Showing posts with label vithuraneethi. Show all posts
Showing posts with label vithuraneethi. Show all posts

Friday, August 24, 2012

விதுர நீதி - செயல்கள் மூலம் உயர்ந்து நில்!



தன் மகன் துரியோதனது நடவடிக்கையினால் வருந்தி கையறுநிலையில் இருக்கும் திருதிராஷ்டிரனிடம் விதுரர் இவ்வாறு கூறுகிறார்.

பிறரால் தக்கப்பட்டுக் காயமடைந்தவனும், தனது நெருங்கிய நண்பனுக்குத் துரோகம் செய்தவனும், தன் சொத்து-சுகத்தையெல்லாம் இழந்தவனும் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் புலம்பிக்கொண்டே இருப்பார்கள். அது போலவே ஒருவன் தான் அறிந்த உண்மையைத் துணிச்சலாக வெளியிடாவிடில் தன் வாழ்நாள் முழுவதையும் துயருடன் கழிப்பான்.

ஒருவன் தனது வளர்ப்பு பிராணிக்காக பொய் சொன்னால் அவனுடைய முன்னோர்களில் ஐந்து பேர் நரகத்தில் தள்ளப்படுவர். தனது பசுவிற்காகப் பொய் சொன்னால் பத்து முன்னோர்களும், தனது குதிரைக்காகப் பொய் உரைத்தால் நூறு முன்னோர்களும் நரகத்தில் தள்ளப்படுவர். தனக்கு வேண்டிய மனிதனுக்காகப் பொய் கூறினால் அவனையும் சேர்த்து ஆயிரம் முன்னோர்கள் நரகத்தை அடைவார்கள்.

தங்கம் பெறுவதற்காகப் பொய் கூறுபவன், தன் குடும்பத்தினர் அனைவருக்கும், எதிர்காலத்தில் தன் குடும்பத்தில் பிறக்கப் போகிறவர்களுக்கும் அழிவு ஏற்படச் செய்கிறான். நிலம் சம்பந்தமாகப் பொய் கூறுபவன் தன்னிடம் உள்ளவையும் தன்னைச் சார்ந்தவையும் எதுவும் மிஞ்சாமல் அழிந்துவிடும். ஆகவே ஒருபொழுதும் நிலம் பற்றிப் பொய் கூறக்கூடாது.

முதுமைத் தளர்ச்சி நமது அழகையும், ஆசை பொறுமையையும் சீர்குலைக்கும். சாவு உயிர் முச்சை நிறுத்தி விடும். பொறாமை நன்னெறியில் செல்வதைத் தடுக்கும். கோபம் செல்வச் செழிப்பையும், தீயோர் நட்பு நமது நன்னடத்தையையும் பாதிக்கும். காமம் மான-அவமான உணர்வை மரத்துப் போகச் செய்யும். கர்வமோ நம்மிடமுள்ள அனைத்தையும் அழித்தொழித்துவிடும்.

இரவு நேரத்தில் தீகுச்சியைக் கொளுத்தினால் பொருட்கள் கண்ணுக்குத் தெரியும். அதுபோலவே ஒருவன் செய்கின்ற செயல் மூலம் அவன் எவ்வளவு உயர்ந்தவன் என அறியலாம்.

ஆகவே மன்னா, தங்கள் புதல்வர்களை அவர்களின் செயல்களின் மூலம் உயர்ந்தவர்களாக இருக்கச் செய்யுங்கள்!

- மகான் விதுரர்.

Thursday, May 24, 2012

அகங்காரத்தால் அழியாதே - விதுர நீதி!



பாண்டவர்களும் கௌரவர்களும் போரில் இறப்பார்களே என்ற துயரத்தின் உச்சத்தில் ஆழ்ந்த திருதிராஷ்ட்டிரன் விதுரரிடம் கேட்கிறார்!

திருதிராஷ்ட்டிரன்: விதுரா! மனிதனுக்கு ஆயுள் நூறாண்டு காலம் என்று எல்லா வேதங்களும் சொல்கின்றன. அப்படி இருந்தும், மனிதன் நூறு ஆண்டுகளும் உலகில் இருப்பதில்லையே, அது ஏன்?

விதுரர்: மாமன்னா! மனிதர்களை எமன் கொல்வதில்லை. அவர்களின் ஆயுளை ஆறு கூர்மையான ஆயுதங்கள் அறுக்கின்றன. அவைகளைச் சொல்கிறேன் கேளுங்கள்.

மிதமிஞ்சிய அகங்காரம்

அதிகமான பேச்சு

குற்றங்களை மிகுதியாகச் செய்வது.

அதிகமான கோபம்

தன்னை மட்டும் காத்துக் கொள்வதில் ஆசை

நண்பர்களுக்குத் துரோகம் செய்வது.

என்கிற இவைகளே அந்தக் கூர்மையான ஆயுதங்கள். ஆகவே மன்னா! இந்தத் தீய குணங்களை ஒழித்து நீங்களும் உங்கள் பிள்ளைகளும் சுகமாக வாழ வேண்டும் என்பதே என் விருப்பம்!

- மகான் விதுரர்

Thursday, March 29, 2012

விதுர நீதி - தீயவர்களுடன் பழகாதீர்கள்!



எவன் துன்பமும் எதிர்ப்பும் கண்டு வருந்துவதில்லையோ, எவன் தேடிச்சென்று கவனமாகவும், கடுமையாகவும் உழைக்கிறானோ, சூழ்நிலை கருதித் துன்பங்களைப் பொறுத்துக் கொள்கிறானோ அவனே மனிதர்களில் முதன்மையானவன். அவன் எல்லா எதிரிகளையும் வென்று விடுவான்.

எவன் காரணமின்றித் தன் வீட்டை விட்டு வெளியே சென்று வசிப்பதில்லையோ, தீயவர்களுடன் பழகுவதில்லையோ, பிறர் மனைவிக்குக் கெடுதல் செய்வதில்லையோ, கர்வப்படுவது கபடமாக நடந்து கொள்வது என்பதில்லையோ, பிறரை நிந்திப்பதில்லையோ, குடிப்பழக்கம் வைத்துக் கொள்ளவில்லையோ அவன் எப்பொழுதும் மகிழ்ச்சியாக விளங்குவான்.

எவன் வாழ்க்கையின் குறிக்கோள்களாகிய அறம் பொருள் இன்பத்தை அடைய அவசரப்பட்டுச் செயல்படுவது இல்லையோ, எப்பொழுதும் உண்மை பேசுகிறானோ, தன் நண்பனுக்காகக் கூட யாருடனும் தகராறு செய்வதை விரும்புவதில்லையோ, மற்றவர்கள் மதிக்காவிடிலும் கோப்ப்படுவது இல்லையோ அவனே அறிவாளி!

எவன் யாரிடமும் பொறாமை கொள்வதில்லையோ, எல்லோரிடமும் கனிவாக இருக்கிறானோ, தனது பலக்குரைவை உணர்ந்து யாரையும் எதிர்க்காமல் உள்ளானோ அவன் எங்கும் புகழ் பெருவான்.

எவன் பிறரை இகழ்ந்து தன்னை மெச்சிக்கொள்வதில்லையோ, உணர்ச்சி வசப்பட்ட நிலையில் தன்னை மறந்து பிறரைக் கடுஞ்சொல் கூறுவதில்லையோ அவன் எல்லோராலும் விரும்ப்பப்படுகிறான்.

நடுத்தரமான மனிதன் வாக்குறுதிகள் கொடுப்பான். அவற்ரை நிறைவேற்றியும் தருவான். எதுவும் கொடுப்பதாக வாக்களித்தால் அவ்வாறே கொடுட்தும் விடுவான். பிறரிடம் குற்றம் கண்டுபிடித்த வண்ணம் இருப்பான். மனிதர்களில் கீழானவர்கள் யாருக்கும் அடங்க மாட்டார்கள். எப்போதும் ஆவேசமாக இருப்பார்கள். பாவச் செயல்களில் ஈடுபடுவார்கள். பயங்கரமாகக் கோபப்படுவார்கள். நன்றி கெட்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் யாருக்கும் நண்பர்கள் அல்லர். சில சமயம் நல்லவர்கள் போல் பழகினாலும் அவர்கள் கொடிய மனம் உடையவர்களே.

கீழ்தரமானவன் பெரியவர்கள் கூறும் நல்ல ஆலோசனைகளின் படி நடந்து கொள்ள மாட்டான். அந்த ஆலோசனைகளால் நன்மை விளையுமென அவன் நம்புவதில்லை. அவன் தன்னையே சந்தேகப்படுபவனாக இருப்பான். தன்னுடைய நண்பர்களைக் கூடக் காட்டிக்கொடுத்துவிடுவான்.

பொறாமை கொள்ளாதிருத்தல், நேர்மையான பேச்சு, உள்ளத் தூய்மை, போதுமென்ற மனத்திருப்தி, எரிச்சலூட்டாத இனிய பேச்சு, மனக்கட்டுப்பாடு, வாய்மை, மனவுறுதி இம்மாதிரியான நற்பண்புகளைத் தீயவர்களிடம் எதிர்பாக்க முடியாது.

வாழ்க்கையில் வளம் பெற்று முன்னேற விரும்புகிறவன் மேற்கூறிய மூவகை மனிதர்களில் உத்தமமான மனிதர்களை மட்டும் அணுக வேண்டும். தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில் நடுத்தரமான மனிதர்களை அணுகலாம். ஆனால் ஒரு போதும் கீழ்த்தரமான மனிதர்களைச் சார்ந்திருக்கக் கூடாது.

- மகான் விதுரர்

Sunday, January 8, 2012

விதுர நீதி - சொர்கத்தை அடைய பத்து வழிகள்!



அறிவு, ஞானம், வயது, அனுபவம் முதலியவைகளில் பெரியவர்களானவர்கள், எந்தச் சபையில் இல்லையோ அது சபை ஆகாது.

யார் தர்மத்தைச் சொல்லவில்லையோ, அவர்கள் பெரியோர்களாக மாட்டார்கள்.

எதில் சத்தியம் இல்லையோ அது தர்மமாகாது. அந்தச் சத்தியமே கபடத்துடன்கூடி இருந்தால் அது சத்தியமாகாது.

சத்தியம், அடக்கம், சாஸ்திர ஞானம், தேவதை வழிபாடு, குலத்தை மேமைப் படுத்தும் காரியம், ஒழுக்கம், பலம், செல்வம், சூரத்தனம், சமத்காரமாகப் பேசுதல் என்னும் இந்தப் பத்தும், சொர்கத்தை அடையச் செய்யும் காரணங்கள் ஆகும்.

இரவில் சுகமாக வாழத்தேவையானவற்றைப் பகலில் தேடி வைத்துக் கொள்ள வேண்டும். மழைக்காலத்தில் சுகமாக வாழத் தேவையானவைகளை மற்ற எட்டு மாதங்களில், தயார் செய்து கொள்ல வேண்டும்.

அது போல, முதுமைக்காலத்தில் சுகமாக வாழ்வதற்கு வேண்டியவைகளை இளமைக்காலத்திலேயே தயார் செய்து கொள்ள வேண்டும். ஜன்மாந்திரத்தில், சுகமாக வாழத் தேவையான நற்செயல்கள், தர்மம் , முதலியவைகளை உயிரோடு இருக்கும் வரை செய்ய வேண்டும்.

அதர்மத்தால் சம்பாதிக்கப்பட்ட செல்வத்தால் எந்த தோஷமானது தீர்க்கப்படுகிறதோ, அந்த் தோஷம் தீர்க்கப் படாததாகவே ஆகிறது. அதைத்தவிர இன்னொரு தோஷமும் சேருகிறது.

தர்மமே மிகச்சிறந்த நன்மையை அளிக்கக் கூடியது. பொறுமையே மிகச்சிறந்த அமைதியைக் கொடுக்கும். ஞானமே மிகச்சிறந்த திருப்தியை அளிக்கும். அஹிம்ஸை ஒன்றே எல்லா ஸுகங்களையும் கொடுக்கக் கூடியது.

- மகான் விதுரர்
.

Wednesday, February 23, 2011

விதுரரும் விதுர நீதியும்!




மஹாத்மா விதுரர் தர்மத்தின் அவதாரம். திருதராஷ்ட்ரர், பாண்டு ஆகியோருக்கு ஒன்று விட்ட சகோதரர். சிறந்த அறிஞர், நீதி அறிந்தவர், 


தர்மம் அறிந்தவர். வித்வான், நன்னடத்தை உடையவர். மேலும் இறைபக்தி மிகுந்தவர். இத்தகைய மேலான குணங்கள் அவருக்கு பெரும் மதிப்பும் அரசவையில் உயர்ந்த பதவியும் கிடைத்தன.

அவர் திருதராஷ்ட்ரருக்கு அமைச்சராக இருந்தார். ஒருநாள் இரவு திருதராஷ்ட்ரர் தன் மகன் துரியோதனன் பொருட்டு சிந்தித்து மன அமைதி இழந்துகாணப்பட்டார். அவர் விதுரரை வரவழைத்து மன அமைதிக்கான வழியைப் பற்றிக் கேட்டார். அப்போது விதுரர் திருதராஷ்ட்ரருக்குத் தர்மம், நீதியைப் பற்றி மிகவும் அழகாக உபதேசம் செய்தார். அதுவே 'விதுரநீதி' என்ற பெயரில் உத்யோக பர்வத்தில் 33-40 வரை எட்டு அத்யாயங்களில் தொகுக்கப்பட்டுள்ளது. திருதராஷ்டிரருக்கும் விதுரருக்கும் நிகழ்ந்த 
உரையாடலில் ஒரு துளி!


திருதிராஷ்ட்டிரன்: விதுரா! உயர் குடும்பத்தில் பிறப்பதாலேயே ஒருவன் மதிப்புக்குரியவன் ஆகிவிடுவானா?

விதுரர்: இல்லை! ஒழுக்க நியாயமற்றவன் அவனுடைய பரம்பரையை மட்டும் வைத்து, மரியாதைக்குரியவன் ஆகிவிட மாட்டான்.

ஒருவனுடைய பிறப்பு எப்படிப்பட்டதாயியும், ஒழுக்கத்தை ஒட்டியே ஒருவனுக்கு மரியாதை கிட்டுகிறது.

ஏமாற்று வேலை மூலமாக வாழ்க்கை நடத்தும் மோசக்காரனை அறிவு காப்பாற்றி விடாது. கூட்டை விட்டு பறந்து செல்லும் பறவைகளைப் போல, அறிவு அவனை விட்டு விரைந்து ஓடுகின்றன.

திருதிராஷ்டிரர் கேட்டார்: 'நன் குணத்தையும், உலக நன்மையையும் போற்றும் கடவுள்கள் உயர் குடும்பங்களில் பிறந்தவர்கள் பால் அக்கறை காட்டுகிறார்கள். விதுரா! உயர் குடும்பங்கள் என்பதுதான் எவை?

விதுரர் சொல்கிறார்: 'சுய கட்டுப்பாடு, பொறுமை, தியாகம், அன்னதானம், தூய்மையான திருமணங்கள், தவம், பிரம்மத்தை உணர்ந்த தன்மை, மற்றவர்களைத் திருப்தி செய்யும் குணம் - இந்த எட்டு குணங்கள் எந்தக் குடும்பங்களில் எப்போதும் நிலவுகின்றனவோ, அவை உயர் குடும்பங்கள் ஆகும்.

பசுக்களும், செல்வமும் மிகுந்திருந்தாலும், நன்னடத்தையும் நற்குணமும் இல்லாத குடும்பங்கள், உயர்ந்த குடும்பங்கள் ஆக மாட்டா!"


குருக்ஷேத்திர யுத்தத்தின் முடிவில் திருதராஷ்ட்ரர் தம்முடைய நூறு புத்திரர்களும், உறவினர்களும் அழிந்தனர் என்பதை அரிந்த ராஜா த்ருதராஷ்ட்ரருக்குப் பெரும் துக்கம் ஏற்பட்டது. அப்போது விதுரர் திருதராஷ்டிரரை சமாதானம் செய்யும் பொருட்டு 'மரனம் என்பது தவிர்க்க முடியாதது' என்பதை வலியுறுத்தி உபதேசித்தார்.

"மன்னா! யுத்தத்தில் மரணம் அடைபவர்களுக்கு மேலான கதி கிடைக்கின்றது. ஆகவே அவர்களுக்காக வருந்தக்கூடாது. உயிர்கள் ஒவ்வொரு முறை பிறவி எடுக்குந்தோறும் அவர்கள் தனித்தனியான நபர்களுடன் தொடர்பைக் கொள்கின்றனர். மரணம் எய்திய பின்னர், இவை அனைத்தும் வெறும் கனவைப் போல் கலைந்து விடுகின்றன. எனவே எந்தக் காரணத்தாலும் மரணம் அடைந்தவர்களுக்காக வருந்துவது அரிவுடைமை ஆகாது. 

மேலும் சுகம் துக்கம், சேதல்-பிரிதல் என்று எவ்வளவு நிகழ்ச்சிகள்
ஏற்படுகின்றனவோ, அவை அனைத்தும் ஒருவர் செய்த நல்ல-தீய கர்மங்களின் விளைவாகவே வருகின்றன. செய்த கர்மத்தின் பலனை அனைவரும் அனுபவித்தே தீர வேண்டும்" எனவே அவற்றில் 'மரணம் தவிர்க்க முடியாதது' என எடுத்துரைத்து திருதராஷ்டிரரை சமாதானப்படுத்தினார்.

யுதிஷ்டிரர் அரியனை ஏறிய பிறகு, சிறிது காலம் அரசவையில் வாழ்ந்த விதுரர், 
திருதராஷ்ட்டிரரும் காந்தாரியும் வனவாஸம் சென்ற போது தானும் உடன் சென்றார். வனத்தில் விதுரர் தவமிருந்து வாழ்ந்தார். சிறிது காலத்திற்கு பிறகு யுதிஷ்டிரர் வனத்திற்குச் சென்று பெரியோர்களுக்கு மரியாதை செலுத்தச் சென்றார். 

அப்போது விதுரர் மெலிந்த தேகத்துடனும் ஜடாமுடியுடனும் திகம்பரர் நிலையில் யோகியாகவே காட்சியளித்தார். யுதிஷ்டிரரின் அன்பான மரியாதையை ஏற்றுக்கொண்ட விதுரர் அப்போதே சமாதிநிலை அடைந்து முக்தி பெற்றார்.

மகாபாரதத்தில் விதுரர் ஒரு மறக்க முடியாத பாத்திரம்!


.

Tuesday, May 5, 2009

விதுர நீதி


பாண்டவர்களை அடைந்த‌ விதுரரை ஐவரும் அன்புடன் வரவேற்க்கின்றனர். ஓர் அழகான இருக்கையில் அவரை அமர்த்தித் தகுந்த முறையில் மரியாதை செய்தனர். யுதிஷ்டிரர் வினவிய பிறகு, விதுரர் த்ருதராஷ்ட்ரர் கூறிய வார்த்தைகளை அவரிடம் சொன்னார்: 

" திருதராஷ்ட்ரருக்கு நான் அங்கிருப்பது தேவையில்லை என்று தோன்றிவிட்டது. இதனால் நான் இங்கு வந்துவிட்டேன். அவருடைய மனம் மோத்தினாலும் பற்றுதலாலும் கலங்கித் தெளிவில்லாமல் இருக்கிறது. தர்மம் செய்வதற்கான வார்த்தைகளைக் கேட்பதற்க்குக் கூட அவர் விரும்பவில்லை. இப்போது கௌரவர்களுடைய அழிவு நெருங்கியிருக்கிறது என்றே தோன்றுகிறது. இந்த ஆபத்தைக் கண்டு அஞ்சி நடுங்க வேண்டியதில்லை. பகைவர் தரும் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு அனுகூலமான காலத்தை எதிர்பார்த்திருப்பவனுக்குப் பின்னால் சுகம் நிச்சயமாகக் கிடைக்கும்." என்று கூறினார்.  

விதுரர் மேலும் பாண்டவர்களுக்கு இவ்வாறு உபதேசிக்கிறார்:  

"செல்வச் செழிப்பில் இருக்கும் போதும் , சுகங்களை அனுபவிக்கும் போதும் தானே தன்னந்தனியாக அவற்றை அனுபவிக்காமல் பிறருக்கு உதவி செய்து எவன் அவற்றை சமமாகப் பங்கு கொடுக்கிறானோ, அவனுக்கு துக்கம் நேர்ந்த காலத்தில் துன்பச் சுமையை அவன் மட்டும் தனியாகச் சுமக்க வேண்டிவராது.  

அவனுடைய இன்னல்களைப் பகிர்ந்து கொள்பவர்கள் கிடைப்பார்கள். ஆதரவாளர்கள் கிடைப்பதற்கான மிகச் சிறந்த உபாயம் இதுதான். உதவிக்கு ஆட்கள் கிடைத்த பின் , வேண்டியனவெல்லாம் கிடைத்து விட்டன என்றே புரிந்து கொள்ள வேண்டும்.  

பணிவுள்ளவனாகத் தன்னை க்கிக் கொள்வதுதான் நன்மை பயக்கும். இதனாலேயே அவர்களுக்கு உயர்வு ஏற்படுகிறது." - விதுரர்

Monday, March 30, 2009

விதுர நீதி


திருதிராஷ்டிரர் விதுரரிடம் கேட்கிறார் ‍:

கவலை மிகுதியால் எனக்கு உறக்கம் வரவில்லை. உன்னைப் போன்று தர்மம், அதர்மம் பற்றி அறிந்தவர் யாருமில்லை. என்னுடைய நன்மைக்குரிய அறிவுரைகள் சொல்.! 

விதுரர்: சாதாரண மனிதர்களுக்கு உறக்கம் வராததற்கு பலவிதமான காரணங்கள் உள்ளன.  

பலமுள்ள ஒருவனின் ஆதிக்கத்திற்க்கு ஒருவர் ஆளாகும் போது,  
ஒருவருக்குச் சொந்தமான சொத்தெல்லாம் கவரப்படும் போதும் உறக்கம் வராது, 

மேலும், காமமுள்ளவனுக்கும், திருடனுக்கும் உறக்கம் வராது.  

மாற்றானின் செல்வத்தைக் கவர்ந்து கொள்ள விரும்புகிறவனுக்கும் உறக்கம் வராது, இவ்விதமான எந்தக் குற்றமும் உங்களிடத்தில் இல்லாமல் இருந்தால் உங்களால் நன்றாக உறங்க முடியும் இவ்வாறு விதுரர் பதிலளித்தார்.

Saturday, March 28, 2009

விதுர நீதி


விட்டுவிட வேண்டிய குணங்கள்:

அதிகமாக உறங்குவது, உடல் அசதி, அச்சம், கோபம், சோம்பேறித்தனம், பின்பு செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் இந்த‌ ஆறு குணங்களையும் நாம் கட்டாயம் விட்டுவிட வேண்டும்.

விடக்கூடாத குணங்கள்:

உண்மை, தானம், கவனம், அன்பு, பொறுமை, தைரியம் இந்த ஆறு நற்குணங்களையும் எப்போதும் விட்டுவிடக்கூடாது.

விதுர நீதி


அறிவுள்ளவனின் குணங்கள்

"எவனுடைய கல்வி, அவன் புத்தியை அனுசரித்து இருக்கிறதோ, எவனுடைய புத்தி அவன் பெற்ற கல்விக்கு விரோதமாக இல்லையோ, பண்டைக்கால மனிதர்களால் நல்லதென்று தீர்மானிக்கப்பட்டிருக்கிற நடத்தையை எவன் மீறுவதில்லையோ, எவன் எப்பொழுதும் தொன்று தொட்டு இருந்து வரும் ஸநாதன தர்மத்தை தன் இதயத்தில் வீற்றிருக்கச் செய்துள்ளானோ, அவன் அறிவுள்ளவன் ஆவான்!"

அறிவற்றவனின் குணங்கள்

"சாஸ்திரங்களில் கூறியவற்றையும், உலகத்திலுள்ள பெரியோர்களின் சொற்களையும் செவிமடுத்துக் கேட்காதவனும், தன்னை மிகப் பெரியவன் என்று கருதி, கர்வம் கொள்பவனும், இதை முடிக்கத் திறமையில்லை எனத் தெரிந்தும் அதை நிறைவேற்றச் செயல்பட்டுக் கொண்டிருப்பவனும், பாவம் செய்து பொருளீட்ட விரும்புபவனும், தன் நன்பனை மோசம் செய்பவனும், பகைவரிடம் நட்புக் கொள்பவனும், தானே செய்ய வேண்டிய வேலைகளை, வேலைக்காரர்களைச் செய்யும்படி ஏவுபவனும், தராதரம் இல்லாமல் ஸ்நேகம் கொள்பவனும், அவசர அவசரமாகச் செயல்படுபவனும், விரைவில் செய்து முடிக்க வேண்டிய வேலையைச் செய்யாமல் தாமதம் செய்பவனும் அறிவிலிகள்".


மேலும் "பித்ருக்களுக்கு ஈமக்கடன்கள் செய்யாதவனும், தேவதைகளுக்கு பூஜை செய்யாதவனும், நல்லோரிடம் நட்பு கொள்ளாதவனும், அழைக்கப்படாத இடங்களுக்கு செல்பவனும், கேட்காவிட்டாலும் பல விஷயங்களை சொல்லித்தீர்ப்பவனும், நம்பத் தகுந்தவனை நம்பாதவனும், தனது குற்றத்தைப் பிறர் மீது சுமத்துபவனும், பிறருடைய‌ மனைவியை காம நோக்குடன் பார்ப்பவனும், கஞ்சனுக்கு வேலை செய்பவனும் அறிவற்றவர்கள் ஆவர்."

- விதுர‌ர்