Tuesday, April 28, 2009

முல்லா நசுருதீன் கதைகள்


முல்லா பெரிய அறிவாளி என்றும் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்ப்பட்டாலும் தம்முடைய அறிவாற்றலாலேயே அந்த ஆபத்திலிருந்து தப்பிவிடுவார் என்றும் ஊரில் உள்ளவர்கள் பலர் கூறுவது மன்னரின் காதில் விழுந்தது.  

அவரது அறிவாற்றலைப் பரிசோதிப்பதற்க்காக மன்னர் ஒரு நாள் முல்லாவை தமது சபைக்கு வரவழைத்தார்.  

முல்லா வந்து வணங்கி நின்றார்.  

"முல்லா , உமது அறிவை பரிசோதனை செய்ய நினைக்கிறேன், நீங்கள் ஏதேனும் ஒன்றைக் கூறும், நீர் சொல்வது உண்மையாக இருந்தால் உமது தலை வெட்டப்படும் , நீர் சொல்வது பொய்யாக இருந்தால் நீர் தூக்கிலிடப்படுவீர்" என்றார் மன்னர்.  

முல்லா உண்மை சொன்னாலும் பொய்யைச் சொன்னாலும் அவருக்கு ஆபத்து தயாராக இருக்கிறது. முல்லா நிலைமையை எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்று அவையோர் அவரையே கவனித்தனர்.  

முல்லா மன்னரை நோக்கி, " மன்னர் அவர்களே, தாங்கள் என்னை தூக்கில் போடப்போகிறீர்கள்" என்று பதற்றம் ஏதும் இன்றிக் கூறினார். அதைக் கேட்ட மன்னர் திகைப்படைந்தார்.  

முல்லா சொன்னது உண்மையானால் அவருடைய தலை வெட்டப்பட வேண்டும் அவ்வாறு வெட்டப்பட்டால் அவர் கூறியது பொய்யாகிவிடும். முல்லா கூறியது பொய் என்று வைத்துக் கொண்டால் முல்லாவைத் தூக்கில் போட வேண்டும். 

தூக்கில் போட்டால் அவர் கூறியது உண்மை என்று ஆகிவிடும். உண்மை என்று கருதினால் அவரை தூக்கில் போடாமல் கழுத்தை வெட்ட வேண்டும். 

இப்படி ஒரு குழப்பத்தை தமது அறிவாற்றலால் தோற்றுவித்து முல்லா மன்னரை திக்குமுக்காட வைத்துவிட்டார்.  

அவரது அறிவாற்றலை கண்ட மன்னர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து அவருக்கு பொன்னும் பொருளும் பரிசாக கொடுத்து அனுப்பினார்.

No comments: