Showing posts with label எமன். Show all posts
Showing posts with label எமன். Show all posts

Tuesday, October 5, 2010

மரணத்திற்கு அப்பால் - 19




"மரணத்திற்குபிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர். சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப் பயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்". - எமதர்மன்.

ஆன்ம சஞ்சாரத்தில் மேலான நிலை எது என எமதர்மனிடம் வினவுகிறான் நசிகேதன்!


"நசிகேதா! எப்போது ஐந்து புலன்களும் மனமும் ஓய்வு நிலையில் இருக்கின்றனவோ, புத்தி முயற்சியற்று இருக்கிறதோ அது மிக மேலான நிலை என்று கூறப்படுகிறது"


செயலற்ற நிலை எனப்படுவது சோம்பலாக வேலை செய்யாமல் உட்கார்ந்திருக்கும் நிலை என எடுத்துக்கொள்வது தவறு. புத்தி விழிப்படைந்த நிலையில் புற உடலும் இகலோக வாழ்வும் வேறு என்றும் உள்ளிருக்கும் ஆன்மா வேறு என்ற நிலையான உண்மையை புரிந்து கொண்டு மனமும் உடலும் ஆழ்ந்த அமைதி கொள்ளும் நிலையை செயலற்ற நிலை என எமதர்மன் விளக்குகிறார். இந்நிலையில் ஆசைகளின் உந்துதலால் மனம் செயல்பட வேண்டிய அவசியம் உண்டாவது தடுக்கப்படுகிறது. எனவே இந்நிலையை ஐந்து புலன்களும் ஓய்வு நிலையில் இருக்கும் சமயமாக எமதர்மன் எடுத்துக் கூறுகிறார்.


"நசிகேதா! புலன்கள் வசப்பட்டு, நிலையாக நிற்கின்ற அந்த நிலை யோகம் என்று கருதப்படுகிறது. அந்த நிலையை அடைந்தவன் தன்னுணர்வு உடையவனாக ஆகிறான். ஆனால் யோக நிலை வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் உட்பட்டது."


ஆன்மாவை உணரும் தருனத்தை தன்னுணர்வு என்று கீதையில் கூறப்படுகிறாது. சுவாமி விவேகானந்தர் 'உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள், அது எவ்வாறு விழித்தெழுகிறது என்பதை பாருங்கள். உறங்குகின்ற ஆன்மா மட்டும் விழித்தெழுந்து தன்னுணர்வுடன் செயலில் ஈடுபடுமானால் சக்தி வரும். பெருமை வரும், நன்மை வரும், தூய்மை வரும், எவை எல்லாம் மேலானதோ அவை அத்தனையும் வரும்' என்கிறார் அவர்.


எமதர்மன் மேலும் தொடர்கிறார் "நசிகேதா! வாக்கினாலோ மனத்தினாலோ கண்களாலோ அந்த அறுதி உண்மையை அடைய இயலாது. 'இருகிறது' என்று சொல்பவனைத் தவிர வேறு யார் அதனை அடைய முடியும்?"


"இந்த உண்மை 'இருக்கிறது' என்று முதலில் அறிய வேண்டும். பிறகு அதன் உண்மைநிலையில் உணர வேண்டும். 'இருக்கிறது' என்ற நிலையில் ஆழமாக உணரும் போது, அதிலிருந்து உண்மை நிலை அனுபூதி, இயல்பாக வாய்க்கிறது".


ஒரு மலை ஏறப்போகிறோம். அடிவாரத்தில் இருந்து கொண்டு 
மலையைப் பார்த்தால் உச்சிக்குப் போக பாதையே இல்லாதது போல தெரியும்.
ஆனால் அருகே செல்லச்செல்ல மலையை ஏறி உச்சியை அடைய அங்கேயும் 
ஒரு பாதை இருந்தே தீரும். பாதை இருக்கிறது என்று நம்பிச் செல்பவனுக்கே
அப்பாதைகள் தெரியவரும். அல்லாமல் பாதை இருக்குமா என்ற 
ந்தேகத்துடனும் பாதை கிடையாது என்று நினைப்பவனும் அடிவாரத்தை
தாண்ட மாட்டார்கள்.


அது போல எல்லையற்ற சக்தி மற்றும் ஆன்மா போன்றவற்றை சந்தேகக் கண்ணோடு மட்டுமே பார்ப்பதும் அதை அறியும் முயற்ச்சியே இல்லாமல் அதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருப்பவனாலும் ஆன்மாவை அடையமுடியாது. எல்லையற்ற இறை சக்தியை அறிய முடியாது. எவன் ஒருவன் 'இருக்கிறது' என்று தீர்க்கமாக நம்பி அதை அறியும் பொருட்டு முயற்சிக்கிறானோ அவனே அளப்பறிய இறை சக்தியையும் ஆன்மாவையும் அறிகிறான் என்கிறார் எமதர்மன்.


மனிதன் எப்போது மரணமற்றவன் ஆகிறான் என்று நசிகேதன் கேட்க


எமதர்மன் தொடர்கிறார் "நசிகேதா! மனத்தைச் சார்ந்திருக்கும் எல்லா ஆசைகளும் விலகும் போது மனிதன் மரணமற்றவன் ஆகிறான். இங்கேயே இறைநிலையை அடைகிறான்."


"இதயத்தின் நாடிகள் நூற்றொன்று. அவற்றுள் ஒன்று உச்சந்தலையைப் பிளந்து செல்கிறது. அதன் வழியாக மேலே செல்பவன் மரணமற்ற நிலையை அடைகிறான். மற்ற நாடிகளின் வழியாக வெளியேறுபவன் பல்வேறு கீழ் உலகங்களில் உழல்கிறான்."


ஆக ஆன்மாவை ஆசைகளைக்கடந்த மன ஆழ்மன அமைதியுடன் அடைந்து அது தான் நாம் என்பதை உணர்ந்து உச்சந்தலை நாடி மூலம்உடலை விட்டுப் பிரிந்து மரணமற்ற தன்மையை அடையலாம் என்றும் அவ்வாறு அடையும் நிலையை அடைபவன் பிறவித் துன்பத்தில் இருந்து விடுபடுவான் என்று எமதர்மன் கூறுகிறார்.


கடைசியாக ஆன்மா பற்றி எமதர்மன் இவ்வாறு கூறுகிறார்..


"நசிகேதா! உடம்பில் உறைவதான ஆன்மா பெருவிரல் அளவுடையது; மக்களின் இதயத்தில் எப்போதும் உள்ளது. முஞ்சைப் புல்லிலிருந்து ஈர்க்கும் குச்சியைப் பிரிப்பது போல் அதனைச் சொந்த உடம்பிலிருந்து பொறுமையுடன் பிரிக்க வேண்டும். அந்த ஆன்மா தூயது,  அழிவற்றது என்று அறிந்து கொள். அந்த ஆன்மா தூயது, அழிவற்றது என்று அறிந்து கொள்"


நசிகேதனுக்கு எமதர்மன் கூறிய கடைசி உபதேசம் இது. பெருவிரல் அளவுடைய ஒளிப்பொருள் ஒன்று நம்முள் இதயக் குகையில் உள்ளது. அதுவே ஆன்மா. அதனை உடம்பிலிருந்து பிரித்தறிய வேண்டும். அந்த ஆன்மாவே எங்கும் நிறைந்த பரம்பொருள் என்பதை உணர வேண்டும். இதுவே இந்த இரண்டு வித்யைகளின் பொதுவான கருத்து ஆகும். இந்தக் கடைசி மந்திரத்தில் மீண்டும் ஒருமுறை எமதர்மன் அதை நினைவு நசிகேதனிடம் நினைவுகூறுகிறார்.


இவ்வாறு நசிகேதன் கேள்வி கேட்க எமதர்மன் பதில் கூற கட உபநிஷத்தின் ஆன்மாவை அறிய உதவும் பாடம் இத்துடன் நிறைவு பெறுகிறது.


"எமதர்மனால் சொல்லப்பட்ட இந்த வித்யைகளையும், எல்லா யோக விதிகளையும் ஏற்றுக் கொண்டு நசிகேதன் தூயவனாகி மரணமற்றவன் ஆனான். பிறகு இறைவனை அடைந்தான். மற்றவர்களும் இந்த வித்யையை அறிந்து பின்பற்றும் போது இறைநிலையை அடைகிறார்கள்."


ஆக உபதேசத்தை கேட்பதுடன் நில்லாமல் நசிகேதன் அதை சாதகம் செய்து இறைநிலையை அடைகிறான்.


கடைசியாக நீங்கள் தான் ஆன்மா என்பதை கீழ்கண்டவாறு தொடர்ந்து சிந்துப்பது ஆன்மாவை உணர்வதற்கு உதவும்.


1. அனைத்திற்கும் சாட்சி நான்
2. காலத்தின் தலைவன் நான்
3. ஆதியில் தோன்றியவன் நான்
4. பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி நான்
5. ஆன்ம அக்கினி நான்
6. ஆணையிடுபவன் நான்
7. உடம்பைக் கடந்தவன் நான்
8. உடம்பு வீழ்ந்து, உயிர் வெளியேறிய பிறகும் மாற்றமின்றி இருப்பவன் நான்.
9. அனைத்தும் தூங்குகின்ற போதும் விழித்திருப்பவன் நான்
10. வாழ்க்கையே நான்.


மேலே உள்ளவைகளை படிக்கும் போது 'நான்' என்ற பதம் வாசிப்பவராகிய நீங்கள் தான் என்பதை நினைவில் நிறுத்துங்கள். அந்த 'நான்' என்பதே இறைவன். கீதையில் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் கூறுகிறார் 'எல்லா உயிர்களிடத்திலும் உறைந்திருப்பவன் நானே' 'நான்' என்று யாரெல்லாம் கூறிக்கொண்டாலும் அவற்றின் உருவகம் ஒன்றே! ஏனெனில் எல்லா உயிர்களிலும் உரைந்திருப்பதும் அழிக்கமுடியாததும் அடையாளம் அற்ற 'நான்' என்ற ஒரே "ஆன்மா".  


"அதுவே நீ"


(முற்றும்)



Sunday, August 15, 2010

மரணத்திற்கு அப்பால் - 17





"மரணத்திற்குபிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர். சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப் பயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்". - எமதர்மன்.

ஆன்ம அனுபூதி, இறையனுபூதி, இறைக்காட்சி என்றெல்லாம் பொதுவாக நாம் கேள்விப்படுபவைகள் எல்லாம் உண்மையில் என்ன என்பது பற்றி யாராலும் கூற முடியாது. ஏனினெல் அது அராய்ச்சி செய்து விளக்கமுடிவதில்லை. அவை அனுபவத்திற்கு உரியது. அத்தகைய அனுபவத்தை பெறுவதற்கு சுய ஆராய்ச்சி தேவை. அவ்வாறான ஆராய்ச்சியின் காரணமாக நசிகேதன் இங்கே அதுபற்றி கேட்க எமதர்மனும் சிறுவனான நசிகேதனுக்கு சிறந்ததொரு பதிலைக் கொடுக்கிறார்.

"குறிப்பிட்டு சொல்ல முடியாததும் மேலானதுமான அந்த ஆனுபூதி இன்பத்தை நேரடியாக அனுபவிக்கின்றனர். அந்த அனுபவம் தானாக ஒளிர்கிறதா அல்லது வேறொன்றால் ஒளிரச் செய்யப்படுகிறதா? இது பற்றி நான் அறிய விரும்புகிறேன்" என்று கேட்கிறான் நசிகேதன்.

எமதர்மன் கூறுகிறார்! "நசிகேதா! அங்கே சூரியன் ஒளிர்வதில்லை. சந்திரனும் நட்சத்திரங்களும் ஒளிர்வதில்லை. மின்னல் ஒளிர்வதில்லை. இந்த அக்கினி எப்படி ஒளிர முடியும்? ஒளிர்கின்ற ஆன்மாவை அனுசரித்தே மற்ற அனைத்தும் ஒளிர்கின்றன. அனைத்தும் அதன் ஒளியால் ஒளிர்கின்றன."

ஆன்ம ஒளியைக் காட்ட புற ஒளியால் இயலாது என்கிறார் எமதர்மன். ஆன்ம அனுபூதி என்பது ஒரு புறக்காட்சி அல்ல என்று இங்கே கூறப்படுகிறது. அனைத்தையும் காண ஒரு விளக்கு தேவை. ஆன்ம ஒளியே நாம் புறப்பொருளைக் காணும் விளக்காக இருக்கின்றது. ஆன்ம ஒளியால் தான் நாம் அனைத்தையும் உணர்கிறோம். ஆகையால் சாதகத்தால் ஆன்ம ஒளியை நீ உணர்வாய் என்கிறார் எமதர்மன். எவனொருவன் ஆன்ம ஒளியை காண்கிறானோ அவன் மரண பயத்தை வெல்கிறான்.

மரணத்தை விட கொடியது மரண பயம். ஆனால் அத்தகைய மரண பயத்தை ஒருவன் எப்படி வெல்ல முடியும் என்பதற்கு எமதர்மன் வழி கூறுகிறார். வாழ்க்கையின் துவக்கத்தையும் முடிவையும் பற்றிய உண்மை நிலையை உணர்பவன் மரண பயத்தை வெல்கிறான் என்கிறார்.

உதாரணமாக ஆற்றங்கரையில் ஒரு அரச மரம் இருப்பதாய்க் கொள்வோம். நாம் அதைப் பார்க்கிறோம். அதன் பிரதிபிம்பம் நீரில் தெரிகிறது. நிலத்தில் வேர்கள் கீழேயும் கிளைகள் மேலேயும் தெரியும், ஆனால் நீரில் அவை தலைகிழாகத் தெரியும். மரம் நீரின் பிரதிபிம்பத்தில் வேர்கள் மேலாகவும் கிளைகள் கீழாகவும் போல! அதாவது வாழ்க்கையில் நாம் இன்பமாகக் காண்பவை உண்மையில் இன்பம் அல்ல. அதுபோலவே துன்பமாகக் காண்பவை துன்பம் அல்ல. பிறப்பை நாம் இன்பமாகக் காண்கிறோம். மரணத்தை துன்பமாகக் காண்கிறோம். அதனைக் கண்டு அஞ்சுகிறோம். ஆனால் உண்மையை உணர்ந்த மகான்கள் பிறப்பு துன்பம் என்றும் மரணத்தை இன்பம் என்றும் கூறுகிறார்கள். இதுவே மரம் நீரில் பிரதிபிம்பமாக தலைகீழாக தெரிவதற்கு எடுத்துக்காட்டு.



அதுவே உண்மை எனப்படுகிறது. துறவி மரணத்தை நேசிக்கிறான். சாதாரண மனிதர்கள் வாழ்வை நேசிக்கிறார்கள். அது போலவே உலகம் அதன் உறவுகள் அது தரும் சுகங்கள் எல்லாவற்றையும் உண்மை நிலையானவை என்று நம்புகிறோம். ஆனால் அது உண்மை இல்லை. இவ்வாறு நாம் காணும் உண்மைக்கு ஒரு தலைகீழ் நிஜம் இருப்பதை, நாம் வாழும் வாழ்க்கைக்கு ஒரு பிரதிபிம்பமான இன்னொரு கோணம் இருப்பதை நீரில் காணும் மரத்தோடு ஒப்பிட்டு விளக்குகிறார் எமதர்மன்.

"நசிகேதா! இந்த அரச மரம் பழமையானது. மேலே வேரும், கீழே கிளைகளும் உடையது. அதுவே தூயது. அதுவே இறைவன். அது அழிவற்றது. எல்லா உலகங்களும் அதையே சார்ந்திருக்கின்றன. அதை யாரும் கடந்து செல்ல முடியாது. நீ கேட்ட உண்மை அதுவே!"

"இந்த உலகங்கள் அனைத்தும் பிராணனிலிருந்து வெளிப்படுகின்றன. பிராணனால் இயங்குகின்றன. வஜ்ராயுதத்தை உயர்த்திப் பிடித்திருப்பது போல் இறைவன் இருக்கின்ற பெரும் பயம் காரணமாகத் தான் இந்த இயக்கங்கள் நடைபெறுகின்றன. இதனை அறிபவர்கள் மரணமற்றவர்களாக ஆகின்றனர்."

இறைவன் மிகப்பெரிய பிரம்மாண்டத்தன்மை கொண்டவன் என்கிற உண்மையை உணர்வதாலேயே இயக்கங்கள் தடங்கலின்றி நடைபெறுகின்றன. பேராற்றலின் சக்தியே பிரபஞ்சத்தின் அனைத்து இயக்கத்தையும் தொடர்ந்து நடைபெறச் செய்கின்றது என்பதை விளக்குகிறார் எமதர்மன்.

"நசிகேதா! இறைவன் மீதுள்ள பயத்தினால் அக்கினி எரிக்கின்றது; சூரியன் சுடுகிறது. இந்திரனும் வாயுதேவனும் தத்தம் வேலைகளைச் செய்கின்றனர். ஐந்தாவதான மரண தேவனும் அந்த பயத்தினால் தான் தன் தொழிலைச் செய்கின்றன."



இங்கே இறைவன் என்ற பதத்தை மூலப் ப்ருக்ருதி எனக்கொள்ளலாம். அளவிட முடியாத அண்டவெளியும் பிரபஞ்சங்களும் ஒருவித ஈர்ப்பு சக்திக்குக் கட்டுப்பட்டும் ஏதோ ஒரு செலுத்துப் பாதையிலேயே வலம் வந்து கொண்டிருப்பதையும் காணும் போது, இவைகள் எல்லாம் எதிலிருந்து உருவானதோ அந்த மூலப் ப்ருக்ருதியின் ஆற்றல் மிகப்பெரியது. எல்லையற்ற பரப்பளவையும் அவை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது என்பதை நாம் உணர முடிகிறது. ஆகவே அந்த மூலப் ப்ருக்ருதியின் ஆற்றலின், கட்டுப்பாட்டின் காரணமாகவே அக்னி எரிக்கின்றது என்றும் சூரியன் சுடுகின்றது என்றும், வாயு அதன் வேலைகளைச் செய்துகொண்டு இருக்கின்றது என்றும் எமதர்மன் கூறுவதாகக் கொள்ளலாம்.

"இங்கே உடம்பு வீழ்வதற்கு முன்பு இந்த உண்மைகளை உணர முடியுமானால் அவர்களுக்கு அகக்காட்சி வாய்க்கிறது. உணர முடியாவிட்டால் உலகில் மீண்டும் மீண்டும் பிறக்க நேர்கிறது" - எமதர்மன்.



ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே!

விளக்கம்: ஓம். அது பூர்ணம். இதுவும் பூர்ணம். பூர்ணத்திலிருந்து பூர்ணம் உதயமாயுள்ளது. பூர்ணத்தினின்று பூர்ணத்தை எடுத்தாலும் பூர்ணமே எஞ்சி நிற்கின்றது.


ஆன்மாவை அறிவோம்....


மரணத்திற்கு அப்பால் - 18

Wednesday, July 7, 2010

மரணத்திற்கு அப்பால் - 16


ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமே வாவசிஷ்யதே!

விளக்கம்: ஓம். அது பூர்ணம். இதுவும் பூர்ணம். பூர்ணத்திலிருந்து பூர்ணம் உதயமாயுள்ளது. பூர்ணத்தினின்று பூர்ணத்தை எடுத்தாலும் பூர்ணமே எஞ்சி நிற்கின்றது.

ஆம், இந்தப் பிரபஞ்சத்தின் அனுப்பொருளும் அதன் சக்தியும் எதுவோ அதுவே நாமும் நம்முள்ளிருக்கும் ஆன்மாவும். நம் உடலும் ஆன்மாவும் இறுதியில் பிரபஞ்சத்திலே தான் ஐக்கியமாகிறது. தனித்து எங்கும் செல்வதில்லை. இவற்றை எமதர்மன் படிப்படியாக நசிகேதனுக்கு விளக்கி வருகிறார்.

"நசிகேதா! பதினோரு வாசல்களை உடையதான உடம்பு, பிறப்பற்ற, மாறுபாடற்ற உணர்வை உடைய ஆன்மாவின் கருவியாகும். உடல் ஆன்மா வசிக்க உதவும் ஒரு கருவிதான் என்பதை தியானித்து உனர்ந்தவன் கவலைகளிலிருந்து விடுபடுகிறான். சுதந்திரனாகி பிறவிகளிலிருந்து விடுபடுகிறான். இவ்வாறு உடலை ஒரு கருவியாக உபயோகித்துப் பின் அதிலிருந்து நீங்கும் உட்பொருள் எதுவோ அந்த ஆன்மாவே நீ கேட்டது!"

கண்கள், நாசிகள், செவி, குதம், பிறப்புக்குறி, தொப்புள் மற்றும் கருவுருவாகும் போது ஆன்மா உடலுக்குள் புகும் வாயிலாக கருதப்படும் உச்சந்தலை ஆகியவற்றையே எமதர்மன் உடலின் பதினோரு துவாரங்களாக குறிப்பிடுகிறார். இதில் தொப்புள் மற்றும் உச்சந்தலை துவாரங்கள் அடைக்கப்பட்ட நிலையில் இருக்கும். பிறந்த குழந்தையின் உச்சந் தலையை சிறிது காலத்திற்கு யாரையும் தொட விடமாட்டார்கள். ஏனெனில் தலைப்பகுதியானாலும் மிகவும் மென்மையான ஒரு பகுதியாக அப்பகுதி விளங்குவதே அதற்கு காரணம். மனிதர்கள் கருவாக உருவெடுக்கும் மண்டைஓட்டுடன் கூடிய தலைப்பகுதி வளருகையில் தலை ஒரு உருண்ட பஞ்சு போல இருக்கும். உச்சந்தலையின் அப்பகுதி மூலமாகவே ஆன்மா கருவினுள் புகுவதாக பெரியோர்கள் கூறுவார்கள். உடலைப் பேணிப்பாதுகாப்பதில் உச்சந்தலைக்கு முக்கியப் பங்கு இருக்கிறது என்பதும் அதனால் தான். ஆக எமதர்மன் இது போன்ற இடங்களையும் சேர்த்தே பதினோரு துவாரங்கள் கொண்ட உடல் என்று கூறுகிறார்.



எனவே உடலை வெறுக்கவும் கூடாது, அதன் சுகங்கள் மீதும் மயக்கம் கொள்ளக் கூடாது. இந்த உடல் பாதுகாக்கப்படுவது உள்ளே அசைவற்று இருக்கும் ஆன்மாவுக்காகவே என்று உணர்ந்து மயக்கமற்ற வாழ்க்கை வாழ வேண்டும். அவ்வாறு எந்த ஆன்மாவிற்காக நாம் உடலைக் காக்கும் கடமையை மேற்கொண்டிருக்கிறோமோ அதுவே நீ அறிய விரும்புவது என்று நசிகேதனுக்கு எமதர்மன் விளக்குகிறார்.

"நசிகேதா! இந்த ஆன்மா எங்கும் செல்வது. தூய ஆகாயத்தில் சூரியனாக இருப்பது, அனைத்திற்கும் ஆதாரமானது, அண்ட வெளியில் காற்றாக இருப்பது, அக்கினியாக பூமியில் உறைவது, தேவனில் உறைவது, உண்மையில் உறைவது, ஆகாயத்தில் உறைவது, நீரில் தோன்றுவது, பூமியில் தோன்றுவது, யாகத்தில் தோன்றுவது, மலையில் தோன்றுவது, பிரபஞ்ச நியதியாக விளங்குவது. பெரியது."

"நசிகேதா! பிராணனை மேலே இயக்குவதும், அபானனைக் கீழே தள்ளுவதுமான ஜீவன் உடம்பின் நடுவில் உள்ளது. எல்லா புலன்களும் அதனைச் சார்ந்திருக்கின்றன."

பிராணன் உடலின் உள்ளிருந்து மேலே எழும்பி வெளியேறக்கூடிய சக்தி. மூச்சு வெளியேறுவது அந்த மேல் நோக்கிய சக்தியால் தான். அபாணன் என்பது கீழ் நோக்கிய இயக்கம். உடலில் இருந்து வாயு குதம் வழியாக வெளியேறுவது. உடலில் இருக்கும் வாயு இந்த இரண்டு மார்கம் வழியாக சீரான அழுத்தத்தில் பிரிவதும் அது தடையற்ற முறையில் தொடர்ந்து நிகழ்ந்து வருவதுமே இந்த உடல் சரியாக இயங்குவதை வெளிப்படுத்தும். பூமிப்பந்தில் மட்டுமல்லாமல் பிரபஞ்சத்தின் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும் இந்த வாயுவானது உடலில் பத்து வகையான இயக்கங்களாக செயல்படுகிறது என ரிஷிகள் வகைப்படுத்தி இருக்கின்றனர்.

அவற்றைப் பார்ப்போம்.

பிராணன் - தொப்புளிலிருந்து மேல் நோக்கிய இயக்கம்.
அபானன் - தொப்புளுக்கு கீழ் நோக்கிய இயக்கம்
வியானன் - எல்லா பக்க இயக்கம்
உதானன் - மரண வேளையில் ஜீவன் வெளியேற உதவுதல் (சில வயோதிகர்கள் கழிவறையில் உயிர் நீப்பதை கேள்விப்பட்டிருப்போம், சிலருக்கு ஜீவன் வாய் வழியாகப் பிரியலாம், சிலர் கண்களை அகல விரித்து ஜீவனைத் துறப்பர். இத்தகைய வழிகளில் ஆன்மா வெளியேற உதவும் வாயு
உதானன்)
ஸமானன் - உணவு ஜீரணம், உனவை ரத்தம்போன்றவையாக மாற்றுதல். (உடல் செல்கள் ஆக்ஸிஜன் இல்லை என்றால் உயிர் வாழாதல்லவா, அவ்வாறு உடலின் ரத்த ஓட்டம் முதல் அனைத்து செல்களிலும் இருக்கும் வாயு ஸமானன்)
நாகன் - வாந்தி, ஏப்பம்
கூர்மன் - கண் இமைகளின் இயக்கம்
க்ருகலன் - பசி
தேவதத்தன் - கொட்டாவி
தனஞ்ஜயன் - உடம்பிற்கு ஆரோக்கியம் அளித்தல்

இவ்வாறு பத்து வகையாக வாயு நமது உடம்பில் செயல்பட்டு வருகின்றது என்கிறார்கள் ரிஷி முனிவர்கள். இந்த வாயுக்கள் அதனதன் வேலையை சீராக செய்யாமல் போனால் உடல் நோயுறக்கூடும். ஆக உடலின் அனைத்து இயக்கங்களும் இந்தப் பிராணனையே சார்ந்துள்ளன என்கிறார் எமதர்மன்.

"நசிகேதா! இவ்வாறான உடம்பிலிருந்து உயிர் பிரிந்தால் அங்கே என்ன மிஞ்சுமோ அதுவே நீ கேட்ட பொருள்."

"எந்த மனிதனும் பிராணனாலோ அபானனாலோ வாழ்வதில்லை. எதனை ஆதாரமாகக் கொண்டு இந்தப் பிராணனனும் அபானனும் இயங்குகின்றனவோ அதனை ஆதாரமாகக் கொண்டே அனைத்தும் வாழ்கின்றன."

வெறும் மூச்சு விடுவதால் நாம் வாழ்வதில்லை. உடலினுள்ளே இருக்கும் நிலையான பொருளான ஆன்மாவின் சக்தியே இந்த இயக்கங்களுக்கு காரணமாகிறது என்கிறார் எமதர்மன். அதாவது ஒரு மின் விசிறி ஓடுகிறாது என்றால் அதன் இறக்கையால் அல்ல. அதனுள்ளே ஓடும் கண்ணுக்குத் தெரியாத மின்சாரத்தால் தான் அல்லவா! அது போலவே உடலை ஆன்மா என்ற சக்தி இயக்குகிறது என்கிறார் எமதர்மன்.

"நசிகேதா! நல்லது. மரணத்திற்குப் பின்னால் உயிர் என்ன ஆகும் என்பது பற்றியும், ரகசியமானதும் அழிவற்றதுமான ஆன்மா பற்றியும் உனக்கு இப்போது சொல்கிறேன். மரணத்திற்குப் பிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர். சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப் பயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்"

"புலன்கள் தூங்கும் போது தனக்கு விருப்பமானவற்றை உருவாக்கியபடி எது விழித்திருக்கிறதோ அதுவே தூய, மரணமற்ற ஆன்மா என்று சொல்லப்படுகிறது. எல்லா உலகங்களும் அதனையே சார்ந்திருக்கின்றன. அதனைக் கடந்தவனாக யாரும் இல்லை."

உறக்கத்திலும் உயிர்ப்புடன் இருக்கிறோம், கனவுகளையும் நிஜம் போல உணர்கிறோம், விழிப்பு நிலையையும் உணர்கிறோம். இப்படி எல்லா நிலைகளிலும் நாம் உணர்வுடன் இருப்பதற்கு காரணமாக எப்போதும் நிலையான விழிப்புடன் இருப்பது எதுவோ அதுவே ஆன்மா என்கிறார்
எமதர்மன்.

"நசிகேதா! ஒன்றான அக்கினி உலகில் வந்து எவ்வாறு பல்வேறு பொருட்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறதோ அவ்வாறே எல்லா உயிர்களிலும் இருக்கின்ற ஆன்மா ஒன்றாக இருந்தாலும் பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது. அதே வேளையில், அந்த வடிவங்களுக்கு வெளியிலும் நிகழ்கிறது."


எந்தப் பொருளை எரித்தாலும் நெருப்பு ஒரே வடிவானதாகவே இருக்கிறது. அதே போலவே ஆன்மா மனிதன், விலங்குகள், பறவைகள் மற்றும் செடி கொடிகள் அனைத்திலுமே ஒரே தன்மை உடையதாகவே இருக்கிறது. மரத்தையும் நாம் கடவுளாக வணங்குவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக ஆன்மாவின் தன்மையை எமதர்மன் விளக்குகிறார்.

"எதைப் பற்றி பலரால் கேட்க முடியவில்லையோ, கேட்டும் பலரால் எதனை அறிய முடியவில்லையோ அந்த ஆன்மாவைப் பற்றி உபதேசிப்பவரும் அபூர்வம். கேட்பவரும் அபூர்வம். அத்தகைய அபூர்வமான ஒருவரைப் பின்பற்றி அதனை அறிபவரும் அபூர்வம்."

ஆன்மாவை அறிவோம்....


மரணத்திற்கு அப்பால் - 17

Sunday, June 27, 2010

மரணத்திற்கு அப்பால் - 15




"மரணத்திற்குபிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர். சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப் பயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்". - எமதர்மன்.

ஆன்மாவை உருவகப்படுத்த முடியாது. மிகவும் நுட்பமானது. மிகவும் சூட்ஷமமானது. எப்படி காற்றைக் காட்ட முடியாதோ அது போலவே ஆன்மாவையும் காட்ட முடியாது. ஆனால் காற்றை நம்மால் சாதாரணமாக உணரமுடியும். ஆன்மாவை அப்படி உணர்ந்து விடுவதும் கடினம். எனவே ஆன்மாவை பல கோணங்களில் உருவகித்து விளக்குகிறார் எமதர்மன்.

"நசிகேதா! யார் தண்ணீர் முதலான பஞ்ச பூதங்களுக்கும் முன்னால் தவத்தினால் தோன்றியவரோ, யார் உயிர்களின் இதயக் குகையில் உறைபவரோ அவரே அனைத்தையும் காண்கிறார். அதுவே நீ கேட்ட பொருள்."

பொதுவாக தியானம் எனப்படுவது புலன்களை உள்நோக்கி செலுத்துவது என்பார்கள். பார்த்தலையும், கேட்டலையும், முகர்வதையும், சுவையறிதலையும் இந்த உடலின் உள்நோக்கி செலுத்த முயற்சித்தால், அதில் ஒருவர் வெற்றியடைந்தால் அவரே ஆன்மாவை தரிசனம் செய்ய முடிபவர் ஆகிறார் என்கிறார் எமதர்மன். இதற்கு முதல் படி புலன்களை நாம் நினைக்கும் இடத்திற்கு செலுத்த நாம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அவ்வாறான பயிற்சிக்கு தியானம் உதவுகிறது.

உதாரணமாக ஒரு துறவியிடம் ஒருவர் தியானம் கற்க வந்தார். அவரிடம் அந்தத் துறவி "காட்டுக்குள் அமைதியாக அமர்ந்து அங்கே நீ என்னவெல்லாம் கேட்கிறாயோ அவற்றை என்னிடம் வந்து சொல்" என்று கூறி அனுப்பினார். தியானம் கற்க வந்த அந்த நபரும் அடர்ந்த காட்டுக்குள் சென்று அமர்ந்தார். ஓரிரு நாட்களில் மீண்டும் துறவியிடம் வந்து "காட்டுக்குள்ளே பறவைகளின் சப்தங்களைக் கேட்டேன், மிருகங்களின் கர்ஜனைகளைக் கேட்டேன், பறவைகளின் இறைச்சலைக் கேட்டேன், மரம் செடிகொடிகள் மற்றும் சறுகுகள் காற்றில் ஆடுவதன் சப்தத்தைக் கேட்டேன்" என்கிறார்.

துறவியோ, "நீ தியானம் செய்ய இன்னும் ஆரம்பிக்கவில்லை. மனதை இன்னும் ஒரு நிலைப்படுத்தி இன்னும் அமைதியாக இன்னும் புதியனவாக என்னவெல்லாம் கேட்கிறாயோ அவற்றைச் சொல்" என்கிறார். மீண்டும் காட்டுக்குள் போய் அமர்ந்து புலன்களை கூர்மையாக்கி சூழலை உணரத் துவங்குகிறார் அந்த சீடர். சில நாட்களுக்குப் பின் துறவியிடம் திரும்பி வந்து "ஐயா! தூரத்தில் அருவித் தண்ணீர் கீழே விழும் சப்தத்தைக் கேட்டேன். காற்றி கிளைகளுக்கிடையே ஓடிடும் சப்தத்தைக் கேட்டேன். எறும்புகள் ஊறும் சப்தத்தைக் கேட்டேன், மொட்டுக்கள் மலர்ந்திடும் சப்தம் கேட்டேன்" என்கிறார்.

துறவியோ இது போதாது மீண்டும் செல் என்கிறார். மீண்டும் சென்று பல நாட்கள் கழித்து திரும்பி வந்தவர் "இத்தனை நாள் காதில் கேட்க முடியாத மிகச்சிறிய சப்தங்களைக் கூட கேட்க முடிந்த நான் இந்த முறை எதையுமே கேட்கவில்லை. மனம் லயித்த நிலையில் என்னுள்ளேயே நான் இருந்து விட்டேன். என்னால் என் சூழலை உணரக்கூட முடியவில்லை. நான் முழுமையான நிசப்தத்தையே உணர்ந்தேன்" என்கிறார். துறவி கூறினார் "நீ தியானம் கற்றுக்கொண்டாய், இனி இதைத் தொடர்ந்து செய்துவா, உன்னை நீயே தரிசிப்பாய்" என்று கூறி ஆசிவழங்கி அனுப்பி வைத்தார்.

இவ்வாறு புலன்களை ஒரு இலக்கை அடையும் நோக்கோடு, இலக்கை நோக்கிச் செலுத்தும் பயிற்சியை மேற்கொள்ளும் போது அது தானாகவே நம் மனதுள் அடங்கும் என்பதை விவரிக்கிறது இந்தக்கதை. இவ்வாறு புலன்களை யார் உள்நோக்கிச் செலுத்திகிறாரோ அவரே ஆன்மாவை தரிசிக்கிறார் என்கிறார் எமதர்மன்.

எமதர்மன் மேலும் தொடர்கிறார், "நசிகேதா! பிராண வடிவானவளும், எல்லா தெய்வங்களின் வடிவானவளும், பஞ்ச பூதங்களுடன் தோன்றியவளுமாகிய எந்த தேவி உயிர்களின் இதயக் குடையில் புகுந்து உறைகிறாளோ அந்த தேவியின் வடிவாக இருப்பதே நீ கேட்ட பொருள்"

"கருவுற்ற பெண்கள் கருவை எச்சரிக்கையாகக் காப்பது போல் அரணிக்கட்டைகளில் அக்கினி பாதுகக்கப்படுகிறது. விழிப்புணர்ச்சி பெற்ற யோகிகள் ஆன்ம அக்கினியை அதுபோல் கவனமாக நாள்தோறும் வழிபடுகின்றனர். அந்த ஆன்ம அக்கினியே நீ கேட்ட பொருள்."




அரணிக்கட்டை என்பது நெருப்பை பற்ற வைக்க உதவும் ஒரு மரப்பொருள். அரணிக்கட்டைகள் இரண்டை எடுத்து ஒன்றாக உரசும் போது அதிலிருந்து அக்னி வெளிப்படும். யாக குண்டத்தில் தீமூட்ட இந்த கட்டைகளை பயன்படுத்துவார்கள். எமதர்மன் ஆன்மா ஒரு மனிதருக்குள்ளே எப்படி உரைந்திருக்கிறது என்பதை இந்த அரணிக்கட்டையை உதாரணமாகக் கொண்டு விளக்குகிறார். அரணிக்கட்டையை உரசும் போது அக்கினி தோன்றுகிறது. அதாவது அரணிக்கட்டைக்குள்ளே அக்னி கருப்பொருளாக உரைந்து இருக்கிறது. இரு கட்டைகளை உரசும்போது அது வெளியே வருகின்றது. அல்லாமல் அந்த மரத்துக்குள் அக்னி இருப்பதை கண்ணால் பார்க்க முடியாது. அதைப்போலவே நமக்குள்ளே உரைந்திருக்கும் அக்னி போன்றதே ஆன்மா என்கிறார் எமதர்மன்.

"நசிகேதா! யாரிலிருந்து சூரியன் உதிக்கிறானோ, எங்கே மறைகிறானோ, அந்த இறைவனை எல்லா தெய்வங்களும் போற்றுகின்றனர். அவரை மீறி யாரும் நடப்பதில்லை. நீ கேட்ட பொருள் அந்த இறைவனே."

"யாரிலிருந்து சூரியன் உதிக்கிறானோ" என்று எமதர்மன் கூறுவதிலிருந்தே இறைவன் எனப்படுவது பிரபஞ்சம் முழுவதிலும் வியாபித்திருக்கும் ஒருவகை சக்தி என்பது தெளிவாகப் புலப்படுகிறது. ஆக அளப்பறிய பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி எதுவோ அதுவே இறை சக்தி எனக் கொள்க. பிரபஞ்சத்தின் சக்தியால் தான் பூமியின் சுழற்சியும் அதன் மாற்றங்களும் உண்டாகிறது. பூமியின் அந்த மாற்றங்களால் தான் நம் உடலிலும் மனதிலும் மாற்றங்கள் உண்டாகின்றன. இவ்வாறு பிரபஞ்ச சக்தியை மீறி தனியாக எதுவும் நிகழ்வதில்லை என்பதையும் அத்தகைய பிரபஞ்சத்தின் சக்தியாக எதை நம்மால் ஊகிக்க முடிகிறதோ அதுவே நம்முள்ளில் இருக்கும் ஆன்மா என்று விளக்குகிறார்.

"நசிகேதா! இங்கே எது இருக்கிறதோ அதுவே அங்கே இருக்கிறது. அங்கே எது இருக்கிறதோ அதுவே இங்கும் இருக்கிறது. இந்த உலகில் வேறுபாடு இருப்பது போல் யார் காண்கிறானோ அவன் மரணத்திலிருந்து மரணத்தை அடைகிறான்."

"அண்டத்தில் இல்லாதது பிண்டத்தில் இல்லை" என்பதை சித்தர்கள் மொழியாகக் கூறுவார்கள். அதைத்தன் உபநிஷத்தின் மூலமாக எமதர்மனும் விளக்குகிறார். நமது அறிவால் அளக்க முடியாத மிகப்பெரிய சக்தியான சூரியன், பூமி மற்றும் கால அளவைகளில் அடங்காத மிகப்பெரிய இந்த பிரபஞ்சத்தின் சக்தி எதுவோ அதுவே நம்முள் இருக்கும் சக்தி. அதன் பெயரே ஆன்மா என்று எமதர்மன் கூறுகிறார். அதையே இன்னும் விளக்கி நம்முள் என்ன சக்தி இருக்கிறதோ, நம்முள் இருக்கும் ஆன்மாவின் சக்தி எதுவோ அதுவே பிரபஞ்சத்தின் சக்தியாகும். பிரபஞ்சத்தின் சக்தி எதுவோ அதுவே நம்முள்ளும் இருக்கிறது. இதை யார் உணர்ந்து கொள்கிறார்களோ, அவர்கள் தான் தனக்குள்ளே ப்ரபஞ்சத்தின் முழுமை இருப்பதை உணர்வார்கள். அவர்களே நிரந்தரமான அந்த சக்தியோடு கலக்கிறார்கள் என்கிறார் எமதர்மன்.

"நசிகேதா! இந்த உண்மை மனத்தினால் உணரப்படுகிறது. இந்த உலகில் வேறுபாடு எதுவும் இல்லை. இங்கே வேறுபாடு இருப்பது போல் யார் காண்கிறானோ அவன் மரணத்திலிருந்து மரணத்திற்குச் செல்கிறான்"

"இறைவனுக்குப் பிரியமானவனே! எங்கும் நிறைந்தவரும், இறந்த மற்றும் எதிர் காலங்களுக்குத் தலைவரும் ஆன இறைவன் உடம்பின் நடுவில் இதயக் குகையில் பெருவிரல் அளவில் இருக்கிறார். அவரை அறிந்தவன் யாரையும் வெறுப்பதில்லை. நீ கேட்ட பொருள் அவரே. புகையற்ற ஒளி போல் பெருவிரல் அளவினராக உள்ளார். இப்போது இருப்பவர் அவரே, என்றென்றும் நிலைத்திருப்பவரும் அவரே, நீ கேட்ட பொருளும் அவரே!"



ஆன்மாவை புகையில்லாத ஒரு தீபம் எப்படி நிலைத்தெரியும் ஒரு வடிவத்தைக் கொண்டதோ அத்தகைய வடிவமாக இதய மையத்தில் நிலைத்திருக்கும் சக்தியாக எமதர்மன் கூறுகிறார். இதயக்குகை என்பது எது...? உடம்பிற்கு உள்ளே ரத்த ஓட்டத்தை சீர்படுத்த துடித்துக் கொண்டிருக்கிறதே அந்த இதயமா என்றால் இல்லை. அது இல்லை. இது ஆன்மீக இதயம். ஒவ்வொரு மனிதருக்குள் இருக்கும் சக்தி மையம். தொப்புளுக்கு மேலே ஒரு சாண் தூரத்தில் இருக்கும் இடம் தான் இதயக் குகை. மார்பின் மத்தியில் இருக்கும் சக்தி மையம். இது சுடர் விடும் தன்மை கொண்டது. இது பிரகாசமானது. அதை உணர்பவர் ஆன்மாவை உணர்பவராகிறார் என்கிறார் எமதர்மன்.

"நசிகேதா! மலைகளின் உயர்ந்த பகுதியில் பெய்த மழை நீர் எவ்வாறு தாழ்ந்த பகுதிகளுக்கு ஓடிவிடுகிறதோ, அவ்வாறே உயிரினங்களை வெவேறாகக் காண்பவன் மீண்டும் மீண்டும் அவையாகப் பிறக்கிறான்"

ப்ரபஞ்சத்தின் நிலையான சக்தி எதுவோ அதுவே ஆன்மாவின் சக்தி என்பதை புரிந்து கொள்ளாமல் பிரபஞ்சம் வேறு, நான் வேறு என்று நினைப்பவர்கள், நிலையாக இருக்கும் அந்த சக்தி வேறு நான் என்ற நினைப்பவர்கள் நிரந்தரமான சக்தியுடன் ஐக்கியம் ஆகாமல் மீண்டும் மீண்டும் பிறப்பெய்துகிறார்கள்.

"நசிகேதா! தெளிந்த நீரில் விடப்பட்ட தெளிந்த நீர் எவ்வாறு அதுவாகவே ஆகிறதோ அவ்வாறு உண்மையை உணர்கின்ற மகான் ஆன்ம வடிவாகவே ஆகிறார்"

தண்ணீர் கடலில் இருந்தாலும், கிணற்றில் இருந்தலும், குளத்தில் இருந்தாலும் அது தண்ணீர் தான். எந்த பாத்திரத்தில் இருந்தாலும் தண்ணீரின் இயல்பு ஒன்றாகவே இருக்கிறது. அது போலவே பிரபஞ்சத்தின் சக்தியும் நம்முள் இருக்கும் ஆன்மாவும் ஒன்றே. அதுவே உலகின் சகல ஜீவராசிக்குள்ளும் இருக்கிறது. அவை வெவ்வேறு உடலைப் பெற்றிருக்கிறதே தவிற அதன் குணங்கள் ஒன்றே. அத்தகைய ஆன்மா ப்ரபஞ்சத்துடன் ஐக்கியமாகும் போது தண்ணீரின் இரண்டு துளிகள் ஒன்றாக இணைந்து ஒரே துளி ஆவதற்குச் சமமாகும் என்று விளக்குகிறார் எமதர்மன்.

ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே!

விளக்கம்: ஓம். அது பூர்ணம். இதுவும் பூர்ணம். பூர்ணத்திலிருந்து பூர்ணம் உதயமாயுள்ளது. பூர்ணத்தினின்று பூர்ணத்தை எடுத்தாலும் பூர்ணமே எஞ்சி நிற்கின்றது.

மேலே கூறப்பட்டதில் பூர்ணம் என்பதற்கு பதிலாக தண்ணீர் என்று கூறி படித்துப் பாருங்கள். ஆன்மாவின் தன்மையை அறிவீர்கள்!


"தத்வம் அஸி" - "நீ தான் அது" (அது = ஆன்மா) - இதை முதலில் உணர்ந்தால் அடுத்த கட்டமான "அஹம் ப்ரம்மாஸ்மி" என்பது உணரப்படும்.



மரணத்திற்கு அப்பால் - 16

Wednesday, March 31, 2010

மகாபாரதத்தில் ஒரு நாள் - 2



பிறர் துன்பத்தைத் தன் துன்பம் போல் கொள்!



அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை

பிறிதொருவர் துன்பத்தைத் தன் துன்பம் போல கொள்ளாதவன் மிகப்பெரிய அறிவாளியானாலும் அவனால் உலகிற்கு ஆகப்போகும் பயன் தான் என்ன? என்று கேள்வி எழுப்புகிறார் வள்ளுவப் பெருந்தகை.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். அன்பும் இரக்கமும் கொண்டவரே ஆத்ம சாந்தி அடைவார்கள் என்கிறார்கள் பெரியவர்கள்.

உண்மையான ஆன்மா எப்போதும் பிற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல பாவித்து விடும். ஒரு காலத்தில் நம் மக்கள் அறிவை விட உணர்ச்சியாலேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர். ஒவ்வொரு மனிதரும் தனது பருவத்திற்குத் தகுந்த உணர்வை முழுமையாக ஏற்று வாழ்ந்து வந்தனர்.

பல குழந்தைகளின் தாயானவள் வேறு பிள்ளைகளின் துன்பத்தைப் பார்க்கும் போதெல்லாம் தன் பிள்ளையின் துன்பமாகவே கருதி அந்த பிள்ளைக்கு உதவுவாள். எங்கேனும் யாரேனும் துன்புற்றால் கூட யார் பெற்ற பிள்ளையோ இப்படி கஷ்டப்படுகிறதே என்று இன்னொரு தாயின் மனதை தங்கள் மனதால் வெளிப்படுத்தும் களங்கமற்ற மக்களைக் கொண்டதே நமது பூமி.

இதன் சிறப்பும் பாரம்பரியமும் இந்நாட்டு கலாச்சாரக் கட்டிடத்தின் ஒவ்வொரு செங்கல்லிலும் இருக்கிறது. ஆன்மீகத்தின் ஒவ்வொரு அங்கத்திலும் இருக்கிறது.

அப்படிப்பட்ட தியாகத்தை இந்துக்களின் புராணங்களும் இதிகாசங்களும் எல்லா இடங்களிலும் கற்றுக் கொடுத்து நம்மை வழிநடத்தி வந்திருக்கின்றன.



மகாபாரத புராணத்தில் இப்படி ஒரு கருணை மிக்க நாள் ஒன்றைப் பற்றி நாம் பார்ப்போம். மகாபாரத புராணம் மேலோட்டமாகப் பார்த்தால் வெறும் சண்டைச் சச்சரவுகளைக் கொண்ட கதையாகத் தோன்றினாலும், அந்த அற்புத இதிகாசத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் தர்மத்தை வலியுறுத்தும் போதனைகளாகத்தான் காட்சி தருகின்றன.

இந்த இதிகாசத்தில் தர்மபுத்திரரான யுதிஷ்டிரரும், தனது அந்திமக் காலத்தின் கடைசி நிமிடத்தில் கூட ஒரு பிராணியின் துன்பத்தைத் தன் துன்பம் போல கருதி அதற்கு பின்னரே சொர்கம் சென்றார் என்ற அழகான நிகழ்வு சொல்லப்படுகிறது. அந்த அழகான கதையைக் கொஞ்சம் பார்ப்போம்.

தங்கள் வாழும் காலம் முடிந்ததையரிந்து சொர்கலோகத்திற்கு பஞ்சபாண்டவர்கள் திரௌபதியுடன் இமாலயத்தின் உச்சத்தில் கால்நடையாக நடந்து சென்றுகொண்டே இருந்தார்கள். செல்லும் வழியில் முதலில் திரௌபதி விழுந்தாள். சிறிது தூரம் சென்றவுடன் நகுல சகாதேவர்கள் ப்ராணன் பிரிந்து விழுந்தார்கள். பிறகு அர்ஜுனன், அதன் பின் பீமன் என்று ஒவ்வொருவராக விழுந்தார்கள்.

இப்போது தர்மபுத்திரர் மட்டும் தான் மிச்சம். அவர் கூடவே ஒரு நாய் ஒன்று பின் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.

இப்போது தர்மர் சொர்காரோகனம் என்றழைக்கப்படும் சொர்க்கத்தின் பாதையை அடைந்து விட்டார். இனி சொர்கத்திற்கு ஏற வேண்டியது தான் பாக்கி. அப்போது கூடவே வந்து கொண்டிருந்த நாய் கேட்டது. "தர்மராஜரே! எனது உடம்பின் மீது நிறைய கிருமிகள் படர்ந்துவிட்டது. அவைகளால் நான் மிகவும் துயரத்தில் இருக்கிறேன். அந்த கிருமிகளிடமிருந்து எனக்கு விடுதலையைக் கொடுத்து விட்டு நீ சொர்கத்திற்கு போயேன்!" என்றது.

தர்மரும் சரி என்று கூறி "கிருமிகளைத் தட்டி உதறிவிட்டுவிடலாம். அவைகள் உன் உடலிலிருந்து சிதறி கீழே விழுந்து விட்டால் நீ விடுதலை அடைந்து விடுவாய்" என்று கூறி நாயின் உடலைத் தட்ட முற்பட்டார்.

அப்போது கிருமிகள் எல்லாம் பதறிப்போய் பேசலாயின "தர்மபுத்திரரே! கிருமிகளாகிய நாங்கள் இந்த நாயினிடத்தில் இருப்பதை உண்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கே வேறு உணவு கிடைக்காது. நீங்கள் நாயை உதறி எங்களை கீழே தள்ளிவிட்டுவிட்டால் எங்கள் எல்லோருடைய
ஜீவனும் போய்விடுமே! அதனால் சற்று கருணைகாட்டுங்கள். அப்படிச் செய்து விடாதீர்கள்" என்று கிருமிகள் கூறின.

இதனைக் கேட்ட தருமபுத்திரரின் மனம் மிகவும் வருந்தியது. நாயின் கோரிக்கையை நிறைவேற்றாமல் சொர்கம் செல்ல முடியாது. நாயைக் காப்பாற்றும் பொருட்டு கிருமிகளைக் கொன்றுவிட்டாலும் சொர்க்கத்தை அடைய முடியாது. நாயையும் காப்பாற்ற வேண்டும். கிருமிகளையும் காப்பாற்ற வேண்டும். நானும் சொர்கத்திற்கு போக வேண்டும். எல்லோரும் வாழ வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசிக்கலானார் தர்மபுத்திரர்.

என்ன செய்தார் தெரியுமா? நாயின் மீதிருந்த கிருமிகளை எல்லாம் தன் உடல் மீது போட்டுக் கொண்டார். இப்போது கிருமிகளும் பிழைத்தன. நாய்க்கும் நன்மை பிறந்தது. கிருமிகளின் துன்பத்தையும் தன் துன்பமாக நினைத்து தன்னையே தியாகம் செய்தார் தருமர்.

பிறர் துன்பத்தைத் தன் துன்பம் போல் நோக்காதவனிடம் அறிவிருந்து என்ன பயன் என்றார் வள்ளுவர். இங்கே தர்மபுத்திரர் பிறர் துன்பத்தைத் தன் துன்பம் போல கொண்டு அவர்களைக் காக்க அறிவை உபயோகப்படுத்துகிறார். அறிவும் கருணையும் ஒன்றாக இருந்தால் அதுவே சொர்கத்திற்கு வழி என்று ஒரு கதா பாத்திரத்தின் வடிவில் நின்று அற்புதமாக விளக்குகிறார் தர்மபுத்திரர்.

இவ்வாறு பிறரின் துன்பத்தை தன் துன்பமாகவே கருதிய தர்மருக்கு இந்திரனும், எமதர்மராஜனும் காட்சிதந்து அவரை அன்போடு சொர்கத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்த அவசர யுக வாழ்க்கையில் பெற்ற தாய் தந்தையரின் துன்பத்தைக் கூட தனது துன்பமாக ஏற்று கருணையோடு காக்கும் குணம் இயந்திரமயமான மனிதர்களிடம் இருப்பதில்லை என்று பரவலாக அறியப்படுகிறது. ஆனாலும் நமக்குள்ளே இருக்கும் குறைந்தபட்ச இரக்க உணர்வை வெளிப்படுத்துவோம். அனைவரிடத்தும் அன்பும் கருணையும் காட்டியே வாழ முயல்வோம். அதுவே நமது கடமையென நமது புராணங்களும், இதிகாசங்களும், ஆன்மீகமும் நமக்கு போதிக்கின்றன. அதையே பின்பற்றி வாழ்ந்து நாமும் அமைதி என்ற சொர்கத்தை எய்துவோமாக.





Sunday, March 28, 2010

மரணத்திற்கு அப்பால் - 12



எமதர்மனே! மரணத்திற்குப் பிறகு மனிதன் வாழ்கிறான் என்று சிலரும், இல்லை என்று சிலரும் கூறுகின்றனர். உண்மை என்ன?

இது நசிகேதன் எமதர்மனிடத்தில் கேட்டது. அதற்கு எமதர்மன் பகர்ந்த விடையும் அது சார்ந்த விளக்கங்களும் தான் இது வரை நாம் பார்த்து வந்தோம். மேலும் தொடர்ந்து செல்வதற்கு முன் நாம் வந்த பாதையைச் சுருக்கமாகச் சற்றே திரும்பிப் பார்ப்போம்.

தந்தையின் கோபமான கட்டளையால் எமலோகத்தை அடைந்த நசிகேதன் அங்கே எமனுக்காக காத்திருக்க நேருகிறது. நசிகேதனை காத்திருக்க வைத்தமைக்காக எமதர்மன் நசிகேதனுக்கு மூன்று வரங்களைக் கொடுக்கிறான். அதில் மூன்றாவதாக நசிகேதன் கேட்ட வரம் தான் 'மரணத்திற்கு அப்பால் மனிதனுக்கு நடப்பது என்ன?' என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்ற வரம்.

பெரிய தயக்கத்திற்கு பிறகு எமதர்மன் நசிகேதனுக்கு அவற்றை விளக்குகிறார். அதைப் பற்றி கூறுவதே கட உபநிஷதம்.

இங்கே எமதர்மன் மனிதன் ஆத்ம சுவரூபமானவன் என்றும் உடல் வேறு ஆத்மா வேறு என்பதை முதலில் நசிகேதனுக்குப் புரியவைக்கிறார். பின் ஆத்மா எத்தைகையது என்றும் உடலில் எங்கே இருக்கிறது என்பதையும் எடுத்துச் சொல்லி ஆத்மா பற்றிய ஒரு புரிதலை நசிகேதனுக்கு உண்டாக்குகிறார். பிறகு ஆத்மாவின் சக்தியைப் பற்றியும் இறைவன் என்கிற கடைசிப் புகலிடத்தை அடைவதற்கான வழி என்ன என்பதையும் ஒரு வரிசைக்கிரமமாக விளக்கிச் சொல்கிறார். இந்த வரிசையைச் சற்றே சுருக்கமாகப் பார்ப்போம்.

இதுவரை நசிகேதனுக்கு ஆன்மா பற்றி எமதர்மன் விளக்கியது:

1. மனிதன் உடல் வேறு ஆன்மா வேறு.

2. ஆன்மா என்பது சலனமற்றது. நிரந்தரமானது. அது அழியாதது. மீண்டும் பிறப்பெய்தக் கூடியது.

3. ஆன்மா தொப்புளிலிருந்து ஒரு ஜான் உயரத்தில் இதயக்குகையில் ஒரு கட்டைவிரல் அளவில் இருக்கக்கூடியது.

4. புலன்களை ஒரு தேரோட்டி போல கட்டுப்படுத்துபவன் மட்டுமே அதனை உணர முடியும்.

5. உலகப் பொருட்கள், மனம், புத்தி, ப்ரபஞ்ச ஆற்றல் இவற்றையெல்லாம் முழுமையாக வசப்படுத்தினால் கடைசிப் புகலிடமான இறைசக்தியை அடையலாம்.

6. பேச்சைக் குறைத்தால் மனம் வசப்படும், மனம் வசப்பட்டால் புத்தி விழிப்புற்றிருக்கும், புத்தி விழிப்புற்றவன் ஆன்மாவை அறிவான்.


இவ்வாறு எமதர்மன் பல விஷயங்களை விளக்கமாகக் கூறியதை வெவ்வேறு உதாரணங்களுடன் இதுவரைப் பார்த்தோம். இனி இதற்கும் மேலே பயணித்தால் மரணத்தை வெல்லக்கூடியவன் யார், மரணத்திற்கு பிறகு ஆன்மா என்ன நிலையை அடைகிறது என்று எமதர்மன் மேலும் விளக்குகிறார். அவற்றைப் பார்ப்போம்.

எமதர்மன் மேலும் தொடர்கிறார், "எழுங்கள், விழியுங்கள், தகுந்த குருவை அடைந்து அனுபூதி பெறுங்கள். கூரான கத்தியின் முனைமீது நடப்பது போன்று இறைநெறி கடினமானது என்று சான்றோர்கள் கூறுகின்றனர்."

"ஒலி, தொடு உணர்ச்சி, காட்சி, சுவை, மணம் என்று புலன்களால் உணரக்கூடிய அனைத்தையும் கடந்த, அழிவற்ற, என்றென்றும் உள்ள, ஆரம்பம் இல்லாத, முடிவற்ற, புத்தியைவிட மேலான நிலையான இறைவனை அனுபூதியில் உணர்பவன் மரணத்தின் பிடியிலிருந்து விடுபடுகிறான்."

மரணம் என்பது ஒரு நிகழ்வு. அந்த நிகழ்வின் போது உடலும் மனமும் ஒரு வித அவஸ்தைக்கு உள்ளாகிறது என்கிறார்கள் பெரியோர்கள். ஆன்மாவை உணர்ந்து அதனோடு ஒன்றிப் போகிறவன் உடல் வேறு ஆன்மா வேறாகப் பிரியும் தருணத்தை உணரமாட்டார்கள். எனவே அவர்கள் மரணம் என்கிற அவஸ்தையிலிருந்து விடுபடுகிறார்கள். ஏனெனில் ஏற்கனவே அவர் ஆன்மாவாகவே வாழ்ந்து கொண்டிருப்பதால் உடலை விட்டுப் பிரியும் போதும் மரணம் என்று உணராமலேயே வாழ்ந்துகொண்டே இருக்கும் நிலையை அடைவார்கள்.

அதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் நாம் ஐம்புலன்களால் உணரக்கூடிய அனைத்தையும் கடந்த ஒரு நிலையை உணர வேண்டும். இதற்கு மனதை அமைதிப்படுத்தி ஆழ்மன அமைதியை உணரச்செய்யும். தியானமும் அதற்கான தொடர் பயிற்சியும் மட்டுமே கை கொடுக்கும். பொதுவாக மனத்தால் எதையும் நினைக்காமல் சலனமற்ற முறையில் அமைதியாக ஒரு மணிநேரம் உட்கார்ந்திருந்தாலே யோகமாக கருதப்படுகிறது. சலனமற்ற மனமே ஆன்மாவைப் பற்றி சிந்திக்கச் செய்யும். சலனமற்ற மனமே இறைநிலையை உணரச்செய்யும். இந்த வேகமாக இயங்க வேண்டிய உலகில் இதற்கென்று நேரம் ஒதுக்கி பயிற்சி எடுத்தாலொழிய இந்த லட்சியத்தை அடைய முடியாது.

இந்த இடத்தில் உபநிஷத்தைக் கற்பதாலும் கேட்பதாலும் ஏற்படும் நன்மைகள் கூறப்படுகின்றது.

நசிகேதமுபாக்யானம் ம்ருத்யு ப்ரோக்தம் ஸனாதனம்|
உக்தா ஷ்ருத்வா ச மேதாவீ ப்ரஹ்ம லோகே மஹீயதே||

"நசிகேதனுக்கு எமதர்மன் கூறிய இந்தப் பழமையான விஷயத்தை விழிப்புணர்வு பெற்ற ஒருவன் சொல்லவும் கேட்கவும் செய்தால் உயர் உலகங்களில் போற்றப்படுகிறான். மேலான, பொருளாழம் மிக்க இந்த உபநிஷதத்தைச் சான்றோர்களின் சபையிலோ சிரார்த்த காலத்திலோ தூயவனான ஒருவன் படித்தால் அது எல்லையற்ற பலனைத் தருகிறது".

பொதுவாக உபநிஷதங்கள், பகவத் கீதை போன்றவற்றைப் படிப்பது புண்ணிய செயலாகவே கருதப்படுகிறது. கேரளாவில் உள்ள கோவில்களில் இன்றைக்கும் தினசரி யாரேனும் பகவத் கீதையை சுலோகத்துடன் படித்து அவற்றை எடுத்துச் சொல்லிக் கொண்டு இருப்பார்கள். இது தினசரி ஒரு சாதாரண நிகழ்வாகும். இதற்கென்று பெரிய சொற்பொழிவாளர் வரவேண்டியது இல்லை. அதனைப் படிப்பதையும் அமர்ந்து கேட்பதையும் ஒரு புண்ணியமாகவே கருதுவதால் (தமிழர்கள் போல் அல்லாமல் அவர்கள் இது போன்ற விஷயங்களுக்கு மரியாதை கொடுப்பதால்) இது கேரளக் கோவில்களில் தொடர்கிறது.

மேலும் உபநிஷதத்தை வெறுமனே வாசிப்பதால் பலனில்லை என்றும் அதன் உட்பொருளை தூய உள்ளத்தோடும் உணரத்துடிப்பவரே உபநிஷதங்கள் படிப்பதனால் பலனடைவார்கள் என்றும் உபநிஷதத்தின் முக்கியத்துவம் பற்றி கூறப்படுகிறது.

ஆக இதுவரை படித்ததை மனதில் நிறுத்தி அசைபோடுங்கள். ஆன்மாவை உணர முயற்சியுங்கள்.

இனி கட உபநிஷத்தின் இரண்டாம் பாகம் தொடங்குகின்றது. அங்கே எமதர்மன் நசிகேதனுக்கு "அதுவே நீ"" என்று ஆன்மாவை வெவ்வேறு கோணங்களில் விளக்குகிறார். மேலும் மரணத்திற்கு பின்னால் ஆன்மாவிற்கு என்ன நடக்கிறது என்றும் விளக்கமாக நசிகேதனுக்கு விளக்குகிறார். இனி வரும் நாட்களில் இன்னும் ஆழமாக ஆன்மாவைத் தரிசிப்போம்.


கொசுறு: உபநிஷத்தும், ஸ்ரீமத் பாகவதம் போன்றவற்றைப் படிப்பதற்கு முன்னால் எளிய பகவத் கீதையை அன்பர்கள் ஓரிரு முறை படிப்பதும் மிகவும் நல்லது. ஆத்மா பரமாத்மாவை பற்றிய சிந்தனைகளுக்கு பகவத்கீதையே வாசற்கதவாக இருக்கும். மேலும் அனைத்து உபநிஷத்துக்களின் எளிமையான சாரமே பகவத் கீதை என்றும் பெரியோர்களால் வழிகாட்டப்படுகிறது. எனவே பகவத் கீதையை ஒரு முறையேனும் ஒருநிலையான மனதுடன் முழுமையாக வாசித்தால் நல்லது.


மரணத்திற்கு அப்பால் - 13