தியானம் செய்கிறார்கள்!

நீ ப்ரம்மா
நீ விஷ்ணு
நீ ருத்ரன்
நீ இந்திரன்
நீ அக்னி
நீ வாயு
நீ சூரியன்
நீ சந்திரன்
நீயே ப்ரம்மம், பூலோகம், புவர் லோகம், சுவர்க லோகம்:: ஓம்!

இவ்வாறு கணபதிக் கடவுளை ஆன்மா மற்றும் ப்ரும்மத்தை நம்மை நோக்கிச் சொல்லுவதைப் போல உபதேசித்துவிட்டு பின் கணேசரின் ஸ்வரூபம் குறித்து ஸ்லோகங்கள் செல்லுகிறது.

கீழே இருக்கும் வீடியோவில் இந்த அழகான ஸ்லோகங்களை ஒரு முறை கேட்டு மகிழுங்கள்!


இந்த ஸ்லோகங்களை நாம் எதுவாக இருந்து படிக்கிறோமோ அதுவாகவே உணருவோம்! நாம் எதுவாகவெல்லாம் உணரப்படுகிறோமோ அதுவெல்லாம் ப்ரும்மமே! உணரப்படும் போது நான் என்கிற இருப்பை எப்போது மறக்கிறோமோ அப்போது ப்ரம்மமாகிறோம்!



Tuesday, March 6, 2012

பிராமணர் சங்கத்தின் கொதிப்பு!



இன்றைய தினமலர் செய்தி!

சென்னை : பிராமணர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதத்தில், "பார்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதை வன்மையாகக் கண்டித்து, தமிழ்நாடு பிராமணர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு பிராமணர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: தற்கால அரசியலுக்கு ஒவ்வாத நிலைப்பாடாக, 1912ம் ஆண்டு திராவிட இயக்கக் கூட்டத்தில், டாக்டர் நடேசன் மற்றும் டி.எம்.நாயர் கூறிய கருத்துக்கு, மெருகு பூசி சினிமா பாணியில் புதிதாகக் கதை அளக்கிறார் தி.மு.க., தலைவர் கருணாநிதி. நூறு ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது, 1912ல் நடைபெற்றது பிரிட்டிஷ் அரசாங்கம் - தமிழ்நாடு என்று அப்போது இல்லாமல், சென்னை மாகாணம் ராஜதானி என்று அழைக்கப்பட்டு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என்று பிரிக்கப்படாமல் இருந்தது. அப்போது திராவிட இயக்கத்தின் தலைவர்கள் என்று கூறப்பட்ட டி.எம்.நாயர் (மலையாளம் பேசுபவர்) சர்.பி.டி.தியாகராஜன் (தெலுங்கு பேசுபவர்) டாக்டர் நடேசன் போன்றவர்கள் நீதிக் கட்சியின் சார்பில் வெள்ளையர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்கள்; நமது சுதந்திர போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியவர்கள். சுதந்திர நாளை, துக்க நாளாகக் கொண்டாடியவர்கள்.

கடந்த, 1960 வரை பல ஆயிரக்கணக்கான பிராமண தமிழ் ஆசிரியர்கள் தமிழகத்தில் பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சிறப்பாக பணியாற்றியதை யாரும் மறந்திருக்கமுடியாது. முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், தான் ராமேஸ்வரத்தில் படித்தபோது, உதவி செய்த ஆசிரியரான சுப்பிரமணிய அய்யரை தன் பதவியேற்புக்கு டில்லிக்கு அழைத்துச் சென்று மரியாதை செய்தார் .
இப்படிப்பட்ட சூழ்நிலையில், தற்போதைய நிலைமைக்கு ஒவ்வாத பிராமண எதிர்ப்புக் கொள்கையை, தனக்கு சிக்கல், தோல்வி வரும்போதெல்லாம் ஒரு ஆயுதமாக எடுப்பதில் கருணாநிதி வல்லவர்.

பிராமணர்களின் அறிவுரைப்படி, ஆலோசனை உதவியுடன் தனது கட்சியையும், குடும்ப வியாபாரத்தையும் வளர்த்தவர் தான் இந்த தலைவர்.
தயாளுவில் ஆரம்பித்து, ஸ்டாலின் மனைவி மற்றும் குடும்பத்தின் மூன்று தலைமுறைக்கு பிரசவம் பார்த்தது பிராமணரான டாக்டர் பி.ராமமூர்த்தியும், அவரது மனைவியுமான டாக்டர் இந்திரா ராமமூர்த்தியும் தான். பல ஆண்டுகளாக இவருக்கு ஆடிட்டராக இருப்பது ஜெகதீசன் அன்ட் கம்பெனி. தற்போது எங்கு போனாலும் உடன் வந்து மருத்துவம் செய்வது பிராமணரான டாக்டர் கோபால் தான்.

கடந்த, 1996ல், 2006ல் ஆட்சி செய்தபோது ஆலோசனை வழங்கியது, டாக்டர் எம்.எஸ்.குகன் ஐ.ஏ.எஸ்., 2006- 2011 வரை தலைமைச் செயலராகவும், கோப்புகளில் தனியாகக் கையெழுத்து இடும் அளவுக்கு அதிகாரம் படைத்தவராக எஸ்.ஸ்ரீபதி ஐ.ஏ.எஸ்., உள்துறைச் செயலராக (ஹோம் செகரட்டரி) மாலதி ஐ.ஏ.எஸ்., மேடைகளில், விழாக்களில் தன்னைப் பற்றி புகழ்பாட கவிஞர் வாலி, குடும்ப பிசினஸ் பார்ட்னராக இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன், தனக்கு யோகாசனம் சொல்லிக் கொடுக்க தேசிகாச்சாரி என்று இவரது தேவைகளுக்கான பிராமணர் பட்டியல் தொடரும். தனக்குத் தேவை என்றால் இவர்கள் எல்லோரும் பிராமணர்கள் அல்லாதவர்கள்.

ஏன் இந்த இரட்டை வேஷம் - போலி நாடகம்?
தன் வீட்டுக் குழந்தைகள், பேரப்பிள்ளைகள் சென்னை டி.ஏ.வி., பள்ளியில் இந்தி படிக்கலாம்; மற்றவர்கள் தமிழ் தான் படிக்க வேண்டும். தமிழ் சுதந்திரப் போராட்ட தியாகி கோட்டாவில் தனது பேரன் (மு.க.அழகிரி மகன்) அண்ணா பல்கலைக்கழகத்தில், பி.இ., படிக்கலாம். தன் வீட்டு குழந்தைகளுக்கு ஸ்டாலின், தயாநிதி, கலாநிதி, சூர்யா, ஆதித்யா போன்ற சம்ஸ்கிருத பெயர்கள். தனது 'டிவி'க்களுக்கு சூரியா, ஆதித்யா, தேஜா, உதயா, ஜெமினி, சன் நெட்வொர்க் என்று வேற்று மொழிப் பெயர்கள். எத்தனை வருடங்களுக்குத்தான் இந்தப் பெரிய பித்தலாட்டம், ஏமாற்று வேலை?

எந்த பிராமணனும் ஊரை அடித்து உலையில் போடவில்லை. அரசாங்கப் பணத்தை, மக்களது வரிப் பணத்தை, கொள்ளையடித்து கோடீஸ்வரன் ஆனதில்லை. டெலிகாம் ஊழல், சேது சமுத்திரத் திட்ட ஊழல், வீராணம் ஊழல் என்றெல்லாம் விஞ்ஞான முறையில் பொதுச் சொத்தை கொள்ளையடித்து, இந்தியாவிலேயே ஒரு பெரிய கோடீஸ்வர குடும்பம் என்று பெயர் பெறவில்லை!

கடந்த 1967க்கு பிறகு, தமிழகத்தில் ஆட்சி செய்த , அமைச்சர்கள் பலர் இப்போது குறைந்தபட்சம், 100-200 கோடி ரூபாய்க்கு அதிபதி. இன்ஜினியரிங் கல்லூரி, மருத்துக் கல்லூரி, சினிமா தயாரிப்பு என்றெல்லாம் பல துறைகளில் பெரிய முதலாளிகள். இதெல்லாம் எப்படி வந்தது? கருணாநியின் மகள் டில்லி திகார் சிறையில் எட்டு மாதம் கம்பி எண்ணியது எதற்காக?

தனது குடும்பத்தில் நடக்கும் வாரிசு பிரச்னையை, கட்சியின் தோல்வியை திசை திருப்பவே, இந்த பிராமணர் எதிர்ப்பு நாடகம். ஆனால், நமது அரசியல் சாசனப்படி எந்த ஜாதியையும், பழித்துச் சொல்ல, இழிவுபடுத்த சட்டத்தில் இடமில்லை.

எல்லா மக்களுடன் அமைதியாக, நட்பாக வாழும் பிராணமர்கள் மீது வன்முறையை தூண்டும்படி, அச்சுறுத்தும் படியாக பேசும், தி.மு.க., தலைவர்கள் கருணாநிதி மீதும், அன்பழகன் மீதும் மத்திய, மாநில அரசுகள் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் பிராமணர் சங்கம் கூறியுள்ளது.
*******************************************************************************************

பார்ப்பன விளையாட்டென்றால் கருணாநிதிக்கு ரொம்ப பிடிக்கும்! இனி கருணாநிதி அடிச்சாடுவாரு!