Saturday, July 10, 2010

மஹாபாரதத்தில் ஒரு நாள் - 3 அதிதி தேவோ பவ!




அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் புலம்

முகமலர்ச்சியோடு நன்முறையில் விருந்தினரைப் பேணுகிறவன் வீட்டிலே, உளமலர்ச்சியோடு திருமகள் அகலாது இருப்பாள்.

வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.

விருந்தினரைப் போற்றியபின், எஞ்சியதைத் தான் உண்ணுகிறவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?

மேற்கூரிய வரிகள் விருந்தோம்பலின் சிறப்பினைப் பற்றியும் விருந்தினர்களை பேணுவதன் சிறப்பைப் பற்றியும் எடுத்தியம்புகிறார் வள்ளுவப் பெருந்தகை. இந்தியாவின் உயர்ந்த கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருப்பது விருந்தினரைப் பேணுதல். அதனாலேயே வள்ளுவர் அதற்கு தனி அதிகாரமே படைத்திருக்கிறார் எனலாம். இந்த உயர்ந்த பொருளை மகாபாரதம் அற்புதமாக எடுத்துக் கூறுகிறது.

மஹாபாரதம், இந்த இதிகாசம் முழுக்க முழுக்க தர்மத்தின் ஃபார்முலா. ஒவ்வொரு கதாபாத்திரமும் தர்மத்தின் வாழும் விளக்கங்கள். அத்தகைய உயர்ந்த இதிகாசமான மகாபாரதத்தில் அதிதிகளை உபசரிக்கும் உயர்ந்த தர்மத்தை அதன் பாத்திரங்களே வாழ்ந்து காட்டியுள்ளன. உலகத்தில் வேறெந்த மதத்திலும் வாழ்க்கை தர்மத்தை வாழ்ந்து காட்டி உபதேசிப்பதான ஒரு இதிகாசம் கிடையாது. அதை விளக்கமாகப் பார்ப்போம்.

மகாபாரத்தில் ஒரு நாள்....

பாண்டவர்கள் ராஜ்ஜியத்திற்கு உரிமை கொண்டாடுகிறார்களே என்ற காரணத்தால் துரியோதனன் அவர்களை கூண்டோடு அழிக்க முற்பட்டான். அரக்கால் மாளிகை செய்து பாண்டவர்களுக்கு பரிசளித்தான். அவர்களை அதில் தங்கச்செய்து இரவோடு இரவாக அரன்மனையை தீயிட்டுக் கொளுத்தி பாண்டவர்களை ஒழிக்க முற்பட்டான் துரியோதனன்.

இத்திட்டத்தை முன்னமேயே அறிந்து கொண்ட பாண்டவர்கள் தாய் குந்தி தேவியுடன் அரன்மனையை விட்டு ரகசியமாக வெளியேறி விடுகின்றனர். இவ்வாறு வெளியேறியவர்கள் அந்தனர் வேஷம் பூண்டு தலைமறைவாக கிராமம் கிராமமாக செல்கின்றனர். இவ்வாறு இருக்கையில், ஏகசக்ர புரம் என்ற ஓர் கிராமத்தில் அந்தனர் ஒருவரின் வீட்டில் அதிதியாக அவர்கள் தங்க வாய்ப்பு கிடைக்கிறது.

அந்தனக் குடும்பத்தினர் அனைவரும் பாண்டவர்களையும் தாய் குந்தி தேவியையும் மிகவும் அன்புடன் நடத்தினார்கள். அந்தனரின் குழந்தைகள் குந்தி தேவியிடம் மிகுந்த மரியாதையுடனும் பாசத்துடனும் பழகின. தம் வீட்டிற்கு விருந்தினராக வந்தவர்களின் முகம் எள்ளளவும் கோனாமல் அவர்களிடம் பழகி வந்தனர் அந்தனரின் குடும்பத்தினர்.

அந்த அமைதியை கெடுக்க வந்தது அந்த நாள் பகாசுரன் ரூபத்தில். பகாசுரன் என்ற அரக்கன் அந்த கிராமமக்களை மிகவும் கொடுமைக்கு ஆளாக்கி இருந்தான். கண்டவர்களை எல்லாம் தின்று விழுங்கி வந்தான். அவனது கொடுமையை எதிர்க்க திராணியற்ற அக்கிராம மக்கள் ஒரு முடிவிற்கு வந்தார்கள். அவர்கள் பகாசுரனிடம் சென்று ஒரு வேண்டுகோள் விடுத்தார்கள். "பகாசுரனே! நீ எல்லா மனிதர்களையும் இரக்கமின்றி கொன்று விடுகிறாய். ஆகவே வாரம் ஒரு வண்டி உணவும், ஒரு மனிதனையும் வீட்டிற்கு ஒரு முறை வைத்து நாங்களே உனக்கு அளிக்கிறோம்" என்று ஒப்பந்தம் போட்டு விடுகிறார்கள்.


ஆம், இன்று அந்தனரின் குடும்ப முறை. பகாசுரனுக்கு உணவாக அந்தனர் தயாராகி தன் மனைவி குழந்தைகளிடம் விடை பெற நினைக்கிறார். ஆனால் குடும்பத்தினர் அவரை விட தயாராக இல்லை. மனைவியோ "இன்பம் அல்லது துன்பம் எதுவாகிலும் உம்மோடு உடனிருப்பேன் என்று கூறித்தானே மனம் புரிந்து கொண்டேன்! ஆகையால் உங்கள் துன்பத்தை நானே ஏற்று பகாசுரனுக்கு உணவாக நானே செல்கிறேன். குழந்தைகளை நீங்கள் காப்பாற்றுங்கள்!" கூறினாள். அவர்களது வயது வந்த மகளோ, தாய் தந்தையரைக் காப்பது பிள்ளைகளின் கடனென்றும் அதனால் தானே பகாசுரனுக்கு உணவாகச் செல்கிறேன் என்றும் கூறினாள். அவர்களது கடைக்குட்டியான மகன் தனது பிஞ்சுக் குரலில் அப்பா, நான் செல்கிறேன்" என்றான்.

ஆனால் இந்தப் போராட்டங்களை வீட்டிற்கு அதிதியாக வந்திருக்கும் குந்தியிடமோ, பாண்டவர்களிடமோ அந்தனர் குடும்பம் தெரிவிக்கவில்லை. மேலும் தாங்கள் பேசிக்கொள்வது கூட குந்தி தேவிக்குத் தெரியக்கூடாது என்று கவனமாக இருந்தனர். ஆனால் வீட்டினுள் நுழைந்த குந்தி தேவியோ இதை கேட்டுவிட்டாள். உடனே மூட்டை முடிச்சுகளுடன் பாண்டவர்களைக் கூட்டிக் கொண்டு இடத்தை காலி செய்திருக்கலாம். ஆனால் குந்தி அவ்வாறு செய்யவில்லை. மாறாக அந்தனரிடம் சென்று "நாங்கள் இந்த வீட்டில் அதிதியாக தங்கி இருக்கிறோம். ஆதலால் உங்கள் துயரம் எதுவோ அது எங்களின் துயரமும் கூட. உங்கள் வீட்டில் நாங்கள் சுகமாக விருந்துன்ன, எங்களுக்குத் தெரியாமல் நீங்கள் துயரத்தை அனுபவிப்பது தர்மம் அல்ல. ஆதலால் உங்கள் துயரை நான் ஏற்கிறேன், இது அதிதியின் கடமை. இன்று இந்த வீட்டின் முறையாக என் மகன் பீமன் பகாசுரனைச் சந்திப்பான்" என்று கூறினாள்.



ஆனால் அந்தனர் அதனை கடுமையாக எதிர்க்கிறார். "அது நடக்காது, அதிதியாக வந்திருப்பவர்களைக் காப்பது எமது கடமை" என்கிறார்.

குந்தியோ "ஒரு வீட்டில் விருந்தினராக வந்திருப்பவர்களுக்கு அந்த வீட்டின் சுகங்கள் எப்படிக் கிட்ட வேண்டியதோ, அதேபோல அந்த வீட்டினர் எதிர் கொள்ளும் சங்கடங்களை பகிர்ந்து கொள்ளும் கடமையும் இருக்கிறது" என்று கூறி பீமன் தான் அன்றைய தினம் பகாசுரனை சந்திப்பான் என்று தீர்மானமாகக் கூறுகிறாள்.

தாயின் சொற்களை வேத வாக்காக மதித்து பீமனும் வண்டி நிறைய உணவுப்பண்டங்களை பகாசுரனுக்குக் கொண்டு சென்றான். பகாசுரனின் குகை வாசலில் அமர்ந்து அத்தனை உணவுப் பொருட்களையும் தாமே தின்று பகாசுரனுடன் யுத்தம் செய்து அவனைக் கொன்றான். அந்த கிராமத்தினர் அனைவரையும் பகாசுரனின் துன்பத்திலிருந்து விடுவித்தான்.

இவ்வாறு அதிதியாகச் சென்றிருப்பவர்களும் அதிதியை உபசரிப்பவர்களும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கதாபாத்திரங்கள் மூலம் அற்புதமாக விளக்குகிறது மகாபாரதம். தற்காலத்தில் இப்படி உயர்ந்தவர்களாக நாம் நடந்து கொள்கிறோமா?

குறைந்தபட்சம் சில விஷயங்களை மனதில் கொள்ளவோம்!

தற்காலத்தில் அதிதிகளை வரவேற்கும் வீட்டாருக்கு..

விருந்தினர் முன்பாக கணவன் மனைவி சண்டை போட்டுக்கொள்வதை தவிர்க்கலாம். தாங்கள் வந்ததனால் தான் இவர்கள் சண்டை போடுகிறார்கள் போலும் என்ற தோற்றம் உண்டாவதைத் தவிர்க்கலாம்.

வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால் வீட்டுப் பிள்ளைகள் கொஞ்சம் அதிக உற்சாகம் அடைந்து அவர்களிடம் விளையாடும். தன்னுடைய குறும்புத்தனத்தை காட்டும். அது குழந்தைகளின் ஹீரோயிஸம். ஆனால் அதைப் பெரிதுபடுத்தி குழந்தைகளை அவர்கள் முன்பாக அடித்து அழவைத்தால் விருந்தாளிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். அதனால் பிள்ளைகளுக்கு விருந்தினர்கள் வருவதற்கு முன்பாகவே அறிவுரைகளைக் கூறிவைக்கலாம். இது அநாவசிய சங்கடங்களைத் தவிர்க்கும்.

சிலர் விருந்தினர்களை வரவேற்று அமரவைத்துவிட்டு விளம்பர இடைவேளையில் மட்டுமே பேசுவார்கள். இது வந்தவர்களை முகம் சுளிக்க வைக்கும் மட்டுமல்லாது அடுத்த முறை உங்கள் வீட்டிற்கு மரியாதை நிமித்தமாக வருவதைக் கூட தவிர்க்க நினைப்பார்கள். (நல்லது தானே என்கிறீர்களா!)

அதே போல் விருந்தினராக ஒருவரின் வீட்டிற்க்குச் செல்பவர்கள் சில விஷயங்களை மனதில் கொள்வது நல்லது.

விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் என்பார்கள். மூன்று நாட்களுக்கு மேல் ஒரு வீட்டில் தங்க நேர்ந்தால் குறைந்த பட்சம் அந்த வீட்டின் காப்பி போடுவதற்காகவாவது இருவேளை பால் வாங்கிக் கொடுக்கலாம்.

குடும்பத்தினர் மொத்தமும் ஒரு வீட்டிற்குச் சென்று சில நாட்கள் தங்கியிருந்தால் அனைவரின் சாப்பாட்டிற்கும் சேர்த்து குறைந்தபட்சம் காய்கறி வாங்கிக் கொடுக்கலாம்.

முக்கியமாக, அவர்கள் வீட்டுத் தொலைக்காட்சியில் என்ன சானல் ஓடுகிறதோ அதையே நாம் பார்ப்பது நல்லது. சிலர் சீரியல் பைத்தியமாக இருக்கலாம். அவர்களிடம் போய் 'சீ நான் இந்த சீரியலெல்லாம் பார்ப்பதே கிடையாது எப்படித்தான் பார்க்கிறீர்களோ' என்று அவர்களை நெளிய வைக்கக்கூடாது. நாம் சென்றிருக்கிறோம் என்பதால் நமது டி வி விருப்பத்தை அவர்கள் மீது தினிக்கக் கூடாது. ஏனெனில் நாம் அதிதிகளாகச் சென்றிருக்கிறோம், அவ்வீட்டின் அதிகாரிகளாக அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும். அது சொந்த அண்ணன் தம்பி வீடாக இருந்தாலும் சரி.

என்னதான் உறவினர்கள் என்றாலும் அவர்களின் குழந்தைகள் சேட்டை செய்தால் கண்டிக்கிறோம் பேர்வழி என்று கடுமையாக திட்டுவதோ அடிப்பதோ கூடாது. அவ்வீட்டினரின் மனவருத்தத்திற்கு ஆளாக நேரிடும்.

தங்கியிருகும் வீட்டினரோடு வெளியே செல்லும் போது வழிச்செலவை பகிர்ந்துகொள்வது நல்லது. நம் வீட்டிற்கு விருந்தினர்களாக வந்தவர்களாயிற்றே என்று அவர்களே செலவு செய்ய முற்படுவார்கள். ஆனாலும் செலவுகளை பகிர்ந்து கொள்வதே நல்லது.

கடைவீதிகளுக்குச் சென்று நமது பிள்ளைகளுக்கு ஏதேனும் பொருட்கள் வாங்கினால் உறவினர் வீட்டுப்பிள்ளைகளுக்கும் ஏதாவது வாங்கிக் கொடுக்கலாம். உறவினர்களின் மனது மகிழும். நாம் வந்து சென்றதை மகிழ்ச்சியுடன் நினைத்திருக்க அது வழி வகுக்கும்.

நமது வீட்டில் ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும் விருந்தினர்களாக ஒரு வீட்டிற்குச் சென்றிருக்கும் போது அவற்றை மனம் விட்டுப் பேசுகிறேன் பேர்வழி என்று அழுது புலம்பக் கூடாது. ஏனெனில் அவர்கள் வீட்டிலும் வேறு விதமான பிரச்சனைகளோடு அவர்கள் வாழக்கூடும். அதையும் தாண்டியே நம்மை விருந்தினர்களாக ஏற்றுக் கொண்டிருப்பார்கள். நம்முடைய மனக் கஷ்டத்தையும் அவர்கள் தலையில் இறக்கி வைக்க நினைத்தால், அடுத்த முறை நாம் வருவோம் என்று ஊகித்தால் கூட கந்துவட்டிக்கு கடன் வாங்கியாவது திண்டுக்கல் பூட்டிற்கு ஆர்டர் கொடுத்து விடுவார்கள்.

விருந்து முடிந்து கிளம்புகையில் பிரிகிறோமே என்று கொஞ்சம் கண்ணீர் கசிந்தால் அடுத்த விருந்து வரை மனதில் நிற்கும்.

ஒரு வீட்டிற்கு விருந்தினர்களாகச் செல்லும் போதும், விருந்தினர்களை வரவேற்கும் போதும் இப்படி சில விஷயங்களை மனதில் வைத்து மகிழ்ச்சியைத் தக்க வைத்துக்கொண்டால் உறவுகள் பலப்படும்.

சிந்திப்போம். அதிதி தேவோ பவ!


4 comments:

kppradeep said...

Dear Ram sir,
nice very nice. Should follow your advice

hayyram said...

u may take it as a suggestion instead of advice. thank u pradeep

Kannan said...

மிகவும் அருமை

Unknown said...

Wonderful tips. Many thanks for your inputs. Keep rocking.