Showing posts with label திருக்குறள். Show all posts
Showing posts with label திருக்குறள். Show all posts

Wednesday, January 5, 2011

வள்ளுவர் வாக்கு! - இனிய உளவாக இன்னாத கூறல்!


இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

இனிய சொற்கள் இருக்கின்ற போது ஒருவன் கடுமையான சொற்களைக் கூறுதல், இனிய கனி இருக்க காயைத் தின்பது போன்றதே
என்கிறார் வள்ளுவர்.

பல நேரங்களில் நாம் இனிமையாக பேசுவதை விட வள்ளென்று விழுவது நம்மையறியாமலே நடந்து விடும். அதையே கொஞ்சம் மென்மையாக சொல்லி இருந்தால் சங்கடங்களைத் தவிர்த்திருக்கலாமோ என்று பின்னால் தோன்றும். அலுவலகத்தில் வேலை செய்யும் போது பல நேரங்களில் பலரும் இப்படி உணர்ந்திருப்பார்கள். சே! கொஞ்சம் மென்மையா பேசியிருக்கலாம் என்று.

முன்பெல்லாம் சரியாக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை எனது அலைபேசியில் அழைப்பு வரும்..

அன்றும் அப்படித்தான்...

"ஏய், டெல்லி!" என்று அந்தப் பெண்குரல் அதிகாரமாக அழைக்கும் போது கொஞ்சம் மிரட்சியாக இருக்கும்.

"யாருங்க?" என்பேன்

"டெல்லி தானே?"

"இல்லீங்க, ராங் நம்பர்"

"இன்னாது..?"

"ஹலோ, ராங்க் நம்பருங்க!" என்பேன் எரிச்சலாக.

"ஆங்.." தொடர்பு துண்டிக்கப்பட்டது.

ஒரே நபரிடம் எத்தனை முறை "ராங் நம்பர்" என்று சொல்லிக்கொண்டே இருப்பது. அதனால் பதில் கடுப்பாகவே வெளிப்படும். "கனியிருப்ப காய்கவர்ந்தற்று!"

மறுநாள்..

அதே பெண் குரல்.

"ஏய், டெல்லீ.."?

"ஹலோ.. ராங் நம்பருங்க!"

"இன்னது ராங் நம்பரா.. ஏய் எங்கடா இருக்க நீ?"

"ஏங்க ராங் நம்பர்ங்க...!"

அதற்குள் எதிர் தரப்பில் ஆண்குரல் "டேய்... த்தா..இன்னா ராங் நம்பரா? டேய் நாயே.. ****** ******, ********* , *************, ******** , ****************, மீண்டும் பெண்குரல் டேய்...**** *****". 'ஸேம் ப்ளட்"

ஆத்தாடி தொடர்பை நானே துண்டித்து விட்டேன்..... ராங் நம்பர்ன்னு சொன்னது ஒரு குத்தமாய்யா?

நான் வாங்கிய அலைபேசி எண் இதற்கு முன்னர் டெல்லிக்கோ பம்பாய்க்கோ இருந்திருக்கலாம் என்று புரிந்து கொண்டேன்.

சரியாக ஆறு மாதம் கழித்து மீண்டும் அதே பெண் குரல்

"யாரு டெல்லியா?"

இந்த முறை எச்சரிக்கையாக பேச வேண்டும். எரிச்சலாக "ராங் நம்பர்" என்று சொல்லக்கூடாது என்று தீர்மானித்துக் கொண்டேன்.

மிகவும் அன்பொழுக அதி மரியாதையாக "மேடம், நீங்க தப்பா டயல் பண்ணியிருக்கீங்கன்னு நினைக்கிறேன்... கொஞ்சம் செக் பண்றீங்களா
மேடம்!" என்றேன்.

உடனே "ஆங் சரி!" துண்டித்துக்கொண்டார்.

மீண்டும் ஒரு முறை அதே ஊரை கூப்பிட்டார்...அந்தப் பெண்.

மறுபடியும் மிகவும் மரியாதையாக அன்பாக அதே போல் பேசினேன்.

இவ்வளவு மரியாதையாக நம்மிடம் பேசுகிறான். எனவே இவன் நிஜமாகவே நாம் அழைக்கும் டெல்லி இல்லை என்று ஒரு தீர்மானத்திற்கு வந்திருப்பார் போலும். ராங் நம்பர் தொல்லை அத்தோடு முடிந்தது.

வள்ளுவர் வாக்கும் பலித்தது.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

வாழ்க வள்ளுவர்!

Wednesday, August 26, 2009

வள்ளுவர் வாக்கு


யானென தன்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்

உடலை 'யான்' எனவும், பொருள்களை 'எனது' எனவும் நினைக்கின்ற மயக்கத்தை அறுத்துவிடுகிறவன் வானோர்க்கும் உயர்ந்த உலகம் சேர்வான்.

விளக்கம்: வாழ்வியல் சுகங்கள் மீதும் இந்த உடல் மற்றும் உயிர் மீதும் அதீத ஆசைகளைக் கொண்டிருந்தால் அவற்றை விட்டு மீள முடியாது. இறப்பிற்கு பின்னும் ஆத்மா இந்த பூலோக ஆசைகள் மீதே சஞ்சரித்துக் கிடக்கும். பிறகு நிம்மதியான பிரபஞ்சத்தோடு கலக்க முடியாமல் மீண்டும் விட்டுப் போன இடத்தைத் தேடி ஆத்மா வந்தடையும். இது ஆத்மா சாந்தியடையும் நிலையினைக் கெடுத்துவிடும்.

அவ்வாறு உடல், பொருள்கள் மீது எனது என்று பற்று வைக்காமல் நான் என்பது ஆத்மா தான். உடலும் பொருளும் நாம் வாழ உதவும் ஒரு கருவியே என்று மனதார நினைத்துக் கொண்டால், இறப்பிற்குப் பின்னும் ஆத்மா வாழ்ந்து வந்த பொருள்கள் மீது ஆர்வம் கொள்ளாது கற்ப்பனைக் கெட்டாத இந்த பரந்த பிரபஞ்சத்தில் சஞ்சாரித்து அதனுடன் கலந்துவிடும்.

இந்த பக்குவம் ஒரே நாளில் வந்து விடாது. தினம் தினம் நாம் ஆத்மா என்பதை யார் ஒரு முறையேனும் தியானிக்கிறார்களோ அவர்களுக்கு மெல்ல மெல்ல கைகூடும். இன்பமும் துன்பமும் ஒன்றாகும். ஆத்மா சமநிலை அடையும். காலம் கடந்த பின் எந்த தடுமாற்றமும் இல்லாமல் நிம்மதியான மேலுலகம் அடைவார்கள்.

இதையே வள்ளுவர் இரண்டடிகளில் அற்புதமாகச் சொல்லியிருக்கிறார்.

ஒரு ஜென் குருவிடம் ஞானம் பெற்று வந்த சீடன் ஒருவனுக்கு தேகாபிமானம் மட்டும் குறையவே இல்லை. உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் ஆசையும் கூடவே பயணித்தது.

உயிர் மீது கொள்ளும் ஆசை உடலைக் காக்கச் சொல்லும். உடல் மீது கொள்ளும் ஆசை அதனைக்காக்கும் பொருட்டு பொருளீட்ட வைக்கும். பொருளீட்டத் துவங்கினால் அதற்கு எல்லையே இல்லாமல் போகும். விரும்பியதை அடைய முற்படுவதிலேயே பவகாரியங்களும் தோன்றிவிடுகிறது. இத்தகைய ஆசைகள் முடிவற்றவை. எனவே பற்றுதல் அற்று இரு என்று சீடனுக்கு எவ்வளவோ போதித்தும் அவன் கேட்கவில்லை. சரியான தருணம் வரும் போது அவனுக்கு உணர்த்தலாம் என்று குரு காத்திருந்தார்.

திருமணத்தின் போது அக்னியைச் சுற்றி ஏழு அடிகள் நடப்பது ஏன்?

ஒரு முறை குருவும் சீடர்களும் கடுமையான குளிர் பிரதேசத்திற்குச் சென்றார்கள். அங்கே வெட்ட வெளியில் சீடர்களை அமரவைத்தார் குரு. நேரம் செல்லச் செல்ல குளிர் அதிகமாகிக் கொண்டே இருந்தது.

எல்லோரும் அமைதியாக இருந்த நிலையில், தேகத்தின் மீது பற்றுதல் கொண்ட சீடன் கேட்டான் "குருவே, குளிர் இன்னும் அதிகமானால் என்ன செய்ய?"

குரு கூறினார் "கைகளை தேய்த்து முகத்தில் ஒற்றிக்கொள்"

"குருவே! குளிர் அதை விட அதிகம் என்றால்?"

"ஒரு கம்பளி எடுத்து போர்த்திக் கொள்?"

"கம்பளி போர்த்தியும் தாங்க முடியாத குளிர் என்றால்"

"நெருப்பை மூட்டி கதகதப்பாய் இரு"

"குருவே! நெருப்புக்கும் அடங்காத குளிர் என்றால்?"

"உறைந்து போ!" என்றார் குரு.

உணர்ந்து கொண்டான் சீடன்.

Saturday, July 11, 2009

வள்ளுவர் வாக்கு

அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை

பிறிதொரு உயிரின் துன்பத்தை தன் துன்பம் போலக் கொள்ளாத இடத்தில் அறிவினால் ஆகும் பயன் தான் ஏதும் உண்டா!

ஒரு சிறிய எடுத்துக்காட்டு என்னவெனில், ஊரே வியக்கும் வண்ணம் மிகப்பெரிய வீடு கட்டி அந்தஸ்தில் தான் எத்தகையவன் என்று உற்றாருக்கும் ஊருக்கும் எடுத்துக் காட்டும் மனிதர்கள், கடும் மழையில் சிறு நாய்க் குட்டி அந்த வீட்டின் ஒரு ஓரத்தில் ஒதுங்கினால் அடித்து விரட்ருவார்கள். வாழ இடமில்லாமல் அலையும் ஒரு ஜீவன் தானே என்ற ஒரு சிறிய பரிவு கூட இந்த மனிதர்களிடம் இருக்கவில்லையெனில் இவர்களது அறிவு இந்த சமூகத்திற்க்கு என்ன நன்மையைச் செய்து விடப்போகிறது!

Sunday, May 31, 2009

வள்ளுவர் வாக்கு


பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் 
திண்மையுண் டாகப் பெறின்.  

தான் கொண்ட கணவனுக்கு துரோகம் செய்யாத வாறு கற்பு என்னும் மனவுறுதி, இல்லாளிடம் உண்டாயிருந்தால் அந்தப் பெண்ணைவிடப் பெருமை மிக்கது உலகில் என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை.

திருக்குறள்; 
அறத்துப்பால் ‍- இல்லறயியல்