Showing posts with label பகவத்கீதை. Show all posts
Showing posts with label பகவத்கீதை. Show all posts

Saturday, June 26, 2010

கீதோபதேசம் - ஞானத்தை பெற்று செயல்படு!



"பரந்தாமா! வேள்விகளில் சிறந்தவையாக கருதப்பட வேண்டியது எது என்பதை எனக்கு விளக்குவாய்" என்று அர்ஜுனன் கேட்கிறான்.

ஸ்ரீ க்ருஷ்ணர் கூறுகிறார்..

"அர்ஜுனா! பொருட்களால் வேள்வி செய்வதை விட ஞான வேள்வியே மிகவும் மேலானது. செயல்கள் அனைத்தும் ஞானத்திலேயே வந்து முடியப் பெருகின்றன.

மெய்ப்பொருளைக் கண்ட ஞானிகள் உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள். அதை வணக்கத்துடனும், தொண்டு செய்வதன் மூலமும், கேள்விகள் கேட்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதாலும் நீ அதைக் கற்றுக் கொள்".

(எதைச் சொன்னாலும் அதை விசுவாசிக்க வேண்டும், அப்படியே நம்ப வேண்டும் என்று ஸ்ரீ க்ருஷ்ணர் கூறவில்லை. கேள்விகள் கேட்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டு அறிந்து கொள்ளச் சொல்கிறார். இந்து தர்மத்தின் சிறப்பம்சமே அதுதான்).

"பாண்டவ! அதைத் தெரிந்து கொண்ட பிறகு, மீண்டும் நீ இத்தகைய மதி மயக்கத்தை அடைய மாட்டாய். அதன் மூலம் உயிர்கள் அனைத்தையும் எனக்குள்ளும், உனக்குள்ளும் காண்பாய்."

ஒரு தெருவில் இருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். துறவி ஒருவர் அவர்களை விலக்கி விடச் சென்றார். ஆனால் கோபத்திலிருந்த அவர்கள் துறவியையும் தாக்கி விட்டனர். இதைப் பார்த்த துறவியின் சீடரோ அவரை பத்திரமாக கூட்டி வந்து அவருக்கு ஒத்தடம் கொடுத்தார். "என்ன நடந்தது" என்று வினவினார். அதற்கு துறவியோ "அங்கே அடித்தாய், இங்கே அரவனைக்கிறாய்" என்றார். தன்னை அடித்ததும் அனைத்ததும் ஒரே உயிர் தான் என்பதை துறவி இவ்வாறு விளக்குகிறார்.

"அர்ஜுனா! நீ பாவிகளுக்குளேயே அதிக பாவம் செய்தவனாக இருந்தாலும், ஞானமாகிய படகின் உதவியால் பாபங்கள் அனைத்தையும் கடந்து விடலாம்..

"பார்த்தா! கொழுந்து விட்டு எரியும் நெருப்பானது விறகை எரித்து சாம்பலாக்குவது போல, ஞானமாகிய நெருப்பானது எல்லாப் பாபங்களையும் எரித்துச் சாம்பலாக்குகிறது."

"ஞான விட தூய்மையாக்கும் பொருள் இந்த உலகில் வேறு எதுவும் இல்லை. குற்றம் குறை இல்லாமல் பூரணமாக யோகத்தைப் பயிற்சி செய்து பக்குவம் அடைந்தவர்கள் தக்க சமயத்தில் ஞானத்தைத் தன்னிடத்தில் தானே காண்கிறார்கள்.

அறியாதவனும், நம்பிக்கை இல்லாதவனும், சந்தேகத் தன்மை கொண்டவனும் ஒருவன் அழிவை நோக்கிச் செல்கிறான். சந்தேகப்படுபவனுக்கு இந்த உலகமோ, மறு உலகமோ அல்லது இன்பமோ எதுவும் கிடையாது.

"தனஞ்செய! யோகத்தினால் செயல்களை எல்லாம் துறந்தவனும், ஞானத்தால் எல்லாச் சந்தேகங்களையும், போக்கிக் கொண்டு, தன்னைக் கட்டுப்படுத்தி அடக்கி ஆளும் ஒருவனைச் செயல்கள் கட்டுப்படுத்தாது.

எனவே, உன் அறியாமையால் தோன்றி உன் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் ஆன்மாவைப் பற்றிய சந்தேகத்தை ஞானமாகிய வாளால் வெட்டி வீழ்த்தி விடு. யோகத்தையே சரணாக அடைந்து விடு. எழுந்து செயல்படு அர்ஜுனா!"

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்.



Friday, January 15, 2010

சம்பவாமி யுகே யுகே!


அர்ஜுனன் கேட்கிறான்:

பகவானே! சூரியன் உங்களுக்கு முன்னால் பிறந்தவன். நீங்கள் சூரியனுக்குப் பிறகு பிறந்தீர்கள். ஆனால் முதலில் நீங்கல் சூரியனுக்கு உபதேசித்ததாகக் கூறுகிறீர்கள். இதை நான் எவ்வாறு புரிந்து கொள்வது?

ஸ்ரீ க்ருஷ்ணர் கூறுகிறார்:

அர்ஜுனா கேள்! நானும், நீயும் இதுவரை பல பிறவிகள் எடுத்துள்ளோம். அவற்றை எல்லாம் நான் அறிவேன். நீ அறிய மாட்டாய்.

நான் பிறப்பற்றவன், அழிவற்றவன், குறைவு இல்லாத தன்மை உடையவன். இருந்தும் கூட என் இயல்பை அடக்கிக் கொண்டு என்னுடைய மாயா சக்தியினால் நான் அவதாரம் செய்கிறேன்.

பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் மேலும் கூறுகிறார்..

"யதா யதாஹி தர்மஸ்ய க்லானிர்-பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்"

அர்ஜுனா! உலகில் தர்மம் குறைந்து, அதர்மம் மேலோங்கும் போதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக் கொள்கிறேன்.

"பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம-ஸம்ஸ்தாபனார்தாய சம்பவாமி யுகே யுகே!"

நல்லவர்களைக் காப்பதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் நான் யுகங்கள் தோறும் அவதரிக்கிறேன்.

என்னுடைய தெய்வீகமான பிறப்பு, செயல் ஆகியவற்றை உள்ளபடி அறிந்தவன் இந்த மனித உடலைவிட்டு நீங்கிய பிறகு மறுபிறவி அடைவதில்லை. அர்ஜுனா! அவன் என்னை வந்து அடைகிறான்.

காமம், ஆசை, பயம், கோபம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டவர்களும், என்னையே நினைத்து, என்னையே சரனாக அடைந்து, ஞானமாகிய அக்னிப் பரீட்சையால் பொசுக்கப்பட்டு புனிதர்களாய்ப் பலர் என்னுடன் ஒன்றாகி ஐக்கியம் அடைந்திருக்கிறார்கள்.

மனிதர்கள் எந்த வழியில் என்னை நாடினாலும், அதே வழியில் நான் அவர்களுக்கு அருள் புரிகிறேன். அர்ஜுனா! மக்கள் எங்கும் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்

இங்கே ஒரு விஷயம் கவனிக்கத்தக்கதாகிறது. பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் "நானும், நீயும் இதுவரை பல பிறவிகள் எடுத்துள்ளோம். அவற்றை எல்லாம் நான் அறிவேன். நீ அறிய மாட்டாய்" என்று உரைக்கிறார்.

பல பிறவிகள் என்று சொல்லும் போது பெரும்பாலும் அதில் நம்பிக்கை உண்டாவதில்லை. ஏனெனில் நம்முடைய இன்றைய இருப்பிற்கு முன்னால் என்ன இருந்தது என்றும் அதற்கு பின்னால் என்ன இருக்கப் போகிறது என்றும் நமக்குத் தெரிவதில்லை. அதனால் நமக்கு அதில் நம்பிக்கை உண்டாவதில்லை. ஆனால் பல பிறவிகள் இருப்பது உண்மை என்பதையே பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் எடுத்துரைக்கிறார்.

உபநிஷத்துக்கள் முழுவதுமே ஆத்மாவின் நிரந்தரத் தன்மையையும் பிறவி மற்றும் மறுபிறவி பற்றிய தத்துவ போதனைகளையே எடுத்துச் சொல்கின்றன. அவை இன்றைய வாழ்விருப்பின் தன்மைக்கேற்ப 'நீ மறுபிறவி அடைவாய்' என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

உதாரணமாக சில விஷயங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். இரண்டரை வயது குழந்தை தன்னுடைய முற்பிறவி பற்றி கூறுவதும் நான் இன்னார், எனது மனைவி இவள் நான் இந்த ஊர்க்காரர் என்று சொல்வது அவை ஆராயப்படும் போது நிஜமாக இருப்பதும் நடந்திருக்கிறது. அவர்களின் உடல் அழிந்திருக்கிறதே தவிற ஆத்மா அழிவதில்லை. மீண்டும் பிறப்பெய்தி இருக்கிறது.

ஒரு குழந்தை பிறந்தது முதல் மூன்று அல்லது நான்கு வயது வரை புனர்ஜென்ம ஞாபம் இருக்கும். பிறகு அவை வாழும் சூழ்நிலைகளுக்குத் தகுந்த மாதிரி கொஞ்சம் கொஞ்சமாக பழைய நினைவுகளை இழந்து விடும். மிகச்சிலரே அவற்றைப் பேசும் அளவுக்கு ஆற்றல் கொண்டிருப்பார்கள். பலருக்கு அவை எது பற்றிய நினைவு என்பதையே உணர முடியாது. இவையாவும் மனிதன் ஜென்ம ஜென்மங்களாக பிறப்பெடுப்பதையே காட்டுகிறது.

சில குழந்தைகள் மழலைப் பேச்சு மாறுவதர்குள்ளாகவே சிறந்த அறிவாற்றலை வெளிப்படுத்துவார்கள். அவர்களின் பூர்வ ஜென்ம தொடர்ச்சியாகவே அது கருதப்படுகிறது.

சிலர் குழந்தைப் பருவத்திலேயே மிகவும் கோபக்காரர்களாகவும், திருடும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். சில குழந்தைகள் மிகவும் சாந்தமான குணம் கொண்டதாக இருக்கும் இடமே தெரியாமல் அமைதியாக இருக்கும். இவை யாவும் முற்பிறவியில் அவர்களின் இயல்புகளை ஒட்டியே அமைவதாகக் கூறப்படுகிறது.

ஆக நம்மைப் போன்ற பிறவிப்பெருங்கடலில் சிக்கி நிரந்தர நினைவுகள் மறந்து போனவர்களால் அவற்றை ஞாபகப் படுத்தி பார்ப்பது இயலாததாகி இருக்கிறது. எனவே "'அவற்றை எல்லாம் நான் அறிவேன். நீ அறிய மாட்டாய்" என்று பகவான் அர்ஜுனனுக்கு எடுத்துக் கூறுவது நமக்கே சொல்வதாகும்.

ஸ்ரீ க்ருஷ்ணரின் பிறப்பிற்கும் நமது பிறப்பிற்கும் அதுவே வித்தியாசம். அவர் அறிந்தே பிறக்கிறார். நாம் அறியாமல் (அறியாமையால்) பிறக்கிறோம். "நான் பிறப்பற்றவன், அழிவற்றவன், குறைவு இல்லாத தன்மை உடையவன். இருந்தும் கூட என் இயல்பை அடக்கிக் கொண்டு என்னுடைய மாயா சக்தியினால் நான் அவதாரம் செய்கிறேன்", அதாவது நிரந்தரமான தன்மையை உடையவர் தனது சக்தியினால் பிறப்பை உணர்ந்து அவதரிக்கிறார். ஆக எப்பொழுது தொடர்ச்சியான சாதகத்தால் நாம் பிறப்பையும் இறப்பையும் உணரும் தன்மையைப் பெறுகிறோமோ அப்பொழுது நாமும் ஸ்ரீ க்ருஷ்ணராகியிருப்போம்.

அப்படியென்றால் 'மறுபிறவி அடையாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்' என்ற கேள்வி உண்டானால் மறக்காமல் கீதையைப் படியுங்கள். கீதை முழுவதிலும் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் பாதை காட்டுகிறார்.

படிப்போம், தொடர்வோம்!


Thursday, August 6, 2009

கீதோபதேசம் - தெய்வீக குணங்களும் அசுர குணங்களும்:

தனஞ்செயா குணங்களின் இரு வகைகளை விளக்குகிறேன் கேள்!

அஞ்சாமை, உள்ளத்தூய்மை, ஞானத்திலும் யோகத்திலும் நிலைத்திருத்தல், தானம் செய்தல்,புலனடக்கம், தன்னடக்கம், ஆன்மீக ஆராய்ச்சி, தவம், நேர்மை போன்றவை தெய்வீக குனங்களாகும்.

மேலும் பிறர்க்கு தீங்கு செய்யாமை, உண்மை, சினம் இன்மை, துறவு, அமைதி, கோள் சொல்லாமை, தியாக உணர்ச்சி , சாந்தம், எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் காட்டுதல், பேராசை இல்லாமை, இனிமையாகப் பழகுதல், மனம் சலியாமை போன்றவைகளும் தெய்வீக குணங்களாகும்.

மன்னிக்கும் குணம், தளராத மன உறுதி, தூய்மை, துவேஷத்திலிருந்தும் இருமாப்பிலிருந்தும் விடுதலை இவை எல்லாம் தெய்வீக குணங்களாகும்.

அர்ஜுனா!

இத்தகைய தெய்வ குனங்கள் வீடுபேற்றைக் கொடுக்கும். ஆனால் அசுர குனங்கள் பிறப்பு, இறப்பாகிய பந்தத்தைக் கொடுக்கும். பாண்டவா! நீ தெய்வத் தன்மையோடு பிறந்தவன். எனவே வருந்தாதே!

பார்த்தா!

இவ்வுலகில் இருவகையான பிறப்புக்கள் உள்ளன. தெய்வீக இயல்பும், அசுர இயல்பும் கொண்ட பிறப்புக்கள் தான் அவை. தெய்வீக பிறப்பைப் பற்றி விளக்கமாகக் கூறிவிட்டேன். இனி அசுர குணத்தைப் பற்றி கூறுகிறேன் கேள்!

அசுர இயல்புள்ள மனிதர்கள் தாங்கள் எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்பதை அறியமாட்டார்கள். அவர்களிடம் தூய்மையோ, நல்லொழுக்கமோ, சத்தியமோ இருப்பதில்லை.

இந்த உலகம் பொய்யானது. ஆதாரமற்றது. கடவுள் இல்லாதது. காமத்தின் அடிப்படையில் ஆண், பெண் சேர்க்கையின் காரணமாகவே உலகம் உண்டானது. அதனன்றி வேறு இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

இவ்வகையிலான அபிப்பிராயம் கொண்ட சீர்கெட்ட இந்த ஆன்மாக்கள் அற்பபுத்தி உடையவர்கள். இவர்கள் உலகத்தை நாசம் செய்வதற்காக உலகத்தின் விரோதிகளாக வந்து சேருகிறார்கள்.

திருப்தி செய்ய முடியாத காம இச்சையில் ஆழ்ந்த இவர்கள் ஆடம்பரம், இறுமாப்பு, தற்பெருமை ஆகியவற்றால் தீய நோக்கம் கொண்டு களங்கமுள்ள செயல்களையே செய்பவர்களாக உள்ளார்கள். இறக்கும் வரையில் அளவு கடந்த கவலை கொண்டவ்ர்களாய், போகங்களையும், சிற்றின்ப இச்சையே எல்லாவற்றிலும் மேலானதாகக் கருதி, வேறு ஒன்றும் இல்லை என்று தீர்மானம் செய்தவர்களாய் இருப்பார்கள்.

எண்ணற்ற ஆசைவலைகளில் சிக்கிக் கொண்டு, காமத்திற்கும், கோபத்திற்கும் அடிமைகளாகியும் தங்களுடைய ஆசைப் பசியைத் தீர்த்துக் கொள்வதற்காக அநியாயமான வழிகளில் செல்வம் திரட்ட முற்படுவார்கள். (தற்கால செய்திகளில் கல்லூரி மாணவர்கள் சிலர் ஆடம்பரமாக வாழ ஆசைப்பாட்டு வழிபறி செய்வதையும் கொள்ளையடித்த பணத்தில் பெண்களுடன் உல்லாசமாக இருப்பவர்கள் பற்றியும் செய்திகளில் படித்திருப்போம்).

பார்த்தா!

கற்பனையான பலவித ஆசைகளுக்கு இரையாகி, மதிமயக்கமாகிய வலையில் சிக்குண்டு போகங்களில் ஆழ்ந்து அவர்கள் பாழும் நரகத்தில் வீழ்கின்றனர். மனிதனை நாசமாக்கும் இந்த நரகத்திற்கு காமம், கோபம், பேராசை ஆகிய மூன்று விதமான வாயில்கள் உள்ளன. எந்த மூன்று வாயில்களில் இருந்து தப்பித்துக் கொள்ளும் மனிதன், தன்னுடைய உயர்ந்த நலனுக்கு வழிதேடி என்னையே வந்தடைகிறான்.

- ஸ்ரீ கிருஷ்னர்

சம்பவாமி யுகே யுகே!

பதினாறாம் அத்தியாயம் - தெய்வாஸுரசம்பத் விபாக யோகம்

Friday, May 1, 2009

கீதோபதேசம்!

குந்தியின் மகனே கேள்!  

தன்னுடைய கடமையில் பற்றுள்ள ஒவ்வொருவனும் பூரண நிலையை அடைகிறான். தன் கடமையை செய்து கொண்டே அவர்களால் எப்படி பூரண நிலையை அடைய முடிகிறது என்பதைச் சொல்லுகிறேன் கேள்.  

இந்த உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் யாரிடமிருந்து தோன்றி உள்ளனவோ, யாரால் இந்த உலகம் எல்லாம் நிறைந்துள்ளதோ அந்தக் கடவுளை தனக்குரிய அக்கடமையைச் செய்து கொண்டே வழிபடும் மனிதன் மேன்மை அடைகிறான்.

விளக்கம்:

இங்கே கடமை எனக்குறிப்பிடப்படுவதை பெரும்பாலும் பலர் தங்கள் அலுவலகங்களில் வேலை பார்த்து பொருள் ஈட்டும் கடமையை மட்டுமே நினைத்துக் கொள்கின்றனர். கடமை என்பது வெறும் அலுவலகத்தில் வேலை செய்வது அல்ல. கடமை என்பது ஒரு மனிதன் தனது பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமை. தனது மனைவியாகப்பட்டவளைக் காப்பாற்றும் கடமை. தான் ஈன்ற பிள்ளைகளைக் காக்கும் கடமை. தான் கொண்ட சமூகத்தைக் காக்கும் கடமை. தன்னைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் விலங்குகள், பறவைகள் மற்றும் சிறிய உயிர்கள் என எல்லா ஜீவராசிகளுக்கும் தன்னால் எந்த தீங்கும் நேரா வண்ணம் காக்கும் கடமை. பூமியில் ஜனிக்கும் எல்லா ஜீவராசிகளையும் காக்கும் இயற்க்கையை, நாம் காக்க வேண்டிய கடமை என்று எல்லா விதமான கடமைகளும் மனிதனைச் சேரும்.  

ஒரு மனிதன் தனது வாழ்நாளில் இவ்வாறான கடமைகளைச் செய்யும் பொழுது அவனது சிந்தனை முழுவதும் தனது கடமையிலும் தன்னை காத்துக் கொள்வதிலுமே நிலைகொண்டிருக்கும். அவ்வாறான சூழ்நிலையில் இறைவனைப் பற்றி நினைக்கவே நேரம் இருக்காது. 

அவ்வாறு இருக்கும் போதும் ஒருவன் பரிபூரணமாக இந்தப் பிரபஞ்சத்தில் முழுமையாக வியாபித்திருக்கும் இறைவனை மனதில் பரிபூரணமாக் நினைத்தால் அவன் கடமைகள் முடியும் காலத்தில் இறைவனோடு பூரணமாக சேர்ந்து கொள்ள அதுவே உதவுகிறது. 

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையை ஒரு பிரயாணமாகவே நினைத்தல் வேண்டும். நாம் சென்று சேர வேண்டிய இடம் இந்த முழுமையான பிரபஞ்சத்திலும் அதில் நிலைத்திருக்கும் எல்லையற்ற சக்தியான இறைவனிடத்திலும் தான் என்பதை முழுமையாக உணர வேண்டும்.  

அவ்வாறு உணரும் பட்சத்தில் நமது போராட்டமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே, நமது பிறவிக் கடமைகளைச் செய்து கொண்டே, நாம் இறைவனிடம் சேர வேண்டிய பிரயானத்தில் இருக்கிறோம் என்பதை இறைவழிபாடுகள் மூலம் அவ்வப்பொழுது தியானிக்க வேண்டும்.  

அவ்வாறு கடமைகளூடேயும் இறைவனை பூரணமாக வழிபடுபவன், உணர்வுகள் அமைதியடைகிறான். ஆத்மாவாகிய நாம் இறைவனோடு கலந்துவிட இதுவே வழிவகுக்கிறது.