Saturday, May 31, 2014

இறைவன் நிச்சயித்ததை யாரால் தடுக்க முடியும்?



இன்றைய அரசியல் நிலையைப் பார்க்கும் பொழுது, இத்தனை எதிர்ப்பிற்கிடையிலும் திரு நரேந்திர மோதி எப்படி அசாத்திய வெற்றியைக் கண்டார் என அவரைப் பிடிக்காத பலர் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க முடிகிறது. பகவத் ஸங்கல்பம் என்று ஒன்று உண்டு. இது இப்படித்தான் நடக்க வேண்டும் என இறைவன் நிச்சயித்திருந்தால் அதை நம்மால் மாற்ற முடியாது என்பார்கள். சமீபத்தில் அப்படி நடந்த ஒன்று தான் மோதி பாரதப்பிரதமர் ஆனது எனலாம். ஆம், எத்தனை அவதூறுகள் எத்தனை குற்றச்சாட்டுகள், எத்தனை எதிர்ப்புகள், எத்தனை விமர்சனங்கள் - அத்தனையையும் தாண்டி இந்த பெரிய ஜனநாயக்க நாட்டின் எதிர்ப்பாரற்ற பிரதமர் ஆவதென்றால் சும்மாவா? இது தான் ஈஸ்வரனின் விருப்பம் என்றால் பகவத் சங்கல்பத்தை யாரால் மாற்ற முடியும்? 

என்னதான் புத்தியை உபயோகித்து சில பரிகாரங்கள் செய்து விதியை மாற்றலாம் என்று நினைத்தாலும் இறைவன் நிச்சயித்தது எதுவோ அதுவே நடக்கும் என்பதற்கு பாஸ்கராச்சாரியாரின் கதையை உதாரணமாகச் சொல்லுவார்கள்.

யார் இந்த பாஸ்கராச்சாரியார் என்கிறீர்களா? நம் நாட்டில் முதன் முதலில் ஏவப்பட்ட இரண்டு வின்கலத்திற்கு ஆர்யபட்டா என்றும் பாஸ்கரா என்றும் பெயர் வைத்தார்கள் ஞாபகம் இருக்கிறதா? அதில் ஒருவர் தான் இந்த பாஸ்கராச்சார்யார். மிகப்பெரிய கணித மேதை, ஜோதிஷ வல்லுனர். வின்வெளி ஆராய்ச்சியாளர். அவரது வாழ்க்கையில் நடந்த ஸ்வாரஸ்யமான சம்பவத்தை திரு சங்கரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இப்படி அழகாக விளக்குகிறார்.

"எண்ணூறு வருஷங்களுக்கு முன் பாஸ்கராச்சாரியார் என்று பெரிய கணித ஸித்தாந்தி ஒருவர் இருந்தார். நமக்கு என்னதான் கெட்டிக்காரத்தனம் இருந்தாலும், பகவத் ஸங்கல்பத்தை மாற்ற முடியாது என்பதற்கு திருஷ்டாந்தமாக அவர் வாழ்க்கையில் ஒன்று நடந்தது. அவருடைய பெண்ணுக்கு லீலாவதி என்று பெயர். ஜாதகப்படி அவளுக்கு ரொம்பவும் மாங்கல்ய தோஷம் இருப்பதை ஜ்யோதிஷப் புலியான பாஸ்கராச்சாரியார் அறிந்திருந்தார். ஆனாலும் தமது கெட்டிக்காரத்தனத்தினால் ஸகல க்ரஹங்களும் தீர்க்க ஸெளமங்கல்யத்தைத் தரும்படியான ஒரு லக்னத்தைக் கண்டுபிடித்து அதிலே புத்ரிக்கு விவாஹம் செய்து விட்டால் அவள் தீர்க்க ஸுமங்கலியாக இருக்கச் செய்து விடலாம் என்று நினைத்தார். அந்த மாதிரியான க்ரஹ சேர்க்கை உடைய ஒரு லக்னத்தில் லீலாவதிக்குக் கல்யாண முஹ¨ர்த்தம் வைத்தும் விட்டார்.

அந்தக் காலத்தில் இப்போது போல் கடிகாரம் கிடையாது. வாஸ்தவத்தில் அக்காலத்தில் இருந்ததுதான் அசல் கடிகா. கடம், கடிகா, கடிகை என்பதெல்லாம் பானை மாதிரியான தீர்த்த பாத்திரத்தைக் குறிக்கும். இப்படிப்பட்ட ஜல பாத்திரமே பூர்வகாலத்திய கடிகா அல்லது கடிகாரம். அதிலே மேல்பாகம், கீழ்பாகம் என்று பிரிந்திருக்கும். மேல் பாகத்தில் துளித்துளியாக விழும். மருந்து பாட்டிலில் டோஸ் மார்க் பண்ணியிருக்கிற மாதிரி, கீழ் பாகத்தில் அளவுக்கோடுகள் போட்டிருக்கும். துளித்துளியாய் விழும் ஜலம் இன்ன கோடுவரை வந்தால் இத்தனை நாழிகை என்று கணக்குப் பண்ணிவிடுவார்கள். அதிலுள்ள டோஸ் மார்க் ஒருநாளில் அறுபதில் ஒரு பங்காகும். 'நாழிகை'என்று தமிழில் சொல்லப்படும் இந்தக் கால அளவுக்கு ஸம்ஸ்கிருதத்தில் 'நாடிகா'என்பதோடு 'கடிகா'என்றே இன்னொரு பெயர் உண்டு. அது 24 நிமிஷம் கொண்டது. Water -clock, Water glass என்று இங்கிலீஷிலும் சொல்வார்கள். ஜலம் சீதோஷ்ணத்தைப் பொறுத்து evaporate (ஆவி) ஆவதால், இதில் ஏதாவது கணக்குத் தப்பு வரும் என்று, ஜலத்துளிக்குப் பதில் 'எவாபொரேட்'ஆகாத மண் துகள் விழுகிற மாதிரிச் செய்யும் கடிகாரத்துக்கு hour - glass என்று பெயர்.

அந்நாள் வழக்கப்படி, லீலாவதி விளையாட்டுப் பெண்ணாக இருந்த சின்ன வயசிலேயே கல்யாணம் நிச்சயித்திருந்தது. அந்தக் குழந்தை மேலே சொன்ன மாதிரியான ஜல கடிகாரத்திடம் வந்து, குனிந்து பார்த்து ஏதோ சேஷ்டை பண்ணிற்று. அப்போது அதன் மூக்குத்தியிலிருந்து ஒரு சின்ன முத்து கடிகாரத்துக்குள் விழுந்து, மேல் பாகத்துக்கும் கீழ் பாகத்துக்கும் நடுவேயுள்ள துவாரத்தில் மாட்டிக் கொண்டு விட்டது.

இதனால் விழுகிற துளி சின்னதாகி விடும் அல்லவா? இப்படி, இருக்க வேண்டியதை விடச் சின்னதான துளிகளாக விழுந்து முஹூர்த்த லக்னக் கோட்டுக்கு ஜலம் வந்தபோது, வாஸ்தவத்தில் அந்த சுபநேரம் தப்பி, அடுத்த லக்னம் வந்து விட்டது!அது கெட்ட லக்னம். அந்த லக்னத்தில் விவாஹமானதால் லீலாவதி ஜாதகப்படியே ரொம்பவும் பிஞ்சு வயஸில் பதியை இழந்து விட்டாள்!

முத்து விழுந்ததை அந்தக் குழந்தை உள்பட ஒருத்தரும் முதலில் கவனிக்காதலால் இத்தனை பெரிய விபரீதம் நடந்துவிட்டது. அப்புறம் விஷயம் தெரிய வந்தபோது விதியை யாரும் மாற்ற முடியாது என்று தெரிந்து கொண்டார்கள்."

- ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

இதைத்தான் ரஜினி ஸ்டைல்ல சொல்லுவாங்களோ? "அவன் குடுக்க நினைக்கிறதை யாராலும் தடுக்க முடியாது, அவன் தடுக்க நினைக்கிறதை யாராலும் குடுக்க முடியாது"!! இதெப்டி இருக்கு?



Sunday, May 11, 2014

ஆட்டோக்காரர்களும் அடாவடி வசூலும்!



மக்கள் மத்தியில் தெனாவட்டாகத்திரியும் வழிபறி கொள்ளையர்களாக வலம் வருகிறார்கள் இந்த ஆட்டோக்காரர்கள். இந்த கொடூர கொள்ளையர்களிடம் நாமே போய் கொள்ளை கொடுக்க வேண்டி இருப்பது தமிழர்களின் தலை விதி. தமிழக மக்களுக்க்கு மட்டுமே இந்த தலைவிதி. இந்தியாவில் வேறெங்கும் இப்படிப்பட்ட மோசமான வழிபறி நடப்பதில்லை. அத்தியாவசிய மற்றும் அவசிய போக்குவரத்து சாதனமான ஆட்டோக்கள் பெரும்பாலும் போலீஸ்காரர்கள் கையிலும் லோக்கல் ரவுடிகள் கையிலும் தான் உள்ளது என பத்திரிக்கைகள் எழுதுகின்றன. இவர்கள் எப்படி அரசு மீட்டர் சட்டத்தை மதிப்பார்கள். 

ஆட்டோ ஓட்டுனர்கள் என்ற பெயரில் இயங்கும் இந்த அயோக்கிய கொள்ளைக்காரர்களுக்கு உழைத்துச் சோறு திண்ண வேண்டும் என்கிற எண்ணமே பெரும்பாலும் இருப்பதில்லை. ஆனால் பாடு பட்டு உழைத்துத் திண்பவர்கள் வயிற்றில் அடித்துப் பிடுங்கித்திண்பதற்கு காக்கிச் சாட்டை போட்டுக் கொண்டு ஆட்டோவில் வலம் வருகிறார்கள். ஆட்டோ ஸ்டான்ட்டில் உட்கார்ந்து கொன்டு வெட்டி அரட்டை அடித்து நேரம் போக்கினாலும் போக்குவார்கள் ஆனால் ஞாயமான ரேட்டுக்கு ஆட்டோ ஓட்ட வரமாட்டார்கள். அரசு மீட்டர் திருத்தி அதற்கான சட்டத்தையும் அமல் படுத்தினால் கூட அதனை எப்படியெல்லாம் மீறுவது என்பதிலேயே குறியாய் இருக்கிறார்கள் இந்த கேடுகெட்ட வழிபறி கொள்ளையர்கள். 

இந்த கொள்ளையர்கள் மீட்டர் ரேட்டிலிருந்து தப்பிப்பது பல ரகம். மீட்டர் போடு என்று சொன்னால் ஆட்டோ வராது என்று விருட்டெனச் சென்று விடுவார்கள். சிலர் 'எவ்வளவு தருவீங்க?" என தெனாவட்டாகக் கேட்பார்கள். நாம் மீட்டர் படி எவ்வளவு வருமோ அதைக் கேட்டால் ஒரு வேளை கோபித்துக் கொள்வானோ எனப்பயந்து இருமடங்காக நாமே ஒரு தொகையைச் சொன்னால் 'ம்ச்' என்று கூறிவிட்டு திரும்பிப் பார்க்காமல் போய்விடுவார்கள் சிலர். 

சில ஆட்டோக்காரர்கள் 'மீட்டர் போடுறேன், மேல 100 ரூபாய் தரணும்" என்று மிரட்டுவர். அந்த மிரட்டலுக்கு பயந்து ஆட்டோவில் ஏறினால் சரி, இல்லையென்றால் அடுத்தடுத்த ஆட்டோக்கள் வேண்டுமென்றே அதிகமாக கேட்டு ஏற்கனவே மிரட்டப்பட்டவனுக்கு மயக்கம் வர வைத்து விடுவார்கள். இதுவல்லவோ வழிபறிக்கொள்ளை. சில ஆட்டோக் கொள்ளையர்கள் வேறு மாதிரி 'சார் மீட்டர் போட்றேன், ஆனா அதுல வர்ர அமௌண்ட்ல மூணுல ஒரு பங்கு கூட குடுக்கணும்' என்பார்கள். புரியலியே என்றா' அதான்சார், 100 ரூபா மீட்டர்ல வந்தா 130 தரணும். இப்போ 300 ரூபா வந்தா 100 ரூபா சேத்து போட்டு 400 தரனும் என்பார்கள். அதாவது ஏற்கனவே இவர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருந்த கட்டணத்தோடு மீட்டர் கட்டணத்தை சமன் செய்கிறார்களாம். எப்படி பர்ஸன்டேஜ் எல்லாம் பேசுது பாரு இந்த திருட்டுக் கூட்டம் என மனதுக்குள் திட்டிக் கொண்டேவேற ஆளைப் பார்க்க வேண்டி இருக்கும்.

இத்தனைக்கும் மீட்டர் கட்டணத்துக்கும் இவர்களது வழிபறி கட்டணத்திற்கும் இமாலய வித்தியாசம் இருக்கிறது. உதாரனமாக சென்னை கோயம்பேடிலிருந்து எக்மோர் ரயில்வே ஸ்டேஷன் வரை அதிக பட்சம் 10 முதல் 12 கிலோமீட்டர் தான் இருக்கும். மீட்டர் போட்டால் 93 ரூபாய் வருகிறது. அதுவே ஆட்டோக்காரர்கள் வழிபறி செய்தால் 250 முதல் 300 வரை கேட்ட்டுப் பிடுங்கிக் கொள்வதுண்டு. 

ஞாயமான லாபத்திற்கு வண்டி ஓட்டுவதற்கு வலிக்கும் இவர்கள் வக்கனையாகவும் நக்கலாகவும் பலவாறு பயணிகளிடம் பேசுவதுன்டு. ஞாயமாக வசூலிக்க வேண்டிய தொகைக்கு 3 மடங்கு வாங்காமல் இவர்களுக்கு தூக்கம் வராது. அதாவது வழிபறி செய்யாமல் வாழமுடியாத கூட்டம் இந்த ஆட்டோ ஓட்டுனர் கூட்டம். அது தமிழகத்தில் மட்டும் தான்.

இப்போது இவர்கள் இன்னும் பழி வாங்கும் நோக்கத்தோடு கூட்டாக வேறு செயல்படுகிறார்கள். ஒரு ஆட்டோ காரர் நிராகரித்தால் அடுத்தடுத்த ஆடோக்காரர் வேண்டுமென்றே வலிய வந்து கூப்பிட்டு அதிக ரேட் சொல்லி கிரங்கடிக்கச் செய்து எரிச்சல் மூட்டி சண்டை வளர்த்து வேடிக்கை பார்க்கிறார்கள். பொது மக்களை மனோரீதியாக இவர்கள் கொடுமைக்கு உள்ளாக்குகிறார்கள் என்பதே நிஜம்.

இதனை எல்லாம் பார்த்துக் கொன்டு தமிழக அரசாங்கம் தூங்குகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா தைரியமாக திட்டங்களை அமல்படுத்தும் பெண்மணி, அவங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு என்பதெல்லாம் பழங்கதை. ஆட்டோ ஓட்டுனர்களை மீட்டர் படி வாங்கி ஓட்டச்செய்யும் கண்டிப்பு கூட இல்லாத நிலையில் இருக்கிறார். மாறாக ஆட்டோ ஓட்டுனர்கள் இவர் அமல் படுத்திய சட்டத்தால் கடுப்படைந்து மக்களை இன்னும் அதிகமாக வதைக்கிறார்கள் என்பதே உண்மை. தமிழக முதல்வர் உண்மையில் இந்த ஆட்சியில் ஒரு புரட்சி செய்து மக்களிடம் பெயர் வாங்க முடியும் என்றால் இந்த ஆட்டோக்காரர்களை குறைந்த பட்சம் இவர் ஆளும் காலம் வரைக்குமாவது மீட்டர் கட்டணம் வாங்கிக்கொள்ளும் படி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இந்த குறைந்த பட்ச நடவடிக்கையை கூட உறுதியாக எடுக்க முடியவில்லை என்றால் இவரை தைரியமான பெண்மணி நல்லாட்சி கொடுப்பார் என நம்பி ஓட்டுப் போட்டவர்களுக் கெல்லாம் இவர் செய்யும் துரோகமாகவே அது அமையும். இனி ஒருக்காலும் இந்த கையாலாகாத முதல்வரை தமிழக மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என நம்புவோமாக.

கொஞ்சம் உழைத்துச் சாப்பிடுங்கள் ஆட்டோக்காரர்களே!