
சென்ற பதிவில் விவேகானந்தர் எதிலெல்லாம் பயங்கள் இருக்கிறது என்றும் துறவில் தான் பயமே இல்லை என்றும் கூறியிருந்தார் என்பதைப் பார்த்திருந்தோம்.
ஆனால் எல்லோரும் ஓர் இரவில் துறவியாகி பயத்தை வென்று நிர்பயத்துவம் எய்தி சிரிக்க முடியாதே! சம்சார வாழ்க்கை நமக்கு பணிக்கப்பட்டிருக்கிறது. அதில் பயணித்தாகவேண்டிய கட்டாயமும் இருக்கிறது. இந்நிலையில் பயத்தைப் போக்க என்ன செய்ய வேண்டும்?
நம்மைப் போன்றவர்கள் பயத்தை ஒரு உந்து சக்தியாகவே பார்க்க வேண்டும். எதிலெல்லாம் நாம் பயப்படுகிறோமோ அதிலிருந்து தான் விடுதலை அடைகிறோம். சாமானிய மனிதன் முதலில் உணர்வு விலங்குகளிலிருந்து விடுதலை அடைய வேண்டும். விடுதலை அடைந்தவனே ஆனந்தத்தை அனுபவிப்பான்.
பயமே இல்லை என்று நடிப்பவனைவிட பயத்தால் உந்தப்பட்டு வீரிட்டு எழுந்து விடுதலை அடைந்தவனே உலகை வெல்வான். ஆனந்தத்தை அனுபவிப்பான். ஆகவே பயத்தை ஒரு உந்து சக்தியாக பயன்படுத்துங்கள். பயத்தை படிக்கட்டாக பயன்படுத்துங்கள். பயந்து தெளியுங்கள். பயமே ஜெயம் என்பீர்கள்!
இறப்பின் மீது பயம் கொள்வீர்
ஞானத்திற்கு அதுவே உந்து சக்தி!
வறுமையின் மீது பயம் கொள்வீர்
உழைப்பிற்கு அதுவே உந்து சக்தி!
வயோதிகம் மீது பயம் கொள்வீர்
வாலிபத்திற்கு அதுவே உந்து சக்தி!
தோல்வியின் மீது பயம் கொள்வீர்
வெற்றிக்கு அதுவே உந்து சக்தி!
நோயின் மீது பயம் கொள்வீர்
உடற்பயிற்சிக்கு அதுவே உந்து சக்தி!
வன்முறை மீது பயம் கொள்வீர்
அன்பிற்கு அதுவே உந்து சக்தி!
இயற்கையின் மீது பயம் கொள்வீர்
இறைதேடலுக்கு அதுவே உந்து சக்தி!
காலத்தின் மீது பயம் கொள்வீர்
வேகத்திற்கு அதுவே உந்து சக்தி!
மறுமையின் மீது பயம் கொள்வீர்
புண்ணியம் தேட அதுவே உந்து சக்தி!
துயரங்கள் மீது பயம் கொள்வீர்
விடுதலைக்கு அதுவே உந்து சக்தி!
பயத்தாலே புண்ணியவான் ஆனான் ரத்னாகரன். கொலை, கொள்ளையில் ஈடுபட்டேனும் பொருள் ஈட்டி பெற்றோரையும் குடும்பத்தையும் காத்துவந்தான். பாவங்கள் பல செய்து வந்தான்.
ஒருமுறை நாரத முனிவர் ஒரு காட்டின் வழியாக வந்துகொண்டிருந்தார். அவரை வழிமறித்தான் ரத்னாகரன். அவரிடமிருந்த பொருட்களை கேட்டான். உடனே நாரத முனிவர், "நீ யாருக்காக இவற்றை கொள்ளையடிக்கிறாய்?" என்றார். என் பெற்றோர், மனைவி, மக்களைக் காப்பாற்ற என்றான் ரத்னாகரன்.
"சரி, நீ செய்து கொண்டிருக்கும் பாவங்கள் எவ்வளவு பெரியது தெரியுமா? மரணத்திற்கு பின்னால் மறுமையின் வாழ்வில் நீ அதனால் என்னென்ன துன்பங்கள் அனுபவிப்பாய் என்பது உனக்குத் தெரியுமா?" என்றார்.
ரத்னாகரனுக்கு மறுமையைப் பற்றி ஒரு பயம் உண்டானது. நாரதர் தொடர்ந்தார் "உன் வருமானத்திலிருந்து கிடைக்கும் லாபத்தை ஏற்றுக் கொள்ளும் உன் குடும்பத்தார், நீ செய்யும் கொலை, கொள்ளைகளுக்கான பாவத் தையும் ஏற்றுக் கொள்வதுதானே நியாயம்?" என்றார். இதற்கு ரத்னாகரன் 'ஆம்' என்றான். அப்படியானால் இதற்கு விடை தெரிந்து கொண்டு வா. நீ வரும் வரை நான் இங்கேயே நிற்கிறேன்," என்றார்.
ரத்னாகரன் பெற்றோரை பார்க்கச் சென்றான். வீட்டிற்கு சென்றதும், "என் வருமானத்தில் மகிழ்ச் சியை அனுபவிக்கும் நீங்கள், எனது பாவங்களையும் பங் கிட்டுக் கொள்வீர்களா?" என குடும்பத்தாரிடம் கேட்டான்.
அவனது பெற்றோர், "பெற்றவர்களை காப்பாற்றுவது மகனுடைய கடமை. அவன் செய்யும் தொழிலில் உள்ள பாவ, புண்ணியங்களுக்கு அவனே பொறுப்பாவான்" என்றனர். அவனது மனைவியும், மகனும் இதே பதிலை கூறினர்.
ரத்னாகரன் கலக்கமுற்றான். அத்தனை பாவங்களுக்கும் நான் மட்டுமே பொறுப்பாவேனா என்று பயந்தான். அதனால் உண்டாகப்போகும் விளைவுகளை எண்ணி நடுங்கத் துவங்கினான். பாவங்களின் அழுத்தம் அவனை வாட்டியது.
மீண்டும் நாரதரை சந்திக்க வந்தான். 'இந்த பாவங்களிலிருந்து விடுபட எனக்கு உபாயம் சொல்லுங்கள்' என்றான்.
நாரதர் ராமநாமத்தை உச்சரிக்கச் சொன்னார். பாவங்களின் மீது பயம் கொண்டவன் ஓரிடத்தில் அமர்ந்து தொடர்ந்து ராம நாமத்தை உச்சரித்தான்.
அதை சொல்லிக் கொண்டே ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்து விட்டான். பல ஆண்டுகள் கடந்தன. அவன் உடலைச் சுற்றி "வால் மீகம்" வளர ஆரம்பித்தது. வால்மீகம்' என்றால் புற்று என பொருள்படும். ஒரு காலகட்டத்தில் இறைவன் அவனுக்கு அருள்பாலித்தார்.
அவன் புற்றிலிருந்து வெளிப் பட்டதால் "வால்மீகி" என அழைக்கப்பட்டான்.
இந்த மாபெரும் கொள்ளைக்காரனே பிற்காலத்தில் ராமாயணம் என்னும் மகாகாவியத்தை படைத்தான். இன்றும் இறவாப் புகழுடன் வாழ்கிறான்.
மறுமையின் மீதிருந்த பயமே ரத்னாகரனின் உந்து சக்தியானது. அவன் வால்மீகியாக மாற அதுவே தூண்டுகோலானது.
ஆக நம்மைப் போன்று துறவுக்கு போக முடியாத சாமானியர்களுக்கு வாழ்க்கையின் பயணத்தைக் கடக்க அந்தராத்மாவின் உந்து சக்தியே அதிகம் தேவை. எனவே பயப்படுங்கள். அதே வேகத்துடன் பயத்தை வெல்லுங்கள்.
பயத்தை வெல்வோம், விவேகானந்தர் ஆவோம்.

கொசுறு: புதுப்பேட்டை என்ற படத்தில் தனுஷ் முதன் முதலாக குற்றம் செய்யப்போவார். கூட வந்தவன் கேட்பான்
"என்ன பயமா இருக்கா?"
"ம்ம்ம்"
"பரவாயில்லை, பயம் தான் நம்மள காப்பாத்தும்"