Wednesday, October 27, 2010

நீங்க 'எஸ் பாஸ்' ஆசாமியா?





அலுவலகத்தில் வேலைபார்ப்போருக்கெல்லாம் பிடித்ததோ பிடிக்கவில்லையே 'யெஸ் சார்' என்று தலை ஆட்டினால் தான் அடுத்த நாட்களை ஓட்ட முடியும் என்பது இன்றைக்கு தவிர்க்க முடியாத விஷயமாகி விட்டது. நீங்களும் அப்படி 'எஸ் பாஸ்' ஆசாமியா? வெட்கப்படாதீங்க. அதுவும் ஒரு புத்திசாலித்தனம் தான் என்று முல்லாவைப் பார்த்து தேற்றிக்கொள்ளுங்கள்.

முல்லா ஒரு மன்னரிடம் சில காலம் அமைச்சராக இருந்தார். முல்லாவின் மீது மன்னருக்கு
அதிக அபிமானம் இருந்தது. அதனால் அவரை எப்போதுமே தன்னுடன் வைத்துக் கொண்டு
ஏதாவது உரையாடிக்கொண்டு இருப்பார்.

ஒரு நாள் மன்னரும் முல்லாவும் அருகருகே அமர்ந்து உணவருந்திக் கொண்டு இருந்தார்கள்.

அன்று பீன்ஸ் கரி சமைக்கப்பட்டிருந்தது. அதிக பசியின் இருந்ததால் மன்னருக்கு பீன்ஸ் கரி
மிகவும் ருசியாக இருந்ததாகத் தெரிந்தது.

சாப்பாட்டின் இடையே மன்னர் முல்லாவை நோக்கி "முல்லா, உலகத்திலேயே மிகவும் ருசியான காய் பீன்ஸ் தான் என்று எனக்குத் தோன்றுகிறது. நீர் என்ன சொல்கிறீர்?" என்றார்.

"சந்தேகமே வேண்டாம், பீன்ஸ் காய்க்கு நிகராக வேறு காயைச் சொல்லவே முடியாது" என்று ஆமாம் போட்டார் முல்லா. அதாவது 'எஸ் பாஸ்'.

மன்னர் உடனே சமையல்காரரை அழைத்து "இனிமேல் சமையலில் தினமும் பீன்ஸ் இருக்க வேண்டும். நாள் தவறாமல் அன்றாடம் ஏதாவது ஒரு உருவத்தில் பீன்ஸ் இருந்தே ஆக வேண்டும்" என்று ஆணையிட்டார். இப்படியே பத்து தினங்கள் ஓடியது.

மன்னருக்கு இப்போது பீன்ஸ் கரியைப் பார்த்தாலே ஒரு வித வெறுப்பும், சலிப்பும்
உண்டாகிவிட்டது.

அன்றும் வழக்கம் போல பீன்ஸ் பரிமாறப்பட்டது. மன்னர் முல்லாவைப் பார்த்து "உலகத்திலேயே மிகவும் மோசமான காய் பீன்ஸ் தான் என்று எனக்குத் தோன்றுகிறது. நீர் என்ன சொல்கிறீர்?" என்று வினவினார்.

"ஆமாம் மன்னா, எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. நான் அறிந்த காய்கறிகளிலேயே
இவ்வளவு மோசமாக சுவையே இல்லாத காயை கண்டதே இல்லை" என்றார் முல்லா. அதாவது மீண்டும் 'எஸ் பாஸ்'.

மன்னருக்கு ஒரே ஆச்சரியம் "என்ன முல்லா, பத்து நாட்களுக்கு முன்னால் நான் கேட்ட பொழுது உலகத்திலேயே மிகவும் சிறந்த காய் பீன்ஸ் என்று சொன்னீர், இப்போது தலைகீழாக மாற்றிப் பேசுகிறீரே" என்றார் மன்னர்.

முல்லா சிரித்துக் கொண்டே "மன்னா! என்ன செய்வது? நான் தங்களிடம் தானே வேலை
பார்க்கிறேன். பீன்ஸிடம் இல்லையே!" என்றார்.

ஆக இடம் பொருள் தெரிந்து 'எஸ் பாஸ்' போடுவதும் சாமர்த்தியம் தான் போல இருக்கிறது.
சரி, நீங்க 'எஸ் பாஸ்' ஆசாமியா?


.

2 comments: