"பரந்தாமா! வேள்விகளில் சிறந்தவையாக கருதப்பட வேண்டியது எது என்பதை எனக்கு விளக்குவாய்" என்று அர்ஜுனன் கேட்கிறான்.
ஸ்ரீ க்ருஷ்ணர் கூறுகிறார்..
"அர்ஜுனா! பொருட்களால் வேள்வி செய்வதை விட ஞான வேள்வியே மிகவும் மேலானது. செயல்கள் அனைத்தும் ஞானத்திலேயே வந்து முடியப் பெருகின்றன.
மெய்ப்பொருளைக் கண்ட ஞானிகள் உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள். அதை வணக்கத்துடனும், தொண்டு செய்வதன் மூலமும், கேள்விகள் கேட்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதாலும் நீ அதைக் கற்றுக் கொள்".
(எதைச் சொன்னாலும் அதை விசுவாசிக்க வேண்டும், அப்படியே நம்ப வேண்டும் என்று ஸ்ரீ க்ருஷ்ணர் கூறவில்லை. கேள்விகள் கேட்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டு அறிந்து கொள்ளச் சொல்கிறார். இந்து தர்மத்தின் சிறப்பம்சமே அதுதான்).
"பாண்டவ! அதைத் தெரிந்து கொண்ட பிறகு, மீண்டும் நீ இத்தகைய மதி மயக்கத்தை அடைய மாட்டாய். அதன் மூலம் உயிர்கள் அனைத்தையும் எனக்குள்ளும், உனக்குள்ளும் காண்பாய்."
ஒரு தெருவில் இருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். துறவி ஒருவர் அவர்களை விலக்கி விடச் சென்றார். ஆனால் கோபத்திலிருந்த அவர்கள் துறவியையும் தாக்கி விட்டனர். இதைப் பார்த்த துறவியின் சீடரோ அவரை பத்திரமாக கூட்டி வந்து அவருக்கு ஒத்தடம் கொடுத்தார். "என்ன நடந்தது" என்று வினவினார். அதற்கு துறவியோ "அங்கே அடித்தாய், இங்கே அரவனைக்கிறாய்" என்றார். தன்னை அடித்ததும் அனைத்ததும் ஒரே உயிர் தான் என்பதை துறவி இவ்வாறு விளக்குகிறார்.
"அர்ஜுனா! நீ பாவிகளுக்குளேயே அதிக பாவம் செய்தவனாக இருந்தாலும், ஞானமாகிய படகின் உதவியால் பாபங்கள் அனைத்தையும் கடந்து விடலாம்..
"பார்த்தா! கொழுந்து விட்டு எரியும் நெருப்பானது விறகை எரித்து சாம்பலாக்குவது போல, ஞானமாகிய நெருப்பானது எல்லாப் பாபங்களையும் எரித்துச் சாம்பலாக்குகிறது."
"ஞான விட தூய்மையாக்கும் பொருள் இந்த உலகில் வேறு எதுவும் இல்லை. குற்றம் குறை இல்லாமல் பூரணமாக யோகத்தைப் பயிற்சி செய்து பக்குவம் அடைந்தவர்கள் தக்க சமயத்தில் ஞானத்தைத் தன்னிடத்தில் தானே காண்கிறார்கள்.
அறியாதவனும், நம்பிக்கை இல்லாதவனும், சந்தேகத் தன்மை கொண்டவனும் ஒருவன் அழிவை நோக்கிச் செல்கிறான். சந்தேகப்படுபவனுக்கு இந்த உலகமோ, மறு உலகமோ அல்லது இன்பமோ எதுவும் கிடையாது.
"தனஞ்செய! யோகத்தினால் செயல்களை எல்லாம் துறந்தவனும், ஞானத்தால் எல்லாச் சந்தேகங்களையும், போக்கிக் கொண்டு, தன்னைக் கட்டுப்படுத்தி அடக்கி ஆளும் ஒருவனைச் செயல்கள் கட்டுப்படுத்தாது.
எனவே, உன் அறியாமையால் தோன்றி உன் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் ஆன்மாவைப் பற்றிய சந்தேகத்தை ஞானமாகிய வாளால் வெட்டி வீழ்த்தி விடு. யோகத்தையே சரணாக அடைந்து விடு. எழுந்து செயல்படு அர்ஜுனா!"
- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்.




