Sunday, May 20, 2012

எந்த தேவதையைத் தொழுதாலும் என்னையே வழிபடுகிறாய்!




ஸ்ரீ க்ருஷ்ணர் அர்ஜுனனுக்கு தன் வடிவத்தின் தன்மையை இவ்வாறு எடுத்துக் கூறுகிறார்.

அர்ஜுனா! மகாத்மாக்கள் என்னுடைய தெய்வீகத் தன்மை பெற்று, உயிர்களுக்கு என்றும் அழியாத பிறப்பிடம் நான் என்பதை அறிந்து, என்னைத் தவிர வேறு எங்கும் மனதைச் செலுத்தாது என்னை வழிபடுகின்றனர்.

எப்பொழுதும் என்னைப் புகழ்பவராயும், உறுதியான விரதத்தோடு முயல்பவராயும், பக்தியுடன் என்னை வணங்குபவராயும், நித்திய யோகிகள் என்னை வழிபடுகிறார்கள்.

ஞான வேள்வியால் வழிபடும் மற்றவர்களும் என்னை ஒன்றாய், வேறாய், பலவாய் இத்தனை விதங்களிலும் வணங்குகிறார்கள்.

தனஞ்ஜெய! நானே கிரது என்ற வைதீக கர்மம். நானே வேள்வி. மருந்துப் பூண்டுகளும், எல்லா வகையான தாவரங்களும் நான்; மந்திரமாவது நான். வேள்வியில் அளிக்கப்படும் நெய்யும் நானே! தீயும் நா; வேள்வி வேட்டலும் நானே!

நானே இந்த உலகத்தின் தாய், தந்தை , பாட்டன். கர்ம பலனைக் கொடுப்பவன் மற்றும் அறிய வேண்டிய பொருள், தூய்மையாக்குவோன், ஓங்காரம், ரிக், யஜுர், சாமம் எனப்படும் மூன்று வேதங்கள் ஆகியவைகளும் நானே.

அடைக்கலம், வளர்ப்பவன், உடையவன், சாட்சி, இருப்பிடம் நண்பன், தோற்றம், அழிவு, ஆதாரம், களஞ்சியம், அழியாவித்து ஆகிய அனைத்தும் நானே!

வேறு எதைப்பற்றிய எண்ணமும் இல்லாதவர்களாய், மனதை ஒரு முகப்படுத்தி என்னையே வழிபடுகிறவர்கள் வேண்டியதைப் பெறுதலையும், பெற்றதைக் காப்பாற்றுதலையும் நானே கவனித்துக் கொள்ளுகிறேன்.

குந்தியின் மைந்தா! சிரத்தையோடு கூடிய பக்தர்கள் மற்ற தேவதைகளை வழிபடும்போது, அவர்களும் அறியாமையோடு என்னையே வணங்குகிறார்கள்!

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்



No comments: