Showing posts with label abirami pattar. Show all posts
Showing posts with label abirami pattar. Show all posts

Wednesday, December 9, 2009

பதினாறும் பெற்று பெறுவாழ்வு வாழ்க!


பதினாறும் பெற்று பெறுவாழ்வு வாழ்க என்று நம் முன்னோர்கள் வாழ்த்துவதுண்டு. இதைக் கேட்டவுடன் நம்மவர்களுக்கு ஒன்று தோன்றும். அதென்ன பதினாறு பெறுவது. பதினாறு பிள்ளைகள் பெற்றுக்கொள்வதா! ஒன்று இரண்டிற்கே இன்றைய குடும்பம் தாங்க மாட்டென் என்கிறதே, பதினாறு பெற்றால் எப்படி வாழ்வது என்றும் தொன்றும்.

பழமைகளைக் கேலி செய்வதே நாகரீகம் என்ற தொனியை சமூகத்தில் விதைக்கும் நமது தமிழ் சினிமாவும் கதையின் உச்சக்கட்ட காட்சியில் நாயகன் நாயகிக்கு திருமணம் நடக்கும் போது, ஒரு வயதானவர் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்பார். உடனே ஒரு நகைச்சுவை நடிகர் "என்னது இருக்கிற ஜனத் தொகையில் பதினாறு பெற்றால் நாடு என்ன ஆகும்? ரெண்டு பெற்று இனிதே வாழ்க!" என்று வாழ்த்தி சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பார்கள். பின்னர் காலப்போக்கில் இப்படி வாழ்த்துவதையே விட்டு விட்டனர்.

சரி அப்படி பெரியவர்கள் சொன்ன பதினாறும் பெறுவது என்றால் என்ன?

அதாவது பதினாறு வகை செல்வங்கள் பெற்று பெறுவாழ்வு வாழவேண்டும் என்றனர். இந்த பதினாறு செல்வங்களையும் அபிராமி பட்டர் தனது பாடல் மூலம் இவ்வாறு தெரிவிக்கிறார்.

கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடு வாராத நட்பும்,
கன்றாத வளமையும், குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்,
சலியாத மனமும் அன்பகலா மனைவியும்
தவறாத சந்தானமும்,
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாரத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துண்பமில்லாத வாழ்வும்,
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரோடு கூட்டுக் கண்டாய்
அலையழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிக்கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாய்நீ அபிராமியே!

என்று அன்னை அபிராமியிடம் வேண்டுவதாக வருகிறது இந்தப் பாடல்.

அபிராமி பட்டர் என்பவர் பதினேழாம் நூற்றாண்டில் சரபோஜி மன்னர் காலத்தில் வாழ்ந்தவராக அறியப்படுகிறார். அரசரிடம் மரண தண்டனை பெற்ற போது அன்னை அபிராமியை வேண்டி இவர் பாடிய அபிராமி அந்தாதி புகழ் பெற்றது. அன்னை அபிராமி, இவர் அந்தாதி பாடி முடிக்கும் தருவாயில் தண்டனையிலிருந்து பட்டரை காப்பாற்றியதாக கதை உண்டு.

அத்தகைய சிறப்பு பெற்ற அபிராமிபட்டர் இப்பாடல் மூலம் கூறும் பதினாறு செல்வங்கள் என்னவென்று பார்ப்போம்.

1. கலையாத கல்வி
2. குறையாத வயது
3. கபடற்ற நட்பு
4. கன்றா வளமை
5. குன்றாத இளமை
6. பிணியற்ற உடல்
7. சலியா மனம்
8. அன்பான வாழ்க்கைத் துணை
9. தவறாத மக்கட்பேறு
10.தாழாத புகழ்
11.வார்த்தை தவறாத நேர்மை
12.தொடரும் கொடை
13.தொலையாத நிதியம்
14.நடுநிலையான அரசு
15.துன்பம் அறியாத வாழ்க்கை
16.இறையருள்

இதைக் குறித்தே நம் முன்னோர்கள் பதினாறும் பெற்று பெறுவாழ்வு வாழ்க என்று வாழ்த்த துவங்கினார்கள்.

இப்படிப் பட்ட நல்ல வாழ்த்துரையைத் தான் நம் மக்கள் கிண்டலுக்கான வாக்கியமாக்கிவிட்டார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே நம் முன்னோர்கள் அர்த்தமுடனேயே பல விஷயங்கள் எடுத்துரைத்திருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் அறியமுடிகிறது.

ஆக இதைப் படிப்பவர்கள் எல்லோரும் பதினாறு பெற்று பெறுவாழ்வு வாழ வேண்டி நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.

Tuesday, May 5, 2009

தமிழர்கள் பிறந்த நாளை எந்த நாளில் கொண்டாட வேண்டும்?

தமிழ் ஆண்டுகள்:

உண்மையில் நாம் என்று பிறந்தோமோ அந்த நாளை பிறந்த நாளாக கொண்டாட வேண்டும் என்பது நியதி. அப்படிப் பார்க்கும் போது தமிழர்கள் அறுபது வருடத்திற்கு ஒருமுறை தான் பிறந்த நாள் கொண்டாட வேண்டும். நமது தமிழ் வருடங்கள் வான் கோள்களின் சுழற்சியின் அடிப்படையில் இயற்கையின் கணக்கீடுகளைக் குறிப்பதாகவே வடிவமைக்கப்பட்டிருகிறது. தமிழ் மாதங்களும் அவ்வாறே. அப்படிப் பார்க்கும் போது நாம் என்று பிறந்தோமோ அந்த வருடமும், எந்த நட்சத்திரத்தில் பிறந்தோமோ அந்த நாளில் தான் தமிழர்கள் உண்மையாகப் பிறந்த நாள் கொண்டாட வேண்டும்.

அதாவது நாம் எந்த தமிழ் வருடத்தில் பிறந்தோமோ, அந்தத் தமிழ் வருடம், தமிழ் மாதம், தமிழ் நாள் எப்பொழுது மீண்டும் வருகிறதோ அன்று தான் நாம் முதல் பிறந்த நாளையே கொண்டாட வேண்டும். அது தானே சரி. அப்படிப் பார்த்தால் ஒவ்வொருவருக்கும் பிறந்தநாள் அறுபது வருடங்களுக்கு ஒரு முறைதான் வருகிறது.

இப்படி நாம் பிறந்த அதே நாள் அதே வருடம் திரும்பி வருவதற்க்கு அறுபது வருடங்கள் ஆவதால் அந்த நாளை மிகச்சிறப்பாக அறுபதாம் கல்யாணமாக முழுகுடும்பத்துடன் கொண்டாடுகின்றோம். அதாவது அறுபது வயதில் ஒரு மனிதன் கண்டிப்பாக குடும்பத்துடன் தான் இருப்பான் என்பது இயற்க்கை என்பதால் அதை வெறும் பிறந்த நாளாக மட்டும் கொண்டாடாமல் குடும்ப நாளாகக் கொண்டாடுகின்றோம். மேலும் ஒரு மனிதன் வாழ்வின் ஒரு சுற்றை முடிப்பதற்க்குளே பல கஷ்டங்களை அனுபவித்து விடுகிறார்கள். சிலர் இல்லாமலே போகிறார்கள். இதனாலேயே இவைகளைத் தாண்டி இந்த முதல் பிறந்தநாள் அதாவது அறுபதாவது திருமணம் கொண்டாடுபவர்களை வணங்கி ஆசி பெறுகின்றனர். இப்படி இல்லாமல் ஆண்டுக்கொரு முறை பிறந்த நாள் கொண்டாடுபவர்கள் தமிழர்களா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதை எல்லோரும் மனதில் வைத்து தமிழ் வருடப்படி பிறந்தநாள் கொண்டாட வேண்டும். சரி இதையும் மூட நம்பிக்கை என்று பகுத்தறிவு மூடர்கள் சொன்னார்கள் என்றால் , தமிழ் புத்தாண்டு தேதியை மாற்றிய அவர்கள் தமிழ் வருட கணக்கீடுகளை மாற்ற ஏன் முன்வரவில்லை? தமிழ் வருடங்களின் பெயர்களை ஏன் மாற்றத் துணியவில்லை? முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். ஆதலால் அந்த மூடர்கள் படுத்தும் பாடுகளை மறந்து விட்டு நாம் உண்மையான தமிழர்களாக தமிழ்ப் புத்தாண்டை தமிழ் வருடப்படியே கொண்டாடுவோம். கீழே உங்கள் வசதிக்காக தமிழ் வருடங்கள்.

எண் தமிழ் வருடங்கள்

1 பிரபவ
2 விபவ
3 சுக்ல
4 பிரமோதூத
5 பிரசோற்பத்தி
6 ஆங்கீரச
7 ஸ்ரீமுக
8 பவ
9 யுவ
10 தாது
11 ஈஸ்வர
12 வெகுதானிய
13 பிரமாதி
14 விக்கிரம
15 விஷூ
16 சித்திரபானு
17 சுபானு
18 தாரண
19 பார்த்திப
20 விய
21 சர்வசித்து
22 சர்வதாரி
23 விரோதி
24 விக்ருதி
25 கர
26 நந்தன
27 விஜய
28 ஜய
29 மன்மத
30 துன்முகி
31 ஹேவிளம்பி
32 விளம்பி
33 விகாரி
34 சார்வரி
35 பிலவ
36 சுபகிருது
37 சோபகிருது
38 குரோதி
39 விசுவாசுவ
40 பரபாவ
41 பிலவங்க
42 கீலக
43 சௌமிய
44 சாதாரண
45 விரோதிகிருது
46 பரிதாபி
47 பிரமாதீச
48 ஆனந்த
49 ராட்சச
50 ந‌ள
51 பிங்கள
52 காளயுக்தி
53 சித்தார்த்தி
54 ரௌத்திரி
55 துன்மதி
56 துந்துபி
57 ருத்ரோத்காரி
58 ரக்தாட்சி
59 குரோதன
60 அட்சய