Showing posts with label akbar. Show all posts
Showing posts with label akbar. Show all posts

Thursday, October 14, 2010

அக்பர் பீர்பால் கதைகள் - 4





பீர்பாலை அமைச்சர் பதவியில் இருந்து விரட்ட அவரது எதிரிகள் பல முயற்சிகள் செய்து தோற்றுப்போயிருந்தனர். அவர்கள் அனைவரும் அரசியாரின் தம்பியை அனுகி பீர்பாலை அரசவையிலிருந்து நீக்க ஏதாவது செய்தால் அந்த இடத்தில் உங்களை இருத்தலாம் என்றும் இதனால் நீங்கள் மன்னருக்கு நெருக்கமாக இருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் தூபம் போட்டனர். பதவி ஆசை முற்றியதாலும் மன்னருக்கு மிக நெருக்கமான முறையில் பீர்பால் இருப்பதால் ஏற்பட்ட காழ்புணர்ச்சியாலும் அரசியாரின் தம்பி இதற்கு சம்மதித்தான்.

அவன் அரசியாரிடம் சென்று ஏதாவது நாடகமாடி பீர்பாலை தொலைத்துக் கட்டு. இல்லையேல் நான் தற்கொலை செய்து கொள்வதை தவிற எனக்கு வேறு வழியில்லை என்றும் மிரட்டலானான். அரசியும் தம்பியின் மேலிருந்த பாசத்தால் நாடகமாட சம்மதித்தாள். அவன் கூறிய திட்டப்படி அன்று அரசி நாடகமாடினாள்.

அன்று மன்னர் அந்தப்புரத்திற்கு வந்தபோது அரசியார் அழுது கொண்டிருந்தாள். மன்னர் அதிர்ந்தார். காரணம் வினவினார். அரசியோ பீர்பால் மிகவும் செருக்குற்று இருப்பதாகவும் அரசியாகிய தன்னை மதியாமல் நடந்து கொள்வதாகவும் அவரை பதவியில் இருந்து நீக்கவேண்டும் எனவும் கூறி விம்மலானாள். அரசர் மேலும் அதிர்ந்தார். "பீர்பாலை எந்த காரணமும் இல்லாமல் எப்படி பதவி நீக்கம் செய்வது?. அவர் போல அற்புத மனிதர் கிடைக்கமாட்டார். இதோ பார், அவர் உன்னை மதிக்குமாறு நடந்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று கூறு. அதைச் செய்வோம். அது நடக்கவில்லை என்றால் நீ கூறுவதைப் போல அவரை பதவி நீக்கம் நீக்கம் செய்யலாம். என்ன சரியா?" என்றார் மன்னர்.

அரசியும் சம்மதித்தார். அரசியின் யோசனைப்படி இதற்காக ஒரு நாடகமாட இருவரும் தீர்மானித்தனர். அரசி கூறியதாவது "நீங்கள் என்னிடம் சண்டை போட்டுக் கொண்டு வெளியேறிச் சென்றது போல நடியுங்கள். பீர்பால் சமரசம் செய்ய வருவார். நீங்கள் அரண்மனைக்கு வர மறுத்துப் பிடிவாதம் பிடிக்க வேண்டும். உன்னால் முடிந்தால் மகாராணியாரை இங்கே வந்து பார்க்கச் சொல்" என்று சவால் விடுங்கள். இதில் தோற்றால் அமைச்சர் பதவியிலிருந்து விலகத் தயாரா? என்று கேளுங்கள். அதற்கு அவர் சம்மதம் தெரிவிப்பார். என்னைச் சமாதானம் செய்ய வருவார். என்னிடம் மரியாதையாக நடந்து கொண்டால் நான் மதித்து வருவேன். இல்லையேல் நான் மிகவும் பிடிவாதமாக வர மறுத்து விடுவேன். அவர் முயற்சியில் தோற்பார். தானாகவே பதவியை விட்டு விலகி விடுவார்." என்று யோசனை கூறினார்.

மன்னரும் இதற்கு சம்மதித்தார். மன்னருக்கு பீர்பால் தான் வெல்வார் என்று நன்றாகத் தெரியும். மறுநாள் மன்னர் அரசியிடம் கோபப்பட்டு அரன்மனையை விட்டு வெளியேறிவிட்டார் என்று செய்தி காட்டுத் தீ போல பரவியது. பதறிய பீர்பால் மன்னரைச் சென்று பார்த்தார். மன்னரோ திட்டமிட்டபடி "பீர்பால், நான் அரண்மனைக்குத் திரும்ப வேண்டுமானால் எனது ஒரு நிபந்தனையை நீர் நிறைவேற்ற வேண்டும்" என்றார்.

"எந்த நிபந்தனை என்றாலும் சொல்லுங்கள். நான் நிறைவேற்றுகிறேன்"

"அது உம்மால் முடியாது"

"நிச்சயம் முடியும்"

"முடியாது, ஒரு வேளை நீர் தோற்றால்.."

"நான் அமைச்சர் பதவியை விட்டே விலகிவிடுகிறேன்"

எல்லாம் திட்டப்படி நடப்பதால் மன்னர் புன்னகைத்தார்.

"பீர்பால், கோபித்துக் கொண்ட நான் தானாகவே அரன்மனை திரும்பமாட்டேன். அரசியார் என்னை இங்கே வந்து அழைத்துச் சென்றால் தான் வருவேன். உன்னால் முடிந்தால் அவரை இங்கே அழைத்து வா" என்றார் அக்பர்.

இதைக் கேட்ட மாத்திரத்தில் இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாகவே பீர்பால் மனதிற்கு தோன்றியது. அவர் அரசியை வரவழைக்கத் திட்டம் போட்டார்.

கண்களில் கண்ணீருடன் அரசியை சந்தித்தார் பீர்பால். "பீர்பால் என்ன நடந்தது? ஏன் இந்தக்
கண்ணீர்?"

"என்ன சொல்வது அரசியாரே, மன்னர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இப்படி பாதை மாறி போகிறாரே. மனம் வெறுத்துப் போனதால் நான் பதவி விலகிவிட்டேன்"

"என்ன? விலகிவிட்டீர்களா...? தெளிவாகச் சொல்லுங்கள்.. மன்னர் நீக்கினாரா? நீங்களே
விலகினீர்களா?"

"அரசியாரே.. நானே விலகிக்கொண்டேன்."

"காரணம்.?"

"என்னதான் உங்கள் மீது கோபம் இருந்தாலும் உங்களுக்கு துரோகம் செய்வதுபோல மன்னர் நடந்து கொள்வாரா? நான் எப்படிச் சொல்வேன்.. அரசியாரே..உங்களை நிரந்தரமாக ஒதுக்கி வைத்து விட்டு மன்னர் வேறு திருமணம் செய்ய பிடிவாதமாக ஏற்பாடுகள் செய்து வருகிறார்"
என்றார் பீர்பால்.

அரசிக்குத் தூக்கிவாரிப்போட்டது. விளையாட்டுக்குத்தானே சண்டை போட்டேன். மன்னர் நிஜமென்று நம்பிவிட்டாரா என எண்ணிக் குழம்பினாள். அவளால் அமைதியாக இருக்க முடியவில்லை. உடனே பீர்பாலை அழைத்துக் கொண்டு மன்னரிருக்கும் இடம் தேடி ஓடலானாள்.

பீர்பாலுடன் அரசியார் வருவதைக் கண்ட அக்பர் மகிழ்ந்தார். தான் நினைத்தது போலவே பீர்ப்பால் சவாலில் ஜெயித்ததை கண்டு பூரிப்படைந்தார். மிகுந்த பதைபதைப்புடன் வந்த அரசியை சமாதானப்படுத்தினார் அக்பர்.

பீர்பாலும் அரசியிடம் தான் நடத்திய நாடகத்தை தெரிவித்தார். அரசி பீர்பாலின் புத்தி சாதுர்யத்தைக் கண்டு மிகவும் பாராட்டினார். இருவரும் மகிழ்ச்சியுடன் பீர்பாலுக்கு அன்பளிப்புக்கள் கொடுத்து மகிழ்வித்தனர்.

அந்த நாள்முதல் அரசி பீர்பாலை விரட்டும் எண்ணத்தை அடியோடு கைவிட்டார்.


அந்த அரசனும் அரசியும் இவங்கதானோ!




.

Saturday, October 31, 2009

அக்பர் பீர்பால் கதைகள்!


கிணற்றுக்குள் விழுந்த வைர மோதிரம்!

ஒரு நாள் அதிகாலையில், சக்ரவர்த்தி அக்பர், சில அதிகாரிகள் புடைசூழ வெளியே உலாவக் கிளம்பினார். பீர்பலும் அவர் கூடவே சென்றார்.

அக்பர் கோடையின் கொடுமையைப் பற்றி பேசிக் கொண்டே வந்தார். அவர்கள் செல்லும் வழியில் ஒரு கிணறு தென்பட்டது. அதைப் பார்த்த அக்பர், "தலைநகரில்உள்ள கிணறுகள் யாவும் வற்றி விட்டன என்று கேள்விப்பட்டேன். இந்தக் கிணற்றில் தண்ணீர் இருக்கிறதா பார்ப்போம்" என்று சொல்லிக் கொண்டே அதன் அருகில் சென்று குனிந்து பார்த்தார்.

"இது மிகவும் ஆழமான கிணறு. அடியில் தண்ணீர் இருக்கிறதா, இல்லையா என்றே தெரியவில்லை" என்று அக்பர் கூறவும், அதைக் கேட்ட பீர்பால், "பிரபு! தண்ணீர் இருக்கிறதா என்று அறிய ஒரு கல்லைத் தூக்கிப் போட்டால் தெரிந்து விடுமே! தண்ணீர் இருந்தால் கல்பட்டு தெளிக்கும்,"

என்று சொல்லிவிட்டு, கிணற்றினுள் ஒரு கல்லை எறிந்தார். கல் அடியில் சென்று விழுந்த ஒலியைக் கேட்டதுமே, கிணறு முற்றிலும் வற்றியுள்ளது என்று தெரிந்தது.

"பீர்பால்! கிணற்றினுள் ஒற்றைக் கல்லாகப் போடக் கூடாதென்று சொல்லுவார்கள். அதனால் இன்னொரு கல்லை நான் போடுகிறேன்" என்று சொல்லிக் கொண்டே, தன் விரலில் இருந்த ஒரு வைர மோதிரத்தை அக்பர் கிணற்றினுள் போட, சுற்றியிருந்த அனைவரும் திகைத்துப் போயினர்.

"பிரபு! வைரமோதிரத்தை ஏன் போட்டீர்கள்?" என்று பீர்பால் கேட்க, "வைரமும் ஒரு கல்தானே! அதனால்தான் போட்டேன்" என்றார் அக்பர்.

"ஆயினும் கல்லெல்லாம் வைரக்கல்லாகுமா? நீங்கள் செய்தது சரியா?" என்று பீர்பால் கேட்டார்.

"அதனால் என்ன, பீர்பால்! யாரையாவது கிணற்றில் இறங்கச் சொல்லி மோதிரத்தை எடுத்து விட்டால் போகிறது!" என்ற அக்பர் தொடர்ந்து, "கிணற்றுள் இறங்கினால் யார் வேண்டுமானாலும் மோதிரத்தை எடுத்து விடலாம். ஆனால் யாராவது கிணற்றுக்குள் இறங்காமலே அந்த மோதிரத்தை எடுக்க முடியுமா?" என்று கேட்டார்.

"பிரபு! எனக்கு யோசனை தோன்றிவிட்டது!" என்று பீர்பால் உற்சாகத்துடன் கூற, "அப்படியா? நீ எப்படி மோதிரத்தை கிணற்றுள் இறங்காமலே எடுப்பாய்?" என்று ஆர்வத்துடன் அக்பர் கேட்டார்.

பீர்பால் ஒரு நூலை எடுத்து அதன் ஒரு முனையில் கல் ஒன்றக் கட்டினார். அந்தக் கல்லை கிணற்றுக்கடியில் இருந்த ஈரமான சானத்தில் நன்றாக முக்கினார். நூலின் மறுமுனையை கிணற்றுக்கருகே இருந்த ஒரு மரத்துடன் சேர்த்துக் கட்டினார். சானத்துடன் இருந்த கல்லை கிணற்றுக்குள்ளிருந்த வைரக்கல் மீது குறிபார்த்து எரிந்தார். அந்த கல் வைர மோதிரத்தின் மீது நன்றாக ஒட்டிக் கொண்டது.

அங்கிருந்த காவலர்களை அதைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு பீர்பால் வீடு திரும்பினார். வீடு திரும்பியபின் உணவருந்தி விட்டு நிம்மதியாகத் தூங்கினார். பிறகு மாலையில் எழுந்து கிணற்றை நோக்கிச் சென்றார். காலையில் அவர் வீசியெறிந்த சாணம் வெயிலில் நன்றாகக் காய்ந்து உலந்திருந்தது. அதன் மீது அவர் வீசிய கல்லும் மோதிரமும் சாணத்துடன் நன்றாக ஒட்டிக் கொண்டிருந்தது.

பிறகு பீர்பால் மிகவும் நிதானமாகவும், ஜாக்கிரதையாகவும் நூலைப் பிடித்து மேலே இழுக்க, கல் கிணற்றுக்குள்இருந்து மேலே வந்துவிட்டது. கல்லில் ஒட்டிய சாணமும் உலர்ந்து போய் அதனுடன் சேர்ந்து பத்திரமாக இருந்தது. அதிலிருந்து மோதிரத்தை எடுத்து, சுத்தமாகக் கழுவியபின், பீர்பால் அரண்மனை தர்பாருக்குச் சென்றார்.

அந்த நேரத்தில் அக்பர் தர்பாரில் தன் அதிகாரிகளுடன் அமர்ந்திருந்தார். அவரை வணங்கிய பீர்பால், "பிரபு! நான் வெற்றிகரமாகத் தங்கள் மோதிரத்துடன் வந்திருக்கிறேன்" என்றதும் அக்பருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

"கிணற்றுள் இறங்காமலேயே மோதிரத்தை எடுக்க உன்னால் எப்படி முடிந்தது?" என்று அக்பர் ஆவலுடன் கேட்க "மூளையைப் பயன்படுத்தினால் முடியாதது ஒன்றுமில்லை என்று நீங்கள் சொன்னதை நிரூபித்து விட்டேன்" என்று கூறிய பீர்பால், தான் மோதிரத்தை மீட்டதை விளக்கிக் கூறினார்.

"பலே! சபாஷ்! உன்னைப் போல் புத்திசாலியை நான் பார்த்ததே இல்லை!" என்று பாராட்டிய அக்பர் பொற்காசுகள் நிரம்பிய பையை பீர்பாலுக்குப் பரிசளித்தார்.

Wednesday, October 14, 2009

அக்பர் பீர்பால் கதைகள்!


குளிரில் நின்றால் பரிசு

ஒரு நாள் இரவு நேரத்தில் அக்பரும், பீர்பாலும் உரையாடிக்கொண்டிருந்தார்கள். குளிர் அதிகமாக இருந்ததால் சால்வையை இருக்கமாக இருவரும் போர்த்திக்கொண்டிருந்தனர். அப்படியும் குளிர் அக்பரை மிகவும் வாட்டியெடுத்தது.

அக்பர் பீர்பாலை பார்த்து " பீர்பால் இந்த குளிரின் கொடுமையை பார்த்தீரா... எதிரிகளுக்கு அஞ்சாத நெஞ்சம் இருந்தும் இந்த குளிருக்கு அஞ்சாமல் இருக்க முடியவில்லையே! இந்த குளிரை பொருட்படுத்தாமல், யமுனை ஆற்றில் ஒரு இரவு முழுக்க, கழுத்தளவு நீரில் யாராலும் நிற்க இயலுமோ! அவ்வாறு நின்றால், அவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாக வழங்கலாம்" என்றார்.

"அரசே, சிங்கத்தின் முடியை கூட கொண்டு வந்துவிடலாம். ஆனால் நடுங்கும் குளிரில் இரவு முழுவது ஆற்றில் நிற்பது என்பது சதாரண காரியமா?" என்றார் பீர்பால்.

"யமுனை ஆற்றில் குளிரில் நிற்பதற்கு எந்தவித திறமையும் தேவையில்லை, மன உறுதி இருந்தாலே போதும்! நாடு முழுவதும் இந்த செய்தியை அறிவிக்க சொல்லுங்கள்! பணத்தின் மீது ஆசைப்பட்டு நிறைய பேர் பங்கு பெற வருவார்கள். அதில் யார் வெற்றி பெறுவார்கள் எனப்பார்ப்போம்" என்றார் அக்பர்.

அரசரின் ஆணை நாடெங்கும் அறிவிக்கப்பட்டது. அடுத்த நாளே, ஒரு இளைஞன் அரசரிடம் வந்து " அரசே, யமுனை நதியில் கழுத்தளவு நீரில் இரவு முழுவதும் நிற்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்" என்றான்.

அக்பர் அந்த இளைஞனை வியப்பாக பார்த்து "இன்று இரவு போட்டிக்கு தயாராகு" என்றார். இளைஞனும் தயாரானான். நடுங்கும் குளிரில் நிற்பது சதாரண விசயமில்லையே என நினைத்த அக்பர், அந்த இளைஞனை கண்காணிப்பதற்கு இரண்டு காவலாளிகளை நியமித்தார்.

யமுனை ஆற்றில் வெற்று உடம்புடன் இறங்கினான் இளைஞன். கழுத்தளவு வரை நீர் உள்ள இடத்தில் நின்று கொண்டான். உடல் மிகவும் நடுங்கியது, குளிர் வாட்டியது, அவனால் தாக்குபிடிக்கமுடியவில்லை. ஆனாலும் பரிசாக கிடைக்கப்போகும் ஆயிரம் பொற்காசுகளை எண்ணி பார்த்தான். புது தெம்பு வரவே, இரவு முழுவதும் கண் விழித்து நின்று கொண்டிருந்தான்.

பொழுது விடிந்தது. வெயில் மேனியில் பட உடல் சீரான நிலைக்கு வந்தது. ஆயிரம் பொற்காசுகளை பெறப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் ஆற்றை விட்டு மேலே வந்தான். அவனை காவலாளிகள் மன்னரிடம் அழைத்து சென்று இரவு முழுவது இளைஞன் கழுத்தளவு நீருக்குள் நின்றதை கூறினார்கள்.

அக்பருக்கோ மிகவும் வியப்பாக இருந்தது. "இளைஞனே உன் மன உறுதியை பாராட்டுகிறேன்! அந்த இரவில், கடும்குளிரில் நீருக்குள் எப்படி இருந்தாய்? அப்படி நிற்கும்போது உனக்கு எந்த வகையிலும், ஏதாவது துணையாக இருந்ததா? என்றார் அக்பர். அந்த இளைஞனும் அப்பாவியாய் "அரசே அரண்மனையின் மேல் மாடத்தில் எரிந்து கொண்டிருந்த சிறிய விளக்கின் ஒளியை பார்த்துக்கொண்டே இரவுப்பொழுதை கழித்தேன்" என்றான்.

"இளைஞனே அதானே பார்த்தேன். நடுங்கும் குளிரில் தண்ணீருக்குள் எப்படி உன்னால் இருக்க முடிந்தது என்று இப்பொழுது புரிகிறது! உன் குளிரை போக்க அரண்மனையிலிருந்து வீசிய விளக்கின் ஒளி உனக்கு உதவி செய்திருக்கிறது. அந்த சூட்டில் தான் இரவு முழுவது நின்றிருக்கிறாய். எனவே உனக்கு ஆயிரம் பொற்காசுகள் கிடையாது" என்றார்.

பரிசுத்தொகை கிடைக்கவில்லை என்றதும் அந்த இளைஞன் மிகவும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றான். பீர்பால் அவனை கண்டு என்னவென்று விசாரிக்க. இளைஞனும் பீர்பாலிடம் எல்லாவற்றையும் சொன்னான். பீர்பால் அவனுக்கு ஆறுதல் கூறி பரிசு தொகையை கிடைக்க உதவி செய்வதாக உறுதியளித்தார்.

சில நாட்களுக்கு பிறகு, அக்பர் வேட்டையாட புறப்பட்டுக்கொண்டிருந்தார். பீர்பாலை தம்முடன் அழைத்து செல்ல எண்ணிய அக்பர் காவலாளியை கூப்பிட்டு பீர்பால் வீட்டுக்கு சென்று அழைத்து வரச்சொன்னார்.

பீர்பால் தன்னை தேடி வந்த காவலாளியிடம் தான் சமையல் சென்று கொண்டிருப்பதையும், சாப்பிட்டு விட்டு வருவதாகவும் கூறினார். நீண்ட நேரம் பீர்பாலுக்காக அக்பர் காத்திருந்தார். பீர்பால் வரவில்லை. மிகவும் கோபமடைந்த அரசர் பீர்பாலின் வீட்டுக்கு சென்று பார்த்துவிட்டு வரலாம் எனப்புறப்பட்டார். பீர்பால் வீட்டில் ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு தண்ணீர் ஊற்றி வைத்திருந்தார். பாத்திரத்திலிருந்து பத்தடி தூரம் தள்ளி அடுப்பை வைத்திருந்தார். அடுப்பில் விறகுகள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. இதை கண்ட அக்பருக்கு ஒன்றும் புரியவில்லை. பீர்பாலிடமே கேட்டார்.

"பீர்பால் தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" அக்பர்.
"அரசே சமையல் செய்து கொண்டிருக்கிறேன்" பீர்பால்.

"உமக்கு என்ன மூளை குழம்பி விட்டதா? பாத்திரம் ஒரு பக்கம் இருக்கிறது. அடுப்பு ஒரு பக்கம் இருக்கிறது. அதில் எப்படி சோறு வேகும்?" என்றார் அக்பர் கோபத்துடன்.

"அரசே நிச்சயம் சோறு வேகும். யமுனை ஆற்றில் தண்ணீரில் இருந்தவனுக்கு அரண்மனையில் இருந்த விளக்கின் வெளிச்சம் சூட்டை தந்திருக்கும்போது மிகவும் பக்கத்தில் இருக்கிற அடுப்பில் ஏற்படும் சூடு அரிசி பாத்திரத்தில் பட்டும் சோறு வெந்து விடாமல் போகுமா?' என்றார் பீர்பால்.

மிகவும் நாசூக்காக தமக்கு புரிய வைத்த பீர்பாலை பாராட்டி அந்த இளைஞனை வரவழைத்து... முன்பு கூறிய படியே ஆயிரம் பொற்காசுகளை கொடுத்தார்.

Friday, May 15, 2009

அக்பர் பீர்பால் கதைகள்


ஒரு நாள் அக்பரும் பீர்பாலும் மாறு வேடத்தில் நகர்வலம் வந்தனர். அப்போது குருடர்களும், உடல் ஊன‌முற்றவர்களும், வயோதிகர்களுமாகப் பலர் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தனர்.

அக்பர் மிகவும் வேதனை அடைந்தார். பீர்பாலைப் பார்த்து, "பீர்பாலே, இவர்களைப் பார்க்கும் போது மிகவும் பரிதாபமாக இருக்கிறது. அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.  

இருவரும் ஆலோசனை செய்து அரசாங்க சார்பில் அவர்களுக்கு இலவ‌சமாக உணவு வழங்குவது என்று முடிவு செய்தனர். 

அதன் படி ஊனமுற்றோருக்கும் ஆதரவ‌ற்ற முதியவர்களுக்கும் இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

நாளுக்கு நாள் பிச்சைக்காரர்கள் கூட்டம் கணக்கில்லாமல் அதிகமாகியது. உழைக்க விரும்பாத சோம்பேறிகள் ஊனமுற்றவர்கள் போல் வேடமிட்டு இலவச உணவை உண்டு காலத்தைப் போக்க ஆரம்பித்து விட்டனர்.  

அரசு உணவிற்காக செலவிடும் தொகை நாளுக்கு நாள் பெருகி கருவூலமே காலியாகும் நிலை ஏற்பட்டு விட்டது. பயந்து போன அக்பர் அவசரமாக பீர்பாலுடன் ஆலோசனை நடத்தினார். போலிப் பிச்சைக்காரர்களைக் கண்டறிவது எப்படி என்று பீர்பால் சிந்தித்தார். "அரசே, நாளை மதியம் இதற்கு முடிவு கட்டி விடுவோம்" என்றார். 

மறுநாள் இலவச உணவு உண்பதற்காக எண்ணற்றவர்கள் கூடினர். அப்போது உணவு அளிப்பது ஒரு மணி நேரம் தாமதப்படுத்தப்பட்டது. இதனால் கூச்சல் குழப்பம் ஏற்ப்பட்டது. 

அப்போது ஒரு அதிகாரி கூட்டத்தினரைப் பார்த்து "இன்று முதல் வடக்கேயுள்ள புதிய சத்திரத்தில் உணவளிக்கப்படும்" என்று தெரிவித்தார். இதனைக் கேட்ட போலிப் பிச்சைக்காரர்கள் பாத்திரத்தைத் தூக்கிக் கொண்டு அலறியடித்து புதிய சத்திரத்துக்கு ஓடினர்.  

உண்மையாகவே கண்பார்வையற்றவர்களும், ஊனமுற்றவர்களும் மட்டுமே அங்கேயே இருந்து விட்டனர். அவர்களுக்கு மட்டுமே உணவு வழங்கப்பட்டது. அதன் பிறகு போலிப் பிச்சைக்காரர்கள் எவருமே அங்கு வருவதில்லை. 

பீர்பாலின் சமயோசித அறிவாற்றலை எண்ணி அக்பர் வியந்தார்.

Saturday, May 2, 2009

அக்பர் பீர்பால் கதைகள்



பீர்பாலின் நுண்ணறிவும், சமயோசித ஆற்றலும், அவருடைய தீராத பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் மதி நுட்பமும் ஏற்படுத்திய புகழ் நம் நாட்டில் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் பரவியது. பாரசீக மன்னர் பீர்பாலின் மதியூகம் பற்றிக் கேள்விப்பட்டார். 

வியத்தகு ஆற்றல் படைத்த மனிதரை நேரில் காண ஆர்வம் கொண்டார். பீர்பாலைத் தனது நாட்டிற்கு சிறப்பு விருந்தினராகச் சில நாட்கள் அனுப்பி வைகுமாறு அக்பர் மகா சக்கரவர்த்திக்குப் பாரசீக மன்னர் கடிதம் எழுதிக் கேட்டுக் கொண்டார். அதனை ஏற்றுக் கொண்ட அக்பர் பாரசீக மன்னருக்குச் சில பரிசுப் பொருட்களை பீர்பாலிடம் கொடுத்து அந்நாட்டிற்கு அனுப்பி வைத்தார்.  

அங்கு பீர்பாலுக்கு சிறப்பான வரவேற்ப்பு அளிக்கப் பட்டது. பீர்பாலின் மதியூகத்தைக் காண விரும்பினார் பாரசீக மன்னர்.  

மறுநாள் பீர்பால் அரசவைக்கு அழைத்து வரப்பட்டார். இது வரை பாரசீக மன்னனை பீர்பால் கண்டதில்லை. அங்கு ஐந்து ஆசனங்கல் போடப்பட்டிருந்தன. ஐந்திலும் ஒரே மாதிரியான முகத்தோற்றம் கொண்ட ஐந்து பேர் அமர்ந்திருந்தனர். அவர்களில் உண்மையான பாரசீக மன்னர் யார் என்பதை உடனடியாக பீர்பால் கண்டறிய முடியவில்லை. 

ஐந்து பேரையும் நன்றாக உற்றுப் பார்த்தார். அவர்களில் மையமாக அமர்ந்திருந்தவர் முன் சென்று தலை வணங்கி, "மாமன்னரே! உங்களைக் காண்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.  


இதனை கேட்டு வியந்த பாரசீக மன்னர் ஷா "பீர்பாலே, என்னை எப்படி அடையாளம் கண்டு கொண்டீர்?" என்று கேட்டார். "அரசே, தங்களைத் தவிர மற்ற நால்வரின் பார்வையும் உங்கள் மீதே இருந்தன. தாங்கள் மட்டுமே என்னைப் பார்த்தீர்கள். அதனைக் கொண்டுதான் தங்களைக் கண்டறிந்தேன்" என்றார் பீர்பால்.  


பாரசீக மன்னர் பீர்பாலின் அறிவாற்றலைக் கண்டு பேருவகை அடைந்து பரிசுகள் அளித்துப் பாராட்டினார்.

அக்பர் பீர்பால் கதைகள்:


அக்பர் பீர்பால் கதைகள்:  

சக்கரவர்த்தி அக்பரின் அரண்மனையில் ஒரு பெரிய விருந்து நடைபெற்றது. ஏராளமான முக்கிய பிரமுகர்கள் அதில் கலந்து கொண்டனர்.  

அக்பரும் பீர்பாலும் அருகருகே அமர்ந்து விருந்துண்டனர். விருந்தில் விதவிதமான பண்டங்கள் பரிமாற‌பட்டன. இருவரும் சுவாரஸியமாக உரையாடிக்கொண்டே உண்டனர். 

இலையில் வைக்கப்பட்டிருந்த பலாப்பழ‌ங்களைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

பலாக்கொட்டைகளை அக்பர் வேடிக்கையாக பீர்பாலின் இலையில் அவருக்குத் தெரியாமல் வைத்துவிட்டார்.  

சாப்பிட்டு முடியும் நேரத்தில் அக்பர் பீர்பாலின் இலையைப் பார்த்துவிட்டு, "பீர்பால், எவ்வளவுதான் உமக்கு பலாப்பழத்தின் மேல் ஆசை இருந்தாலும் இவ்வளவு பழங்களா உண்பது?" என்று கேலியாகக் கூறிச் சிரித்தார்.  

குனிந்து இலையைப் பார்த்த பீர்பால் தான் தின்ற பழங்களின் கொட்டைகளையெல்லாம் மன்னர் தன்னுடைய இலையில் வைத்துவிட்டதைக் கண்டு கொண்டார். 

"அரசர் பெருமானே! நானாவது பழங்களைத் தின்று விட்டுக் கொட்டையை இலையில் வைத்துவிட்டேன். நீங்கள் பலாக்கொட்டையையும் சேர்த்து அல்லவா தின்று வெட்டீர்கள். உங்கள் இலையில் கொட்டையே இல்லையே!" என்று கூறிச் சிரித்தார்.  

பீர்பாலுடைய சமயோசிதக் கிண்டலைக் கேட்டு மன்னர் பெருவகை அடைந்தார்.