Showing posts with label ராமாயணம். Show all posts
Showing posts with label ராமாயணம். Show all posts

Sunday, September 25, 2011

ராமாயணம் தரும் பாடம் - அனுகூல க்ஷத்ரு!




அனுகூல க்ஷத்ரு என்று சிலரைக் கூறுவார்கள். அப்படியென்றால் யார்?

எப்படி இருப்பார்கள்?

நமக்கு நன்மை செய்வதாகச் சொல்லி தீமைக்குழியில் தள்ளிவிடுபவர் எவரோ அவரே அனுக்கூல க்ஷத்ரு என அழைக்கப்படுகிறார்கள்.

சட்டென புரியும் படியாகச் சொல்லவா?

"ரொம்ப ஜலதோஷம் மச்சான். மூக்கடைச்சிக்கிட்டு ரெண்டு நாளா ஒரே தொல்லை" என்று உங்கள் நண்பரிடம் கூறும்போதே 'மச்சி மெளகு பொடியத் தூவி கட்டிங் வுட்டேன்னா எல்லாம் சரியாயிடும்! நான் சொல்லித்தர்ரேன் பாரேன்" என்று ஆரம்பிப்பவர் யாரோ அவரே அனுக்கூல க்ஷத்ரு! நம்முடைய ஜலதோஷத் தொல்லை நீங்க வழி செய்யும் உதவி மனப்பான்மையோடு
அவர் சொல்வதாகத் தான் இருக்கும். அது நண்பனின் அடையாளம்.

ஆனால் நமக்கு செய்ய நினைக்கும் நன்மை இன்னொரு தீமையின் ஆரம்பமாக இருந்துவிட்டால் அது நமக்கெதிராக செயல்பட நினைக்கும் க்ஷத்ருவின்
அடையாளம். இப்படி நமக்கு நன்மைசெய்வதாகக் கூறி தீமைக்குழிக்குள் யாரேனும் தள்ளிவிட்டால் அவரே அனுகூல க்ஷத்ரு.

காதலியைப் பற்றி சக நண்பர்களிடம் கூறி புலகாங்கிடம் அடையும் இளவட்டங்கள் இருப்பார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் கொஞ்சியது கெஞ்சியது மிஞ்சியது என அனைத்தையும் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் எப்போதாவது காதலியுடன் சண்டை, கோபம் என்று வந்தவுடன் தான் இந்த அனுகூல க்ஷத்ருக்களுடைய வேலை ஆரம்பமாகும். 'மச்சி, அவ என்னைய மதிக்கவே இல்லடா, நேத்து என்னாச்சு தெரியுமா?' என சக நண்பர்களிடம் கூறுவர். ஆறுதல் கூறுவதாக நினைத்துக்கொண்டு அவர்கள் கூறும் யோசனை தான் அந்த காதலுக்கே சமாதி கட்டும் வேலையாக இருக்கும்.

'அவ எதிர்ல வந்தா கூட பாக்காம போ மச்சான். ரெண்டு நாளைக்கு
ஃபோனை ஸ்விட்ச் ஆப்ல வெச்சிடு. அடிச்சி புடிச்சு உன்னைப் பாக்க ஓடிவர்ராளா இல்லையான்னு பாரு!' இப்படி யோசனைகள் பறக்கும். டவுசர் போட்ட காலத்திலிருந்தே கூடப்பழகும் உற்ற நண்பன் தனக்கு நல்லதைத்தான் சொல்லுவான் என்றும் அவன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்றும் கண்ணை மூடிக்கொண்டு நம்புபவன் அப்படியே செய்தும் பார்ப்பான்.

அவ்வளவு தான் சிறிய ஈகோ பிரச்சனையில் துவங்கியதை, ஒரு கெஞ்சலில் முடிந்து விடக்கூடிய ஊடலை, பெரிய விரிசலாக மாற்றி காதலே உடைந்து காதலர்கள் பிரிந்து போகும் சூழலுக்குத் தள்ளிவிடும், இந்த யோசனைகள். நண்பர்களால் சொல்லப்பட்டவை எல்லாம் நமது நன்மைக்கே என்கிற மாயத்தோற்றம் காதல் முறிந்து காலம் கடந்த பின் தெரியும்.

'பின்னொரு காலத்தில் உங்களால தாண்டா இதெல்லாம் நடந்திச்சி. உங்களை யார்ரா என் காதல்ல குறுக்க வரச்சொன்னது?' என அவர்களிடமே கேட்டு நட்பையும் இழக்கும் அசமஞ்சங்களாக நாம் இருப்போம். எல்லாம் நமது அனுகூலத்திற்காக செயல்படுபவர்கள் என சிலரை நம்பி அவர்களே க்ஷத்ருக்களின் வேலையைச் செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளாத வினையால் ஏற்படும் விளைவுகள்.

இப்படி பலபேர் பல இடங்களில் பல நேரங்களில் நம்மைச் சுற்றி இருந்து கொண்டே இருப்பார்கள். சூழ்நிலை காரணமாக நாம் அவர்களை நம்பிவிட நேரலாம். ஆனால் விழிப்புடன் நடந்து கொண்டால் சில நுணுக்கமான க்ஷத்ரு அவதாரம் அவர்களிடமிருந்து வெளிப்படுவது மெல்லத் தெரியவரும்.

கல்லூரியில் படிக்கும் போது சக நண்பர்கள் உற்சாகப்படுத்துவார்கள். எதற்கு? பரீட்சையில் பெயிலாய்ப் போவதற்கு! 'மச்சி, அரியர்ஸ் வெக்காத மனுஷன் அரை மனுஷன்டா.' என்பான். 'நாமல்லாம் என்னிக்கு மச்சான் ஒரே அட்டெம்ப்ட்ல பாஸாயிருக்கோம்?' என வடிவேலு பாஷையில் பேசி புளகாங்கிதம் அடைந்து கொள்வான். அதையெல்லாம் தாண்டி 'மச்சி, இந்த வயசில தாண்டா என்ஜாய் பண்ணும், க்ளாஸை அப்பறம் பாத்துக்கலாம், உனக்கும் சேத்து டிக்கெட் எடுக்கறேன் மச்சான், படத்துக்கு போகலாம் வா' என்று நட்புணர்வு பொங்க வாஞ்சையாய் அழைப்பான். அவன் தான் மாணாக்கனின் அனுகூல க்ஷத்ரு!

ஒரு மனைவி தன் கணவனிடம் கோபித்துக் கொள்கிறாள் என வைத்துக் கொள்வோம். அதை உடனே தனது தோழியிடம் பகிர்ந்து கொள்கிறாள். அவள் கருத்தேதும் சொல்லாமல் வெறுமனே கேட்டுக் கொண்டிருந்தால் அவள் தோழி. அல்லது அதெல்லாம் சின்ன சின்ன உரசல் தானே. எல்லாம் சரியாப் போய்டும் என்று ஆறுதல் கூறினால் அவள் தோழி.

ஆனால் அதே தோழி இந்த பிரச்சனையைத் தீர்க்க ஆலோசனை கூறினால்? அங்கே தான் அனுகூல க்ஷத்ருவை அடையாளம் கண்டு கொள்ளவேண்டிய அவசியம் இருக்கும். விழிப்புடனிருக்க வேண்டும். அந்த யோசனைகளைச் செய்யலாமா வேண்டாமா என்று நம் குடும்பச் சூழலை அனுசரித்து பலமுறை சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

தோழிக்கு ஆறுதலாக கூறுவதாக நினைத்து "நீ எவ்ளோ கஷ்டம் படற, உன் புருஷனுக்கு அது புரியலியே! நீ பேசாம இரு! அவரே பேசிக்கிட்டு வரட்டும்!  என்ன தான் செய்றாருன்னு பாரு! சமைச்சுப் போடாத! ராவக்கு கிட்ட விடாத! நீ என்ன கொறஞ்சி போய்ட்டியா?" என்று தோழிக்கு வக்காலத்தாக பேசுவதாக நினைத்து குடும்பததையே உடைக்கும் பெண்கள் அனுகூல க்ஷத்ருக்கள்! பலபேருக்கு இப்படிப்பட்ட அனுகூல க்ஷத்ருவால் மோசமான அனுபவம் உண்டாகி இருக்கலாம்! 'சே அவ பேச்சை கேட்டு பண்ணினது எனக்கே வினையா போச்சு!" என்று புலம்பும் குரல்களைக் கேட்டிருக்கலாம். ஏனெனில் அனுகூல க்ஷத்ருவின் விளைவுகள் காலம் கடந்து சூழ்நிலை மாற்றம் பெற்றவுடன் தான் மெல்லத் தெரியவரும். அதற்குள் நாம் பல விளைவுகளை சந்தித்திருப்போம்.

இப்படித்தான் அருகிலேயே இருந்த அனுகூலம் செய்வதாகச் சொல்லி ஒரு வம்சத்திற்கே வினையானாள் ஒருத்தி. அந்த அனுகூல க்ஷத்ருவின் பெயர் மந்தரை.

தனக்கு என்றைக்குமே நன்மையைச் சொல்லுபவள் தான் மந்தரை என்று கைகேயி முழுமையாக நம்பினாள். ராமனுக்கு முடிசூட்டப் போகிறார்கள் என்று மந்தரை வந்துச் சொன்னவுடன் கழுத்தில் கிடந்த முத்தாரத்தை கையால் அவிழ்த்து மந்தரையின் கழுத்தில் மகிழ்ச்சி பொங்க போட்டுப் பரிசளித்தள் கனிவான கைகேயி!

மாசுள்ளம் கொண்ட மந்தரைக்கு முத்தாரமும் முத்துமணிகளும் ஏனோ மகிழ்ச்சியளிக்கவில்லை. தான் மிகுந்த பிரியம் வைத்திருக்கும் கைகேயிக்கு ராமன் பட்டம் சூட்டிக்கொள்வதால் பெருமையென்ன இருக்கிறது என்று நினைத்தாள். கோசலையின் மகன் ராஜாவானால் கோசலைக்குப் பெருமை. கைகேயி ஏன் கால்கை புரியாமல் குதித்து கூத்தாட வேண்டுமென எண்ணினாள் மந்தரை. அதனால் கைகேயியின் மீது தனது பிரியத்தைக் காட்டுவதாக எண்ணி அவளுகு போதித்தாள்.

'கோசலை மகன் ராமன் 'கோ' மானாக இருப்பதால் உனக்கு என்ன பெருமை?
பெருமையெல்லாம் கோசலைக்கன்றோ?' 'நீயும் நானும் கோசலையின் தாசியாக இருக்கப்போகிறோமா? சக்கரவத்தித் திருமகளும், சக்கரவர்த்தியின் பத்தினியுமான நீ கோசலைமுன் பெருமை ஒன்றுமில்லாமல் சிறுமை பட்டு நிற்பாயோ?' என கைகேயிக்குப் பரிகாட்டுவதாக எண்ணி அவளுக்குப் போதித்தாள்.

இதைக் கேட்ட கைகேயி நற்குலப் பெண்களுக்கே உரிய நற்குணத்தின் வெளிப்பாடாக ராமனைப் புகழ்ந்தே கூறலானாள் 'மந்தியின் புத்தி கொண்ட மந்தரையே! எனக்கு ராமனும் ஒன்றுதான், பரதனும் ஒன்றுதான், இருவரில் மகுடம் யாருக்கெனினும் மன்னவனாவது என் மகன் தான்!'

தம்பிகளுக்கொரு குறையென்றால் தாளமாட்டாத தனையன் என் மகன் ராமன். கோசலையின் மீதிருக்கும் பாசத்தை விட கோடிப்படிகள் உயர்வாக என்மீது பாசம் காட்டுபவன் என்மகன் ராமன். பெரியோர்களிடம் அன்பும் பக்தியும் உடைய ராமன் முடிசூட்டிக்கொள்வது இந்த நல்லுலகிற்கு கிடைத்த பாக்கியமன்றோ?' என்றாள்.

ஆனால் மந்தரை விடவில்லை. என்ன தான் ராமன் மீது அதிக பாசம் கொண்டவள் கைகேயி என்றாலும் பரதன் அவள் புதல்வன் தானே. அவன் மீதும் அவனது எதிர்காலம் மீதும் சிந்தனை கொண்டவள் தானே. அந்த இடத்தை தட்டிவிட்டாள் மந்தரை.

'இன்றைக்கு ராமன் நாடாளலாமடி கைகேயி, ஆனால் நாளை நீ யார்? உன் மகன் யார்? அவன் மகன் என்னவாக இருப்பான்? ராமனுக்குப் பிறகு பரதன் அரசாள்வானா? ராமனுக்குப் பிறகு அவன் மகன் முடிச்சுட்டிக் கொள்வான், பிறகு அவன் மகன்.. அப்படியே போனால் பரதனுக்கென்று என்ன மிஞ்சும்? உன் மதி கெட்ட தனத்தால் 'நம் பிள்ளை' பரதன்' நாடாளும் வாய்ப்பைக் கெடுத்து நீயே அவனது நல்வாழ்விற்கு நாசம் விளைவிக்கிறாய். காரியத்துடன் சொல்லி விட்டேன், அவனை வீரியத்துடன் காப்பது உன்கடன் கைகேயி, உன் கடன்' என்று போதித்து நகர்ந்து விட்டாள் அனுக்கூல க்ஷத்ரு.

மந்தரை கைகேயி மீது பிரியம் கொண்டவள். அவளது அனுகூலத்திற்காகவும், அவள் பெற்ற பிள்ளையின் அனுகூலத்திற்காகவும் பேசியவள் தான். பிரியம் கொண்டதால் உரிமை வந்ததெனப் பேசலாம் தான். ஆனால் அவற்றைக் கேட்ட கைகேயி அதன் படி நடக்க வேண்டுமா? வேண்டாமா? என முடிவு செய்திருக்க வேண்டும். ஒரு கணம் அமைதியாக சிந்தித்திருக்க வேண்டும். ஆனால் தனது அனுகூலத்திற்காகத் தான் மந்தரை சொல்வதாக எண்ணி அதனுள்ளிருக்கும் க்ஷத்ரு குணத்திற்கு தானே பலியானாள். மந்தரையின் பேச்சைக் கேட்டு
மதிகெட்டுப் போனதை எண்ணி பின்னாளில் மனம் வருந்தினாள்.

கைகேயின் அனுகூல க்ஷத்ருவானாள் மந்தரை. அவள் பேச்சைக் கேட்டதால் தசரதன் மடிந்தான், ராமனும் சீதையும், லக்ஷமனனும் காடு சேர்ந்தனர். பரதன் நாடேற்க மறுத்தான். லங்காபுரி அழிந்தது. ராவண குடும்பம் மாண்டது!


எல்லாம் நம் கூடவே இருக்கும் அனுகூல க்ஷத்ருக்கள் யாரென்று புரிந்து கொள்ளாததால் வந்த வினை.

உங்களைச் சுற்றியும் உங்களுக்கு நன்மை மட்டுமே செய்யக்கூடியவர்களாக சிலர் இருப்பார்கள். அவர்கள் நல்லவர்கள் தான். ஆனால் இக்கட்டான சூழலில் மற்றவர்கள் யோசனையைக் கேட்க நேரிடும் போது அவற்றை செயல்படுத்தலாமா வேண்டாமா என்பதை நாமே சரியானபடி தீர்மானித்துக் கொள்ள வேண்டும்! நமக்கு நன்மை செய்வதாக நினைத்து தீமைக்கு வித்திடுபவர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

இல்லையேல் காலம் கடந்து ஞானம் பிறக்கும்.

நாம் இருப்பது அயோத்தியும் இல்லை! நமக்கு ஒதுங்க இங்கே காடுகளும் இல்லை!

அனுகூல க்ஷத்ருக்கள் ஜாக்கிரதை! இது ராமாயணம் தரும் பாடம்!
.

Tuesday, April 27, 2010

அனுமன் பறந்ததும், ஐன்ஸ்டீனின் ஆராய்ச்சியும்!



அறிவியலோடு ஒத்துப்போகாத மதங்கள் இருப்பதை விட அழிவதே மேல். மனிதர்களை தொடர்ந்து இருட்டில் வைத்திருப்பதற்குப் பதிலாக அந்த மதங்கள் உடனேயே அழிந்து விடுவது மனித குலத்திற்கு நல்லது - சுவாமி விவேகானந்தர்.

இந்து தர்மம் என்றைக்குமே அறிவியலோடு பொருந்திப் போவதாகவே இருந்திருக்கிறது. இன்றும் இருக்கிறது. உதாரணமாக ஸ்ரீமன்நாராயணனின் தசாவதார வடிவங்கள் பரினாம வளர்ச்சியின் சித்தாந்தத்தை அப்படியே பிரதிபலிக்கிறது என்றால் மிகையில்லை. நீர்வாழ் உயிரியில் தொடங்கி படிப்படியான உருமாற்றத்தால் மனித உருவை வெளிப்படுத்தும் இந்த தசாவதாரக் கருத்தியல் வேறு எந்த மதத்திலும் கண்டறிய முடியாத அறிவியலோடு பொருந்திப்போகும் ஒரு விஷயமாகும். அதுமட்டுமல்லாமல் வேப்பிலை, மஞ்சள் என்று நம் கலாச்சாரத்தில் நாம் அறிவிலை பல வகைகளில் இறையியலோடு தொடர்புபடுத்தி கையாண்டு வந்திருக்கிறோம்.

இப்படி பல்வேறு நிலைகளில் இயற்கையோடும் அறிவியலோடும் நம் மதங்களும் நம்முடைய இதிகாச புராணங்களில் வரும் கதாபாத்திரங்களும் ஒன்றி வாழும் தன்மை கொண்டவையாகவே இருக்கின்றன.

இன்றைக்கு ஒரு இதிகாச கதாபாத்திரத்தைப் பற்றியும் அதன் சிறப்புத் தன்மை எப்படி அறிவியலோடு பொருந்தியிருக்கிறது என்பதைப் பற்றியும் பார்ப்போம்.!

ராமாயணம்!

ராமாயணம் நிகழ்ந்ததுக்கு அடையாளமாக பூகோளம், தொல்பொருள் ஆராய்ச்சி, சரித்திரச் சான்றுகள், கலாசாரச் சின்னங்கள், காவியத்தின் குறிப்புகள் என்று ஏராளமாய்க் கிடைக்கின்றன. டாக்டர் ராம் அவதார் என்பவர் செய்த ராமாயண ஆராய்ச்சியில் 195 இடங்களை ராமரும், சீதையும் சென்ற இடங்களாய்க் கண்டறிந்துள்ளார்.

அவற்றில் சிருங்கிவேரபுரி என்றழைக்கப்பட்ட சிருங்கேரி, பாரத்வாஜ ஆசிரமம் (அலஹாபாத்), சித்ரகூடம், பஞ்சவடி, சீதாசரோவர், சீதாமடி, ஜனக்பூர், தர்பங்கா, தனுஷ்கோடி, ராமேஸ்வரம், வேதாரண்யம், பட்டீஸ்வரம், ராமநதீஸ்வரம், புள்ளப் பூதங்குடி ஆகிய இடங்களும் இடம் பெறுகின்றன.

ஸ்ரீலங்காவில் சீதை சிறை இருந்த அசோக வனம் தற்போது “அசோக் வாடிகா” என்ற பெயரில் அழைக்கப்பட்டு புண்ய ஸ்தலமாகவும், சுற்றுலா மையமாகவும் பாதுகாக்கப்படுகின்றது.

இந்தோனேஷியாவில் ஸ்ரீராமர் மற்றும் சீதையை கலாசார- ஆதர்ஸ தம்பதிகளாய்ப் பார்ப்பதோடு அல்லாமல், ராமாயணத் திருவிழா “உலக ராமாயணத் திருவிழா”வாக சில ஆண்டுகள் முன்பு கொண்டாடியது. ராமாயணம் இந்தோனேஷியாவின் தேசீய இதிஹாசமாய் அறிவிக்கப் பட்டிருக்கின்றது. இத்தனை சிறப்பு பெற்ற ராமாயனத்தில் யாரை மறந்தாலும் ஒருவரை மறக்கவே முடியாது.

ஆஞ்சனேயர்!

ஆஞ்சனேயர் என்ற கதாபாத்திரம் இல்லையென்றால் ராமாயனத்திற்கு சிறப்பே இல்லை
எனலாம். முழு ராமாயனத்தையும் கேட்டு முடிக்கும் நம்மக்களுக்கு ராமர் மீது பக்தி வருகிறதோ இல்லையோ ஆஞ்சநேயர் மீது கண்டிப்பாக பக்தியும் விருப்பமும் பாசமும் வந்து விடும். எல்லோரையும் கவரும் அந்தக் கதாபாத்திரம் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு பறப்பது, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி தியரியோடு ஒத்துப்போகிறது என்றால் நம்புவீர்களா?
ஆம். கண்டிப்பாக ஒத்துப்போகிறது என்பேன் நான். அதைக் கொஞ்சம் பார்ப்போம்.

அதற்கு முன்பாக ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி தியரிபற்றி கொஞ்சம் பார்ப்போம். 1905-ல் ஆல்பர் ஐஸ்டீனுக்கு இருபத்தி ஐந்து வயது தான். அப்போதே ஆராய்ச்சியாளர். ஒளியின் வேகத்தைப் பற்றி இன்னபிற ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் மண்டையைப் பிய்த்துக்கொண்டிருந்த போது அதை சில ஆராய்ச்சிகள் மூலம் அதிரடியாக நிரூபித்து அதிரவைத்த அதிர்வேட்டுக்காரர். அதாவது ஒளியின் வேகம் என்பது பூமிப்பந்து சுழலும் திசையிலும் சரி அதன் எதிர் திசையிலும் சரி மாறவே இல்லை. அது எப்படி? என்று ஒரே குழப்பம்.

இதற்கு ஐன்ஸ்டீன் கொடுக்கும் தீர்வு எப்படி ஆஞ்சநேயர் பறப்பதோடு ஒத்துப்போகிறது என்பதை பற்றி பார்ப்போம்!



ஒளியின் வேகம் பூமிப்பந்து சுழலும் திசையிலும், எதிர் திசையிலும் ஒரே வேகத்தில் எப்படி பிரயானிக்க முடியும் என்பதை இவ்வாறு விளக்குகிறார். ஒளியின் வேகம் வினாடிக்கு 1,86,282 மைல் என்று கூறப்படுகிறது. இந்த வேகத்தில் ஒரு பொருள் பிரயானித்தால் கண்டிப்பாக அந்த பொருளின் மீது ஒரு மாற்றம் உண்டாகும் என்கிறார் ஐன்ஸ்டீன். அந்த மாற்றத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு பிரயானிக்கும் எந்தப் பொருளும் பூமியின் சுழற்சியின் எதிர் திசையிலும் ஒரே வேகத்தில் பிரயானிக்க முடியும் என்பது அவரது வாதம்.

நமக்குப் புரியும் வகையில் ஒரு உதாரனம் பார்ப்போம். சித்திரைப் பொருக்காட்சிக்குப் போகிறோம். அங்கே ஜெயன்ட் வீல் ராட்டினத்திலோ, அல்லது ரோலர் கோஸ்டரிலோ நாம் பிரயானிக்கின்றோம் என்று வைத்துக்கொள்வோம். அவை ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு நம்மைக் கொண்டுபோய் அப்படியே கீழே விழுந்து விடுவது போல புவியீர்ப்பு விசையின் வேகத்திலேயே நம்மை தரைக்குக் கொண்டு வரும். மயிற்கூச்செரிய உணர்ச்சி மேலிட கூச்சலிடுவோம். நாம் அப்படி கூச்சலிடவும் காரனம் இருக்கிறது. புவியீர்ப்பு விசையின் வேகத்தில் நாம் கீழே இறங்கும் போது ரத்த அழுத்தம் வழக்கத்தை விட மாறுபட்டு உடலின் ரத்தத்தின் வேகம் அதிகரிக்கிறது. இதை சமாளிக்கவே அதில் பயணிப்பவர்கள் கூச்சலிடுகிறார்கள். ஆக ராட்டினத்தில் ப்ரயானிக்கும் போதே நம் உடலில் மாறுதல்கள் உண்டாகுமானால் ஒளியின் வேகத்தில் பிரயாணிக்கும் போது ஒரு பொருளின் மீது என்னென்ன மாறுதல்கள் ஏற்படும் என்று கற்பனை கூட செய்ய முடியாது.

ஆனால் ஐன்ஸ்டீன் இதை கற்பனை செய்தது மட்டுமல்ல ஒரு ஆராய்ச்சியின் மூலம் நிரூபித்தும் விளக்கினார். ஒளியின் வேகத்தில் ஒரு பொருள் பிரயானிக்கும் போது அதன் எடை இரண்டு மடங்காக அதிகரிக்கிறது. அதன் அளவு பாதியாக குறைந்து விடுகிறது. அதாவது ஆறடி இருக்கும் ஒரு மனிதன் ஒளியின் வேகத்தில் பிரயானித்தால் மூன்று அடியாக மாறிவிடுகிறான் என்கிறார்.



ஒளியின் வேகத்தில் பிரயாணிப்பதால் காலக்கட்டுப்பாட்டை அவர் கடந்து விடுகிறார் என்றும் கூறுகிறார். ஒளியைத் தவிற வேறு எந்த ஊடகமும் ப்ரபஞ்சத்தில் தடையற்ற முறையில் பறக்க முடியாது என்பதாலும், ஒளியின் வேகத்தில் இப்படிப்பட்ட மாறுதல்கள் உண்டாவதாலும் அதன் வேகம் பூமியின் சுழற்சிதிசையிலும், அதன் எதிர் திசையிலும் மாறாமல் இருப்பதாக குறிப்பிடுகிறார். ஆராய்ச்சிக் கூடத்தில் அனுத்துகள்களைக் கொண்டு இதை ஆராய்ச்சி செய்து சக விஞ்ஞானிகள் மத்தியில் நிரூபித்தும் காண்பித்தார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ஸ்பெஷல் ரெலேட்டிவிட்டி தியரி ஆங்கிலத்தில் இங்கே

சரி அனுமார் சஞ்சீவி மலையைத் தூக்கிக்கொண்டு பறந்ததற்கும் இந்த ஒளியின் வேகத்தில் பிரயாணிக்கும் போது ஏற்படும் பொருளின் மாற்றத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. ஒரு கற்பனை ஒப்பீடு.

அனுமார் சஞ்சீவி மலையை கொண்டுவர கிளம்பும் முன் தனது உடலை பல மடங்குப் பெரிதாக ஆக்கிக் கொள்கிறார். பிறகு ஒளியின் வேகத்தில் அவர் பறக்கிறார். இப்போது அவரது உடலில் ஏற்படப்போகும் மாற்றம் என்ன?

ஏற்கனவே மலைபோல உருவமும் அதற்கேற்ற எடையும் கொண்ட வடிவெடுத்திருக்கும் அனுமார் தன்னுடைய சம எடையுள்ள மலையை கையில் தாங்கிக் கொள்கிறார். பின்னர் ஒளியின் வேகத்தில் அவர் பறக்கிறார் என்று கொண்டால், இப்போது அனுமாரின் எடை இரண்டு மடங்காகி விடுகிறது. அதாவது சஞ்சீவி மலை அவரது எடையில் பாதி. ஆக தனது எடையில் பாதியாக போய்விட்ட சஞ்சீவிமலை அனுமாருக்கு இப்போது கனமில்லை தானே!

மேலும் ஒளியின் வேகத்தில் வரும்போது உருவம் பாதியாகி விடுவதால் பெரிய மலையை தலைக்கு மேல் தூக்கிக் கொள்ள வசதியாகி விடுகிறது. இல்லை யென்றால் சம அளவு பெரிய உருவத்தை கையில் பிடிக்க வசதி இருக்காதே! மேலும் ஒளியின் வேகத்தில் பறப்பதால் காலத்தின் கட்டுப்பாட்டையும் உடைத்தெரிந்து விடுவதால் அவர் நினைத்த வினாடிகளில் ராமரை அடைந்து ராம லக்ஷ்மனரைக் காப்பாற்றி விடுகிறார்.

இப்படி ப்ரபஞ்சத்தின் கால அளவைகளுக்குள் கட்டுப்பட்டும் அறிவியலின் நிரூபிக்கப்பட்ட சித்தாந்ததுக்குள்ளேயே இந்த கதாபாத்திரம் செயல் பட்டிருப்பதால் அனுமார் சஞ்சீவி மலையையே தூக்கிக்கொண்டு பறந்து வந்திருக்க வாய்ப்பிருப்பது சாத்தியமே என்று என்னத் தோன்றுகிறது. ஆக ஒரு மலையைத் தூக்க முடியுமா அல்லது இப்படி தூக்கிக் கொண்டு ஏ பி டி பார்சல் சர்வீஸ் படத்திலிருப்பது போல பறக்கத்தான் முடியுமா? இது ஒரு கட்டுக்கதை. மாயாஜாலம் என்று கூறுபவர்களுக்கு... ஒளியின் வேகத்தில் பறந்து பாருங்கள்...ஐன்ஸ்டீனின் கூற்றுப்படி சாத்தியமே!



தற்காலத்தில் கூட ப்ரானனைக் கட்டுப்படுத்தி புவியீர்ப்பு விசையிலிருந்து விடுபடக் கற்றுக்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவில் பறந்து காட்டி இருக்கிறார்கள். எந்த உபகரனமும் இல்லாமல் மனிதனால் உடலோடு பறக்கமுடியும் என்பது வரை இந்தக் காலத்திலும் கூட நிரூபிக்கப்பட்ட ஒன்றே. அதை டூப் என்று சொல்ல முடியாது. ஆனால் ஒளியின் வேகத்தில் பிரயானிக்கும் அளவிற்கு பயிற்சியெடுத்தவர் யாரும் இல்லை. அப்படி பிரயானித்தால் அப்போது அவர் பெயர் அனுமார்.

இப்படி இந்து தர்மத்தின் பல இதிகாச கதாபாத்திரங்கள் அறிவியல் மற்றும் மனோவியல் சூட்சமங்களோடு ஒத்துப் போகும் தன்மை கொண்டவையாகவே இருந்திருக்கிறது எனலாம்.

ஆகவே தான் சொல்கிறேன் இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.

Wednesday, March 10, 2010

ஜாதி புத்தி! அல்லது, குல தர்மம்!




ஒருவர் தன் சக மனிதரிடம் மிகவும் அநாகரீகமாக நடந்து கொள்கிறான். முகம்
சுளிக்குமாறும் கோபமூட்டும் படியும் நடந்து கொள்கிறான். இவன் தொல்லை தாங்காத அந்த மனிதன் அவன் போனவுடன் அவனைப் பற்றி சொல்லப்போகும் முதல் அர்ச்சனை என்னவாக இருக்கும்? "அவன் ஜாதி புத்திய காமிச்சிட்டான் பாத்தியா!"

துரோகம் செய்பவரை, ஏமாற்றுபவரை, ஒழுக்ககேடாக நடந்து கொள்பவர்களையெல்லாம்
பலரும் இவ்வாறு பேசியிருக்கக் கூடும். "அந்த ஜாதிப்பய அவன் புத்தியைக் காமிக்க தானே செய்வான்" என்பார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் எல்லா ஜாதிக்காரர்களும் பிற ஜாதிக்காரர்களை அவ்வாறே கூறுவார்கள். யாரும் யாரையும் விட்டு வைப்பதில்லை.

இதிலிருந்து என்ன தெரிகிறது. மரபு வழியாகவே எல்லா மனிதர்களும் இன ரீதியான ஒரு தனிப்பட்ட குணத்தைக் கொண்டிருப்பார்கள் என்று எல்லோருமே நம்புகிறோம். இதில் யாருக்கும் விதிவிலக்கு அளிப்பதில்லை.

இது நிஜமா? இப்படி ஒவ்வொரு மனிதர்களுக்கும் அவர்கள் இனம் சார்ந்த குணம்
இருக்குமா?

இது மனோவியல் ரீதியான ஒரு விஷயம். பொதுவாக மனிதர்கள் குழுக்குழுவாக. வாழும் தன்மையைப் பெற்றவன் என்பதை நாம் அறிவோம். குடும்பமும் ஒரு குழுவே. வாழிடம், மொழி, பழக்க வழக்கங்கள் சார்ந்து ஒன்றாகக் கூடி வாழ்வதும் ஒரு குழு வாழ்க்கையே!

இப்படிக் குழுவாக வாழும் போது மனிதர்கள் தங்களுக்கு என்று ஒரு தனி பழக்க வழக்கங்களையும், வாழும் முறைகளையும் வகுத்துக் கொள்வது இயல்பு. உதாரணமாக சிலர் "இது எங்கள் குடும்ப வழக்கம்" என்று சொல்வதைப் பார்த்திருப்போம். ஒரு குழுவாக ஆன பின்னர் அவர்களுக்கென்று சில விதிமுறைகளை வகுத்துக் கொள்ளுதலும் மனிதர்களின் இயல்பான குணமாக இருக்கிறது.

நாம் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அந்த
நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் சில நியதிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று
விதிகளை வைத்திருப்பார்கள். அதுவும் ஒரு குழு உணர்வே. நாம் எந்த குழுவைச்
சார்ந்து இருக்கிறோமோ அந்த குழுவிற்கென்று இருக்கும் சில கட்டுப்பாடுகளையோ
விதிகளையோ கடைபிடிக்க வேண்டும் என்பது மரபாகவே இருக்கிறது.

இந்த உலகத்தின் எந்த மூலையில் வாழும் மனிதருக்கும் ஒரே மாதிரியாக குழு
உணர்வு தான் இருக்கும். மனோவியல் ரீதியாகவே சில வகை உணர்வுகள் மனிதர்களுக்கு
ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அதனாலேயே எந்த மூலையில் எந்த
நிறத்தில், எந்த மொழியில் வாழும் மனிதர்களாக இருந்தாலும் பொதுவான
மனோவியல் ஒன்றாக இருப்பதாலேயே இன்றைக்கு உலகம் ஒரே குடையின் கீழ்
ஒன்றி வாழ்தல் அதாவது 'குளோபளைசேஷன்' என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில்
ஒரே சமூகமாக வாழ முடிகிறது.

ஆக குழுவும் குழுவின் அடிப்படையிலான குணமும் குழுவினரின் ஒத்த சிந்தனையின் அடிப்படையில் உருவாகிறது. குழுக்களின் அமைவிடம் மற்றும் குழுவாக இனைந்தவர்களின் நோக்கத்தைப் பொறுத்தும் குணம் மாறுவதும் இவ்வாறே உருவாகிறது.

இதையே அந்நாட்களின் குல தர்மம் என்று அழைத்தனர். இதுவும் ஜாதி
அல்லது வர்ண ரீதியாக அறியப்படுவது அல்ல. பண்டைய காலங்களில் மக்கள்
தர்மத்தை வலியுறுத்தி வாழ்ந்தனர். ஒவ்வொரு குழுவும் தங்களுக்கென்று
உயர்ந்த தர்மங்களை வகுத்து வாழ்ந்தனர். எனவே அவை குல தர்மம் என்று அழைக்கப்பட்டது.

இன்றைய காலத்தைப் போல் ஜாதி புத்தி என்று தீய விஷயங்களுக்கு மட்டும் பேசப்படுவதாய் அவை இருந்ததில்லை.

இதையே திருவள்ளுவர் இவ்வாறு கூறுகிறார்.



"நிலத்துஇயல்பான் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்பது ஆகும் அறிவு."

"நிலத்தின் தன்மையால், அதிற் சேர்ந்த நீரின் தன்மை மாறுபடும். அவ்வாறே, மாந்தர்க்கும் அவரவர் சேர்ந்த இனத்தின் தன்மைப் படியே அறிவும் ஆகும்" என்கிறார் வள்ளுவர்.

மேலும் ஒரு குறளில் இவ்வாறு எடுத்தியம்புகிறார் வள்ளுவப்பெருந்தகை..

"மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான்ஆம்
இன்னான் எனப்படும் சொல்"

அதாவது மனிதர்களின் உணர்ச்சி என்பது மனத்தின் தன்மையால் உண்டாவதாகும். அதேபோல் இவன் இன்னவன் என்று அறியப்படுவதும் அவனவன் சேர்ந்த இனத்தாலே உண்டாகும் என்கிறார்.

இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இது போன்ற இனத்தால் அறியப்படும் குணங்கள் எதுவும் பிறப்பின் அடிப்படையில் உண்டாவதில்லை. வாழும் வழிமுறைகளால் மனோவியல் ரீதியாக வழிவழியாகக் கடைபிடிக்கப்பட்டும் தர்மங்கள் ஆழ் மனதில் பதியப்பட்டுமே கடைபிடிக்கப்படுகிறது.

இன உணர்வு அல்லது குல தர்மம் என்பது பற்றி ஒரு விளக்கம் ராமாயணத்தில் அற்புதாமாக கூறப்படுகிறது.

சுக்ரீவனுக்கு சேதுக்கரையில் அமர்ந்து ராமன் ஒரு கதையைக் கூறுகிறார். ராமேஸ்வரத்தின் சேதுக்கரையில் நடந்த நிகழ்வாக இதைச் சொல்கிறார்கள் பெரியோர்கள்.

அந்தக் கதையை நாமும் கேட்போம்...




Sunday, November 22, 2009

லக்ஷ்மணன் சூர்பனகையின் மூக்கை வெட்டியது ஏன்?


ஒரு கைக்குழந்தை அழுது கொண்டிருந்தது. யார் யாரோ தூக்கி சமாதானம் செய்கிறார்கள். குழந்தை அழுகையை நிறுத்த வில்லை. அதன் தாய் வந்தாள். குழந்தையைத் தூக்கினாள். மார்போடு அனைத்துக் கொண்டாள். குழந்தை அழுகையை நிறுத்தியது.

ஒரு கைக்குழந்தைக்கு தன் தாய் இவள் தான் என்பதை எதை வைத்து தீர்மானிக்கிறது. அனைத்துக் கொள்ளும் தாயின் வாசனையும் அவள் உடலின் கதகதப்புமே முழுமுதற்காரணம்.

வாசனையை முகர்தல் என்பது ஒவ்வொரு ஜீவராசிக்கும் உரிய சூட்சமமான குணம். அந்த சூட்சம குணம் தான் மனிதன் சமூகத்தில் வாழ பல ரூபங்களில் உதவுகிறது.

இந்த முகர்தல் என்ற சூட்ஷம குணத்தில் லக்ஷ்மனன் கைவைக்கப் போய்தான் ராமாயணப் போரும் ராவண வதமும் உண்டானது எனலாம். அந்த சூட்ஷமத்தை கொஞ்சம் ஆய்வோம்.

ஸ்ரீ ராமரும் சீதாதேவியும் வனவாசத்தை மேற்கொண்டு வந்தனர். லக்ஷ்மனன் சகோதரனுக்கு உதவும் பொருட்டு அவர்களுக்கு பாதுகாப்பாக உடனிருந்து உதவி வந்தான்.

அப்போது அசுர குலத்தை அழிக்கவே அவர்களுடன் பிறந்தது போன்ற பெண்ணான சூர்ப்பனகை ராமர் இருக்கும் வனத்திற்கு வந்தாள். அவள் ராமரின் கட்டுடலும் அழகையும் கண்டு இப்படியொரு ஆண்மகனைப் பார்த்ததில்லை. இவனோடு கூடி நான் இன்பத்தை துய்த்தே தீருவேன் என்று உறுதி கொண்டு மனதிற்குள் எல்லையில்லா ஆனந்தத்துடன் ராமரை நோக்கி நடந்தாள். தன் உருவை மிக அழகான யுவதியாக ஆக்கிக் கொண்டாள்.

ஸ்ரீ ராமரிடம் சென்று தான் திருமணம் ஆகாத கன்னிப் பெண் என்று பொய்யைக் கூறி , தான் ராவணனின் தங்கை என்றும் ராமனை மணக்கும் ஆசையில் வந்திருப்பதாகவும் கூறினாள்.

இதைக் கேட்ட ஸ்ரீ ராமரோ 'பெண்ணே! நீ விச்சிரவசு என்ற பிராமணரின் மகள். நான் தசரத ராஜகுமாரன். ஒரு பிராமணரின் மகளை சத்ரிய அரசன் மணந்து கொள்ளக் கூடாது. அன்றியும் ராவணன் முதலிய உன் தமையனார்களின் அனுமதி இன்றி உன்னை நான் மணந்து கொள்வது பிழை. மேலும் நான் ஏற்கனவே மணமானவன். ஏக பத்தினி விரதம் பூண்டவனாக இருக்கிறேன். எனவே உன்னை மணப்பதென்பது என்னால் ஆகாது. நீ உனது எண்ணத்தை மாற்றிக்கொள். மனதில் அமைதி கொள். இங்கிருந்து சென்று விடு. உன் வருகை எங்களுக்கு துன்பம் உண்டாக்காதிருக்க வேண்டுமென விரும்புகிறேன்.' என்றார்.

அந்த நேரம் அங்கே சீதை வந்து கொண்டிருந்தாள். சீதையைப் பார்த்த சூர்ப்பனகையோ இவ்வளவு அழகு நிறைந்த பெண் மனைவியாக இருப்பதால் தானே ராமன் எண்ணை புறக்கனிக்கிறான் என்று எண்ணி சீதையை கொன்றால் இனி ராமன் தனக்குத்தான் என்று வேகமாகச் சென்று சீதையை கொல்ல முயற்சிக்கிறாள்.

நடக்கும் விஷயங்களைப் பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த லக்ஷ்மனன் தன் அன்னியாரான சீதாதேவியின் உயிருக்கு சூர்ப்பனகையால் ஆபத்து வந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்ட அடுத்த கனமே சூர்ப்பனகையின் முன் சென்று அவளைத் தடுத்து அவள் மூக்கை வெட்டி விடுகிறான். 'இனி ஒரு அடி எடுத்து வைத்தால் உன் தலை மன்னில் உருளும். பெண் என்பதால் எச்சரிக்கிறேன். போய் விடு' என்று அங்கிருந்து சூர்ப்பனகையை விரட்டி சீதையின் உயிரைக் காத்தான். அதற்குப் பின் ராவணன் கோபம் கொண்டு சீதையை கடத்தியதும் அனுமன் வந்ததும் இலங்கையில் போர் நடந்ததும் நமக்குப் பரிச்சியமானகதை தான்.

ஆனால் இவற்றில் முக்கியமாக கவனிக்கத்தக்கது லக்ஷ்மனன் கோபம் வந்த போது ஏன் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தான். ஒருவர் மீது கோபம் வந்தால் கையை வெட்டலாம், காலை வெட்டலாம் தலையை வெட்டலாம். ஆனாலும் அவ்வளவு கோபத்திலும் பதட்டத்திலும் கூட லக்ஷ்மனன் ஏன் சூர்ப்பனகையின் மூக்கை குறி பார்த்து வெட்ட வேண்டும். அதன் சூட்ஷமம் என்ன?

மேலும் பார்ப்போம். ஒரு புத்தகத்தில் வாசனையும் உணர்ச்சிகளும் என்ற தலைப்பில் இதைப் படித்தேன். நம் மூளையில் இருக்கும் Amygdala என்னும் ஒரு விசஷே பகுதி, நமக்குள் எழும் உணர்ச்சிகளை பதித்து வைத்து அவற்றை கட்டுப்படுத்துகிறது. நாம் சுவாசிக்கும்போது, நறுமன நுண்அணுக்கள் Amygdala வுக்கு நேரடியாக செல்வதால், நறுமணத்தால் ஏற்படும் உணர்ச்சிகள், மற்ற புலன்களை விட அதிக சக்தி வாய்ந்தாக கருதப்படுகிறது. Memory Triggers எனப்படும் இந்த நினைவு தூண்டல்களிலேயே, நறுமணத்தினால் ஏற்படும் உணர்வே அதிக தெளிவான, உணர்ச்சி பூர்வமான நினைவை உண்டு செய்பவை என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.நறுமண நுண் அணுக்களின் சமிக்ஞையால் ஏற்படும் இது போல உணர்வுகள் 'Proustian Phenomenon' என்று அழைக்கப்படுகிறது. இப்படி இன்னும் நிறைய சொல்லப்பட்டிருந்தது.

கொஞ்சம் புரியும் படியாக சில விஷயங்களைப் பார்ப்போம்.

நம் மூக்கில் எண்ணிலடங்கா வாசனை உணரும் நரம்புகள் உள்ளன. அவைகளின் மூலமாக நாம் உணரும் வாசனைகளுக்கும் நமது உணர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களுக்கும் நேரடித் தொடர்புகள் உண்டாகின்றன.

காம உணர்ச்சியைத் தூண்டுவதற்கு வாசனை முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஒரு ஆணோ பெண்ணொ ஒருவரை ஒருவர் வாசனையாலேயே முதலில் ஈர்க்கப்படுகிறார்கள். அதனால் உண்டாகும் தூண்டுதலே ஒருவர் மீது ஒருவர் மோகம் கொள்ளக் காரணமாகிவிடுகிறது. வாசனையை முகர்தல் காதலிலும் காமத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. உணர்ச்சித் தூண்டுதலுக்குக் காரணமாக இருக்கிறது.

இன்னும் சொல்லலாம். ஒருவர் எதிர்பாலினர் மீது காமுறும் பொழுது முதலில் சுறுசுறுப்படைவது
மூக்கின் நரம்புகளே. மூக்கின் நரம்புகள் விழிப்படைந்து முகர்தலுக்கு தயாராகிவிடுகிறது.
அந்த தயார் நிலையாலும் முகர்தலாலும் தூண்டப்பட்டு உயிர் உறுப்புகள் உறவுக்குத் தங்களைத்

ஒருவர் கோபம் கொள்ளும் போது மூக்கு விடைத்துக் கொள்ளும். சிவந்து போகும். கண்கள் விரிய குரல் உயர காது மடல்கள் சிவக்கச் சண்டை பொடுவார்கள். உணர்ச்சி வசப்பட்டு கோபப்படும் போதும் மூக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தக் கோபத்தால் சில நேரங்களில் அதுவே உடைந்து போய் ரத்தக்களரியாவது வேறுவிஷயம்.


உங்களுக்குத் தெரியுமா? சுவையின் எழுபத்தைந்து சதவீதத்தை வாசனை கொண்டே நாம் உணர்கிறோம். மூக்கை மூடிக்கொண்டு அதாவது சுவாசம் செய்யாமல் ஒரு பொருளை கடித்து முழுங்க்ப் பாருங்கள். அதன் சுவை என்னவென்று உங்களால் துல்லியாமாகச் சொல்ல முடியாது. வாசனையுடன் முகர்ந்து உண்ணும்பொழுதே உணவின் சுவையை முழுவதும் ருசிக்கிறோம். அனுபவிக்கிறோம். காரணம் மூக்கு.

ஞாபக சக்திக்கு பெரிதும் உதவுவது வாசனை உணரும் முகரும் சக்தியே ஆகும். உதாரணமாக ஒரு மலை சார்ந்த இடத்திற்குச் செல்கிறோம். அங்கே பூக்களும் , பச்சை பசேல் என்ற மரமும் செடி கொடிகளும் நிறைய இருக்கும். அதன் அழகை ரசிக்கிறோம். சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே இடத்திற்குச் செல்கிறோம். அங்கே ஓரிரு கட்டிடங்கள் வந்திருக்கும். நாம் ஏற்கனவே இங்கே வந்திருக்கிறோமா என்று நமக்குச் சந்தேகம் வந்துவிடும். காட்சிகள் நம்மை ஏமாற்றும். ஆனால் அந்த இடத்தில் நாம் உணரும் வாசனைதான் நமக்கு பழைய ஞாபங்களை மீட்டுக் கொண்டுவந்து நாம் ஏற்கனவே இங்கே வந்திருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தும். காரணம் மூக்கு.

சாமி கும்பிடும் போது ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவை ஏற்று வைத்து சாமி கும்பிடுவதன் காரணம் அந்த வாசனையை நாம் முகரும் போதெல்லாம் தெய்வீக உணர்வு நம் மனதில் குடி கொண்டு விடும். காரணம் மூக்கு.

எனது பாட்டி இறந்த அன்று அவர் அருகில் ஒரு ஊதுபத்தி ஏற்றி வைத்தார்கள். இன்றைக்கும் எங்காவது யார், வீட்டிலாவது அப்படி ஒரு வாசனை வந்தால் எனக்கு அந்த நாள் ஞாபகத்திற்கு வந்து விடும். இப்படி நினைவாற்றலுக்கும் வாசனை முகர்வுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. காரணம் மூக்கு.

ஒரு சில திரையரங்கில் ஏ சி மிஷினிலிருந்து குளிர்ந்த காற்றுடன் நல்ல வாசனை திரவியத்தை கலந்து அரங்கம் முழுவதும் நறுமணத்துடன் இருக்குமாறு பரவச்செய்வார்கள். அப்படி சில்லென்ற காற்றுடன் நல்ல வாசனையை நாம் நுகர்ந்தவுடன் மனம் அமைதியடைகிறது. ஒரு வித மகிழ்ச்சி கொள்கிறது. இன்பமாக படத்தை பார்க்கச் செய்கிறது. காரணம் மூக்கு. இந்த அனுபவம் யாருக்கேனும் இருக்கிறதா?

பெண்கள் தலையில் பூ வைத்துக் கொண்டு ஆண்களைக் கடந்து சென்றாலே அந்த வாசனை ஆண்களுக்கு ஒரு வித ஈர்ப்பை உண்டு பண்ணிவிடும். நமது கலாச்சாரத்தில் பெண்கள் தலையில் பூ வைத்துக் கொள்ளுதல் என்ற வழக்கம் முக்கியத்துவம் பெற்றதும் அப்படித்தான். தான் விரும்பும் ஆணை தன் மீது எப்போதும் மயக்கமுற்றிருக்கச் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்க்காகவே அவன் கையால் பூவாங்கி அவன் முகரும் வன்னம் தலையில் வைத்து அவன் முன்னேயே நடமாடுவர். ஒருவருக் கொருவர் காதல் பிணைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் அன்பும் குதூகலமும் பெருகும். காரணம் மூக்கு.

இப்படி மூக்கு ஒரு வாசனையை நாம் எந்த நேரத்தில் எந்த இடத்தில் எந்த சூழ்நிலையில் முகர்ந்தோம் என்பதை ஆழ்மனதில் பதியச்செய்து விடுகிறது.

இவ்வாறு காமம், கோபம், இன்பம், மகிழ்ச்சி என உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கும் தூண்டப்பட்ட உணர்ச்சியால் வீரியமாக செயல் பட வைப்பதற்கும் மூக்கு பெரும் பங்கு வகிப்பதாலோ என்னவோ லக்ஷ்மனன் சூர்ப்பனகையின் மூக்கைப் பதம் பார்த்திருக்கிறார்.

ராமனின் மீது ஆசை கொள்வதற்கும், காமத்தின் உந்துதலினால் சீதையை கொல்ல முயன்றதற்கும் இவளது உணர்ச்சியைத் தூண்டும் மூக்கே காரணம் என்று மூக்கை வெட்டியிருக்கிறார் லக்ஷ்மனன். பாவம் மூக்கு.

ஆக லக்ஷ்மனன் உளவியல் மற்றும் உடலியல் பற்றி நல்ல அறிவு பெற்றவராக
இருந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை யோசிக்க வேண்டும். ராமாயணம் போன்ற இதிகாசங்கள் யாரோ ஒருவரால் எழுதப்பட்ட கற்பனைக் கதை யென்றால் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதன் நடவடிக்கைகளின் சூட்ஷமத்தை யெல்லாம் இவ்வளவு டீட்டெயிலாக யோசித்து எழுதிக் கொண்டிருந்திருப்பாரேயானால் வாழ்க்கையே முடிந்துவிடும்.

எனவே ராமாயணம் நடந்த நிகழ்ச்சியாகவே இருக்க வேண்டும் என்பதற்கு உளவியல், உடலியல் மற்றும் புவியில் சார்ந்த பல காரணிகள் சாதகமாகவே இருப்பதை நாம் உணரலாம்.

ஆகவே இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் பகுத்தறிவும் ஆகும்.

Sunday, October 4, 2009

கலாச்சாரத்தை அழிக்கும் நாகரீக மாற்றமும், முறையற்ற உறவுகளும்! - 2

தன் ஒழுக்கத்திலிருந்து தவறாமலும் கற்பு குறையாமல் வாழ்ந்தும் தன் கணவனையும் அன்புடன் நடத்தி இல்லறத்தைக் காப்பதில் சோர்வு அடையாதவளே பெண் என்று எடுத்துரைக்கிறார் வள்ளுவப்பெருந்தகை.

இவ்வாறு பெரியோர்களால் வகுக்கப்பட்ட வழிமுறைகளின் மூலம் நம் சமூக மக்கள் சிறந்த கலாச்சாரத்துடன் வாழ்ந்து வந்தனர். வள்ளுவர் இப்படி ராவாக சொல்லியிருக்கும் விஷயங்களை மனதில் பதியும் மசாலாக்களுடன் கூடிய கதைகளாச் சொல்லியும் இதிகாசங்கள் மூலமும் மக்களின் ஆழ்மனதில் பதியச்செய்கின்றனர் நம் முன்னோர்கள். அவ்வாறு ஆயிரக்கணக்கான வருடங்களாக சொல்லப்பட்டுவரும் இதிகாசமே ராமாயணம்.

மனிதர்கள் மத்தியில் நடக்கும் குற்றங்கள் பெண்ணுக்காக அல்லது பொருளுக்காக மட்டுமே நடக்கிறது. இதை மீறி குற்றங்களுக்கு வேறு காரணங்களை பொதுவாக பார்க்க முடியாது. மனிதப் பெருங்கூட்டத்தின் முக்கியக் குற்றங்களை உண்டாக்கும் இவ்விரு உணர்வுகளுக்கும் ஒரு கட்டுப்பாட்டை ஆழ்மனதில் பதிய வைத்தால் சமூகம் அமைதியாக இருக்கும் என்பதன் காரணமாகவே இவற்றை மூலக்கதையாகக் கொண்ட ராமாயணமும் மகாபாரதமும் காலங்காலமாக மக்களுக்கு போதிக்கப்பட்டு வருகிறது.

பிறன் மனைவி நோக்காப் பேராண்மையாளனாக ராமனையும், கற்புக்குச் சிறந்தவளாக சீதையும் கதாநாயகன் கதாநாயகியாக நமக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்தோர்களாக எடுத்துச் சொல்லி அது போல் வாழவேண்டும் என்று மக்கள் மனதில் ஆழப்பதியச் செய்கின்றனர். தற்காலத்தில் இளம் வயதினரை ஈர்க்கும் மனிதர்கள் சினிமா கதாநாயகனும் கதாநாயகியரும்தான். அவர்களுடைய நடை உடை பாவனைகளால் கவரப்படுபவர்கள் அவர்களைப் போலவே தங்களை பாவித்து வாழத்துவங்குவதை பார்த்திருப்போம். ஒரு படத்தைப் பார்க்கும் போது ஆண்கள் அந்தப்படத்தின் கதாநாயகனாக தன்னையே உருவகித்துப் பார்க்கிறான். பெண்கள் கதாநாயகிகளை உள்வாங்குகிறார்கள். காதல் காட்சியில் கதாநாயகனும் கதாநாயகியும் எப்படி நடந்து கொள்வார்களோ அப்படியே வெளியே உள்ள மனிதர்களின் வெளிப்பாடும் அது போன்ற தருணங்களில் காட்சியளிப்பதை பார்க்க முடியும்.

இப்படி தங்களை பாதிக்கும் கதாநாயகனும் நாயகியும் ஏக பத்தினி விரதத்தைக் கொண்டவனாக இருந்தால், கதாநாயகி கற்புக்கரசியாக காட்சியளித்தால் இவர்களை உதாரணமாக வைத்து தாமும் வாழவேண்டும் என்று எண்ணுபவர்கள் உண்டாவார்கள். ராமனைப் போல ஆண்களும் சீதையைப் போல பெண்களும் வாழ்வதே சிறந்த உயர்ந்த வாழ்க்கை என்று அழுத்தமாகச் சொல்லப்பட்டது. கேட்பவர்களும் அத்தகைய உயர்ந்த வாழ்க்கை வாழ்பவர்களாக தானும் இருக்கவேண்டும் என்ற உத்வேகம் கொள்வார்கள்.

ராமாயணத்திலிருந்து சில துளிகளை இப்போது பார்க்கலாம்...


சீதையை அடைய பல முயற்சிகள் செய்யும் ராவணனிடம் ஒரு யோசனை சொல்லப்பட்டது. நீ ராமனாகவே சென்று அவள் முன் நின்றால் அவள் ஏமாந்து உன்னிடம் வந்து விடுவாள் என்றார்கள். அதற்கு ராவணன் சொன்னான் "எவ்வளவோ செய்த எனக்கு இதைச் செய்ய முடியாதா? நானும் ராமனாக உருமாறிப்பார்த்தேன். ஆனால் நான் எப்போது ராமனாக மாறினேனோ அப்போதே அடுத்தவர் மனைவிமீது ஆசைப்படும் எண்ணம் எனக்குத் தோன்றவே இல்லை. எனக்கு சீதை மீது ஆசையே வரவில்லையே! நான் என்ன செய்ய?" என்று புலம்பினான்.

அதாவது பிறன் மனை நோக்கும் இச்சை கொண்டவனே ராமனாக ஆனவுடன் அந்த ஆசை அற்றுப் போனது என்று சொல்லுமளவிற்கு ராமனின் ஏக பத்தினி விரதம் போற்றிச் சொல்லப்பட்டது. அவ்வாறு வாழ்வதே ஆண்களுக்குச் சிறப்பு என்றும் போதிக்கப் பட்டது. பின்னால் நாகரீகத்தைப் போற்றியவர்கள் என்ன செய்தார்கள்? ராமாயணம் மூட நம்பிக்கை என்றார்கள். ராமன் இன்ஜினியரா? அவன் தான் பாலம் கட்டினானா? என்றார்கள்.

ராமாயனத்திற்கு ஆதாரம் இல்லை என்று அறிவியல் கொண்டு ஆனியடித்தார்கள். இப்படி சிதைத்தவர்கள் ராம நம்பிக்கையைச் சிதைக்கவில்லை. அவர்கள் சிதைக்க முயற்சித்தது ராமனாக வாழ முடியும் என்கிற கலாச்சார நம்பிக்கையை. இப்படி நாகரீகம் கலாச்சாரத்தின் அடிமரத்தை வெட்டிக்கொண்டே இருந்தது. மேலை நாட்டு நாகரீகமே சிறந்தது என்றும் பெருமை பேசப்பட்டது.

கமலஹாஸன் போன்றவர்கள் திருமனத்தை முட்டள் தனம் என்று தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கிறார். நான் மலை மேலிருந்து நீங்களும் அப்படிச் செய்யுங்கள் என்று சொல்லவில்லை அது என்கருத்து என்றும் மற்றொரு தொலைக்காட்சியில் உளருகிறார். இவர் பிரசாரம் செய்யவில்லை என்றாலும் இவர் பேசுவது மலை மேல் நின்று பேசுவது போல் பரவும் என்பது இவருக்குத் தெரியாதா என்ன? ஆனாலும் மேலை நாட்டு நாகரீகத்தை இவர்கள் பரப்பி இந்திய கலாச்சாரத்தை முட்டாள் தனம் என்று தூற்றுவதை நிறுத்து வதில்லை.

ராமாயனத்தில் பெண்ணின் உயர்வைக்காட்டும் இன்னொரு இடம்..

காட்டில் சீதைக்காக மான் பிடிக்கச் சென்ற ராமன் வெகுநாரம் ஆகியும் திரும்பவில்லை. சீதை கவலையில் ஆழ்ந்தாள். அப்போது மாரீச்சனின் கபடக்குரல் ராமனின் குரலாகக் கேட்டது. "லக்ஷ்மனா...காப்பாற்று...!! லக்ஷ்மனா...காப்பாற்று...!!" என்று. இந்தக் குரலைக் கேட்ட சீதை கலங்கினாள்.

தன் கணவருக்கு ஏதோ ஆகிவிட்டது என்று பதறினாள். உடனே சீதை லக்ஷனனைப் பார்த்து என்னவென்று கண்டுவரச் சொன்னாள். ஆனால் லஷ்மனனோ "அபயக்குரல் எழுப்பும் அளவிற்கு அண்ணன் ராமன் கோழையல்ல. அப்படி ஒரு ஆபத்து தன் அண்ணனைச் சூழப்போவதும் இல்லை அதனால் கலங்காமல் இருங்கள் என்று தாய் சீதையிடம் எடுத்துரைக்கிறார். தாயே என்று கூறி அழைக்கும் லக்ஷ்மனனை சீதை கோபமாகப் பார்க்கிறாள். "என் கணவருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஆகிவிட்டால், நீ என்னை அடையலாம் என்று எண்ணுகிறாயா?" என்று சற்றும் எதிர் பார்க்காத வகையில் கேட்டுவிட லக்ஷ்மனன் உடனே ராமனைத் தேடி புறப்பட்டு விடுகிறான். பிறகு நடந்த கடத்தல் கதை நமக்குத் தெரியும்.

ஆனால் இங்கே உணர்த்தப்படுவது என்ன? கணவர் இல்லாத போது உடனிருப்பது அவரது தம்பியாக இருந்தாலும் அவன் நல்லவனாகவே இருந்தாலும் தனது கற்பைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்பதே ஒரு பெண்ணின் முதல் நினைவாக இருக்கவேண்டும் என்பதும் அதுவே தனது கணவனுக்கு உண்மையாக இருப்பதாகும் என்பதும் உணர்த்தப்படுகிறது. Perception என்று சொல்வார்களே அதுதான்.

நாகரீகம் என்ற மாயத்தோற்றத்தில் மக்கள் சிக்கித் தவிக்கும் இந்தக்காலத்தில் அப்படி Perception னுடன் நடந்து கொள்ளும் பெண்கள் எத்தனை பேர். ஆணும் பெண்ணும் நண்பர்கள் என்ற நாகரீகம் இன்று கணவனுக்கும் மற்றவனுக்கும் வித்தியாசம் இல்லாமல் செய்து விட்டது. படுக்கை அரையைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர வேறு வித்தியாசமில்லை என்னுமளவிற்கு எல்லோருடனும் பெண்கள் ஒரே மாதிரியாகப் பழகுவதை சகஜமாகவே பார்க்க முடிகிறது. நாகரீகம் என்ற பெயரில் சீதையாக வாழ்வது பழம்பஞ்சாங்க நிலையென எள்ளி நகையாடப்படுகிறது. இந்த நிலை தான் தவறான உறவுக்கு அஸ்திவாரமாக அமைகிறது.

பெண்களும் தன்னுடன் பழகும் ஆண்களில் யாருடைய உள்நோக்கம் என்னவென்று தெரியாமல் சீதைக்கு இருந்த அந்த Perception இல்லாமல் பழகி தவறான உறவில் விழுந்து விடுகின்றனர். ஆணும் பெண்ணும் நண்பர்கள் என்பது நீண்டநாள் நீடிக்காது. காதல் அல்லது காமத்தில் விழாமல் ஆணும் பெண்ணும் பழக முடியாது என்பதே உண்மை. ஆனால் கலாச்சாரத்தின் ஆணிவேரை அசைத்துப் பார்ப்பதே வேலையாகக் கொண்ட பலர் இந்த நட்பு நாகரீகத்தைப் பரப்பினார்கள். திரைப்படங்களும் ஆணும் பெண்ணும் நண்பர்களாக பழக முடியும் என்று முழு பூசனிக்காயை சோற்றில் மறைத்து பணம் சம்பாதித்தது. பஞ்சும் நெருப்பும் பக்கத்திலிருக்கலாம் பற்றிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றனர். பூனையும் எலியும் ஒன்றாய் உறங்கலாம் பூனை எலியைக் கடிக்காது என்றனர்.


பெற்றோராக இருக்கும் நடுத்தர வயதுக்காரர்கள் இதை அப்படியே நம்பி விட்டார்கள். இதனால் தன் வீட்டுப் பெண்பிள்ளைகள் ஆண்களுடன் மணிக்கனக்கில் தொலைபேசுவதை கண்டுகொள்ளாமல் இருந்தனர். அதை தவறு என்று சுட்டிக்காட்டும் பெற்றோர்கள் புழு பூச்சி போல பார்க்கப்பட்டனர். நாகரீகம் தெரியாத காட்டுமிராண்டிகளாக கண்டிக்கப்பட்டனர். பெண்ணை அடிமைப்படுத்துவதாக சித்தரித்தனர். போதாக்குறைக்கு பெண்ணியம் என்ற பூதம் வேறு கிளம்பி கலாச்சார கட்டுக்கோப்பை புரட்டிப்போட்டது. இந்த பெண்ணிய பூதத்தால் சமூக கட்டுபாடுகள் சின்னாபின்னப் படுத்தப்படுகின்றன. தான் செய்வதெல்லாம் சரி, ஆண் செய்வது மட்டும் தான் தவறு என்பது பெண்ணிய சித்தாந்தம்.

ஆண்களின் நிலைமை அதுவும் கணவன்மார்களின் நிலைமை மிகவும் பரித்தாபத்திற்குரிய்தாக மாறிப்போனது. தனக்கென்று ஒரு பெண்ணை கல்யாணம் செய்து அவளை தனக்காக தக்கவைத்துக் கொள்வதற்குள் போதும் போதும் என்றானது ஆண்மகனுக்கு. வேறு ஆண்மகனிடம் மனைவி எவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தாலும் யார் அவன் என்ற கேள்வியைக் கேட்கவே பயப்படும் ஆண்கள் தான் பலர். எங்கே தான் சந்தேகப்படுவதாக பெண்டாட்டி நினைத்துவிட்டால் குடும்ப உறவில் விரிசல் வந்து விடுமோ என்று அச்சப்பட வேண்டியுள்ளது. மீறி கேள்வி கேட்டு ஏன் இவ்வளவு நேரம் பேசுகிறாய்? இதையெல்லாம் அலுவலகத்திலேயே பேசி முடித்துவிட வேண்டியது தானே என்று கேட்டுவிட்டால் போதும். அன்று முதல் அவனுக்கு வீட்டில் மரியாதை போச்சு. நாகரீகத்தின் விளைவு.

அதுமட்டுமா? பெண்ணியப் பேச்சாளர்கள் கற்பு என்ன கடைச்சரக்கா? என்னவிலை என்றெல்லாம் கேள்வி கேட்டார்கள். குஷ்பு போன்ற நடிகைகள் கற்பு பற்றி விமர்சித்து கண்டனங்கள் எதிர்கொண்டதும் நமக்குத் தெரிந்ததே.
அதுமட்டுமா? உச்ச நீதிமன்றத்தின் ஓரினச்சேர்க்கை பற்றிய தீர்ப்பை குஷ்பு
வரவேற்றார். இவர்களைப் போன்றவர்கள் தறிகெட்ட வாழ்க்கைக்கு அச்சாரம்
தேடி அலைகிறார்கள் அல்லது அடுத்த தலைமுறையை சீரழிவுப்பாதைக்கு தள்ளி விடப்பார்க்கிறார்கள் என்பதே உண்மை.

சினிமாக்களிலும் சீரியல்களிலும் சந்தேகப்படும் ஆண்கள் அவமானப் படுத்தப்படுவார்கள். "சீ, கட்டின பொண்டாட்டியை சந்தேகப்படுகிறாயே நீயெல்லாம் ஒரு ஆம்பளையா" என்று வசனம் வைப்பார்கள். பின்ன பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டியையா சந்தேகப்பட முடியும்? ஒரு பெண்ணுக்கு மூன்று நான்கு ஆண் நண்பர்கள் இருப்பது சகஜம் என்பது இன்றைய நாகரீகப் பெண்களின் நிலையாக ஆகிப்போனது. ஆண் பெண் நட்பு நல்லது என்று பிரசாரம் செய்தவர்கள் அதன் அளவு கோலைப் பிரசாரம் செய்ய மறந்து விட்டனர். மாறாக ஆணோடு ஆணும் பழகுவதைப்போலவே பெண்ணோடு பெண் பழகுவதைப் போலவே ஆணும் பெண்ணும் பழகலாம் என்றே உசுப்பிவிட்டனர். விளைவு கேவலமான பத்திரிக்கைச் செய்திகள் நாறும் அளவிற்கு இன்றைய குடும்ப கலாச்சாரம் சீரழிந்து போய்விட்டது.

பொது இடங்களில் ஆண்களுக்கும் மனக்கட்டுப்பாடு கட்டாயம் தேவை. அலுவலகத்திலோ அல்லது பிற இடங்களிலோ திருமணமான பெண்ணிடம் பேசுகிறோம் என்று தெரிந்தும் தேவையில்லாமல் வலிய போய் சிரித்து பேசி அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வேலையை செய்வது கண்டிக்கத்தக்கது.
தனக்கு உரிமை இல்லாத அதுவும் மணமான பெண்களின் உடை மற்றும் அழகை வர்ணித்தோ அல்லது இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையிலோ பேசுவது நாகரீகமற்ற செயல் என்பதை ஆண்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் ராமனைப் போல வாழ்வதின் சிறப்பை மனதில் ஆழ்ப் பதிந்து கொள்ள வேண்டும்.
மணமான பெண்ணிடம் வழியும் ஆண்கள் தன் மனைவியிடம் வேறொருவர் அவ்வாறு நடந்தால் நம்மால் பொறுத்துக் கொள்ள முடியுமா என்பதை ஒரு கணம் சிந்தித்து வேறொரு ஆணின் வாழ்க்கையில் குறுக்கிடக்கூடாது என்பதை கண்டிப்பாக மனதில் வைத்து விலகியிருக்க வேண்டும்


தொழிலதிபராக இருக்கும் ஒரு மதிப்பிற்குரிய பெண்மணியிடம் இந்த ஆண்பெண் நட்பு நாகரீகத்தில் எது அளவு என்றும் நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தேன்.

அவர் வரிசையாக சில விஷயங்களை அடுக்கினார்.

1. கணவனைத் தவிற வேறு ஆண்களிடம் தொலை பேசினால் குறைந்த பட்சம் பத்து நிமிடங்களுக்கு மேல் பேசக்கூடாது.

2. அப்பா அண்ணன் தம்பி கணவனைத் தவிற மற்றவர்களிடம் என்ன சாப்பிட்டேன், எப்போது தூங்கினேன், என்ன உடை போட்டிருக்கிறேன் என்றெல்லாம் கதை பேசக்கூடாது.

3. பிற ஆண்களிடம் பேசும் போது என்ன விஷயமோ அதை மட்டும் பேசிவிட்டு பேச்சை முடித்துக் கொள்ள வேண்டும்.

4. அலுவலகத்தில் கூடவே பணிபுரிபவனாக இருந்தாலும் நல்லவனாகவே இருந்தாலும் அலுவல் தவிற வேறு பேச்சு வைத்துக் கொள்வது கூடாது.

5. ஆணுக்கு ஆணும், பெண்ணுக்குப் பெண்ணும் தங்களுக்கென்று கருத்துப் பரிமாற்றத்திற்கு அவர்களுக்குள்ளேயே நல்ல நண்பர்களைக் கொண்டிருப்பது எதிர்பாலரிடம் வசப்படுவதை தடுக்கும்.

6. அப்பா அண்ணன் தம்பியைத் தவிற மற்ற ஆண்களை கணவர் இருக்கும் போது மட்டுமே வீட்டில் சந்திக்க அனுமதிக்க வேண்டும். அலுவலக நண்பர்கள், கணவரின் நண்பர்கள் என்று யார் வீட்டுக்கு வந்தாலும் கணவர் இருக்கும் போது மட்டுமே வீட்டுக்குள் அனுமதித்து பேச வேண்டும். அவ்வாறு நடந்து கொள்வது பெண்ணுக்கும் பாதுகாப்பு, ஜொள் விட நினைக்கும் ஆண்களின் எண்ணத்தையும் அது தடுக்கும்.

7. உடல் அங்கங்களை அப்பட்டமாகக் காட்டும் இறுக்கமான ஆடைகளை குழந்தைகளுக்குத் தாயான பின்னும் ஒரு பெண் அணிந்துகொண்டு அலுவலகங்களுக்குச் செல்வது மற்ற ஆண்களைக் கவர்ந்திழுக்கவே வழி செய்யும். அந்தப் பெண் இரு குழந்தைக்குத் தாய் என்ற எண்ணம் வராது. அதனால் மரியாதையை ஏற்படுத்தும் வகையிலான ஆடைகளையே அணிய வேண்டும். இன்றைய நாகரீகப் பெண்கள் இவற்றைச் கவனிப்பதில் அக்கரை காட்டுவதில்லை.

இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போனார், விஷயம் இவ்வளவுதான். ஊசி இடம் கொடுத்தால் தான் நூல் நுழையும் என்பதே அவரது இறுதியான வாக்கியம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக நம் சமூகத்தில் பெரும்பாலும் பெண்களே குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்வதால் தவறிழைக்க நினைக்கும் பெண்களுக்கு அதுவே உடலுறவுச் சுதந்திரத்தைக் கொடுத்து விடுகிறது. காமத்தைத் தேடத்துவங்கும் வாலிபர்களுக்கும் நடுத்தர அல்லது வயோதிகப் பெண்களுக்கும் இடையிலான முறையற்ற உறவுகள் பற்றிய செய்திகளே அதிகம் காணப்படுகிறது. செய்திகளில் கண்டது ஒரு சோறு பதம் என்ற நிலையே. எனவே கையில் சுதந்திரம் கொடுக்கப்பட்டதால் அதைக் குடும்பத்திற்க்காக மட்டுமே என்று காப்பாற்றிக் கொள்ளும் பொறுப்பு பெண்களுடையது தான் என்பதை பெண்கள் தான் நினைவில் கொள்ள வேண்டும். கணவன் பெண்டாட்டியைக் காப்பாற்றிக் கொள்ளும் வேலையையே செய்யவேண்டியிருந்தால் அவன் பணம் சம்பாதிப்பது எப்படி.

கணவன் இல்லாத நேரத்தில் சபலம் கொள்ளும் பெண்களே, உங்கள் கணவன்மார்கள் உங்களைக் காக்கும் பொருட்டே வீட்டிற்கு வெளியே உயிரைக் கொடுத்து உழைத்துக் கொண்டிருக்கிறான் என்று ஒரு கனம் நினையுங்கள்.

அப்படியானால் ஆண்கள் ராமனாக இருக்கமாட்டார்கள், பெண்கள் மட்டும் சீதையாகவே இருக்கவேண்டுமா என்று அங்கலாய்க்கும் பெண்கள் இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் சுருக்கமாக ஒன்றைச் சொல்ல முடியும். இன்றைய இந்திய பீனல் கோட் இருக்கிறதே அது பெண்களுக்காகத்தானே ஒழிய ஆண்களுக்காக இல்லை.

பேருந்தில் பயணம் செய்யும் போது ஐந்தடி தூரத்தில் இருக்கும் ஆணைப்பார்த்து ஐயோ இவன் என்னை இடித்து விட்டான் என்று ஒரு பெண் சொன்னால் இவ்வளவு தூரம் தள்ளி இருக்கானே எப்படி இடிப்பான் என்று கூட யோசிக்காமல் லாடம் கட்டும் லத்திக் கம்பு நிறைந்த ஊர் தான் நம்முடையது.

ஒருவன் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினாலோ இரட்டை அர்த்த தொனியில் பேசினாலோ பெண்கள் உடனே (உண்மையாக) கண்டித்துவிட்டால் அடுத்த கட்டத்திற்கு ஆண் செல்வதை தடுக்க முடியும். அந்த வகைப் பேச்சுக்களுக்கு ஆசைப்பட்டு சீ, போ என்றெல்லாம் குழைந்தால் சிக்கிட்டாடா சீமாட்டி என்று அடுத்த அடியை எடுத்து வைக்க எந்த ஆணும் தயங்க மாட்டான்.

அதையும் மீறி துன்புறுத்துபவனா?, சமூக அச்சம் இல்லாமல் துனிகிறானா? இருக்கவே இருக்கு காவல் துறை லாடம் கட்ட.

இப்படி எல்லா விதமான பாதுகாப்பையும் சட்டதின் மூலம் செய்து கொடுத்த பின்னும் ஆண் நண்பர்கள் என்ற பெயரில் கணவனின் கண்ணில் மன்னைத்தூவி செல்லும் பெண்ணே பின்னாட்களில் செய்திப்படங்களாகிறார்கள் என்பது உறுதி. நாகரீகத்தின் உச்சம் செய்தித் தாள்களில் சிரிக்கிறது?

சமீபத்தில் சிரித்த அனந்த லட்சுமி கொலைவழக்கைப் பாருங்கள். அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள் தங்கள் பக்கத்து வீட்டில் இப்படி நிகழும் என்று? அந்தப் பெண் நள்ளிரவில் மணிக்கணக்கில் கணவர் அல்லாதானிடம் பேசிக்கொண்டிருந்ததாக செய்திகள் வெளியாகி யிருக்கிறது. விஷயத்தைக் கேள்விப்பட்டவர்கள் அந்தப் பெண்ணா? அப்படியா? என்றே கேட்டிருப்பார்கள். காரணம் ஆணும் பெண்ணும் நண்பர்கள் என்று வெளியே பழகத்துவங்கியது, பின் அடி மேல் அடிவைத்து நள்ளிறவு அரட்டையாக மாறியிருக்கிறது.

சீதையைப் போல் Perception அதாவது தவறு நிகழப்போகிறது என்ற உள்ளுணர்வு அந்தப்பெண்ணுக்கு கொஞ்சமேனும் இருந்திருந்தால் இப்படி செய்திருப்பாளா? விளைவு குடும்ப மானம் நாளிதழ்களில் பல்லைக்காட்டியது.

எச்சரிக்கை:

உங்கள் வீட்டுப் பெண்களுக்கு இரவு எட்டு மணிக்கு மேல் கூட ஆண்கள் தொலைபேசியில் அழைக்கிறார்களா? ஜாக்கிரதை.

உங்கள் வீட்டுப் பெண்கள் குடும்பத்திற்கு சம்பந்தமில்லாத ஆண்களுடன் தொலைபேசியில் அரைமணி நேரம் பேசுகிறார்களா? ஜாக்கிரதை.

உங்கள் வீட்டுப் பெண்கள் அதிகநேரம் பேசுகிறார்கள் ஆனால் யாருடன் என்பதை சொல்லும் போது சமாளிக்கிறார்களா? ஜாக்கிரதை.

உங்கள் வீட்டுப் பெண் ஏதேனும் ஆபத்தை எதிர்காலத்தில் எதிர்கொள்ளக்கூடும்.

ஜாக்கிரதை. உங்கள் குடும்ப மானத்திற்கு சிரிப்பு மூட்ட நாளிதழ்கள் காத்திருக்கின்றன.

கலாச்சாரத்தைக் கட்டிக்காப்போம், குடும்பத்தைக் காப்போம்.