Sunday, January 1, 2012

கீதோபதேசம் - பிரம்மம் என்பது எது?




அர்ஜுனன் சொன்னது..

மனிதரில் சிறந்தவனே! பிரம்மம் என்பது எது? அத்யாத்மம் என்றால் என்ன? கர்மம் என்பது யாது? அதிபூதம் என்றும் அதிதைவதம் என்றும் சொல்லப்படுபவை யாவை?

மதுசூதனா! இந்த உடலில் அதியக்ஞம் என்பது யாது? எவ்வாறு  உள்ளது? மேலும் மனம் ஒரு நிலைப்பட்டவர்கள் தங்கள் மரணகாலத்தில் உன்னை எவ்வாறு அறிந்து கொள்வது?

வீரர்களுள் சிறந்தவனான அர்ஜுனா! கேள்!

பிரம்மம் என்பது அழிவற்றது. எல்லாவற்றிலும் மேலானது. அதன் சிறப்பான இயல்புகளை அறிந்து கொள்ளுதல் ஆன்மீக ஞானம் எனப்படுகிறது. உயிர்களை உண்டு பண்ணி நிலைத்திருக்கச் செய்வதாகிய வேள்வியே கர்மம் எனப்படுகிறது.

உத்தமனே! அதிபூதம் என்பது அழியும் பொருள் என்று சொல்லப்படுகிறது. அழியக்கூடிய இயல்பைப் பற்றியது. புருஷன் அல்லது ஆன்மாதான் அதிதைவம் எனப்படும். இந்த உடலில் அதியக்ஞம் என்பது நானேதான்!

மரண காலத்தில் எவன் ஒருவன் என்னையே நினைத்து உடலைப் பிரிந்து செல்லுகிறானோ, அவன் என்னையே வந்தடைகிறான். இதில் சிறிதளவும் சந்தேகம் கிடையாது.

குந்தியின் மகனே! எவன் ஒருவன் இந்த உடலைவிட்டு நீங்கும் பொழுது எந்தப் பொருளைப் பற்றி எண்ணிக் கொண்டே இறக்கிறானோ, அவன் அதைப் பற்றி இடைவிடாமல் சிந்தித்துக் கொண்டிருந்த காரணத்தால் அதனிடத்தில் தான் சென்றடைகிறான்.

எனவே பார்த்தா..! எப்பொழுதும் நீ என்னை சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும், அன்றியும் போர் புரிய வேண்டும். உன் மனத்தையும், புத்தியையும் என்னிடத்திலேயே நீ நிலை நிறுத்தினால் சந்தேகம் இன்றி என்னை வந்தடைவாய்.

பார்த்தா! இவ்வகையிலான இடைவிடாத பயிற்சியால், மனதை வேறொன்றின் மீதும் செலுத்தாமல் உறுதியுடன் நிலைத்திருக்கும் சித்தத்துடன், ஒளிமயமான பரம்பொருளை யார் தியானிக்கிறானோ  அவன் அவரையே அடைகிறான்.

எல்லாவற்ரையும் உணர்ந்தவனை, பழமையானவனை, எல்லாவற்றையும் ஆளுபவனை, அணுவுக்கும் சிறிய அணுப்போன்றவனை, எல்லாவற்றையும் தாங்குபவனை, கற்பனைக்கு எட்டாத வடிவுடையவனை, சூரியனைப் போன்று ஒளிர்பவனை, அஞ்ஞான இருளுக்கு அப்பாற்பட்டவனை - யார் இறக்கும் நேரத்தில் சஞ்சலம் இல்லா மனத்துடனும் பக்தியுடனும், யோக சக்தியால் இருபுருவங்களுக்கு நடுவில் மூச்சை நிலைநிறுத்தி தியானம் செய்கிறானோ அவன் சுடரொளிவீசும் அந்தப் பரம்பொருளை அடைகிறான்.

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்.


.

4 comments:

gujjan said...

nice share.. thanx :)

பிரபு said...

அருமையான உபதேசங்கள் நல்ல பகிர்வு..

உங்கள் பணி சிறக்கட்டும் . வாழ்த்துக்கள் .

Suresh said...

Dear Heyyram,

This must be interesting to you.

http://vimeo.com/14466776

Unknown said...

One need to know how to fix our mind especially at the time of death. Unless one practice while alive, this cannot be possible.