Showing posts with label kathaigal. Show all posts
Showing posts with label kathaigal. Show all posts

Tuesday, January 11, 2011

புராணங்கள் பொய்யல்ல!


புராணங்கள் பொய் என்று ஆங்கிலேயர்கள் சொல்லி நம்முடைய வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறார்கள். அதிலே தங்களுக்குப் பிடித்த பிரித்தாளும் கொள்கைக்கு சாதகமான துவேஷ தத்துவங்களையும் சேர்த்து விட்டார்கள். புராணம் பொய்யென்று இவர்கள் கூறினார்கள் என்றால் அதுபற்றி இவர்கள் எழுதிய வரலாற்றிலும் பொய் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு உள்ளதை உள்ளபடி எழுதுவதற்கு தற்போது முயற்சிகள் நடந்து வருகிறது.

புராணத்தை நம்ப முடியாதது என்று கூறி அதற்குக் காரணம் அதிலே இப்போது நாம் பார்க்கிற எதார்த்த நிலவரங்களுக்கு வேறான விஷயங்கள் இருக்கின்றன என்கிறார்கள். தேவர்கள் வந்தார்கள், போனார்கள், வரம் கொடுத்தார்கள் என்றால் அதெல்லாம் இந்த காலத்தில் நடக்காததால் அவற்றை பொய் என்று கூறிவிடுகிறார்கள். பெண்ணை கல்லாக்கினார்கள், கல்லை பெண்ணாக்கினார்கள், சூரியனை நிறுத்தி வைத்தார்களென்றெல்லாம் கூறுவது நம் சக்திக்கு உட்பட்டதில்லை என்பதால் அதெல்லாம் வெறும் புரட்டு என்கிறார்கள்.


தற்காலத்தில் நடக்க முடியாது என்று எப்படி சொல்லலாம்? வேத மந்திர சச்க்தியும் உயர்ந்த தபஸும் யோகாநுஷ்டானமும் பூர்வத்தில் நிறைய இருந்தன என்பதற்கு நிறைய ஆதாரங்கள் பழமையான புத்தகங்கள் பலவற்றில் இருக்கின்றன. அவைகள் இருந்தவரை தேவசக்திகளெல்லாம் இந்த உலகத்தினராலேயே சுலபமாக கிரக்கிக்கும் படி இருந்திருக்கின்றன. நம்மால் அது ஆகவில்லை என்பதால் பழமை பொய்யென்று ஆகிவிடாது.

 ஆங்கிலப் படிப்பு படித்து விட்டதாலேயே அறிவியலால் நிரூபிக்க முடியாததெல்லாம் புரளியென்று கூறுவது சரியான அனுகுமுறை ஆகாது. இப்போதும் கூட பல இடங்களில் புரானங்களில் கூறப்படுவது போன்ற பத்து பன்னிரண்டு அடி நீளமுள்ள மனித எலும்புக்கூடுகள் கிடைத்துக்கொண்டு தான் இருக்கின்றன. இதைப் பார்த்தால் பனைமர தென்னை மர உயரமுள்ள ராக்ஷஸர்கள், சிங்கம் மாதிரியான உடம்பும், .யானை மாதிரியான தும்பிக்கையும் கொண்ட யாளி போன்ற மிருகங்கள் முற்காலத்தில் இருந்திருக்ககூடும் என்பது நம்பக்கூடியதாகவே இருக்கிறது.





கால் எலும்பு மட்டுமே பதினாறு அடி நீளமுள்ள ஒரு மனிதனின் எலும்புக்கூடு, யானையைப் போல பத்து மடங்குள்ள ஒரு மிருகத்தின் எலும்புக்கூடு முதலானவைகளை ஐஸ்பெர்க்கில் ஆர்ட்டிக் பிரதேசத்தில் பனிக்கட்டிக்கு உள்ளிருந்து கண்டுபிடித்திருக்கிறார்கள். இதை தொல்லியல் துறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்று வியக்கிறார்கள், கூத்தாடுகிறர்கள். தொல்லியலோடு புவியிலையைம் சேர்த்து கணக்கிட்டு இவை இத்தனை லட்சம் வருஷத்திற்கு முன் இருந்தவை என்கிறார்கள். இதோடு புராணவியலையும் சேர்த்தால் நம்முடைய பழைய கதைகள் நிஜம் தான் என்றாகிவிடும்.




பூந்தமல்லி, டிச. 15-
குன்றத்தூரில் சிங்கம் முகம் போல பிறந்த பெண் குழந்தை
குழந்தை முகம் சிங்கம் போலவும், பற்கள் பெரியதாகவும், ஆக்ரோஷமாக காணப்பட்டது.

இந்து தர்மத்தில் கதை மூலமாக தத்துவம் போதிக்கப்பட்டது. அதற்காக கதையைப் பொய்யென்று கூற முடியாது. இந்தக்காலங்களில் கூட செய்தித்தாள்களில் இரண்டு தலையும் கொண்டகுழந்தை, நாலு கையுமாக பிறந்த குழந்தை என்றெல்லாம் படிக்கிறோம். மனித இனத்திலும் சேராமல் மிருக இனத்திலும் சேராமல் நடுவாந்திரமாக ஒரு விசித்திரக் குழந்தை பிறந்தது என்று படிக்கிறோம். இயற்கையும் சில நேரங்களில் மாறுபட்டு காட்சியளிக்கலாம் என்பது பல நேரங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதனை ஆங்கிலத்தில் Freak என்பார்கள். ஆதலால் புராணங்களில் கூறப்பட்டிருப்பதைப் போல பல விசித்திரமான மனித தோற்றங்கள் வாழ்ந்திருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

இது சும்மா!




புராணக்கதைகளில் கற்பனைகளும் இருக்கலாம். பிற்காலத்தில் சிலர் இடைச்செருகல்களைச் செய்திருக்கலாம். ஆனால் தற்காலத்தில் இவற்றைப் பிரித்து பார்க்க இயலாததால், அக்கதைகள் சொல்லவரும் கருத்துக்களை உள்வாங்கி அவற்றை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதே நமது கடமையாகும்.

எல்லாவற்றிர்கும் மேல், ஆராய்ச்சி, கீராய்ச்சி என்று சொல்லிவிட்டால் உடனே நாம் அப்படியே நம்பிவிடுவது என்பது தான் எல்லாவற்றையும் விடப் பெரிய மூடநம்பிக்கை. இன்றைய ஆராச்சிகளிலும் தவறுகளும், பொய்களும் கலந்திருக்கவே செய்கின்றன. எனவே கற்பனை என்று நினைத்தாலும் புராணக்கதைகள் மனதில் நன்மையை விதைத்து தீமையை விலக்கி இறைவனின் பால் நம்பிக்கை உண்டாகச் செய்வதால் புராணக்கதைகளின் நோக்கம் என்னவோ பூர்த்தியாகிவிடுகிறது.


- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.


.

Saturday, October 31, 2009

அக்பர் பீர்பால் கதைகள்!


கிணற்றுக்குள் விழுந்த வைர மோதிரம்!

ஒரு நாள் அதிகாலையில், சக்ரவர்த்தி அக்பர், சில அதிகாரிகள் புடைசூழ வெளியே உலாவக் கிளம்பினார். பீர்பலும் அவர் கூடவே சென்றார்.

அக்பர் கோடையின் கொடுமையைப் பற்றி பேசிக் கொண்டே வந்தார். அவர்கள் செல்லும் வழியில் ஒரு கிணறு தென்பட்டது. அதைப் பார்த்த அக்பர், "தலைநகரில்உள்ள கிணறுகள் யாவும் வற்றி விட்டன என்று கேள்விப்பட்டேன். இந்தக் கிணற்றில் தண்ணீர் இருக்கிறதா பார்ப்போம்" என்று சொல்லிக் கொண்டே அதன் அருகில் சென்று குனிந்து பார்த்தார்.

"இது மிகவும் ஆழமான கிணறு. அடியில் தண்ணீர் இருக்கிறதா, இல்லையா என்றே தெரியவில்லை" என்று அக்பர் கூறவும், அதைக் கேட்ட பீர்பால், "பிரபு! தண்ணீர் இருக்கிறதா என்று அறிய ஒரு கல்லைத் தூக்கிப் போட்டால் தெரிந்து விடுமே! தண்ணீர் இருந்தால் கல்பட்டு தெளிக்கும்,"

என்று சொல்லிவிட்டு, கிணற்றினுள் ஒரு கல்லை எறிந்தார். கல் அடியில் சென்று விழுந்த ஒலியைக் கேட்டதுமே, கிணறு முற்றிலும் வற்றியுள்ளது என்று தெரிந்தது.

"பீர்பால்! கிணற்றினுள் ஒற்றைக் கல்லாகப் போடக் கூடாதென்று சொல்லுவார்கள். அதனால் இன்னொரு கல்லை நான் போடுகிறேன்" என்று சொல்லிக் கொண்டே, தன் விரலில் இருந்த ஒரு வைர மோதிரத்தை அக்பர் கிணற்றினுள் போட, சுற்றியிருந்த அனைவரும் திகைத்துப் போயினர்.

"பிரபு! வைரமோதிரத்தை ஏன் போட்டீர்கள்?" என்று பீர்பால் கேட்க, "வைரமும் ஒரு கல்தானே! அதனால்தான் போட்டேன்" என்றார் அக்பர்.

"ஆயினும் கல்லெல்லாம் வைரக்கல்லாகுமா? நீங்கள் செய்தது சரியா?" என்று பீர்பால் கேட்டார்.

"அதனால் என்ன, பீர்பால்! யாரையாவது கிணற்றில் இறங்கச் சொல்லி மோதிரத்தை எடுத்து விட்டால் போகிறது!" என்ற அக்பர் தொடர்ந்து, "கிணற்றுள் இறங்கினால் யார் வேண்டுமானாலும் மோதிரத்தை எடுத்து விடலாம். ஆனால் யாராவது கிணற்றுக்குள் இறங்காமலே அந்த மோதிரத்தை எடுக்க முடியுமா?" என்று கேட்டார்.

"பிரபு! எனக்கு யோசனை தோன்றிவிட்டது!" என்று பீர்பால் உற்சாகத்துடன் கூற, "அப்படியா? நீ எப்படி மோதிரத்தை கிணற்றுள் இறங்காமலே எடுப்பாய்?" என்று ஆர்வத்துடன் அக்பர் கேட்டார்.

பீர்பால் ஒரு நூலை எடுத்து அதன் ஒரு முனையில் கல் ஒன்றக் கட்டினார். அந்தக் கல்லை கிணற்றுக்கடியில் இருந்த ஈரமான சானத்தில் நன்றாக முக்கினார். நூலின் மறுமுனையை கிணற்றுக்கருகே இருந்த ஒரு மரத்துடன் சேர்த்துக் கட்டினார். சானத்துடன் இருந்த கல்லை கிணற்றுக்குள்ளிருந்த வைரக்கல் மீது குறிபார்த்து எரிந்தார். அந்த கல் வைர மோதிரத்தின் மீது நன்றாக ஒட்டிக் கொண்டது.

அங்கிருந்த காவலர்களை அதைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு பீர்பால் வீடு திரும்பினார். வீடு திரும்பியபின் உணவருந்தி விட்டு நிம்மதியாகத் தூங்கினார். பிறகு மாலையில் எழுந்து கிணற்றை நோக்கிச் சென்றார். காலையில் அவர் வீசியெறிந்த சாணம் வெயிலில் நன்றாகக் காய்ந்து உலந்திருந்தது. அதன் மீது அவர் வீசிய கல்லும் மோதிரமும் சாணத்துடன் நன்றாக ஒட்டிக் கொண்டிருந்தது.

பிறகு பீர்பால் மிகவும் நிதானமாகவும், ஜாக்கிரதையாகவும் நூலைப் பிடித்து மேலே இழுக்க, கல் கிணற்றுக்குள்இருந்து மேலே வந்துவிட்டது. கல்லில் ஒட்டிய சாணமும் உலர்ந்து போய் அதனுடன் சேர்ந்து பத்திரமாக இருந்தது. அதிலிருந்து மோதிரத்தை எடுத்து, சுத்தமாகக் கழுவியபின், பீர்பால் அரண்மனை தர்பாருக்குச் சென்றார்.

அந்த நேரத்தில் அக்பர் தர்பாரில் தன் அதிகாரிகளுடன் அமர்ந்திருந்தார். அவரை வணங்கிய பீர்பால், "பிரபு! நான் வெற்றிகரமாகத் தங்கள் மோதிரத்துடன் வந்திருக்கிறேன்" என்றதும் அக்பருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

"கிணற்றுள் இறங்காமலேயே மோதிரத்தை எடுக்க உன்னால் எப்படி முடிந்தது?" என்று அக்பர் ஆவலுடன் கேட்க "மூளையைப் பயன்படுத்தினால் முடியாதது ஒன்றுமில்லை என்று நீங்கள் சொன்னதை நிரூபித்து விட்டேன்" என்று கூறிய பீர்பால், தான் மோதிரத்தை மீட்டதை விளக்கிக் கூறினார்.

"பலே! சபாஷ்! உன்னைப் போல் புத்திசாலியை நான் பார்த்ததே இல்லை!" என்று பாராட்டிய அக்பர் பொற்காசுகள் நிரம்பிய பையை பீர்பாலுக்குப் பரிசளித்தார்.

Sunday, October 18, 2009

விக்கிரமாதித்தன் கதைகள் - 9


விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக் கொண்ட வேதாளத்தைப் பிடிக்கச் சென்று, பெரும் போராட்டத்திற்கு பிறகு வசமாகப் பிடித்துக் கொண்டான். தோளில் வேதாளத்தை சுமந்தபடி குகையை விட்டு நடக்கத் தொடங்கினான்.

அவனது பராக்கிரமத்தை பார்த்து வியந்தாலும் வேதாளம் தான் தப்பித்து கொள்வதற்கு வழி தேடிய வண்ணமே இருந்தது. அதனால் வேதாளம் மீண்டும் ஒரு கதையை விக்கிரமாதித்தனுக்குச் சொல்லத்துவங்கியது.

விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்! "யமுனை நதிக்கரையில் பிரம்மஸ்தலம் ஒன்று இருக்கிறது. அங்கே அக்னிஸ்வாமி என்ற பிராமனன் ஒருவன் இருந்தான். அவன் வேதங்கள் முழுமையும் அறிந்தவன். அவனுக்கு மந்தாரவதி என்னும் அழகிய பெண் ஒருத்தி இருந்தாள்.

படைத்த பிரம்மனே பார்த்து வியக்கும் அழகு கொண்ட அந்த பெண்ணை கண்டவர்களெல்லாம் காதல் கொள்வர். அத்தனை அழகு.

காலம் சென்றது. அவள் இளம் பருவத்தை அடைந்தாள். அவளுக்கு ஏற்ற படி எல்லா அம்சங்களும் நிறைந்த மூன்று பிராமன இளைஞர்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்களில் ஒவ்வொருவனும் அந்தப் பெண்ணைத் தனக்கே மணம் செய்து கொடுக்குமாறு அவளது தந்தையை வேண்டினர்.

அவளை வேறு யாருக்காவது கொடுத்தால் தன் உயிரையே விட்டுவிடுவதாக ஒவ்வொருவனும் கூறினான். ஒருவனுக்கு மணமுடித்தால் மற்ற இருவர்கள் தற்கொலை செய்து கொள்வார்களோ என்ற பயத்தில் அவளது தந்தை யாருக்கும் அவளை மணமுடிக்காமல் இருந்தான்.

இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு திடீரென நோய் தாக்கி படுக்கையில் விழுந்தாள். குனப்படுத்தவே முடியாமல் இறந்தும் போனாள்.

அவளையே நினைத்து வாழ்ந்து வந்த மூன்று இளைஞர்களும் மிகவும் மனவேதனையும் துக்கமும் அடைந்தனர். அவள் உடல் சுடுகாட்டில் தகணம் செய்யப்பட்டது. அம்மூவருள் ஒருவன் சுடுகாட்டிலேயே தங்கிவிட்டான். அவளது நினைவு மிகவும் வாட்டவே அந்தப் பெண்ணை தகணம் செய்த சாம்பலையே படுக்கையாக ஆக்கி அதிலேயே உறங்கி அங்கேயே தங்கத் துவங்கினான்.

மற்றொருவன் அவள் மூது கொண்ட பாசத்தால் அவளது அஸ்திகளை எடுத்துக் கொண்டு கங்கையில் கரைக்க போனான்.

மூன்றாமவனோ துக்கத்தால் துறவியாக மாறி தேசாந்தரம் போகத்துவங்கினான்.

இப்படி தேசாந்திரமாகத் திரிந்த மூன்றாமவன் ஒருநாள் ஒரு ரிஷியின் வீட்டில் சாப்பிடச் சென்றான். அந்த வீட்டில் அவனுக்கு மரியாதையான உபசரிப்புச் செய்து அவனுக்கு வயிரார உணவளித்தனர். அந்த நேரத்தில் அந்த ரிஷியின் வீட்டில் இருந்த குழந்தை விளையாடிக் கொண்டே அடுப்பில் இருந்த நெருப்புக்குள் விழுந்து விட்டது. கொழுந்து விட்டெரிந்த நெருப்பில் குழந்தை உடல் கருகி சாம்பலானது.

குழந்தையின் தாய் கதறி அழத்தொடங்கினாள். மூன்றாமவனோ செய்வதறியாது திகைத்தான். அப்போது ரிஷி இருவரையும் சமாதானப்படுத்தினார். "கவலை கொள்ளாதீர்கள்! நான் அவனை பிழைக்கவைத்து விடுவேன்" என்று கூறி சஞ்சீவி மத்திரம் அடங்கிய ஒரு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு, மந்திரங்கள் சொன்னவாறே ஒரு பிடி மண் எடுத்து குழந்தை எரிந்த சாம்பல் மீது வீசினான்.

குழந்தை முன் இருந்தபடியே உயிர் பிழைத்து எழுதுந்தது.

இதனை பார்த்து அதிசயித்துப் போன துறவியாக இருக்கும் இளைஞன் தனது நேசம் மிக்க காதலியை நோய்க்கு கொடுத்துவிட்டு அவள் சாம்பலானதைப் பார்த்து துக்கத்தில் இருப்பதாகவும் தெரிவித்தான். அதனால் தனக்கும் இந்த மந்திரத்தைக் கற்றுத்தரும்படி இளைஞன் ரிஷியிடம் கேட்டுக்கொண்டான். அவன் மீது இரக்கப்பட்ட ரிஷியும் அவனுக்காக அந்த மந்திரங்களைக் கற்றுக் கொடுத்தார்.

மந்திரங்களைக் கற்றுக்கொண்ட மூன்றாமவன் மந்தாரவதையை தகணம் செய்த இடத்திற்கு விரைந்து வந்தான். அங்கே மற்றவன் சாம்பல் மீதே படுத்துக் கொண்டு அவளையே நினைத்துக் கொண்டிருந்தான். மற்றவன் அவளது அஸ்தியைக் கரத்து விட்டு அப்போது தான் மயானத்திற்கு வந்திருந்தான்.

மந்திரங்களைக் கற்றுக்கொண்ட இளைஞன் நான் மந்தாரவதியை உயிர்பிக்கும் மந்திரம் வைத்திருக்கிறேன் என்றும் அவளை உயிருடன் வரவழைக்கிறேன் என்றும் கூறி சாம்பல் மீது இருந்தவனை விலகச் சொன்னான். இரு இளைஞர்களும் அவனுக்கு விலகி வழிவிட்டனர்.

இப்போது சில மந்திரங்களைச் சொல்லி ஒரு பிடி மண் எடுத்து மந்தாரவதியின் சாம்பலில் போட்டான் இளைஞன். எல்லோரும் வியக்கும் வண்ணம் மந்தாரவதி உயிருடன் எழுந்து
நின்றாள்.

அவளது அழகைக் கண்டு மூவரும் அவள் மிது தாள முடியாத மையல் கொண்டனர். மூவரும் தன்னைத்தான் இவள் மணக்க வேண்டும் என்றனர்.

"அவளை உயிர்பித்தவனோ என் மந்திரத்தால் தானே இவள் பிழைத்தாள் அதனால் இவள் எனக்குத்தான் சொந்தம்" என்றான்.

மற்றவனோ "அவளது அஸ்தியை கங்கையில் கரைத்து அவளது ஆத்மாவை ஜீவனுடன் வைத்திருந்தது நான் தான் அதனால் அவள் எனக்குத் தான் சொந்தம்" என்றான்.

இன்னொருவன் "அவளது சாம்பலிலேயே படுத்துறங்கி அதை பத்திரமாக பாதுகாத்ததால் தானே அவளை உங்களால் உயிர்ப்பிக்க முடிந்தது எனவே, அவள் எனக்கே சொந்தம்" என்றான்.

இப்போது கதையை நிறுத்தி விட்டு வேதாளம் விக்கிரமாதித்தனிடம் கேட்டது "விக்கிரமாதித்தா! இந்தப் பேரழகி மந்தாரவதி யாரை மணக்க வேண்டும் என்று நீ சரியான தீர்ப்பைச் சொல்" விடை தெரிந்து வாய் திறக்காமல் இருந்தால் உனது தலை வெடித்து விடும் நினைவில் கொள் என்றது.

விக்கிரமாதித்தன் பேசலானான். "எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்திருந்தாலும் மந்திர வலிமையால் அவளைப் பிழைக்கச் செய்தவன் உயிரி கொடுத்தவன் என்ற முறையில் அவளுக்கு தந்தையாவான். எலும்புகளைக் கொண்டு சென்று கங்கையில் கரைத்தவன் ஈமக்கடன் செய்த மகனாவான். அவள் மீது கொண்டுள்ள ஆசையால் அவன் சாம்பலை விட்டுப் பிரியாமல் மயானத்திலேயே தங்கித் தபசு செய்து அதனைத் தழுவிக் கிடந்தவனே அவள் புருஷனாவான்!" என்றான்.

இதனைக் கேட்ட வேதாளம் மிகச் சரியாகச் சொன்னாய் விக்கிரமாதித்தா. ஆனால் நீ வாய் திறந்து பேசியதால் நான் உன்னை விட்டுப் போகிறேன். இதோ பார்...இப்பொழுது முடிந்தால் என்னைப் பிடித்துக் கொள் என்று சொல்லி விக்கிரமாதித்தன் பிடியிலிருந்து தப்பி மீண்டும் குகையை நோக்கிப் பறந்தது வேதாளம்.

Wednesday, October 14, 2009

அக்பர் பீர்பால் கதைகள்!


குளிரில் நின்றால் பரிசு

ஒரு நாள் இரவு நேரத்தில் அக்பரும், பீர்பாலும் உரையாடிக்கொண்டிருந்தார்கள். குளிர் அதிகமாக இருந்ததால் சால்வையை இருக்கமாக இருவரும் போர்த்திக்கொண்டிருந்தனர். அப்படியும் குளிர் அக்பரை மிகவும் வாட்டியெடுத்தது.

அக்பர் பீர்பாலை பார்த்து " பீர்பால் இந்த குளிரின் கொடுமையை பார்த்தீரா... எதிரிகளுக்கு அஞ்சாத நெஞ்சம் இருந்தும் இந்த குளிருக்கு அஞ்சாமல் இருக்க முடியவில்லையே! இந்த குளிரை பொருட்படுத்தாமல், யமுனை ஆற்றில் ஒரு இரவு முழுக்க, கழுத்தளவு நீரில் யாராலும் நிற்க இயலுமோ! அவ்வாறு நின்றால், அவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாக வழங்கலாம்" என்றார்.

"அரசே, சிங்கத்தின் முடியை கூட கொண்டு வந்துவிடலாம். ஆனால் நடுங்கும் குளிரில் இரவு முழுவது ஆற்றில் நிற்பது என்பது சதாரண காரியமா?" என்றார் பீர்பால்.

"யமுனை ஆற்றில் குளிரில் நிற்பதற்கு எந்தவித திறமையும் தேவையில்லை, மன உறுதி இருந்தாலே போதும்! நாடு முழுவதும் இந்த செய்தியை அறிவிக்க சொல்லுங்கள்! பணத்தின் மீது ஆசைப்பட்டு நிறைய பேர் பங்கு பெற வருவார்கள். அதில் யார் வெற்றி பெறுவார்கள் எனப்பார்ப்போம்" என்றார் அக்பர்.

அரசரின் ஆணை நாடெங்கும் அறிவிக்கப்பட்டது. அடுத்த நாளே, ஒரு இளைஞன் அரசரிடம் வந்து " அரசே, யமுனை நதியில் கழுத்தளவு நீரில் இரவு முழுவதும் நிற்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்" என்றான்.

அக்பர் அந்த இளைஞனை வியப்பாக பார்த்து "இன்று இரவு போட்டிக்கு தயாராகு" என்றார். இளைஞனும் தயாரானான். நடுங்கும் குளிரில் நிற்பது சதாரண விசயமில்லையே என நினைத்த அக்பர், அந்த இளைஞனை கண்காணிப்பதற்கு இரண்டு காவலாளிகளை நியமித்தார்.

யமுனை ஆற்றில் வெற்று உடம்புடன் இறங்கினான் இளைஞன். கழுத்தளவு வரை நீர் உள்ள இடத்தில் நின்று கொண்டான். உடல் மிகவும் நடுங்கியது, குளிர் வாட்டியது, அவனால் தாக்குபிடிக்கமுடியவில்லை. ஆனாலும் பரிசாக கிடைக்கப்போகும் ஆயிரம் பொற்காசுகளை எண்ணி பார்த்தான். புது தெம்பு வரவே, இரவு முழுவதும் கண் விழித்து நின்று கொண்டிருந்தான்.

பொழுது விடிந்தது. வெயில் மேனியில் பட உடல் சீரான நிலைக்கு வந்தது. ஆயிரம் பொற்காசுகளை பெறப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் ஆற்றை விட்டு மேலே வந்தான். அவனை காவலாளிகள் மன்னரிடம் அழைத்து சென்று இரவு முழுவது இளைஞன் கழுத்தளவு நீருக்குள் நின்றதை கூறினார்கள்.

அக்பருக்கோ மிகவும் வியப்பாக இருந்தது. "இளைஞனே உன் மன உறுதியை பாராட்டுகிறேன்! அந்த இரவில், கடும்குளிரில் நீருக்குள் எப்படி இருந்தாய்? அப்படி நிற்கும்போது உனக்கு எந்த வகையிலும், ஏதாவது துணையாக இருந்ததா? என்றார் அக்பர். அந்த இளைஞனும் அப்பாவியாய் "அரசே அரண்மனையின் மேல் மாடத்தில் எரிந்து கொண்டிருந்த சிறிய விளக்கின் ஒளியை பார்த்துக்கொண்டே இரவுப்பொழுதை கழித்தேன்" என்றான்.

"இளைஞனே அதானே பார்த்தேன். நடுங்கும் குளிரில் தண்ணீருக்குள் எப்படி உன்னால் இருக்க முடிந்தது என்று இப்பொழுது புரிகிறது! உன் குளிரை போக்க அரண்மனையிலிருந்து வீசிய விளக்கின் ஒளி உனக்கு உதவி செய்திருக்கிறது. அந்த சூட்டில் தான் இரவு முழுவது நின்றிருக்கிறாய். எனவே உனக்கு ஆயிரம் பொற்காசுகள் கிடையாது" என்றார்.

பரிசுத்தொகை கிடைக்கவில்லை என்றதும் அந்த இளைஞன் மிகவும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றான். பீர்பால் அவனை கண்டு என்னவென்று விசாரிக்க. இளைஞனும் பீர்பாலிடம் எல்லாவற்றையும் சொன்னான். பீர்பால் அவனுக்கு ஆறுதல் கூறி பரிசு தொகையை கிடைக்க உதவி செய்வதாக உறுதியளித்தார்.

சில நாட்களுக்கு பிறகு, அக்பர் வேட்டையாட புறப்பட்டுக்கொண்டிருந்தார். பீர்பாலை தம்முடன் அழைத்து செல்ல எண்ணிய அக்பர் காவலாளியை கூப்பிட்டு பீர்பால் வீட்டுக்கு சென்று அழைத்து வரச்சொன்னார்.

பீர்பால் தன்னை தேடி வந்த காவலாளியிடம் தான் சமையல் சென்று கொண்டிருப்பதையும், சாப்பிட்டு விட்டு வருவதாகவும் கூறினார். நீண்ட நேரம் பீர்பாலுக்காக அக்பர் காத்திருந்தார். பீர்பால் வரவில்லை. மிகவும் கோபமடைந்த அரசர் பீர்பாலின் வீட்டுக்கு சென்று பார்த்துவிட்டு வரலாம் எனப்புறப்பட்டார். பீர்பால் வீட்டில் ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு தண்ணீர் ஊற்றி வைத்திருந்தார். பாத்திரத்திலிருந்து பத்தடி தூரம் தள்ளி அடுப்பை வைத்திருந்தார். அடுப்பில் விறகுகள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. இதை கண்ட அக்பருக்கு ஒன்றும் புரியவில்லை. பீர்பாலிடமே கேட்டார்.

"பீர்பால் தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" அக்பர்.
"அரசே சமையல் செய்து கொண்டிருக்கிறேன்" பீர்பால்.

"உமக்கு என்ன மூளை குழம்பி விட்டதா? பாத்திரம் ஒரு பக்கம் இருக்கிறது. அடுப்பு ஒரு பக்கம் இருக்கிறது. அதில் எப்படி சோறு வேகும்?" என்றார் அக்பர் கோபத்துடன்.

"அரசே நிச்சயம் சோறு வேகும். யமுனை ஆற்றில் தண்ணீரில் இருந்தவனுக்கு அரண்மனையில் இருந்த விளக்கின் வெளிச்சம் சூட்டை தந்திருக்கும்போது மிகவும் பக்கத்தில் இருக்கிற அடுப்பில் ஏற்படும் சூடு அரிசி பாத்திரத்தில் பட்டும் சோறு வெந்து விடாமல் போகுமா?' என்றார் பீர்பால்.

மிகவும் நாசூக்காக தமக்கு புரிய வைத்த பீர்பாலை பாராட்டி அந்த இளைஞனை வரவழைத்து... முன்பு கூறிய படியே ஆயிரம் பொற்காசுகளை கொடுத்தார்.

Sunday, September 27, 2009

விக்கிரமாதித்தன் கதைகள் - 8

இதை சற்றும் எதிர்பார்க்காத ராஜகுமாரன் அதிர்ச்சியில் உறைந்தே போனான்.

"இங்கே என்ன நடக்கிறது நண்பா எனக்கு ஒன்றுமே புரியவில்லை, தலை சுற்றுகிறது" என்றான் ராஜகுமாரன்.

புத்திசரீரன் நிதானமாக "நான் அப்போதே சொன்னேனே நண்பா, நீ என்னைப் பற்றி சொல்லியிருக்கக் கூடாது என்று. ஒரு பெண்ணின் ரகசியங்களை அவளுக்கு உரியவனைத் தவிற வேறொருவன் தெரிந்திருப்பதை எந்தப் பெண் தான் விரும்புவாள்? அதன் விளைவே இது. சரி போகட்டும் விட்டு விடு" என்றான்.

ஆனால் புத்திசரீரன் மனதிற்குள் பத்மாவதியைப் பழிவாங்க திட்டமிட்டான். ஆதே நேரத்தில் நண்பனின் ஆசையும் கெட்டுவிடக்கூடாது, அவன் மனவருத்தம் கொள்ளுமாறு எதுவும் நடக்கக் கூடாது என்றும் தீர்மானித்தான்.

"சரி இப்போது என்ன செய்வது? அவளை நான் எப்படி எந்நாட்டிற்கு கொண்டு செல்வது? என்றான் ராஜகுமாரன்.

அப்போது வெளியே அந்நாட்டு அரசனின் ஆண்குழந்தை இறந்து போயிற்று என்று ஊர் மக்கள் வருத்தத்துடன் பேசிக்கொண்டது புத்திசரீரன் காதில் விழுந்தது.

இது தான் சமயம் என்று புத்திசரீரன் ஒரு திட்டம் தீட்டினான்.

அவன் ராஜகுமாரனைப் பார்த்துக் கூறினான், "நண்பா, நான் இருக்கும் வரை அவள் உன்னுடன் மனப்பூர்வமாக வரமாட்டாள். அதனால் நான் ஒரு உபாயம் சொல்கிறேன் கேள். இன்றிரவு நீ பத்மாவதியின் மாளிகைக்குச் செல். அவளுடன் குதூகலமாய் இருக்கும்போது அவளுக்கு நல்ல போதையூட்டி அவளை மதிமயங்கச் செய்துவிடு. தன் நிலைமை மறந்து பிணம் போலப் படுக்கையில் படுத்துத் தூங்கும் போது அவளுடைய நகைகளை எடுத்துக் கொண்டு, அவள் இடுப்பில் சூலாயுதத்தால் கீறியது போல் கீறல் அடையாளம் செய்து விட்டு வந்துவிடு. அதற்கு மேல் நடக்க வேண்டியதை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றான்.

அந்த விதமாக ராஜகுமாரனும் பத்மாவதியைப் பார்க்கச் சென்றான். அவளுடன் காதல் மொழி பேசிக்கொண்டே அவளுக்கு போதையூட்டி மயக்கமடையச் செய்தான். அவளது நகைகளை எடுத்துக் கொண்டான். அவளது இடுப்பில் சூலாயுதத்தால் கீறியது போன்ற தடத்தை உண்டாக்கிவிட்டு வீடு வந்து சேர்ந்தான்.

அவர்களது திட்டப்படி மறுநாள் காலையில் மந்திரிகுமாரன் அவ்வூர் மயானத்தில் ஒரு தபசி வேஷம் போட்டுக் கொண்டு அமர ராஜகுமாரனும் அவனது சீடனாக வேஷம் தரித்து அமர்ந்தனர். புத்திசரீரன் பத்மாவதியின் ராஜகுமாரனிடம் கொடுத்து "நண்பா, இந்த நகைகளை எல்லோரும் பார்க்கும் படி கையில் எடுத்துச் செல். இதை கடைத்தெருவுக்குச் சென்று விலை பேசு. ஆனால் யாரும் வாங்க முடியாதபடி அதிக விலை சொல். காவலாளிகள் உன்னைப் பிடித்து விசாரித்தால் என் குருநாதர் தான் இதை விற்கச் சொன்னார் என்று சொல்லிவிடு" என்றான்.

அதன் படியே ராஜகுமாரனும் கடைத் தெருவுக்குச் சென்றான். அன்று காலை தான் பத்மாவதியின் தந்தயான தந்த சிற்பி தனது வீட்டில் நகைகள் காணவில்லை என்று அரசரிடம் புகார் அளித்திருந்தான். அதன் பேரில் திருடனைத் தேடிக்கொண்டிருந்த காவலாளிகளின் கண்களில் ராஜகுமாரன் சரியாகச் சிக்கிக் கொண்டான்.

ராஜகுமாரனும் இந்த நகை பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் தனது குருநாதர் தான் விற்கச் சொன்னார் என்றும் கூறிவிட்டான். காவலாளிகள் சீடன் வேஷத்தில் இருந்த ராஜகுமாரனைத் திருடன் என்றே நம்பிவிட்டனர். மேலும் அவனது குருவான புத்திசரீரனையும் பிடித்து அரசன் முன் நிறுத்தினர்.

அரசர் புத்திசரீரனிடம் "இந்த நகை உன்னிடம் எப்படி வந்தது" என்று விசாரித்தார்.

புத்திசரீரன் "நான் ஒரு தபசி. எந்த இடத்திலும் நிரந்தரமாக வசிப்பவன் அல்ல. தற்செயலாக நேற்று இவ்விடம் வந்தேன். இரவு நேரம் இம்மயானத்தில் தங்கியிருக்கையில் நடு நிசியில் மோகினிகளின் கூட்டம் ஒன்று இங்கே வந்தது. அவர்களுள் ஒருத்தி அரசரின் மகனான இளவரசனின் உடலைத் தாங்கி வந்தாள். அவள் அந்த உடலை கிழித்து, பைரவனுக்கு நிவேதனமாக வைத்தாள். அவள் மோகன வித்தையில் வல்லவள். நன்றாக மது மயக்கத்தில் இருந்த அவள் என்னிடம் நெருங்கி வந்து என் ஜபமாலையை பிடுங்க முயன்றாள். என் மந்திர சக்தியால் சூலாயுதத்தை பழுக்கக் காய்ச்சி அவள் இடுப்பில் சூடு போட்டுத் துரத்திவிட்டேன். அவள் கழுத்திலிருந்த இந்த முத்து மாலையை பிடுங்கிக் கொண்டேன். தபசிக்கு முத்து மாலை எதற்கு? அதனால் தான் அதை விற்று வரச்சொல்லி சீடனை அனுப்பினேன்" என்றான்.

இதைக் கேட்ட அரசர் இந்த முத்துமாலை தந்த சிற்பி வீட்டில் இருந்து திருடப்பட்டுள்ளது. தந்த சிற்பியின் வழக்கமான முத்திரை இதில் இருக்கிறது. எனவே தந்த சிற்பியின் மகள் பத்மாவதி ஒரு வேளை மோகினியாக இருக்கலாம் என்று சந்தேகித்தான்.

காவலாளிகளிடம் சொல்லி பத்மாவதியை அரன்மனைக்கு அழைத்துவரச் செய்தான். பணிப்பெண்களைக் கொண்டு பத்மாவதியின் இடுப்பில் சூலாயுதத்தால் காயம் பட்ட தடம் இருக்கிறதா என்று பார்க்கச் சொன்னான்.

பத்மாவதியின் இடுப்பில் சூலாயுதத் தடம் இருப்பதை பணிப்பெண்கள் உறுதி செய்தனர். அரசர் கடும் கோபமுற்றான். "என் மகனைக் கொன்ற மோகினிப் பிசாசே உன்னை என்ன செய்கிறேன் பார்" என்று தனது வாளை உருவுகையில் புத்திசரீரன் குறுக்கிட்டு தடுத்தான்.

மோகினியைக் கொன்று நீங்கள் பாவம் செய்யவேண்டாம். அது உங்களை மட்டுமல்லாமல் இந்நாட்டு மக்களையெல்லாம் பாதிக்கும் என்றான். அதனால் இவளை இந்த நாட்டை விட்டே துரத்தி விடுங்கள் என்றான். இதைக் கேட்ட அரசன் அதுவும் சரிதான். எனக்கு என்னைவிட நாட்டு மக்கள் தான் முக்கியம் என்று கூறி பத்மாவதியை நாட்டுக்கு வெளியே காட்டில் விட்டு வர காவலாளிகளுக்கு உத்தரவிட்டான்.

அவளுடைய பெற்றோர்கள் எவ்வளவோ தடுத்தும் அழுதும் அரசர் இதைக் கேட்கவில்லை. காவலாளிகள் பத்மாவதியை காட்டுக்கு இழுத்துச் சென்று ஆடையாபரணங்களை உருவிக்கொண்டு நடுக்காட்டில் விட்டு விட்டுத் திரும்பினார்கள்.

புத்தி சரீரன் தான் நினைத்ததை சாதித்து விட்ட மகிழ்ச்சியை மவுனமாக அனுபவித்தான்.

பெற்றோர்களையும் நாட்டையும் சுகமான வாழ்க்கையையும் இழந்து விட்ட சோகத்தில் நடுக்காட்டில் அழுது கொண்டிருந்தாள் பத்மாவதி. அவளுக்கு இத்தனையும் செய்தது புத்திசரீரன் தான் என்பதும் விளங்கியது.

அந்த வேளையில் தங்களது வேஷத்தைக் கலைத்து விட்டு குதிரையில் ஏறி ராஜகுமாரனும், புத்தி சரீரனும் அவள் இருக்கும் இடத்தை அடைந்தனர். புத்திசரீரன் தான் ராஜகுமாரனுக்கு உண்மையான நண்பன் என்றும் தங்கள் வாழ்க்கை என்னால் பாதிக்கும் என்று பயப்பட வேண்டாம் என்றும் கூறி பத்மாவதியை சமாதானப் படுத்தினான். தன்னால் பத்மாவதியின் வாழ்க்கைக்கு எந்த ஆபத்தும் வராது என்று உறுதி கூறினான். பிறகு இருவரும் பத்மாவதியை அழைத்துக் கொண்டு தங்கள் நாடு திரும்பினர்.

பத்மாவதியின் பெற்றோரோ மகளை இழந்த சோகத்தில் மனமுடைந்து மிகச் சில நாட்களிலேயே இறந்து போயினர்.

இவ்விதம் கதையைக் கூறி முடித்த வேதாளம் விக்கிரமாதித்தனைப் பார்த்து "இந்தக் கதையில் எனக்கு ஒரு சந்தேகம் அதைத் தீர்த்து வைக்க வேண்டும். தந்த சிற்பியும் அவன் மனைவியும் இறந்த தோஷம், ராஜகுமாரன், மந்திரிகுமாரன், பத்மாவதி இம்மூவரில் யாரைச் சாரும்? என்று கூறவேண்டும். பதில் தெரிந்து நீ கூறாமல் தவிர்த்தால் உன் தலை சுக்கு நூறாக உடைந்து விடும். அதை நினைவில் வைத்துக் கொள்" என்றது.

விக்கிரமாதித்தன் தனது பதிலைச் சொன்னான் "உண்மையில் மூவர் மீதும் பழியில்லை. மந்திரி குமாரன் தன் எஜமானன் நன்மையை உத்தேசித்தே நடந்து கொண்டான். ராஜகுமாரனும், பத்மாவதியும் காமன் கணையால் தாக்குண்டு தங்கள் வயதின் மயக்கத்தில் அவர்கள் எண்ணம் ஈடேறும் ஒரே நோக்கத்தோடே நடந்து கொண்டனர். ஆனால் அந்நாட்டின் அரசனோ ராஜ தர்மத்தைச் சரியாக உணராமல், வழக்கைத் தீர விசாரித்து உண்மையரியாமல், ஒருவன் சொன்னான் என்பதற்க்காக
தவறாக முடிவு கட்டித் தீர்ப்புக் கூறியதால் இந்தப் பழி மன்னனையேச் சாரும்" என்றான்.

"நீ உண்மையில் சிறந்த புத்திசாலி. சரியாகச் சொன்னாய். ஆனால் விக்கிரமாதித்தனே, நீ என் நிபந்தனையை மீறி வாய் திறந்து பதிலளித்து விட்டாய். அதனால் உன்னை விட்டு நான் பறக்கிறேன். இனி உன்னால் என்னைப் பிடிக்க முடியாது" என்று கூறி வேதாளம் மீண்டும் குகைக்குள் பறந்து சென்று முருங்கை மரத்தின் மீதேறி அமர்ந்து கொண்டது.

விக்கிரமாதித்தன் மறுபடியும் குகை தேடி நடக்கலானான்.

முற்றும்.

Monday, September 21, 2009

விக்கிரமாதித்தன் கதைகள் - 7


ராஜகுமாரனும் மந்திரிகுமாரனும் கிழவியை மீண்டும் பத்மாவதியைப் பார்க்க அனுப்பினர்.

மீண்டும் கிழவி அழுதபடி வந்தாள். என்னடா இது வம்பாய்ப் போனது என்று திகைத்துப் போன ராஜகுமாரன் இது தனக்கு பெருத்த அவமானமென்றும் இந்த வாளுக்கு அவளை இறையாக்குவேன் என்றும் தன் வாளை உருவியபடி கர்ஜிக்கத் துவங்கினான்.

அப்போது புத்திசரீரன் ராஜகுமாரனை சமாதானப்படுத்தி நடந்ததை முதலில் அறிந்து கொள்வோம் பிறகு யோசிப்போம் என்று தடுத்தான்.

கிழவி நடந்ததைக் கூறலானாள் "சென்ற முறை அவள் என்னை அடித்ததால், நான் இன்றைக்கு பத்மாவதி முன் மவுனமாக அமர்ந்திருந்தேன். அவள் என்னை வம்புக்கு இழுத்து, உங்களிடமிருந்து ஏதோ செய்தி கொணர்ந்திருப்பதாக வாதம் செய்தாள். மூன்று விரல்கலைச் செம்பஞ்சுக் குழம்பில் நனைத்து, அதனால் என் மார்பில் அடித்து அனுப்பி விட்டாள்.

அது மட்டுமில்லாமல் தெருவிலே மதம் பிடித்த யானை ஒன்று தறிகெட்டு ஓடுவதாகவும் அதனால் என்னை வாசல் வழியாக போக வேண்டாம் என்றும் கூறி, ஓர் ஆசனத்தில் அமர்த்தி கயிறு கொண்டு கட்டி பின்புற ஜன்னல் வழியாக இறக்கி விட்டாள். நான் அருகிலுள்ள மரத்திலேறி தோட்டத்தின் வழியாக வெளியேறி கஷ்டப்பட்டு வந்து சேர்ந்தேன் " என்றாள்

கிழவியின் வார்த்தையைக் கேட்ட புத்திசரீரன் புன்னகைத்தான். அவன் ராஜகுமாரனைப் பார்த்து "நண்பா, கவலை கொள்ள வேண்டாம். உன் ஆசை நிறைவேறப் போகிறது" என்றான்.

ராஜகுமாரனோ ஆச்சரியமாக அவனைப் பார்த்து அர்வத்துடன் கேட்டான் "நீ, என்ன சொல்கிறாய், அவள் என்னைப் பார்க்க சம்மதித்தாளா? என்ன சங்கேத மொழி அனுப்பியிருக்கிறாள்? விளக்கு நண்பா" என்றான்.

புத்திசரீரன் விளக்கினான் "நண்பா!, அவள் மூன்று விரல்கள் பதிய கிழவியை அடித்து அனுப்பியதால், உன்னை இன்னும் மூன்று இரவுகள் பொறுத்திருக்குமாறு செய்தி கூறியிருக்கிறாள். மேலும் கிழவியை மாற்றுப்பதையில் போகச் சொல்லி அனுப்பியிருப்பதால், நீ எந்த வழியாகச் சென்று அவளைப் பார்க்க வேண்டும் என்றும் உணர்த்தி அவளை அடையும் வழியை உனக்குக் காட்டிவிட்டாள்" என்றான்.

ராஜகுமாரனுக்கு மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. செய்தியைக் கொண்டுவந்த கிழவிக்கும் புத்திசாலித்தனத்தால் பத்மாவதியின் சங்கேத மொழிகளை கண்டுபிடித்து புரியவைக்கும் புத்திசரீரனுக்கும் பொன்னும் பொருளும் பரிசாக கொடுத்தான்.

மூன்று இரவுகள் சென்றன. அடுத்த நாள் இரவு ராஜகுமாரன் மிகுந்த ஆர்வத்துடன் பத்மாவைதியைப் பார்க்க சென்றான். கிழவி வந்த வழியாகவே தோட்டத்தை அடைந்தான். வீட்டின் பின்புறம் கயிற்றால் கட்டியபடி ஆசனம் ஒன்று தொங்கிக்கொண்டு இருந்தது. அதன் மீது ஏறி அமர்ந்தான். அவன் வரவை எதிர்பார்த்துத் தயாராக இருந்த பணிப்பெண்கள் ராஜகுமாரன் அமர்ந்த ஆசனத்தை மேலே தூக்கினார்கள்.

மாடியில் சிரித்த முகத்துடன் பத்மாவதி நின்று கொண்டிருந்தாள். ராஜகுமாரனைக் கண்டவுடன் ஆவலுடன் வந்து அவனைகட்டி அனைத்துக் கொண்டாள். இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பைப் பொழிந்தனர். மனதால் இணைந்த இருவரும் கந்தர்வ விவாஹம் செய்து கொண்டனர்.

உலகையே மறந்து மணிக்கணக்கில் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பத்மாவதி ராஜகுமாரனிடம் கேட்டாள் "நான் காட்டிய ஜாடைகளின் உட்பொருளையெல்லம் மிகச் சரியாகப் புரிந்து கொண்டீர்களே, எப்படி?" என்றாள்.

ராஜகுமாரன் மிகுந்த ஆர்வத்துடன் தனது நண்பனைப் பற்றி எடுத்துச் சொன்னான். "அன்பே! எமது அரசின் மந்திரி குமாரனாகிய புத்திசரீரன் என்னுடன் வந்துள்ளான். அவன் என் நண்பன். எனக்கு நீ அனுப்பிய சங்கேத மொழிகள் எதுவும் கொஞ்சம் கூட புரியவில்லை. ஆனால் அவன் தான் சாதுர்யமாக சிந்தித்து அத்தனைப் புதிர்களையும் புரியவைத்தான். அதனால் தான் என்னால் உன்னைச் சந்திக்க முடிந்தது" என்றும் கூறினான்.

இதைக் கேட்ட பத்மாவதியின் முகம் மாறியது. ஒரு பெரிய அரசாங்கத்திற்கு ராஜாவகப்போகும் ஒரு ராஜகுமாரன் தனது அந்தரங்க விஷயத்தில் கூட நண்பனைச் சார்ந்திருக்கிறானே என்று எண்ணத்துவங்கினாள்.

நண்பனின் சொல்லே வேதவாக்கு என்று ராஜகுமாரன் நம்பினால், நாளை நண்பனுக்கு என்னை பிடிக்கவில்லை என்றால் அவன் சொல் கேட்டு இவர் என்னை விலக்கி விட்டால் என்ன செய்வது என்று யோசிக்கலானாள். இதனால் ராஜகுமாரனிடம் சுதந்திரமாகப் பழகமுடியாது என்றும், மந்திரி குமாரனுக்கும் தாம் நல்லவளாக நடந்தே ஆக வேண்டிய நிர்பந்தம் வந்து விடும் என்பதையும் கணக்குப் போட்டாள்.

ஆக ராஜகுமாரன் நிரந்தரமாக தம்மீது காதலுடன் இருக்க வேண்டுமானால், மந்திரி குமாரன் அவருடன் இருக்கக் கூடாது. ஆனால் புத்திசரீரனை முழுவதுமாக நம்பும் ராஜகுமாரனிடமிருந்து அவனை எளிதில் பிரிக்கவும் முடியாது. எனவே எப்படியாவது புத்திசரீரனை தீர்த்துக்கட்டுவதைத் தவிர வேறு வழியில்லை என்று க்ஷனப் பொழுதில் தீர்மானித்து விட்டாள் பத்மாவதி.

அவள் ராஜகுமாரனைப் பார்த்து "அன்பே! நீண்ட நேரம் ஆகிவிட்டதால். நீங்கள் இப்போது புறப்படுங்கள். நாளை நேரம் பார்த்து நானே பணிப்பெண்களை அனுப்பி உங்களை அழைத்து வரச் செய்கிறேன்" என்றாள்.

வீட்டுக்குச் சென்ற ராஜகுமாரன், புத்திசரீரனிடம் பெரு மகிழ்ச்சியுடன் நடந்தவை யாவற்றையும் சொல்லத்துவங்கினான். அப்போது சங்கேத மொழிகளை விளக்கியது யாரென்பதையும் அவளிடம் சொன்னதாய்ச் சொன்னான்.

இதைக் கேட்ட புத்திசரீரன் அதிர்ச்சியுற்றான். அவன் மேலும் கூறினான் "நண்பா! இது முறையில்லை. நல்லதும் இல்லை. உங்களின் அந்தரங்கத்தை அறிந்தவன் நான் என்ற எண்ணம் அவள் மனதில் தோன்றியிருக்கும். இது எங்கே போய் முடியுமோ!" என்றான்.

அதற்கு ராஜகுமாரன் அவள் மிகவும் நல்லவள். அவ்வாறு நினைக்க மாட்டாள் என்றும் வாதிட்டான்.

மறுநாள் காலை பத்மாவதியின் பணிப்பெண்கள் கிழவியின் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் தங்கள் வணக்கத்தை ராஜகுமாரனுக்குச் சொன்னார்கள். பின் புத்திசரீரனிடம், "பத்மாவதி தங்களிடம் தனது மரியாதையை தெரிவிக்கச் சொன்னார்கள்" என்றும் கூறினார்கள். பின்னர் ஒரு தட்டில் பழம் பக்ஷனங்கள் வெற்றிலை முதலியவைகளை வைத்து விட்டு, ராஜகுமாரனை நோக்கி பத்மாவதி அவனுக்காக உணவு ஏதும் உட்கொள்ளாமல் காத்திருப்பதாகவும் நீங்கள் உடனே வரலாம் என்றும் தெரிவித்து நகர்ந்தனர்.

அப்போது ராஜகுமாரன் கூறினான் "பார்த்தாயா நண்பா! பண்புள்ள பெண்ணாய் இருப்பதால் உனக்கு தனது மரியாதையைத் தாம்பூலத்தட்டில் வைத்து தெரிவிக்கிறாள்." என்றான்.

அப்போது புத்திசரீரன் புன்னகையுடன் கூறினான் "பொறு நண்பா, இப்போது பார் வேடிக்கையை" என்று சொன்னபடி பலகாரத்தில் ஒரு சிறு துண்டை எடுத்து அருகில் இருந்த நாய்க்கு போட்டான். அதைத்தின்ற, நாய் அவ்விடத்திலேயே விழுந்து துடித்து இறந்து போனது.

இதை சற்றும் எதிர்பார்க்காத ராஜகுமாரன் அதிர்ச்சியில் உறைந்தே போனான்.

Tuesday, September 15, 2009

மரியாதை ராமன் கதைகள்!

மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர் பணத்தாசைப் பிடித்தவர்.

ஒரு முறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கும் வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார்.

வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப்பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பி தள்ளினார். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்.

அப்போது அவரது மனைவியார் “உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க" என்றார்.

ஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று நினைத்து அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். ஊர் மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள்.
அப்படி தேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை.

அந்த சமயம் பூபாலன் என்ற வழிப்போக்கர் அந்த ஊர் வழியாக வந்தார். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இருந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர்.

அவர் வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை. அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டு விட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை
கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார்.

ஊருக்குள் சென்ற போது அங்கே இருந்த கடையில் விசாரித்தார். கடைக்காரர் சோமனைப் பற்றி சொல்லி, அவர் தான் தொலைத்தவர், நீங்க இதை கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார்.

உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார், சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்த பணப்பையை வாங்கிக் கொண்டார், அதே நேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்து விட்டது, பணமும் சரியாக இருக்குது, இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும், சன்மானம் கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் சோமன்.

கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து “நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை, மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன்” என்று கத்தினான்.

பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது போல் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே, இவரிடம் சன்மானம் வாங்குவதை விட பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார்.

சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். இந்த பிரச்சனையை மரியாதை ராமனிடம் கொண்டு சென்றார்கள்.

சோமன் தான் பணப்பையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும், பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள்.

ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும், அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான்.

ஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான் என்பதை புரிந்துக் கொண்ட மரியாதை ராமன், சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க நினைத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார் “சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார்.

இப்போது பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது, ஆக இது சோமனின் பையே இல்லை, வேற யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லல, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊர் வழக்கப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன் கோயில் செலவுக்கு கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக் கொள்ளலாம், ஆக பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்து வைத்துக் கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம்”.

மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது. தன்னுடைய தீய குணத்தால் தனக்கே தீங்கு உண்டானதை எண்ணி வருந்தினார். மரியாதை ராமனிடம் உண்மையை ஒத்துக் கொண்டு திரண்டிருந்த ஊர் மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

தன் தவறுக்குப் பரிகாரமாக கிடைத்த பணத்தில் பாதியை பூபாலனுக்கு பரிசாகக் கொடுத்து மீதியை எடுத்துக் கொண்டு வீடு நோக்கி நகர்ந்தார்.

பூபாலனும் சன்மானம் கிடைத்த மகிழ்வுடன் ஊருக்குச் சென்றார்.

மக்கள் மரியாதை ராமனின் சமயோசிதமான தீர்ப்பை பெரிதும் பாராட்டி மகிழ்ந்தனர்.

Saturday, September 12, 2009

விக்கிரமாதித்தன் கதைகள் - 6

சென்றவாரத் தொடர்ச்சி

அந்த அழகிய பெண்ணின் சமிக்ஞைகளின் அர்த்தத்தை மந்திரிகுமாரன் விளக்கத்துவங்கினான்.

"அவள் தாமைரைப் பூவைத் தன் காதில் வைத்துக் கொண்டதால் அதைச் சின்னமாக வைத்திருக்கும் கர்ணோத்பலன் என்னும் அரசனுடைய நாட்டைச் சேர்ந்தவள் என்பதை அறிவித்தாள். அந்தப் பூவை காதணியான தந்தபத்திரம் போலச் சுருட்டியதால், "அங்கேயுள்ல தந்தச் சிற்பி ஒருவன் மகள்" என்பதையும் குறிப்பிட்டாள்.

தாமரைப் பூவை எடுத்துத் தலையில் சூடியதால் தன் பெயர் பத்மாவதி என்றும் கையை நெஞ்சகத்தின் மீது வைத்துக் கொண்டு கடைக்கண்ணால் உன்னைப் பார்த்ததால், அவள் இதயம் உனக்கே சொந்தமாகிவிட்டது என்றும் அறிவித்தாள். உண்மையாகவே கர்ணோத்பலன் என்னும் அரசனுடைய ஆஸ்தானத்தில் தந்த சிற்ப்பிகளுள் சிறந்தவனான சங்கிராமவர்த்தனன் என்பவன் இருக்கிறான். அவனுக்குப் பத்மாவதி என்ற பெண் ஒருத்தியும் உண்டு. அவள் தான் இந்தப் பெண்ணாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன் என்று புத்திசரீரன் கூறினான்.

மந்திரிகுமாரன் இவ்வளவு விளக்கமாகக் கூறியதைக் கேட்ட வஜ்ரமகுடன் தன் நண்பனின் புத்திக் கூர்மையைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அவனுக்கு எப்படியாது அந்தப் பெண்ணை அடைந்து விட வேண்டும் என்ற துடிப்பு அதிகரித்தது. தன்னுடைய பரிவாரங்களை தன் நாட்டிற்கு திரும்பிப் போகச் சொல்லிவிட்டு நண்பன் புத்திசரீரனுடன் கலிங்க நாட்டுக்குப் புறப்பட்டான்.

அங்கே கர்ணோத்பலன் ஆண்டுவந்த நகரத்தை அடைந்து தந்த சிற்பியின் வீட்டை தேடையலைந்து கண்டு பிடித்தனர். பிறகு இருவரும் ரகசியமாக பக்கத்தில் குடியிருந்த ஒரு கிழவியின் வீட்டுக்குச் சென்று தங்கினார்கள்.

மந்திரி குமாரன் குதிரைகளை மறைவான இடத்தில் கட்டி புல்லைப் போட்டு தண்ணீர் காட்டிவிட்டு வந்தான். பிறகு அந்தக் கிழவியிடம், "அம்மா, இவ்வூரில் சங்கிராமவர்த்தனர் என்னும் தந்தச் சிற்பி ஒருவர் இருக்கிறாரே, அவரை உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டான்.

"நன்றாகத் தெரியுமே. அவரது மகளுக்கு நான் தான் செவிலித்தாயாக இருந்தேன். ஆனால் வெகுநாட்களாயிற்று நான் இப்பொழுது அங்கே செல்வதே இல்லை. சரி நீங்கள் ஏன் அவரைப் பற்றி விசாரிக்கிறீர்கள்?" என்றாள் கிழவி.

மந்திரி குமாரன் தொடர்ந்தான் "அம்மா, நீங்களும் எங்களுக்குத் தாய் போலத்தான். அதனாலேயே உங்களிடம் சொல்கிறேன். இவர் பக்கத்து நாட்டு ராஜகுமாரன் வஜ்ரமகுடன். இவர் சங்கிராமவர்த்தனரின் மகள் பத்மாவதியை ஒரு ஏரிக்கரையில் கண்டு மையல் கொண்டார். எப்படியாவது அவளை மணக்க வேண்டும் என்பது ராஜகுமாரனின் ஆசை. ஆனால் ஏற்கனவே இரு நாடுகளும் பகையாக இருப்பதால் அந்தப் பெண்ணை ரகசியமாக கவர்ந்து செல்வதைத்தவிர வேறு வழியில்லை. எனவே எப்படியாவது நீங்கள் பத்மாவதியை சந்திக்க உதவி செய்ய வேண்டும். உங்களுக்கு வேண்டிய பொன்னும் பொருளும் தருகிறோம்" என்றான்.

"சரி நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?" என்றாள் கிழவி.

"நீங்கள் பத்மாவதியிடம் போய், நீ குளக்கரையில் கண்ட ராஜகுமாரன் வந்திருக்கிறான். அவன் உன்மீது மோகம் கொண்டிருக்கும் செய்தியை உனக்கு அறிவிக்கவே என்னை அனுப்பி வைத்தான் என்று ரகசியமாக தெரிவிக்க வேண்டும்" என்றான் புத்திசரீரன்.

அப்படியே செய்கிறேன் என்று சொல்லிச் சென்ற கிழவி சிறிது நேரத்திலேயே அழுத முகத்துடன் திரும்பிவிட்டாள். ராஜகுமாரனும் மந்திரி குமாரனும் திகைத்துப் போனார்கள். கிழவியிடம் நடந்தது என்ன என்று வினவினர்.

கிழவி அழுதுகொண்டே கூறினாள் "நான் அவளிடம் போய் நீங்கள் வந்திருக்கும் செய்தியை ரகசியமாகக் கூறினேன். அதைக் கேட்ட அவள் என்னை மிகவும் கோபித்துக் கர்ப்பூரத்தில் தோய்த்த தன் இரண்டு கைகளால் என்னை இரு கன்னங்களிலும் அடித்துவிட்டாள். அவமானத்தால் நான் மனமுடைந்து திரும்பிவிட்டேன். இதோ பாருங்கள், என் கன்னத்தில் அவள் விரல் அடையாளங்கள்!" என்று காட்டினாள் கிழவி.

ராஜகுமாரன் திகைத்துப் போனான். மந்திரிகுமாரனுக்கோ இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாய் உணர்ந்தான். அவன் கிழவியின் கன்னத்தில் படிந்திருந்த விரல் தடத்தை உற்றுப்பார்த்தான். அது சந்திரப்பிறை வடிவில் இருந்தது. வழக்கம் போல் மந்திரிகுமாரன் அவளது குறியீடுகளைப் புரிந்து கொண்டான். அவன் ராஜகுமாரனிடம் இவ்வாறு சொன்னான் "கவலை வேண்டாம் அரசகுமாரரே! அவள் உங்களிடம் இது நிலாக்காலமானதால் இது ஏற்ற தினம் அல்ல என்பதை நிலா வடிவில் தடம் பதிய அடித்திருக்கிறாள். அதே நேரம் பத்து விரல்களும் பதிய அடித்ததால் இன்னும் பத்து நாட்களில் அமாவாசை வந்துவிடும் அதுவரை பொறுத்திருங்கள் என்றும் செய்தியனுப்பியிருக்கிறாள்" என்றான்.

இதையறிந்து ராஜகுமாரன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். கிழவிக்கு நிறைய பொற்காசுகளை பரிசாகக் கொடுத்தான். இப்படியே பத்து நாட்கள் கழிந்தன.

ராஜகுமாரனும் மந்திரிகுமாரனும் கிழவியை மீண்டும் பத்மாவதியைப் பார்க்க அனுப்பினர்.

மீண்டும் கிழவி அழுதபடி வந்தாள். என்னடா இது வம்பாய்ப் போனது என்று திகைத்துப் போன ராஜகுமாரன் இது தனக்கு பெருத்த அவமானமென்றும் இந்த வாளுக்கு அவளை இறையாக்குவேன் என்றும் தன் வாளை உருவியபடி கர்ஜிக்கத் துவங்கினான்.

அப்போது..

Saturday, September 5, 2009

மரியாதை ராமன் கதைகள் - 2


ஒரு வியாபாரி, அவர் கொஞ்சம் கொஞ்சமாக வியாபாத்தில் பணம் சேர்த்து விட்டர். இந்தச் சமயத்தில் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டது. படுத்த படுக்கையாக விழுந்து விட்டார். அவருக்கு ஒரே மகன்.

அவன் சிறிய பையனாக இருந்தான். அந்த வியாபாரிக்கு வேறு உறவினர் எவரும் கிடையாது. 'தாம் இனிப் பிழைக்கமாட்டோமே?" என அஞ்சினார். தாம் இறந்து விட்டால் தன் மகனை எவராவது ஏமாற்றி தாம் அரும்பாடு பட்டுச் சேர்த்த பொருளை அபகரித்துச் சென்று விடுவார்களோ! என்று பயந்தார்.

தமக்கு மிகவும் வேண்டிய நண்பர் ஒருவரைக் கூப்பிட்டனுப்பினார். அவரிடம் தாம் அரும்பாடு பட்டுச் சேர்த்து வைத்த பத்தாயிரம் வராகன்களையும் ஒப்படைத்தார்.

"நண்பனே, என் மகன் வளர்ந்து பெரியவனானதும் உனக்கு விருப்பமானதை அவனுக்குக் கொடு" என்று கூறினார்.

சிறிது நாட்களில் அந்த வியாபாரியும் இறந்து விட்டார். பையன் வளர்ந்து பெரியவனானான். தம் தகப்பனாரின் நண்பரிடம் சென்றான்.

அவரிடம் தம் தந்தை கொடுத்து வைத்திருந்த பத்தாயிரம் வராகன்களைத் திரும்பக் கொடுக்குமாறு கேட்டான்.

வியாபாரியின் நண்பன் பெரிய மோசக்காரனாக இருந்தான். "உன் தந்தை இறக்கும்போது எனக்கு விருப்பமானதை உனக்குக் கொடுக்கச் சொன்னர். வீணாகப் பூராப் பணத்துக்கும் ஆசைப்படாதே. இந்தா அயிரம் வராகன். இதை எடுத்துச் சென்று எங்காவது போய் பிழைத்துக் கொள்! என்று ஆயிரம் வராகன்கள் அடங்கிய பணமுடிப்பை அவனிடம் கொடுத்தான்.

வியாபாரியின் மகனுக்கு இது பெரும் அதிர்ச்சியைத் தந்தது. மிகவும் நல்லவர் என்று தன் தந்தையார் நம்பிய அவருடைய நண்பனின் செய்கை அவனுக்கு அளவற்ற வேதனையைத் தந்தது. நேரே மரியாதை ராமனிடம் சென்று முறையிட்டான்.

மரியாதைராமன் வியாபாரியின் நண்பனை அழைத்தான்.

"இந்தச் சிறுவன் கூறுவது உண்மையா?" என்று அவரிடம் கேட்டான் மரியாதைராமன்.

"ஆம் அய்யா! இவன் தந்தை என்னிடம் பத்தாயிரம் வராகன்களைக் கொடுத்து, இவன் வளர்ந்து பெரியவனானதும் எனக்கு விருப்பமானதைச் சிறுவனுக்குக் கொடுக்கச் சொன்னார். அதன்படி நான் இவனுக்கு ஆயிரம் வராகன்கள் கொடுத்துள்ளேன். அதுவே பெரிய தொகை" என்றான் மோசக்காரன்.

"உம்முடைய நண்பர் சொன்னவாறு நீங்கள் நடந்து கொள்ளவில்லையே!" என்றான் மரியாதைராமன்.

மோசக்காரனுக்கு ஒன்ரும் புரியவில்லை. மரியாதை ராமனே தொடர்ந்து பேசலானான். "அய்யா, இவர் தந்தையார் ஒப்படைத்த பத்தாயிரம் வராகன்களில் நீர் ஒன்பதினாயிரம் வராகன்கள் எடுத்துக் கொண்டீர். அதுதான் உமக்கு விருப்பமானது.

எனவே உமக்கு விருப்பமான நீர் விரும்பி எடுத்துக் கொண்ட அந்த ஒன்பதினாயிரம் வராகன்களைத்தான் நீர் இந்தச் சிறுவனுக்குத் தர வேண்டும்." என்று தீர்ப்பு வழங்கினான்.

இந்தத் தீர்ப்பைக் கேட்டுச் சிறுவன் மிகவும் மகிழ்ந்தான்.

பேராசைக்காரன் தன்னுடைய பேராசைக்கு இது சரியான தண்டனைதான் என்று நினைத்தவாறே ஒன்பதினாயிரம் வராகன்களை அந்தச் சிறுவனுக்குக் கொடுத்து அனுப்பினான்.

மரியாதை ராமனின் தீர்ப்பை அனைவரும் மெச்சினார்கள்

நமது பாரம்பரிய கதைகளை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நமது கடமையே ஆகும்.

விக்கிரமாதித்தன் கதைகள் - 5


சென்றவாரத் தொடர்ச்சி...!

"விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்!" என்றது வேதாளம். கதையின் முடிவில் என்ன புதிர் இருக்குமோ என்று சிந்தித்தவாறே நடந்து கொண்டே கதையைக் கேட்கத்துவங்கினான் விக்கிரமாதித்தன்.

முன்பொரு சமயம் வற்றாத ஜீவ நதியான கங்கை ஓடும் வாரனாசியில்
பிரதாபமகுடன் என்றொரு மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு வஜ்ரமகுடன் என்றொரு மகன் இருந்தான். மன்னனைப்போலவே மகனும் மிகுந்த பராக்கிரமசாலி. சிறந்த வீரன். மன்மதனைப் போல அழகுள்ளவன். ஆனால் வஜ்ரமகுடனுக்கு புத்தி கூர்மை கொஞ்சம் குறைவு. எதையும் சட்டென்று புரிந்து கொள்ளமாட்டான்.

ராஜகுமாரனான வஜ்ரமகுடனுக்கு நேர் மாறாக இருந்தான் அவனுடைய நண்பன் புத்திசரீரன். பெயருக்கு ஏற்றார்போல சரீரம் முழுவதும் புத்தியைக் கொண்டவனாய் இருப்பான். மிகவும் சிக்கலான விஷயங்களைக் கூட தனது புத்திக் கூர்மையால் வினாடியில் வென்று முடிப்பான். அரசவை மந்திரியின் குமாரனான இவன் மீது அரசகுமாரன் வஜ்ரமகுடன் மிகுந்த பிரியம் கொண்டிருந்தான்.

மந்திரிகுமாரன் இல்லாமல் எங்கும் செல்ல மாட்டான். அவன் மீது மிகுந்த நம்பிக்கையும் கொண்டிருந்தான்.

ஒரு நாள் வஜ்ரமகுடனும் புத்திசரீரனும் காட்டிற்கு வேட்டையாடச் சென்றனர். துஷ்ட மிருகங்களை காட்டின் அடர்ந்த பகுதிகளில் நீண்டதூரம் சென்று வேட்டையாடிச் சென்றவர்கள் எல்லை தாண்டி வேறு ஒரு கிராமத்திற்குள் சென்று விட்டனர்.

அது ஒரு அழகான நந்தவனமாக இருந்தது. அந்த வனத்திற்குள் செல்லச் செல்ல விரிந்த மலர்களும் அவைகளின் வாசனையும் வஜ்ரமகுடனை வெகுவாகக் கவர்ந்தன. குதிரைகளின் குழம்புகள் தரையில் உராயும் சத்தம் கீட்டவுடன் பறவைகள் சட சட வென மொத்தமாகப் கீச்சிட்டுப் பறந்தன. பறவைகள் பறக்கும் அழகை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே நடந்தானர் இருவரும்.

இருவரும் வழியில் அழகான ஒரு ஏரியை அடைந்தனர். அந்த ஏரியில் வண்ண மயில்களைப் போல மையல்கள் குளித்துக் கொண்டிருந்தததைப் பார்த்த ராஜகுமாரன் குதிரையை ஓரமாக நிறுத்தி விட்டு அருகே சென்றான்.

நீரில் ஆனந்தமாக விளையாடிக்கொண்டிருந்த பெண்களின் நடுவே பேரழகாய் ஒருத்தி இருந்தாள். அவளுடைய கண்களும் உதடுகளும் வஜ்ரமகுடனை மயங்கச் செய்தன. குளித்துக் கொண்டிருந்த பெண் ராஜகுமாரன் பார்ப்பதை கவனித்தாள். ஓரக்கண்ணால் அவனைப்பார்த்த பெண் கம்பீரமான அவனது தோற்றத்தில் மயங்கினாள். எப்படியாவது அவனை சந்திக்கவேண்டும் என்று எண்ணிய அவள் சில சமிக்ஞைகள் செய்தாள்.

ஒரு தாமரைப் பூவைப் பறித்து தன் காதில் சூட்டிக்கொண்டாள். காதில் அணியும் தந்த பத்திரம் என்னும் ஆபரணம் போல அப்பூவை நீண்ட நேரம் சுருட்டிக் கொண்டிருந்தாள். பிறகு, மற்ர்றொரு பூவைப் பறித்துத் தன் தலையில் சூட்டிக் கொண்டாள். அதே சமயம் மற்றொரு கையை தன் நெஞ்சில் வைத்துக் கடைக்கண்ணால் அவனை நோக்கினாள். இதை பார்த்துக் கொண்டிருந்த ராஜகுமாரனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனால் புத்திசரீரனுக்கு சட்டென விளங்கி விட்டது.

அவள் தோழிகளுடன் கரையேறி விருட்டென சென்றுவிட்டாள். வஜ்ரமகுடனுக்கோ தலையே வெடித்துவிடும் போலிருந்தது. அவள் செய்த செய்கைக்கு அர்த்தம் புரியாமல் விழித்தான். அவள் என்ன சொன்னாள் என்பதை தன் ஆருயிர் நன்பனிடம் விசாரித்தான்.

புத்திசரீரன் "ராஜகுமாரனே! அந்தப் பேரழகி உங்களை காண விரும்புகிறாள். அவள் தனது இருப்பிடத்தை ரகசிய குறியீடிகளின் மூலம் உங்களுக்குச் சொல்லிச் சென்றாள்" என்றான்.

வஜ்ரமகுடனோ ஒன்றும் புரியாதவனாய் "என்ன? அவள் தன்னைப் பற்றி சொன்னாளா எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. நண்பா! கொஞ்சம் விளக்கமாகச் சொல்லேன் என்றான்?"

அந்த அழகிய பெண்ணின் சமிக்ஞைகளின் அர்த்தத்தை மந்திரிகுமாரன் விளக்கத்துவங்கினான்.

விளக்குவான் பொறுங்கள்!

Sunday, August 30, 2009

சப்பை கேள்வியும் மொக்கை பதிலும் - 1


காலையில் இந்த வார ஆனந்த விகடன் அட்டைபடத்தில் சட்டை போட்டு போஸ் கொடுத்திருந்த சினேகாவை பார்த்துக் கொண்டிருந்தேன்.

பக்கத்துவீட்டு வாண்டுப் பையன் வீட்டுக்குள் வந்தான். 'அண்ணா' என்றபடியே அருகில் வந்து உட்கார்ந்தான். ஏழாம் வகுப்புதான் படிக்கிறான்.

ஆனால் பிஞ்சிலேயே பழுத்த பழம். சாதாப்பழம் இல்லை பலாப்பழம்.

"என்னான்னா, சினேகாவ உத்து உத்து பாக்றீங்க!" என்றான் நக்கலாக.

'சும்மா பாத்தேண்டா'

அவன் விடவில்லை "ஐ, சைட் அடிக்கிறீங்கதானே"

"டேய், என்ன வேணும் சொல்லு"

"இல்ல... உங்களுக்கு சினேகாவைப் பிடிக்குமான்னு கேட்டேன்?"

"பிடிக்கும்"

"பாவனா?"

"பிடிக்கும்"

"த்ரிஷா"

"பிடிக்கும்"

"தமன்னா?"

"ரொம்ப.., என்னடா வரிசையா லிஸ்ட் போட்ற?"

'நான் ஒன்னு கேட்கட்டா?'

'சப்பையா கேக்காம உருப்படியா எதாவது கேளு'

"இல்ல, இத்தனை நடிகைல உங்களுக்கு யாரோட போட்டோ பாக்கும் போது ரொம்ப மூடுவரும்?"

ஆகா, ஓவராப்போறானே, இவனை ஒரு வழிபண்ணாம விடப்போறதில்லைன்னு முடிவு பண்ணி விளக்கமா பதில் சொன்னேன்.

"தம்பி, ஒரு விஷயம் நல்லாத் தெரிஞ்சிக்கோ!, எல்லாத்துக்குமே நம்ம மனசு தான் காரணம். ஒரு போட்டோவப் பார்த்து நமக்கு உணர்ச்சி உண்டாகும்னா அது நம்ம மனசிலேர்ந்து தானே வருது. போட்டோ வெறும் காகிதம் தானே. நல்லா கேட்டுக்கோ. நம்ம மனசும் உடம்பும் சுகமாகவும் ஆனந்தமாகவும் இருக்கும் போது எல்லாத்தையுமே ரசிக்கத் தொணும். மனசோ உடம்போ சரியில்லைன்னா எல்லாமே வெறுப்பா இருக்கும்.

யோசிச்சுப் பாரு! நம்ம மனசும் உடம்பும் சந்தோஷமா இருந்தா அறுபது வயசு கிழவியைப் பாத்தா கூட கிளர்ச்சி இருக்கும். இல்லன்னா பதினாறு வயது பெண்ணைப்பார்த்தாலும் வெறும் தோலும் சதையும் தெரியுமே தவிர உணர்ச்சி வராது.

அதனால ஒரு பெண்ணை ரசிப்பதும் அவளைப் பார்த்து மயங்குவதும் நம்ம உடம்புக்குள்ள இருந்து வர உணர்ச்சி தானே தவிர பெண்ணால் உண்டாவது ஒன்றும் இல்லை.

உனக்குள்ளிருந்து வரும் உணர்ச்சியை நீ முதலில் புரிந்து கொள்.

'அகம் மூடாஸ்மி !' என்று முடித்தேன். கடுப்பாகி விட்டான்!

"ன்னா...ஏன்னானா இப்டி மொக்க போட்றீங்க.. நான் என்ன கேட்டா நீங்க என்ன சொல்றீங்க.. போங்கன்னா."

"டேய் நீ இப்படி சப்பையா கேட்டா நான் மொக்கையா தாண்டா சொல்ல முடியும்..சரி.. உங்கப்பா நேத்து உன்னை அடிச்சாராமே எதுக்கு?"

"ன்னா...போங்கன்னா...நல்ல நேரத்தில மூட் அவுட் பன்றீங்க" என்றவன் ஏதோ மேட்ச் இருப்பதாகவும் பசங்க வெளிய வெயிட் பன்றதாகவும் சொல்லிட்டு ஓடிவிட்டான்.

மவனே அடுத்த முறை அவன் உள்ளே வரட்டும். கட்டிலில் கட்டிப்போட்டு பட்டினத்தார் கதை சொல்ல தீர்மானித்திருக்கிறேன். வருவானா பார்க்கலாம்.

Saturday, August 29, 2009

விக்கிரமாதித்தன் கதைகள் - 4


சென்றவாரத் தொடர்ச்சி...

குகை முழுவதும் சிலந்திகளின் வலைகளால் பின்னப்பட்டிருந்தன. கூரிய வாளை வெளியே எடுத்து அத்தனை வலைகளையும் வெட்டிப் பிய்த்துக்கொண்டு உள்ளே சென்றான். முனிவன் சொன்னதைப் போலவே ஒரு முருங்கை மரமும் தென்பட்டது.

அதன் அருகே மெதுவே சென்ற விக்கிரமாதித்தனுக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அடர்த்தியான மிக உயர்ந்த முருங்கை மரம். அதில் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்தது பெரிய உருவத்துடன் ஒரு வேதாளம்.

அங்கே பெருத்த நிசப்தம் நிலவியது. அசைவற்ற நிலையில் தொங்கியது வேதாளம். விக்கிரமாதித்தன் ஒரு கனம் திகைத்தான். வேதாளத்தின் அருகிலே மெதுவாக அடியெடுத்து வைத்தான். அசைவில்லாமல் அமைதியாக தொங்கிக்கொண்டிருந்த வேதாளத்தின் முகத்திற்கருகே குனிந்து பார்த்தான்.

சட்டென்று கண்களை அகலத்திறந்த வேதாளம் லக லக லக லக வென சப்தமாக அலறியது. வேதாளம் கர்ஜனை செய்த சப்தம் காடு முழுவதும் எதிரொலித்தது. சரசரவென நிமிர்ந்த வேதாளம் குகை முழுவதும் பறந்து அலறியபடி சுற்றியது. பிறகு முருங்கை மரத்தின் உச்சியில் சென்று நின்று கொண்டு விக்கிரமாதித்தனை ஏளனமாகப் பார்த்தது.

கடும் கோபத்துடன் விக்கிரமாதித்தன் மீது மரக்கிளைகளை ஒடித்து எரிந்தது. விக்கிரமாதித்தன் சற்றும் பயப்படாமல் மரத்தின் மீதேறி வேதாளத்தை பிடிக்க முயன்றான். வேதாளம் மரத்திலிருந்து கீழே பறந்து வந்து விழுந்தது.

விதுர நீதி

விக்கிரமாதித்தனும் விடாமல் கீழிறங்கி வந்தான். வேதாளம் சளைக்கவில்லை. பருத்த உடலைக்கொண்டு விக்கிரமாதிதனின் உடலை இறுக்கிப் பிடித்து தலைகீழாய்ச் சுற்றி வீசியது. தூரச்சென்று விழுந்த விக்கிரமாதித்தன் அசராமல் எழுந்து ஓடி வந்தான்.

வேதாளத்தின் மீது மிக ஆக்ரோஷமாக மோதி அதன் கழுத்தில் தன் கைகளிரண்டையும் சுற்றி சங்கிலியைப் போல பிடித்துக் கொண்டான். சும்மா விடுமா வேதாளம். தன்னைத்தானே சரசர வென சுற்றி உடலைச் சிலுப்பியது. அவ்வளவு தான் மீண்டும் விக்கிரமாதித்தன் குகையின் மூலையில் சென்று சடேரென விழுந்தான்.

இந்த முறை விக்கிரமாதிதனின் உடலில் வலி ஏற்பட்டது. ஆனாலும் எதற்கும் அஞ்சாத, நினைத்ததை முடிக்கும் விக்கிரமாதித்தன் மனம் தளராமல் வேதாளத்தைப் பிடிப்பதில் உறுதியாக இருந்தான்.

அப்போது வேதாளம் மறுபடியும் மரத்தின் மீது ஏறத்துவங்கியது. இம்முறை விக்கிரமாதித்தன் கடும் கோபத்துடன் ஒரே சுழற்றலில் அகன்ற முருங்கை மரம் முறியுமாறு வாளைச் சுளற்றி வீசினான்.

அவனது பராக்கிரம பலத்தால் முருங்கை மரம் சட சட வென்ற த்ததுடன் முறிந்து விழுந்தது. முருங்கை மரத்தில் பாதியில் ஏறிக்கொண்டிருந்த வேதாளம் முறிந்து விழுந்த முருங்கை மரத்தின் அடியில் வசமாகச் சிக்கிக் கொண்டது. அதனால் விருட்டென்று பறக்க முடியாமல் தடுமாறியது. ஆனாலும் பலசாலியான வேதாளம் முருங்கை மரத்தை அப்படியே தூக்கி எறிய முற்பட்டது.

அதற்குள் விக்கிரமாதித்தன் மின்னல் வேகத்தில் சென்று வேதாளத்தை இறுகப் பிடித்துக் கொண்டான். மரத்தின் பாரமும் விக்கிரமாதித்தனின் வேகமும் தடுமாற்றத்தைக் கொடுத்ததால் வேதாளம் சற்று அமைதியாக நடப்பதை கவனிக்கத் துவங்கியது.

விக்கிரமாதித்தன் வேதளத்தை அருகே இருந்த கயிறு கொண்டு இறுகக் கட்டினான். பின்னர் மரத்தை அவனே அகற்றிப் போட்டு வேதாளத்தைத் தூக்கி தோளில் போட்டு நடக்கலானான்.

இப்போது வேதாளம் பேசத்துவங்கியது. "சளைக்காத வீரனே! நான் நினைத்தால் உன்னை இந்த இடத்திலேயே உன் தலை வெடித்து நீ இறக்கும்படிச் செய்ய முடியும். உன் வீரமும் வேகமும் என்னை கட்டுப்பட வைத்து விட்டது. சொல்! நீ யார்? எதற்க்காக என்னோடு சண்டையிட்டாய்? என்னை இவ்வளவு பிரயத்தனப்பட்டு எங்கே கொண்டு போகிறாய்?" என்றது.

விக்கிரமாதித்தனும் வேதாளத்திடம் மறுமொழியளித்தான். "ஏய் அடங்காத வேதாளமே! என் பெயர் விக்கிரமாதித்தன். உஜ்ஜயினியின் அரசன். உன்னை கொண்டுவரும்படி ஒரு முனிவர் எனக்கு உத்தரவிட்டதால் நான் உன்னைத் தூக்கிச் செல்கிறேன்!" நீ முரண்டு பிடிக்காமல் என்னுடன் வர வேண்டும்" என்றான்.

விக்கிரமாதித்தனின் பேச்சை மதித்த வேதாளம் அவனுக்கு ஒரு நிபந்தனை விதித்தது. "வீரனே விக்கிரமாதித்தா! நான் உன்னுடன் வருவதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது. அதன் படி நீ நடந்தால் தான் வருவேன். சம்மதமா சொல்?"

"என்ன நிபந்தனை?" என்றான் விக்கிரமாதித்தன்.

தமிழ் வருடப்பிறப்பு எப்படி உண்டானது?

வீரனே "வழி நெடுகிலும் நீ வாய் திறந்து பேசக்கூடாது. அவ்வாறு பேசினால் நான் மீண்டும் பறந்து போய் மரத்தில் தொங்கி விடுவேன். பிறகு போராட்டம் உனக்குத்தான் எனக்கில்லை. அதே நேரத்தில் நான் வழியில் உனக்கு நல்ல நல்ல கதைகளைச் சொல்லிக்கொண்டே வருவேன். நீ அதனை நன்றாகக் கேட்க வேண்டும்."

"அப்படியே செய்கிறேன்" என்றான் விக்கிரமாதித்தன்.

"பொறு, நான் வெறுமனே கதை மட்டும் சொல்ல மாட்டேன். கதையின்முடிவிலே புதிரான கேள்வி ஒன்று கேட்பேன். அதற்கு நீ சரியாக பதில்சொல்ல வேண்டும். நன்றாகக் கேள் வீரனே! நீ தவறாகப் பதில் சொன்னால் உன் தலை சுக்கு நூறாக வெடுத்துச் சிதறிவிடும். என் நிபந்தனையை ஏற்றுக் கொள்வாயா? அல்லது நான் இப்போதே முருங்கை மரத்தில் ஏறிக்கொள்ளவா?" என்றது.

எப்படியாவது வேதாளத்தை அந்த இடத்தை விட்டு கொண்டு போய் விட வேண்டும் என்ற
எண்ணம் கொண்டதால் விக்கிரமாதித்தன் வேதாளத்தின் நிபந்தனையை மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக்கொண்டான்.

விக்கிரமாதித்தன் வேதாளத்தை முதுகில் சுமந்தவாறு குகையை விட்டு வெளியேறி
காட்டுக்குள் நடக்கலானான். இருண்ட காட்டில் அமைதியான பாதையில் வேதாளத்துடன்
தனியே வந்து கொண்டிருந்தான். சற்று தூரம் சென்ற பின் வேதாளம் பேசத்துவங்கியது.

"விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்!" என்றது வேதாளம். கதையின்
முடிவில் என்ன புதிர் இருக்குமோ என்று சிந்தித்தவாறே நடந்து கொண்டே கதையைக் கேட்கத்துவங்கினான் விக்கிரமாதித்தன்.

கேட்கலாம்..பொறுங்கள்...

லக லக லக லக லக லக.....