Sunday, April 4, 2010

மீண்டும் மெக்காலே - 1


இதப்படிங்க முதல்ல

இந்தியாவின் நீள அகலங்கள் முழுவதும் நான் ப்ரயாணித்து விட்டேன்.
முழு இந்தியாவிலும் நான் ஒரு பிச்சைக்காரனையும் பார்க்கவில்லை.
முழு இந்தியாவிலும் நான் ஒரு திருடனையும் பார்க்கவில்லை. அப்படி
ஒரு வளமான நாடாக இந்நாடு இருக்கிறது.

இந்நாட்டு மக்கள் மிக மதிப்பு மிக்க பாரம்பரியத்தையும் உயர்ந்த தன்மைகளையும் கொண்டிருக்கிறார்கள். ஆதலால் இந்நாட்டிற்கே முதுகெலும்பாக இருக்கும் இம்மக்களின் கலாச்சார பாரம்பரியத்தை உடைக்காவிட்டால், இந்நாட்டை வெல்ல முடியும் என்று என்னால் நினைக்க முடியவில்லை.

எனவே நான் இநாட்டின் பழமையான கல்விமுறையையும் அதன் கலாச்சார பாரம்பரியத்தையும் முற்றிலும் வேறாக மாற்றி அமைக்க வழிமொழிகிறேன். அதன் மூலம் இந்தியர்களை ஆங்கிலமும் மேநாட்டுகாரர்களின் வழி முறைகளுமே நம்மைவிட உயர்ந்ததவை என்று அவர்களை எண்ண வைக்க முடியும். இவ்வாறு அவர்களை நினைக்க வைத்துவிடுவதால் அவர்கள் தங்கள் சுயமதிப்பையும் சொந்த நாட்டுக் கலாச்சாரத்தையும் இழந்து அதன் மூலம் அந்நாட்டு மக்களும் அந்நாடும் நாம் விரும்பியபடி நமது ஆளுமைக்குட்பட்ட நாடாகும்.

- லார்ட் மெக்காலே என்பவரால், 1834 ஆண்டு பிரிட்டிஷ் அரசுக்கு எழுதிய கடிதமாக மேற்கண்டவை சொல்லப்படுகிறது.

சில சுட்டிகள்: சுட்டி - 1 , சுட்டி - 2 , சுட்டி - 3


அந்நிய முதலீட்டில் பல்கலைக் கழகங்கள்!

பாரம்பரியமும், சுய மதிப்பும் வாய்த்திருந்த நம் மக்களை அடிமைப்படுத்த இப்படியெல்லாம் திட்டம் போட்டு மனோவியல் ரீதியாக நம்மை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள் இந்த வெள்ளையர்கள். இப்படி ப்ரெயின் வாஷ் செய்யப்பட்ட அடிமைத்தனத்தின் வெளிப்பாடு எப்படி இருக்கும் என்பதற்கு சட்டென்று நினைத்துக்கொள்ள முடிகிற உதாரணம் வேண்டுமா? நடிகர் எம் ஆர் ராதா வின் திரைப்பட வசனங்களை நினைத்துக் கொள்ளுங்கள்.

இப்படி நம்மை அடிமைப்படுத்த இவர்கள் தேர்ந்தெடுத்த முதல் வழி, ஆங்கிலேயர்களின் கல்வி முறையை நம்மிடையே புகுத்தி நமது பாரம்பரிய கல்வி முறைகளாக இருந்தவைகளை நம்மிடமிருந்து விலக்கிவிடுவது.

நமது பாரம்பரிய கல்விமுறைகள் என்னவாக இருந்தது?. வானசாஸ்திரம், தொழிற்கல்விகள், கலைக்கல்விகள், கணிதம், மொழி, ஆன்மீகம் என்று அவரவர்க்கு ஏற்றார்போலவும், குடும்பங்களுக்கு ஏற்றார் போலவும் தேவையானவற்றைக் கல்வியாகக் கற்றுக்கொண்டனர்.

வெள்ளையர்கள் நம்மை ஆட்சி செய்த பொழுதும் சரி அதற்கு முன்னரும் சரி கணிதவியலில் நம்மக்கள் மிகவும் புத்திகூர்மை உடையவராகவே இருந்திருக்கிறார்கள்.

ஒரு வெள்ளைக்காரன், விவசாயி அடுக்கி வைத்திருக்கும் நெல் மூட்டைகளை ஒன்று இரண்டு என்று ஆள் வைத்து எண்ணிக் கொண்டிருக்கும் போது, நமது விவசாயிகளோ மேலிருந்து கீழ் இடமிருந்து வலம் என்று குறுக்குக் கணக்குப் போட்டு வினாடிகளில் இத்தனை மூட்டைகள் அடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லிவிடுவார்கள்.

இதற்கெல்லாம் ஆதாரம் தேவையில்லை. இன்றைக்குக் கூட நாகரீகத்திலும் புத்தியிலும் நான் தான் உயர்ந்தவன் என்று உலகிற்கு காட்டிக் கொண்டிருக்கும் அயல் நாடுகளில் சிறிய கணக்குப் போடவும் கால்குலேட்டரையே நம்பி இருக்கிறார்கள். அந்நாடுகளில் வசிக்கும் நம்மக்கள் ஒரு டாக்சியில் பிரயாணப்பட்டால், மீட்டர் தொகையையும் அதனோடு செலுத்த வேண்டிய வரியையும் மணக்கணக்காகவே போட்டு ஓட்டுனரிடம் கொடுத்து விடுவார்கள். அவனோ கால்குலேட்டரில் போட்டுப் பார்த்து அதை சரி என்று ஒரு புன்னகையுடன் ஒத்துக்கொள்வான்.

மனக்கணக்கில் இந்தியர்கள் வல்லவர்கள் என்று உடன் வேலைபார்க்கும் வெள்ளையர்களே ஒத்துக்கொண்ட உரையாடல்கள் பற்றியெல்லாம் நண்பர்கள் கூறுவதையும் கேட்டிருப்போம். நம்மூர் பெட்டிக்கடைக்காரர்கள் மனக் கணக்காகவே நாள் தோறும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் கல்லாக் கட்டுவதையும் பார்த்திருப்போம்.

வெள்ளையர்கள் நுண்ணோக்கியின் மூலம் பார்த்து கணக்கிட முயற்சிக்கும் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் போன்றவற்றை எல்லாம், விநாடிகள் கூட தப்பாமல் கனித்து வைத்து, பஞ்சாங்கம் என்ற பெயரில் நமக்குக் கொடுத்திருக்கிறார்கள். தினசரி சூரியன் உதிக்கும் நேரம் மறையும் நேரம், அமாவாசை பௌர்ணமி எந்த நாளில் எந்த நட்சத்திரத்தின் ஆளுமை பூமியில் இருக்கும் என்றும் நுண்ணோக்கி இல்லாமலே கணக்கிட்டிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

நம் பாரம்பரியத்தில் இருக்கும் இது போன்ற கணிதவியல் மற்றும் பிரபஞ்சவியல்
நுண்ணரிவை நமது அடுத்தத் தலைமுறைக்கு சொல்லிக் கொடுக்காமலேயே அதனை மூட நம்பிக்கை என்று சாடுவதோடு அதனை கோவில்களில் படிக்கக் கூடாது பொது இடங்களில் வெளியிடக்கூடாது என்றெல்லாம் தடை உத்தரவும் பிறப்பிக்கிறார்கள், நம் நாட்டிலேயே இருக்கும் நவீன மெக்காலேக்கள். இப்படி இந்தியப் பாரம்பரியங்களைச் சிதைத்து வெள்ளைக்காரனின் அறிவு தான் உயர்ந்தது என்று நம்மிடையே பரப்பினார்கள். இன்னும் பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

இப்படி இயல்பிலேயே பாரம்பரியக் கல்வியறிவைக் கொண்டிருக்கும் இந்தியர்களுக்கு வெள்ளைக்காரர்கள் பாடம் நடத்தப் போகிறார்களாம். இந்தியர்களின் அறிவை வளர்க்க இப்போது வெள்ளைக்காரர்கள் தங்கள் பல்கலைக்கழகங்களை இந்தியாவில் திறக்கப் போகிறார்களாம். இந்தியர்களை மனோவியல் ரீதியாக அடிமைப்படுத்த வேண்டும் என்ற மெக்காலேவின் சதித்திட்டம் இந்தியாவை ஆளும் இத்தாலி ராணியால் மீண்டும் செயல்படுத்தப்பட இருக்கிறது என்பது அதிர்ச்சிக்குரிய விஷயம்.

சரி, அந்நிய நாட்டுப் பல்கலைக்கழகங்கள் நம் நாட்டிற்கு வருவது தவறு என்று எப்படி நேரடியாகச் சொல்ல முடியும். பல்வேறு நிலைகளில் கல்வியின் அறிவு விஸ்தாரமாக்கப்படுவது நல்லது தானே என்றும் நீங்கள் நினைக்கலாம்.

முதலில் கல்வி என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கல்வி என்பது தனக்குத் தெரிந்த அறிவை அடுத்தத் தலைமுறைக்கு
மாற்றம் செய்யும் ஒரு சமூகப்பணி. அது தொழில் ரீதியாகவும், கலையாகவும், அறிவியலாகவும் கணிதவியலாகவும் எதுவேண்டுமானாலும் இருக்கலாம். சமூகத்திற்கு நேரடியாக பயன்தரும் ஒரு விஷயத்தை அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுத்து ஒரே மாதிரியான இன்னொரு சமூகத்தை உண்டாக்கும் சமூகப்பணியே கல்வி.

அத்தகைய கல்வி ஏற்கனவே வியாபாரம் ஆகிவிட்டது. சமூகப்பணியான
கல்வி போதித்தல் என்பது சம்பளத்திற்கு வேலை பார்க்கும் உத்யோகமாகிவிட்டது. சமூகத்திற்கு பயணிருக்கிறதோ இல்லையோ, மாணவர்களை பாஸாக்கி அடுத்த வகுப்பிற்கு கொண்டுபோகும் ஒரு அறுவடைப் பணியாக கல்வி மாறிவிட்டது. அதுமட்டுமல்லாமல், புதிது புதிதாக பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்தி இந்த பாடத்திற்கு இவ்வளவு என்று ரேட் போட்டு டிகிரிப்படிப்பை விற்கிறார்கள்.

உதாரணமாக எம் பி ஏ என்ற சமீபகால வியாபாரம் போல இதற்கு முன்னால் எந்தக் பட்டமும் விற்பனை ஆனதில்லை. எம் காம், மற்றும் எம் எஸ் ஸி சைக்காலஜி போன்ற ஏற்கனவே இருந்த உயர்கல்வி பாடங்களிலிருந்தெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக உருவி அதையே ஒரு தனிப் பட்டப்படிப்பாக வியாபாரம் செய்தார்கள். இந்த வியாபாரத்தை வளர்த்தவர்களும் வெள்ளையர்களே. எம்பிஏ படித்தவர்கள் தான் தொழில் மேலான்மைக்குத் தகுதியானவர்கள் என்று அறிவித்து லட்சக்கனக்கில் சம்பளமும் கொடுத்து ஊரை ஏமாற்றினார்கள். தெருமுனை வியாபாரிகளாக இருந்து . மிகப்பெரிய தொழிலதிபர்களாக இருக்கும் நம்மூர் அன்னாச்சிகளெல்லாம் இந்தப் பட்டத்தைப் படித்து தான் கோடிகள் சம்பாதித்தார்களா என்ன? எம்பிஏ படித்துதான் வியாபாரத்தில் வெற்றி பெற்றார்களா?

உதாரணமாக எம் பி ஏ மனிதவள மேலான்மை என்ற படிப்பைப் பற்றி அதை நடத்தும் பல்கலைக்கழக ஆசிரியர்களே 'இதுவெல்லாம் முன்னர் எம் எஸ் ஸி ஸைக்காலஜியில் இருந்த பாடங்கள். இப்போது அதையே எம்பிஏ ஹெச் ஆர் என்று படிக்கிறீர்கள்' என்று கூறுவதைக் கேட்டிருக்கிறேன். இதில் விஷேஷம் என்னவென்றால் ஏற்கனவே எம்எஸ் ஸி சைக்காலஜி படித்தவனுக்கு எம்பிஏக்காரனுக்குக் கொடுக்கும் மரியாதையை கொடுக்க மாட்டார்கள். ஆனால் இருவரும் படித்தது ஒரே படிப்பாகத்தான் இருக்கும்.

இப்படி பழையசோறு புதிய பாத்திரத்தில் என்னும் கணக்காக ஏற்கனவே
நாம் வேறு பெயர்களில் படித்துக் கொண்டிருந்த படிப்புக்களை பெயர்
மாற்றி அறிமுகம் செய்து நல்ல வியாபாரம் செய்கிறார்கள். சரி இதற்கும்
அந்நிய நாட்டுப் பல்கலைக் கழகங்கள் உள்ளே வருவதற்கும் என்ன
சம்பந்தம்?

பிரச்சனையே அங்கே தானே! எப்படி எம் பி ஏ என்ற வியாபாரத்தை
கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் எப்படி நடத்தி பணம்
சம்பாதித்தார்களோ, அதே வழியில் இனி இந்தியாவிற்குள் அடியெடுத்து வைக்கும் பல்கலைக் கழகங்கள் பின்பற்றும் அபாயம் உள்ளது.

எப்படி? இதனால் நாம் எவ்வாறு பாதிக்கப்படுவோம்?

ஏற்கனவே இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் பட்டப்படிப்புகள்
இல்லாமல் புதிய பெயரில் பல பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்துவார்கள். தங்கள் பல்கலைக் கழகங்கள் மூலம் பல புதிய பட்டங்களை விற்க
முயற்சிப்பார்கள். இந்தியப் பல்கலைக் கழகங்கள் மூலம் படித்த
பட்டங்களைக் காட்டிலும் இதுவே உயர்வானவை என்ற தோற்றத்தை ஏற்படுத்துவார்கள். நம்மக்கள் தான் உடனே அதை ஏற்றுக் கொள்வார்களே!

அதற்காக சில மயக்கும் வித்தைகளை கையாள்வார்கள்!



நவீன அரங்குகளும், தொடுதிரை கணிப்பொறிகள் என்ற மாயக்
கண்ணாடிகளைக் கொண்டு ஆசைகாட்டி நம் மாணவர்களை வளைப்பார்கள்.
சரி, அப்படி வளைத்தாலும் தாங்கள் அறிமுகப்படுத்தும் பட்டங்களை வெற்றிகரமாக தொடர்ந்து சந்தையிட வேண்டுமே. அதற்கு என்ன செய்யலாம்? இந்தப் பாடத்திட்டத்தின் மூலம் படிப்பவர்களுக்கே நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும் அதுவும் எங்கள் நாட்டில் உடனே வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள் என்றெல்லாம் ஒரு மாயையை ஏற்படுத்தலாம். உள் நாட்டு நிறுவனங்களிடம் மார்க்கெட்டிங் செய்து அத்தகைய பல்கலைக் கழகங்களில் படித்தவர்களுக்கு அதிக சம்பளத்தில் வேலை அளிக்க ஏற்பாடு செய்வார்கள்.

சரி இதெல்லாம் நல்லது தானே என்கிறீர்களா?

அங்கே தான் பிரச்சனையே! இப்படி புதிதாக விற்கப்படும் பட்டங்களுக்குத்
தான் இனிமேல் மரியாதை கிடைக்கும் என்ற நிலை உண்டானால் ஏற்கனவே
இந்தியப் பல்கலைக்கழகங்கள் மூலம் பிகாம், எம்காம், எம்பிஏ என்றெல்லாம் படித்தவர்கள் தாங்கள் இதுவரை பெரிய படிப்பு படித்துவிட்டோம் என்று நினைத்துக் கொண்டிருந்த தகுதிகள் அனைத்தும் கேள்விக்குறியாகிவிடும். ஏற்கனவே பிகாம் படித்தவன் ஓடி ஓடி எம்காம் படித்தான். பின் எம்காம் பத்தாது, எம்பிஏ தான் பெரியபடிப்பு என்றானவுடன் எம்பிஏவை படித்து காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டான். இனி அந்தப்படிப்பும் போனியாகாது என்றாகி விட்டால் என்னாகும்? புதிய பல்கலைக்கழகங்கள் விற்கும் புதிய பட்டங்களை வாங்கியாக வேண்டிய கட்டாயம் உண்டாகும்.

பணம் செலவு செய்து அதையும் படிக்க வேண்டும். இப்படி கல்வித்தகுதி
என்பதே ஒரு முடிவற்ற கேள்விக்குரியாக ஆகிவிடும். சமூக ஓட்டத்திற்கு தகுந்தபடி தம்மைத் தக்கவைத்துக் கொள்ள எத்தனை பட்டங்கள் தான் படிக்கவேண்டும் என்ற சலிப்பு நிலையையும் நம் இளைஞர்களிடம் உண்டு பண்ணிவிடும். இதற்கு முடிவே இருக்காது. இத்தகைய வியாபாரீதியான கல்வியே தொடர்ந்தால் கல்வித்தகுதி என்பதே ஒரு கேலிப்பொருளாகப் போவது நிச்சயம்.

ஆனால் கல்வி வியாபாரம் செய்பவர்கள் இதையெல்லாம் யோசித்தார்களோ என்னமோ தெரியவில்லை.

அரசியல் வாதிகளைப் பொருத்தவரை யோரோ முதலீடு செய்து கல்வி கொடுக்கட்டும், எப்படியோ எல்லோரும் கற்றவர்கள் என்ற போர்வைக்குள் வந்தால் சரி. எல்லாரையும் நம்மால் கவனிக்க முடியாது. முதலீடு செய்பவர்களைப் பொறுத்தவரை இந்தியா பண அறுவடைக்கும் மூளைச்சலவைக்கும் நல்ல சந்தை. இந்த ஆட்டு மந்தைகளிடம் எதை வேண்டுமானாலும் வியாபாரம் செய்துவிட முடியும் என்ற அசராத நம்பிக்கையும் இருப்பதால் குறைந்த முதலீட்டில் பெரிய லாபம் ஈட்டும் நோக்கத்தோடு நாக்கைத் தொங்கபோட்டுக் கொண்டு காத்திருக்கிறார்கள்.

இன்னும் பார்ப்போம்..


8 comments:

Subu said...

மெக்காலே பிரபு சொன்னதாய் எழுதுப்பட்டுள்ள "..ஒரு பிச்சைக்காரனையும் நான் பார்த்ததில்லை.... " உண்மையல்ல

ஆங்கிலேய படையெடுப்புக்கு முன்னறே முகலாய படையெடுப்பு முடிந்து மதுரை உள்ளிட்ட பல நகரங்கள் தாக்கப்பட்டு விட்டன

அத்தோடு மெக்காலே இந்தியாவை பற்றிய உயர்ந்த எண்ணம் உடையவர் அல்ல..



அன்புடன்

hayyram said...

//ஆங்கிலேய படையெடுப்புக்கு முன்னறே முகலாய படையெடுப்பு முடிந்து மதுரை உள்ளிட்ட பல நகரங்கள் தாக்கப்பட்டு விட்டன//

ஒரு விஷயத்தை நண்பர் சுப்பு அவர்கள் கவனத்தில் கொள்ளலாம். ஆதாவது முகலாயர்கள் படையெடுப்பும் தாக்குதலும் மத ரீதியான மோதல்களாகவே பெரும்பாலும் இருந்தன. மேலும் கஜினி போன்றவர்களைத் தவிற பெரும்பாலான முகலாயர்கள் இந்நாட்டின் வளங்களை இங்கேயே ராஜ்ஜியம் அமைத்து அனுபவிக்கவே நினைத்தார்கள். இங்கிருந்த வைரங்களையும் தங்கத்தையும் எடுத்து முகலாயர்கள் இந்தியாவீலேயே தங்களை அலங்கரித்துக் கொண்டார்கள். அதை ஏடுத்துக்கொண்டு பாரசீகத்தில் டெபாசிட் செய்யவில்லை. ஆனால் வெள்ளையர்களோ இந்த நாட்டின் அனைத்து வளங்களையும் முழுவதுமாகச் சுரண்டி தங்கள் நாட்டிற்கனுப்பி அங்கே வளங்களைப் பெருக்கிக் கொண்டனர். நிஜ கொள்ளையர்கள் வெள்ளையர்களே. கோஹினூர் என்ற விலை உயர்ந்த இந்திய வைரம் ஷாஜஹானின் சிம்மாசனத்தை இந்தியாவிலேயே தான் அலங்கரித்தது. ஆனால் வெள்ளையர்கள் அதை தங்கள் நாட்டு பொருட்காட்சியில் வைக்க கொண்டு போனானே அதுவே உதாரணம்.

நீச்சல்காரன் said...

நல்ல பகிர்வு

smart said...

Boss

hayyram said...

நன்றி நீச்சல்காரன்.

hayyram said...

நன்றி ஸ்மார்ட்.

உங்கள் மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா?

Anonymous said...

1,2,3

Unknown said...

ஒருத் திருடனையும் காணவில்லை என்று... மெக்காலே பேரில் பொய்யை அடுக்கிக் கொண்டு போகின்றனர். சிலப்பதிகாரத்திலே திருடர்கள் இருந்ததற்கான ஆதாரம் இருக்கிறது. என்ன இருந்தாலும் இவ்வளவு தேசப்பற்று இருக்கக் கூடாது. திருடன் இல்லாத நாடுன்னு ஒன்னு இருக்கா?