Sunday, September 27, 2009

விக்கிரமாதித்தன் கதைகள் - 8

இதை சற்றும் எதிர்பார்க்காத ராஜகுமாரன் அதிர்ச்சியில் உறைந்தே போனான்.

"இங்கே என்ன நடக்கிறது நண்பா எனக்கு ஒன்றுமே புரியவில்லை, தலை சுற்றுகிறது" என்றான் ராஜகுமாரன்.

புத்திசரீரன் நிதானமாக "நான் அப்போதே சொன்னேனே நண்பா, நீ என்னைப் பற்றி சொல்லியிருக்கக் கூடாது என்று. ஒரு பெண்ணின் ரகசியங்களை அவளுக்கு உரியவனைத் தவிற வேறொருவன் தெரிந்திருப்பதை எந்தப் பெண் தான் விரும்புவாள்? அதன் விளைவே இது. சரி போகட்டும் விட்டு விடு" என்றான்.

ஆனால் புத்திசரீரன் மனதிற்குள் பத்மாவதியைப் பழிவாங்க திட்டமிட்டான். ஆதே நேரத்தில் நண்பனின் ஆசையும் கெட்டுவிடக்கூடாது, அவன் மனவருத்தம் கொள்ளுமாறு எதுவும் நடக்கக் கூடாது என்றும் தீர்மானித்தான்.

"சரி இப்போது என்ன செய்வது? அவளை நான் எப்படி எந்நாட்டிற்கு கொண்டு செல்வது? என்றான் ராஜகுமாரன்.

அப்போது வெளியே அந்நாட்டு அரசனின் ஆண்குழந்தை இறந்து போயிற்று என்று ஊர் மக்கள் வருத்தத்துடன் பேசிக்கொண்டது புத்திசரீரன் காதில் விழுந்தது.

இது தான் சமயம் என்று புத்திசரீரன் ஒரு திட்டம் தீட்டினான்.

அவன் ராஜகுமாரனைப் பார்த்துக் கூறினான், "நண்பா, நான் இருக்கும் வரை அவள் உன்னுடன் மனப்பூர்வமாக வரமாட்டாள். அதனால் நான் ஒரு உபாயம் சொல்கிறேன் கேள். இன்றிரவு நீ பத்மாவதியின் மாளிகைக்குச் செல். அவளுடன் குதூகலமாய் இருக்கும்போது அவளுக்கு நல்ல போதையூட்டி அவளை மதிமயங்கச் செய்துவிடு. தன் நிலைமை மறந்து பிணம் போலப் படுக்கையில் படுத்துத் தூங்கும் போது அவளுடைய நகைகளை எடுத்துக் கொண்டு, அவள் இடுப்பில் சூலாயுதத்தால் கீறியது போல் கீறல் அடையாளம் செய்து விட்டு வந்துவிடு. அதற்கு மேல் நடக்க வேண்டியதை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றான்.

அந்த விதமாக ராஜகுமாரனும் பத்மாவதியைப் பார்க்கச் சென்றான். அவளுடன் காதல் மொழி பேசிக்கொண்டே அவளுக்கு போதையூட்டி மயக்கமடையச் செய்தான். அவளது நகைகளை எடுத்துக் கொண்டான். அவளது இடுப்பில் சூலாயுதத்தால் கீறியது போன்ற தடத்தை உண்டாக்கிவிட்டு வீடு வந்து சேர்ந்தான்.

அவர்களது திட்டப்படி மறுநாள் காலையில் மந்திரிகுமாரன் அவ்வூர் மயானத்தில் ஒரு தபசி வேஷம் போட்டுக் கொண்டு அமர ராஜகுமாரனும் அவனது சீடனாக வேஷம் தரித்து அமர்ந்தனர். புத்திசரீரன் பத்மாவதியின் ராஜகுமாரனிடம் கொடுத்து "நண்பா, இந்த நகைகளை எல்லோரும் பார்க்கும் படி கையில் எடுத்துச் செல். இதை கடைத்தெருவுக்குச் சென்று விலை பேசு. ஆனால் யாரும் வாங்க முடியாதபடி அதிக விலை சொல். காவலாளிகள் உன்னைப் பிடித்து விசாரித்தால் என் குருநாதர் தான் இதை விற்கச் சொன்னார் என்று சொல்லிவிடு" என்றான்.

அதன் படியே ராஜகுமாரனும் கடைத் தெருவுக்குச் சென்றான். அன்று காலை தான் பத்மாவதியின் தந்தயான தந்த சிற்பி தனது வீட்டில் நகைகள் காணவில்லை என்று அரசரிடம் புகார் அளித்திருந்தான். அதன் பேரில் திருடனைத் தேடிக்கொண்டிருந்த காவலாளிகளின் கண்களில் ராஜகுமாரன் சரியாகச் சிக்கிக் கொண்டான்.

ராஜகுமாரனும் இந்த நகை பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் தனது குருநாதர் தான் விற்கச் சொன்னார் என்றும் கூறிவிட்டான். காவலாளிகள் சீடன் வேஷத்தில் இருந்த ராஜகுமாரனைத் திருடன் என்றே நம்பிவிட்டனர். மேலும் அவனது குருவான புத்திசரீரனையும் பிடித்து அரசன் முன் நிறுத்தினர்.

அரசர் புத்திசரீரனிடம் "இந்த நகை உன்னிடம் எப்படி வந்தது" என்று விசாரித்தார்.

புத்திசரீரன் "நான் ஒரு தபசி. எந்த இடத்திலும் நிரந்தரமாக வசிப்பவன் அல்ல. தற்செயலாக நேற்று இவ்விடம் வந்தேன். இரவு நேரம் இம்மயானத்தில் தங்கியிருக்கையில் நடு நிசியில் மோகினிகளின் கூட்டம் ஒன்று இங்கே வந்தது. அவர்களுள் ஒருத்தி அரசரின் மகனான இளவரசனின் உடலைத் தாங்கி வந்தாள். அவள் அந்த உடலை கிழித்து, பைரவனுக்கு நிவேதனமாக வைத்தாள். அவள் மோகன வித்தையில் வல்லவள். நன்றாக மது மயக்கத்தில் இருந்த அவள் என்னிடம் நெருங்கி வந்து என் ஜபமாலையை பிடுங்க முயன்றாள். என் மந்திர சக்தியால் சூலாயுதத்தை பழுக்கக் காய்ச்சி அவள் இடுப்பில் சூடு போட்டுத் துரத்திவிட்டேன். அவள் கழுத்திலிருந்த இந்த முத்து மாலையை பிடுங்கிக் கொண்டேன். தபசிக்கு முத்து மாலை எதற்கு? அதனால் தான் அதை விற்று வரச்சொல்லி சீடனை அனுப்பினேன்" என்றான்.

இதைக் கேட்ட அரசர் இந்த முத்துமாலை தந்த சிற்பி வீட்டில் இருந்து திருடப்பட்டுள்ளது. தந்த சிற்பியின் வழக்கமான முத்திரை இதில் இருக்கிறது. எனவே தந்த சிற்பியின் மகள் பத்மாவதி ஒரு வேளை மோகினியாக இருக்கலாம் என்று சந்தேகித்தான்.

காவலாளிகளிடம் சொல்லி பத்மாவதியை அரன்மனைக்கு அழைத்துவரச் செய்தான். பணிப்பெண்களைக் கொண்டு பத்மாவதியின் இடுப்பில் சூலாயுதத்தால் காயம் பட்ட தடம் இருக்கிறதா என்று பார்க்கச் சொன்னான்.

பத்மாவதியின் இடுப்பில் சூலாயுதத் தடம் இருப்பதை பணிப்பெண்கள் உறுதி செய்தனர். அரசர் கடும் கோபமுற்றான். "என் மகனைக் கொன்ற மோகினிப் பிசாசே உன்னை என்ன செய்கிறேன் பார்" என்று தனது வாளை உருவுகையில் புத்திசரீரன் குறுக்கிட்டு தடுத்தான்.

மோகினியைக் கொன்று நீங்கள் பாவம் செய்யவேண்டாம். அது உங்களை மட்டுமல்லாமல் இந்நாட்டு மக்களையெல்லாம் பாதிக்கும் என்றான். அதனால் இவளை இந்த நாட்டை விட்டே துரத்தி விடுங்கள் என்றான். இதைக் கேட்ட அரசன் அதுவும் சரிதான். எனக்கு என்னைவிட நாட்டு மக்கள் தான் முக்கியம் என்று கூறி பத்மாவதியை நாட்டுக்கு வெளியே காட்டில் விட்டு வர காவலாளிகளுக்கு உத்தரவிட்டான்.

அவளுடைய பெற்றோர்கள் எவ்வளவோ தடுத்தும் அழுதும் அரசர் இதைக் கேட்கவில்லை. காவலாளிகள் பத்மாவதியை காட்டுக்கு இழுத்துச் சென்று ஆடையாபரணங்களை உருவிக்கொண்டு நடுக்காட்டில் விட்டு விட்டுத் திரும்பினார்கள்.

புத்தி சரீரன் தான் நினைத்ததை சாதித்து விட்ட மகிழ்ச்சியை மவுனமாக அனுபவித்தான்.

பெற்றோர்களையும் நாட்டையும் சுகமான வாழ்க்கையையும் இழந்து விட்ட சோகத்தில் நடுக்காட்டில் அழுது கொண்டிருந்தாள் பத்மாவதி. அவளுக்கு இத்தனையும் செய்தது புத்திசரீரன் தான் என்பதும் விளங்கியது.

அந்த வேளையில் தங்களது வேஷத்தைக் கலைத்து விட்டு குதிரையில் ஏறி ராஜகுமாரனும், புத்தி சரீரனும் அவள் இருக்கும் இடத்தை அடைந்தனர். புத்திசரீரன் தான் ராஜகுமாரனுக்கு உண்மையான நண்பன் என்றும் தங்கள் வாழ்க்கை என்னால் பாதிக்கும் என்று பயப்பட வேண்டாம் என்றும் கூறி பத்மாவதியை சமாதானப் படுத்தினான். தன்னால் பத்மாவதியின் வாழ்க்கைக்கு எந்த ஆபத்தும் வராது என்று உறுதி கூறினான். பிறகு இருவரும் பத்மாவதியை அழைத்துக் கொண்டு தங்கள் நாடு திரும்பினர்.

பத்மாவதியின் பெற்றோரோ மகளை இழந்த சோகத்தில் மனமுடைந்து மிகச் சில நாட்களிலேயே இறந்து போயினர்.

இவ்விதம் கதையைக் கூறி முடித்த வேதாளம் விக்கிரமாதித்தனைப் பார்த்து "இந்தக் கதையில் எனக்கு ஒரு சந்தேகம் அதைத் தீர்த்து வைக்க வேண்டும். தந்த சிற்பியும் அவன் மனைவியும் இறந்த தோஷம், ராஜகுமாரன், மந்திரிகுமாரன், பத்மாவதி இம்மூவரில் யாரைச் சாரும்? என்று கூறவேண்டும். பதில் தெரிந்து நீ கூறாமல் தவிர்த்தால் உன் தலை சுக்கு நூறாக உடைந்து விடும். அதை நினைவில் வைத்துக் கொள்" என்றது.

விக்கிரமாதித்தன் தனது பதிலைச் சொன்னான் "உண்மையில் மூவர் மீதும் பழியில்லை. மந்திரி குமாரன் தன் எஜமானன் நன்மையை உத்தேசித்தே நடந்து கொண்டான். ராஜகுமாரனும், பத்மாவதியும் காமன் கணையால் தாக்குண்டு தங்கள் வயதின் மயக்கத்தில் அவர்கள் எண்ணம் ஈடேறும் ஒரே நோக்கத்தோடே நடந்து கொண்டனர். ஆனால் அந்நாட்டின் அரசனோ ராஜ தர்மத்தைச் சரியாக உணராமல், வழக்கைத் தீர விசாரித்து உண்மையரியாமல், ஒருவன் சொன்னான் என்பதற்க்காக
தவறாக முடிவு கட்டித் தீர்ப்புக் கூறியதால் இந்தப் பழி மன்னனையேச் சாரும்" என்றான்.

"நீ உண்மையில் சிறந்த புத்திசாலி. சரியாகச் சொன்னாய். ஆனால் விக்கிரமாதித்தனே, நீ என் நிபந்தனையை மீறி வாய் திறந்து பதிலளித்து விட்டாய். அதனால் உன்னை விட்டு நான் பறக்கிறேன். இனி உன்னால் என்னைப் பிடிக்க முடியாது" என்று கூறி வேதாளம் மீண்டும் குகைக்குள் பறந்து சென்று முருங்கை மரத்தின் மீதேறி அமர்ந்து கொண்டது.

விக்கிரமாதித்தன் மறுபடியும் குகை தேடி நடக்கலானான்.

முற்றும்.

இந்துக்களின் எதிர்காலம் பாதுகாப்பானதா?

மதச்சுதந்திரம் இந்துக்களுக்கு உண்டா என்ற சந்தேகம் வலுக்கிறது, இன்று இந்த வீடியோவில் பேசுபவர்களுக்கு நடப்பது நாளை நமக்கு நடக்காது என்பது என்ன நிச்சயம்!






குஜராத் கலவரம் குறித்து வீடியோக்கள் வெளியிட்டு அதைப்பற்றி மணிக்கணக்காக பேசும் தனியார் தொலைக்காட்சிகள் கொயம்பத்தூரில் நடந்த குண்டுவெடிப்பும் அதனால் பாதிக்கப்பட்ட இந்துக்கள் பற்றி கண்டுகொண்டார்களா? கோயம்பத்தூர் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்ட இந்துக்களின் அவல நிலை இதோ கீழே!





இப்படிப்பட்ட கொடும் பயங்கரவாதிகள் கருணாநிதியால் விடுதலை செய்யப்படுகிறார்கள்? நியாயமா?

மேலும் விபரங்களுக்கு இந்தச் சுட்டியைக் க்ளிக்குங்கள்.

http://www.tamilhindu.com/2009/10/jihadi-terror-and-tn-govt-action-1

http://www.tamilhindu.com/2009/10/jihadi-terror-and-tn-govt-action-2

இந்துக்களை அவமதிப்பதே தொழிலாகக் கொண்டிருக்கும் கருணாநிதி!



தர்மம் வெல்லும் என்று நம்புவோம்...நம்பிக்கொண்டே இருப்போம்!

ஈஸ்வரோ ரக்ஷது!

Friday, September 25, 2009

சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்



அன்பர்கள் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.

எல்லோருக்கும் நவராத்திரி நல்ல நன்மைகளைக் கொண்டுவந்து சேர்க்க வேண்டுமாய் எல்லோருக்கும் தாயான அம்பாளைப் பிரார்த்திக்கிறேன்.

Monday, September 21, 2009

விக்கிரமாதித்தன் கதைகள் - 7


ராஜகுமாரனும் மந்திரிகுமாரனும் கிழவியை மீண்டும் பத்மாவதியைப் பார்க்க அனுப்பினர்.

மீண்டும் கிழவி அழுதபடி வந்தாள். என்னடா இது வம்பாய்ப் போனது என்று திகைத்துப் போன ராஜகுமாரன் இது தனக்கு பெருத்த அவமானமென்றும் இந்த வாளுக்கு அவளை இறையாக்குவேன் என்றும் தன் வாளை உருவியபடி கர்ஜிக்கத் துவங்கினான்.

அப்போது புத்திசரீரன் ராஜகுமாரனை சமாதானப்படுத்தி நடந்ததை முதலில் அறிந்து கொள்வோம் பிறகு யோசிப்போம் என்று தடுத்தான்.

கிழவி நடந்ததைக் கூறலானாள் "சென்ற முறை அவள் என்னை அடித்ததால், நான் இன்றைக்கு பத்மாவதி முன் மவுனமாக அமர்ந்திருந்தேன். அவள் என்னை வம்புக்கு இழுத்து, உங்களிடமிருந்து ஏதோ செய்தி கொணர்ந்திருப்பதாக வாதம் செய்தாள். மூன்று விரல்கலைச் செம்பஞ்சுக் குழம்பில் நனைத்து, அதனால் என் மார்பில் அடித்து அனுப்பி விட்டாள்.

அது மட்டுமில்லாமல் தெருவிலே மதம் பிடித்த யானை ஒன்று தறிகெட்டு ஓடுவதாகவும் அதனால் என்னை வாசல் வழியாக போக வேண்டாம் என்றும் கூறி, ஓர் ஆசனத்தில் அமர்த்தி கயிறு கொண்டு கட்டி பின்புற ஜன்னல் வழியாக இறக்கி விட்டாள். நான் அருகிலுள்ள மரத்திலேறி தோட்டத்தின் வழியாக வெளியேறி கஷ்டப்பட்டு வந்து சேர்ந்தேன் " என்றாள்

கிழவியின் வார்த்தையைக் கேட்ட புத்திசரீரன் புன்னகைத்தான். அவன் ராஜகுமாரனைப் பார்த்து "நண்பா, கவலை கொள்ள வேண்டாம். உன் ஆசை நிறைவேறப் போகிறது" என்றான்.

ராஜகுமாரனோ ஆச்சரியமாக அவனைப் பார்த்து அர்வத்துடன் கேட்டான் "நீ, என்ன சொல்கிறாய், அவள் என்னைப் பார்க்க சம்மதித்தாளா? என்ன சங்கேத மொழி அனுப்பியிருக்கிறாள்? விளக்கு நண்பா" என்றான்.

புத்திசரீரன் விளக்கினான் "நண்பா!, அவள் மூன்று விரல்கள் பதிய கிழவியை அடித்து அனுப்பியதால், உன்னை இன்னும் மூன்று இரவுகள் பொறுத்திருக்குமாறு செய்தி கூறியிருக்கிறாள். மேலும் கிழவியை மாற்றுப்பதையில் போகச் சொல்லி அனுப்பியிருப்பதால், நீ எந்த வழியாகச் சென்று அவளைப் பார்க்க வேண்டும் என்றும் உணர்த்தி அவளை அடையும் வழியை உனக்குக் காட்டிவிட்டாள்" என்றான்.

ராஜகுமாரனுக்கு மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. செய்தியைக் கொண்டுவந்த கிழவிக்கும் புத்திசாலித்தனத்தால் பத்மாவதியின் சங்கேத மொழிகளை கண்டுபிடித்து புரியவைக்கும் புத்திசரீரனுக்கும் பொன்னும் பொருளும் பரிசாக கொடுத்தான்.

மூன்று இரவுகள் சென்றன. அடுத்த நாள் இரவு ராஜகுமாரன் மிகுந்த ஆர்வத்துடன் பத்மாவைதியைப் பார்க்க சென்றான். கிழவி வந்த வழியாகவே தோட்டத்தை அடைந்தான். வீட்டின் பின்புறம் கயிற்றால் கட்டியபடி ஆசனம் ஒன்று தொங்கிக்கொண்டு இருந்தது. அதன் மீது ஏறி அமர்ந்தான். அவன் வரவை எதிர்பார்த்துத் தயாராக இருந்த பணிப்பெண்கள் ராஜகுமாரன் அமர்ந்த ஆசனத்தை மேலே தூக்கினார்கள்.

மாடியில் சிரித்த முகத்துடன் பத்மாவதி நின்று கொண்டிருந்தாள். ராஜகுமாரனைக் கண்டவுடன் ஆவலுடன் வந்து அவனைகட்டி அனைத்துக் கொண்டாள். இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பைப் பொழிந்தனர். மனதால் இணைந்த இருவரும் கந்தர்வ விவாஹம் செய்து கொண்டனர்.

உலகையே மறந்து மணிக்கணக்கில் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பத்மாவதி ராஜகுமாரனிடம் கேட்டாள் "நான் காட்டிய ஜாடைகளின் உட்பொருளையெல்லம் மிகச் சரியாகப் புரிந்து கொண்டீர்களே, எப்படி?" என்றாள்.

ராஜகுமாரன் மிகுந்த ஆர்வத்துடன் தனது நண்பனைப் பற்றி எடுத்துச் சொன்னான். "அன்பே! எமது அரசின் மந்திரி குமாரனாகிய புத்திசரீரன் என்னுடன் வந்துள்ளான். அவன் என் நண்பன். எனக்கு நீ அனுப்பிய சங்கேத மொழிகள் எதுவும் கொஞ்சம் கூட புரியவில்லை. ஆனால் அவன் தான் சாதுர்யமாக சிந்தித்து அத்தனைப் புதிர்களையும் புரியவைத்தான். அதனால் தான் என்னால் உன்னைச் சந்திக்க முடிந்தது" என்றும் கூறினான்.

இதைக் கேட்ட பத்மாவதியின் முகம் மாறியது. ஒரு பெரிய அரசாங்கத்திற்கு ராஜாவகப்போகும் ஒரு ராஜகுமாரன் தனது அந்தரங்க விஷயத்தில் கூட நண்பனைச் சார்ந்திருக்கிறானே என்று எண்ணத்துவங்கினாள்.

நண்பனின் சொல்லே வேதவாக்கு என்று ராஜகுமாரன் நம்பினால், நாளை நண்பனுக்கு என்னை பிடிக்கவில்லை என்றால் அவன் சொல் கேட்டு இவர் என்னை விலக்கி விட்டால் என்ன செய்வது என்று யோசிக்கலானாள். இதனால் ராஜகுமாரனிடம் சுதந்திரமாகப் பழகமுடியாது என்றும், மந்திரி குமாரனுக்கும் தாம் நல்லவளாக நடந்தே ஆக வேண்டிய நிர்பந்தம் வந்து விடும் என்பதையும் கணக்குப் போட்டாள்.

ஆக ராஜகுமாரன் நிரந்தரமாக தம்மீது காதலுடன் இருக்க வேண்டுமானால், மந்திரி குமாரன் அவருடன் இருக்கக் கூடாது. ஆனால் புத்திசரீரனை முழுவதுமாக நம்பும் ராஜகுமாரனிடமிருந்து அவனை எளிதில் பிரிக்கவும் முடியாது. எனவே எப்படியாவது புத்திசரீரனை தீர்த்துக்கட்டுவதைத் தவிர வேறு வழியில்லை என்று க்ஷனப் பொழுதில் தீர்மானித்து விட்டாள் பத்மாவதி.

அவள் ராஜகுமாரனைப் பார்த்து "அன்பே! நீண்ட நேரம் ஆகிவிட்டதால். நீங்கள் இப்போது புறப்படுங்கள். நாளை நேரம் பார்த்து நானே பணிப்பெண்களை அனுப்பி உங்களை அழைத்து வரச் செய்கிறேன்" என்றாள்.

வீட்டுக்குச் சென்ற ராஜகுமாரன், புத்திசரீரனிடம் பெரு மகிழ்ச்சியுடன் நடந்தவை யாவற்றையும் சொல்லத்துவங்கினான். அப்போது சங்கேத மொழிகளை விளக்கியது யாரென்பதையும் அவளிடம் சொன்னதாய்ச் சொன்னான்.

இதைக் கேட்ட புத்திசரீரன் அதிர்ச்சியுற்றான். அவன் மேலும் கூறினான் "நண்பா! இது முறையில்லை. நல்லதும் இல்லை. உங்களின் அந்தரங்கத்தை அறிந்தவன் நான் என்ற எண்ணம் அவள் மனதில் தோன்றியிருக்கும். இது எங்கே போய் முடியுமோ!" என்றான்.

அதற்கு ராஜகுமாரன் அவள் மிகவும் நல்லவள். அவ்வாறு நினைக்க மாட்டாள் என்றும் வாதிட்டான்.

மறுநாள் காலை பத்மாவதியின் பணிப்பெண்கள் கிழவியின் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் தங்கள் வணக்கத்தை ராஜகுமாரனுக்குச் சொன்னார்கள். பின் புத்திசரீரனிடம், "பத்மாவதி தங்களிடம் தனது மரியாதையை தெரிவிக்கச் சொன்னார்கள்" என்றும் கூறினார்கள். பின்னர் ஒரு தட்டில் பழம் பக்ஷனங்கள் வெற்றிலை முதலியவைகளை வைத்து விட்டு, ராஜகுமாரனை நோக்கி பத்மாவதி அவனுக்காக உணவு ஏதும் உட்கொள்ளாமல் காத்திருப்பதாகவும் நீங்கள் உடனே வரலாம் என்றும் தெரிவித்து நகர்ந்தனர்.

அப்போது ராஜகுமாரன் கூறினான் "பார்த்தாயா நண்பா! பண்புள்ள பெண்ணாய் இருப்பதால் உனக்கு தனது மரியாதையைத் தாம்பூலத்தட்டில் வைத்து தெரிவிக்கிறாள்." என்றான்.

அப்போது புத்திசரீரன் புன்னகையுடன் கூறினான் "பொறு நண்பா, இப்போது பார் வேடிக்கையை" என்று சொன்னபடி பலகாரத்தில் ஒரு சிறு துண்டை எடுத்து அருகில் இருந்த நாய்க்கு போட்டான். அதைத்தின்ற, நாய் அவ்விடத்திலேயே விழுந்து துடித்து இறந்து போனது.

இதை சற்றும் எதிர்பார்க்காத ராஜகுமாரன் அதிர்ச்சியில் உறைந்தே போனான்.

Wednesday, September 16, 2009

மணியடித்து இறை வழிபாடு செய்வதேன்?

டங்..ங்...ங்...ங்..ங்

டங்..ங்...ங்...ங்..ங்

இந்த ஓசையை கேட்டவுடனேயே மனதில் நம்மையறியாமல் பக்தி குடிகொண்டு விடுகிறது. கண்கள் அரையளவு மூடி ஒரு சிறிய ப்ரார்தனை செய்யத்தூண்டுகிறது. என்ன வேலை செய்தாலும் ஒரு வினாடி அவைகளை நிறுத்தி இந்த ஒலியை சற்றே கவனிக வைக்கிறது.

எவ்வளவு சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்தாலும் அந்தப் பேச்சை நிறுத்தி ஒரு வினாடி அந்த ஒலி வரும் திசையில் பார்வையைத் திருப்புகிறோம்.

நம் கவனத்தை ஈர்த்து ஒரு வினாடியேனும் நம் அந்தராத்மாவை இறுகப்பிடித்து நம் கவனத்தை இழுத்து அதன் பக்கம் இருத்தி வைக்கும் இந்த ஒலி தான் மணியோசை!

மணியின் சப்தத்தை நன்றாகக் கேட்டுப்பாருங்கள். அந்த சப்தம் காற்றில் அழகாக மிதந்து செல்வதை நம்மால் உணர முடியும். ஆம் மிதந்து தான் செல்கிறது. காற்றில் இருக்கும் அடுக்குகள் மீது அழகாக லாவகமாக மணியின் ஓசை மிதந்து செல்வதை ஏதோ கண்ணால் பார்ப்பதைப் போன்றே நம்மால் உணர முடியும்.

சாதாரண இடங்களில் வேறெந்த பொருளின் மூலமாக நீங்கள் சப்தத்தை எழுப்பிப் பார்த்தாலும் மணியின் ஓசை பிரயானப்படுவதைப் போன்று அழகாக வேறெந்த சப்தமும் பிரயாணப்படுவதில்லை. எழுப்பப்பட்ட மணியோசை காற்றில் ரீங்காரமிட்டுக்கொண்டே சென்று கொஞ்சம் கொஞ்சமாக காற்றோடு கரைந்து போவதை நாம் கேட்டிருப்போம்.

காரணம் உலோகத்தின் அரைக்கோள வடிவத்தின் சிறப்பம்சம் இது. ஆம் பூமி என்பது ஏறக்குறைய கோள வடிவமே. அதைப் பாதியாக பிரித்தால் அரைக்கோள வடிவம் எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்த மணி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. திறந்த வாய்ப்பகுதி பெரிதாகவும் பின்னர் படிப்படியாக குறைந்து மறுபகுதி சிறிதாகவும் மூடியிருக்கும் ஒரு அமைப்பு மணியாகும். அந்த வடிவமே இப்படிப்பட்ட சிறப்பான ஒலியைத் தோற்றுவிக்கிறது.

சரி, அமைதியாக கடவுளை வழிபடும் வேளையில் சப்தமாக இத்தகைய மணியின் ஓசையை ஏன் எழுப்புகிறோம்?. எத்தனையோ தர்மங்களை வாய்வழியாகச் சொல்லும் போது பலத்த சப்தம் எழுப்பும் இந்த மணியின் மூலமாக நமக்கு என்ன உணர்த்தப் பார்க்கிறார்கள்? ஆம். உலகம் அலைவடிவம் என்பதற்கு நிதர்சன சாட்சியமே மணியோசை.

இந்த உலகம் அலைவடிவாகவே இயங்குகிறது என்பதை நாம் பார்த்தோமல்லவா! நாம் செய்யும் நன்மையும் தீமையும் நம்மைச்சுற்றியே அலையாகப் பரவிக்கொண்டே இருக்கும் என்பதைப் பார்த்தோமல்லவா! நம்முடைய உணர்வுகள் யாவும் அலைவடிவாக பிரயாணப்படும் என்பதைப் பார்த்தோமல்லவா!

மணியின் ஓசையை உற்று கவனித்தால் இவை யாவும் எளிதில் விளங்கும்.

நல்லதே நினைக்கவேண்டும். நல்ல விஷயங்களைப் பற்றியே நாம் சிந்திக்க வேண்டும். காரணம் நாம் நினைக்கும் காரியங்கள் யாவும் எண்ண அலைகளாக வெளியே எப்போதும் வியாபித்துக் கொண்டே இருக்கும்.

அவ்வாறு எண்ணங்கள் எப்படிப் பரவுகிறது என்பதை ஒரு உதாரணத்தின்
மூலம் உணர்த்திக் காட்டும் போது ஆழ்மனதில் நன்றாகப் பதியும் என்பதால் மணியின் ஓசையை எழுப்பி, இதோ இந்த ஓசை எப்படி காற்றில் அலை அலையாகப் பரவுகிறதோ அதே போல நீங்கள் சிந்திப்பவை யாவுமே அலைவடிவில் எப்போதும் பிரபஞ்சத்தோடு சஞ்சாரித்துக் கொண்டே இருக்கும் என்பதை இந்த ஓசை மூலமாக புரிய வைக்கிறார்கள்.


ஓவ்வொரு மனிதரின் உடலில் இருந்தும் மின் காந்த அலைகள் ஒவ்வொரு வினாடியும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்பது நிபுனர்களின் கூற்று. அவ்வாறு வெளிப்படும் அலைகள் தான் ஒரு மனிதனிடமிருந்து மற்றவருக்கு நினைவலைகளைக் கொண்டு செல்கிறது. காற்றில் அலைக் கற்றைகள் எப்போதும் பிரயாணித்துக் கொண்டே இருக்கிறது.

அப்படிப் பிரயாணிக்கும் அலைக்கற்றைகளில் நம்முடைய நினைவலைகளும் கூடவே இருக்கும். கோவிலிக்குப் போகிறோம். மனமுருக ஏதாவது காரியம் நடக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். அது சம்பந்தமான காரியம் ஏதாவது ஒரு வழியில் நமக்கு நடக்கிறது. காரணம் என்ன? நாம் பிரார்த்திக்கும் போது நம்முடைய எண்ண அலைகள் உடலிலிருந்து வெளிப்பட்டு மணியின் ஓசை பரவுவதைப் போல பிரபஞ்சத்தோடு கலந்து பிரயானிக்கிறது.

அந்த எண்ண அலைகள் அதற்குத் தொடர்புடைய வேறு நபர்களின் உணர்வலைகளில் முட்டி மோதி கலக்கும் போது அந்த நபரின் மூலமாக நம்முடைய பிரார்த்தனை நிறைவேறுவது சாத்தியமாகிறது. குறிப்பாக கோவிலுக்குப் போய் பிரார்த்தனை செய்யச் சொல்வது இதற்க்காகத்தான். நம்முடைய பிரார்த்தனைக்கான அலைகள் குறைந்த பிரயாணத்திலேயே அதிக நபர்களைச் சென்று அடைந்து விடும் என்பதற்க்காகத்தான், எல்லோரும் எண்ண அலைகளை ஒரு சேர வெளிப்படுத்தும் இடமான கோவில்களில் சென்றே பிரார்த்திக்கச் சொல்கிறார்கள்.

இது ரேடியோ அலைகள் பற்றிய அறிவே அன்றி மூட நம்பிக்கை அல்ல.

இதை எப்படி நம்புவது? நம்முடைய எண்ணங்கள் எப்படி பிரயாணப்பட முடியும். விளக்குகிறேன். உதாரணமாக ரேடியோ அலைகள் காற்றில் மிதந்து வருவதை நம்மால் பார்க்க முடியாது. ஆனால் சரியான அலைவரிசையினைக் கொண்ட உபகரணங்கள் மூலம் அதை உள் வாங்கும் போது அந்த அலைகளை ஒலியாக நம்மால் மாற்ற முடிகிறது.

செல் போன் அலைகள் நம்மைச் சுற்றி நாலா பக்கமும் பிரயாணித்துக் கொண்டே இருக்கிறது. அதைக் கண்ணால் பார்க்க முடியாது. ஆனால் நம்முடைய சிம் கார்டு தொடர்பான அலைக்கற்றை வரும் போது நமக்கு அது உணர்த்தப்படுகிறது. நம்முடைய பிரார்த்தனைகளும் அவ்வாறே செயல் படுகிறது.

ஆக பிரார்த்தனைகள் பரவும் வகையையும் அவை எப்படிச் செயல்படுகின்றன என்பதையும் நமக்கு செய்முறை விளக்கம் போல செய்து காண்பிக்கும் செயல் வடிவமே மணியோசையாகும்.

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்
அலைகள் ஓய்வதில்லை..

கீதோபதேசம்

கடவுளை உபாஸனை செய்தவற்குரிய வழி எங்கனமெனில் :- ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லுகிறார் - 'நான் எல்லாவற்றுக்கும் பிதா, என்னிடமிருந்தே எல்லாம் இயங்குகிறது. இந்தக் கருத்துடையோரான அறிஞர் என்னை வழிபடுகிறார்கள்'.

எந்த ஜந்துவிற்கும் இம்ஸை செய்வோர் உண்மையான பக்தராக மாட்டார். எந்த ஜீவனையும் பகைப்போர் கடவுளின் மெய்த் தொண்டர் ஆகார், எந்த ஜீவனையுங் கண்டு வெறுப்பெய்துவோர் ஈசனுடைய மெய்யன்பரென்று கருதத்தகார்.

'அஹிம்ஸா பரமோ தர்ம' :- 'கொல்லாமையே முக்கிய தர்மம்' என்பது ஹிந்து மதத்தின் முக்கியக் கொள்கைகளில் ஒன்றாம். கொல்லாமையாகிய விரதத்தில் நில்லாதவன் செய்யும் பக்தி அவனை அமரத் தன்மையில் சேர்க்காது. மற்றொரு உயிரைக் கொலை செய்வோனுடைய உயிரைக் கடவுள் மன்னிக்க மாட்டார். இயற்கை கொலைக்குக் கொலை வாங்கவே செய்யும். இயற்கை விதியை அனுசரித்து வாழ வேண்டும்.

நேசத்தாலே நேசம் பிறக்கிறது. அன்பே அன்பை விளைவிக்கும். நாம் மற்ற உயிர்களிடம் செலுத்தும் அன்பைக் காட்டிலும் மற்ற உயிர்கள் நம்மீது அதிக அன்பு செலுத்த வேண்டுமென்று விரும்புதல் சகல ஜீவர்களின் இயற்கையான ஒன்றாக இருக்கிறது. இந்த வழக்கத்தை உடனே மாற்றிவிட வேண்டும்.

நாம் மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்த வேண்டும். அதனால் உயிர் வளரும், அதாவது நமக்கு மேன்மேலும் ஜீவசக்தி வளர்ச்சி பெற்றுக் கொண்டு வரும். நம்மிடம் பிறர் அன்பு செலுத்த வேண்டுமென்று எதிர்பார்த்துக் கொண்டும், சாபமிட்டுக் கொண்டும் இருப்போமாயின் - நாம் அழிந்து விடுவோமென்பதில் ஐயமில்லை.

- பகவத்கீதை , பாரதியார் உரை.


Tuesday, September 15, 2009

மரியாதை ராமன் கதைகள்!

மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர் பணத்தாசைப் பிடித்தவர்.

ஒரு முறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கும் வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார்.

வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப்பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பி தள்ளினார். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்.

அப்போது அவரது மனைவியார் “உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க" என்றார்.

ஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று நினைத்து அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். ஊர் மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள்.
அப்படி தேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை.

அந்த சமயம் பூபாலன் என்ற வழிப்போக்கர் அந்த ஊர் வழியாக வந்தார். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இருந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர்.

அவர் வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை. அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டு விட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை
கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார்.

ஊருக்குள் சென்ற போது அங்கே இருந்த கடையில் விசாரித்தார். கடைக்காரர் சோமனைப் பற்றி சொல்லி, அவர் தான் தொலைத்தவர், நீங்க இதை கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார்.

உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார், சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்த பணப்பையை வாங்கிக் கொண்டார், அதே நேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்து விட்டது, பணமும் சரியாக இருக்குது, இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும், சன்மானம் கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் சோமன்.

கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து “நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை, மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன்” என்று கத்தினான்.

பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது போல் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே, இவரிடம் சன்மானம் வாங்குவதை விட பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார்.

சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். இந்த பிரச்சனையை மரியாதை ராமனிடம் கொண்டு சென்றார்கள்.

சோமன் தான் பணப்பையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும், பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள்.

ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும், அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான்.

ஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான் என்பதை புரிந்துக் கொண்ட மரியாதை ராமன், சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க நினைத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார் “சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார்.

இப்போது பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது, ஆக இது சோமனின் பையே இல்லை, வேற யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லல, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊர் வழக்கப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன் கோயில் செலவுக்கு கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக் கொள்ளலாம், ஆக பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்து வைத்துக் கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம்”.

மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது. தன்னுடைய தீய குணத்தால் தனக்கே தீங்கு உண்டானதை எண்ணி வருந்தினார். மரியாதை ராமனிடம் உண்மையை ஒத்துக் கொண்டு திரண்டிருந்த ஊர் மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

தன் தவறுக்குப் பரிகாரமாக கிடைத்த பணத்தில் பாதியை பூபாலனுக்கு பரிசாகக் கொடுத்து மீதியை எடுத்துக் கொண்டு வீடு நோக்கி நகர்ந்தார்.

பூபாலனும் சன்மானம் கிடைத்த மகிழ்வுடன் ஊருக்குச் சென்றார்.

மக்கள் மரியாதை ராமனின் சமயோசிதமான தீர்ப்பை பெரிதும் பாராட்டி மகிழ்ந்தனர்.

Sunday, September 13, 2009

எவர் க்ரீன் தத்துவ முத்துக்கள்!

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது - கருடா செளவ்க்யமா?
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளவ்க்யமே - கருடன் சொன்னது

அதில் அர்த்தம் உள்ளது..

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்

மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானம் உள்ள மனிதனுக்கு அவ்வை சொன்னது
அது அவ்வை சொன்னது

அதில் அர்த்தம் உள்ளது...

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது - கருடா செளவ்க்யமா?
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளவ்க்யமே - கருடன் சொன்னது

அதில் அர்த்தம் உள்ளது..

பாடியவர் - டி எம் எஸ்
எழுதியவர் - கண்ணதாசன்..
ரசித்தவர் - அடியேன்

Saturday, September 12, 2009

விக்கிரமாதித்தன் கதைகள் - 6

சென்றவாரத் தொடர்ச்சி

அந்த அழகிய பெண்ணின் சமிக்ஞைகளின் அர்த்தத்தை மந்திரிகுமாரன் விளக்கத்துவங்கினான்.

"அவள் தாமைரைப் பூவைத் தன் காதில் வைத்துக் கொண்டதால் அதைச் சின்னமாக வைத்திருக்கும் கர்ணோத்பலன் என்னும் அரசனுடைய நாட்டைச் சேர்ந்தவள் என்பதை அறிவித்தாள். அந்தப் பூவை காதணியான தந்தபத்திரம் போலச் சுருட்டியதால், "அங்கேயுள்ல தந்தச் சிற்பி ஒருவன் மகள்" என்பதையும் குறிப்பிட்டாள்.

தாமரைப் பூவை எடுத்துத் தலையில் சூடியதால் தன் பெயர் பத்மாவதி என்றும் கையை நெஞ்சகத்தின் மீது வைத்துக் கொண்டு கடைக்கண்ணால் உன்னைப் பார்த்ததால், அவள் இதயம் உனக்கே சொந்தமாகிவிட்டது என்றும் அறிவித்தாள். உண்மையாகவே கர்ணோத்பலன் என்னும் அரசனுடைய ஆஸ்தானத்தில் தந்த சிற்ப்பிகளுள் சிறந்தவனான சங்கிராமவர்த்தனன் என்பவன் இருக்கிறான். அவனுக்குப் பத்மாவதி என்ற பெண் ஒருத்தியும் உண்டு. அவள் தான் இந்தப் பெண்ணாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன் என்று புத்திசரீரன் கூறினான்.

மந்திரிகுமாரன் இவ்வளவு விளக்கமாகக் கூறியதைக் கேட்ட வஜ்ரமகுடன் தன் நண்பனின் புத்திக் கூர்மையைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அவனுக்கு எப்படியாது அந்தப் பெண்ணை அடைந்து விட வேண்டும் என்ற துடிப்பு அதிகரித்தது. தன்னுடைய பரிவாரங்களை தன் நாட்டிற்கு திரும்பிப் போகச் சொல்லிவிட்டு நண்பன் புத்திசரீரனுடன் கலிங்க நாட்டுக்குப் புறப்பட்டான்.

அங்கே கர்ணோத்பலன் ஆண்டுவந்த நகரத்தை அடைந்து தந்த சிற்பியின் வீட்டை தேடையலைந்து கண்டு பிடித்தனர். பிறகு இருவரும் ரகசியமாக பக்கத்தில் குடியிருந்த ஒரு கிழவியின் வீட்டுக்குச் சென்று தங்கினார்கள்.

மந்திரி குமாரன் குதிரைகளை மறைவான இடத்தில் கட்டி புல்லைப் போட்டு தண்ணீர் காட்டிவிட்டு வந்தான். பிறகு அந்தக் கிழவியிடம், "அம்மா, இவ்வூரில் சங்கிராமவர்த்தனர் என்னும் தந்தச் சிற்பி ஒருவர் இருக்கிறாரே, அவரை உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டான்.

"நன்றாகத் தெரியுமே. அவரது மகளுக்கு நான் தான் செவிலித்தாயாக இருந்தேன். ஆனால் வெகுநாட்களாயிற்று நான் இப்பொழுது அங்கே செல்வதே இல்லை. சரி நீங்கள் ஏன் அவரைப் பற்றி விசாரிக்கிறீர்கள்?" என்றாள் கிழவி.

மந்திரி குமாரன் தொடர்ந்தான் "அம்மா, நீங்களும் எங்களுக்குத் தாய் போலத்தான். அதனாலேயே உங்களிடம் சொல்கிறேன். இவர் பக்கத்து நாட்டு ராஜகுமாரன் வஜ்ரமகுடன். இவர் சங்கிராமவர்த்தனரின் மகள் பத்மாவதியை ஒரு ஏரிக்கரையில் கண்டு மையல் கொண்டார். எப்படியாவது அவளை மணக்க வேண்டும் என்பது ராஜகுமாரனின் ஆசை. ஆனால் ஏற்கனவே இரு நாடுகளும் பகையாக இருப்பதால் அந்தப் பெண்ணை ரகசியமாக கவர்ந்து செல்வதைத்தவிர வேறு வழியில்லை. எனவே எப்படியாவது நீங்கள் பத்மாவதியை சந்திக்க உதவி செய்ய வேண்டும். உங்களுக்கு வேண்டிய பொன்னும் பொருளும் தருகிறோம்" என்றான்.

"சரி நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?" என்றாள் கிழவி.

"நீங்கள் பத்மாவதியிடம் போய், நீ குளக்கரையில் கண்ட ராஜகுமாரன் வந்திருக்கிறான். அவன் உன்மீது மோகம் கொண்டிருக்கும் செய்தியை உனக்கு அறிவிக்கவே என்னை அனுப்பி வைத்தான் என்று ரகசியமாக தெரிவிக்க வேண்டும்" என்றான் புத்திசரீரன்.

அப்படியே செய்கிறேன் என்று சொல்லிச் சென்ற கிழவி சிறிது நேரத்திலேயே அழுத முகத்துடன் திரும்பிவிட்டாள். ராஜகுமாரனும் மந்திரி குமாரனும் திகைத்துப் போனார்கள். கிழவியிடம் நடந்தது என்ன என்று வினவினர்.

கிழவி அழுதுகொண்டே கூறினாள் "நான் அவளிடம் போய் நீங்கள் வந்திருக்கும் செய்தியை ரகசியமாகக் கூறினேன். அதைக் கேட்ட அவள் என்னை மிகவும் கோபித்துக் கர்ப்பூரத்தில் தோய்த்த தன் இரண்டு கைகளால் என்னை இரு கன்னங்களிலும் அடித்துவிட்டாள். அவமானத்தால் நான் மனமுடைந்து திரும்பிவிட்டேன். இதோ பாருங்கள், என் கன்னத்தில் அவள் விரல் அடையாளங்கள்!" என்று காட்டினாள் கிழவி.

ராஜகுமாரன் திகைத்துப் போனான். மந்திரிகுமாரனுக்கோ இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாய் உணர்ந்தான். அவன் கிழவியின் கன்னத்தில் படிந்திருந்த விரல் தடத்தை உற்றுப்பார்த்தான். அது சந்திரப்பிறை வடிவில் இருந்தது. வழக்கம் போல் மந்திரிகுமாரன் அவளது குறியீடுகளைப் புரிந்து கொண்டான். அவன் ராஜகுமாரனிடம் இவ்வாறு சொன்னான் "கவலை வேண்டாம் அரசகுமாரரே! அவள் உங்களிடம் இது நிலாக்காலமானதால் இது ஏற்ற தினம் அல்ல என்பதை நிலா வடிவில் தடம் பதிய அடித்திருக்கிறாள். அதே நேரம் பத்து விரல்களும் பதிய அடித்ததால் இன்னும் பத்து நாட்களில் அமாவாசை வந்துவிடும் அதுவரை பொறுத்திருங்கள் என்றும் செய்தியனுப்பியிருக்கிறாள்" என்றான்.

இதையறிந்து ராஜகுமாரன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். கிழவிக்கு நிறைய பொற்காசுகளை பரிசாகக் கொடுத்தான். இப்படியே பத்து நாட்கள் கழிந்தன.

ராஜகுமாரனும் மந்திரிகுமாரனும் கிழவியை மீண்டும் பத்மாவதியைப் பார்க்க அனுப்பினர்.

மீண்டும் கிழவி அழுதபடி வந்தாள். என்னடா இது வம்பாய்ப் போனது என்று திகைத்துப் போன ராஜகுமாரன் இது தனக்கு பெருத்த அவமானமென்றும் இந்த வாளுக்கு அவளை இறையாக்குவேன் என்றும் தன் வாளை உருவியபடி கர்ஜிக்கத் துவங்கினான்.

அப்போது..

Wednesday, September 9, 2009

பொறுமை - விதுர நீதி!

ஸஞ்ஜயன் திருதிராஷ்டிரரிடம், "பாண்டவர்களுக்கு ஒன்றுமே கொடுக்கப்படாவிட்டால் போரை இனி தடுக்க முடியாது" என்று கூறிச்செல்ல அதைக் கேட்ட திருதிராஷ்டிரர் மிகுந்த மனக்கவலை அடைந்தார்.

அவர் விதுரரை வரவழைத்து இவ்வாறு கூறினார் " விதுரரே!, உம்மைப் போன்று தர்மம்
அதர்மங்கள் பற்றி அறிந்தவர் யாருமில்லை. நான் மிகவும் மனக்கவலை அடைந்திருக்கிறேன்! இவையெல்லாம் ஏன் நடக்கிறது? என்னுடைய நன்மைக்குத் தகுந்த அறிவுரைகளைச் சொல்" என்றார்.

விதுரர் கூறினார், "மன்னா! ஆயுதத்தால் ஒரே ஒருவன் தான் கொல்லப்படுகிறான். ஆனால் கெட்ட எண்ணங்களால் பலருக்கு அழிவு ஏற்படுகிறது.

பொறுத்தருள்தல் மனிதனுக்கு மிகச்சிறந்த பலம். வலிமையற்றவர்களுக்குப் பொறுமை ஒரு நற்குணமாகும். திறமைசாலிகளுக்கு அது ஒரு அணிகலன்.

எவனுடைய கையில் பொருமை என்னும் வாள் இருக்கிறதோ, கெட்டவர்கள் அவனுக்கு எந்தக் கெடுதலையும் செய்ய முடியாது.

தர்மமே மிகச்சிறந்த நன்மையை அளிக்கக் கூடியது. பொறுமையே மிகச்சிறந்த அமைதியைக் கொடுக்கும். ஞானமே மிகச்சிறந்த திருப்தியை அளிக்கும். அஹிம்ஸை ஒன்றே எல்லா ஸுகங்களையும் கொடுக்கக் கூடியது.

அரசனாக இருக்கும் ஒருவன் போரைக் கண்டு அஞ்சினாலோ, அந்தணன் ஒருவன் வீட்டைத் துறக்க அஞ்சினாலோ அவனை பூமி விழுங்கி விடுகிறது.

திறமைசாலியிடமுள்ள பொறுமையும், ஏழையிடமுள்ள தானம் செய்யும் குணமும் மோஷத்தை உண்டு பண்ணக் கூடியவை. செல்வம் இருந்தும் எவன் தானம் செய்வதில்லையோ, வறியவனாயிருந்தும் எவன் தவம் செய்வதில்லையோ, கல்லைக் கட்டிக் கொண்டு நீருக்குள் மூழ்குவதற்குச் சமமானவர்கள்.

பணம் இரண்டு தகாத வழிகளில் செலவழியக் கூடும். ஒன்று தகுதியற்றவர்களுக்குக் கொடுத்தல், மற்றொன்று தகுதியுள்ளவருக்குக் கொடுக்காமலிருத்தல். யோகியான துறவி, போரில் முனைந்ததால் கொல்லப்படவிருக்கும் க்ஷத்ரியன் இவ்விருவரும் ப்ரம்மலோகத்திற்குச் செல்கிறார்கள்.

ஸநாதன தர்மம்!

ஸநாதன தர்மம் என்றால் நிரந்தரமான தர்மம்.

எக்காலத்திற்கும் , எல்லா மனிதர்களுக்கும் நிரந்தரமான வகையில் பொருந்தக்கூடிய வகையில் சொல்லப்பட்டிருக்கும் தர்மம்.

காலங்கள் பல மாறினாலும் வாழும் மனிதர்களின் முறைகள் மாறினாலும் இந்த தர்மங்களை மீறி ஒருவனது வாழ்க்கைப் பயனம் அமைந்து விடாது என்பதை எடுத்துக்காட்டுவதே ஸநாதன தர்மம்.

உண்மைகள் பல இருப்பினும் நிரந்தரமான உண்மை எதுவோ அதன் வழியே மக்கள் செல்லத்துவங்குவார்கள். இறுதியில் அதுவே நிலைக்கும்.

கீழ்க்கண்ட செய்தி இதை நிரூபிக்கிறதோ!

Saturday, September 5, 2009

சப்பைக் கேள்வியும் மொக்கை பதிலும் - 2

இந்த வார விடுமுறையில் ஏனோ கொஞ்சம் மனசு அமைதியா இருந்துச்சு. சரி நம்ம குருவுக்கு வணக்கம் வெச்சு நாளாச்சேன்னு பகவத் கீதை புக்கை கையில் எடுத்தேன். ஆம் கண்ணன் தான் என் குரு. உலகத்தின் முதல் தத்துவ ஞானி.

சொல்வாங்களே ஃப்ரெண்ட் பிலாசபர் எல்லாமே ன்னு அப்படி ஒரு குரு. ஐ லவ் ஹிம் சொ மச்.

இப்படி கண்ணனைப் பத்தி நினைச்சுக்கிட்டே கீதையை அமைதியா புரட்டும் போது குறும்புக்கண்ணனான இவன் உள்ளே வந்தான்.

அதாங்க போன தடவை கூட மொக்கை தாங்க முடியாம ஓடிப்போனானே அந்த வாண்டுப்பையனே தான். டிவியும் சினிமாவும் பசங்கள எவ்வளவு தூரம் பாதிக்கிதுங்கறதுக்கு இவனே அடையாளம்.

"ன்னா, என்ன புக்ன்னா இது?"

"பகவத் கீதை டா"

"ஓ, ன்னா க்ருஷ்ணர் பயங்கர வாலாமே, என்னை மாதிரி!!!" சொல்லிட்டு ஓரக்கண்ணால பாத்தான்.

"ஆமாண்டா, என்ன இப்போ"

"ன்னா க்ருஷ்ணர் கூட லவ் பண்ணினார்ல?"

"அதானே! பயிண்டுக்கு வந்துருவியே"

"அத விடுங்கன்னா, நீங்க இதுவரைக்கு யாருக்காவது ப்ரபோஸ் பண்ணிருக்கீங்களான்னா?"

"இல்லடா"

"அய்ய நீங்க வேஸ்ட் ன்னா"

"டேய்! என்னடா வேணும் உனக்கு?"

"பின்னென்னன்னா, மனிசனாப் பொறந்தா லவ் பண்ணனும்னா.."

"ஏண்டா உங்க அப்பா அம்மா திட்ட மாட்டாங்களா?"

"ஏன் திட்டனும்? வி ஹாவ் ரைட்ஸ்ன்னா"

ஆகா ஓவராப் போறானே...இவனுக்கு போனதடவை மாதிரி சீரியஸா மொக்க போட்டா தான் சரியாகும்ன்னு சொல்ல ஆரம்பிச்சேன்..

"ஏண்டா இதுக்கெல்லாமாடா ரைட்ஸ் பேசுவீங்க. ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோ! வெள்ளைக்காரன் தனக்கு உரிமை இருக்குன்னு பேசினா அவன் கதையே வேற. பதினைஞ்சு வயசானா அவனுங்க ஒருத்தனும் வீட்ல இருக்க மாட்டாங்க. அப்பா அம்மாவ விட்டு தனியா போயிறுவாங்க. அவன் எக்கேடு கெட்டாலும் அவங்களுக்கு கவலை இல்லை. அவங்க எப்டி போனாலும் அவனுக்கும் கவலையில்லை. யாரு கூடவாவது தங்கிக்கிட்டு ஏதாவது வேலை செஞ்சு, தன் காசுலேயே மேற்படிப்பு படிச்சு தானே தான் உருப்படுவானுங்க. அப்பறம் அவனுக்கு அவனே ஜோடியைத்தேடிப்பான். அதுக்கு அவனுக்கு ரைட்ஸ் இருக்கும்பான்.

ஆனா நம்ம நாட்ல அப்படியா வளக்கறாங்க. குழந்தையா பொறந்தவுடனே பூச்சி பொட்டு அண்டீரக்கூடாதேன்னு பொத்திப் பொத்தி பாதுகாத்து, மத்த பசங்கள விட நம்ம பசங்கதான் சொசைட்டில முன்னாடி வரணும்னு கடனவுடன வாங்கி பெரிய ஸ்கூல்ல சேத்து, பதினைஞ்சு வர்ஷம் கழிச்சு வரப்போற உன் காலேஜ் செலவுக்கு இப்பருந்தே இன்ஸூரன்ஸ்ல பணம் கட்டி, காலேஜ்ல படிக்க வெச்சு, பின்னாடி வெளிநாட்ல பசங்களுக்கு வேலை கிடச்சா கண்ட கண்ட கான்ஸ்லேட் வாசல்ல ராப்பூரா காவலுக்கு இருந்து உங்கள வெளிநாட்டுக்கும் அனுப்பி எவ்வளவு தூரம் பிள்ளைங்களுக்காக கஷ்டப்படனுமோ அவ்வளவும் செஞ்சு உங்கள பெரிய மனுஷனாக்கினா, உங்கள மாதிரி பசங்கல்லாம் அவங்களுக்கு யார் மருமகனா வந்தா இல்ல மருமகளா வந்தா பிடிக்கும்ன்னு ஒரு ப்ரசண்ட் கூட யோசிக்காம ஜோடியை சேத்துக்க எனக்கு ரைட்ஸ் இருக்குன்னு
சொன்னா உங்களெல்லாம் கருவாடு தொங்க விடற மாதிரி உரிச்சு உப்புக்கண்டம் போட வேனாம்?'

மூச்சு வாங்க இவ்வளவு லென்தா டையலாக் பேசி முடிச்சா வாண்டு மூஞ்சிக்கு முன்னாடி வந்து என்னையே உத்துப் பாத்தான்!

"உங்களுக்கு ஏதாவது லவ் ஃபெய்லியரான்னா?"

"ஏண்டா?"

"இல்ல இவ்வளவு சீரியஸா நீங்க மொக்க போட்டு நான் பாத்ததேயில்லை அதான் கேட்டேன்!" ன்னு சொல்லிட்டு ஓடியே போய்ட்டான்.

இந்தகாலத்துப் பசங்க அடங்கவே மாட்றானுங்கப்பா.

அடுத்த முறை வரட்டும். அவனா கேள்வி கேக்காட்டாலும் அவனுக்க்காகவே கலைஞர் மாதிரி நானே கேள்விபதில் தயாரிச்சு வலுக்கட்டாயமா அவன் காதுக்குள்ள ஒப்பிக்கலாம்ன்னு இருக்கேன்.

வருவானா பாக்கலாம்.

மரியாதை ராமன் கதைகள் - 2


ஒரு வியாபாரி, அவர் கொஞ்சம் கொஞ்சமாக வியாபாத்தில் பணம் சேர்த்து விட்டர். இந்தச் சமயத்தில் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டது. படுத்த படுக்கையாக விழுந்து விட்டார். அவருக்கு ஒரே மகன்.

அவன் சிறிய பையனாக இருந்தான். அந்த வியாபாரிக்கு வேறு உறவினர் எவரும் கிடையாது. 'தாம் இனிப் பிழைக்கமாட்டோமே?" என அஞ்சினார். தாம் இறந்து விட்டால் தன் மகனை எவராவது ஏமாற்றி தாம் அரும்பாடு பட்டுச் சேர்த்த பொருளை அபகரித்துச் சென்று விடுவார்களோ! என்று பயந்தார்.

தமக்கு மிகவும் வேண்டிய நண்பர் ஒருவரைக் கூப்பிட்டனுப்பினார். அவரிடம் தாம் அரும்பாடு பட்டுச் சேர்த்து வைத்த பத்தாயிரம் வராகன்களையும் ஒப்படைத்தார்.

"நண்பனே, என் மகன் வளர்ந்து பெரியவனானதும் உனக்கு விருப்பமானதை அவனுக்குக் கொடு" என்று கூறினார்.

சிறிது நாட்களில் அந்த வியாபாரியும் இறந்து விட்டார். பையன் வளர்ந்து பெரியவனானான். தம் தகப்பனாரின் நண்பரிடம் சென்றான்.

அவரிடம் தம் தந்தை கொடுத்து வைத்திருந்த பத்தாயிரம் வராகன்களைத் திரும்பக் கொடுக்குமாறு கேட்டான்.

வியாபாரியின் நண்பன் பெரிய மோசக்காரனாக இருந்தான். "உன் தந்தை இறக்கும்போது எனக்கு விருப்பமானதை உனக்குக் கொடுக்கச் சொன்னர். வீணாகப் பூராப் பணத்துக்கும் ஆசைப்படாதே. இந்தா அயிரம் வராகன். இதை எடுத்துச் சென்று எங்காவது போய் பிழைத்துக் கொள்! என்று ஆயிரம் வராகன்கள் அடங்கிய பணமுடிப்பை அவனிடம் கொடுத்தான்.

வியாபாரியின் மகனுக்கு இது பெரும் அதிர்ச்சியைத் தந்தது. மிகவும் நல்லவர் என்று தன் தந்தையார் நம்பிய அவருடைய நண்பனின் செய்கை அவனுக்கு அளவற்ற வேதனையைத் தந்தது. நேரே மரியாதை ராமனிடம் சென்று முறையிட்டான்.

மரியாதைராமன் வியாபாரியின் நண்பனை அழைத்தான்.

"இந்தச் சிறுவன் கூறுவது உண்மையா?" என்று அவரிடம் கேட்டான் மரியாதைராமன்.

"ஆம் அய்யா! இவன் தந்தை என்னிடம் பத்தாயிரம் வராகன்களைக் கொடுத்து, இவன் வளர்ந்து பெரியவனானதும் எனக்கு விருப்பமானதைச் சிறுவனுக்குக் கொடுக்கச் சொன்னார். அதன்படி நான் இவனுக்கு ஆயிரம் வராகன்கள் கொடுத்துள்ளேன். அதுவே பெரிய தொகை" என்றான் மோசக்காரன்.

"உம்முடைய நண்பர் சொன்னவாறு நீங்கள் நடந்து கொள்ளவில்லையே!" என்றான் மரியாதைராமன்.

மோசக்காரனுக்கு ஒன்ரும் புரியவில்லை. மரியாதை ராமனே தொடர்ந்து பேசலானான். "அய்யா, இவர் தந்தையார் ஒப்படைத்த பத்தாயிரம் வராகன்களில் நீர் ஒன்பதினாயிரம் வராகன்கள் எடுத்துக் கொண்டீர். அதுதான் உமக்கு விருப்பமானது.

எனவே உமக்கு விருப்பமான நீர் விரும்பி எடுத்துக் கொண்ட அந்த ஒன்பதினாயிரம் வராகன்களைத்தான் நீர் இந்தச் சிறுவனுக்குத் தர வேண்டும்." என்று தீர்ப்பு வழங்கினான்.

இந்தத் தீர்ப்பைக் கேட்டுச் சிறுவன் மிகவும் மகிழ்ந்தான்.

பேராசைக்காரன் தன்னுடைய பேராசைக்கு இது சரியான தண்டனைதான் என்று நினைத்தவாறே ஒன்பதினாயிரம் வராகன்களை அந்தச் சிறுவனுக்குக் கொடுத்து அனுப்பினான்.

மரியாதை ராமனின் தீர்ப்பை அனைவரும் மெச்சினார்கள்

நமது பாரம்பரிய கதைகளை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நமது கடமையே ஆகும்.

விக்கிரமாதித்தன் கதைகள் - 5


சென்றவாரத் தொடர்ச்சி...!

"விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்!" என்றது வேதாளம். கதையின் முடிவில் என்ன புதிர் இருக்குமோ என்று சிந்தித்தவாறே நடந்து கொண்டே கதையைக் கேட்கத்துவங்கினான் விக்கிரமாதித்தன்.

முன்பொரு சமயம் வற்றாத ஜீவ நதியான கங்கை ஓடும் வாரனாசியில்
பிரதாபமகுடன் என்றொரு மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு வஜ்ரமகுடன் என்றொரு மகன் இருந்தான். மன்னனைப்போலவே மகனும் மிகுந்த பராக்கிரமசாலி. சிறந்த வீரன். மன்மதனைப் போல அழகுள்ளவன். ஆனால் வஜ்ரமகுடனுக்கு புத்தி கூர்மை கொஞ்சம் குறைவு. எதையும் சட்டென்று புரிந்து கொள்ளமாட்டான்.

ராஜகுமாரனான வஜ்ரமகுடனுக்கு நேர் மாறாக இருந்தான் அவனுடைய நண்பன் புத்திசரீரன். பெயருக்கு ஏற்றார்போல சரீரம் முழுவதும் புத்தியைக் கொண்டவனாய் இருப்பான். மிகவும் சிக்கலான விஷயங்களைக் கூட தனது புத்திக் கூர்மையால் வினாடியில் வென்று முடிப்பான். அரசவை மந்திரியின் குமாரனான இவன் மீது அரசகுமாரன் வஜ்ரமகுடன் மிகுந்த பிரியம் கொண்டிருந்தான்.

மந்திரிகுமாரன் இல்லாமல் எங்கும் செல்ல மாட்டான். அவன் மீது மிகுந்த நம்பிக்கையும் கொண்டிருந்தான்.

ஒரு நாள் வஜ்ரமகுடனும் புத்திசரீரனும் காட்டிற்கு வேட்டையாடச் சென்றனர். துஷ்ட மிருகங்களை காட்டின் அடர்ந்த பகுதிகளில் நீண்டதூரம் சென்று வேட்டையாடிச் சென்றவர்கள் எல்லை தாண்டி வேறு ஒரு கிராமத்திற்குள் சென்று விட்டனர்.

அது ஒரு அழகான நந்தவனமாக இருந்தது. அந்த வனத்திற்குள் செல்லச் செல்ல விரிந்த மலர்களும் அவைகளின் வாசனையும் வஜ்ரமகுடனை வெகுவாகக் கவர்ந்தன. குதிரைகளின் குழம்புகள் தரையில் உராயும் சத்தம் கீட்டவுடன் பறவைகள் சட சட வென மொத்தமாகப் கீச்சிட்டுப் பறந்தன. பறவைகள் பறக்கும் அழகை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே நடந்தானர் இருவரும்.

இருவரும் வழியில் அழகான ஒரு ஏரியை அடைந்தனர். அந்த ஏரியில் வண்ண மயில்களைப் போல மையல்கள் குளித்துக் கொண்டிருந்தததைப் பார்த்த ராஜகுமாரன் குதிரையை ஓரமாக நிறுத்தி விட்டு அருகே சென்றான்.

நீரில் ஆனந்தமாக விளையாடிக்கொண்டிருந்த பெண்களின் நடுவே பேரழகாய் ஒருத்தி இருந்தாள். அவளுடைய கண்களும் உதடுகளும் வஜ்ரமகுடனை மயங்கச் செய்தன. குளித்துக் கொண்டிருந்த பெண் ராஜகுமாரன் பார்ப்பதை கவனித்தாள். ஓரக்கண்ணால் அவனைப்பார்த்த பெண் கம்பீரமான அவனது தோற்றத்தில் மயங்கினாள். எப்படியாவது அவனை சந்திக்கவேண்டும் என்று எண்ணிய அவள் சில சமிக்ஞைகள் செய்தாள்.

ஒரு தாமரைப் பூவைப் பறித்து தன் காதில் சூட்டிக்கொண்டாள். காதில் அணியும் தந்த பத்திரம் என்னும் ஆபரணம் போல அப்பூவை நீண்ட நேரம் சுருட்டிக் கொண்டிருந்தாள். பிறகு, மற்ர்றொரு பூவைப் பறித்துத் தன் தலையில் சூட்டிக் கொண்டாள். அதே சமயம் மற்றொரு கையை தன் நெஞ்சில் வைத்துக் கடைக்கண்ணால் அவனை நோக்கினாள். இதை பார்த்துக் கொண்டிருந்த ராஜகுமாரனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனால் புத்திசரீரனுக்கு சட்டென விளங்கி விட்டது.

அவள் தோழிகளுடன் கரையேறி விருட்டென சென்றுவிட்டாள். வஜ்ரமகுடனுக்கோ தலையே வெடித்துவிடும் போலிருந்தது. அவள் செய்த செய்கைக்கு அர்த்தம் புரியாமல் விழித்தான். அவள் என்ன சொன்னாள் என்பதை தன் ஆருயிர் நன்பனிடம் விசாரித்தான்.

புத்திசரீரன் "ராஜகுமாரனே! அந்தப் பேரழகி உங்களை காண விரும்புகிறாள். அவள் தனது இருப்பிடத்தை ரகசிய குறியீடிகளின் மூலம் உங்களுக்குச் சொல்லிச் சென்றாள்" என்றான்.

வஜ்ரமகுடனோ ஒன்றும் புரியாதவனாய் "என்ன? அவள் தன்னைப் பற்றி சொன்னாளா எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. நண்பா! கொஞ்சம் விளக்கமாகச் சொல்லேன் என்றான்?"

அந்த அழகிய பெண்ணின் சமிக்ஞைகளின் அர்த்தத்தை மந்திரிகுமாரன் விளக்கத்துவங்கினான்.

விளக்குவான் பொறுங்கள்!

Thursday, September 3, 2009

தன்வினை தன்னைச் சுடும் - 2


தன்வினை தன்னைச் சுடும் - 1




இனி உதம் சிங் பற்றி பார்ப்போம்.

1899ல் தாஹல் சிங் என்ற ரயில்வே தொழிலாயின் மகனாகப் பிறந்த உதம் சிங் தனது ஏழாவது வயதிலேயே பெற்றோரை இழந்தார். அனாதை இல்லத்தில் வளர்ந்த இவர் தனது பதினேழாவது வயதில் ஒரே சகோதரரான சாது சிங்கையும் இழந்தார். 1918ல் அவர் மெட்ரிக் தேர்வில் வெற்றி பெற்றார்.

இளம் பருவமில்லையா? சமூகத்தில் தானும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் இருந்த இவரை புரட்சி இயக்கங்கள் ஈர்த்தன.

பலமுறை ஆப்பிரிக்கா இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்கே இந்திய தேசிய நடவடிக்கைகளில் தீவிரப் பங்கு பெற்றார் உதம்சிங்.

லாலா ஹர்தயாள் எனும் சிந்தனையாளர் அமெரிக்காவில் பாரத தேசியவாத இளைஞர்களை அரசியல் சித்தாந்தங்களில் பயிற்றுவித்து

புரட்சியாளர்களாக்கிடச் செயல்பட்டு வந்தார். இவரது கதர் (புரட்சி) எனும் இயக்கத்துடன் உதம் சிங் இணைந்தார். 1927ல் பகத்சிங்கிற்காகத் துப்பாக்கிகளையும் தளவாடங்களையும் பாரதத்துக்குள் கடத்தி வந்தார். அதே ஆண்டு ஆகஸ்டில் அவர் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சிறையில் இருந்த காலத்தில் (1931) பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.

1931ல் உதம் சிங் விடுதலை செய்யப்பட்டார். அப்போது அவர் போலிஸ் கெடுபிடிகளில் இருந்து தப்புவதற்காகத் தமது பெயரை முகமது சிங் என மாற்றிக்கொண்டார். பிரிட்டிஷ் சி.ஐ.டி.கள் அவரைத் தொடர்ந்து கண்காணித்த வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில் அவர் 1933ல் காஷ்மீருக்குச் சென்று அங்கிருந்து பிரிட்டிஷ் உளவாளிகள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஜெர்மனிக்குச் சென்று அங்கிருந்து 1934ல் இங்கிலாந்துக்குள் நுழைந்தார்.

அங்கே ஒரு காரும் துப்பாக்கியும் வாங்கிவிட்டு ஜாலியன்வாலாபாக் படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய ஜெனரல் டையரின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஆரம்பித்தார். அவருக்கு டையரைக் கொல்ல பல வாய்ப்புகள் கிடைத்தன.

ஆனால் அவர் அமைதியாக இருந்தார். ஏனெனில் தமக்கு எளிமையாக இருக்கும் என்பதைக் காட்டிலும் அச்செயல் உலக மக்களுக்கு ஒரு செய்தியாக அமைய வேண்டும் என்பதில் அவர் தீர்மானமாக இருந்தார்.



அன்று 1940 மார்ச் 13 ஏறக்குறைய இருபது ஆண்டுகள் - சரியாக ஒரு மாத காலகட்ட இடைவெளி. காக்ஸ்டன் ஹாலில் கிழக்கு இந்திய அசோசியேஷன் மற்றும் ராயல் சென்ட்ரல் ஏஷியன் சொசைட்டி ஆகியவற்றின் கூட்டத்தில் பங்கு பெற வந்திருந்த சீமான்களில் முக்கியமானவனாக வந்திருந்தான் மைக்கேல் டையர். பேசுவதற்கு எழுந்தான். ஒலிவாங்கியைப் பிடித்தான். தனது பேச்சை துவங்கினான்.

"லேடிஸ் அண்ட் ஜெண்டில்மேன்"

அப்போது டையரின் முகத்திற்கு முன்னே எழுந்து நின்றான் உதம் சிங். கூட்டத்தில் கையில் ஒரு புத்தகத்துடன் உதம் சிங். புத்தகத்துக்குள் கச்சிதமாக வெட்டப்பட்ட பக்கங்களுக்குள் 0.45 ஸ்மித் வெல்ஸன் கைத்துப்பாக்கியுடன்.

பஞ்சாபில் தாம் செய்த செயலுக்காகத் தாம் சிறிதளவும் வருத்தப்படவில்லை என்றும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் நீடித்த வாழ்வுக்காக பஞ்சாபில் தாம் செய்ததை ஆப்பிரிக்காவிலும் தாம் வாய்ப்பு கிடைத்தால் அரங்கேற்றச் சித்தமாக இருப்பதாகவும் தன் பேச்சில் டையர் குறிப்பிட்டான். “அந்த வாய்ப்பு உமக்கு கிடைக்கப்போவதில்லை டையர் அவர்களே” எனக் கூறியபடி துப்பாக்கியை எடுத்தார்.

உதம் சிங்கின் குறி தவறவில்லை முதல் குண்டு அவன் மார்பையும் இரண்டாம் குண்டு அவனது சிறுநீரகத்தையும் சிதைக்க, தாக்கப்பட்ட ஜெனரல் டையர் அங்கேயே மரணம் அடைந்தான். இந்திய அரசு செக்ரட்டரியான செட்லாண்ட் காயமடைந்தார். லாமிங்டன் என்கிற பிரிட்டிஷ் பிரபுவின் கை சிதறிப் போனது.

சிரித்த முகத்துடன் கைதானார் உதம் சிங்.



சரி, யாரிந்த உதம் சிங். 1919ல் ஜாலியன் வாலாபாக் படுகொலையின்
போது அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தலைவர்கள் பேச்சை ஆர்வமுடன் கேட்டுக்கொண்டிருந்த இருபது வயது இளைஞர். கல்லூரிப்பருவம். பெரியவர்களது கூட்டத்தில் தன்னால் ஏதாவது செய்ய முடியுமா என்று சிந்தித்த படி அவர்களுடன் தேச பக்தியில் பங்கேற்றவர்.

சரி இவரது பெற்றோர் அந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தார்களா? இல்லை. சரி இவரது சகோதரர்கள் வேறு யாரேனும் இறந்தனரா? இல்லை. சரி இவரது மனைவி அல்லது காதலி யாரேனும் இறந்தார்களா? அதுவும் இல்லை. குழந்தைகள்? இல்லவே இல்லை. தனக்கென்று இழப்பதற்க்கு சொந்தம் ஏதும் அவருக்கு இருந்ததில்லை.

ஆயினும் மைக்கேல் டையர் உயிருக்கு அவரே நாள் குறித்தவரானார். இங்கே தான் நமது தத்துவம் வேலை செய்கிறது. நேரடியாக நாம் ஒருவருக்கு தீங்கு இழைக்காவிடிலும் நாம் இழைத்த தீமையின் அதிர்வு உண்டாக்கும் அலையில் சிக்கி நாமே மாண்டுபோவோம் என்கிற அலை பரவல் தத்துவம் இங்கே தான் தன் வேலையைத் துவங்கியது.

நேரடியாக உதம் சிங்கோ அவனது சொந்தங்களோ ஜாலியன் வாலாபக் என்னுமிடத்தில் காயப்படாத போதும், டையர் இழைத்த அநீதியின் அதிர்வு உத்தம் சிங்கின் மனதில் ஆத்திர அலையை உண்டு செய்தது.

அந்த அலை நாடெல்லாம் சுற்றி இறுதியில் டையர் வாழ்ந்துவந்த அவனது சொந்த பூமியான இங்கிலாந்திலேயே சுனாமியாய்ப் பாய்ந்து சுட்டெரித்தது. தன் வினை தன்னைச் சுட்டது.

அன்பர்களே! நம் கண் முன்னே நமக்கோ அல்லது மற்றவருக்கோ தீங்கிழைக்கும் நிறைய மனிதர்களைப் பார்த்திருப்போம். இவர்களுக்கெல்லாம் தண்டனையே கிடையாதா? என்று புலம்பியிருபோம். பாவம் செய்பவர்கள் எல்லாம் நன்றாக இருக்கிறார்கள், நாம் தான் கஷ்டப்படுகிறோம் என்று அங்கலாய்த்திருப்போம். ஆனால் நண்பர்களே அலை வடிவான இந்த உலகில் ஒரு தவறு செய்து விட்டு அந்த அதிர்வலையிலிருந்து தப்பி யாரும் வாழ முடியாது.

ஒருவன் பாவம் செய்யும் போது அது செய்தியாகும். அவன் அதிலிருந்து தப்பிக்கக் கூடும். ஆனால் அவனுக்கு தண்டனை நம் கண்ணுக்கு, ஏன் உலகத்தின் கண்ணுக்கே தெரியாமல் கூட கிடைக்கக் கூடும் என்பதே மேற்கண்ட செய்தியின் சாரம்.

ஆக தீயவன் மட்டும் தான் வாழ்கிறான் என்ற 'நம்பிக்கையை' விட்டு விட்டு, நல்லவர்கள் தான் கைடைசி வரை நன்றாக வாழ்வார்கள் என்ற நம்பிக்கையைக் கொள்ளுங்கள்.

தன் வினை தன்னைச் சுடும் என்பதை நன்றாக ஆழ்மனதில் பதியச்செய்யுங்கள். முடிந்தவரை அடுத்தவர்களுக்கும் விளக்குங்கள். அதுவே இச்சமூகத்திற்கு நாம் செய்யும் சிறந்த ஆன்மீகப் பணியாகும்.

இந்தக் கட்டுரை துப்பாக்கி ஏந்திய உதம் சிங்கின் புகழ்பாட என்று எண்ணுபவர்களுக்கு ஒரு விளக்கம். தலைப்பின் படியே உத்தம் சிங்கிற்கும் தன் வினை தன்னைச் சுட்டது என்பதை மறக்க வேண்டாம். உதம் சிங் தூக்கிலிடப்பட்டார். வன்முறையாளர்களில் கொடுமைக்காரனும், கொடுமைக்காரனை தண்டிக்கும் வீரனும் ஒரே தராசில் தான் வைக்கப்படுவார்கள்.

"ஆனால் வன்முறையை யார் முதலில் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தே காலம் இவ்விருவரையும் தீர்மானிக்கிறது."

எனவே அன்பைப் பரப்புவோம். ஆனந்தமாய் வாழ்வோம்.

ஜெய்ஹிந்த்.

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.
கொசுறு: தூக்குக் கயிற்றை முத்தமிடும் முன் நீதிபதியின் முன் உத்தம் சிங் பேசிய கடைசி வார்த்தைகள் இவை:

"பாரதத்தின் வீதிகளில் எங்கெல்லாம் நீங்கள் சொல்லும் மேற்கத்திய ஜனநாயகத்தின் கொடியும் கிறிஸ்தவமும் ஆக்கிரமித்துள்ளதோ அங்கெல்லாம் இயந்திரத் துப்பாக்கிகள் குழந்தைகளையும் பெண்களையும் கொன்று குவித்து வருகிறது.”

"Machine guns on the streets of India mow down thousands of poor women and children wherever your so-called flag of democracy and Christianity flies"