Friday, August 9, 2013

எல்லா உருவும் பரமாத்மாவே!




சமுத்திரம் ஆடாமல் அசையாமல் இருக்கிறபோது ஒரு காற்று அடித்தால் உடனே அதில் ஜலத்துளிகள்  குமிழ்களாகத் தோன்றுகின்றன. இன்னொரு காற்று அடிக்கிறபோது அந்தக் குமிழ்கள் உடைந்து போகின்றன.பரமாத்மா ஆடாத அசங்காதசமுத்திரம் மாதிரி. மாயை என்கிற நாமெல்லாம் குமிழ் மாதிரி தோன்றியிருக்கிறோம். ஆசாரியாருடைய கடாக்ஷம் என்கிற நல்ல காற்று நம்மேல் பட்டால் குமிழ் உடைந்து ஜலத்துளி சமுத்திரத்தோடு ஐக்கியமாகி விடுவதுபோல், நாமும் பரமாத்மாவிடம் இரண்டறக் கலந்து விடுவோம்.

சமுத்திர ஜலம் என்றென்றும் அளவு குறையாமலேதான் இருக்கிறது. அதிலிருந்து ஆவி பிரிந்து சென்று மழையாகி, உலகத்தில் பல விதங்களில் நதி, ஒடை, வாய்க்கால், ஏரி, குளம், கிணறு என்று ஜலாசயங்களாக ஆகின்றன சமுத்திரம் வற்றுவதில்லை. அதில் புதிதாக வெள்ளம் வருவதுமில்லை.அதிலிருந்து வந்த ஆறு குளங்கள் வற்றலாம்; அல்லது இவற்றில் வெள்ளம் வரலாம்.வெயில் நாளானால் வீட்டுக் குழாயில் ஜலம் இல்லை; ரெதில்ஸில் ஜலம் இல்லை என்கிறோம். மழைக் காலத்தில் கோதாவரியில் வெள்ளம், காவேரியில் இந்த உலகத்தில் எத்தனை ஜலம் இருந்ததோ அதில் ஒர் இம்மிகூட - க்ரெயின் கூட - இன்றுவரை குரையவில்லை, கூடவும் இல்லை.

பணக்காரர்கள் சிலர் நிலத்தை விற்று வீடு வாங்குவார்கள்; வீடுகளை விற்று பாங்கில் போடுவார்கள்; பாங்குப் பணத்தை 'ஷேர்'களாக மாற்றுவார்கள். மொத்தச் சொத்து மாறாது. அவற்றின் ரூபம்தான் பலவிதத்தில் மாறும். எல்லாவற்றையும் கூட்டினால் கணக்கு சரியாக இருக்கும். அப்படியேதான் லோகத்தில் உள்ள  மொத்த ஜலம் சமுத்திரத்தில் இருக்க வேண்டும், அல்லது நதியாக, ஏரி, குளங்களாக இருக்கவேண்டும்.

பரமாத்மா பலவாகத் தோன்றியிருக்கிறார். தோன்றிய பின்னும் சமுத்திரம் மாதிரி கூடாமல், குறையாமல் இருக்கிறார். நமக்குக் கூடுதல், குறைவு எல்லாம் உண்டாகிறதாகத் தோன்றுகிறது. ஆனால் உள்ளது ஒன்றேதான் என்ற ஞானம் வந்தால், எங்குமே கூடுதலும் இல்லை, குறைவும் இல்லை.

- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

No comments: