Friday, December 25, 2009

மரணத்திற்கு அப்பால் - 2


நசிகேதன் பற்றியும் மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது என்பது பற்றியும் யோசித்துக் கொண்டே ஒரு வழியாக பயணத்தில் நானும் கண்ணசந்தேன். சிறிது நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள் குருசாமி எழுப்பினார். தம்பி சாமி, "போய் குளிச்சிட்டு வாங்க கியூல நிக்கனும்" என்றார்.

எங்கே இருக்கிறோம் என்று கொஞ்சம் சுற்றிப் பார்த்தால் குருசாமி குருவாயூர் கூட்டத்தில் குளிக்கச் சொல்கிறார் என்பது தாமதமாகத்தான் புரிந்தது.

"என்னது குளிக்கிறதா?", கைக்கடிகாரத்தை கண்ணைத்துடைத்துக் கொண்டு பார்த்தேன். கடிகார முட்கள் இரவு பண்ணிரெண்டை படுத்துக்கொண்டே காட்டியது ஒன்றன் மீதொன்றாய். "இந்த நேரத்தில் குளிக்கவா அதுவும் இந்த குளிரிலா?" யோசிக்க நேரமில்லை. எல்லோரும் குளித்து குருவாயூர் கம்பிவரிசையில் போய் நின்றோம்.

இரவு மணி ஒன்று. அர்த்த ராத்திரியும் நன்பகல் போலவே வெளிச்சமும் வியாபாரமுமாக இருந்தது குருவாயூர் கோவில் வாசல். அந்த இரவில் கூட நாங்கள் ஐந்தாவது கம்பி வரிசையில் தான் நின்று கொண்டிருந்தோம். "

என்ன சாமி, மணி ஒன்னாகுது, எப்ப கோவில் திறப்பாங்க?" என்றேன். மூன்று என்று விரலால் நாமம் சாத்தினார். தூக்கமா தலை சுற்றலா என புரியாமல் தரையில் அப்படியே உட்கார்ந்து கொண்டேன். குருசாமியோ "என்னப்பா இன்னும் ரெண்டு மணி நேரம் தான், இதுக்குள்ள அசந்துட்டியே" என்று அருகில் உட்கார்ந்தார்.

பின்ன இல்லையா, ஒரே இடத்தில் இரண்டு மணிநேரம் சும்மா நிற்பதென்றால் சும்மாவா!

சரி குருசாமியிடம் நேற்று பாதியில் நிறுத்திய பேச்சை தொடங்குவோம் என்று என் சந்தேகத்தை கேட்கத் துவங்கினேன்!

"குருசாமி! நசிகேதன், உபநிஷத்துன்னு ஏதேதோ சொன்னீங்களே! அதக் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்" என்றேன்.

என் ஆர்வத்தைப் பார்த்து அவரே அழகாக விளக்கத்துவங்கினார்.

"தம்பி சாமி, மரணத்திற்கு அப்பால் என்ன நடக்கிறது அப்படீன்னு நசிகேதன் எமதர்மன் கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிட்டான். அதுக்கு உபநிஷத்துன்னு பேரு. அதுக்கு முன்னாடி உபநிஷத்துன்னா என்னன்னு சொல்லிடறேன்."

“உபநிஷத்” என்ற சொல்லுக்கு அருகில் அமர்தல் என்று பொருள். குருவும் சீடனுமாக அருகமர்ந்து ஞானத் தேடல்களை முன்னெடுத்துச் சென்ற வேத ரிஷிகளின் அனுபவங்களிலிருந்து வெளிப்பட்ட நூல்களே உபநிஷதங்கள்ன்னு சொல்வாங்க. பின்னர் இவை தொகுக்கப் பட்டு ஞான காண்டம் என்று வழங்கும் வேதப் பிரிவாக ஆயின.

உபநிஷதங்கள் மொத்தம் 108 என்று சம்பிரதாயமாக அறியப்பட்டாலும், வேதாந்த தத்துவத்தில் “முக்கிய உபநிஷதங்கள்” என்று அறியப்படுபவை 10. இவற்றில் 8 உபநிஷதங்கள் ரொம்பவும் முக்கியமானவை. அவை இந்த வரிசையில் வெளிவந்துள்ளன.

ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்)
கேன உபநிஷதம் (எல்லாம் யாரால்?)
கட உபநிஷதம் (மரணத்திற்குப் பின்னால்)
ப்ரச்ன உபநிஷதம் (அறிவைத் தேடி)
முண்டக உபநிஷதம் (நிழலும் நிஜமும்)
மாண்டூக்ய உபநிஷதம் (ஒன்றென்றிரு)
ஐதரேய உபநிஷதம் (மிஞ்சும் அதிசயம்)
தைத்திரீய உபநிஷதம் (வாழ்க்கையை வாழுங்கள்)

இப்படி எட்டு உபநிஷதங்கள் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததுன்னு பெரியவங்க சொல்றாங்க.

"இதுல நசிகேதஸ் எந்த உபநிஷத்துல வர்ராரு?"

"இரு சொல்றேன்! நசிகேதஸ் பத்தி 'கட உபநிஷதத்துல' வருது. ஒவ்வொரு உபநிஷத்தும் ஒவ்வொரு கோனத்துல ஆத்மா பரமாத்மா பத்தி சொல்வதாக வருகிறது. இறப்பிற்கு பின்னால் நமக்கு என்ன நடக்கும் என்று தெரிந்து கொண்டால் அதற்கு தகுந்த மாதிரி தற்கால வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்ற வகையில் இவை ஒரு வழிகாட்டியாகவே இருக்கிறது.

உதாரணமாக ரிடையர்மென்ட்க்கு அப்பறம் நம்ம வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறதுன்னு இப்ப நினைச்சிப் பாத்தா ரொம்ப பயமா இருக்கும். அப்பறம் காசுக்கு என்ன பண்ணுவோம் என்று மனதில் ஒரு சிந்தனை உண்டாகும். அப்படி ஒரு காலம் வரும் போது அதை எப்படி சமாளிப்பது என்று நினைத்து இப்பொழுதே பணம் சேர்க்கத் துவங்குவோம். நிலத்தில் முதலீடு செய்வோம். தங்கம் வாங்கி வைப்போம். வங்கியில் நிலையான முதலீடுகள் இடுவோம். அவற்றின் மதிப்பு பின்னாட்களில் அதிகரிக்கும் போது அதை வைத்து நமது ரிட்டையர்மென்ட் வாழ்க்கையை சமாளிப்போம்.

ஆம். நம்முடைய பிறப்பும் இந்த வாழ்க்கையும் ஒரு இடைக்கால நிகழ்வுதான். எப்படி நாம் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேருவதற்க்கு முன்னும் நமக்கு வாழ்க்கை இருந்ததோ, எப்படி நாம் ரிட்டையர் ஆன பின்பும் வாழப்போகிறோமோ, அதே போல் தான் பிறப்பும் இறப்பும்.

நாம் பிறப்பிற்கு முன்னாலும் வாழ்ந்துகொண்டிருந்தோம். இறப்பிற்கு பின்னாலும் வாழப்போகிறோம். அதுவே உண்மை. இந்த இடைப்பட்ட காலத்தில் நாம் செய்யும் நல்ல காரியங்களும் சேர்த்து வைக்கும் புண்ணிய பலன்களும் தான் நாம் இறந்ததற்குப் பின்னால் என்னவாகப் போகிறோம் என்பதை தீர்மானிக்கப்போகிறது.

அதாவது நம் உடலோடு இருக்கும் போதும் உடல் நீங்கி போனாலும் நாம் வாழ்கிறோம். நமது உடல் நாம் அல்ல. நாம் எதை எல்லாம் நான் என்று உணர்கிறோமோ அது நாம் அல்ல. எனது அழகு , எனது உடல், எனது நிறம், எனது உருவம் என்று எவற்றையெல்லாம் நாம் என்று நம்மைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறோமோ, அது நாம் அல்ல.

உண்மையில் நமக்கு உருவம் கிடையாது. மகிழ்ச்சி, துக்கம், சிரிப்பு, அழுகை, காதல், காமம், ஆசை, பாசம், கோபம், என்று உண்மையில் என்னவெல்லாம் நாம் உணர்ச்சிகளாக உணர்கிறோமோ அதுவெல்லாம் நமக்குச் சொந்தமானது அல்ல. இவை நமக்குரியவை அல்ல.


அப்படியென்றால் அத்தகைய நாம் யார்? நமது வடிவம் என்ன? நமது உணர்ச்சிகள் என்ன? நமது நிஜமான இருப்பிடம் என்ன? நாம் எங்கிருந்து வந்தோம்? எங்கே போகிறோம்?

இந்த வினாக்களையெல்லாம் புரிந்து கொள்ள நாம் அறிய வேண்டிய ஒரே மூலப் பொருள் "ஆத்மா"

ஆம் நாம் தான் அது. அது தான் நாம். அதன் வடிவம் என்னவோ அது தான் நமது நிரந்தர வடிவம். அதன் உணர்வு என்னவோ அதுதான் நமது நிரந்தர உணர்வு. அதன் நிரந்தர வசிப்பிடம் எதுவோ அங்கே செல்ல வேண்டி முயல்வது தான் நம்முடைய நிஜமான ஞானத்தின் அடித்தளம்.

அதைப்பற்றித்தான் இந்த உபநிஷத்துக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் எடுத்தியம்புகின்றன.

அதில் ஒன்று தான் நசிகேதன் பற்றிய கட உபநிஷத்து.

இவ்வளவையும் குருசாமி சொல்லி முடிக்க மணியைப் பார்த்தேன்! கோவில் கதவு திறக்க, குருவாயூரப்பனை தரிசிக்க இன்னும் நேரம் இருந்தது. எல்லோரும் காத்திருந்தோம் கதவு திறக்கும் நேரம் பார்த்து.

காத்திருப்போம்...


இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் பகுத்தறிவும் ஆகும்.



மரணத்திற்கு அப்பால் - 3

8 comments:

ஸ்ரீராம். said...

நன்றாகச் சொல்லி உள்ளீர்கள்...தொடரட்டும். வருவேன்...

hayyram said...

நன்றி ஸ்ரீராம்.

வாருங்கள். காத்திருப்பேன்.

Thenammai Lakshmanan said...

Hai Ram
romba nalla irukku
Hayram

inni thinamum varuven
arumaiya ezuthi irukinga ram
naan 3 4 upanishath than ariven
but here i heard 8
mudinchal athai sirithu thinamum ondraga ezutha mudiyuma RAM

hayyram said...

thanks thenammailakshmanan

i wil try so.

thanks and welcome

Valaakam said...

சுப்பர்! நல்லா இருக்கு! ஆர்வமாக உள்ளேன்!

Unknown said...

Nice write-up ram, especially the " retirement " example is on dot. Even a layman like myself find it very easy to understand.

Keep it up.

hayyram said...

நன்றி வளாகம்.

நன்றி மோகன்.

Siva Sottallu said...

Excellent article with amazing examples. Continue your good work. Thanks a ton.

You are blessed to met your Guru. Sounds like you had a "Upanishad" with your Guru.

I was wondering how do you remembers all these type of Upanishads, were you taking notes while you were discussing.

Thanks again.