Showing posts with label bagavath geetha. Show all posts
Showing posts with label bagavath geetha. Show all posts

Thursday, April 18, 2013

கீதோபதேசம் - மனதை என் மீது செலுத்து!




யோகி தனிமையான இடத்தில் தனியாக இருந்து கொண்டு, மனத்தையும், உடலையும் கட்டுப்படுத்தி, ஆசைகளையும், உடமைகளையும் கைவிட்டு, இடைவிடாத ஆன்ம சிந்தனையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

தனக்கு ஒரு தூய்மையான இடத்தைத் தேர்வு செய்து கொண்டு, அதிக உயரம் இல்லாததும், அதிகமாகத் தாழ்ந்து இல்லாததுமான ஒரு உறுதியான ஆசனத்தில் தர்பைப்புல்லைப் பரப்பி, அதன் மீது மான் தோலைப் போட்டுக் கொண்டு அதன் மேல் ஒரு துணியை விரிக்க வேண்டும்.

பிறகு அந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டு, மனதை ஒருமுகப்படுத்தி, எண்ணங்களையும், புலன்களையும் கட்டுப்படுத்தியும், ஆன்மீகத் தூய்மைக்காக யோகத்தைப் பயில வேண்டும்.

உடலை உறுதியாக வைத்துக் கொண்டு, உடல், கழுத்து, தலை இவற்றை ஒரு நேர்கோட்டில் இருப்பது போல் ஒழுங்காக வைத்துக்கொண்டு, அசையாமல், சுற்றிலும் எதையும் பாராமல் தன் மூக்கின் நுனியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

அமைதியான மனத்துடனும், அச்சமின்றியும், பிரம்மச்சரிய விரதத்தில் உறுதியுடனும், மனத்தை அடக்கியும், மனதை என்மீது செலுத்தி யோகத்தில் அமர்ந்திருக்க வேண்டும்.

எப்போதும் இவ்வாறு மனதைக் கட்டுப்படுத்தி, அதைச் சமநிலையில் வைத்திருக்கும் யோகி, என்னிடம் குடி கொண்டுள்ள அமைதியைப் பெற்று முடிவில் மோட்சத்தை அடைகிறான்.

- பகவான் ஸ்ரீக்ருஷ்ணர்

Wednesday, March 6, 2013

என்னை அடைந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை!



பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் பரம்பொருளான தன் நிலையை அர்ஜுனனுக்கு விளக்குகிறார்.

பகவான் சொல்கிறார்..

பார்த்தா! யார் எப்போதும் என்னிடம் பக்தியுடன் மனத்தை வேறு எதிலும் செலுத்தாமல் இடைவிடாது என்னையே நினைக்கிறானோ, அந்த யோகி எளிதில் என்னை அடைவதில் வெற்றி பெறுகிறான்.

என்னை அடைந்த இந்த பரம பக்குவப்பட்ட மகாத்மாக்கள் மறுபடியும் நிலையில்லாததும், துன்பம் நிறைந்ததுமான மறுபிறப்பை அடைவதில்லை. அவர்கள் மிக உயர்ந்த பக்குவ நிலையை அடைந்து விடுகிறார்கள்.

அர்ஜுனா! பிரம்மலோகம் வரையில் உள்ள உலகங்களுக்கெல்லாம் சென்றால் மீண்டும் இந்த உலகத்திற்குத் திரும்பி வரவேண்டும். ஆனால் குந்தியின் புதல்வனேஎன்னை அடைந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை.

ஆயிரம் யுகங்கள் சேர்ந்ததே பிரம்மாவின் ஒரு பகல்பொழுது என்பதையும், ஆயிரம் யுகங்கள் சேர்ந்ததே பிரம்மாவின் ஓர் இரவு என்பதையும் அறிபவர்கள் இரவுபகல் தத்துவத்தை அறிந்தவர் ஆகின்றனர்.

பகல் வரும்போது கண்களுக்குத் தோன்றாத நிலையில் இருந்த தோற்றங்கள் யாவும் தோன்றும் நிலையை அடைகின்றன. இரவு வரும்போது அவைகள் தோன்றாத நிலை உடையவைகளாக மாறிவிடுகின்றன.

பாரதா! இந்த ஜீவராசிகளின் கூட்டம் மீண்டும் மீண்டும் பிறக்கின்றன. அவைகள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இரவு வரும்போது அவைகள் மறைந்து விடுகின்றன. பகல் வரும்போது மீண்டும் பிறக்கின்றன.

ஆனால் இந்த தோன்றா நிலைக்கும் மேலே எப்பொழுதும் அழிவற்ற நிலையான தோன்றாநிலை ஒன்று இருக்கிறது. உயிர்கள் அனைத்தும் அழியும் போது அது அழிகிறதில்லை.

அழிவில்லாத கண்ணுக்குத் தெரியாத இந்தப் பரம்பொருளை அடைவதே எல்லாவற்றிற்கும் மேலான லட்சியம் ஆகும். அதை அடைந்தவர்கள் மீண்டும் திரும்பி வருவதில்லை. அது தான் என்னுடைய மிக உன்னதமான இருப்பிடம் ஆகும்.

அர்ஜுனா! எவனிடத்தில் எல்லா உயிர்களும் இருக்கின்றனவோ, எவனால் இவை யாவும் எங்கும் நிறைந்து விளங்குகிறதோ, அவனிடத்தில் ஆழ்ந்த பக்தியைச் செலுத்துவதால் அந்தப் பரம புருஷனை அடையலாம்.

- பகவான் ஸ்ரீக்ருஷ்ணர்.

Saturday, September 29, 2012

கீதோபதேசம் - வேள்வி செய்தோரின் நிலை என்ன?



அர்ஜுனன் கேட்கிறான்:

க்ருஷ்ணா! சாஸ்திர விதிகளை மீறி - ஆனால் அக்கறையோடு வேள்வி செய்தோர்க்கு எந்த நிலை கிடைக்கிறது? 'சத்துவம்' என்ற தூய நிலையா 'ரஜோ' என்ற ஆசை நிலையா? 'தமோ' என்ற மயக்க நிலையா?

ஸ்ரீ பகவான் சொல்கிறார்:

அர்ஜுனா! உயிர்களுக்கு இயற்கையாக சாத்விகி, ராஜஸி, தாமசி என்ற மூன்று வைகையான நம்பிக்கை உண்டாகிறது. அதை விளக்குகிறேன் கேள்.

பாரத குமாரா! ஒவ்வொருவருக்கும் அவரவரது இயல்பினைப் பொறுத்தவாறு நம்பிக்கை உண்டாகிறது. மனிதன் நம்பிக்கையிலே நிலைத்தவன். சத்துவம் என்ற தூய்மையில் ஒருவன் நம்பிக்கை வைத்தால், அவன் அவ்வாறே ஆகிறான். அப்படியே ஆசையிலோ, மயக்கத்திலோ நம்பிக்கை வைத்தால் அவ்வண்ணமே மாறுகிறான்.

தூய நம்பிக்கை (சத்துவம்) உள்ளவர்கள் மூலமான என்னையே வழிபடுகிறார்கள். ஆசையில் (ரஜொ) நம்பிக்கை வைத்தவர்கள் குட்டித் தேவதைகளையும், அரக்கர்களையும், வழிபடுகிறார்கள். மயக்க (தமோ) குணம் உள்ளவர்கள் மூதாதையர்களையும் பூதங்களையும் பேய்களையும் வணங்குகிறார்கள்.

சாஸ்திரத்தில் இல்லாத கடுமையான தவத்தை சிலர் மேற்கொள்கிறார்கள். ஆடம்பரமும் ஆணவமும் அவர்கள் தலையைச் சுற்றி அடிக்கின்றன. அவர்கள் செய்யும் தவத்தால் தங்கள் உடலையும் வருத்திக் கொள்கிறார்கள். அந்த உடலுக்குள் இருக்கும் என்னையும் துன்புறுத்துகிறார்கள். அவர்கள் அரக்க குணம் உள்ளவர்கள்.


அர்ஜுனா கேள்!

எல்லோருக்கும் பிரியமான உணவு மூன்று வகையாகும். அப்படியே யாகமும் தபனமும் கூட மூன்று வகைப்படும். அந்த பேதத்தைக் கூறுகிறேன் கேள்.

ஆயுளை வளர்ப்பது, மன வலிமை உடல் வலிமை தருவது, நோய் தராதது, சுகத்தை வளர்ப்பது, சாறுடன் கூடியது, குழம்பாக உள்ளது, நெய்ச்சத்து கலந்தது, மனதுக்கும் சுகம் அளிப்பது, இந்த வகையான உனவுதான் சாத்வீகம் என்று சொல்லப்படும். முதற்குணம் படைத்தவர்களுக்குப் பிடித்தமானது.

கசப்பானது, புளிப்பானது, உப்பு முகுந்தது, உலர்ந்தது, அதிகச் சூடானது, காரம் மிகுந்தது, பசியெடுக்காமல் செய்வது, குடல் எரிச்சலை உண்டு பண்ணுவது இந்த வகை உணவுதான், ராஜஸகுணம் என்னும் இரண்டாவது குணம் படைத்தவர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. இவ்வகை உணவுப்பழக்கம் துன்பம், கவலை நோய்களைத் தரக்கூடியது.

வேகாதது, பழையது, குழம்பில்லாமல் வற்றிப் போவது, கெட்ட நாற்றம் அடிப்பது, முன்பு சாப்பிட்டு மிச்சம் வைத்தது, அசுத்தமானது - இந்த வகை உணவு தாமச குணம் என்னும் மூன்றாவது குணம் படைத்தவர்கள் விரும்பும் உணவாகும்.


அது போலவே அர்ஜுனா யாகத்திலும் மூன்று குணங்கள் உண்டு. அவற்றைச் சொல்கிறேன் கேள்!

எந்த வித லாபத்தையும் கருதாமல் சாஸ்திரம் காட்டும் சரியான வழியில் 'இது என் கடமை. ஆகவே இந்த யாகத்தைச் செய்கிறேன்' என்று செய்யும், யாகத்துக்கு "சாத்வீகம்" எனப் பெயர்.

ஏதாவது கிடைக்கும் என்றோ, அல்லது ஊரார் மதிப்பதற்காகவோ எந்த யாகத்தையும் செய்வதன் பெயர் "ராஜஸம்".

சாஸ்திர நெறி தவறி - அன்னதானம் செய்யாமல் - மந்திரங்களை உச்சரிக்காமல், தட்சணை வைக்காமல் - அக்கறையோ நம்பிக்கையோ இல்லாமல் செய்யப்படும் யாகத்தின் பெயர், "தாமசம்".

அர்ஜுனா! அவ்வாறே இனி உடல், வாக்கு, மனம் மூன்றாலும் செய்யப்படும் தவத்தை விவரிக்கிறேன் கேள்!

தூயகுணம் படைத்தோர், ஆச்சரியார்கள், ஞானிகள் ஆகியோரைப் பூஜித்தல்; புனித நீராடி உடல் சுத்தம் செய்தல்; நேர்மையைக் கடைப் பிடித்தல்; பிரம்மச்சரியத்தைக் (கடுமையான ஒழுக்கம்) கைக்கொள்ளுதல் அகிம்சையைப் பின்பற்றல் இவைகள் யாவும் சரீரத்தால் செய்யப்படும் தவமுறைகள் ஆகும்.

யாரையும் புண்படுத்தாத சொல்வன்மை; உண்மையையே உரைத்தல்; நல்லதையே கூறுதல்; கனிவாக உரைத்தல் வேதம் ஓதுதல் - இவை வாக்கினால் செய்யப்படும் தவமுறைகளாகும்.

தெளிந்த உள்ளம்; பரம சாதுவாக இருத்தல்; மௌனத்தையே தாய்மொழியாகக் கொள்ளுதல்; மனத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல்; ஆத்மாவைத் தவிர ஒன்றை நினையாதிருத்தல் - இவை மனத்தினால் செய்யப்படும் தவமுறைகளாகும்.

இவற்றில் பலனை விரும்பாத சுயநலமற்ற நம்பிக்கை மிகுந்த முதல் தவம் சாத்வீகத் தவம்.

ஊரார் மதிக்க வேண்டும் என்பதற்காகவும், மரியாதை கிடைக்க வேண்டும் என்பதற்க்காகவும், தன் பெருமை வெளிப்பட வேண்டியும் செய்யும் தவம் ராஜஸ தவமாகும்.

காரணம் இல்லாமலும், தேவை இல்லாமலும் பிடிவாதமாகவு, தன்னை வருத்திக் கொண்டு செய்யும் தவமும் மற்றவர்களை ஒழிப்பதற்காகச் செய்யப்படும் தவமும், தாமசத் தவமாகும்.

அர்ஜுனா! இவற்றில் உயர்ந்தவை எதுவோ அதையே நீ செய்வாய்!

- பகவான் ஸ்ரீக்ருஷ்ணர்.


Friday, August 17, 2012

கீதோபதேசம் - நம்பிக்கையோடு இரு!




ஆன்மீக ஞானத்தால் தீமையிலிருந்து விடுபடும் ரகசியத்தை அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணர்!

பகவான் சொல்கிறார்..

அர்ஜுனா கேள்!

அனுபவத்தோடு கூடிய ஞானமாகிய இந்த மிகப்பெரிய ரகசியத்தை இப்பொழுது உனக்குச் சொல்லுகிறேன். இதைத் தெரிந்து கொள்வதால் நீ தீமையிலிருந்து விடுபடுவாய்.

இந்த ஆன்மீக ஞானம் வித்தைகளுக்கு அரசன். மிகச் சிறந்த ரகசியம். தூய்மை தருவதில் மிகச் சிறந்தது. மறைபொருளில் மேலானது. கண்கூடாக உணர்த்தற்குரியது. தர்மத்தோடு கூடியது. செய்வதற்கு மிகவும் சுலபமானது. அழிவில்லாதது.

பரந்தபா! இந்த ஆன்மீக ஞானத்தில் நம்பிக்கையற்றவர்கள் என்னை அடையாமல், மரணத்தோடு அமைந்த சம்சார வழியிலேயே உழல்கின்றனர்.

அருவம் என் இயல்பு. இந்த இயல்பினால் நான் இந்த உலகம் முழுவதும் நிறைந்திருக்கிறேன். உயிர்கள் அனைத்தும் எனக்குள்ளே வசிக்கின்றன. ஆனால் நான் அவற்றிற்குள்ளே இல்லை.

பொருட்கள் என்னிடம் நிலை கொள்ளவே இல்லை. ஈஸ்வரனுக்குரியதாகிய என்னுடைய யோகத்தைப் பார். உயிர்கள் தோன்றுவதற்கு மூலக்காரணமாக இருந்து அவைகளைக் காக்கவும் செய்கின்ற நான் அவைகளுக்குள் இல்லை.

இடைவிடாமல் எங்கும் அலைந்து திரிகின்ற காற்று விண்வெளியில் நிலை பெற்றிருப்பதைப் போல், உயிர்கள் அனைத்தும் என்னிடம் தங்கி உள்ளன என்று அறிந்து கொள்.

அர்ஜுனா! எல்லா உயிர்களும் பிரளய காலத்தில் எனக்குள்ளே வந்து அடைகின்றன. அடுத்த கல்பத்தின் ஆரம்பத்தில் நான் அவைகளை மறுபடியும் தோற்றுவிக்கிறேன்.

என்னுடைய இயல்பை அருள் உடையதாகச் செய்து கொண்டு சுதந்திரமில்லாத இந்த உயிர்களை எல்லாம் இயற்கையின் வசத்தால் மீண்டும் மீண்டும் படைக்கிறேன்.

தனஞ்ஜெயா! இச்செயல்கள் என்னைக் கட்டுப்படுத்துவதில்லை. ஏனென்றால் நான் அவற்றைப் பொருட்படுத்தாமலும், பற்றற்றும் இருக்கிறேன்.

குந்தியின் மகனே, என் மேற்பார்வையில் இயற்கை அசையும் பொருட்களையும் அசையாப் பொருட்களையும் படைக்கிறது. இதன் காரணத்தால் உலகம் சுழல்கிறது என்பதை அறிவாயாக!

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்

Sunday, July 1, 2012

கீதோபதேசம் - யோகம் என்பது என்ன?


அர்ஜுனன் கேட்கிறான்..

ஹே பரமாத்ம! யோகம் என்றால் எது, யோகியின் தன்மைகளைப் பற்றி எனக்குக் கூறுவாய்!!

பகவான் சொல்கிறார்..

அர்ஜுனா! செயல்களின் பயனை எதிர்பார்க்காமல், தான் செய்ய வேண்டிய கடமையை யார் செய்கிறானோ அவன் தான் சந்நியாசியும், யோகியும் ஆகின்றான். அதிக வேட்கையும் தீவிரமான செயலும் அற்றவன் அவ்வாறு அழைக்கப்படுவதில்லை.

ஹே பாண்டவ! எதை துறவு என்று கூறுகிறார்களோ அது தான் யோகம் என்று அறிந்து கொள். எண்ணங்களைத் துறக்காத ஒருவன் யோகி ஆவதில்லை.

யோகத்தை அடையும் எண்ணம் கொண்ட ஞானிக்கு செயல் ஒரு சாதனமாகக் கூறப்படுகிறது. அதை அடைந்தபின் அதே மனிதனுக்கு செயலற்ற நிலை தான் சாதனமாகக் கூறப்படுகிறது.

எண்ணங்களைத் துறந்து விட்டு, புலன் உணர்வுப் பொருட்களோடும் , செயல்களோடும் பற்று இல்லாமல் இருப்பானானால் ஒரு மனிதன் யோக சித்தியை அடைந்தவன் ஆகிறான்.

அர்ஜுனா! ஒருவன் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள வேண்டும். தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளக் கூடாது. ஒருவனுக்கு நண்பனும் அவன் தான். பகைவனும் அவன் தான். வேறு ஒருவரும் இல்லை.

தன்னடக்கத்துடன் அமைதியாக இருப்பவனுடைய ஆத்மாவானது குளிரிலும், வெப்பத்திலும், இன்பத்திலும், துன்பத்திலும், பெருமையிலும், சிறுமையிலும் சமநிலையில் இருக்கிறது.

சாஸ்திர அறிவினாலும் , அனுபவ அறிவினாலும் ஏற்பட்ட திருப்தியினால் மனம் நிறைந்தவனும், உறுதியான மனம் படைத்தவனும், தன்னுடைய புலன்களை வென்றவனும், மண் , கல், தங்கம், ஆகியவைகளைச் சமமாகக் கருதுபவனுமாகிய யோகியே யோகத்தில் நிலை பெற்றவனாக இருக்கிறான்.

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்

Monday, June 4, 2012

குணங்களுக்கும் மேலே என்னைப் பார்!




 ஸ்ரீ க்ருஷ்ணர் அர்ஜுனனுக்கு குணங்களின் தன்மை பற்றி இவ்வாறு எடுத்துக் கூறுகிறார்.

குந்தியின் மகனே! உலகில் தோன்றும் எல்லா உயிர்களுக்கும் இயற்கைதான் பிறப்பிடம். நான் தான் விதை கொடுக்கும் தந்தை!


பெருந்தோளாய்! இயற்கையிலிருந்து தோன்றும் சத்வம், ரஜஸ், தமஸ் என்னும் 
குணங்கள் உடலில் வாசம் செய்யும் உயிரை உடலோடு பிணைக்கின்றன.

பாபமற்றவனே! இவற்றுள் களங்கம் இல்லாத சத்வம் எனப்படுவது ஒளி பொருந்தியது.
துன்பம் கொடுக்காதது. இன்பத்தையும், ஞானத்தையும் உண்டாக்கும் பற்றை அது வளர்க்கிறது.

குந்தியின் மகனே! ரஜஸ் என்ற ரஜோ குணம் ஆசை வடிவுடையும்து, அது காம வேட்கையையும்பற்றுதலையும் உண்டுபண்ணும் என்பதை அறிந்து கொள். அது செயலின் மேல் பற்றுதலை ஏற்படுத்தி, உயிரை உடலோடு பிணைக்கிறது.

பாரதா! தமோ குணமோ, அறியாமையில் பிறந்தது. அது உயிர்களை எல்லாம் 
மயக்கத்தில் ஆழ்த்திவிடுகிறது. அசட்டை, சோம்பல், தூக்கம் ஆகிய இயல்புகளால் உயிரை உடலோடு பிணைக்கிறது.

பாரதா! சத்வம் சுகத்திலும், ரஜஸ் கர்மத்திலும், தமஸ் அரிவை மறைத்து கவனமில்லாத தன்மையிலும் சேர்த்து விடுகிறது.

அர்ஜுனா! சத்வம், ரஜசையும், தமஸையும் அடக்கி மேலெழுகிறது. ரஜஸ், சத்வத்தையும், தமஸையும் அடக்கி ஆள்கிறது. அவ்வாறே தமஸ், சத்வத்தையும், ரஜஸையும் அடக்குகிறது. இந்த உடலின் பொறிவாயில் அனைத்திலும் எப்பொழுது ஞான ஒளி பிரகாசிக்கிறதோ, அப்பொழுது சத்வ குணம் மேலோங்கி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்!

சத்துவ குணம் கொண்டவர்கள் மேன்மை பெறுகிறார்கள். ரஜோ குணம் படைத்தவர்கள்
இடையில் இருக்கிறார்கள். தமோ குணம் உள்ளவர்கள், இழிவான குணம் உள்ள காரணத்தால் தாழ்வடைகிறார்கள். 

அர்ஜுனா! ஒருவன் எப்பொழுது குணங்களைத் தவிர செயல்படுவோன் எவரையும் காணாமல்குணங்களுக்கு மேலான பரம்பொருளைக் காண்கிறானோ, அப்பொழுது என்னை வந்தடைகிறான்.

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்


Sunday, May 20, 2012

எந்த தேவதையைத் தொழுதாலும் என்னையே வழிபடுகிறாய்!




ஸ்ரீ க்ருஷ்ணர் அர்ஜுனனுக்கு தன் வடிவத்தின் தன்மையை இவ்வாறு எடுத்துக் கூறுகிறார்.

அர்ஜுனா! மகாத்மாக்கள் என்னுடைய தெய்வீகத் தன்மை பெற்று, உயிர்களுக்கு என்றும் அழியாத பிறப்பிடம் நான் என்பதை அறிந்து, என்னைத் தவிர வேறு எங்கும் மனதைச் செலுத்தாது என்னை வழிபடுகின்றனர்.

எப்பொழுதும் என்னைப் புகழ்பவராயும், உறுதியான விரதத்தோடு முயல்பவராயும், பக்தியுடன் என்னை வணங்குபவராயும், நித்திய யோகிகள் என்னை வழிபடுகிறார்கள்.

ஞான வேள்வியால் வழிபடும் மற்றவர்களும் என்னை ஒன்றாய், வேறாய், பலவாய் இத்தனை விதங்களிலும் வணங்குகிறார்கள்.

தனஞ்ஜெய! நானே கிரது என்ற வைதீக கர்மம். நானே வேள்வி. மருந்துப் பூண்டுகளும், எல்லா வகையான தாவரங்களும் நான்; மந்திரமாவது நான். வேள்வியில் அளிக்கப்படும் நெய்யும் நானே! தீயும் நா; வேள்வி வேட்டலும் நானே!

நானே இந்த உலகத்தின் தாய், தந்தை , பாட்டன். கர்ம பலனைக் கொடுப்பவன் மற்றும் அறிய வேண்டிய பொருள், தூய்மையாக்குவோன், ஓங்காரம், ரிக், யஜுர், சாமம் எனப்படும் மூன்று வேதங்கள் ஆகியவைகளும் நானே.

அடைக்கலம், வளர்ப்பவன், உடையவன், சாட்சி, இருப்பிடம் நண்பன், தோற்றம், அழிவு, ஆதாரம், களஞ்சியம், அழியாவித்து ஆகிய அனைத்தும் நானே!

வேறு எதைப்பற்றிய எண்ணமும் இல்லாதவர்களாய், மனதை ஒரு முகப்படுத்தி என்னையே வழிபடுகிறவர்கள் வேண்டியதைப் பெறுதலையும், பெற்றதைக் காப்பாற்றுதலையும் நானே கவனித்துக் கொள்ளுகிறேன்.

குந்தியின் மைந்தா! சிரத்தையோடு கூடிய பக்தர்கள் மற்ற தேவதைகளை வழிபடும்போது, அவர்களும் அறியாமையோடு என்னையே வணங்குகிறார்கள்!

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்



Sunday, April 1, 2012

கீதோபதேசம் - பக்தியால் மட்டுமே உணர முடிபவன் நான்!




அர்ஜுனன் கூறினான்..

ஜனார்தனா! உன்னுடைய இந்த இனிய மானுட வடிவத்தினை கண்டு இப்பொழுது நான் மனம் தெளிந்து என் இயல்பான நிலையை அடைந்தானாக இருந்க்கிறேன்.

பகவான் சொன்னது..

எவராலும் காண்பதற்கரிய என்னுடைய இந்த வடிவை பார்த்திருக்கிறாய். இந்த வடிவத்தைத் தரிசிக்க தேவர்கள் எப்பொழுதும் ஆவலாக உள்ளார்கள்.

நீ என்னை எவ்வாறு கண்டாயோ, அவ்வாறு நான் வேதங்களாலும், தவத்தாலும், தானத்தாலும், யாகத்தாலும் தரிசிக்க இயலாதவன்.

அர்ஜுனா! என்னிடம் மாறாத பக்தி செலுத்துவதால் மட்டுமே இவ்வடிவத்தோடு என்னை உள்ளபடி உணர முடியும். காணமுடியும். அடைய முடியும்.

பாண்டவா! எனக்காகவே கர்மம் செய்கிறவனும், என்னையே மேலான லட்சியமாகக் கொள்பவனும், என்னிடம் பக்தி செலுத்துபவனும், பற்றற்றவனும், எல்லா உயிர்களிடத்திலும் பகைமை பாராட்டாதவனும்
எவனோ அவன் என்னை வந்தடைகிறான்.

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்.


Monday, February 6, 2012

கீதோபதேசம் - சத்துவம், ரஜோ, தமோ!



அர்ஜுனன் கேட்கிறான்:

க்ருஷ்ணா! சாஸ்திர விதிகளை மீறி - ஆனால் அக்கறையோடு வேள்வி செய்தோர்க்கு எந்த நிலை கிடைக்கிறது? 'சத்துவம்' என்ற தூய நிலையா 'ரஜோ' என்ற ஆசை நிலையா? 'தமோ' என்ற மயக்க நிலையா?

ஸ்ரீ பகவான் சொல்கிறார்:

அர்ஜுனா! உயிர்களுக்கு இயற்கையாக சாத்விகி, ராஜஸி, தாமசி என்ற மூன்று வைகையான நம்பிக்கை உண்டாகிறது. அதை விளக்குகிறேன் கேள்.

பாரத குமாரா! ஒவ்வொருவருக்கும் அவரவரது இயல்பினைப் பொறுத்தவாறு நம்பிக்கை உண்டாகிறது. மனிதன் நம்பிக்கையிலே நிலைத்தவன். சத்துவம் என்ற தூய்மையில் ஒருவன் நம்பிக்கை வைத்தால், அவன் அவ்வாறே ஆகிறான். அப்படியே ஆசையிலோ, மயக்கத்திலோ நம்பிக்கை வைத்தால் அவ்வண்ணமே மாறுகிறான்.

தூய நம்பிக்கை (சத்துவம்) உள்ளவர்கள் மூலமான என்னையே வழிபடுகிறார்கள். ஆசையில் (ரஜொ) நம்பிக்கை வைத்தவர்கள் குட்டித் தேவதைகளையும், அரக்கர்களையும், வழிபடுகிறார்கள். மயக்க (தமோ) குணம் உள்ளவர்கள் மூதாதையர்களையும் பூதங்களையும் பேய்களையும் வணங்குகிறார்கள்.

சாஸ்திரத்தில் இல்லாத கடுமையான தவத்தை சிலர் மேற்கொள்கிறார்கள். ஆடம்பரமும் ஆணவமும் அவர்கள் தலையைச் சுற்றி அடிக்கின்றன. அவர்கள் செய்யும் தவத்தால் தங்கள் உடலையும் வருத்திக் கொள்கிறார்கள். அந்த உடலுக்குள் இருக்கும் என்னையும் துன்புறுத்துகிறார்கள். அவர்கள் அரக்க குணம் உள்ளவர்கள்.
  
அர்ஜுனா கேள்!

எல்லோருக்கும் பிரியமான உணவு மூன்று வகையாகும். அப்படியே யாகமும் தபனமும் கூட மூன்று வகைப்படும். அந்த பேதத்தைக் கூறுகிறேன் கேள்.

ஆயுளை வளர்ப்பது, மன வலிமை உடல் வலிமை தருவது, நோய் தராதது, சுகத்தை வளர்ப்பது, சாறுடன் கூடியது, குழம்பாக உள்ளது, நெய்ச்சத்து கலந்தது, மனதுக்கும் சுகம் அளிப்பது, இந்த வகையான உனவுதான் சாத்வீகம் என்று சொல்லப்படும். முதற்குணம் படைத்தவர்களுக்குப் பிடித்தமானது.

கசப்பானது, புளிப்பானது, உப்பு முகுந்தது, உலர்ந்தது, அதிகச் சூடானது, காரம் மிகுந்தது, பசியெடுக்காமல் செய்வது, குடல் எரிச்சலை உண்டு பண்ணுவது இந்த வகை உணவுதான், ராஜஸகுணம் என்னும் இரண்டாவது குணம் படைத்தவர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. இவ்வகை உணவுப்பழக்கம் துன்பம், கவலை நோய்களைத் தரக்கூடியது.

வேகாதது, பழையது, குழம்பில்லாமல் வற்றிப் போவது, கெட்ட நாற்றம் அடிப்பது, முன்பு சாப்பிட்டு மிச்சம் வைத்தது, அசுத்தமானது - இந்த வகை உணவு தாமச குணம் என்னும் மூன்றாவது குணம் படைத்தவர்கள் விரும்பும் உணவாகும்.
  
அது போலவே அர்ஜுனா யாகத்திலும் மூன்று குணங்கள் உண்டு. அவற்றைச் சொல்கிறேன் கேள்!

எந்த வித லாபத்தையும் கருதாமல் சாஸ்திரம் காட்டும் சரியான வழியில் 'இது என் கடமை. ஆகவே இந்த யாகத்தைச் செய்கிறேன்' என்று செய்யும், யாகத்துக்கு "சாத்வீகம்" எனப் பெயர்.

ஏதாவது கிடைக்கும் என்றோ, அல்லது ஊரார் மதிப்பதற்காகவோ எந்த யாகத்தையும் செய்வதன் பெயர் "ராஜஸம்".

சாஸ்திர நெறி தவறி - அன்னதானம் செய்யாமல் - மந்திரங்களை உச்சரிக்காமல், தட்சணை வைக்காமல் - அக்கறையோ நம்பிக்கையோ இல்லாமல் செய்யப்படும் யாகத்தின் பெயர், "தாமசம்".

அர்ஜுனா! அவ்வாறே இனி உடல், வாக்கு, மனம் மூன்றாலும் செய்யப்படும் தவத்தை விவரிக்கிறேன் கேள்!

தூயகுணம் படைத்தோர், ஆச்சரியார்கள், ஞானிகள் ஆகியோரைப் பூஜித்தல்; புனித நீராடி உடல் சுத்தம் செய்தல்; நேர்மையைக் கடைப் பிடித்தல்; பிரம்மச்சரியத்தைக் (கடுமையான ஒழுக்கம்) கைக்கொள்ளுதல் அகிம்சையைப் பின்பற்றல் இவைகள் யாவும் சரீரத்தால் செய்யப்படும் தவமுறைகள் ஆகும்.

யாரையும் புண்படுத்தாத சொல்வன்மை; உண்மையையே உரைத்தல்; நல்லதையே கூறுதல்; கனிவாக உரைத்தல் வேதம் ஓதுதல் - இவை வாக்கினால் செய்யப்படும் தவமுறைகளாகும்.

தெளிந்த உள்ளம்; பரம சாதுவாக இருத்தல்; மௌனத்தையே தாய்மொழியாகக் கொள்ளுதல்; மனத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல்; ஆத்மாவைத் தவிர ஒன்றை நினையாதிருத்தல் - இவை மனத்தினால் செய்யப்படும் தவமுறைகளாகும்.

இவற்றில் பலனை விரும்பாத சுயநலமற்ற நம்பிக்கை மிகுந்த முதல் தவம் சாத்வீகத் தவம்.

ஊரார் மதிக்க வேண்டும் என்பதற்காகவும், மரியாதை கிடைக்க வேண்டும் என்பதற்க்காகவும், தன் பெருமை வெளிப்பட வேண்டியும் செய்யும் தவம் ராஜஸ தவமாகும்.

காரணம் இல்லாமலும், தேவை இல்லாமலும் பிடிவாதமாகவு, தன்னை வருத்திக் கொண்டு செய்யும் தவமும் மற்றவர்களை ஒழிப்பதற்காகச் செய்யப்படும் தவமும், தாமசத் தவமாகும்.

அர்ஜுனா! இவற்றில் உயர்ந்தவை எதுவோ அதையே நீ செய்வாய்!


- பகவான் ஸ்ரீக்ருஷ்ணர்.