Showing posts with label mahabarath. Show all posts
Showing posts with label mahabarath. Show all posts

Wednesday, July 11, 2012

மகாபாரத்தில் ஒரு நாள் - நான் ஒரு முடிவெடுத்தா...!





மஹாபாரதம் என்ற இந்த இதிகாசம் முழுக்க முழுக்க தர்மத்தின் ஃபார்முலா. ஒவ்வொரு கதாபாத்திரமும் தர்மத்தின் வாழும் விளக்கங்கள். கலியுக மனிதர்களைக் காட்டும் கண்ணாடி. உலகத்தில் வேறெந்த மதத்திலும் வாழ்க்கை தர்மத்தை வாழ்ந்து காட்டி உபதேசிப்பதான ஒரு இதிகாசம் கிடையாது. அது பாரதக் கதையில் சாத்தியம். ஒவ்வொரு கதாபாத்திரமும் அதன் ஒவ்வொரு நாள் நிகழ்வுகளும் கூட வாழும் மனிதர்களுக்கு ஒரு பாடமாகவே இருக்கிறது என்றால் மிகையாகாது.

பொதுவாக நம் எல்லோருக்குமே எந்த ஒரு சூழ்நிலையிலும் சரி தவறுகளை ஆராய்ந்து சிந்தித்து முடிவெடுக்கும் திறன் இருக்கத்தான் செய்யும். மானைத் திண்ணும் புலிக்கு அதை எப்படி எப்போது சாப்பிடுவது என்று முடிவெடுக்கும் திறன் இருந்தால் அதனால் திண்ணப்படப் போகும் மானுக்கும் அதே புலியிடமிருந்து எப்போது எப்படி தப்பிக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் திறனும் இருக்கும். இதில் புலியோ மானோ ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. ஆனால் ஒன்று மற்றொன்றுடன் தோற்கும் நிகழ்வைத் தீர்மானிப்பது அதனதன் சூழலே ஆகும்.

மனிதனும் அதே போன்ற சூழ்நிலைக் கைதிதான் என்பது இயற்கையின் நியதி. சூழ்நிலைகள் தான் பெரும்பாலும் நம்முடைய எண்ணங்களைத் தீர்மானிக்கின்றன. அவற்றைப் புரிந்து கொண்டு கடந்து வருபவன் சூழலை வெற்றி பெருகிறான். கடந்து வரமுடியாமல் சுழலுக்காட்பட்டு அதனால் தூண்டப்பட்ட எண்ணங்களினால் அலைக்கழிக்கப்படுபவன் பல துன்பங்களுக்கு ஆளாகிறான். ராமாயனம் , மகாபாரதம் மட்டுமல்லாமல் நடைமுறை வாழ்க்கையிலும் அதுபோன்று துன்புறுபவர்களை நாம் காணமுடியும்.

உதாரணமாக சிலருக்கு தான் முடிவெடுத்தால் அது சரியாகத்தான் இருக்கும் என்கிற எண்ணம் நிலைத்திருக்கும். தன்னைப் பற்றி அவர்கள் பெருமிதப்பட்டுக்கொள்ளும் விஷயமாகவும் அது அமைந்திருக்கும். ஆனால் சூழ்நிலைகள் அவர்களை அறியாமலேயே அவர்களை மோசமாக வழிநடத்தும் போது அந்த பெருமிதம் துணைவராது. தன் முடிவு சரியென்ற நம்பிக்கையில் செயல்பட்டுப் பின் துன்பமுறுபவர்களை நாம் பார்க்கலாம்!

இதற்கு காரணம் எல்லாம் சீராகச் சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் நம் முடிவுகள் சரியாக இருக்கும். ஆனால் அது பற்றிய சிந்தனை நம்  கண்களை மறைத்து ஒருவித கர்வத்தைக் கொடுத்துவிடும். அந்த மாயை நம் செயல்களின் மீது தெளிவு கொள்ளச் செய்யாது.பிறருடைய யோசனையைக் கேட்கவேண்டும் என்கிற எண்ணம் தோன்றாது. அத்தகைய மாய வலையில் நாம் சிக்கிக் கொண்டால் பின்னர் நம்முடைய முடிவுகளுக்கும் அதனால் விளையும் நன்மை தீமைகளுக்கும் நாமே காரணமாகி விடுகிறோம்.

அப்படி ஒரு சூழலில் தான் அன்று தர்மராஜன் யுதிஷ்ட்டிரர் இருந்தார். அந்த ஒரு நாள் பாண்டவர்களின் வாழ்வில் பல திருப்பங்களைக் கொண்டு வந்து நமக்கு கீதை கிடைக்கக் காரணமான நாள். மகாபாரத்தில் ஒரு நாள்!

ஆம், அரக்கு மாளிகை சூழ்ச்சியிலிருந்து தப்பிவந்த பாண்டவர்கள் தங்களுக்குக் கிடைத்த காண்டவ வனத்தை நாடாக மாற்றி இந்திரபிரஸ்தம் என்கிற நாட்டை உருவாக்கி மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இனி நமக்கு துன்பமில்லை என்கிற மகிழ்ச்சியில் வாழ்ந்து கொண்டிருந்த தருமபுத்திரரை சூதாட அழைக்கின்றான் துரியோதனன். தர்மபுத்திரர் யுதிஷ்டிரரும் அவனது அழைப்பை ஏற்று சூதாட்டக்களத்தில் அமர்கிறார்.

மகிழ்ச்சியான வாழ்க்கை ஓட்டத்தில் சூதுவாதுகள் புரிவதில்லை. காரணம் இங்கே ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். இந்த சூதாட்ட அழைப்புக்கு முன்பாக ஒருநாள் சகுனி வெறுமனே விளையாடிக் கொண்டிருக்கையில் அவ்வழியே வந்த யுதிஷ்ட்டிரனை ஒரு ஆட்டம் போடு எனக் கூப்பிட அந்த ஒரே ஆட்டத்தில் யுதிஷ்ட்டிரன் வென்று சகுனி தோற்கிறார். அதாவது தோற்பது போல யுதிஷ்ட்டிரனிடம் நடிக்கிறார்.


காரணம் இது தான், யுதிஷ்ட்டிரன் தனது முடிவுகள் மீது நம்பிக்கை கொண்டவனாக ஏற்கனவே இருந்து வருகிறார். அவனிடம் ஒரு முறை தோற்றுக் காண்பித்தால் கண்டிப்பாக தனது முடிவுகள் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்கிற மனத்திரை பலமாக விழுந்து விடும் என்று சகுனி நம்பினார். அது பலித்தும் விட்டது.

சகுனி திட்டம் தீட்டிய அந்த நாள் வந்தது. சூதாட்டக் களத்தில் பாண்டவர்கள் ஒரு புறம் துரியோதனன் சகுனி மற்றும் கௌரவர்கள் மறு புறமும் அமர்ந்திருக்க ஆட்டம் துவங்கியது. அந்த வேளையில் துரியோதனன் வஞ்சகமாகச் சொல்கிறான் "அவையோர்களே, என் சார்பாக என் மாமா சகுனி காய்களை உருட்டி விளையாடுவார்." என்று அறிவித்தான். அனைவரும் இதனை ஏற்றுக் கொண்டனர். யுதிஷ்ட்டிரனும் புண்ணகையுடன் ஏற்றுக் கொண்டார். காரணம் ஏற்கனவே யுதிஷ்ட்டிரன் மனதில் சகுனி நம்மிடம் ஒரு முறை தோற்றவர் தானே என்றும் விளையாட்டில் நாமும் அவரை வெல்ல முடியும் என்றும் நம்பிக்கை இருந்தது. ஆனால் யுதிஷ்ட்டிரன் தான் சூழலின் மயக்கத்தில் ஆழ்ந்திருந்ததை உணரவில்லை.

ஆட்டம் துவங்கியது. தன் முடிவுகள் சரியாகத்தான் இருக்கும் என்கிற அவரது நம்பிக்கை பொடிப்பொடியானது. சகுனியின் சூதாட்டத் திறனுக்கு முன்னால் யுதிஷ்ட்டிரன் ஒரு முறை கூட ஜெயிக்க முடியவில்லை. தன் நாட்டை, செல்வங்களை, சகோதரர்களை, ஏன் தன்னையே வைத்து சூதாடி பின் தங்கள் மனைவியையும் வைத்துச் சூதாடி அனைத்தையும் இழந்து தலை குனிந்து நின்றான். சூழலின் மாயத்தோற்றத்தால் , அந்த மாயை தந்த மயக்கத்தால் யுதிஷ்ட்டிரன் தன்நிலை மறந்து தோல்வியுற்று நின்றான். தான் செய்யும் செயல்கள் அனைத்துமே சரியானதாக இருக்கும் என்றும் தன்னுடைய முடிவுகள் எப்போதும் வெற்றியையே தேடித்தரும் என்றும் பிறருடைய ஆலோசனைகள் தனக்குத் தேவைப்படாது என்றும் நினைப்பவர்களுக்கு அந்த நாள் ஒரு பாடமாக இருந்தது.

ஆட்டம் துவங்கும் முன்பாக யுதிஷ்ட்டிரன் ஒரு முறை தனக்கு உதவத் துணை வேண்டுமென்று நினைத்திருந்தால் இந்த சூழல் அப்படியே தலைகீழாக மாறியிருக்கும். துரியோதனன் தனக்குப் பதிலாக தன் மாமா சகுனி விளையாடுவார் என்று அறிவித்த அடுத்த நொடி யுதிஷ்ட்டிரனும் தனக்குப் பதிலாக தன் உறவினனும் உற்ற நண்பனுமான ஸ்ரீ க்ருஷ்ணன் இங்கே விளையாடுவார் என கண்ணனை அழைத்திருந்தால் அவன் நாடிழந்திருக்க மாட்டான். தன் சகோதர்களை இழந்திருக்க மாட்டான். மனைவி திரௌபதிக்கு அவமானம் தேடித்தந்திருக்க மாட்டான்.

அந்த ஒரு நாள் சூழல் மயக்கத்தால் யுதிஷ்ட்டிரர் செய்த தவறு குருக்ஷேத்திரத்திற்கு வழிவகுத்தது!

'என் முடிவே சரி! எனக்கு யாரும் புத்தி சொல்ல வேண்டாம்!" என்று உங்கள் அருகில் யாரேனும் பேசுகிறார்களா!

அவர்களிடம் சொல்லுங்கள்!

குருக்ஷேத்திரம் காத்திருக்கிறது!


Saturday, March 24, 2012

காலம் தீர்மானிக்கிறது!


"காலமும் நிகழ்வுகளும் எப்போதும் ஒன்றாகவே இருக்கிறது.
அவற்றை அனுபவிக்கும் மனிதர்கள் மட்டுமே மாறிக்கொண்டே இருக்கிறார்கள்"

நாம் ஒன்று நினைத்தால் இறைவன் ஒன்று நினைப்பான் என்பார்கள். என் விஷயத்தில் பல முறை அவ்வாறு நடந்திருக்கிறது. சில முடிவுகளைத் தேடி நாம் ஏதாவது காரியம் செய்வோம். நிகழ்வதோ வேறொன்றாக இருக்கும். இதற்கான காரணங்கள் எப்பொழுதும் நமக்குப் புலப்படாதவையாகவே பெரும்பாலும் இருக்கும்.

எனது பெரும்பாலான எதிர்பாராத நிகழ்வுகள் நல்லவையாகவே இருந்திருக்கிறது. அது கடவுள் என் மீது காட்டிய கருணையாகவே கருதியிருக்கிறேன். எதிர் வரும் காலம் வெற்றாகவும், எந்த வித யோசனைகளற்றும் வாழ்வைக் கடத்திக் கொண்டிருக்கையில் அடுத்து வரும் வருடங்கள் என்னவாக இருக்கும், என் எதிர்காலம் என்னவாகப் போகிறது என்றெல்லாம் முடிவே தெரியாமல் வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் காலங்களில், எதிர்பாராத பல மாற்றங்களை கண்ணில் காட்டி வியக்க வைப்பான் இறைவன். இப்படிப் பலமுறை நடந்திருக்கிறது.

அவை எதுவும் நாம் திட்டமிட்ட வகையில் நடக்காது. அல்லது நாம் ஒன்றைத் திட்டமிட்டுச் செல்லுவோம் அவை வேறொன்றாக நடந்து விடும். சிலருக்கு அந்த எதிர்பாரா நிகவுகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். சிலருக்கு துன்பத்தைக் கொடுத்து விடும். அந்த முடிவுகள் யாவும், நாம் எதை நோக்கிச் செல்கிறோம், நம் பயணத்தின் நோக்கம் நன்மையைக் குறித்தா, அல்லது தீமையக் குறித்தா என்பதைப் பொறுத்தே முடிவுகள் அமைகின்றன.

இதையே சுருக்கமாக எல்லாம் அவன் செயல் என்பார்கள் பெரியோர்கள். பொதுவாக எது நடந்தாலும் நமக்கு மட்டும் தான் இப்படி நடக்கிறதா அல்லது எல்லோருக்கும் நம்மைப் போன்றே தான் நடக்கிறதா என்று சந்தேகங்கள் அடிக்கடித் தோன்றும். புராணங்களும் இதிகாசங்களும் இது போன்ற கேள்விகளுக்கு விடை அளிப்பவையாகவே இருந்திருக்கிறது. காலத்தால் மாறுபடாத சில நிதர்சனமான உணர்வுகளை அல்லது உண்மைகளை அவை நமக்கு என்றும் போதிக்கின்றன!

அவைகள் கூறும் படிப்பினை எல்லாம் இதுதான்..."காலமும் நிகழ்வுகளும் எப்போதும் ஒன்றாகவே இருக்கிறது. அவற்றை அனுபவிக்கும் மனிதர்கள் மட்டுமே மாறிக்கொண்டே இருக்கிறார்கள்"

அப்படி ஒரு நிகழ்வை மகாபாரத்தில் காணலாம். பாண்டவர்கள் நாடிழந்து காட்டில் வாழ்ந்து கொண்டிருந்த காலம். அவர்களைக் காட்டிற்கு துரத்தியனுப்பினாலும் துரியோதனனுக்கு அவர்களைச் சீண்டிக் கொண்டிருப்பதில் ஏனோ தனி விருப்பம் இருந்து கொண்டே இருந்தது. தான் அரச மாளிகையில் இன்பமாக இருப்பதால் இருமாப்பு கொண்டு, அதனை வெளிக்காட்டுவதன் மூலமாக காட்டில் வசித்துக் கொண்டிருந்த பாண்டவர்களை பரிகசிக்க வேண்டும் என்று மிகவும் விரும்பினான்.

பாண்டவர்கள் வாழ்ந்து வந்த த்வைத வனத்திற்கு உல்லாச யாத்திரை போய் வரத் தீர்மானித்தான் துரியோதனன். தன்னுடைய மந்திரிகள். சகோதரர்கள், அந்தப்புரத்துப் பெண்கள், செல்வங்கள், சேனைகள் ஆகிய இவற்றுடன் பாண்டவர்கள் முன் அவர்கள் காணுமாறு ஊர்வலம் சென்று அவர்கள் மனதில் பொறாமை உணர்ச்சியைத் தூண்ட வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் அந்த வனத்திற்கு வந்து சேர்ந்தான்.

யுதிஷ்டிரர் குடிசை அமைத்துக் கொண்டு வசித்து வந்த இடத்திற்கு அருகில் ஒரு குளக்கரை இருந்தது. அந்தக் குளத்தில் பாண்டவர்கள் காணும்படியாகக் குளித்துக் கும்மாளமிட்டு ஆடிப்பாடி மகிழ்ந்து காட்டி ஒரு வேடிக்கையை நிகழ்த்த வேண்டுமென தீர்மானித்திருந்தான் துரியோதனன். இவ்வாறெல்லாம் செய்தால் பாண்டவர்கள் தம்மைப் பார்த்துப் பொறாமை கொண்டு நாணி வருந்துவார்கள் என்பது அவன் எண்ணம். அதனால் தனது பெண்கள், படைகள் சூழ அந்தக் குளக்கரைக்குச் சென்றான்.


அங்கே தான் ஆண்டவன் வைத்தான் ஒரு 'ட்விஸ்ட்'. அவன் ஒன்று நினைத்து வந்து சேர அங்கே வேறொரு காட்சி அரங்கேறிக்கொண்டிருந்தது. துரியோதனன் வருகைக்கு முன்னே அங்கே கந்தர்வர்கள் அந்தக் குளக்கரையை ஆக்கிரமித்திருந்தனர். அவர்கள் குளத்தில் குளித்து குதூகளித்துக்கொண்டிருந்தனர்.

இதனை சற்றும் எதிர்பாராத துரியோதனனுக்கு கடும் கோபம் உண்டாக அவர்களை வெளியேறுமாறு அழைத்தான். ஆனால் கந்தர்வர்களோ துரியோதனனை மதிக்கவில்லை. இத்தனை படைப் பரிவார ஆரவாரத்துடன் வந்த தனக்கு வந்த நோக்கம் நிறைவடையாது போனால் அசிங்கமல்லவோ என்றெண்ணிய துரியோதனன் அவர்களுடன் போரிடலானான்.

கந்தர்வர்களோ துரியோதனனின் செயல் கண்டு கொதித்தெழுந்து, துரியோதனன் படைகளை அடித்துதைத்து துரியோதனனையும், அவன் அந்தப்புரப் பெண்களையும் கைது செய்து, அவன் சேனைகளையும், பகட்டாய் அவன் கொண்டு வந்திருந்த செல்வங்களையும் கைப்பற்றிக் கொண்டார்கள்.

சிலருக்குச் சிலரை வஞ்சம் தீர்த்தால் மட்டும் போதாது, அதன் மூலம் தான் வென்று விட்டேன் என்பதை விடாது பரைசாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்களது ஆழ்மன வன்மம் தீரவே தீராது. அத்தகைய தீயவர்கள் அதே வன்மத்தால் தண்டிக்கப்படவும் செய்வார்கள். அது காலத்தின் சூக்ஷமம். அது தானே நடக்கும். ஏன் எதற்கு எப்படி எப்போது என்பதை இறைவனே தீர்மானிக்கிறான். அது நடக்கப் போவதும், நடந்து முடிவதும் நமக்குத் தெரியாமலே கூடப் போகலாம்! அல்லது காலம் கடந்து புரியவரலாம்! ஆனால் அந்தப் பொறுப்பை ஆண்டவன் கச்சிதமாக முடித்து வைக்கிறான்! துரியோதனனுக்கு இப்போது நிகழ்ந்ததும் அது தான்.

துரியோதனன் தோற்றதையும், அவன் செல்வங்கள் பறிக்கப்பட்டதையும் அறிந்த யுதிஷ்ட்டிரன் காலையுற்றான். அவன் தம்முடைய தம்பிகளை அழைத்து துரியோதனனுக்கு உதவுமாறு வேண்டினான். மற்றவர்கள் தயங்கினார்கள். துரியோதனன் நம்மை கூண்டோடு அழிக்க நினைத்தவன். அவனுக்கு உதவச் சொல்கிறீர்களே என்று குமுறினார்கள். ஆனால் யுதிஷ்ட்டிரரோ "இவர்கள் நம் அழிவை விரும்பிய படியால் நம் பகைவர்களாகிறார்கள் என்றாலும், அவர்களும் நம் சகோதரர்களே! நாம் இருக்கும் போது இவர்களுக்குப் பிறர் கெடுதல் செய்தால் நாம் அதை எப்படிப் பார்த்துக் கொண்டிருப்பது? அதனால் அவர்களை உடனடியாகக் காக்க வேண்டியது நம் கடமை" என்று எடுத்துக் கூறலானார்.


 சும்மா அழகுக்கு!
 

அண்ணனின் அன்புக் கட்டளைக்குப் பணிந்த அர்ஜுனனும் மற்ற சகோதரர்களும் புறப்பட்டு கந்தர்வர்களை வெற்றி கொண்டு துரியோதனனையும் பிறரையும் பத்திரமாக மீட்டு ஊருக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.

யாரிடம் தம் செல்வச் செழிப்பைக் காட்டி சுகபோகத்தைக் காட்டி அவர்களை வெட்கித் தலைகுனிந்து நிற்கச் செய்யும் எண்ணத்துடன் ஊர்விட்டு வந்தானோ, அவர்கள் உதவியாலேயே உயிர்பிழைத்து அவர்கள் முன்பாக வெட்கித் தலைகுனிந்து ஊர் திரும்பிப் போனான் துரியோதனன்.

துரியோதனன் ஒன்று நினைத்தான் காலம் அதனை வேறாக செய்து முடித்தது! துரியோதனனின் வருகையும் அவனது நோக்கமும் யுதிஷ்ட்டிரனுக்கும் தெரிந்தே இருந்தது. வந்தால் வரட்டும் என்றிருந்த யுதிஷ்ட்டிரனுக்கும் அவனே எதிர்பாராத வகையில் துரியோதனனுக்கே உதவி செய்து தன் பெருந்தன்மையைக் காட்டும்  சம்பவம் நடந்து விட்டது.

இதிகாசகாலம் ஆனாலும் சரி, இந்தக் கலிகாலம் ஆனாலும் சரி, மனிதனின் முடிவுகளை அவன் மட்டுமே தீர்மானிப்பதில்லை!

காலம் அதனை தீர்மானிக்கிறது. தீர்மானிக்கும் அந்தச் சக்தியையே இறைவன் என்பர் பெரியோர்!


Wednesday, October 13, 2010

மஹாபாரதத்தில் ஒரு நாள் - 4 செய்வனத் திருந்தச் செய்!




மஹாபாரதம் என்ற இந்த இதிகாசம் முழுக்க முழுக்க தர்மத்தின் ஃபார்முலா. ஒவ்வொரு கதாபாத்திரமும் தர்மத்தின் வாழும் விளக்கங்கள். கலியுக மனிதர்களைக் காட்டும் கண்ணாடி. அத்தகைய உயர்ந்த இதிகாசமான மகாபாரதத்தில் அதிதிகளை உபசரிக்கும் உயர்ந்த தர்மத்தை அதன் பாத்திரங்களே வாழ்ந்து காட்டியுள்ளன. உலகத்தில் வேறெந்த மதத்திலும் வாழ்க்கை தர்மத்தை வாழ்ந்து காட்டி உபதேசிப்பதான ஒரு இதிகாசம் கிடையாது.

பாரதப்போர் பதினெட்டு நாட்கள் நடந்தது. யுத்தம் தொடங்குவதற்கு முன் பகவான் ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ச்சுனனுக்கும் இடையே நடந்த உரையாடலே ஸ்ரீமத் பகவத் கீதையாகும்.

நமது உறவினர்களையே கொலைபுரியும் இந்தப் போர் தேவைதானா? என்று அர்ஜுனன் செயலற்ற நிலையில் நின்றிருந்தபோது, "அர்ஜுனா, போர் செய்வதும் தர்மத்தை நிலைநாட்டுவதும் க்ஷத்ரியனான உனது கடமை. உன் கடமையிலிருந்து நீ தவறாதே" என்று எடுத்துரைத்து கடமையாற்றுவதால் அடையக்கூடியதான பூரண நிலையைப் பற்றியும் எடுத்துரைக்கிறார்.

"அர்ஜுனா! தன்னுடைய கடமையில் பற்றுள்ள ஒவ்வொருவனும் பூரண நிலையை அடைகிறான். தன் கடமையைச் செய்து கொண்டே அவனால் எவ்வாறு பூரண நிலையை அடைய முடிகிறது என்பதைச் சொல்லுகிறேன். கேள்.!"

"இந்த உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் யாரிடமிருந்து தோன்றி உள்ளனவோ,
யாரால் இந்த உலகம் எல்லாம் நிறைந்துள்ளதோ அந்த கடவுளை தனக்குரிய கடமையைச் செய்து கொண்டே வழிபடும் மனிதன் மேன்மை அடைகிறான்."

"பார்த்தா! சிறப்புடையதாக இல்லாவிட்டாலும், தனக்குரிய கடமையைச் செய்வது, சிறப்போடு மற்றவர்களின் கடமையைச் செய்வதை விட சிறப்பானது. தனக்கு என இயல்பாக விதிக்கப்பட்ட கடமையைச் செய்யும் ஒருவன் துன்பம் அடையமாட்டான்."

"குந்தியின் மகனே! குறை உள்ளது என்றாலும் தனக்கு என இயல்பாய் அமைந்த கர்மத்தை விட்டுவிடக் கூடாது. தீயைப் புகை சூழ்வது போன்று வினைகள் எல்லாம் கேடுகளால் சூழப்பட்டுள்ளன. அவற்றை நீக்கி நீ உன் கர்மத்தை தவறாது செய்வாய்" என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணர்.

இவ்வாறு ஒரு குருவின் ஸ்தானத்தில் இருந்து அர்ஜுனனுக்கு போதித்தார் ஸ்ரீ க்ருஷ்ணர். அப்படிப்பட்ட அர்ஜுனன் தன் குருவாக இருந்த ஸ்ரீ க்ருஷ்ணரின் செயல் கண்டு பதறிய நாள் ஒன்று வந்தது.

ஸ்ரீ க்ருஷ்ணர் எதை அர்ஜுனனுக்கு போதித்தாரோ அவ்வாறே அவர் வாழவும் செய்ததாலேயே வாழும் கடவுளாக அர்ஜுனன் கண்ணனைக் கைதொழுதான்.

அந்நாட்களில் இரவில் போர் புரியும் வழக்கமில்லை. போர் வீரர்கள் இரவில் ஓய்வெடுப்பார்கள். தேரோட்டிகள் குதிரைகளை கட்டி வைத்து அவைகளுக்குத் தீனியும் போட்டு மறுநாள் போருக்குத் தயார் செய்துகொண்டிருப்பார்கள்.

பகல் முழுக்கப் போரிட்டகளைப்பால் அர்ஜுனன் அன்று நன்கு உறங்கிக் கொண்டிருந்தான்.

ஆனால் பகல் முழுக்கத் தேரோட்டி களைத்திருந்தாலும் கண்ணன் மட்டும் இரவில் ஓய்வு கொள்ளாமல் குதிரைகள்மேல் கவனம் செலுத்துவான்.

வெந்நீர் வைத்து குதிரைகளை நன்கு தேய்த்துக் குளிப்பாட்டி விடுவான். கட்டுக் கட்டாக பச்சை புல் வெட்டி வந்து குதிரைகளுக்கு ஊட்டிவிடுவான். கொள்ளை வேக வைத்து, அதைத் தன் பட்டுத் துணியில் எடுத்து ஒவ்வொரு குதிரைக்கும் தருவான். அவை உண்பதைக் கண்டு மகிழ்வான். குதிரைகள் வயிறார உண்டு முடித்த பிறகு சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளும். அந்த நேரத்தில் கண்ணன் குதிரைக் கொட்டில் முழுவதையும் சுத்தம் செய்வான். அதற்குள் விடியத் தொடங்கிவிடும். உடனே குதிரைகளைப் பூட்டி போருக்குச் செல்ல தேரைத் தயாராக்கிவிடுவான்.

ஒவ்வொரு நாளும் இப்படியே தொடர்ந்து நடந்து வந்தது.

ஒரு நாள், அர்ஜுனனுக்கு நள்ளிரவில் உறக்கம் கலைந்தான். எழுந்து கண்ணன் தங்கியிருக்கும் பாசறைக்குச் சென்றான். அங்கு கண்ணன் இல்லை. தூங்கி ஓய்வெடுக்காமல் கண்ணன் எங்கு சென்றிருப்பான் என்று எண்ணியவாறு தேடினான் அர்ஜுனன்.

இறுதியில் கண்ணன் குதிரை லாயத்தில், குதிரைகளுக்குப் பணிவிடைகள் செய்து கொண்டிருப்பதைக் கண்டான்.


உடனே ஓடிச் சென்று கண்ணனின் கைகளைப் பற்றிக் கொண்டு, ""கண்ணா! குதிரைகளுக்கு நீதான் பணிவிடை செய்ய வேண்டுமா? வேறு யாரிடமாவது கூறினால் செய்ய மாட்டார்களா?'' என்றான்.

"அர்ஜுனா! குதிரைகளை நன்கு பராமரிக்காவிட்டால் தேர் விரைந்து ஓடுமா? பகைவரை வெல்ல முடியுமா? வேறு யாரை யாவது பராமரிக்கச் சொன்னால் அவர்கள் அக்கறையாகக் கவனிப்பார்களா? அது மட்டு மல்ல; இப்போது நடக்கும் போர் முடியும்வரை நாம் மைத்துனன் மார் அல்ல. நீ எஜமானன்; நான் உனக்கு சாரதி. ஆதலால் உன் கடமை போர் செய்வது; என் கடமை தேர் ஓட்டுவது. குதிரைகளைப் பராமரிப்பது சாரதிக்குரிய தொழில்; மறுநாள் போருக்காக நன்கு ஓய்வு எடுத்துக் கொள்வது எஜமானன் தொழில். இருவரின் தொழில்களும் செம்மையாக நடைபெற்றால் தான் போரில் வெற்றி கிட்டும்! அதனால் நீ சென்று ஓய்வெடுத்துக் கொள். என் கடமையைச் செய்யவிடாமல் குறுக்கிடாதே'' என்றான் கண்ணன்.

கீதை உபதேசம் கேட்ட நாளைவிட அன்று கண்ணன் செயலாலும் சொல்லாலும் காட்டிய உபதேசம் அர்ஜுனன் நெஞ்சை நெகிழச் செய்தது.

அந்தநாள் முதல் தன் கடமையை சோர்வின்றி மகிழ்வுடன் செய்து வெற்றியைக் குவித்தான் அர்ஜுனன்.

போதனைகளை ஊருக்கெல்லாம் கூறிவிட்டு தான் மட்டும் சொகுசாக வாழும் தலைவர்களைக் கொண்ட இந்த சமூகத்திற்கு ஸ்ரீ க்ருஷ்ணர் ஒரு வாழும் பாடமே! ஆம், மகாபாரதம் வாழும் தர்மம்!



"பார்த்தா! சிறப்புடையதாக இல்லாவிட்டாலும், தனக்குரிய கடமையைச் செய்வது, சிறப்போடு மற்றவர்களின் கடமையைச் செய்வதை விட சிறப்பானது. தனக்கு என இயல்பாக விதிக்கப்பட்ட கடமையைச் செய்யும் ஒருவன் துன்பம் அடையமாட்டான்."

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்


*******************

இவர் கலியுக க்ருஷ்ணரோ?


.

Saturday, July 10, 2010

மஹாபாரதத்தில் ஒரு நாள் - 3 அதிதி தேவோ பவ!




அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் புலம்

முகமலர்ச்சியோடு நன்முறையில் விருந்தினரைப் பேணுகிறவன் வீட்டிலே, உளமலர்ச்சியோடு திருமகள் அகலாது இருப்பாள்.

வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.

விருந்தினரைப் போற்றியபின், எஞ்சியதைத் தான் உண்ணுகிறவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?

மேற்கூரிய வரிகள் விருந்தோம்பலின் சிறப்பினைப் பற்றியும் விருந்தினர்களை பேணுவதன் சிறப்பைப் பற்றியும் எடுத்தியம்புகிறார் வள்ளுவப் பெருந்தகை. இந்தியாவின் உயர்ந்த கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருப்பது விருந்தினரைப் பேணுதல். அதனாலேயே வள்ளுவர் அதற்கு தனி அதிகாரமே படைத்திருக்கிறார் எனலாம். இந்த உயர்ந்த பொருளை மகாபாரதம் அற்புதமாக எடுத்துக் கூறுகிறது.

மஹாபாரதம், இந்த இதிகாசம் முழுக்க முழுக்க தர்மத்தின் ஃபார்முலா. ஒவ்வொரு கதாபாத்திரமும் தர்மத்தின் வாழும் விளக்கங்கள். அத்தகைய உயர்ந்த இதிகாசமான மகாபாரதத்தில் அதிதிகளை உபசரிக்கும் உயர்ந்த தர்மத்தை அதன் பாத்திரங்களே வாழ்ந்து காட்டியுள்ளன. உலகத்தில் வேறெந்த மதத்திலும் வாழ்க்கை தர்மத்தை வாழ்ந்து காட்டி உபதேசிப்பதான ஒரு இதிகாசம் கிடையாது. அதை விளக்கமாகப் பார்ப்போம்.

மகாபாரத்தில் ஒரு நாள்....

பாண்டவர்கள் ராஜ்ஜியத்திற்கு உரிமை கொண்டாடுகிறார்களே என்ற காரணத்தால் துரியோதனன் அவர்களை கூண்டோடு அழிக்க முற்பட்டான். அரக்கால் மாளிகை செய்து பாண்டவர்களுக்கு பரிசளித்தான். அவர்களை அதில் தங்கச்செய்து இரவோடு இரவாக அரன்மனையை தீயிட்டுக் கொளுத்தி பாண்டவர்களை ஒழிக்க முற்பட்டான் துரியோதனன்.

இத்திட்டத்தை முன்னமேயே அறிந்து கொண்ட பாண்டவர்கள் தாய் குந்தி தேவியுடன் அரன்மனையை விட்டு ரகசியமாக வெளியேறி விடுகின்றனர். இவ்வாறு வெளியேறியவர்கள் அந்தனர் வேஷம் பூண்டு தலைமறைவாக கிராமம் கிராமமாக செல்கின்றனர். இவ்வாறு இருக்கையில், ஏகசக்ர புரம் என்ற ஓர் கிராமத்தில் அந்தனர் ஒருவரின் வீட்டில் அதிதியாக அவர்கள் தங்க வாய்ப்பு கிடைக்கிறது.

அந்தனக் குடும்பத்தினர் அனைவரும் பாண்டவர்களையும் தாய் குந்தி தேவியையும் மிகவும் அன்புடன் நடத்தினார்கள். அந்தனரின் குழந்தைகள் குந்தி தேவியிடம் மிகுந்த மரியாதையுடனும் பாசத்துடனும் பழகின. தம் வீட்டிற்கு விருந்தினராக வந்தவர்களின் முகம் எள்ளளவும் கோனாமல் அவர்களிடம் பழகி வந்தனர் அந்தனரின் குடும்பத்தினர்.

அந்த அமைதியை கெடுக்க வந்தது அந்த நாள் பகாசுரன் ரூபத்தில். பகாசுரன் என்ற அரக்கன் அந்த கிராமமக்களை மிகவும் கொடுமைக்கு ஆளாக்கி இருந்தான். கண்டவர்களை எல்லாம் தின்று விழுங்கி வந்தான். அவனது கொடுமையை எதிர்க்க திராணியற்ற அக்கிராம மக்கள் ஒரு முடிவிற்கு வந்தார்கள். அவர்கள் பகாசுரனிடம் சென்று ஒரு வேண்டுகோள் விடுத்தார்கள். "பகாசுரனே! நீ எல்லா மனிதர்களையும் இரக்கமின்றி கொன்று விடுகிறாய். ஆகவே வாரம் ஒரு வண்டி உணவும், ஒரு மனிதனையும் வீட்டிற்கு ஒரு முறை வைத்து நாங்களே உனக்கு அளிக்கிறோம்" என்று ஒப்பந்தம் போட்டு விடுகிறார்கள்.


ஆம், இன்று அந்தனரின் குடும்ப முறை. பகாசுரனுக்கு உணவாக அந்தனர் தயாராகி தன் மனைவி குழந்தைகளிடம் விடை பெற நினைக்கிறார். ஆனால் குடும்பத்தினர் அவரை விட தயாராக இல்லை. மனைவியோ "இன்பம் அல்லது துன்பம் எதுவாகிலும் உம்மோடு உடனிருப்பேன் என்று கூறித்தானே மனம் புரிந்து கொண்டேன்! ஆகையால் உங்கள் துன்பத்தை நானே ஏற்று பகாசுரனுக்கு உணவாக நானே செல்கிறேன். குழந்தைகளை நீங்கள் காப்பாற்றுங்கள்!" கூறினாள். அவர்களது வயது வந்த மகளோ, தாய் தந்தையரைக் காப்பது பிள்ளைகளின் கடனென்றும் அதனால் தானே பகாசுரனுக்கு உணவாகச் செல்கிறேன் என்றும் கூறினாள். அவர்களது கடைக்குட்டியான மகன் தனது பிஞ்சுக் குரலில் அப்பா, நான் செல்கிறேன்" என்றான்.

ஆனால் இந்தப் போராட்டங்களை வீட்டிற்கு அதிதியாக வந்திருக்கும் குந்தியிடமோ, பாண்டவர்களிடமோ அந்தனர் குடும்பம் தெரிவிக்கவில்லை. மேலும் தாங்கள் பேசிக்கொள்வது கூட குந்தி தேவிக்குத் தெரியக்கூடாது என்று கவனமாக இருந்தனர். ஆனால் வீட்டினுள் நுழைந்த குந்தி தேவியோ இதை கேட்டுவிட்டாள். உடனே மூட்டை முடிச்சுகளுடன் பாண்டவர்களைக் கூட்டிக் கொண்டு இடத்தை காலி செய்திருக்கலாம். ஆனால் குந்தி அவ்வாறு செய்யவில்லை. மாறாக அந்தனரிடம் சென்று "நாங்கள் இந்த வீட்டில் அதிதியாக தங்கி இருக்கிறோம். ஆதலால் உங்கள் துயரம் எதுவோ அது எங்களின் துயரமும் கூட. உங்கள் வீட்டில் நாங்கள் சுகமாக விருந்துன்ன, எங்களுக்குத் தெரியாமல் நீங்கள் துயரத்தை அனுபவிப்பது தர்மம் அல்ல. ஆதலால் உங்கள் துயரை நான் ஏற்கிறேன், இது அதிதியின் கடமை. இன்று இந்த வீட்டின் முறையாக என் மகன் பீமன் பகாசுரனைச் சந்திப்பான்" என்று கூறினாள்.



ஆனால் அந்தனர் அதனை கடுமையாக எதிர்க்கிறார். "அது நடக்காது, அதிதியாக வந்திருப்பவர்களைக் காப்பது எமது கடமை" என்கிறார்.

குந்தியோ "ஒரு வீட்டில் விருந்தினராக வந்திருப்பவர்களுக்கு அந்த வீட்டின் சுகங்கள் எப்படிக் கிட்ட வேண்டியதோ, அதேபோல அந்த வீட்டினர் எதிர் கொள்ளும் சங்கடங்களை பகிர்ந்து கொள்ளும் கடமையும் இருக்கிறது" என்று கூறி பீமன் தான் அன்றைய தினம் பகாசுரனை சந்திப்பான் என்று தீர்மானமாகக் கூறுகிறாள்.

தாயின் சொற்களை வேத வாக்காக மதித்து பீமனும் வண்டி நிறைய உணவுப்பண்டங்களை பகாசுரனுக்குக் கொண்டு சென்றான். பகாசுரனின் குகை வாசலில் அமர்ந்து அத்தனை உணவுப் பொருட்களையும் தாமே தின்று பகாசுரனுடன் யுத்தம் செய்து அவனைக் கொன்றான். அந்த கிராமத்தினர் அனைவரையும் பகாசுரனின் துன்பத்திலிருந்து விடுவித்தான்.

இவ்வாறு அதிதியாகச் சென்றிருப்பவர்களும் அதிதியை உபசரிப்பவர்களும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கதாபாத்திரங்கள் மூலம் அற்புதமாக விளக்குகிறது மகாபாரதம். தற்காலத்தில் இப்படி உயர்ந்தவர்களாக நாம் நடந்து கொள்கிறோமா?

குறைந்தபட்சம் சில விஷயங்களை மனதில் கொள்ளவோம்!

தற்காலத்தில் அதிதிகளை வரவேற்கும் வீட்டாருக்கு..

விருந்தினர் முன்பாக கணவன் மனைவி சண்டை போட்டுக்கொள்வதை தவிர்க்கலாம். தாங்கள் வந்ததனால் தான் இவர்கள் சண்டை போடுகிறார்கள் போலும் என்ற தோற்றம் உண்டாவதைத் தவிர்க்கலாம்.

வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால் வீட்டுப் பிள்ளைகள் கொஞ்சம் அதிக உற்சாகம் அடைந்து அவர்களிடம் விளையாடும். தன்னுடைய குறும்புத்தனத்தை காட்டும். அது குழந்தைகளின் ஹீரோயிஸம். ஆனால் அதைப் பெரிதுபடுத்தி குழந்தைகளை அவர்கள் முன்பாக அடித்து அழவைத்தால் விருந்தாளிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். அதனால் பிள்ளைகளுக்கு விருந்தினர்கள் வருவதற்கு முன்பாகவே அறிவுரைகளைக் கூறிவைக்கலாம். இது அநாவசிய சங்கடங்களைத் தவிர்க்கும்.

சிலர் விருந்தினர்களை வரவேற்று அமரவைத்துவிட்டு விளம்பர இடைவேளையில் மட்டுமே பேசுவார்கள். இது வந்தவர்களை முகம் சுளிக்க வைக்கும் மட்டுமல்லாது அடுத்த முறை உங்கள் வீட்டிற்கு மரியாதை நிமித்தமாக வருவதைக் கூட தவிர்க்க நினைப்பார்கள். (நல்லது தானே என்கிறீர்களா!)

அதே போல் விருந்தினராக ஒருவரின் வீட்டிற்க்குச் செல்பவர்கள் சில விஷயங்களை மனதில் கொள்வது நல்லது.

விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் என்பார்கள். மூன்று நாட்களுக்கு மேல் ஒரு வீட்டில் தங்க நேர்ந்தால் குறைந்த பட்சம் அந்த வீட்டின் காப்பி போடுவதற்காகவாவது இருவேளை பால் வாங்கிக் கொடுக்கலாம்.

குடும்பத்தினர் மொத்தமும் ஒரு வீட்டிற்குச் சென்று சில நாட்கள் தங்கியிருந்தால் அனைவரின் சாப்பாட்டிற்கும் சேர்த்து குறைந்தபட்சம் காய்கறி வாங்கிக் கொடுக்கலாம்.

முக்கியமாக, அவர்கள் வீட்டுத் தொலைக்காட்சியில் என்ன சானல் ஓடுகிறதோ அதையே நாம் பார்ப்பது நல்லது. சிலர் சீரியல் பைத்தியமாக இருக்கலாம். அவர்களிடம் போய் 'சீ நான் இந்த சீரியலெல்லாம் பார்ப்பதே கிடையாது எப்படித்தான் பார்க்கிறீர்களோ' என்று அவர்களை நெளிய வைக்கக்கூடாது. நாம் சென்றிருக்கிறோம் என்பதால் நமது டி வி விருப்பத்தை அவர்கள் மீது தினிக்கக் கூடாது. ஏனெனில் நாம் அதிதிகளாகச் சென்றிருக்கிறோம், அவ்வீட்டின் அதிகாரிகளாக அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும். அது சொந்த அண்ணன் தம்பி வீடாக இருந்தாலும் சரி.

என்னதான் உறவினர்கள் என்றாலும் அவர்களின் குழந்தைகள் சேட்டை செய்தால் கண்டிக்கிறோம் பேர்வழி என்று கடுமையாக திட்டுவதோ அடிப்பதோ கூடாது. அவ்வீட்டினரின் மனவருத்தத்திற்கு ஆளாக நேரிடும்.

தங்கியிருகும் வீட்டினரோடு வெளியே செல்லும் போது வழிச்செலவை பகிர்ந்துகொள்வது நல்லது. நம் வீட்டிற்கு விருந்தினர்களாக வந்தவர்களாயிற்றே என்று அவர்களே செலவு செய்ய முற்படுவார்கள். ஆனாலும் செலவுகளை பகிர்ந்து கொள்வதே நல்லது.

கடைவீதிகளுக்குச் சென்று நமது பிள்ளைகளுக்கு ஏதேனும் பொருட்கள் வாங்கினால் உறவினர் வீட்டுப்பிள்ளைகளுக்கும் ஏதாவது வாங்கிக் கொடுக்கலாம். உறவினர்களின் மனது மகிழும். நாம் வந்து சென்றதை மகிழ்ச்சியுடன் நினைத்திருக்க அது வழி வகுக்கும்.

நமது வீட்டில் ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும் விருந்தினர்களாக ஒரு வீட்டிற்குச் சென்றிருக்கும் போது அவற்றை மனம் விட்டுப் பேசுகிறேன் பேர்வழி என்று அழுது புலம்பக் கூடாது. ஏனெனில் அவர்கள் வீட்டிலும் வேறு விதமான பிரச்சனைகளோடு அவர்கள் வாழக்கூடும். அதையும் தாண்டியே நம்மை விருந்தினர்களாக ஏற்றுக் கொண்டிருப்பார்கள். நம்முடைய மனக் கஷ்டத்தையும் அவர்கள் தலையில் இறக்கி வைக்க நினைத்தால், அடுத்த முறை நாம் வருவோம் என்று ஊகித்தால் கூட கந்துவட்டிக்கு கடன் வாங்கியாவது திண்டுக்கல் பூட்டிற்கு ஆர்டர் கொடுத்து விடுவார்கள்.

விருந்து முடிந்து கிளம்புகையில் பிரிகிறோமே என்று கொஞ்சம் கண்ணீர் கசிந்தால் அடுத்த விருந்து வரை மனதில் நிற்கும்.

ஒரு வீட்டிற்கு விருந்தினர்களாகச் செல்லும் போதும், விருந்தினர்களை வரவேற்கும் போதும் இப்படி சில விஷயங்களை மனதில் வைத்து மகிழ்ச்சியைத் தக்க வைத்துக்கொண்டால் உறவுகள் பலப்படும்.

சிந்திப்போம். அதிதி தேவோ பவ!


Friday, October 2, 2009

மஹாபாரதத்தில் ஒரு நாள்!

மஹாபாரதம் என்ற இந்த இதிகாசம் முழுக்க முழுக்க தர்மத்தின் ஃபார்முலா. ஒவ்வொரு கதாபாத்திரமும் தர்மத்தின் வாழும் விளக்கங்கள். "இதி ஹாஸம்" என்றால் "இது நடந்தது" என்று பொருள். நமது பண்டைய வரலாறு. இது நடக்கவே இல்லை வெறும் கற்பனை என்று சாதிப்பவர்களும் இருக்கிறார்கள்.

கற்பனைக் கதையா? தனிமனிதனால் எழுதப்பட்ட புனைவா அல்லது நடந்த உண்மையா? எதுவாயினும் கதாபத்திரங்கள் மூலமாக சொல்லப்பட்ட அத்தனை தர்மங்களும் எல்லா மனிதர்களுக்கும் எல்லா காலத்திற்கும் ஏற்றவை என்பதே இதன் பெருமை.

இந்த பரந்த பாரத நாட்டிற்கு அந்தப் பெயர் வந்ததற்கு காரணம் இந்நாட்டின் பேரரசர் பரதன். சிறுவயதில் பள்ளிக்கூட பாடத்தில் கூட படித்த ஞாபகம் உண்டு. முன்னொரு காலத்தில் இந்த நாட்டை பரதன் என்றொரு அரசன் ஆண்டு வந்தான். அதனால் இது பாரத நாடு என பெயர் பெற்றது என்று. தற்போது எந்த பள்ளிப் புத்தகத்திலும் அது போன்ற வாசகம் காண முடியாது. ஏனெனில் அது போன்ற வாசகம் இந்தியாவை இந்து நாடு என்று குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுத்து விடுமே. அதுதான். சரி, அதை அப்புறம் பார்ப்போம்.

மகோந்நதமான சக்கரவர்த்தி. வீரம் பொருந்தியவர். ஹஸ்தினாபுரத்தின் எல்லைகளை விரிவுபடுத்திய வீரர் பரதன். அகண்ட பாரதத்தை ஒரு குடையின் கீழ் உண்டாக்கியவர். இத்தகைய கம்பீரமான அரசருக்கு பிற்காலத்தில் இந்த தேசம் அவரது பெயராலேயே காலங்காலமாக அழைக்கப்படப் போகிறது என்பது அப்போது தெரியாது.

தர்மவானான அவருக்கு அத்தகைய சிறப்பை உண்டாக்கிய காரியம் எது? நாட்டின் எல்லைகளை விரிவு படுத்திய வீரமா? கொடை வள்ளல் என்ற பெருமையா? அரசன் என்பதால் பயமா? இல்லை.

ஒரு நாள் அவர் வெளியிட்ட ஒரு அறிவிப்பு அவருக்கு அத்தகையப் பெரும் பெயரை உண்டாக்கியது. இந்த உலகில் எதிர் வரும் அரசாங்கங்களுக்கெல்லாம் ஒரு சிறந்த வழிகாட்டும் தர்மமாக மாறியது.

துஷ்யந்த ராஜாவுக்கும் சகுந்தலைக்கும் பிறந்த சக்ரவர்த்தி பரத மாமன்னர் தனக்கு வயதாகி விட்டதை உணரத்துவங்கினார். தனக்குப் பிறகு இந்நாட்டை ஆளப்போகும் இளவரசனை அறிவிக்க ஆவலுற்றார். ஆனால் யார் என்பதை அறிவிக்க வேண்டுமே. பரத மன்னருக்கு ஒன்பது மகன்கள் இருந்தனர். அவர்களில் மூத்த மகனுக்குத்தான் இளவரசன் என்ற பட்டத்தை அளிப்பார் என்று சபையோர் எல்லாம் எதிர்பார்த்து அறிவிப்புக்குக் காத்திருந்தனர்.

ஆனால் பரத மன்னன் மிகுந்த மனசஞ்சலத்திற்கு ஆளானார். தனது தாத்தாவும் மகரிஷியுமான கந்தரிடம் சென்று தனது சஞ்சலத்திற்கு தீர்வு கிடைக்குமா என்று கேட்கலானார்.

மகரிஷியே "ஒன்பது மகன்களுக்குத் தந்தையான நான் யாரை இளவரசனாக ஆக்குவது என்பதில் சஞ்சலமுற்றிருக்கிருக்கிறேன்" என்றார்.

அதற்கு ரிஷியோ "இந்தப் பிரச்சனையின் அர்த்தம் அகண்ட பூமியை வென்ற பரதன் தன்னைத்தானே வெல்லவில்லை என்பதையே காட்டுகிறது. உன்னையே நீ வெல்லாவிடில் உன்னால் ஞாயம் சொல்ல முடியாது. உன்னையே நீ வெல்ல முயற்சி செய். உனது மனம் எதை விரும்புகிறது என்று நீ முதலில் முடிவு செய். அதில் உறுதியாக இரு. எனது ஆசீர்வாதங்கள்" என்று மட்டும் சொல்லி அனுப்பிவைத்தார்.

மறுநாள் பரத மன்னன் அரசவைக்கு வருகிறார். தனது சிம்மாசனம் நோக்கிச் செல்கிறார். அருகில் அமர்ந்திருந்த தனது தாய்க்கு வணக்கம் தெரிவித்து விட்டு மகா மந்திரியை அருகில் அழைத்து தான் எழுதி வந்த ஓலையை வாசிக்கச் செய்கிறார்.

பர்த மன்னரின் அறிவிப்பை மந்திரி வாசிக்கத் துவங்கினார், "நான் துஷ்யந்த புத்திரன் பரதன் எனது நாட்டு மக்களுக்கு வணக்கத்தை தெரிவிக்கிறேன். என்னுடன் வெற்றி பயணத்தில் பிரயானித்த எனது வீரர்களுக்கும் எனது வணக்கத்தையும் நன்றிகளையும் உரித்தாக்குகிறேன். அவர்களால் தான் இந்த எல்லைகள் விரிவடைந்து பெருமைமிக்க நாடு உண்டானது. இதோ இந்த ராஜ சிம்ஹாசனத்திலிருந்து சொல்ல விழைகிறேன்.

ஒரு அரசன் என்பவன் தேசம் மற்றும் தேச மக்களை விட முக்கியமானவன் அல்ல.

ராஜாவுக்கு மூன்று முக்கிய கடமைகள் உண்டு.

1. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நீதி வழங்குவது

2. நாட்டையும் மக்களையும் காப்பது.

3. அந்தக் கடைமைகளை தவறாமல் நிறைவேற்றும் இளவரசனை நாட்டுக்குத் தருவது ஆகியவை தான் அந்த மூன்று கடமைகள்.

இந்த குணங்களை எனக்குப் பிறந்த எந்த மகனிடமும் நான் காணவில்லை". இதை வாசித்த மந்திரி அரசனை அதிர்ச்சியுடன் பார்க்க பரதனோ மேலும் படி என்று சைகை காட்டினார். மந்திரி மேலும் படித்தார். "ஆகையால், இந்நாட்டின் ப்ரஜையும், சிறந்த வீரனுமான பாரத்வாஜ பூமன்யூவை எனது புத்திரன் ஆக்கி அவனை இளவரசனாக அறிவிக்கிறேன்" என்றார்.

அரசவையே ஒரு நிமிடம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. பரதனோ, "இந்த முடிவு எல்லோருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கும். யாருக்காகிலும் கேள்விகள் இருந்தால் கேட்கலாம்" என்றார்.

இப்படி ஒரு அறிவுப்பு வரும் என்று சற்றும் எதிர்பாராத மந்திரி மன்னரிடம் தன் கருத்தைச் சொல்ல அனுமதி கேட்கிறார்.

மன்னன் அனுமதிக்கிறான். மந்திரி கூறினார், "மகாராஜா, மனதில் தோன்றியதைத் தான் கேட்கிறேன். வாழையடி வாழையாக மன்னனின் புத்திரனுக்குத்தான் அரச சிம்மாசனம். ஆகவே..." என இழுக்கையில் மன்னன் அரியனையிலிருந்து வேகமாக எழுந்தான்.

"ஆகவேதான் இந்த பாரம்பர்யத்தை மாற்ற நினைக்கிறேன் மந்திரியாரே!" என்றார். "கேவலம் பிறப்பின் அடிப்படையில் மட்டுமே யாராலும் நாட்டின் அரசனாக முடியாது. ராஜசிம்மாசனத்தின் மீதுள்ள அதிகாரம் என்பது பிறப்பின் அடிப்படையால் மட்டுமல்ல, செயல்பாடு யோக்கியதை போன்றவைகள் வைத்தே தீர்மானிக்கப்பட வேண்டும். ராஜா என்ற அதிகாரம் தன் குடும்பத்திற்காகவும் மகனுக்காகவும் அல்ல.

அவனது தேசம் மற்றும் நாட்டின் விசுவாசிகளுக்காகத்தான். எனது புத்திரர்கள் கடமையும் கன்னியமும் தவறியதால் அவர்களுக்கு அரியனை ஏறும் தகுதி கிடையாது. அரசியலின் ஆதாயம் புத்திர நலன் அல்ல உலக நலன் தான். ஒரு ராஜா என்பவன் புத்திர மோகத்தில் தனது நாட்டின் எதிர்காலத்தை அடகு வைப்பவன் அல்ல. எனது முடிவே இறுதியானது" என்று கூறி சபையை விட்டு வெளியேறினார்.

அன்றிரவு பரதனின் தாய் சகுந்தலை கவலையுடன் காணப்பட்டாள். தனது மகன் அரசனாக இருந்தும் அதிகாரத்தை தனது பேரப்பிள்ளைகளுக்கு கொடுக்காமல் யாரோ ஒருவருக்குக் கொடுத்து விட்டான் என்று வருத்தத்தமடைந்தாள். இதை கேள்விப்பட்ட பரத சக்ரவர்த்தி தன் தாயிடம் சொன்ன வாக்கியங்கள் அரச தர்மத்தின் உச்சம்.

பரதன் தன் தாயிடம் விளக்கினான் " தாயே எனது மகனுக்கு அதிகாரத்தைக் கொடுக்கவில்லை என்று நீங்கள் வருந்துகிறீர்கள். ஆனால் தாயே, நான் தந்தை மட்டுமல்ல அரசனும் கூட. தர்மத்தின் பொருட்டு செயல் படும் கடமை எனக்கு உள்ளது. என் குடும்பம் மிகப்பெரியது தாயே!

இப்போது இளவரசனாக அறிவிக்கப்பட்டிருப்பவனும் என் புத்திரன் தான். அவனும் இந்நாட்டின் ப்ரஜை தானே. என் நாட்டின் பிரஜைகள் யாவருமே என் குடும்பம் தான்.

ஒரு வேளை எனது புத்திரனின் ஒருவனை நான் அரசனாக அறிவித்திருந்தால் இந்த நாடு, இதன் பிரஜை இரண்டுக்குமே அநீதி நடந்திருக்கும்.

அம்மா, உங்கள் புத்திரன் ஒரு ஞானவான் என்று கர்வம் கொள்ளுங்கள். அதுவே எனக்கும் பெருமை" என்று தன் தாயின் வருத்தத்தை துடைத்து வெளியேறினார் தர்மவான் பரதன்.

ராஜாவின் வாரிசே ராஜாவாக முடியும் என்ற நிலையை தர்மத்தின் பொருட்டு மாற்றிய முதல் அரசன் சகுந்தலையின் மகன் பரதன் ஆவான்.

அதற்குப் பின் பலகாலம் பாரதத்தில் மக்களில் தகுதிவாய்ந்தவரே அரனாக ஆனார்கள். பின்னர் பல தலைமுறைக்குப்பிறகு வந்த சாந்தனு என்ற அரசனுக்குப் பிறகு மீண்டும் வாரிசுக்கு உரிமை என்ற நிலை உண்டானது. சாந்தனுவின் மகன் தான் கங்கை மைந்தன் பீஷ்மர். தனி மனிதர்கள் பூமியை சொந்தம் கொண்டாடத் துவங்கினார்கள்.

ஆம், குருக்ஷேத்ரம் போருக்குத் தயாராகிக்கொண்டிருந்தது அப்போது தான்.

பரதனின் அந்த ஒரு நாள் அறிவிப்பு நமது நாட்டில் அரசன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அற்புதமான உதாரணமாக இன்னும் உலகுக்கெல்லாம் போதித்துக் கொண்டிருக்கிறது.

அன்றைய அரசன் வாரிசு அரசாங்கத்தை மாற்றி மக்களாட்சியை நிறுவினான். இன்றைய அரசர்களாக விளங்கும் அரசியல் வாதிகள் மக்களாட்சியை மாற்றி வாரிசு அரசாங்கத்தை விதைக்கிறார்கள்.

குருக்ஷேத்ரம் காத்திருக்கிறது.



இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.