இவர் நலமடைய இறைவன் அருள வேண்டும்!
இது ரஜினி சிங்கப்பூர் செல்வதற்கு முன்பாக ரசிகர்களுக்காக பேசிவிட்டுச் சென்றதாக பல தளங்களிலும் Rajinifans.com-லும் கூறப்பட்டிருக்கிறது. தேர்தலில் ஓட்டுப் போட்டு விட்டு பேட்டி கொடுத்த போதே மிகவும் நலிந்த குரலில் பேசியவர் இன்று பேசுவதற்கு கஷ்டப்பட்டு பேசுவதாகவே படுகிறது. இந்த குரலை இவர்கள் வெளியிட்டிருக்கவே வேண்டாம் எனத் தோன்றுகிறது. இப்படி ஒரு தளர்வான ரஜினியின் குரலை கேட்டதே இல்லை என்பதால் மனம் கொஞ்சம் பதற்றமடைகிறது.
பள்ளிப் பருவத்தில் ரஜினியின் படங்களின் ரிலீஸுக்குச் சென்று அவர் தோன்றும் காட்சிகளில் பேப்பர் கிழித்துப் போட்டு "ஸூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க" என்று தொண்டை கிழிய கத்திக் கூப்பாடு போட்டு ஆனந்தக் கூத்தாடிய பள்ளிப்பருவங்கள் மறக்க முடியாதவை.
அவர் கூடவே இருந்து அவர் மூலமாகவே அனுகூலங்களை பல அடைந்து விட்டுப் பின் அவரை கன்னடர் என்று மொழிபேதம் செய்து முதுகில் குத்தியவர்கள் ஏராளம். தமிழர்களால் அவர் சம்பாதித்தாரோ அல்லது தமிழர்கள் அவரால் சம்பாதித்தார்களோ தெரியாது, ஆனால் தமிழர்கள் அத்துனைபேரும் பரவசமாக மெய்மறந்து மகிழ்ச்சியாக இருந்த பல தருணங்கள் ரஜினியாலேயே நிரம்பியிருக்கும் என்றால் மிகையாகாது.
அரசியல் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு அத்துனை பேரின் உணர்வுகளிலும் இரண்டரக்கலந்து விட்டவர் ரஜினி.
சிங்கப்பூரில் உள்ள கிட்னி பவுண்டேஷன் சிறந்த மருத்துவமனை என்று கூறப்படுகிறது. இங்குதான் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச் செயலர் அமர்சிங் சில ஆண்டுகளுக்கு முன் மாற்று சிறுநீரகங்கள் பொருத்திக் கொண்டு இன்று வரை அவர் நலமாகவும், சுறுசுறுப்புடனும் அரசியலில் இயங்கி வருகிறார் என்றும் கூறப்படுகிறது. அதே போல ரஜினியும் விரைவில் நலமுடன் திரும்புவார் என நம்புவோமாக!
என் பிரார்த்தனை, இது ரஜினியின் குரலாக இருக்கக்கூடாது, அவர் உடல் நிலை விரைவில் குணமடைய வேண்டும்!
சண்டை போடும் ராணாவைப் பார்க்கிறோமோ இல்லையோ மீண்டும் சிரித்துப் பேசும் ரஜினியை பார்க்க வேண்டும்! ஆண்டவன் சொல்லனும் ரஜினி செய்யனும்!
ஈஸ்வரோ ரக்ஷது!
.





