Showing posts with label ganapathy upanishadh. Show all posts
Showing posts with label ganapathy upanishadh. Show all posts

Sunday, March 11, 2012

ஸ்ரீ கணேச அதர்வசீர்ஷ உபநிஷத்து!


இந்து தர்மத்தில் வேதங்களும் உபநிஷத்துக்களும் உயர்ந்த படைப்புக்களாக பெரியவர்களால் போற்றிக் கூறப்படுகின்றன. இவற்றில் உபநிஷத்து என்பது நேரடியாக ஆன்மா பற்றியும் ப்ரும்மம் பற்றியும் எடுத்துக்கூறும் வேதம் ஆகும்.

உபநிஷத்துக்கள் நேரடியாக பிரம்மத்தைப் பற்றியும் படைப்பை பற்றியும் ஆன்மா பற்றியும் எடுத்துக் கூறி புரியவைக்க முயற்ச்சி செய்கிறது!.

அதென்ன முயற்ச்சி செய்கிறது? என்று கேட்கிறீர்களா? ஆம், ஆன்மா என்பது எந்த விதத்திலும் ஒரு அறிவியல் ஃபார்முலா போலவோ, ஒரு பொருளைக் காட்டிவிடுவது போலவோ உருவகித்தோ எடுத்துச் சொல்லியோ காட்டிவிட முடியாது, புரியவைத்து விட முடியாது.

எனவே பலவிதமான வழிகளில் அவற்றை சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.
உதாரணமாக கட உபநிஷத்து என்பது நசிகேதன் என்கிற பாலகனுக்கும் எமதர்மனுக்கும் நடக்கும் உரையாடல் போல அமைத்து அதன் மூலம் எமதர்மனே ஆன்மா என்றால் என்ன? இறப்பிற்குப் பின்னால் ஆன்மா என்னவாகிறது என்பதை எடுத்துச் சொல்வது போல் அமைகப்பட்டிருக்கும்.

அது போல கணேச அதர்வசீர்ஷம் என்கிற இந்த உபநிஷத்தும் கூட முழுமுதற்க் பெருமானான கணேசப் பெருமானை துதிப்பது போல 'நீ'என்கிற பதத்தைச் சொல்லி நம்முள் இருக்கும் ஆன்மாவை உணரச் செய்ய முயற்சிக்கிறது.

அது பற்றி கொஞ்சம் சுருக்கமாகப் பார்ப்போம். இந்த உபநிஷத்தில் இருக்கும் ஸ்லோகங்கள் கணபதியைப் போற்றிக் கூறுவதே ஆகும். முழுக்க முழுக்க கணபதியை ப்ரும்மத்தின் ரூபமாகவே பாடல்கள் போற்றிக் கூறுகின்றன. அவ்வாறு கூறும்போது சர்வமும் ப்ரும்மம் என்கிற வகையில் அதனைப் படிக்கும் நாமும் அதுவாகவே இருந்து கேட்பது போல அமைக்கப்பட்டிருக்கும்.

கணபதியைக் குறித்துச் சொல்லி கூடவே நம்முள் இருக்கும் ப்ரும்மத்தையும் உணரச் செய்யும் அற்புதமான உபநிஷத் இது! அவற்றில் சில வரிகளைப் பற்றிப் பார்ப்போம்!

இந்த ஸ்லோகங்கள் இப்படித் துவங்குகின்றன.

முதலில் கனபதியை வணங்கித் துவங்குகிறது.

கணபதியை உருவகித்து இப்படி ஆரம்பிக்கிறது.

த்வம் ஏவ ப்ரத்யக்ஷம் தத்வம் அஸி! -
'த்வம்' என்கிற சமஸ்கிருத வார்த்தைக்கு 'நீ' என்று பொருள்!
'அஸி' என்றால் 'இருக்கிறது' அல்லது 'இருக்கிறாய்' என்று வாக்கியத்திற்கேற்ப பொருள்படும்!

நீ ஒருவனே கண்கண்ட தத்துவமாக இருக்கின்றாய்!

த்வம் ஏவ கேவலம் கர்த்தா அஸி!
நீ ஒருவன் மட்டுமே படைப்பவனாக இருக்கின்றாய்!

இப்படியாக...

நீ ஒருவன் மட்டுமே யாவற்றையும் தாங்குபவனாக இருக்கின்றாய்!
நீ ஒருவன் மட்டுமே அழிப்பவனாகவும் இருக்கின்றாய்!
நீ ஒருவனே எல்லாமக இருக்கிற பிரம்மமாக இருக்கின்றாய்!
நீயேதான் நித்யமாக இருக்கும் ஆத்மாவாக இருக்கின்றாய்!
ஒழுங்குடன் பேசுகிறவன்!
ஸத்யம் பேசுகிறவன்!
நீ எல்லாவற்றையும் காப்பவன்!
நீயே வாக்கைக் காப்பாற்றுகின்றவன்!
நீயே கேட்பவற்றைக் காப்பாற்றுகின்றவன்!
நீயே செயல்களைக் காப்பாற்றுகின்றவன்!
நீயே சித்தத்தைக் காப்பாற்றுகின்றவன்!
நீயே குருவைக் காப்பாற்றுகின்றவன்!
நீயே சிஷ்யரைக் காப்பாற்றுகின்றவன்!
நீயே மேற்குதிசையிலிருந்து காப்பவன்!
நீயே கிழக்கு திசையிலிருந்து இருந்து காப்பவன்!
நீயே தெற்கிலிருந்துக் காப்பவன்!
நீயே வடக்கிலிருந்துக் காப்பவன்!
நீ மேலே இருந்துக் காப்பவன்!
நீ கீழே இருந்தும் காப்பவன்!
சர்வ திசையிலிருந்தும் சுற்றிச் சுற்றி எப்போதும் காப்பவன்!

நீ வாக்குமயமானவன்
நீ ஞானமயமானவன்
நீ ஆனந்தமயமானவன்
நீ ப்ரம்மமயமானவன்
நீ நித்யமானதும் ஆனந்தமானதும் இரண்டற்ற மூலப்பொருளாக இருக்கிறாய்!
கண்முன்னால் தெரியும் ப்ரம்மமாக இருப்பதும் நீயே!
ஞானத்தால் உணரக்கூடியவனும், விஞ்ஞானத்தால் அறியப்படுபவனும் நீயே!

ப்ரும்த்தின் ரூபத்தை உணரச்செய்யும் வாக்கியங்கள்!

எல்லா உலகங்களும் எல்லாம் உன்னிடமிருந்தே தோன்றின!
எல்லா உலகங்களும் எல்லாம் உன்னாலேயே நிலைபெற்று இயங்குகிவருகிறது!

எல்லா உலகங்களும் உனக்குள்ளேயே ஒரே பொருளாய் அடங்கி இருக்கிறது!

நீயே பூமி, தண்ணீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிறாய்!
நீ நான்கு நிலைகளான வாக்கின் படிகளாக ஆகிறாய்!
நீ மூன்று குனங்களுக்கும் பேலானவன்!
நீ மூன்று தேஹங்களுக்கும் மேலானவன்!
நீ மூன்று காலங்களுக்கும் மேலானவன்!
நீ மூலாதாரத்தில் நித்யமாக நிலைபெற்று இருக்கிறாய்! (லிங்கம் மற்றும் குதத்திற்கு நடுவிலான குண்டலினியில் நிலைத்திருப்பவன்)

நீயே மூன்று சக்திகளுமாகிறாய்! (படைத்தல், காத்தல், அழித்தல்)
உன்னை யோகிகள் நித்யமாக தியானம் செய்கிறார்கள்!

நீ ப்ரம்மா
நீ விஷ்ணு
நீ ருத்ரன்
நீ இந்திரன்
நீ அக்னி
நீ வாயு
நீ சூரியன்
நீ சந்திரன்
நீயே ப்ரம்மம், பூலோகம், புவர் லோகம், சுவர்க லோகம்:: ஓம்!

இவ்வாறு கணபதிக் கடவுளை ஆன்மா மற்றும் ப்ரும்மத்தை நம்மை நோக்கிச் சொல்லுவதைப் போல உபதேசித்துவிட்டு பின் கணேசரின் ஸ்வரூபம் குறித்து ஸ்லோகங்கள் செல்லுகிறது.

கீழே இருக்கும் வீடியோவில் இந்த அழகான ஸ்லோகங்களை ஒரு முறை கேட்டு மகிழுங்கள்!


இந்த ஸ்லோகங்களை நாம் எதுவாக இருந்து படிக்கிறோமோ அதுவாகவே உணருவோம்! நாம் எதுவாகவெல்லாம் உணரப்படுகிறோமோ அதுவெல்லாம் ப்ரும்மமே! உணரப்படும் போது நான் என்கிற இருப்பை எப்போது மறக்கிறோமோ அப்போது ப்ரம்மமாகிறோம்!