Saturday, April 3, 2010

பஞ்சதந்திரக் கதைகள் - 5 -பாம்பைக் கொன்ற கீரியின் கதை


தேவப்பட்டினம் என்றொரு கிராமத்தில் ஒரு மாரப்பன் என்றொரு குயவனும் அவன் மனைவியும் வாழ்ந்து வந்தார்கள். பல வருடங்களாகியும் அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை.

தங்களுக்கு குழந்தை இல்லாத ஏக்கத்தைப்போக்க ஒரு கீறிப் பிள்ளையைக் குழந்தையைப் போல் வளர்த்து வந்தனர். இப்படி சிலகாலம் சென்றது. ஒரு நாள் குயவனின் மனைவி சுந்தரி கருவுற்றாள். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

நீண்ட கால ஏக்கத்திற்குப் பிறகு பிறந்த முதல் குழந்தை என்பதால் அக்குழந்தை வெகு செல்லமாக வளர்க்கப்பட்டது.

ஒருநாள் தண்ணீர் குடத்துடன் புறப்பட்ட சுந்தரி, கணவனிடம் “குழந்தை தூங்குகிறது. அருகிலேயே இருந்து பார்த்துக் கொள்ளுங்கள், கீரி கடித்துவிடப் போகிறது”, என்று கூறிவிட்டுக் குளக்கரைக்குச் சென்றாள்.

குழந்தையின் அருகிலேயே அமர்ந்து கொண்டிருந்த குயவனுக்கு திடீர் தாகம் உண்டாயிற்று. அவன் தண்ணீர் அருந்த சமையலறைக்குள் சென்றான்.

அந்த நேரம் பார்த்து ஒரு கரு நாகம் எங்கிருந்தோ வந்து குழந்தையின் தொட்டிலின்மேல் ஏற ஆரம்பித்தது. கீரி அதைப் பார்த்து விட்டது. அடுத்த வினாடி கீரி அப்பாம்பைத் துண்டு துண்டாகக் கடித்துக் குதறிவிட்டது.

அத்துடன் தன் எஜமானியின் வரவு நோக்கி தெரு வாசலருகில் நின்றும் கொண்டது.

தண்ணீர் குடத்துடன் வந்த சுந்தரி கீரியின் வாயெல்லாம் இரத்தமாக இருந்ததைப் பார்த்து பதறிப்போனாள்.

அவள் கீரிப்பிள்ளை தன் குழந்தையைக் கடித்து விட்டது. அதனால் தான் அதன் வாயில் ரத்தம் சொட்ட நிற்கிறது என்று தவறாகப் புரிந்து கொண்டாள்.

நிலைமையைத் தீர ஆராயாமல் "அய்யோ! நம் குழந்தையை கீரிப்பிள்ளை கடித்து விட்டதே என்று ஆத்திரம் கொண்டு அடங்காக் கோபத்தோடு அக்கீரியின் மேல் நீர்க்குடத்தை தூக்கிப் போட்டாள்.

கீரிப்பிள்ளை அதே இடத்தில் வலி தாங்காமல் செத்தது. சுந்தரி தன் குழந்தைக்கு என்ன ஆயிற்றோ என்ற பதற்றத்தில் உள்ளே ஓடினாள். குழந்தை தொட்டிலில் அப்படியே உறங்கிக் கொண்டுதான் இருந்தது.

பிறகு என்ன நடந்திருக்கும் என்று சுற்றும் முற்றும் பார்த்த அவளுக்கு ஒரே அதிர்ச்சி. தரையில் பாம்பின் உடல் பல துண்டுகளாக சிதறி இருந்தன. அவளுக்கு உண்மை புரிய ஆரம்பித்தது.

"அடடா பாம்பைக் கொன்ற இரத்த்தத்துடன் இருந்த கீரிப்பிள்ளையைப் பார்த்துக் குழந்தையைத்தான் கடித்து விட்டதோ என்று தவறாக எண்ணி விட்டேனே. அருமையாக வளர்த்த கீரியைக் அவசரப்பட்டுக் கொன்று விட்டேனே!" என்று கண்ணீர் விட்டுக் கதறத் துவங்கினாள்.

க்ஷனநேரத்தில் நடந்து முடிந்து விட்ட இந்த நிகழ்ச்சிகளை உள்வாங்கிக்கொண்ட குயவன் தனது மனைவியை சமாதானப்படுத்தினான்.


பாடம்: எந்தப் பிரச்சனையையும் தீர ஆராயாமல் அவசர புத்தியால் முடிவெடுத்தால் அது தவறாகிவிடும்.

No comments: