Monday, December 28, 2009

சுவாமி விவேகானந்தரும் சீடர்களும்!


சுவாமி விவேகானந்தரும் சீடர்களும் உரையாடிக்கொண்டிருந்தார்கள்.

சீடர்: 'சுவாமி, நானே பிரம்மம் என்றால் நான் ஏன் அதை எப்போதும் உணர்வதில்லை?"

சுவாமி விவேகானந்தர் "உணர்வு நிலையில் அதை அடைய வேண்டுமானால் ஒரு கருவி தேவை. மனமே அந்தக் கருவி. ஆனால் அது ஜடப்பொருள். பின்னால் இருக்கும் ஆன்மாவின் உணர்வினால் அதுவும் உணர்வுடையது போல் தோன்றுகிறது. அதனால் தான் பஞ்சதசியின் ஆசிரியர் "சிச்சாயாவேசத: சக்திச் சேதனேவ விபாதிஸா'- அதாவது உணர்வுப் பொருளான ஆன்மாவின் நிழல் அல்லது பிரதிபலிப்பால் தான் சக்தி அறிவுள்ளது போல் தோன்றுகிறது' என்று கூறுகிறார்.

அது போல் நம் மனமும் உணர்வுடையது போல் காட்சி அளிக்கிறது. ஆகவே உணர்வின் சாரமாக இருக்கும் ஆன்மாவை மனத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியாது என்பது உறுதி. ஆன்மாவை அறிய நீ மனத்திற்கு அப்பால் செல்ல வேண்டும்.

மனத்தைக் கடந்து வேறு எந்த ஒரு கருவியும் இல்லை. ஆன்மா மட்டுமே இருக்கிறது. அதாவது அங்கே எதை அறிவாயோ அதுவே கருவியின் இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. அறிபவன், அறிவு, அறியும் கருவி எல்லாம் ஒன்றாகி விடுகின்றன. அதனால் தான் வேதங்கள், 'அறிபவனை எதனால் அறிவது?' என்று கேட்கின்றன.

உண்மை என்னவென்றால் உணர்வு நிலைக்கு அப்பால் ஒரு நிலை உள்ளது. அங்கு அறிபவன், அறிவு, அறியும் கருவி என்று எதுவும் இல்லை. மனம் ஒடுங்கும்போது அந்த நிலை உணரப்படுகிறது. 'உணரப்படுகிறது' என்று தான் நான் சொல்கிறேன். ஏனென்றால் அந்த நிலையை உணர்த்த வேறு வார்த்தைகள் இல்லை. அனுபவமே தீர்வு.

மேலும் உணர்வுகள் அனுபவிக்கும் பயத்தைப் பற்றி விவேகனந்தர் இப்படிச் சொல்கிறார்.

இன்பத்தில் இருப்பது நோயின் பயம்
உடலில் இருப்பது சாவின் பயம்
உயர் பிறப்பில் சாதி இழத்தலில் பயம்
பணத்தில் இருப்பது கொடுங்கோலின் பயம்
பலத்தில் இருப்பது பகைவர் பயம்
மதிப்பில் அதை இழத்தலின் பயம்
அழகில் இருப்பது மூப்பின் பயம்
குணத்தில் இருப்பது வசையின் பயம்
வாழ்க்கையில் இருப்பது எல்லாம் பயம்
துறவில் தானே பயமே இல்லை!

- சுமாவி விவேகானந்தர்.

சரி நாம் எதற்கெல்லாம் பயப்படுகிறோம்? லிஸ்ட் போட்டு பார்த்தால் வெல்ல வேண்டிய பயங்கள் வெளிப்படுமோ?

போட்டு பாப்போம்!

Sunday, December 27, 2009

விக்கிரமாதித்தன் கதைகள் - 11


மணமுடித்த பெண்ணோடு வாழ்வதா அல்லது துர்காதேவிக்கு கொடுத்த வாக்குப் படி தன் தலையை காணிக்கையாக்கி சாவதா என்ற குழப்பத்தில் ஆழ்ந்தான் வஜ்ரவீரன்.

அன்று பௌர்ணமி. வஜ்ரவீரன் ஒரு முடிவெடுத்தான்...

துர்காதேவியிடம் கொடுத்த வாக்கை காப்பாற்ற துனிந்தான். ஆனால் தன் நண்பனிடத்திலும் மனைவி இடத்திலும் இது பற்றி எதுவும் சொல்லிக் கொள்ளாமல் இருவரையும் தன்னுடன் கோவிலுக்கு வருமாறு அழைத்தான்.

மூவரும் சேர்ந்து துர்க்காதேவி கோவிலுக்குச் சென்றனர். வஜ்ரவீரன் இருவரையும் கோவில் வாசலில் இருக்கச் செய்து தான் மட்டும் கோவிலுக்குள் சென்று கதவை சார்த்திக் கொண்டான்.

அவன் துர்காதேவியிடம் "அண்ணையே உன் மீது பேரண்பு கொண்டதால் உனக்கு அளித்த வாக்கு படி என் தலையை உனக்கு காணிக்கையாக்குகிறேன். இனி என் மனைவியை நீ தான் காக்க வேண்டும்" என்று சொல்லி தன் தலையை வெட்டி அம்மனின் காலடியில் இட்டு மாண்டான்.

வஜ்ரவீரனின் மனைவியும் நண்பனும் வெளியே காத்திருந்தனர். உள்ளே போய் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் நண்பன் ருத்ரராஜன் கோவிலுக்குள் சென்று பார்த்தான். அங்கே அவன் கண்ட காட்சி பேரதிர்ச்சியாய் இருந்தது.

நண்பன் தன் தலையை துண்டித்து இறந்து போய் இருந்தான். இந்த காட்சியைக் கண்டு நிலை குலைந்து போன நண்பன் எப்படி வெளியே இருக்கும் அவன் மனைவியிடம் சொல்வேன் என்றும், அவள் என்னை தவறாக நினைத்தால் என்ன செய்வது என்றும் பெரிதும் வருந்தினான்.

தன் உயிருக்குயிரான நண்பனின் இந்த நிலையை பார்த்துவிட்டு நான் மட்டும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்று தீர்மானித்த ருத்ரராஜன் தானும் தன் தலையை துர்க்காதேவிக்கு
காணிக்கையாக்கி மாண்டான்.

தன் கணவனும் அவர் நண்பனும் கோவிலுக்குள் சென்று வெகு நேரமாகியும் வெளியே
வராததால் வஜ்ரவீரனின் மனைவி கோவிலுக்குள் சென்று பார்த்தால். அங்கே இருவரும் தலை துண்டிக்கப்பட்டு கிடந்த காட்சி பார்த்து அழத்துவங்கினாள்.

அவள் துர்கையிடம் முறையிட்டாள் "என் கணவன் இல்லாத வாழ்க்கை எனக்கு எதற்கு, அதனால் என் தலையையும் நீயே எடுத்துக்கொள்" என்று சொல்லி தனது தலையை துண்டிக்க முற்பட்டாள்.

அப்போது அங்கே ஒரு பேரொளி தோன்றியது. துர்க்காதேவி அவள் முன் தோன்றினாள். "பெண்ணே! அவசரப்படாதே! நில். என் பக்தன் வஜ்ரவீரனின் பக்தி கண்டு நான் மகிழ்ந்தேன். ஒருவருக்காக ஒருவர் தியாகம் செய்யத் துணியும் உங்களை கண்டு பூரித்தேன்! பக்தர்களை வாழவைப்பதே என் வேலை உங்கள் தலைகளை காணிக்கை வாங்குவது அல்ல. எனவே நான் அவர்களுக்கு
உயிர் கொடுக்கிறேன். பெண்ணே! இவர்கள் இருவரது தலையையும் அவர்கள் உடலோடு பொருத்து. அடுத்த வினாடி அவர்கள் உயிர் பெற்று எழுவார்கள்" என்று கூறி மறைந்தாள் துர்க்காதேவி.

அப்பெண்ணும் இறந்தவர்களின் தலைகளை ஒன்றாகப் பொருத்தினாள். இருவரும் உடனே உயிர் பெற்று எழுந்தனர். அப்போது தான் அவள் செய்த தவறு புரிந்தது. பதற்றத்தில் தன் கணவனான வஜ்ரவீரனின் தலையை ருத்ரராஜனின் உடலிலும், ருத்ரராஜனின் தலையை வஜ்ரவீரனின் உடலிலும் பொருத்தி விட்டாள்.

இதுவரை கதை சொல்லி வந்த வேதாளம் கதையை நிறுத்தியது. அது விக்கிரமாதித்தனைப் பார்த்து கேட்டது "நீதியில் சிறந்த விக்ரமாதித்தா! எங்கே சொல், இந்தப் பெண் இப்போது யாரை கணவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்?" என்றது.

"கணவனின் தலை எந்த உடலில் இருக்கிறதோ அந்த உடலைத் தான் அந்த பெண் தன் கணவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும். தலையே பிரதானம். ஏனெனில் தலை தான் ஒருவரது அடையாளத்திற்கும், எண்ணத்திற்கும் பிரதானமானது." என்றான் விக்கிரமாதித்தன்.

இதைக் கேட்ட வேதாளம் "சரியாகச் சொன்னாய் விக்ரமாதித்தா! ஆனால் நீ வாய் திறந்து பேசியபடியால் நான் செல்கிறேன்" என்று கூறி மீண்டும் விக்ரமாதித்தன் பிடியிலிருந்து பறந்து சென்றது.

_________________________

பயப்படாதீங்க. சும்மா வ்ளாட்டுக்கு!


மேற்கண்ட படத்தை பற்றி சிறப்பாக பின்னூட்டம் இடுபவர்களுக்கு, அதே படம் இலவசமாக இமெயில் செய்யப்படும்.

Friday, December 25, 2009

மரணத்திற்கு அப்பால் - 2


நசிகேதன் பற்றியும் மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது என்பது பற்றியும் யோசித்துக் கொண்டே ஒரு வழியாக பயணத்தில் நானும் கண்ணசந்தேன். சிறிது நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள் குருசாமி எழுப்பினார். தம்பி சாமி, "போய் குளிச்சிட்டு வாங்க கியூல நிக்கனும்" என்றார்.

எங்கே இருக்கிறோம் என்று கொஞ்சம் சுற்றிப் பார்த்தால் குருசாமி குருவாயூர் கூட்டத்தில் குளிக்கச் சொல்கிறார் என்பது தாமதமாகத்தான் புரிந்தது.

"என்னது குளிக்கிறதா?", கைக்கடிகாரத்தை கண்ணைத்துடைத்துக் கொண்டு பார்த்தேன். கடிகார முட்கள் இரவு பண்ணிரெண்டை படுத்துக்கொண்டே காட்டியது ஒன்றன் மீதொன்றாய். "இந்த நேரத்தில் குளிக்கவா அதுவும் இந்த குளிரிலா?" யோசிக்க நேரமில்லை. எல்லோரும் குளித்து குருவாயூர் கம்பிவரிசையில் போய் நின்றோம்.

இரவு மணி ஒன்று. அர்த்த ராத்திரியும் நன்பகல் போலவே வெளிச்சமும் வியாபாரமுமாக இருந்தது குருவாயூர் கோவில் வாசல். அந்த இரவில் கூட நாங்கள் ஐந்தாவது கம்பி வரிசையில் தான் நின்று கொண்டிருந்தோம். "

என்ன சாமி, மணி ஒன்னாகுது, எப்ப கோவில் திறப்பாங்க?" என்றேன். மூன்று என்று விரலால் நாமம் சாத்தினார். தூக்கமா தலை சுற்றலா என புரியாமல் தரையில் அப்படியே உட்கார்ந்து கொண்டேன். குருசாமியோ "என்னப்பா இன்னும் ரெண்டு மணி நேரம் தான், இதுக்குள்ள அசந்துட்டியே" என்று அருகில் உட்கார்ந்தார்.

பின்ன இல்லையா, ஒரே இடத்தில் இரண்டு மணிநேரம் சும்மா நிற்பதென்றால் சும்மாவா!

சரி குருசாமியிடம் நேற்று பாதியில் நிறுத்திய பேச்சை தொடங்குவோம் என்று என் சந்தேகத்தை கேட்கத் துவங்கினேன்!

"குருசாமி! நசிகேதன், உபநிஷத்துன்னு ஏதேதோ சொன்னீங்களே! அதக் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்" என்றேன்.

என் ஆர்வத்தைப் பார்த்து அவரே அழகாக விளக்கத்துவங்கினார்.

"தம்பி சாமி, மரணத்திற்கு அப்பால் என்ன நடக்கிறது அப்படீன்னு நசிகேதன் எமதர்மன் கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிட்டான். அதுக்கு உபநிஷத்துன்னு பேரு. அதுக்கு முன்னாடி உபநிஷத்துன்னா என்னன்னு சொல்லிடறேன்."

“உபநிஷத்” என்ற சொல்லுக்கு அருகில் அமர்தல் என்று பொருள். குருவும் சீடனுமாக அருகமர்ந்து ஞானத் தேடல்களை முன்னெடுத்துச் சென்ற வேத ரிஷிகளின் அனுபவங்களிலிருந்து வெளிப்பட்ட நூல்களே உபநிஷதங்கள்ன்னு சொல்வாங்க. பின்னர் இவை தொகுக்கப் பட்டு ஞான காண்டம் என்று வழங்கும் வேதப் பிரிவாக ஆயின.

உபநிஷதங்கள் மொத்தம் 108 என்று சம்பிரதாயமாக அறியப்பட்டாலும், வேதாந்த தத்துவத்தில் “முக்கிய உபநிஷதங்கள்” என்று அறியப்படுபவை 10. இவற்றில் 8 உபநிஷதங்கள் ரொம்பவும் முக்கியமானவை. அவை இந்த வரிசையில் வெளிவந்துள்ளன.

ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்)
கேன உபநிஷதம் (எல்லாம் யாரால்?)
கட உபநிஷதம் (மரணத்திற்குப் பின்னால்)
ப்ரச்ன உபநிஷதம் (அறிவைத் தேடி)
முண்டக உபநிஷதம் (நிழலும் நிஜமும்)
மாண்டூக்ய உபநிஷதம் (ஒன்றென்றிரு)
ஐதரேய உபநிஷதம் (மிஞ்சும் அதிசயம்)
தைத்திரீய உபநிஷதம் (வாழ்க்கையை வாழுங்கள்)

இப்படி எட்டு உபநிஷதங்கள் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததுன்னு பெரியவங்க சொல்றாங்க.

"இதுல நசிகேதஸ் எந்த உபநிஷத்துல வர்ராரு?"

"இரு சொல்றேன்! நசிகேதஸ் பத்தி 'கட உபநிஷதத்துல' வருது. ஒவ்வொரு உபநிஷத்தும் ஒவ்வொரு கோனத்துல ஆத்மா பரமாத்மா பத்தி சொல்வதாக வருகிறது. இறப்பிற்கு பின்னால் நமக்கு என்ன நடக்கும் என்று தெரிந்து கொண்டால் அதற்கு தகுந்த மாதிரி தற்கால வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்ற வகையில் இவை ஒரு வழிகாட்டியாகவே இருக்கிறது.

உதாரணமாக ரிடையர்மென்ட்க்கு அப்பறம் நம்ம வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறதுன்னு இப்ப நினைச்சிப் பாத்தா ரொம்ப பயமா இருக்கும். அப்பறம் காசுக்கு என்ன பண்ணுவோம் என்று மனதில் ஒரு சிந்தனை உண்டாகும். அப்படி ஒரு காலம் வரும் போது அதை எப்படி சமாளிப்பது என்று நினைத்து இப்பொழுதே பணம் சேர்க்கத் துவங்குவோம். நிலத்தில் முதலீடு செய்வோம். தங்கம் வாங்கி வைப்போம். வங்கியில் நிலையான முதலீடுகள் இடுவோம். அவற்றின் மதிப்பு பின்னாட்களில் அதிகரிக்கும் போது அதை வைத்து நமது ரிட்டையர்மென்ட் வாழ்க்கையை சமாளிப்போம்.

ஆம். நம்முடைய பிறப்பும் இந்த வாழ்க்கையும் ஒரு இடைக்கால நிகழ்வுதான். எப்படி நாம் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேருவதற்க்கு முன்னும் நமக்கு வாழ்க்கை இருந்ததோ, எப்படி நாம் ரிட்டையர் ஆன பின்பும் வாழப்போகிறோமோ, அதே போல் தான் பிறப்பும் இறப்பும்.

நாம் பிறப்பிற்கு முன்னாலும் வாழ்ந்துகொண்டிருந்தோம். இறப்பிற்கு பின்னாலும் வாழப்போகிறோம். அதுவே உண்மை. இந்த இடைப்பட்ட காலத்தில் நாம் செய்யும் நல்ல காரியங்களும் சேர்த்து வைக்கும் புண்ணிய பலன்களும் தான் நாம் இறந்ததற்குப் பின்னால் என்னவாகப் போகிறோம் என்பதை தீர்மானிக்கப்போகிறது.

அதாவது நம் உடலோடு இருக்கும் போதும் உடல் நீங்கி போனாலும் நாம் வாழ்கிறோம். நமது உடல் நாம் அல்ல. நாம் எதை எல்லாம் நான் என்று உணர்கிறோமோ அது நாம் அல்ல. எனது அழகு , எனது உடல், எனது நிறம், எனது உருவம் என்று எவற்றையெல்லாம் நாம் என்று நம்மைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறோமோ, அது நாம் அல்ல.

உண்மையில் நமக்கு உருவம் கிடையாது. மகிழ்ச்சி, துக்கம், சிரிப்பு, அழுகை, காதல், காமம், ஆசை, பாசம், கோபம், என்று உண்மையில் என்னவெல்லாம் நாம் உணர்ச்சிகளாக உணர்கிறோமோ அதுவெல்லாம் நமக்குச் சொந்தமானது அல்ல. இவை நமக்குரியவை அல்ல.


அப்படியென்றால் அத்தகைய நாம் யார்? நமது வடிவம் என்ன? நமது உணர்ச்சிகள் என்ன? நமது நிஜமான இருப்பிடம் என்ன? நாம் எங்கிருந்து வந்தோம்? எங்கே போகிறோம்?

இந்த வினாக்களையெல்லாம் புரிந்து கொள்ள நாம் அறிய வேண்டிய ஒரே மூலப் பொருள் "ஆத்மா"

ஆம் நாம் தான் அது. அது தான் நாம். அதன் வடிவம் என்னவோ அது தான் நமது நிரந்தர வடிவம். அதன் உணர்வு என்னவோ அதுதான் நமது நிரந்தர உணர்வு. அதன் நிரந்தர வசிப்பிடம் எதுவோ அங்கே செல்ல வேண்டி முயல்வது தான் நம்முடைய நிஜமான ஞானத்தின் அடித்தளம்.

அதைப்பற்றித்தான் இந்த உபநிஷத்துக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் எடுத்தியம்புகின்றன.

அதில் ஒன்று தான் நசிகேதன் பற்றிய கட உபநிஷத்து.

இவ்வளவையும் குருசாமி சொல்லி முடிக்க மணியைப் பார்த்தேன்! கோவில் கதவு திறக்க, குருவாயூரப்பனை தரிசிக்க இன்னும் நேரம் இருந்தது. எல்லோரும் காத்திருந்தோம் கதவு திறக்கும் நேரம் பார்த்து.

காத்திருப்போம்...


இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் பகுத்தறிவும் ஆகும்.



மரணத்திற்கு அப்பால் - 3

Saturday, December 19, 2009

மனத்தினால் நன்மையையே நினைப்போம்!


நாம் இப்போது நான்கு விதங்களில் பாபம் செய்கிறோம். உடம்பால் செய்யும் கெட்ட காரியம், வாயால் புரளிப் பேசுகிறோம், மனத்தினால் கெட்ட நினைவுகள்
கொள்கிறோம், பணத்தினால் செய்கிற பாபத்தைச் சொல்லவே வேண்டாம்.

எந்த நான்கால் பாபம் செய்தோமோ, அந்த நான்காலுமே புண்ணியம் செய்யப்
பழகிக்கொள்ள வேண்டும்.

சம்பாதிப்பதற்கே பொழுதெல்லாம் போய் விடுகிறது, இதற்கெல்லாம் நேரம் ஏது
என்பீர்கள். சம்பாதிப்பது குடும்பஸ்தர்களுக்கு அவசியம் தான். ஆனால்
யோசித்துப் பார்த்தால் அதற்கே பொழுது முழுதும் போய் விடவில்லையே!

வீண் பேச்சு, பிறரைக் கேலி செய்தல், வேடிக்கை பார்த்தல், நியூஸ் பேப்பர்
விமர்சனம் இவற்றில் எவ்வளவு நேரம் வீணாகிறது.

அந்த நேரத்தையெல்லாம் இறைவனைப் பற்றிய சிந்தனையில் செலவழிக்கலாமே! தனியாக நேரம் ஒதுக்காவிட்டாலும் பஸ்ஸிலோ ரயிலிலோ பாதுகாப்பான முறையில் அமர்ந்து பிரயாணிக்கும் போது இறைவனைப் இறைவனை தியானித்துச் செல்லலாமே!

ஏனென்றால் நாம் சம்பாதிக்கும் காசில் ஒரு பைசா கூட பிற்பாடு உடன் வராது.
மறு உலகத்திற்கான செலாவனி இறைவனின் நாமமும் இறைசிந்தனை மட்டும் தான்.

மனசு பகவானின் இடம். அதை குப்பைத் தொட்டியாக்கி வைத்திருக்கிறோம்.
அதை சுத்தப்படுத்தி மெழுகி, பகவானை அதில் அமரவைத்து நாமும் அமைதியாக
அமைந்து விட வேண்டும்.

உலகமே மூழ்கிப்போனாலும் தினமும் ஐந்து நிமிடமாவது தியானம் செய்ய வேண்டும். ஏனெனில் நிஜமாகவே உலகம் மூழ்கும் போதும் நமக்குக் கைகொடுப்பது இதுவே ஆகும்.

- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

ஆனால் நம்மைப் போன்ற குடும்பஸ்தர்களுக்கு மனதை கட்டுப்படுத்த எந்த
அளவுக்கு முடியும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஒரு ஜென் கதை
தான் ஞாபகத்திற்கு வந்தது.

ஒரு ஜென் குடிலில் தற்போது சேர்ந்த 4 சீடர்கள் இருந்தனர். நால்வரும் இணைந்து ஒரு வாரத்துக்கு மௌன விரதம் இருப்பது என முடிவு செய்தனர். நல்லநாள் பார்த்து விரதத்தை ஆரம்பித்தனர்.

மாலையாயிற்று. விளக்கில் எண்ணை தீரும் போல் இருந்தது. விளக்கு அணையும் நேரத்தில் முதல் சீடர் வாய் திறந்து, "இந்த விளக்கை யாரும் சரி செய்யக் கூடாதா?" என்று தன் விரதத்தை முடித்துக் கொண்டார்.

இரண்டாமவர், "நாம் யாரும் பேசக் கூடாது என்பதை மறந்து விட்டாயா?" என்று கடிந்து கொண்டார்.

மூன்றாமவர், "நீங்கள் இருவரும் முட்டாள்கள். விரதத்தைப் பாழடித்துவிட்டீர்களே" என்று தனது விரதத்தை முடித்தார்.

நான்காமவர் முத்தாய்ப்பாக, "நான் தான் கடைசி வரை பேசவில்லை பார்த்தீர்களா!" என்று தனது கடுமையான விரதத்தினை முடித்துக் கொண்டார்.

நான் இப்போதைக்கு இந்த அளவிற்குத் தான். நீங்கள் எப்படி?

விக்கிரமாதித்தன் கதைகள் - 10


தலையும் உடலும்

விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்ட
வேதாளத்தைப் பிடிக்கச் சென்று, பெரும் போராட்டத்திற்கு பிறகு வசமாகப்
பிடித்துக் கொண்டான். தோளில் வேதாளத்தை சுமந்தபடி குகையை விட்டு
நடக்கத் தொடங்கினான்.

அவனது பராக்கிரமத்தை பார்த்து வியந்தாலும் வேதாளம் தான் தப்பித்து
கொள்வதற்கு வழி தேடிய வண்ணமே இருந்தது. அதனால் வேதாளம் மீண்டும்
ஒரு கதையை விக்கிரமாதித்தனுக்குச் சொல்லத்துவங்கியது.

விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்!

முன்னொரு காலத்தில் பனாரஸ் நாட்டை சதுர்சன் என்ற அரசன் ஆண்டு
வந்தான். அவனுக்கு நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது.

அரன்மனையில் இருந்த துர்கா தேவியிடம் பல நாட்கள் இக்குறை நீங்க வேண்டி
பூஜை செய்து வந்தான். அந்த பூஜா பலனால் அரசனுக்கு ஒரு மகன் பிறந்தான்.
அவனுக்கு வஜ்ரவீரன் என்று பெயரிட்டான்.

வஜ்ரவீரன் வளர்ந்து பெரியவன் ஆனான். அவனுக்கு அரசவையின் சலவைத்
தொழிலாளியான ருத்ரராஜன் நண்பனாக இருந்தான்.

ஒரு முறை நண்பன் வீட்டிற்குச் சென்ற வஜ்ரவீரன் அவன் வீட்டருகே ஒரு
அழகிய பெண்ணை பார்த்தான். அந்த பெண் மீது மோகம் கொண்டு அவளை
மனமுடிக்க விரும்பினான். இதை தன் நண்பன் ருத்ரராஜனிடம் தெரிவித்தான்.

ஆனால் ருத்ரராஜனோ அந்தப் பெண்ணை ஒரு தலையாகக் காதலித்து வந்தான்.
இந்நிலையில் நாட்டின் யுவராஜனும் தனது நண்பனுமான வஜ்ரவீரன்
அப்பெண்ணை மணக்க விரும்பியதை அறிந்து வருந்தினான். ஆனால்
நண்பனுக்காக தன் ஒருதலைக் காதலை விட்டுக்கொடுக்க முடிவு செய்தான்.
அதனால் தனது விருப்பத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நண்பனுக்காக
விட்டுக் கொடுத்தான்.

ஆனால் வஜ்ரவீரனுக்கோ தனது தந்தை தன் விருப்பத்தை நிறைவேற்றுவாரா
என்று கவலை உண்டானது. அவன் துர்காதேவியிடம் சென்று "அம்மா துர்க்கா!
என் தந்தை நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்து வைத்தால், வரும்
பௌர்ணமி தினத்தில் என் தலையை உனக்குக் காணிக்கையாக்குகிறேன்" என்று
வேண்டினான்.

தனது நண்பனின் மனக்கவலையை உணர்ந்து கொண்ட ருத்ரராஜன் அவனைத்
தேற்றினான். நண்பனுக்காக தானே அரசனிடம் சென்று விஷயத்தை கூறலானான். "அரசே! தங்கள் மகனும் எனது நன்பனுமான வஜ்ரவீரனுக்கு
சலவைத் தொழில் புரியும் ஒரு பெண்ணின் மீது விருப்பம் ஏற்பட்டிருக்கிறது.
அவன் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான். தாங்கள்
அனுமதிப்பீரா என்ற தயக்கத்தில் இருக்கிறான். அதை தங்களிடம் தெரிவித்துப்
போகவே வந்தேன்" என்றான்.

மன்னனோ "என் மகனின் மகிழ்ச்சி தான் எனக்கு முக்கியம். அதனால் அவன்
விரும்பும் பெண்ணையே அவனுக்கு மணமுடித்து வைக்கிறேன்" என்றார்.

இதனைக் கேட்ட வஜ்ரவீரன் பெருமகிழ்ச்சி கொண்டான். பெரு விமரிசையாக
வஜ்ரவீரனுக்கும் அவன் விரும்பிய பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.

இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையைத் துவங்கினர். இந்நிலையில் பௌர்ணமி
நாள் நெருங்கியது. வஜ்ரவீரனுக்கு துர்காதேவியிடம் தன் தலையை
காணிக்கையாக கொடுப்பதாய் வாக்கு கொடுத்தது ஞாபகம் வந்தது.

இனிமையான வாழ்க்கையை விட்டு பிரியவேண்டிய கட்டாயம் வந்தது. எந்தப்
பெண்ணோடு வாழ்வதற்க்காக பிரார்தனை செய்தானோ அந்தப் பெண்ணை
உடனேயே பிரியும் நிலை அவன் பிரார்த்தனையாலேயே உண்டானது.

மணமுடித்த பெண்ணோடு வாழ்வதா அல்லது துர்காதேவிக்கு கொடுத்த வாக்குப்
படி தன் தலையை காணிக்கையாக்கி சாவதா என்ற குழப்பத்தில் ஆழ்ந்தான்.

அன்று பௌர்ணமி. வஜ்ரவீரன் ஒரு முடிவெடுத்தான்...

Friday, December 18, 2009

எண்ணங்களும் வாழ்வும்!


எண்ணத்தை ஆராய்ச்சியிலும் தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன். மகான். ஞானி.

தவறான எண்ணங்களை கவனமாக இருந்து தவிர்க்க வேண்டும். அதற்கு வழி எப்போதும்
நல்ல எண்ணங்களை நாமே விரும்பி முயன்று மனத்தில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

எண்ணம் என்பது எப்படி இயங்குகிறது. அதிலிருந்து பல்வேறு அகக்காட்சிகள் எவ்வாறு தோன்றுகின்றன என அடிக்கடி ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தால் நீங்களும் அறிஞர்களாகத் திகழலாம்.

எண்ணத்தின் வேகமும், இயல்பும், அறிந்தோர்க்கு எண்ணமே இன்பமயம். எண்ணம் அமைதி பெறும்.

எண்ணமே எக்காலத்திற்கும் வாழ்க்கையின் சிற்பி. எண்ணி எண்ணிட இனிதே பயக்கும்.

எண்ணத்தின் சக்தி இயல்பு அறிந்திடில் எண்ணம் பிறக்கும் இடமும் விளங்கும்.

எண்ணு, சொல், செய் எல்லார்க்கும் நன்மை தரும் வகையில், எண்ணும்படி செய் , செய்யும்படி எண்ணு. அதுவே உங்களுக்கும் மற்றவர்க்கும் நன்மை பயக்கும்.

உண்மையில் எதிரி உங்களுக்கு உண்டு எனில் அது உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே ஆகும்.

உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும், எண்ணும் எண்ணங்கள் எங்குமே பாயும்.

ஒரு முறை ஒரு தீய எண்ணத்தை மனதில் எண்ணி விட்டால் போதும் மறுமடியும் அத்தகைய எண்ணம் உதிக்காமல் செய்வது அத்தனை எளிதன்று. எனவே எண்ணங்களை நல்லவைகளாகவே எண்ணப்பழகுங்கள். அதுவே உங்கள் வாழ்வை செம்மைப்படுத்தும்.

- சுவாமி வேதாந்திரி மகரிஷி

Monday, December 14, 2009

பூனூல் போடுவது எதற்காக?


சொல்ல மறந்துட்டேனே! சபரிமலை பிரயானத்தின் போது நடந்த விவாதங்களைப் பற்றி நேற்று உங்களுடன் பேசிக்கொண்டிருந்தேன்! ஆன்மீக விளக்கங்களை அழகாகச் சொல்லிக்கொண்டிருந்த மூத்த சாமியிடம் தொடர்ந்து விவாதிக்கும் போது இடையே மக்களது சமூக பழக்கங்களும் நம்பிக்கைகளும் பற்றி பேச்சு எழுந்தது.

நான் கேட்டேன் "சாமீ, சில சமூகத்தார் பூனூல் போட்டுக்கறாங்களே! அது எதுக்கு? அந்த நூல்ல ஏதாவது சக்தி இருக்கா? இல்லன்னா அவங்க தான் உசந்தவங்கன்னு காமிக்கவா? இல்லன்னா பூனூல் போட்டாதான் ஒருத்தன் நல்லவனா இருக்க முடியும்ன்னு ஏதாவது இருக்கா" என்றேன்.

ரொம்ப பக்குவமுள்ள மனிதரான அவர் சலனமே இல்லாமல் விளக்கினார்.

"தம்பி எல்லாமே ஒரு மனோவியல் விஷயம் தான். ஒவ்வொரு கால கட்டத்திலேயும் மனிதர்களை செம்மைப்படுத்த, அவர்தம் உணர்ச்சிகளை பக்குவப்படுத்த ஏதாவது உபாயத்தை கடைபிடித்து வந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். பின்னால் அந்த உபாயம் நீர்த்துப் போய் காலம் மாறும் போது அவர்தம் உபாயங்களும் மாறும். அப்படி அந்த காலத்தில் நம் முன்னோர்களால் கடைபிடித்து வரப்பட்ட ஒரு மனோவியல் ரீதியான உபாயம் தான் இந்த பூனூல் அணிந்து கொள்வது. ஒரு உதாரணம் மூலம் சொல்றேன் கேளு" என்று தொடர்ந்தார்.

ஒரு யானையை குழந்தையாக இருக்கும் போது அதன் கால்களை சனல் கயிறு மூலம் கட்டி விடுகிறார்கள். அந்த கயிறு தன்னை கட்டுப்படுத்துவதாக யானை நினைத்துக் கொண்டது. அந்த கயிறு இருந்ததால் சிறிய யானை அதைத் தாண்டி வெளியேற பயப்பட்டது.

யானை வளர்ந்த பிறகும் அது அதே சனல் கயிறுக்கு கட்டுப்பட்டு அசையாமல் இருந்தது. வழிப்போக்கன் ஒருவன் யானைப் பாகனிடம் கேட்டான் ‘யானையின் பலத்திற்கு இந்த சனல் கயிறு ஒரு விஷயமா? அது ஏன் அறுத்துக் கொண்டு போகவில்லை என்று?’ கேட்க, பாகன் சொன்னான் ‘யானைக்கு சனல் கயிறு ஒரு விஷயம் இல்லை. ஆனால் சிறுவயதில் கயிறால் கட்டப்பட்ட அந்த பயம் இப்போதும் இருப்பதால் அது அசையாமல் கட்டுப்பட்டு நிற்கிறது. எல்லை மீறுவதில்லை" என்றான்

'சில சமூகத்தவர்கள் பூனூல் போடுவதும் இப்படிப்பட்ட ஒரு சனல் கயிறு மனோவைத்தியம் தான். சிறு வயதிலேயே அந்த நூல் மூலமாக அடையாளப்படுத்தி, நீ இன்னன்ன தவறுகள் செய்யக்கூடாது என்று மனதில் ஒரு கட்டுப்பாட்டை உண்டாக்கி விட்டால் வளர்ந்த பிறகும் அந்த நூல் இருக்கும் வரை அவன் தவறிழைக்க ஆழ்மனம் ஒத்துக்கொள்ளாது என்பதே காரணம்' என்றார்.

"ஓஹோ அதான் காரணமா? ஆனா சாமீ ஒரு நூல் ஒரு மனுஷனோட நல்லது கெட்டதை கட்டுப்படுத்தீரும்னா உலகத்துல உள்ள எல்லாருமே அப்படி ஒரு நூலை போட்டுக்கலாம் தானே" என்றேன்.

"நூல்ன்னு பாத்தா அது மனுஷனைக் கட்டுப்படுத்தறதில்லை. எப்படி சனல் யானையைக் கட்டுப்படுத்த முடியாதோ அப்படித்தான் உடலைச் சுற்றிய நூலும். உணர்ச்சிப் பித்து தலைக்கேறி மதம் பிடித்த யானைக்கு இரும்பு சங்கிலி கூட சனலாகிவிடும். அது போலவே உணர்ச்சிப் பெருக்கால் சுய கட்டுப்பாட்டை இழக்கும் எந்த மனிதருக்கும் பூனூல் என்ற ஒரு நூல் உடம்பில் இருப்பது எந்த கட்டுப்பாட்டையும் கொடுத்து விடாது. ஆனால் மிகச்சிறிய வயதிலிருந்தே ஒருவனது ஆழ் மனதில் நீ இந்த நூலை உடையவன் அதனால் நீ இன்னன்ன தவறுகளைச் செய்யக்கூடாது என்று திரும்ப திரும்ப சொல்லி ஆழ் மனதில் பதியவைத்தால் அதுவே பின்னாளில் நிலைக்கும் என்ற நம்பிக்கைதான்.

சின்ன வயசுல கத்துக்கற விஷயம் பசுமறத்தானி போல பதியும்னு பெரியவங்க சொல்வாங்களே, அந்த முயற்சி தான் இது. எவ்வளவு அழுத்தமாக சொல்லிக் கொடுக்கிறார்கள் என்பதை பொறுத்தே பலன் கிடைக்கும். இந்த முயற்சி பெரும்பாலும் பலன் குடுத்திருப்பதாகத்தான் பெரியவங்க சொல்றாங்க. இப்ப புரியுதா" என்றார்

"சரி சாமி! அது உண்மையிலேயே பலனைக் கொடுத்திச்சா! அப்படீன்னா எல்லாரும் அதை ஏன் ஏத்துக்கலை?" என்றேன்.

"தம்பி சாமி! இந்து மதம் எப்போதுமே எக்ஸ்பரிமண்டலாக விஷயங்களை அனுகி அதில் உயர்ந்தபட்ச உண்மை எதுவோ அதையே தனதாக்கிக்கொள்ளும் தன்மை கொண்டது. இந்த தர்மத்தில் வாழும் மனிதர்களுக்கு அந்தச் சுதந்திரமும் உண்டு.

அந்த உண்மைகளை ஏற்றுக் கொண்டு வாழ்வதற்கும் அது தனக்குத் தேவையில்லை என்று தங்களுக்கென்று தனி பாதை அமைத்துக் கொள்ளவும் நம் சமூக மனிதர்களுக்கு சுதந்திரமும் உண்டு. அப்படி சுதந்திரம் உள்ள மனிதர்கள் தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த இப்படி ஒரு நூல் தேவை இல்லை.

நாங்கள் கடவுளுக்கு கட்டுப்பட்டிருப்பதே போதும். அதுவே எங்களை செம்மைப்படுத்தும் என்று சொல்லி அப்படி ஒரு வழக்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தவர்களும் இருந்திருக்கிறார்கள்.

தனியொரு நபரின் கட்டளைக்கு கீழ்படிவது தான் மதம் என்றில்லாமல் எல்லாவற்றிலும் உயர்ந்தது எதுவோ அதை ஒவ்வொரு சமூகமும் தனது வாழும் முறையாக ஆக்கிக் கொள்ளும் உரிமை இந்து தர்மத்தில் உள்ளது. அதன் படி இந்துக்களில் சில சமூகத்தவர் ஏற்றுக் கொண்டும் சில சமூகத்தவர் இது தேவையில்லை என்றும் இருந்திருக்கிறார்கள்." என்றார்.

'அப்போ பூனூல் போட்டவங்க உசந்தவங்க, அதப் போடாதவங்க தாழ்ந்தவர்கள்ன்னு சொல்லி ஒரு பேச்சு இருக்கே, அது?" என்றேன்.

"அதெல்லாம் காலப்போக்கில் உண்டான ஜாதீய அடையாளம். ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கை முறையே அவரவர்களின் அடையாளங்களாகப் போனதால் வந்த வினை. இப்போ கோட்டு சூட்டு போட்ட வெள்ளைக்காரனும் லுங்கி கட்டின நம்மாளும் ஒன்னா ஸ்டார் ஹோட்டலுக்கு போனா கோட் போட்டவனுக் குத்தான் முதல் மரியாதை. ஏன்னா கோட் போட்டவன் உசந்தவன்னு மனசில பதிஞ்சு போச்சு. கோட் போட்டு வாழும் ஒருவனது வாழ்க்கை முறை அவனுக்கு அடையாளமாப் போனதால இந்த நிலை. அதனால கோட்டு போடறதும் லுங்கி கட்டறதும் ஒவ்வொருவரின் வாழ்க்கை முறைதானே ஒழிய அது மனிதர்களுக்கான அடையாளம் ஆகாதுன்னு மக்களுக்கு புரிய வெச்சிட்டா
இந்த அடையாள மார்கங்கள் ஒழிஞ்சு மறுபடியும் எல்லாரும் ஒரே மாதிரி வாழ ஒரு வழி பிறக்கும்.

அப்படி ஜாதி மத பேதமில்லாம எல்லோரும் ஒன்னா ஒரே இடத்தில கூடவெக்கிற வேலையத்தான் நம்ம ஐயப்பன் செஞ்சிக்கிட்டு இருக்கார். என்ன நான் சொல்றது" என்றார் சாமீ.

"அம்மாம் ஆமாம். ஜாதி பேதமில்லாமல் எல்லோரும் ஒட்டி உரசி நின்னு, அடையாளமே தெரியாத ஒருவர் கூப்பிடும் சரணத்திற்கு, ஜாதி பாக்காம மற்றவர் பதில் சரணம் சொல்வது நம்ம சபரிமலையில தானே" என்று நானும் அமோதித்தேன்.

நீங்களும் ஆமோதிதீர்களா! அப்போ சேந்து சொல்லுங்க...

சாமியே சரணம் ஐயப்பா!


இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்

Sunday, December 13, 2009

மரணத்திற்கு அப்பால் - 1


சென்ற வாரம் சபரிமலை பயணம் இனிதே நிகழ்ந்தது. என்னுடன் வந்தவர்கள் எல்லாரும் என்னை விட பெரியவர்கள். கொஞ்சம் ஆன்மீக அறிவு உள்ளவர்களாகவே இருந்தார்கள். முதல் முறையாக சீசனில் பயணித்தேன். இப்படி ஒரு மக்கள் வெள்ளத்தை, ஒரு மலையே மலை ஏறுவது போல அடர்ந்த மனிதக் கூட்டத்தைப் பார்த்து திகைத்தே போனேன்! இன்னும் ஜோதிக்கு போகவேண்டும் என்று மாலையுடன் சுற்றிக் கொண்டிருக்கும் சாமிகளைப் பார்த்தால் என் தலை சுற்றுகிறது.

இந்த பிரயாணத்தில் சபரிமலையில் நல்ல விஷயம் இரண்டு அவதானித்தேன். ஒன்று கூட்டத்தை கட்டுப்படுத்தி நிறுத்தி தடுத்து பேட்ச் பேட்ச்சாக அனுப்பினார்கள். ஒரேயடியாக உச்சியில் போய் முட்டிக்கொண்டு மூச்சுத் திணறாமல் இருக்க பாதையிலேயே தடுத்து அனுப்பியது நல்ல விஷயமாக பட்டது.

இன்னொன்று மிகவும் முக்கியமானது. சிறுநீர்கழிக்க ஆங்காங்கே பீங்கான்கள் வைத்து பக்கத்திலேயே கை கால் கழுவ குழாயும் வைத்திருந்தார்கள். தண்ணீரும் கொட்டியது. வசதியாக இருந்தது. சென்றமுறை மலையிறங்கும் போது முட்டிக்கொண்டு வந்து, பம்பா வருவதற்குள் திண்டாடிப் போனோம். கட்டனக் கழிப்பறை அங்கே தான் இருக்கிறது. போதாக்குறைக்கு வழிநெடுக துர்நாற்றம் வீசியபடியே இருந்தது. பாவம் அடக்க முடியாத மனிதர்களின் அவஸ்தை தெரிந்தது. இம்முறை அந்த துர்நாற்றம் இல்லாததும் ஒரு ஆறுதல்.

சன்னிதானத்தில் நல்ல தரிசனம். ஆனால் முட்டி மோதிக்கொள்ளும் கூட்டமும், கட்டுப்பாட்டை மீறி கம்பி தாண்டி ஓடும் மனிதர்களும் கொஞ்சம் வருத்தத்தை உண்டாக்கினார்கள். இதைப்பற்றி உடன் பயணித்த மூத்த சாமியிடம் விசாரித்தேன். ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று.

அவர் கூறினார், "நாற்பத்தோரு நாள் விரதம் இருப்பதே மனிதனின் கட்டுக்கடங்காத உணர்ச்சிகளில் இருக்கும் வேகத்தைக் குறைத்து, மனதில் அமைதியும் பக்தியும் குடிகொண்டிருக்கத்தான். இதனால் மனம் அமைதி யடையும். ஆனால் அமைதிக்கான பயிற்சியை சரியாக எடுத்துக்கொள்ளாதவர்கள் கூட்டத்தைப் பார்த்தவுடன் மிரண்டு போகிறார்கள். மனம் அவசரப் படுகிறது. பதற்றம் அடைகிறது. எல்லோருக்கும் முந்தி நானே செல்லவேண்டும் என்ற சுயநலம் பெருக்கெடுத்து ஓடத்துவங்குகிறது. ஆக நம் சாமிகளுக்கு பயிற்சியில் முதிர்ச்சி தேவை" என்றார்.

ஆனால் அப்படி நடந்து கொள்பவர்கள் அவ்வளவு கூட்டத்திலும் மிகச்சிலரே என்பது ஒரு ஆறுதல்.

விஷயத்திற்கு வருவோம், வாகனத்தில் பிரயானித்த படி மூத்த சாமியிடம் இப்படி விடாப்பிடியாக பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருந்தேன். இரவு நீண்ட நேரமாகியும் சளைக்காமல் பல விளக்கங்களை சொல்லிக்கொண்டே வந்த அவர் ஒரு கட்டத்தில் "என்னப்பா! நசிகேதஸ் போல கேட்டுக்கிடே இருக்கியே! கொஞ்சம் தூங்க விடுப்பா" என்றார் கெஞ்சாத குறையாக.

சரியென்று அமைதியடைந்தேன். ஆனால் அதென்ன நசிகேதஸ் மாதிரி. மீண்டும் அவரை உசுப்பினேன், "சாமி, நசிகேதஸ் மாதிரின்னு சொன்னீங்களே, அது யார்?"

"ஆஹா! ஆரம்பிச்சிட்டியா! தெரியாம அந்தப்பேரைச் சொல்லிட்டேம்பா! கொஞ்சம் தூங்கு, தூங்கவிடு" என்று சாய்ந்து கொண்டார்.

குறைந்த பட்சம் அது யார் என்றாவது தெரியவில்லையென்றால் எனக்குத்தூக்கம் வராதே!

"சாமி, நாம ஆன்மீக பயணம் வந்திருக்கோம், நாலு விஷயம் விவாதிச்சு தெரிஞ்சுக்கலாம்னா தூங்க சொல்றீங்களே! அந்த நசிகேதஸ் யார்ன்னாவது சொல்லுங்களேன்" என்றேன்.

"நசிகேதஸ் இருக்கானே அவன் எமதர்மனையே கேள்விமேல கேள்வி கேட்டு துளைச்செடுத்திட்டான். எமதர்மனே அவனிடம் கெஞ்சாத குறைதான்! அப்படி ஒரு பிடிவாதக்காரன்" அவனைப்பத்தி தான் சொன்னேன். போதுமா! போய் தூங்கு.

சரியென்று சாய்ந்தேன். ஆனால் அப்படி என்ன கேட்டான். ஐயோ தூக்கம் போச்சே! மறுபடியும் எழுப்பினேன், "சாமீ அப்படி எதப்பத்தி கேட்டான்னு சொல்லுங்களேன்?"

"நீ விடமாட்டியா?"

"ஊஹும், செத்தா கூட அடுத்த பிறவிலயும் வந்து கேப்பேன். அதனால் இப்பவே சொல்லுங்க?"

"அதப்பத்தி தான்பா நசிகேதஸ் எமதர்மனிடம் கேட்டான்"

"அதப்பத்தின்னா?"

"அதாவது, செத்ததுக்கப்பறம் மனிதனின் நிலை என்ன? இறப்பிற்குப் பின் என்ன நடக்கிறது? மரணத்திற்கு அப்பால் உள்ள ரகசியம் என்ன? அப்படீன்னு எமதர்மனிடம் கேட்டு தெரிஞ்சிக்கிட்டான் நசிகேதன்? நசிகேதனின் இந்தக் கேள்விகளுக்கு எமதர்மன் பதில் அளித்த அந்த விஷயம் தான், அதாவது மரணத்திற்கு அப்பால் என்ன நடக்கிறது, நமது ஆன்மா என்ன ஆகிறது என்கிற அந்த விஷயத்திற்குத்தான் உபநிஷதம்னு பேரு. ஒகெ வா! ரொம்ப டயர்டா இருக்கேன். கொஞ்சம் தூங்க விடுப்பா" என்று கூறி சாய்ந்து கொண்டார்.

நானும் சாய்ந்து கொண்டேன். ஆனால் இப்போது நானே நசிகேதனாகிவிட்டேன். எனக்கும் மரணத்திற்கு அப்பால் என்ன? என்பதைப் பற்றி அறிய ஆவலாக இருக்கிறது. இதற்கு மேல் உசுப்பினால் சாமி கோச்சுக்கும். எதுக்கும் விடியட்டும் கேட்டுத் தெரிஞ்சுப்போம்ன்னு கண்களை மூடிக்கொண்டேன். வாகனம் இருளைக் கிழித்து பயணித்துக் கொண்டிருந்தது.

தொடர்ந்து பயணிப்போம்....


மரணத்திற்கு அப்பால் - 2

Saturday, December 12, 2009

மரியாதை ராமன் கதைகள்!


கந்தன் என்பவரிடம் இரண்டு நல்முத்துக்கள் இருந்தன. அவை இரண்டும் விலை மதிப்பு உடையவை. நீண்ட நாட்களாக அவைகளை அவர் காப்பாற்றி வந்தார்.

ஒரு முறை அவர் வியாபார விஷயமாக வெளியூர் செல்ல நேரிட்டது. அந்த இரண்டு முத்துக்களையும் வீட்டில் வைத்து விட்டுச் செல்ல அஞ்சினார். தாம் இல்லாத சமயத்தில் திருடர் எவராவது வீட்டில் புகுந்து திருடிவிடக் கூடும் என்று பயந்த அவர் தம்முடைய நண்பனான கேசவனிடம் அந்த முத்துக்களை கொடுத்து வியாபார விஷயமாக வெளியூர் செல்வதாகவும் திரும்பி வந்த உடன் வாங்கிக் கொள்வதாகவும் சொல்லிச் சென்றார்.

கந்தன் சில நாள் கழித்து ஊருக்கு திரும்பி வந்து கேசவனிடம் தான் கொடுத்து வைத்திருந்த நல்முத்துக்களைத் திருப்பித் தருமாறு கேட்டார்.

ஆனால் கேசவனோ "நல்முத்துக்களா? யாரிடம் கொடுத்தாய்? கணவு ஏதாவது கண்டுவிட்டு வந்து உளறுகிறாயா?" என்று கேட்டுவிட்டான்.

தன் நண்பன் இவ்வாறு பேசுவான் என்று சற்றும் எதிர்பாராத கந்தன் மிகவும் மனம் வருந்திப்போனான். இனி இவனிடம் பேசிப் பிரயோஜனம் இல்லை என்று முடிவு செய்தவன் நேராக மரியாதை ராமனிடம் சென்று முறையிட்டான்.

வழக்கை பொறுமையாகக் கேட்டறிந்த மரியாதை ராமன் அந்த வழக்கில் இருந்த சில கஷ்டங்களை எடுத்துச் சொன்னார்.

"அய்யா, உங்கள் வழக்கில் நான் எப்படித் தீர்ப்பு வழங்க முடியும்? நீங்கள் விலையுயர்ந்த முத்துக்களைக் கேசவனிடம் கொடுத்த போது பார்த்த சாட்சிகள் எதுவும் இல்லை. அப்படி இருக்கும் போது கேசவனிடமிருந்து எப்படி விலை உயர்ந்த முத்துக்களை வாங்க முடியும்? நீங்கள் வீட்டுக்குப் போங்கள். வேறு உபாயம் ஏதாவது செய்வோம்" என்று கூறி கந்தனை வீட்டுக்கு அனுப்பி வைத்தான் மரியாதை ராமன்.

மறுநாள் ஓர் ஆள் அனுப்பிக் கேசவனைக் கூட்டி வரச்சொன்னான் மரியாதை ராமன்.

கேசவன் வந்ததும் அவனிடம் ஒரு சிறு பேழையைக் கொடுத்தார். அதற்குள் நிறைய முத்துக்கள் இருந்தன.

"என்னிடமிருந்த முத்துமாலையின் சரம் அறுந்து விட்டது. நீங்கள் முத்துக்களைக் கோர்ப்பதில் நிபுணரென்று கேள்விப்பட்டேன். இதில் 100 முத்துக்கள் உள்ளன. இதை மாலையாகக் கோர்த்து வந்து கொடுங்கள்" என்றான் மரியாதை ராமன்.

கேசவன் மரியாதை ராமன் கொடுத்த பேழையுடன் வீட்டுக்கு வந்தான். பேழையை ஒரு பெட்டியின் மேல் வைத்துவிட்டு அவசரமாகக் கொல்லைப் புறம் சென்றான்.

திரும்பி வந்து பார்த்த போது அந்தப் பேழை கீழே விழுந்திருந்தது. அப்பொழுது தான் ஒரு பூனை அறையில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தது. பெட்டிக்கு மேல் உள்ள பால் உரிக்காகப் பூனை தாவும் போது பேழை விழுந்திருக்க வேண்டுமெனக் கேசவன் நினைத்தான்.

உடனே கேழே விழுந்து சிதறிக் கிடந்த முத்துக்களை ஒன்று விடாமல் பொறுக்கி எடுத்து எண்ணினான். அதில் 98 முத்துக்களே இருந்ததைப் பார்த்து ஒரு கனம் அதிர்ந்தான் கேசவன். 'அய்யோ! நீதிபதி 100 முத்துக்கள் கொடுத்தனுப்பினாரே! அவற்றில் 2 குறைகிறதே! எங்கே போயிருக்கும்' என்று வீடெல்லாம் ஓர் இடம் பாக்கி விடாமல் தேடினான். கடைசி வரையில் 2 முத்துக்கள் கிடைக்கவேயில்லை.

கேசவனுக்கோ பயம் வந்து விட்டது. 'இப்போது நாம் 98 முத்துக்களை மட்டும் அவசரமாக கோர்த்து எடுத்துப் போய்க் கொடுத்தால் 2 முத்துக்களை நாம் திருடிக் கொண்டோமென்று நீதிபதி கடுமையான தண்டனை விதிப்பாரே! இந்தத் தண்டனையில் இருந்து தப்புவது எப்படி?' என்று நினைத்த கேசவனுக்கு கந்தனிடம் மோசடி செய்த 2 முத்துக்களின் நினைவு வந்தது.

உடனே அந்த இரண்டு முத்துக்களையும் எடுத்துச் சரத்தில் கோர்த்து 100 முத்துக்கள் கொண்ட மாலையாக ஆக்கி விட்டான் கேசவன்.

மறுநாள் கேசவன் முத்துமாலையைக் கொண்டு போய் மரியாதை ராமனிடம் கொடுத்ததும் முதல் வேலையாக மரியாதைராமன் முத்துக்களை எண்ணத் துவங்கினான்.

கேசவனோ நல்லவேளையாக 2 முத்துக்கள் நம்மிடமிருந்தது. இல்லையேல் இப்போது தண்டனை கிடைத்திருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.

முத்துக்களை எண்ணி முடித்த மரியாதை ராமன் காவலர்களைப் பார்த்து " இவனைக் கைது செய்யுங்கள்" என்றான்.

காவலர்கள் மரியாதை ராமனின் ஆணைப்படி கேசவைக் கைது செய்தார்கள்.

கேசவனோ 'நான் என்ன தவறு செய்தேன், ஏன் என்னைக் கைது செய்கிறீர்கள்' என்றான்.

"நான் உன்னிடம் கொடுத்தது 98 முத்துக்கள் தான். அப்படியிருக்க இந்த மாலையில் மேற்கொண்டு 2 முத்துக்கள் எப்படி வந்தன என்ற விவரத்தை நீ சொலாவிட்டால் உனக்கு கடுமையான தண்டனை கிடைக்கும்" என்றான் மரியாதை ராமன்.

தண்டனைக்குப் பயந்த கேசவன் கந்தனிடம் மோசடி செய்து 2 முத்துக்களை அபகரித்து வைத்திருந்ததை சொல்லிவிட்டான்.

அவன் வாயாலேயே உண்மையைத் வரவழைத்த மரியாதைராமன் கந்தனுக்கு அவனது 2 முத்துக்களைக் கொடுத்து விட்டு, கேசவனுக்கு ஏமாற்றிய குற்றத்திற்காக தண்டனையும் கொடுத்தான்.

மரியாதைராமனின் சமயோஜிதமான யோசனையால் உண்மை வெளிவந்ததை எண்ணி மக்கள் ராமனை மிகவும் பாராட்டினார்கள்.

நமது பாரம்பரிய கதைகளை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நமது கடமையே ஆகும்.

Wednesday, December 9, 2009

தேங்காய்க்குள்ளே பாம்!


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபட தடை செய்துள்ளார்களாம்! அதாவது தேங்காயில் பாம் வைப்பார்கள் என்று எச்சரிக்கை உணர்வாம்.

கவுண்டமணி காமெடியை ஒரு அரசாங்கமே செய்கிறது என்றால் இத்தனை கேவலமான அரசாங்கத்தை வேறெங்கும் பார்க்க முடியாது. தேங்காய் உடைப்பதே ப்ரார்த்தனையாகக் கொண்டு தேங்காயை மூட்டை மூட்டையாக கொண்டு போகும் சபரிமலைக்கே கேரள அரசு தேங்காய் உடைக்க தடை விதிக்கவில்லை. ஆனால் தமிழக அரசோ கொசுவுக்கு பயந்து வீட்டை கொளுத்துங்கள் என்கிறது.

அதாவது தேங்காயில் பாம் வைப்பார்கள் என்று தேங்காய் உடைக்கத் தடை விதிக்கிறார்கள். பின்னர் கோவிலுக்குப் போனால் தானே குண்டு வைப்பார்கள் என்று கோவிலை மூடச் சொல்லுவார்கள். பின் தெருவில் குண்டு வைப்பார்கள் என்பதால் யாரும் தெருவில் நடக்ககூடாது என்பார்களோ!

அப்புறம் வீட்டுக்குள்ளே இருந்தாலும் வீடு புகுந்து தாக்குவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் தாங்களாகவே தற்கொலை செய்து கொண்டு விடுங்கள் என்றும் சொல்லுவார்கள் போலிருக்கிறது.

மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து தைரியமாக அவர்கள் வாழ வழிசெய்யாத அரசாங்கம் என்ன அரசாங்கமோ!

ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி இந்து மத சம்பிரதாயங்களுக்கு ஊறு விளைவிப்பதே நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதே தெளிவாகத் தெரிகிறது.

நண்பர் பி. ஆர். ஹரண் என்பவர் ஒரு ஆன்லைன் பெட்டிஷன் போட்டிருக்கிறார். முடிந்தால் என்னோடு சேர்ந்து நீங்களும் அவருக்கு ஆதரவு கொடுங்கள்.


இந்து தர்மம் என்ற தேரை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நம் எல்லோருடைய கடமையும் ஆகும்.

பதினாறும் பெற்று பெறுவாழ்வு வாழ்க!


பதினாறும் பெற்று பெறுவாழ்வு வாழ்க என்று நம் முன்னோர்கள் வாழ்த்துவதுண்டு. இதைக் கேட்டவுடன் நம்மவர்களுக்கு ஒன்று தோன்றும். அதென்ன பதினாறு பெறுவது. பதினாறு பிள்ளைகள் பெற்றுக்கொள்வதா! ஒன்று இரண்டிற்கே இன்றைய குடும்பம் தாங்க மாட்டென் என்கிறதே, பதினாறு பெற்றால் எப்படி வாழ்வது என்றும் தொன்றும்.

பழமைகளைக் கேலி செய்வதே நாகரீகம் என்ற தொனியை சமூகத்தில் விதைக்கும் நமது தமிழ் சினிமாவும் கதையின் உச்சக்கட்ட காட்சியில் நாயகன் நாயகிக்கு திருமணம் நடக்கும் போது, ஒரு வயதானவர் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்பார். உடனே ஒரு நகைச்சுவை நடிகர் "என்னது இருக்கிற ஜனத் தொகையில் பதினாறு பெற்றால் நாடு என்ன ஆகும்? ரெண்டு பெற்று இனிதே வாழ்க!" என்று வாழ்த்தி சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பார்கள். பின்னர் காலப்போக்கில் இப்படி வாழ்த்துவதையே விட்டு விட்டனர்.

சரி அப்படி பெரியவர்கள் சொன்ன பதினாறும் பெறுவது என்றால் என்ன?

அதாவது பதினாறு வகை செல்வங்கள் பெற்று பெறுவாழ்வு வாழவேண்டும் என்றனர். இந்த பதினாறு செல்வங்களையும் அபிராமி பட்டர் தனது பாடல் மூலம் இவ்வாறு தெரிவிக்கிறார்.

கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடு வாராத நட்பும்,
கன்றாத வளமையும், குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்,
சலியாத மனமும் அன்பகலா மனைவியும்
தவறாத சந்தானமும்,
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாரத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துண்பமில்லாத வாழ்வும்,
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரோடு கூட்டுக் கண்டாய்
அலையழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிக்கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாய்நீ அபிராமியே!

என்று அன்னை அபிராமியிடம் வேண்டுவதாக வருகிறது இந்தப் பாடல்.

அபிராமி பட்டர் என்பவர் பதினேழாம் நூற்றாண்டில் சரபோஜி மன்னர் காலத்தில் வாழ்ந்தவராக அறியப்படுகிறார். அரசரிடம் மரண தண்டனை பெற்ற போது அன்னை அபிராமியை வேண்டி இவர் பாடிய அபிராமி அந்தாதி புகழ் பெற்றது. அன்னை அபிராமி, இவர் அந்தாதி பாடி முடிக்கும் தருவாயில் தண்டனையிலிருந்து பட்டரை காப்பாற்றியதாக கதை உண்டு.

அத்தகைய சிறப்பு பெற்ற அபிராமிபட்டர் இப்பாடல் மூலம் கூறும் பதினாறு செல்வங்கள் என்னவென்று பார்ப்போம்.

1. கலையாத கல்வி
2. குறையாத வயது
3. கபடற்ற நட்பு
4. கன்றா வளமை
5. குன்றாத இளமை
6. பிணியற்ற உடல்
7. சலியா மனம்
8. அன்பான வாழ்க்கைத் துணை
9. தவறாத மக்கட்பேறு
10.தாழாத புகழ்
11.வார்த்தை தவறாத நேர்மை
12.தொடரும் கொடை
13.தொலையாத நிதியம்
14.நடுநிலையான அரசு
15.துன்பம் அறியாத வாழ்க்கை
16.இறையருள்

இதைக் குறித்தே நம் முன்னோர்கள் பதினாறும் பெற்று பெறுவாழ்வு வாழ்க என்று வாழ்த்த துவங்கினார்கள்.

இப்படிப் பட்ட நல்ல வாழ்த்துரையைத் தான் நம் மக்கள் கிண்டலுக்கான வாக்கியமாக்கிவிட்டார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே நம் முன்னோர்கள் அர்த்தமுடனேயே பல விஷயங்கள் எடுத்துரைத்திருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் அறியமுடிகிறது.

ஆக இதைப் படிப்பவர்கள் எல்லோரும் பதினாறு பெற்று பெறுவாழ்வு வாழ வேண்டி நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.