Showing posts with label மஹாபாரதம். Show all posts
Showing posts with label மஹாபாரதம். Show all posts

Saturday, March 24, 2012

காலம் தீர்மானிக்கிறது!


"காலமும் நிகழ்வுகளும் எப்போதும் ஒன்றாகவே இருக்கிறது.
அவற்றை அனுபவிக்கும் மனிதர்கள் மட்டுமே மாறிக்கொண்டே இருக்கிறார்கள்"

நாம் ஒன்று நினைத்தால் இறைவன் ஒன்று நினைப்பான் என்பார்கள். என் விஷயத்தில் பல முறை அவ்வாறு நடந்திருக்கிறது. சில முடிவுகளைத் தேடி நாம் ஏதாவது காரியம் செய்வோம். நிகழ்வதோ வேறொன்றாக இருக்கும். இதற்கான காரணங்கள் எப்பொழுதும் நமக்குப் புலப்படாதவையாகவே பெரும்பாலும் இருக்கும்.

எனது பெரும்பாலான எதிர்பாராத நிகழ்வுகள் நல்லவையாகவே இருந்திருக்கிறது. அது கடவுள் என் மீது காட்டிய கருணையாகவே கருதியிருக்கிறேன். எதிர் வரும் காலம் வெற்றாகவும், எந்த வித யோசனைகளற்றும் வாழ்வைக் கடத்திக் கொண்டிருக்கையில் அடுத்து வரும் வருடங்கள் என்னவாக இருக்கும், என் எதிர்காலம் என்னவாகப் போகிறது என்றெல்லாம் முடிவே தெரியாமல் வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் காலங்களில், எதிர்பாராத பல மாற்றங்களை கண்ணில் காட்டி வியக்க வைப்பான் இறைவன். இப்படிப் பலமுறை நடந்திருக்கிறது.

அவை எதுவும் நாம் திட்டமிட்ட வகையில் நடக்காது. அல்லது நாம் ஒன்றைத் திட்டமிட்டுச் செல்லுவோம் அவை வேறொன்றாக நடந்து விடும். சிலருக்கு அந்த எதிர்பாரா நிகவுகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். சிலருக்கு துன்பத்தைக் கொடுத்து விடும். அந்த முடிவுகள் யாவும், நாம் எதை நோக்கிச் செல்கிறோம், நம் பயணத்தின் நோக்கம் நன்மையைக் குறித்தா, அல்லது தீமையக் குறித்தா என்பதைப் பொறுத்தே முடிவுகள் அமைகின்றன.

இதையே சுருக்கமாக எல்லாம் அவன் செயல் என்பார்கள் பெரியோர்கள். பொதுவாக எது நடந்தாலும் நமக்கு மட்டும் தான் இப்படி நடக்கிறதா அல்லது எல்லோருக்கும் நம்மைப் போன்றே தான் நடக்கிறதா என்று சந்தேகங்கள் அடிக்கடித் தோன்றும். புராணங்களும் இதிகாசங்களும் இது போன்ற கேள்விகளுக்கு விடை அளிப்பவையாகவே இருந்திருக்கிறது. காலத்தால் மாறுபடாத சில நிதர்சனமான உணர்வுகளை அல்லது உண்மைகளை அவை நமக்கு என்றும் போதிக்கின்றன!

அவைகள் கூறும் படிப்பினை எல்லாம் இதுதான்..."காலமும் நிகழ்வுகளும் எப்போதும் ஒன்றாகவே இருக்கிறது. அவற்றை அனுபவிக்கும் மனிதர்கள் மட்டுமே மாறிக்கொண்டே இருக்கிறார்கள்"

அப்படி ஒரு நிகழ்வை மகாபாரத்தில் காணலாம். பாண்டவர்கள் நாடிழந்து காட்டில் வாழ்ந்து கொண்டிருந்த காலம். அவர்களைக் காட்டிற்கு துரத்தியனுப்பினாலும் துரியோதனனுக்கு அவர்களைச் சீண்டிக் கொண்டிருப்பதில் ஏனோ தனி விருப்பம் இருந்து கொண்டே இருந்தது. தான் அரச மாளிகையில் இன்பமாக இருப்பதால் இருமாப்பு கொண்டு, அதனை வெளிக்காட்டுவதன் மூலமாக காட்டில் வசித்துக் கொண்டிருந்த பாண்டவர்களை பரிகசிக்க வேண்டும் என்று மிகவும் விரும்பினான்.

பாண்டவர்கள் வாழ்ந்து வந்த த்வைத வனத்திற்கு உல்லாச யாத்திரை போய் வரத் தீர்மானித்தான் துரியோதனன். தன்னுடைய மந்திரிகள். சகோதரர்கள், அந்தப்புரத்துப் பெண்கள், செல்வங்கள், சேனைகள் ஆகிய இவற்றுடன் பாண்டவர்கள் முன் அவர்கள் காணுமாறு ஊர்வலம் சென்று அவர்கள் மனதில் பொறாமை உணர்ச்சியைத் தூண்ட வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் அந்த வனத்திற்கு வந்து சேர்ந்தான்.

யுதிஷ்டிரர் குடிசை அமைத்துக் கொண்டு வசித்து வந்த இடத்திற்கு அருகில் ஒரு குளக்கரை இருந்தது. அந்தக் குளத்தில் பாண்டவர்கள் காணும்படியாகக் குளித்துக் கும்மாளமிட்டு ஆடிப்பாடி மகிழ்ந்து காட்டி ஒரு வேடிக்கையை நிகழ்த்த வேண்டுமென தீர்மானித்திருந்தான் துரியோதனன். இவ்வாறெல்லாம் செய்தால் பாண்டவர்கள் தம்மைப் பார்த்துப் பொறாமை கொண்டு நாணி வருந்துவார்கள் என்பது அவன் எண்ணம். அதனால் தனது பெண்கள், படைகள் சூழ அந்தக் குளக்கரைக்குச் சென்றான்.


அங்கே தான் ஆண்டவன் வைத்தான் ஒரு 'ட்விஸ்ட்'. அவன் ஒன்று நினைத்து வந்து சேர அங்கே வேறொரு காட்சி அரங்கேறிக்கொண்டிருந்தது. துரியோதனன் வருகைக்கு முன்னே அங்கே கந்தர்வர்கள் அந்தக் குளக்கரையை ஆக்கிரமித்திருந்தனர். அவர்கள் குளத்தில் குளித்து குதூகளித்துக்கொண்டிருந்தனர்.

இதனை சற்றும் எதிர்பாராத துரியோதனனுக்கு கடும் கோபம் உண்டாக அவர்களை வெளியேறுமாறு அழைத்தான். ஆனால் கந்தர்வர்களோ துரியோதனனை மதிக்கவில்லை. இத்தனை படைப் பரிவார ஆரவாரத்துடன் வந்த தனக்கு வந்த நோக்கம் நிறைவடையாது போனால் அசிங்கமல்லவோ என்றெண்ணிய துரியோதனன் அவர்களுடன் போரிடலானான்.

கந்தர்வர்களோ துரியோதனனின் செயல் கண்டு கொதித்தெழுந்து, துரியோதனன் படைகளை அடித்துதைத்து துரியோதனனையும், அவன் அந்தப்புரப் பெண்களையும் கைது செய்து, அவன் சேனைகளையும், பகட்டாய் அவன் கொண்டு வந்திருந்த செல்வங்களையும் கைப்பற்றிக் கொண்டார்கள்.

சிலருக்குச் சிலரை வஞ்சம் தீர்த்தால் மட்டும் போதாது, அதன் மூலம் தான் வென்று விட்டேன் என்பதை விடாது பரைசாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்களது ஆழ்மன வன்மம் தீரவே தீராது. அத்தகைய தீயவர்கள் அதே வன்மத்தால் தண்டிக்கப்படவும் செய்வார்கள். அது காலத்தின் சூக்ஷமம். அது தானே நடக்கும். ஏன் எதற்கு எப்படி எப்போது என்பதை இறைவனே தீர்மானிக்கிறான். அது நடக்கப் போவதும், நடந்து முடிவதும் நமக்குத் தெரியாமலே கூடப் போகலாம்! அல்லது காலம் கடந்து புரியவரலாம்! ஆனால் அந்தப் பொறுப்பை ஆண்டவன் கச்சிதமாக முடித்து வைக்கிறான்! துரியோதனனுக்கு இப்போது நிகழ்ந்ததும் அது தான்.

துரியோதனன் தோற்றதையும், அவன் செல்வங்கள் பறிக்கப்பட்டதையும் அறிந்த யுதிஷ்ட்டிரன் காலையுற்றான். அவன் தம்முடைய தம்பிகளை அழைத்து துரியோதனனுக்கு உதவுமாறு வேண்டினான். மற்றவர்கள் தயங்கினார்கள். துரியோதனன் நம்மை கூண்டோடு அழிக்க நினைத்தவன். அவனுக்கு உதவச் சொல்கிறீர்களே என்று குமுறினார்கள். ஆனால் யுதிஷ்ட்டிரரோ "இவர்கள் நம் அழிவை விரும்பிய படியால் நம் பகைவர்களாகிறார்கள் என்றாலும், அவர்களும் நம் சகோதரர்களே! நாம் இருக்கும் போது இவர்களுக்குப் பிறர் கெடுதல் செய்தால் நாம் அதை எப்படிப் பார்த்துக் கொண்டிருப்பது? அதனால் அவர்களை உடனடியாகக் காக்க வேண்டியது நம் கடமை" என்று எடுத்துக் கூறலானார்.


 சும்மா அழகுக்கு!
 

அண்ணனின் அன்புக் கட்டளைக்குப் பணிந்த அர்ஜுனனும் மற்ற சகோதரர்களும் புறப்பட்டு கந்தர்வர்களை வெற்றி கொண்டு துரியோதனனையும் பிறரையும் பத்திரமாக மீட்டு ஊருக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.

யாரிடம் தம் செல்வச் செழிப்பைக் காட்டி சுகபோகத்தைக் காட்டி அவர்களை வெட்கித் தலைகுனிந்து நிற்கச் செய்யும் எண்ணத்துடன் ஊர்விட்டு வந்தானோ, அவர்கள் உதவியாலேயே உயிர்பிழைத்து அவர்கள் முன்பாக வெட்கித் தலைகுனிந்து ஊர் திரும்பிப் போனான் துரியோதனன்.

துரியோதனன் ஒன்று நினைத்தான் காலம் அதனை வேறாக செய்து முடித்தது! துரியோதனனின் வருகையும் அவனது நோக்கமும் யுதிஷ்ட்டிரனுக்கும் தெரிந்தே இருந்தது. வந்தால் வரட்டும் என்றிருந்த யுதிஷ்ட்டிரனுக்கும் அவனே எதிர்பாராத வகையில் துரியோதனனுக்கே உதவி செய்து தன் பெருந்தன்மையைக் காட்டும்  சம்பவம் நடந்து விட்டது.

இதிகாசகாலம் ஆனாலும் சரி, இந்தக் கலிகாலம் ஆனாலும் சரி, மனிதனின் முடிவுகளை அவன் மட்டுமே தீர்மானிப்பதில்லை!

காலம் அதனை தீர்மானிக்கிறது. தீர்மானிக்கும் அந்தச் சக்தியையே இறைவன் என்பர் பெரியோர்!


Friday, October 2, 2009

மஹாபாரதத்தில் ஒரு நாள்!

மஹாபாரதம் என்ற இந்த இதிகாசம் முழுக்க முழுக்க தர்மத்தின் ஃபார்முலா. ஒவ்வொரு கதாபாத்திரமும் தர்மத்தின் வாழும் விளக்கங்கள். "இதி ஹாஸம்" என்றால் "இது நடந்தது" என்று பொருள். நமது பண்டைய வரலாறு. இது நடக்கவே இல்லை வெறும் கற்பனை என்று சாதிப்பவர்களும் இருக்கிறார்கள்.

கற்பனைக் கதையா? தனிமனிதனால் எழுதப்பட்ட புனைவா அல்லது நடந்த உண்மையா? எதுவாயினும் கதாபத்திரங்கள் மூலமாக சொல்லப்பட்ட அத்தனை தர்மங்களும் எல்லா மனிதர்களுக்கும் எல்லா காலத்திற்கும் ஏற்றவை என்பதே இதன் பெருமை.

இந்த பரந்த பாரத நாட்டிற்கு அந்தப் பெயர் வந்ததற்கு காரணம் இந்நாட்டின் பேரரசர் பரதன். சிறுவயதில் பள்ளிக்கூட பாடத்தில் கூட படித்த ஞாபகம் உண்டு. முன்னொரு காலத்தில் இந்த நாட்டை பரதன் என்றொரு அரசன் ஆண்டு வந்தான். அதனால் இது பாரத நாடு என பெயர் பெற்றது என்று. தற்போது எந்த பள்ளிப் புத்தகத்திலும் அது போன்ற வாசகம் காண முடியாது. ஏனெனில் அது போன்ற வாசகம் இந்தியாவை இந்து நாடு என்று குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுத்து விடுமே. அதுதான். சரி, அதை அப்புறம் பார்ப்போம்.

மகோந்நதமான சக்கரவர்த்தி. வீரம் பொருந்தியவர். ஹஸ்தினாபுரத்தின் எல்லைகளை விரிவுபடுத்திய வீரர் பரதன். அகண்ட பாரதத்தை ஒரு குடையின் கீழ் உண்டாக்கியவர். இத்தகைய கம்பீரமான அரசருக்கு பிற்காலத்தில் இந்த தேசம் அவரது பெயராலேயே காலங்காலமாக அழைக்கப்படப் போகிறது என்பது அப்போது தெரியாது.

தர்மவானான அவருக்கு அத்தகைய சிறப்பை உண்டாக்கிய காரியம் எது? நாட்டின் எல்லைகளை விரிவு படுத்திய வீரமா? கொடை வள்ளல் என்ற பெருமையா? அரசன் என்பதால் பயமா? இல்லை.

ஒரு நாள் அவர் வெளியிட்ட ஒரு அறிவிப்பு அவருக்கு அத்தகையப் பெரும் பெயரை உண்டாக்கியது. இந்த உலகில் எதிர் வரும் அரசாங்கங்களுக்கெல்லாம் ஒரு சிறந்த வழிகாட்டும் தர்மமாக மாறியது.

துஷ்யந்த ராஜாவுக்கும் சகுந்தலைக்கும் பிறந்த சக்ரவர்த்தி பரத மாமன்னர் தனக்கு வயதாகி விட்டதை உணரத்துவங்கினார். தனக்குப் பிறகு இந்நாட்டை ஆளப்போகும் இளவரசனை அறிவிக்க ஆவலுற்றார். ஆனால் யார் என்பதை அறிவிக்க வேண்டுமே. பரத மன்னருக்கு ஒன்பது மகன்கள் இருந்தனர். அவர்களில் மூத்த மகனுக்குத்தான் இளவரசன் என்ற பட்டத்தை அளிப்பார் என்று சபையோர் எல்லாம் எதிர்பார்த்து அறிவிப்புக்குக் காத்திருந்தனர்.

ஆனால் பரத மன்னன் மிகுந்த மனசஞ்சலத்திற்கு ஆளானார். தனது தாத்தாவும் மகரிஷியுமான கந்தரிடம் சென்று தனது சஞ்சலத்திற்கு தீர்வு கிடைக்குமா என்று கேட்கலானார்.

மகரிஷியே "ஒன்பது மகன்களுக்குத் தந்தையான நான் யாரை இளவரசனாக ஆக்குவது என்பதில் சஞ்சலமுற்றிருக்கிருக்கிறேன்" என்றார்.

அதற்கு ரிஷியோ "இந்தப் பிரச்சனையின் அர்த்தம் அகண்ட பூமியை வென்ற பரதன் தன்னைத்தானே வெல்லவில்லை என்பதையே காட்டுகிறது. உன்னையே நீ வெல்லாவிடில் உன்னால் ஞாயம் சொல்ல முடியாது. உன்னையே நீ வெல்ல முயற்சி செய். உனது மனம் எதை விரும்புகிறது என்று நீ முதலில் முடிவு செய். அதில் உறுதியாக இரு. எனது ஆசீர்வாதங்கள்" என்று மட்டும் சொல்லி அனுப்பிவைத்தார்.

மறுநாள் பரத மன்னன் அரசவைக்கு வருகிறார். தனது சிம்மாசனம் நோக்கிச் செல்கிறார். அருகில் அமர்ந்திருந்த தனது தாய்க்கு வணக்கம் தெரிவித்து விட்டு மகா மந்திரியை அருகில் அழைத்து தான் எழுதி வந்த ஓலையை வாசிக்கச் செய்கிறார்.

பர்த மன்னரின் அறிவிப்பை மந்திரி வாசிக்கத் துவங்கினார், "நான் துஷ்யந்த புத்திரன் பரதன் எனது நாட்டு மக்களுக்கு வணக்கத்தை தெரிவிக்கிறேன். என்னுடன் வெற்றி பயணத்தில் பிரயானித்த எனது வீரர்களுக்கும் எனது வணக்கத்தையும் நன்றிகளையும் உரித்தாக்குகிறேன். அவர்களால் தான் இந்த எல்லைகள் விரிவடைந்து பெருமைமிக்க நாடு உண்டானது. இதோ இந்த ராஜ சிம்ஹாசனத்திலிருந்து சொல்ல விழைகிறேன்.

ஒரு அரசன் என்பவன் தேசம் மற்றும் தேச மக்களை விட முக்கியமானவன் அல்ல.

ராஜாவுக்கு மூன்று முக்கிய கடமைகள் உண்டு.

1. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நீதி வழங்குவது

2. நாட்டையும் மக்களையும் காப்பது.

3. அந்தக் கடைமைகளை தவறாமல் நிறைவேற்றும் இளவரசனை நாட்டுக்குத் தருவது ஆகியவை தான் அந்த மூன்று கடமைகள்.

இந்த குணங்களை எனக்குப் பிறந்த எந்த மகனிடமும் நான் காணவில்லை". இதை வாசித்த மந்திரி அரசனை அதிர்ச்சியுடன் பார்க்க பரதனோ மேலும் படி என்று சைகை காட்டினார். மந்திரி மேலும் படித்தார். "ஆகையால், இந்நாட்டின் ப்ரஜையும், சிறந்த வீரனுமான பாரத்வாஜ பூமன்யூவை எனது புத்திரன் ஆக்கி அவனை இளவரசனாக அறிவிக்கிறேன்" என்றார்.

அரசவையே ஒரு நிமிடம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. பரதனோ, "இந்த முடிவு எல்லோருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கும். யாருக்காகிலும் கேள்விகள் இருந்தால் கேட்கலாம்" என்றார்.

இப்படி ஒரு அறிவுப்பு வரும் என்று சற்றும் எதிர்பாராத மந்திரி மன்னரிடம் தன் கருத்தைச் சொல்ல அனுமதி கேட்கிறார்.

மன்னன் அனுமதிக்கிறான். மந்திரி கூறினார், "மகாராஜா, மனதில் தோன்றியதைத் தான் கேட்கிறேன். வாழையடி வாழையாக மன்னனின் புத்திரனுக்குத்தான் அரச சிம்மாசனம். ஆகவே..." என இழுக்கையில் மன்னன் அரியனையிலிருந்து வேகமாக எழுந்தான்.

"ஆகவேதான் இந்த பாரம்பர்யத்தை மாற்ற நினைக்கிறேன் மந்திரியாரே!" என்றார். "கேவலம் பிறப்பின் அடிப்படையில் மட்டுமே யாராலும் நாட்டின் அரசனாக முடியாது. ராஜசிம்மாசனத்தின் மீதுள்ள அதிகாரம் என்பது பிறப்பின் அடிப்படையால் மட்டுமல்ல, செயல்பாடு யோக்கியதை போன்றவைகள் வைத்தே தீர்மானிக்கப்பட வேண்டும். ராஜா என்ற அதிகாரம் தன் குடும்பத்திற்காகவும் மகனுக்காகவும் அல்ல.

அவனது தேசம் மற்றும் நாட்டின் விசுவாசிகளுக்காகத்தான். எனது புத்திரர்கள் கடமையும் கன்னியமும் தவறியதால் அவர்களுக்கு அரியனை ஏறும் தகுதி கிடையாது. அரசியலின் ஆதாயம் புத்திர நலன் அல்ல உலக நலன் தான். ஒரு ராஜா என்பவன் புத்திர மோகத்தில் தனது நாட்டின் எதிர்காலத்தை அடகு வைப்பவன் அல்ல. எனது முடிவே இறுதியானது" என்று கூறி சபையை விட்டு வெளியேறினார்.

அன்றிரவு பரதனின் தாய் சகுந்தலை கவலையுடன் காணப்பட்டாள். தனது மகன் அரசனாக இருந்தும் அதிகாரத்தை தனது பேரப்பிள்ளைகளுக்கு கொடுக்காமல் யாரோ ஒருவருக்குக் கொடுத்து விட்டான் என்று வருத்தத்தமடைந்தாள். இதை கேள்விப்பட்ட பரத சக்ரவர்த்தி தன் தாயிடம் சொன்ன வாக்கியங்கள் அரச தர்மத்தின் உச்சம்.

பரதன் தன் தாயிடம் விளக்கினான் " தாயே எனது மகனுக்கு அதிகாரத்தைக் கொடுக்கவில்லை என்று நீங்கள் வருந்துகிறீர்கள். ஆனால் தாயே, நான் தந்தை மட்டுமல்ல அரசனும் கூட. தர்மத்தின் பொருட்டு செயல் படும் கடமை எனக்கு உள்ளது. என் குடும்பம் மிகப்பெரியது தாயே!

இப்போது இளவரசனாக அறிவிக்கப்பட்டிருப்பவனும் என் புத்திரன் தான். அவனும் இந்நாட்டின் ப்ரஜை தானே. என் நாட்டின் பிரஜைகள் யாவருமே என் குடும்பம் தான்.

ஒரு வேளை எனது புத்திரனின் ஒருவனை நான் அரசனாக அறிவித்திருந்தால் இந்த நாடு, இதன் பிரஜை இரண்டுக்குமே அநீதி நடந்திருக்கும்.

அம்மா, உங்கள் புத்திரன் ஒரு ஞானவான் என்று கர்வம் கொள்ளுங்கள். அதுவே எனக்கும் பெருமை" என்று தன் தாயின் வருத்தத்தை துடைத்து வெளியேறினார் தர்மவான் பரதன்.

ராஜாவின் வாரிசே ராஜாவாக முடியும் என்ற நிலையை தர்மத்தின் பொருட்டு மாற்றிய முதல் அரசன் சகுந்தலையின் மகன் பரதன் ஆவான்.

அதற்குப் பின் பலகாலம் பாரதத்தில் மக்களில் தகுதிவாய்ந்தவரே அரனாக ஆனார்கள். பின்னர் பல தலைமுறைக்குப்பிறகு வந்த சாந்தனு என்ற அரசனுக்குப் பிறகு மீண்டும் வாரிசுக்கு உரிமை என்ற நிலை உண்டானது. சாந்தனுவின் மகன் தான் கங்கை மைந்தன் பீஷ்மர். தனி மனிதர்கள் பூமியை சொந்தம் கொண்டாடத் துவங்கினார்கள்.

ஆம், குருக்ஷேத்ரம் போருக்குத் தயாராகிக்கொண்டிருந்தது அப்போது தான்.

பரதனின் அந்த ஒரு நாள் அறிவிப்பு நமது நாட்டில் அரசன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அற்புதமான உதாரணமாக இன்னும் உலகுக்கெல்லாம் போதித்துக் கொண்டிருக்கிறது.

அன்றைய அரசன் வாரிசு அரசாங்கத்தை மாற்றி மக்களாட்சியை நிறுவினான். இன்றைய அரசர்களாக விளங்கும் அரசியல் வாதிகள் மக்களாட்சியை மாற்றி வாரிசு அரசாங்கத்தை விதைக்கிறார்கள்.

குருக்ஷேத்ரம் காத்திருக்கிறது.



இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.


Sunday, April 5, 2009

கீதோபதேசம்


அர்ஜுனன் சொன்னது:  

பகவானே சூரியன் உங்களுக்கு முன்னால் பிறந்தவர். நீங்கள் சூரியனுக்கு பிறகு பிறந்தீர்கள். முதலில் நீங்கள் சூரியனுக்கு அழிவற்ற‌ யோகத்தை உபதேசித்ததாக கூறுகிறீர்கள். இதை நான் எவ்வாறு புரிந்து கொள்வது.  

ஸ்ரீ கிருஷ்னர் உபதேசம்:  

அர்ஜுனா! நானும் நீயும் இதுவரை பல பிறவிகள் எடுத்துள்ளோம். அவற்றை எல்லாம் நான் அறிவேன். நீ அறிய மாட்டாய்.  

நான் பிறப்பற்றவன், அழிவற்றவன், குறைவு இல்லாத தன்மை உடையவன் இருந்தும் கூட என் இயல்பை அடக்கிக் கொண்டு என்னுடைய மாயா சக்தியினால் அவதாரம் செய்கிறேன்.  

அர்ஜுனா! உலகில் தர்மம் குறைந்து, அதர்மம் மேலோங்கும் போதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக் கொள்ளுகிறேன்.  

நல்லவர்களை காப்பதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் நான் யுகங்கள் தோறும் அவதரிக்கிறேன்.  

என்னுடைய தெய்வீகமான பிறப்பு, செயல் ஆகியவற்றை உள்ளபடி அறிந்தவன் இந்த மனித உடலைவிட்டு நீங்கிய பிறகு மறுபிறவி அடைவதில்லை. அர்ஜுனா! அவன் என்னை வந்து அடைகிறான்.  

காமம் (ஆசை), பயம் கோபம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டவர்களும், என்னையே நினைத்து, என்னையே சரணாக அடைந்து, ஞானமாகிய அக்னிப் பரீட்சையால் பொசுக்கப்பட்டு புனிதர்களாய்ப் பலர் என்னுடன் ஒன்றாகி ஐக்கியம் அடைந்திருக்கிறார்கள்.  

மனிதர்கள் எந்த வழியில் என்னை நாடினாலும், அதே வழியில் நான் அவர்களுக்கு அருள் புரிகிறேன். அர்ஜுனா! மக்கள் எங்கும் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.

Monday, March 30, 2009

விதுர நீதி


திருதிராஷ்டிரர் விதுரரிடம் கேட்கிறார் ‍:

கவலை மிகுதியால் எனக்கு உறக்கம் வரவில்லை. உன்னைப் போன்று தர்மம், அதர்மம் பற்றி அறிந்தவர் யாருமில்லை. என்னுடைய நன்மைக்குரிய அறிவுரைகள் சொல்.! 

விதுரர்: சாதாரண மனிதர்களுக்கு உறக்கம் வராததற்கு பலவிதமான காரணங்கள் உள்ளன.  

பலமுள்ள ஒருவனின் ஆதிக்கத்திற்க்கு ஒருவர் ஆளாகும் போது,  
ஒருவருக்குச் சொந்தமான சொத்தெல்லாம் கவரப்படும் போதும் உறக்கம் வராது, 

மேலும், காமமுள்ளவனுக்கும், திருடனுக்கும் உறக்கம் வராது.  

மாற்றானின் செல்வத்தைக் கவர்ந்து கொள்ள விரும்புகிறவனுக்கும் உறக்கம் வராது, இவ்விதமான எந்தக் குற்றமும் உங்களிடத்தில் இல்லாமல் இருந்தால் உங்களால் நன்றாக உறங்க முடியும் இவ்வாறு விதுரர் பதிலளித்தார்.

Saturday, March 28, 2009

விதுர நீதி


விட்டுவிட வேண்டிய குணங்கள்:

அதிகமாக உறங்குவது, உடல் அசதி, அச்சம், கோபம், சோம்பேறித்தனம், பின்பு செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் இந்த‌ ஆறு குணங்களையும் நாம் கட்டாயம் விட்டுவிட வேண்டும்.

விடக்கூடாத குணங்கள்:

உண்மை, தானம், கவனம், அன்பு, பொறுமை, தைரியம் இந்த ஆறு நற்குணங்களையும் எப்போதும் விட்டுவிடக்கூடாது.