
இந்து திருமணத்தில் அம்மி மிதித்தல் என்ற சம்பிரதாயம் இருப்பதன் பொருள் என்ன?
பழங்காலம் முதல் இந்து திருமணத்தில் மனிதர்கள் அனுஷ்டிக்க வேண்டிய தர்மங்களை சில செய்கைகள் மூலம் மனதில் பதிய வைக்க முயற்ச்சிப்பது வழக்கம். அவற்றில் ஒன்று தான் இந்த அம்மி மிதித்தல் என்ற சம்பிரதாயம். செய்முறை பயிற்சி என்று இன்று நாம் சொல்கிறோமே அது போல தான்.
சரி முதலில் இந்த சம்பிரதாயத்தின் அர்த்தம் என்ன என்பதை பார்ப்போம். அதாவது மணப்பெண் அம்மி மிதிக்கிறபோது பெண்ணின் வலது காலை மாப்பிள்ளை அம்மி மீது தூக்கி வைக்கிறான். அப்போது சொல்லப்படும் மந்திரத்திற்கு "வாழ்க்கையில் பகைவர்களைப் போல் துன்பம் அளிக்கக்கூடிய நிலைகள் ஏற்படலாம். அப்போது நீ இந்தக் கல்லைப் போல் அசையாமல் இருக்க வேண்டும். எவ்வளவு துன்பங்கள் நேரிட்டாலும் அதை நீ உறுதியாக தாங்கி எதிர்கொள்ள வேண்டும்." என்பது பொருள்.
சரி இதை வெறும் வாயாலேயே சொல்லலாமே. அதை ஏன் மெனக்கெட்டு ஒரு அம்மிக்கல்லை தூக்கி வந்து அதன் மேல் கால் வைத்து சொல்ல வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். நான் ஏற்கனவே சொன்னது போல் இது ஒரு வகை செய்முறை பயிற்சி தான். அம்மியின் மீது மணப்பெண்ணின் காலை பிடித்து வைத்து கல்லின் உறுதித்தன்மையை மணமகன் உணர்த்துகிறான். இவ்வாறு தொடு உணர்வு மூலம் உணர்த்தப்படும் போது அது ஆழமாக மனதில் பதிகிறது.மேலும் உறவினர்கள் எல்லோரும் கூடி நின்று வேடிக்கை பார்க்க ஒரு ஆண் அனைவரின் முன்னிலையிலும் ஒரு பெண்ணின் காலை பிடிக்கும் போது ஏற்படும் உணர்வு
அன்றைய தினத்தை பல நாட்களுக்கு ஞியாபகம் வைத்திருக்கச் செய்யும். அது மட்டும் அல்லாமல் அந்த நிகழ்ச்சியை மறக்காமல் இருக்கவும் அன்றைய தினத்தில் போதிக்கப்பட்ட விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் மனதை விட்டு நீங்காமல் இருக்கவுமே அம்மியில் கால் வைத்தவுடன் மணமகன் , மணப்பெண்ணின் காலில் மெட்டி இடுகிறான்.
ஆக திருமணத்தின் போது மணமக்களுக்கு வாழ்க்கை தர்மங்கள் மனதில் ஆழப்பதியவும், அது வாழ்நாள் முழுவதும் மறக்காமல் இருக்கவும் செய்யப்படும் செய்கைகளே சம்பிரதாயங்கள் எனப்படுகிறது. இது ஒருவகை மனோ ரீதியான சூட்சம நடவடிக்கையே. சரியாகச் சொல்லப்பட்டு இவ்வாறு மனதில் பதியவைக்கப்படும் தர்மங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்காமல் காப்பாற்றப்படும்.
இந்து தர்மத்தில் இப்படி பல விஷயங்கள் மிக உள்ளார்ந்த அர்த்தங்களுடன் இருப்பதை அனுபத்து உணர்பவர்களுக்கு மிக நன்றாகவே புரியும். ஆதலால் சொல்கிறேன், இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும்.