Sunday, December 27, 2009

விக்கிரமாதித்தன் கதைகள் - 11


மணமுடித்த பெண்ணோடு வாழ்வதா அல்லது துர்காதேவிக்கு கொடுத்த வாக்குப் படி தன் தலையை காணிக்கையாக்கி சாவதா என்ற குழப்பத்தில் ஆழ்ந்தான் வஜ்ரவீரன்.

அன்று பௌர்ணமி. வஜ்ரவீரன் ஒரு முடிவெடுத்தான்...

துர்காதேவியிடம் கொடுத்த வாக்கை காப்பாற்ற துனிந்தான். ஆனால் தன் நண்பனிடத்திலும் மனைவி இடத்திலும் இது பற்றி எதுவும் சொல்லிக் கொள்ளாமல் இருவரையும் தன்னுடன் கோவிலுக்கு வருமாறு அழைத்தான்.

மூவரும் சேர்ந்து துர்க்காதேவி கோவிலுக்குச் சென்றனர். வஜ்ரவீரன் இருவரையும் கோவில் வாசலில் இருக்கச் செய்து தான் மட்டும் கோவிலுக்குள் சென்று கதவை சார்த்திக் கொண்டான்.

அவன் துர்காதேவியிடம் "அண்ணையே உன் மீது பேரண்பு கொண்டதால் உனக்கு அளித்த வாக்கு படி என் தலையை உனக்கு காணிக்கையாக்குகிறேன். இனி என் மனைவியை நீ தான் காக்க வேண்டும்" என்று சொல்லி தன் தலையை வெட்டி அம்மனின் காலடியில் இட்டு மாண்டான்.

வஜ்ரவீரனின் மனைவியும் நண்பனும் வெளியே காத்திருந்தனர். உள்ளே போய் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் நண்பன் ருத்ரராஜன் கோவிலுக்குள் சென்று பார்த்தான். அங்கே அவன் கண்ட காட்சி பேரதிர்ச்சியாய் இருந்தது.

நண்பன் தன் தலையை துண்டித்து இறந்து போய் இருந்தான். இந்த காட்சியைக் கண்டு நிலை குலைந்து போன நண்பன் எப்படி வெளியே இருக்கும் அவன் மனைவியிடம் சொல்வேன் என்றும், அவள் என்னை தவறாக நினைத்தால் என்ன செய்வது என்றும் பெரிதும் வருந்தினான்.

தன் உயிருக்குயிரான நண்பனின் இந்த நிலையை பார்த்துவிட்டு நான் மட்டும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்று தீர்மானித்த ருத்ரராஜன் தானும் தன் தலையை துர்க்காதேவிக்கு
காணிக்கையாக்கி மாண்டான்.

தன் கணவனும் அவர் நண்பனும் கோவிலுக்குள் சென்று வெகு நேரமாகியும் வெளியே
வராததால் வஜ்ரவீரனின் மனைவி கோவிலுக்குள் சென்று பார்த்தால். அங்கே இருவரும் தலை துண்டிக்கப்பட்டு கிடந்த காட்சி பார்த்து அழத்துவங்கினாள்.

அவள் துர்கையிடம் முறையிட்டாள் "என் கணவன் இல்லாத வாழ்க்கை எனக்கு எதற்கு, அதனால் என் தலையையும் நீயே எடுத்துக்கொள்" என்று சொல்லி தனது தலையை துண்டிக்க முற்பட்டாள்.

அப்போது அங்கே ஒரு பேரொளி தோன்றியது. துர்க்காதேவி அவள் முன் தோன்றினாள். "பெண்ணே! அவசரப்படாதே! நில். என் பக்தன் வஜ்ரவீரனின் பக்தி கண்டு நான் மகிழ்ந்தேன். ஒருவருக்காக ஒருவர் தியாகம் செய்யத் துணியும் உங்களை கண்டு பூரித்தேன்! பக்தர்களை வாழவைப்பதே என் வேலை உங்கள் தலைகளை காணிக்கை வாங்குவது அல்ல. எனவே நான் அவர்களுக்கு
உயிர் கொடுக்கிறேன். பெண்ணே! இவர்கள் இருவரது தலையையும் அவர்கள் உடலோடு பொருத்து. அடுத்த வினாடி அவர்கள் உயிர் பெற்று எழுவார்கள்" என்று கூறி மறைந்தாள் துர்க்காதேவி.

அப்பெண்ணும் இறந்தவர்களின் தலைகளை ஒன்றாகப் பொருத்தினாள். இருவரும் உடனே உயிர் பெற்று எழுந்தனர். அப்போது தான் அவள் செய்த தவறு புரிந்தது. பதற்றத்தில் தன் கணவனான வஜ்ரவீரனின் தலையை ருத்ரராஜனின் உடலிலும், ருத்ரராஜனின் தலையை வஜ்ரவீரனின் உடலிலும் பொருத்தி விட்டாள்.

இதுவரை கதை சொல்லி வந்த வேதாளம் கதையை நிறுத்தியது. அது விக்கிரமாதித்தனைப் பார்த்து கேட்டது "நீதியில் சிறந்த விக்ரமாதித்தா! எங்கே சொல், இந்தப் பெண் இப்போது யாரை கணவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்?" என்றது.

"கணவனின் தலை எந்த உடலில் இருக்கிறதோ அந்த உடலைத் தான் அந்த பெண் தன் கணவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும். தலையே பிரதானம். ஏனெனில் தலை தான் ஒருவரது அடையாளத்திற்கும், எண்ணத்திற்கும் பிரதானமானது." என்றான் விக்கிரமாதித்தன்.

இதைக் கேட்ட வேதாளம் "சரியாகச் சொன்னாய் விக்ரமாதித்தா! ஆனால் நீ வாய் திறந்து பேசியபடியால் நான் செல்கிறேன்" என்று கூறி மீண்டும் விக்ரமாதித்தன் பிடியிலிருந்து பறந்து சென்றது.

_________________________

பயப்படாதீங்க. சும்மா வ்ளாட்டுக்கு!


மேற்கண்ட படத்தை பற்றி சிறப்பாக பின்னூட்டம் இடுபவர்களுக்கு, அதே படம் இலவசமாக இமெயில் செய்யப்படும்.

4 comments:

ஸ்ரீராம். said...

நல்லது...

Anonymous said...

அய்யயோ...ஆஸ்கார வேணுன்னா நீயே வெச்சுக்கப்பா...இப்படியெல்லாம் பயமுறுத்தாத.
என் படத்தை அசிங்கப் படுத்தாத...

இப்படிக்கு - பயத்துடன்
அவதார் இயக்குனர்.

hayyram said...

நன்றி ஸ்ரீராம்

hayyram said...

/// சரண் said...
அய்யயோ...ஆஸ்கார வேணுன்னா நீயே வெச்சுக்கப்பா...இப்படியெல்லாம் பயமுறுத்தாத.
என் படத்தை அசிங்கப் படுத்தாத...

இப்படிக்கு - பயத்துடன்
அவதார் இயக்குனர்///

ஹா ஹா ஹா