Showing posts with label பீர்பால். Show all posts
Showing posts with label பீர்பால். Show all posts

Wednesday, October 14, 2009

அக்பர் பீர்பால் கதைகள்!


குளிரில் நின்றால் பரிசு

ஒரு நாள் இரவு நேரத்தில் அக்பரும், பீர்பாலும் உரையாடிக்கொண்டிருந்தார்கள். குளிர் அதிகமாக இருந்ததால் சால்வையை இருக்கமாக இருவரும் போர்த்திக்கொண்டிருந்தனர். அப்படியும் குளிர் அக்பரை மிகவும் வாட்டியெடுத்தது.

அக்பர் பீர்பாலை பார்த்து " பீர்பால் இந்த குளிரின் கொடுமையை பார்த்தீரா... எதிரிகளுக்கு அஞ்சாத நெஞ்சம் இருந்தும் இந்த குளிருக்கு அஞ்சாமல் இருக்க முடியவில்லையே! இந்த குளிரை பொருட்படுத்தாமல், யமுனை ஆற்றில் ஒரு இரவு முழுக்க, கழுத்தளவு நீரில் யாராலும் நிற்க இயலுமோ! அவ்வாறு நின்றால், அவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாக வழங்கலாம்" என்றார்.

"அரசே, சிங்கத்தின் முடியை கூட கொண்டு வந்துவிடலாம். ஆனால் நடுங்கும் குளிரில் இரவு முழுவது ஆற்றில் நிற்பது என்பது சதாரண காரியமா?" என்றார் பீர்பால்.

"யமுனை ஆற்றில் குளிரில் நிற்பதற்கு எந்தவித திறமையும் தேவையில்லை, மன உறுதி இருந்தாலே போதும்! நாடு முழுவதும் இந்த செய்தியை அறிவிக்க சொல்லுங்கள்! பணத்தின் மீது ஆசைப்பட்டு நிறைய பேர் பங்கு பெற வருவார்கள். அதில் யார் வெற்றி பெறுவார்கள் எனப்பார்ப்போம்" என்றார் அக்பர்.

அரசரின் ஆணை நாடெங்கும் அறிவிக்கப்பட்டது. அடுத்த நாளே, ஒரு இளைஞன் அரசரிடம் வந்து " அரசே, யமுனை நதியில் கழுத்தளவு நீரில் இரவு முழுவதும் நிற்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்" என்றான்.

அக்பர் அந்த இளைஞனை வியப்பாக பார்த்து "இன்று இரவு போட்டிக்கு தயாராகு" என்றார். இளைஞனும் தயாரானான். நடுங்கும் குளிரில் நிற்பது சதாரண விசயமில்லையே என நினைத்த அக்பர், அந்த இளைஞனை கண்காணிப்பதற்கு இரண்டு காவலாளிகளை நியமித்தார்.

யமுனை ஆற்றில் வெற்று உடம்புடன் இறங்கினான் இளைஞன். கழுத்தளவு வரை நீர் உள்ள இடத்தில் நின்று கொண்டான். உடல் மிகவும் நடுங்கியது, குளிர் வாட்டியது, அவனால் தாக்குபிடிக்கமுடியவில்லை. ஆனாலும் பரிசாக கிடைக்கப்போகும் ஆயிரம் பொற்காசுகளை எண்ணி பார்த்தான். புது தெம்பு வரவே, இரவு முழுவதும் கண் விழித்து நின்று கொண்டிருந்தான்.

பொழுது விடிந்தது. வெயில் மேனியில் பட உடல் சீரான நிலைக்கு வந்தது. ஆயிரம் பொற்காசுகளை பெறப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் ஆற்றை விட்டு மேலே வந்தான். அவனை காவலாளிகள் மன்னரிடம் அழைத்து சென்று இரவு முழுவது இளைஞன் கழுத்தளவு நீருக்குள் நின்றதை கூறினார்கள்.

அக்பருக்கோ மிகவும் வியப்பாக இருந்தது. "இளைஞனே உன் மன உறுதியை பாராட்டுகிறேன்! அந்த இரவில், கடும்குளிரில் நீருக்குள் எப்படி இருந்தாய்? அப்படி நிற்கும்போது உனக்கு எந்த வகையிலும், ஏதாவது துணையாக இருந்ததா? என்றார் அக்பர். அந்த இளைஞனும் அப்பாவியாய் "அரசே அரண்மனையின் மேல் மாடத்தில் எரிந்து கொண்டிருந்த சிறிய விளக்கின் ஒளியை பார்த்துக்கொண்டே இரவுப்பொழுதை கழித்தேன்" என்றான்.

"இளைஞனே அதானே பார்த்தேன். நடுங்கும் குளிரில் தண்ணீருக்குள் எப்படி உன்னால் இருக்க முடிந்தது என்று இப்பொழுது புரிகிறது! உன் குளிரை போக்க அரண்மனையிலிருந்து வீசிய விளக்கின் ஒளி உனக்கு உதவி செய்திருக்கிறது. அந்த சூட்டில் தான் இரவு முழுவது நின்றிருக்கிறாய். எனவே உனக்கு ஆயிரம் பொற்காசுகள் கிடையாது" என்றார்.

பரிசுத்தொகை கிடைக்கவில்லை என்றதும் அந்த இளைஞன் மிகவும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றான். பீர்பால் அவனை கண்டு என்னவென்று விசாரிக்க. இளைஞனும் பீர்பாலிடம் எல்லாவற்றையும் சொன்னான். பீர்பால் அவனுக்கு ஆறுதல் கூறி பரிசு தொகையை கிடைக்க உதவி செய்வதாக உறுதியளித்தார்.

சில நாட்களுக்கு பிறகு, அக்பர் வேட்டையாட புறப்பட்டுக்கொண்டிருந்தார். பீர்பாலை தம்முடன் அழைத்து செல்ல எண்ணிய அக்பர் காவலாளியை கூப்பிட்டு பீர்பால் வீட்டுக்கு சென்று அழைத்து வரச்சொன்னார்.

பீர்பால் தன்னை தேடி வந்த காவலாளியிடம் தான் சமையல் சென்று கொண்டிருப்பதையும், சாப்பிட்டு விட்டு வருவதாகவும் கூறினார். நீண்ட நேரம் பீர்பாலுக்காக அக்பர் காத்திருந்தார். பீர்பால் வரவில்லை. மிகவும் கோபமடைந்த அரசர் பீர்பாலின் வீட்டுக்கு சென்று பார்த்துவிட்டு வரலாம் எனப்புறப்பட்டார். பீர்பால் வீட்டில் ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு தண்ணீர் ஊற்றி வைத்திருந்தார். பாத்திரத்திலிருந்து பத்தடி தூரம் தள்ளி அடுப்பை வைத்திருந்தார். அடுப்பில் விறகுகள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. இதை கண்ட அக்பருக்கு ஒன்றும் புரியவில்லை. பீர்பாலிடமே கேட்டார்.

"பீர்பால் தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" அக்பர்.
"அரசே சமையல் செய்து கொண்டிருக்கிறேன்" பீர்பால்.

"உமக்கு என்ன மூளை குழம்பி விட்டதா? பாத்திரம் ஒரு பக்கம் இருக்கிறது. அடுப்பு ஒரு பக்கம் இருக்கிறது. அதில் எப்படி சோறு வேகும்?" என்றார் அக்பர் கோபத்துடன்.

"அரசே நிச்சயம் சோறு வேகும். யமுனை ஆற்றில் தண்ணீரில் இருந்தவனுக்கு அரண்மனையில் இருந்த விளக்கின் வெளிச்சம் சூட்டை தந்திருக்கும்போது மிகவும் பக்கத்தில் இருக்கிற அடுப்பில் ஏற்படும் சூடு அரிசி பாத்திரத்தில் பட்டும் சோறு வெந்து விடாமல் போகுமா?' என்றார் பீர்பால்.

மிகவும் நாசூக்காக தமக்கு புரிய வைத்த பீர்பாலை பாராட்டி அந்த இளைஞனை வரவழைத்து... முன்பு கூறிய படியே ஆயிரம் பொற்காசுகளை கொடுத்தார்.

Friday, May 15, 2009

அக்பர் பீர்பால் கதைகள்


ஒரு நாள் அக்பரும் பீர்பாலும் மாறு வேடத்தில் நகர்வலம் வந்தனர். அப்போது குருடர்களும், உடல் ஊன‌முற்றவர்களும், வயோதிகர்களுமாகப் பலர் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தனர்.

அக்பர் மிகவும் வேதனை அடைந்தார். பீர்பாலைப் பார்த்து, "பீர்பாலே, இவர்களைப் பார்க்கும் போது மிகவும் பரிதாபமாக இருக்கிறது. அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.  

இருவரும் ஆலோசனை செய்து அரசாங்க சார்பில் அவர்களுக்கு இலவ‌சமாக உணவு வழங்குவது என்று முடிவு செய்தனர். 

அதன் படி ஊனமுற்றோருக்கும் ஆதரவ‌ற்ற முதியவர்களுக்கும் இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

நாளுக்கு நாள் பிச்சைக்காரர்கள் கூட்டம் கணக்கில்லாமல் அதிகமாகியது. உழைக்க விரும்பாத சோம்பேறிகள் ஊனமுற்றவர்கள் போல் வேடமிட்டு இலவச உணவை உண்டு காலத்தைப் போக்க ஆரம்பித்து விட்டனர்.  

அரசு உணவிற்காக செலவிடும் தொகை நாளுக்கு நாள் பெருகி கருவூலமே காலியாகும் நிலை ஏற்பட்டு விட்டது. பயந்து போன அக்பர் அவசரமாக பீர்பாலுடன் ஆலோசனை நடத்தினார். போலிப் பிச்சைக்காரர்களைக் கண்டறிவது எப்படி என்று பீர்பால் சிந்தித்தார். "அரசே, நாளை மதியம் இதற்கு முடிவு கட்டி விடுவோம்" என்றார். 

மறுநாள் இலவச உணவு உண்பதற்காக எண்ணற்றவர்கள் கூடினர். அப்போது உணவு அளிப்பது ஒரு மணி நேரம் தாமதப்படுத்தப்பட்டது. இதனால் கூச்சல் குழப்பம் ஏற்ப்பட்டது. 

அப்போது ஒரு அதிகாரி கூட்டத்தினரைப் பார்த்து "இன்று முதல் வடக்கேயுள்ள புதிய சத்திரத்தில் உணவளிக்கப்படும்" என்று தெரிவித்தார். இதனைக் கேட்ட போலிப் பிச்சைக்காரர்கள் பாத்திரத்தைத் தூக்கிக் கொண்டு அலறியடித்து புதிய சத்திரத்துக்கு ஓடினர்.  

உண்மையாகவே கண்பார்வையற்றவர்களும், ஊனமுற்றவர்களும் மட்டுமே அங்கேயே இருந்து விட்டனர். அவர்களுக்கு மட்டுமே உணவு வழங்கப்பட்டது. அதன் பிறகு போலிப் பிச்சைக்காரர்கள் எவருமே அங்கு வருவதில்லை. 

பீர்பாலின் சமயோசித அறிவாற்றலை எண்ணி அக்பர் வியந்தார்.

Saturday, May 2, 2009

அக்பர் பீர்பால் கதைகள்



பீர்பாலின் நுண்ணறிவும், சமயோசித ஆற்றலும், அவருடைய தீராத பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் மதி நுட்பமும் ஏற்படுத்திய புகழ் நம் நாட்டில் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் பரவியது. பாரசீக மன்னர் பீர்பாலின் மதியூகம் பற்றிக் கேள்விப்பட்டார். 

வியத்தகு ஆற்றல் படைத்த மனிதரை நேரில் காண ஆர்வம் கொண்டார். பீர்பாலைத் தனது நாட்டிற்கு சிறப்பு விருந்தினராகச் சில நாட்கள் அனுப்பி வைகுமாறு அக்பர் மகா சக்கரவர்த்திக்குப் பாரசீக மன்னர் கடிதம் எழுதிக் கேட்டுக் கொண்டார். அதனை ஏற்றுக் கொண்ட அக்பர் பாரசீக மன்னருக்குச் சில பரிசுப் பொருட்களை பீர்பாலிடம் கொடுத்து அந்நாட்டிற்கு அனுப்பி வைத்தார்.  

அங்கு பீர்பாலுக்கு சிறப்பான வரவேற்ப்பு அளிக்கப் பட்டது. பீர்பாலின் மதியூகத்தைக் காண விரும்பினார் பாரசீக மன்னர்.  

மறுநாள் பீர்பால் அரசவைக்கு அழைத்து வரப்பட்டார். இது வரை பாரசீக மன்னனை பீர்பால் கண்டதில்லை. அங்கு ஐந்து ஆசனங்கல் போடப்பட்டிருந்தன. ஐந்திலும் ஒரே மாதிரியான முகத்தோற்றம் கொண்ட ஐந்து பேர் அமர்ந்திருந்தனர். அவர்களில் உண்மையான பாரசீக மன்னர் யார் என்பதை உடனடியாக பீர்பால் கண்டறிய முடியவில்லை. 

ஐந்து பேரையும் நன்றாக உற்றுப் பார்த்தார். அவர்களில் மையமாக அமர்ந்திருந்தவர் முன் சென்று தலை வணங்கி, "மாமன்னரே! உங்களைக் காண்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.  


இதனை கேட்டு வியந்த பாரசீக மன்னர் ஷா "பீர்பாலே, என்னை எப்படி அடையாளம் கண்டு கொண்டீர்?" என்று கேட்டார். "அரசே, தங்களைத் தவிர மற்ற நால்வரின் பார்வையும் உங்கள் மீதே இருந்தன. தாங்கள் மட்டுமே என்னைப் பார்த்தீர்கள். அதனைக் கொண்டுதான் தங்களைக் கண்டறிந்தேன்" என்றார் பீர்பால்.  


பாரசீக மன்னர் பீர்பாலின் அறிவாற்றலைக் கண்டு பேருவகை அடைந்து பரிசுகள் அளித்துப் பாராட்டினார்.

அக்பர் பீர்பால் கதைகள்:


அக்பர் பீர்பால் கதைகள்:  

சக்கரவர்த்தி அக்பரின் அரண்மனையில் ஒரு பெரிய விருந்து நடைபெற்றது. ஏராளமான முக்கிய பிரமுகர்கள் அதில் கலந்து கொண்டனர்.  

அக்பரும் பீர்பாலும் அருகருகே அமர்ந்து விருந்துண்டனர். விருந்தில் விதவிதமான பண்டங்கள் பரிமாற‌பட்டன. இருவரும் சுவாரஸியமாக உரையாடிக்கொண்டே உண்டனர். 

இலையில் வைக்கப்பட்டிருந்த பலாப்பழ‌ங்களைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

பலாக்கொட்டைகளை அக்பர் வேடிக்கையாக பீர்பாலின் இலையில் அவருக்குத் தெரியாமல் வைத்துவிட்டார்.  

சாப்பிட்டு முடியும் நேரத்தில் அக்பர் பீர்பாலின் இலையைப் பார்த்துவிட்டு, "பீர்பால், எவ்வளவுதான் உமக்கு பலாப்பழத்தின் மேல் ஆசை இருந்தாலும் இவ்வளவு பழங்களா உண்பது?" என்று கேலியாகக் கூறிச் சிரித்தார்.  

குனிந்து இலையைப் பார்த்த பீர்பால் தான் தின்ற பழங்களின் கொட்டைகளையெல்லாம் மன்னர் தன்னுடைய இலையில் வைத்துவிட்டதைக் கண்டு கொண்டார். 

"அரசர் பெருமானே! நானாவது பழங்களைத் தின்று விட்டுக் கொட்டையை இலையில் வைத்துவிட்டேன். நீங்கள் பலாக்கொட்டையையும் சேர்த்து அல்லவா தின்று வெட்டீர்கள். உங்கள் இலையில் கொட்டையே இல்லையே!" என்று கூறிச் சிரித்தார்.  

பீர்பாலுடைய சமயோசிதக் கிண்டலைக் கேட்டு மன்னர் பெருவகை அடைந்தார்.