Tuesday, November 27, 2012

இறைவனே இலக்கு!


இனியவனே! உபநிஷதங்கள் கூறுகின்ற பெரிய ஆயுதமாகிய வில்லை எடுத்து, தியானத்தால் கூர்மையாக்கப்பட்ட அம்பை அதில் வைத்து, இறை எண்ணங்களால் நிறைந்த மனமாகிய நாணை இழுத்து இலக்கை அடிக்க வேண்டும். அந்த இலக்கே இறைவன், அவரை அறி.

ஓங்கார மந்திரமே வில், ஆன்மா அம்பு, இறைவனே இலக்கு என்று சொல்லப்படுகிறது. அம்பை எய்பவன் அலைபாயாத மனத்தினனாக இருக்க வேண்டும். அம்பைப் போல் அந்த இலக்கு மயமாக ஆக வேண்டும்.

வானுலகம், பூமி, இடைவெளி மற்றும் மனம், பிராணன்கள், புலன்கள் என்று அனைத்தும் யாரில் நிலலபெற்றுள்ளனவோ அந்த ஒரே ஆன்மாவை அறியுங்கள். மற்ற பேச்சுக்களை விடுங்கள். மரணமிலா பெருநிலைக்கான பாலம் இதுவே.

ரதத்தின் அச்சில் ஆரக்கால்கள் கூடுவது போல் எங்கே நாடிகள் கூடுகின்றனவோ அங்கே ஆன்மா உள்ளது. அந்த இதயத்தில் ஆன்மா பலவிதமாகச் செயல்படுகிறது. ஓம் என்ற மந்திரத்தின் மூலம் ஆன்மாவைத் தியானம் செய்யுங்கள். இருளைக் கடந்து மறுகரைக்குச் செல்ல விரும்புகின்ற உங்களுக்கு ஆசிகள் நிறைவதாக.

- முண்டக உபநிஷத்து