Tuesday, November 27, 2012

இறைவனே இலக்கு!


இனியவனே! உபநிஷதங்கள் கூறுகின்ற பெரிய ஆயுதமாகிய வில்லை எடுத்து, தியானத்தால் கூர்மையாக்கப்பட்ட அம்பை அதில் வைத்து, இறை எண்ணங்களால் நிறைந்த மனமாகிய நாணை இழுத்து இலக்கை அடிக்க வேண்டும். அந்த இலக்கே இறைவன், அவரை அறி.

ஓங்கார மந்திரமே வில், ஆன்மா அம்பு, இறைவனே இலக்கு என்று சொல்லப்படுகிறது. அம்பை எய்பவன் அலைபாயாத மனத்தினனாக இருக்க வேண்டும். அம்பைப் போல் அந்த இலக்கு மயமாக ஆக வேண்டும்.

வானுலகம், பூமி, இடைவெளி மற்றும் மனம், பிராணன்கள், புலன்கள் என்று அனைத்தும் யாரில் நிலலபெற்றுள்ளனவோ அந்த ஒரே ஆன்மாவை அறியுங்கள். மற்ற பேச்சுக்களை விடுங்கள். மரணமிலா பெருநிலைக்கான பாலம் இதுவே.

ரதத்தின் அச்சில் ஆரக்கால்கள் கூடுவது போல் எங்கே நாடிகள் கூடுகின்றனவோ அங்கே ஆன்மா உள்ளது. அந்த இதயத்தில் ஆன்மா பலவிதமாகச் செயல்படுகிறது. ஓம் என்ற மந்திரத்தின் மூலம் ஆன்மாவைத் தியானம் செய்யுங்கள். இருளைக் கடந்து மறுகரைக்குச் செல்ல விரும்புகின்ற உங்களுக்கு ஆசிகள் நிறைவதாக.

- முண்டக உபநிஷத்து

Saturday, November 24, 2012

கருக் முருக் நொறுக்ஸ்!



பதவிக்காகவும் கூட்டனிக்காகவும் கொஞ்சிக் குலாவிக்கொண்டிருந்தவர்கள் இப்போது மாறி மாறி குற்றம் குறை சொல்லிக் கொள்கிறார்கள். முதுகு ஸ்டாண்டில் கத்தியை ஒளித்து வைத்துக்கொண்டு, முகமூடி போட்டு கொண்டு பழகினாலும் சுயரூபம் வெளிப்படாமல் போகுமா என்ன?

எப்டி தான் சிரிக்க முடியுதோ!!?

வாடகைக் கட்டிடத்தில் 'பிராமணாள் ஹோட்டல்' என்ற பெயரில் கடை நடத்திக்கொண்டு, பெயரை மாற்ற முடியாது என்று 'தில்'லாக நின்றவரை, அந்தக் கட்டிடத்திற்கு சொந்தக்காரரை மிரட்டி கடையை காலி பண்ண வைத்து விட்டார்களாம். சொந்தக் கடை வாங்கியாவது அதே பெயரில் கடை நடத்துவேன் என்று சபதம் ஏந்திச் சென்றிருக்கிறாராம் ஹோட்டல்காரர். எனக்குத் தெரிந்து ஜாதியை ஒழிக்கிறேன் என்று கூத்தாடுபவர்களால் தான் ஜாதி பிடிவாதமாக நிலை நிறுத்தப்படுகிறது என்று நினனக்கிறேன்.


சில விஷயங்களை பேசாமல் விட்டாலே காலச்சக்கரத்தில் காணாமல் போகும். பிராமணர்களில் பல பிரிவுகள் உண்டு. 'சோழியர்' என்கிற பிரிவு அநேகமாக இப்போது சத்தமில்லாமல் காணாமல் போய்விட்டது. "சோழியன் குடுமி சும்மா ஆடுமா?" என்கிற பழமொழியே அந்தப் பிரிவினரை அதிலிருந்து விலகச் செய்துவிட்டதோ என்னவோஅதைப்பற்றி யாரும் பேசுவதும் இல்லை. அதனால் கானாமல் போன இனப்பட்டியலில் அப்பிரிவைக் கூடச் சேர்த்துவிடலாம். ஜாதிகளும் இப்படி காலத்தால் கரைந்து போகக்கூடும். ஒரு சிலர் பேசாமல் இருந்தால்...! முடியுமா

தினமலரில் ஒரு செய்தி படித்த ஞாபகம்! கவுண்டர்'களாக மாறி வரும் வன்னியர்கள் என்ற தலைப்பில். இதற்கு வன்னியர்கள் தரப்பிலிருந்து தினமலருக்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

**. தமிழகத்தின் மூவேந்தர்களின் ஆட்சிக்கு பின், கவுண்டர்களை, "நாட்டுக் கவுண்டர்' எனவும், வன்னியர்களை, "வன்னியக் கவுண்டர்' என அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் கால மாற்றத்தின் காரணமாக, பெருந்தாளி கவுண்டர், சிறுதாளி கவுண்டர் என, கிராமங்களில் நடைமுறைக்கு ஏற்ப அழைக்கப்பட்டனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், நாமக்கல், நாமகிரிப்பேட்டை பகுதியில் வாழும் கவுண்டர்கள் மட்டுமே இன்றளவும், "நாட்டுக் கவுண்டர்' என அழைக்கப்படுகின்றனர்.**


இப்படி பல்வேறு குழப்பங்களுடன் உலாவரும் ஜாதியினை மக்களே ஒரு கட்டத்தில் தங்களைச் சுற்றி இருக்கும் சமூகச் சூழலைப் பொறுத்து பழைய ஜாதிகளை மாற்றி புதிய ஜாதிகளை எடுத்துக் கொண்டு ஒன்றோடொன்றாக கலந்து காணாமல் போவார்கள். ஆனால் இந்த கண்ணுக்குத் தெரியாமல் நடக்கும் மாற்றங்களை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டாலே போதும். பல ஜாதிகள் காலப்போக்கில் கானாமல் போய்விடும். இது போன்ற நிகழ்வுகள் பௌதிக விதிப்படி ஒத்துப்போகக்கூடியவை. அதாவது (Energy) சக்தியை யாரும் ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது. ஆனால் ஒன்றை இன்னொன்றாக மாற்ற முடியும். அதே தியரி தான் ஜாதிகளுக்கும். ஜாதிகளை ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது. ஒன்று இன்னொன்றாக மாறலாம். ஏற்றத்தாழ்வுகள் அதனதன் சக்திக்குத் தகுந்தாற்போல காலச்சூழலுக்குத் தகுந்தாற்பொலவும் இடம் மாறும் அவ்வளவே!

இனி ஒரு அதிசயத்தைப் பற்றி பார்ப்போம். அனுமார் கடல் கடந்து லங்கைக்குச் செல்லும் போது தன் உயரத்தை பெரிதாக ஆக்கிக் கொண்டார் என்று படித்திருப்போம். அதைப் பற்றி ஏதோ அதீதமான கற்பனை அல்லது வெறும் இதிகாசக் கதை என்றும் சாத்தியமில்லாதது என்றும் நாம் நினைக்கலாம். டேனியல் டக்ளஸ் ஹியூம் என்பவரைப் பற்றி மதன் தனது 'மனிதனும் மர்மங்களும்' என்ற புத்தகத்தில் எழுதியிருந்தார். அதில்...



"ஹ்யூம் ஒரு சுவர் ஓரமகப் போய் நின்று கொண்டு தன் உயரத்தை அளக்கச் சொன்னார். ஆராய்ச்சியாளர்கள் ஸ்கேல் கொண்டுவந்து அவரை மாறி மாரி அளந்தார்கள். அவர் உயரம் கரெக்டாக ஐந்தடி பத்து அங்குலம். பிறகு அத்தனை பேர் முன்னிலையிலும் மூச்சை இழுத்துக் கண்களை மூடிக்கொண்டார் ஹ்யூம். ஆச்சர்யம்..மெல்ல மெல்ல அவரது உயரம் அதிகமானது! மீண்டும் ஓடிச்சென்று அவர் உயரத்தை அளந்தார்கள். இப்போது ஹ்யூம் ஆறடி ஆறு அங்குலம் இருந்தார். அவர் பாதங்கள் நன்கு தரையில் பதிந்திருந்தன. இது எப்படி சாத்தியம்? விஞ்ஞானிகள் வாய்பிளந்து நின்றார்கள்." என்று எழுதுகிறார். விஞ்ஞானத்திற்கு விளங்காத மெய்ஞானம் எப்போதும் உண்டு. அதனை அறிய முற்படுவதே பகுத்தறிவு.

கொஞ்சம் கொடூரத்தைப் பார்க்கலாமா?



சோவியத் ரஷ்யா! "1932-33 ல் உக்ரைனில் பஞ்சம் உச்சத்தை அடைந்தது. குழந்தைகளை சிலர் வேட்டையாடி உண்ண ஆரம்பித்தனர். பெற்றோர்கள் அச்சத்துடன் குழந்தைகளை வீடுகளில் அறைகளில் பூட்டி வைத்தனர். ஆங்காங்கே குழந்தைகளின் உடல் மீதங்கள் கிடைக்கலாயின. மனப்பிறழ்வுகளும் இதனுடன் இணைந்து ஏற்பட்டன. உதாரணமாக ஒரு குழந்தையைக் கொன்று உண்டவன் மக்களால் பிடிக்கப்பட்ட போது அவனது வீட்டில் அவன் உண்ட பதினொரு குழந்தைகளின் தலைகள் தனியாக எடுத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டார்கள். சில சமயங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கொன்று உண்டார்கள்.

ஒரு தாய் தன் இளைய மகனைக் கொன்று தன் ஆறு வயது மகளுக்குக் கொடுத்தாள். உறவினர்களால் காப்பாற்றப்பட்ட ஒரு பெண் குழந்தை, கடைசியாகத் தன் தந்தையைப் பார்த்த போது, அவர் அவளைக் கொன்று உண்ணக் கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்தார்.....!"

- அரவிந்தன் நீலகண்டன் எழுதிய பஞ்சம், படுகொலை, பேரழிவு, கம்யூனிசம் புத்தகத்திலிருந்து! வாழ்க்கையின் நிதர்சனங்கள் பல நேரங்களில் கற்பனைக் கெட்டாதவையாகத்தான் இருக்கும். மிக மோசமானதும் மிக நல்லதும் அதில் அடக்கம்!


"மக்கள் தலைவராக தேவர் இருப்பதால், பரமகுடியைத் தாண்டி தி மு க போகவே இல்லை" என்று அன்ணாதுரையே குறைபட்டுக் கொண்டிருக்கிறார். இத்தகைய காரணங்களால் கருணாநிதி வஞ்சத்தை வளர்த்துக் கொண்டார். ஒன்றாக இருந்த முக்குலத்தோர் சமுதாயத்தை, அரசானை போட்டுப் பிளவு ஏற்படுத்தினார் கருணாநிதி. மதுரை மாவட்டத்தில் வாழக்கூடிய பிறமலைக்கள்ளர், ராமநாதபுரத்தில் வாழக்கூடிய மறவர்களை மட்டும் 'மிகவும் பிற்படுத்தப்பட்டோர்' என்றும், இதே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வேறு மாவட்டங்களில் இருந்தால் அவர்கள் 'பிற்படுத்தப்பட்டவர்கள்' என்றும் அரசாணை மூலம் பிரிவினை உண்டாக்கினார்" என்றார் கோ.மாரி சேர்வை

- துக்ளக்கில் திரு சுப்பு, திராவிடமாயை

ஒரு கேள்வி?

பெங்குயின்கள் கூட்டமாக இருக்கும் இந்த இடம் - ஆர்ட்டிக்கா? அண்டார்ட்டிக்கா?


Thursday, November 15, 2012

தீமை விளைவிக்காத செயல்களைச் செய்வாய்!




வேதங்களைக் கற்பித்த பிறகு ஆச்சாரியர் மாணவர்களுக்குச் சில அறநெறிகளைப் போதிக்கிறார்:

உண்மை பேசுங்கள். தர்ம வழியில் செல்லுங்கள். கல்வியைக் கைவிடாதீர்கள். ஆச்சாரியருக்கு விருப்பமான செல்வத்தைக் கொடுத்து அவரை மன நிறைவு பெறச் செய்யுங்கள். அந்ததிச் சங்கிலியை வெட்டாதீர்கள்.

உண்மையிலிருந்து விலகாதீர்கள். தர்மத்திலிருந்து விலகாதீர்கள். நன்மை தருபவற்றிலிருந்து விலகாதீர்கள்.

கற்பதிலிருந்தும் கற்றுக் கொடுப்பதிலிருந்தும் விலகாதீர்கள். தேவர்களுக்கும் முன்னோர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து விலகாதீர்கள்.

தாயைத் தெய்வமாகப் போற்றுங்கள். தந்தையைத் தெய்வமாகப் போற்றுங்கள். ஆசிரியரைத் தெய்வமாகப் போற்றுங்கள். விருந்தினரைத் தெய்வமாகப் போற்றுங்கள்.

தீமை விளைவிக்காத செயல்களையே நீங்கள் செய்ய வேண்டும். மற்றவற்றைச் செய்யக் கூடாது.

நற்பண்புகளை வளர்க்கின்ற செயல்களையே நீங்கள் செய்ய வேண்டும். மற்றவற்றைச் செய்யக் கூடாது.

நம்மைவிட உயர்ந்தவர்களோ தூயவர்களோ வரும்போது எழுந்து அவர்கள் அமர இருக்கை அளித்து அவர்களின் களைப்பைப் போக்கி உபசரிக்க வேண்டும்.

நம்பிக்கை மிக்க ஈடுபாட்டுடன் தானம் செய்ய வேண்டும். அலட்சியமான மனநிலையோடு தானம் செய்யக் கூடாது. வருமானத்திற்கு ஏற்ப தானம் செய்ய வேண்டும். பணிவுடனும் மரியாதையுடனும் தகுந்த அறிவுடனும் தானம் செய்ய வேண்டும்.

உங்கள் கடமை என்ன, குறிப்பிட்ட சூழலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பவை பற்றி சந்தேகம் எழுந்தால் சான்றோர்களைப் பின்பற்ற வேண்டும். ஆழ்ந்து சிந்திக்கின்ற மன ஒருமைப்பாடு மிக்க , சுதந்திரமான கோனல் புத்தி இல்லாத, நல்வழியில் நடக்கின்ற அந்தச் சான்றோர்கள் அந்த விஷயங்களில் எப்படி நடந்து கொண்டார்களோ அப்படி நீங்களும் செயல்படுங்கள்.

- தைத்ரீய உபநிஷத்து


Tuesday, November 13, 2012

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Friday, November 9, 2012

இந்துத்துவப் பதிப்பகம் - ஒரு நல்ல துவக்கம்!

எனதருமைச் சகோதரர் திரு ம வெங்கடேசன் அவர்களின் பெரு முயற்சியால் துவங்கப்பட்டிருக்கும் இந்துத்துவப் பதிப்பகம் ஓங்கி வளர்ந்து மக்களின் அறியாமையைப் போக்கும் பெரும்பணியை ஆற்றவேண்டுமென வாழ்த்துகிறேன்!




எனதருமை நண்பர்கள் அனைவரும் இந்துத்துவப் பதிப்பகத்தின் புத்தகங்களுக்கு ஆதரவளித்து வாழ்த்துமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.