Showing posts with label birbal. Show all posts
Showing posts with label birbal. Show all posts

Saturday, October 31, 2009

அக்பர் பீர்பால் கதைகள்!


கிணற்றுக்குள் விழுந்த வைர மோதிரம்!

ஒரு நாள் அதிகாலையில், சக்ரவர்த்தி அக்பர், சில அதிகாரிகள் புடைசூழ வெளியே உலாவக் கிளம்பினார். பீர்பலும் அவர் கூடவே சென்றார்.

அக்பர் கோடையின் கொடுமையைப் பற்றி பேசிக் கொண்டே வந்தார். அவர்கள் செல்லும் வழியில் ஒரு கிணறு தென்பட்டது. அதைப் பார்த்த அக்பர், "தலைநகரில்உள்ள கிணறுகள் யாவும் வற்றி விட்டன என்று கேள்விப்பட்டேன். இந்தக் கிணற்றில் தண்ணீர் இருக்கிறதா பார்ப்போம்" என்று சொல்லிக் கொண்டே அதன் அருகில் சென்று குனிந்து பார்த்தார்.

"இது மிகவும் ஆழமான கிணறு. அடியில் தண்ணீர் இருக்கிறதா, இல்லையா என்றே தெரியவில்லை" என்று அக்பர் கூறவும், அதைக் கேட்ட பீர்பால், "பிரபு! தண்ணீர் இருக்கிறதா என்று அறிய ஒரு கல்லைத் தூக்கிப் போட்டால் தெரிந்து விடுமே! தண்ணீர் இருந்தால் கல்பட்டு தெளிக்கும்,"

என்று சொல்லிவிட்டு, கிணற்றினுள் ஒரு கல்லை எறிந்தார். கல் அடியில் சென்று விழுந்த ஒலியைக் கேட்டதுமே, கிணறு முற்றிலும் வற்றியுள்ளது என்று தெரிந்தது.

"பீர்பால்! கிணற்றினுள் ஒற்றைக் கல்லாகப் போடக் கூடாதென்று சொல்லுவார்கள். அதனால் இன்னொரு கல்லை நான் போடுகிறேன்" என்று சொல்லிக் கொண்டே, தன் விரலில் இருந்த ஒரு வைர மோதிரத்தை அக்பர் கிணற்றினுள் போட, சுற்றியிருந்த அனைவரும் திகைத்துப் போயினர்.

"பிரபு! வைரமோதிரத்தை ஏன் போட்டீர்கள்?" என்று பீர்பால் கேட்க, "வைரமும் ஒரு கல்தானே! அதனால்தான் போட்டேன்" என்றார் அக்பர்.

"ஆயினும் கல்லெல்லாம் வைரக்கல்லாகுமா? நீங்கள் செய்தது சரியா?" என்று பீர்பால் கேட்டார்.

"அதனால் என்ன, பீர்பால்! யாரையாவது கிணற்றில் இறங்கச் சொல்லி மோதிரத்தை எடுத்து விட்டால் போகிறது!" என்ற அக்பர் தொடர்ந்து, "கிணற்றுள் இறங்கினால் யார் வேண்டுமானாலும் மோதிரத்தை எடுத்து விடலாம். ஆனால் யாராவது கிணற்றுக்குள் இறங்காமலே அந்த மோதிரத்தை எடுக்க முடியுமா?" என்று கேட்டார்.

"பிரபு! எனக்கு யோசனை தோன்றிவிட்டது!" என்று பீர்பால் உற்சாகத்துடன் கூற, "அப்படியா? நீ எப்படி மோதிரத்தை கிணற்றுள் இறங்காமலே எடுப்பாய்?" என்று ஆர்வத்துடன் அக்பர் கேட்டார்.

பீர்பால் ஒரு நூலை எடுத்து அதன் ஒரு முனையில் கல் ஒன்றக் கட்டினார். அந்தக் கல்லை கிணற்றுக்கடியில் இருந்த ஈரமான சானத்தில் நன்றாக முக்கினார். நூலின் மறுமுனையை கிணற்றுக்கருகே இருந்த ஒரு மரத்துடன் சேர்த்துக் கட்டினார். சானத்துடன் இருந்த கல்லை கிணற்றுக்குள்ளிருந்த வைரக்கல் மீது குறிபார்த்து எரிந்தார். அந்த கல் வைர மோதிரத்தின் மீது நன்றாக ஒட்டிக் கொண்டது.

அங்கிருந்த காவலர்களை அதைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு பீர்பால் வீடு திரும்பினார். வீடு திரும்பியபின் உணவருந்தி விட்டு நிம்மதியாகத் தூங்கினார். பிறகு மாலையில் எழுந்து கிணற்றை நோக்கிச் சென்றார். காலையில் அவர் வீசியெறிந்த சாணம் வெயிலில் நன்றாகக் காய்ந்து உலந்திருந்தது. அதன் மீது அவர் வீசிய கல்லும் மோதிரமும் சாணத்துடன் நன்றாக ஒட்டிக் கொண்டிருந்தது.

பிறகு பீர்பால் மிகவும் நிதானமாகவும், ஜாக்கிரதையாகவும் நூலைப் பிடித்து மேலே இழுக்க, கல் கிணற்றுக்குள்இருந்து மேலே வந்துவிட்டது. கல்லில் ஒட்டிய சாணமும் உலர்ந்து போய் அதனுடன் சேர்ந்து பத்திரமாக இருந்தது. அதிலிருந்து மோதிரத்தை எடுத்து, சுத்தமாகக் கழுவியபின், பீர்பால் அரண்மனை தர்பாருக்குச் சென்றார்.

அந்த நேரத்தில் அக்பர் தர்பாரில் தன் அதிகாரிகளுடன் அமர்ந்திருந்தார். அவரை வணங்கிய பீர்பால், "பிரபு! நான் வெற்றிகரமாகத் தங்கள் மோதிரத்துடன் வந்திருக்கிறேன்" என்றதும் அக்பருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

"கிணற்றுள் இறங்காமலேயே மோதிரத்தை எடுக்க உன்னால் எப்படி முடிந்தது?" என்று அக்பர் ஆவலுடன் கேட்க "மூளையைப் பயன்படுத்தினால் முடியாதது ஒன்றுமில்லை என்று நீங்கள் சொன்னதை நிரூபித்து விட்டேன்" என்று கூறிய பீர்பால், தான் மோதிரத்தை மீட்டதை விளக்கிக் கூறினார்.

"பலே! சபாஷ்! உன்னைப் போல் புத்திசாலியை நான் பார்த்ததே இல்லை!" என்று பாராட்டிய அக்பர் பொற்காசுகள் நிரம்பிய பையை பீர்பாலுக்குப் பரிசளித்தார்.

Friday, May 15, 2009

அக்பர் பீர்பால் கதைகள்


ஒரு நாள் அக்பரும் பீர்பாலும் மாறு வேடத்தில் நகர்வலம் வந்தனர். அப்போது குருடர்களும், உடல் ஊன‌முற்றவர்களும், வயோதிகர்களுமாகப் பலர் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தனர்.

அக்பர் மிகவும் வேதனை அடைந்தார். பீர்பாலைப் பார்த்து, "பீர்பாலே, இவர்களைப் பார்க்கும் போது மிகவும் பரிதாபமாக இருக்கிறது. அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.  

இருவரும் ஆலோசனை செய்து அரசாங்க சார்பில் அவர்களுக்கு இலவ‌சமாக உணவு வழங்குவது என்று முடிவு செய்தனர். 

அதன் படி ஊனமுற்றோருக்கும் ஆதரவ‌ற்ற முதியவர்களுக்கும் இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

நாளுக்கு நாள் பிச்சைக்காரர்கள் கூட்டம் கணக்கில்லாமல் அதிகமாகியது. உழைக்க விரும்பாத சோம்பேறிகள் ஊனமுற்றவர்கள் போல் வேடமிட்டு இலவச உணவை உண்டு காலத்தைப் போக்க ஆரம்பித்து விட்டனர்.  

அரசு உணவிற்காக செலவிடும் தொகை நாளுக்கு நாள் பெருகி கருவூலமே காலியாகும் நிலை ஏற்பட்டு விட்டது. பயந்து போன அக்பர் அவசரமாக பீர்பாலுடன் ஆலோசனை நடத்தினார். போலிப் பிச்சைக்காரர்களைக் கண்டறிவது எப்படி என்று பீர்பால் சிந்தித்தார். "அரசே, நாளை மதியம் இதற்கு முடிவு கட்டி விடுவோம்" என்றார். 

மறுநாள் இலவச உணவு உண்பதற்காக எண்ணற்றவர்கள் கூடினர். அப்போது உணவு அளிப்பது ஒரு மணி நேரம் தாமதப்படுத்தப்பட்டது. இதனால் கூச்சல் குழப்பம் ஏற்ப்பட்டது. 

அப்போது ஒரு அதிகாரி கூட்டத்தினரைப் பார்த்து "இன்று முதல் வடக்கேயுள்ள புதிய சத்திரத்தில் உணவளிக்கப்படும்" என்று தெரிவித்தார். இதனைக் கேட்ட போலிப் பிச்சைக்காரர்கள் பாத்திரத்தைத் தூக்கிக் கொண்டு அலறியடித்து புதிய சத்திரத்துக்கு ஓடினர்.  

உண்மையாகவே கண்பார்வையற்றவர்களும், ஊனமுற்றவர்களும் மட்டுமே அங்கேயே இருந்து விட்டனர். அவர்களுக்கு மட்டுமே உணவு வழங்கப்பட்டது. அதன் பிறகு போலிப் பிச்சைக்காரர்கள் எவருமே அங்கு வருவதில்லை. 

பீர்பாலின் சமயோசித அறிவாற்றலை எண்ணி அக்பர் வியந்தார்.

Saturday, May 2, 2009

அக்பர் பீர்பால் கதைகள்



பீர்பாலின் நுண்ணறிவும், சமயோசித ஆற்றலும், அவருடைய தீராத பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் மதி நுட்பமும் ஏற்படுத்திய புகழ் நம் நாட்டில் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் பரவியது. பாரசீக மன்னர் பீர்பாலின் மதியூகம் பற்றிக் கேள்விப்பட்டார். 

வியத்தகு ஆற்றல் படைத்த மனிதரை நேரில் காண ஆர்வம் கொண்டார். பீர்பாலைத் தனது நாட்டிற்கு சிறப்பு விருந்தினராகச் சில நாட்கள் அனுப்பி வைகுமாறு அக்பர் மகா சக்கரவர்த்திக்குப் பாரசீக மன்னர் கடிதம் எழுதிக் கேட்டுக் கொண்டார். அதனை ஏற்றுக் கொண்ட அக்பர் பாரசீக மன்னருக்குச் சில பரிசுப் பொருட்களை பீர்பாலிடம் கொடுத்து அந்நாட்டிற்கு அனுப்பி வைத்தார்.  

அங்கு பீர்பாலுக்கு சிறப்பான வரவேற்ப்பு அளிக்கப் பட்டது. பீர்பாலின் மதியூகத்தைக் காண விரும்பினார் பாரசீக மன்னர்.  

மறுநாள் பீர்பால் அரசவைக்கு அழைத்து வரப்பட்டார். இது வரை பாரசீக மன்னனை பீர்பால் கண்டதில்லை. அங்கு ஐந்து ஆசனங்கல் போடப்பட்டிருந்தன. ஐந்திலும் ஒரே மாதிரியான முகத்தோற்றம் கொண்ட ஐந்து பேர் அமர்ந்திருந்தனர். அவர்களில் உண்மையான பாரசீக மன்னர் யார் என்பதை உடனடியாக பீர்பால் கண்டறிய முடியவில்லை. 

ஐந்து பேரையும் நன்றாக உற்றுப் பார்த்தார். அவர்களில் மையமாக அமர்ந்திருந்தவர் முன் சென்று தலை வணங்கி, "மாமன்னரே! உங்களைக் காண்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.  


இதனை கேட்டு வியந்த பாரசீக மன்னர் ஷா "பீர்பாலே, என்னை எப்படி அடையாளம் கண்டு கொண்டீர்?" என்று கேட்டார். "அரசே, தங்களைத் தவிர மற்ற நால்வரின் பார்வையும் உங்கள் மீதே இருந்தன. தாங்கள் மட்டுமே என்னைப் பார்த்தீர்கள். அதனைக் கொண்டுதான் தங்களைக் கண்டறிந்தேன்" என்றார் பீர்பால்.  


பாரசீக மன்னர் பீர்பாலின் அறிவாற்றலைக் கண்டு பேருவகை அடைந்து பரிசுகள் அளித்துப் பாராட்டினார்.

அக்பர் பீர்பால் கதைகள்:


அக்பர் பீர்பால் கதைகள்:  

சக்கரவர்த்தி அக்பரின் அரண்மனையில் ஒரு பெரிய விருந்து நடைபெற்றது. ஏராளமான முக்கிய பிரமுகர்கள் அதில் கலந்து கொண்டனர்.  

அக்பரும் பீர்பாலும் அருகருகே அமர்ந்து விருந்துண்டனர். விருந்தில் விதவிதமான பண்டங்கள் பரிமாற‌பட்டன. இருவரும் சுவாரஸியமாக உரையாடிக்கொண்டே உண்டனர். 

இலையில் வைக்கப்பட்டிருந்த பலாப்பழ‌ங்களைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

பலாக்கொட்டைகளை அக்பர் வேடிக்கையாக பீர்பாலின் இலையில் அவருக்குத் தெரியாமல் வைத்துவிட்டார்.  

சாப்பிட்டு முடியும் நேரத்தில் அக்பர் பீர்பாலின் இலையைப் பார்த்துவிட்டு, "பீர்பால், எவ்வளவுதான் உமக்கு பலாப்பழத்தின் மேல் ஆசை இருந்தாலும் இவ்வளவு பழங்களா உண்பது?" என்று கேலியாகக் கூறிச் சிரித்தார்.  

குனிந்து இலையைப் பார்த்த பீர்பால் தான் தின்ற பழங்களின் கொட்டைகளையெல்லாம் மன்னர் தன்னுடைய இலையில் வைத்துவிட்டதைக் கண்டு கொண்டார். 

"அரசர் பெருமானே! நானாவது பழங்களைத் தின்று விட்டுக் கொட்டையை இலையில் வைத்துவிட்டேன். நீங்கள் பலாக்கொட்டையையும் சேர்த்து அல்லவா தின்று வெட்டீர்கள். உங்கள் இலையில் கொட்டையே இல்லையே!" என்று கூறிச் சிரித்தார்.  

பீர்பாலுடைய சமயோசிதக் கிண்டலைக் கேட்டு மன்னர் பெருவகை அடைந்தார்.