Monday, June 4, 2012

குணங்களுக்கும் மேலே என்னைப் பார்!




 ஸ்ரீ க்ருஷ்ணர் அர்ஜுனனுக்கு குணங்களின் தன்மை பற்றி இவ்வாறு எடுத்துக் கூறுகிறார்.

குந்தியின் மகனே! உலகில் தோன்றும் எல்லா உயிர்களுக்கும் இயற்கைதான் பிறப்பிடம். நான் தான் விதை கொடுக்கும் தந்தை!


பெருந்தோளாய்! இயற்கையிலிருந்து தோன்றும் சத்வம், ரஜஸ், தமஸ் என்னும் 
குணங்கள் உடலில் வாசம் செய்யும் உயிரை உடலோடு பிணைக்கின்றன.

பாபமற்றவனே! இவற்றுள் களங்கம் இல்லாத சத்வம் எனப்படுவது ஒளி பொருந்தியது.
துன்பம் கொடுக்காதது. இன்பத்தையும், ஞானத்தையும் உண்டாக்கும் பற்றை அது வளர்க்கிறது.

குந்தியின் மகனே! ரஜஸ் என்ற ரஜோ குணம் ஆசை வடிவுடையும்து, அது காம வேட்கையையும்பற்றுதலையும் உண்டுபண்ணும் என்பதை அறிந்து கொள். அது செயலின் மேல் பற்றுதலை ஏற்படுத்தி, உயிரை உடலோடு பிணைக்கிறது.

பாரதா! தமோ குணமோ, அறியாமையில் பிறந்தது. அது உயிர்களை எல்லாம் 
மயக்கத்தில் ஆழ்த்திவிடுகிறது. அசட்டை, சோம்பல், தூக்கம் ஆகிய இயல்புகளால் உயிரை உடலோடு பிணைக்கிறது.

பாரதா! சத்வம் சுகத்திலும், ரஜஸ் கர்மத்திலும், தமஸ் அரிவை மறைத்து கவனமில்லாத தன்மையிலும் சேர்த்து விடுகிறது.

அர்ஜுனா! சத்வம், ரஜசையும், தமஸையும் அடக்கி மேலெழுகிறது. ரஜஸ், சத்வத்தையும், தமஸையும் அடக்கி ஆள்கிறது. அவ்வாறே தமஸ், சத்வத்தையும், ரஜஸையும் அடக்குகிறது. இந்த உடலின் பொறிவாயில் அனைத்திலும் எப்பொழுது ஞான ஒளி பிரகாசிக்கிறதோ, அப்பொழுது சத்வ குணம் மேலோங்கி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்!

சத்துவ குணம் கொண்டவர்கள் மேன்மை பெறுகிறார்கள். ரஜோ குணம் படைத்தவர்கள்
இடையில் இருக்கிறார்கள். தமோ குணம் உள்ளவர்கள், இழிவான குணம் உள்ள காரணத்தால் தாழ்வடைகிறார்கள். 

அர்ஜுனா! ஒருவன் எப்பொழுது குணங்களைத் தவிர செயல்படுவோன் எவரையும் காணாமல்குணங்களுக்கு மேலான பரம்பொருளைக் காண்கிறானோ, அப்பொழுது என்னை வந்தடைகிறான்.

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்


No comments: