Showing posts with label eman. Show all posts
Showing posts with label eman. Show all posts

Sunday, August 15, 2010

மரணத்திற்கு அப்பால் - 17





"மரணத்திற்குபிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர். சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப் பயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்". - எமதர்மன்.

ஆன்ம அனுபூதி, இறையனுபூதி, இறைக்காட்சி என்றெல்லாம் பொதுவாக நாம் கேள்விப்படுபவைகள் எல்லாம் உண்மையில் என்ன என்பது பற்றி யாராலும் கூற முடியாது. ஏனினெல் அது அராய்ச்சி செய்து விளக்கமுடிவதில்லை. அவை அனுபவத்திற்கு உரியது. அத்தகைய அனுபவத்தை பெறுவதற்கு சுய ஆராய்ச்சி தேவை. அவ்வாறான ஆராய்ச்சியின் காரணமாக நசிகேதன் இங்கே அதுபற்றி கேட்க எமதர்மனும் சிறுவனான நசிகேதனுக்கு சிறந்ததொரு பதிலைக் கொடுக்கிறார்.

"குறிப்பிட்டு சொல்ல முடியாததும் மேலானதுமான அந்த ஆனுபூதி இன்பத்தை நேரடியாக அனுபவிக்கின்றனர். அந்த அனுபவம் தானாக ஒளிர்கிறதா அல்லது வேறொன்றால் ஒளிரச் செய்யப்படுகிறதா? இது பற்றி நான் அறிய விரும்புகிறேன்" என்று கேட்கிறான் நசிகேதன்.

எமதர்மன் கூறுகிறார்! "நசிகேதா! அங்கே சூரியன் ஒளிர்வதில்லை. சந்திரனும் நட்சத்திரங்களும் ஒளிர்வதில்லை. மின்னல் ஒளிர்வதில்லை. இந்த அக்கினி எப்படி ஒளிர முடியும்? ஒளிர்கின்ற ஆன்மாவை அனுசரித்தே மற்ற அனைத்தும் ஒளிர்கின்றன. அனைத்தும் அதன் ஒளியால் ஒளிர்கின்றன."

ஆன்ம ஒளியைக் காட்ட புற ஒளியால் இயலாது என்கிறார் எமதர்மன். ஆன்ம அனுபூதி என்பது ஒரு புறக்காட்சி அல்ல என்று இங்கே கூறப்படுகிறது. அனைத்தையும் காண ஒரு விளக்கு தேவை. ஆன்ம ஒளியே நாம் புறப்பொருளைக் காணும் விளக்காக இருக்கின்றது. ஆன்ம ஒளியால் தான் நாம் அனைத்தையும் உணர்கிறோம். ஆகையால் சாதகத்தால் ஆன்ம ஒளியை நீ உணர்வாய் என்கிறார் எமதர்மன். எவனொருவன் ஆன்ம ஒளியை காண்கிறானோ அவன் மரண பயத்தை வெல்கிறான்.

மரணத்தை விட கொடியது மரண பயம். ஆனால் அத்தகைய மரண பயத்தை ஒருவன் எப்படி வெல்ல முடியும் என்பதற்கு எமதர்மன் வழி கூறுகிறார். வாழ்க்கையின் துவக்கத்தையும் முடிவையும் பற்றிய உண்மை நிலையை உணர்பவன் மரண பயத்தை வெல்கிறான் என்கிறார்.

உதாரணமாக ஆற்றங்கரையில் ஒரு அரச மரம் இருப்பதாய்க் கொள்வோம். நாம் அதைப் பார்க்கிறோம். அதன் பிரதிபிம்பம் நீரில் தெரிகிறது. நிலத்தில் வேர்கள் கீழேயும் கிளைகள் மேலேயும் தெரியும், ஆனால் நீரில் அவை தலைகிழாகத் தெரியும். மரம் நீரின் பிரதிபிம்பத்தில் வேர்கள் மேலாகவும் கிளைகள் கீழாகவும் போல! அதாவது வாழ்க்கையில் நாம் இன்பமாகக் காண்பவை உண்மையில் இன்பம் அல்ல. அதுபோலவே துன்பமாகக் காண்பவை துன்பம் அல்ல. பிறப்பை நாம் இன்பமாகக் காண்கிறோம். மரணத்தை துன்பமாகக் காண்கிறோம். அதனைக் கண்டு அஞ்சுகிறோம். ஆனால் உண்மையை உணர்ந்த மகான்கள் பிறப்பு துன்பம் என்றும் மரணத்தை இன்பம் என்றும் கூறுகிறார்கள். இதுவே மரம் நீரில் பிரதிபிம்பமாக தலைகீழாக தெரிவதற்கு எடுத்துக்காட்டு.



அதுவே உண்மை எனப்படுகிறது. துறவி மரணத்தை நேசிக்கிறான். சாதாரண மனிதர்கள் வாழ்வை நேசிக்கிறார்கள். அது போலவே உலகம் அதன் உறவுகள் அது தரும் சுகங்கள் எல்லாவற்றையும் உண்மை நிலையானவை என்று நம்புகிறோம். ஆனால் அது உண்மை இல்லை. இவ்வாறு நாம் காணும் உண்மைக்கு ஒரு தலைகீழ் நிஜம் இருப்பதை, நாம் வாழும் வாழ்க்கைக்கு ஒரு பிரதிபிம்பமான இன்னொரு கோணம் இருப்பதை நீரில் காணும் மரத்தோடு ஒப்பிட்டு விளக்குகிறார் எமதர்மன்.

"நசிகேதா! இந்த அரச மரம் பழமையானது. மேலே வேரும், கீழே கிளைகளும் உடையது. அதுவே தூயது. அதுவே இறைவன். அது அழிவற்றது. எல்லா உலகங்களும் அதையே சார்ந்திருக்கின்றன. அதை யாரும் கடந்து செல்ல முடியாது. நீ கேட்ட உண்மை அதுவே!"

"இந்த உலகங்கள் அனைத்தும் பிராணனிலிருந்து வெளிப்படுகின்றன. பிராணனால் இயங்குகின்றன. வஜ்ராயுதத்தை உயர்த்திப் பிடித்திருப்பது போல் இறைவன் இருக்கின்ற பெரும் பயம் காரணமாகத் தான் இந்த இயக்கங்கள் நடைபெறுகின்றன. இதனை அறிபவர்கள் மரணமற்றவர்களாக ஆகின்றனர்."

இறைவன் மிகப்பெரிய பிரம்மாண்டத்தன்மை கொண்டவன் என்கிற உண்மையை உணர்வதாலேயே இயக்கங்கள் தடங்கலின்றி நடைபெறுகின்றன. பேராற்றலின் சக்தியே பிரபஞ்சத்தின் அனைத்து இயக்கத்தையும் தொடர்ந்து நடைபெறச் செய்கின்றது என்பதை விளக்குகிறார் எமதர்மன்.

"நசிகேதா! இறைவன் மீதுள்ள பயத்தினால் அக்கினி எரிக்கின்றது; சூரியன் சுடுகிறது. இந்திரனும் வாயுதேவனும் தத்தம் வேலைகளைச் செய்கின்றனர். ஐந்தாவதான மரண தேவனும் அந்த பயத்தினால் தான் தன் தொழிலைச் செய்கின்றன."



இங்கே இறைவன் என்ற பதத்தை மூலப் ப்ருக்ருதி எனக்கொள்ளலாம். அளவிட முடியாத அண்டவெளியும் பிரபஞ்சங்களும் ஒருவித ஈர்ப்பு சக்திக்குக் கட்டுப்பட்டும் ஏதோ ஒரு செலுத்துப் பாதையிலேயே வலம் வந்து கொண்டிருப்பதையும் காணும் போது, இவைகள் எல்லாம் எதிலிருந்து உருவானதோ அந்த மூலப் ப்ருக்ருதியின் ஆற்றல் மிகப்பெரியது. எல்லையற்ற பரப்பளவையும் அவை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது என்பதை நாம் உணர முடிகிறது. ஆகவே அந்த மூலப் ப்ருக்ருதியின் ஆற்றலின், கட்டுப்பாட்டின் காரணமாகவே அக்னி எரிக்கின்றது என்றும் சூரியன் சுடுகின்றது என்றும், வாயு அதன் வேலைகளைச் செய்துகொண்டு இருக்கின்றது என்றும் எமதர்மன் கூறுவதாகக் கொள்ளலாம்.

"இங்கே உடம்பு வீழ்வதற்கு முன்பு இந்த உண்மைகளை உணர முடியுமானால் அவர்களுக்கு அகக்காட்சி வாய்க்கிறது. உணர முடியாவிட்டால் உலகில் மீண்டும் மீண்டும் பிறக்க நேர்கிறது" - எமதர்மன்.



ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே!

விளக்கம்: ஓம். அது பூர்ணம். இதுவும் பூர்ணம். பூர்ணத்திலிருந்து பூர்ணம் உதயமாயுள்ளது. பூர்ணத்தினின்று பூர்ணத்தை எடுத்தாலும் பூர்ணமே எஞ்சி நிற்கின்றது.


ஆன்மாவை அறிவோம்....


மரணத்திற்கு அப்பால் - 18

Wednesday, July 7, 2010

மரணத்திற்கு அப்பால் - 16


ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமே வாவசிஷ்யதே!

விளக்கம்: ஓம். அது பூர்ணம். இதுவும் பூர்ணம். பூர்ணத்திலிருந்து பூர்ணம் உதயமாயுள்ளது. பூர்ணத்தினின்று பூர்ணத்தை எடுத்தாலும் பூர்ணமே எஞ்சி நிற்கின்றது.

ஆம், இந்தப் பிரபஞ்சத்தின் அனுப்பொருளும் அதன் சக்தியும் எதுவோ அதுவே நாமும் நம்முள்ளிருக்கும் ஆன்மாவும். நம் உடலும் ஆன்மாவும் இறுதியில் பிரபஞ்சத்திலே தான் ஐக்கியமாகிறது. தனித்து எங்கும் செல்வதில்லை. இவற்றை எமதர்மன் படிப்படியாக நசிகேதனுக்கு விளக்கி வருகிறார்.

"நசிகேதா! பதினோரு வாசல்களை உடையதான உடம்பு, பிறப்பற்ற, மாறுபாடற்ற உணர்வை உடைய ஆன்மாவின் கருவியாகும். உடல் ஆன்மா வசிக்க உதவும் ஒரு கருவிதான் என்பதை தியானித்து உனர்ந்தவன் கவலைகளிலிருந்து விடுபடுகிறான். சுதந்திரனாகி பிறவிகளிலிருந்து விடுபடுகிறான். இவ்வாறு உடலை ஒரு கருவியாக உபயோகித்துப் பின் அதிலிருந்து நீங்கும் உட்பொருள் எதுவோ அந்த ஆன்மாவே நீ கேட்டது!"

கண்கள், நாசிகள், செவி, குதம், பிறப்புக்குறி, தொப்புள் மற்றும் கருவுருவாகும் போது ஆன்மா உடலுக்குள் புகும் வாயிலாக கருதப்படும் உச்சந்தலை ஆகியவற்றையே எமதர்மன் உடலின் பதினோரு துவாரங்களாக குறிப்பிடுகிறார். இதில் தொப்புள் மற்றும் உச்சந்தலை துவாரங்கள் அடைக்கப்பட்ட நிலையில் இருக்கும். பிறந்த குழந்தையின் உச்சந் தலையை சிறிது காலத்திற்கு யாரையும் தொட விடமாட்டார்கள். ஏனெனில் தலைப்பகுதியானாலும் மிகவும் மென்மையான ஒரு பகுதியாக அப்பகுதி விளங்குவதே அதற்கு காரணம். மனிதர்கள் கருவாக உருவெடுக்கும் மண்டைஓட்டுடன் கூடிய தலைப்பகுதி வளருகையில் தலை ஒரு உருண்ட பஞ்சு போல இருக்கும். உச்சந்தலையின் அப்பகுதி மூலமாகவே ஆன்மா கருவினுள் புகுவதாக பெரியோர்கள் கூறுவார்கள். உடலைப் பேணிப்பாதுகாப்பதில் உச்சந்தலைக்கு முக்கியப் பங்கு இருக்கிறது என்பதும் அதனால் தான். ஆக எமதர்மன் இது போன்ற இடங்களையும் சேர்த்தே பதினோரு துவாரங்கள் கொண்ட உடல் என்று கூறுகிறார்.



எனவே உடலை வெறுக்கவும் கூடாது, அதன் சுகங்கள் மீதும் மயக்கம் கொள்ளக் கூடாது. இந்த உடல் பாதுகாக்கப்படுவது உள்ளே அசைவற்று இருக்கும் ஆன்மாவுக்காகவே என்று உணர்ந்து மயக்கமற்ற வாழ்க்கை வாழ வேண்டும். அவ்வாறு எந்த ஆன்மாவிற்காக நாம் உடலைக் காக்கும் கடமையை மேற்கொண்டிருக்கிறோமோ அதுவே நீ அறிய விரும்புவது என்று நசிகேதனுக்கு எமதர்மன் விளக்குகிறார்.

"நசிகேதா! இந்த ஆன்மா எங்கும் செல்வது. தூய ஆகாயத்தில் சூரியனாக இருப்பது, அனைத்திற்கும் ஆதாரமானது, அண்ட வெளியில் காற்றாக இருப்பது, அக்கினியாக பூமியில் உறைவது, தேவனில் உறைவது, உண்மையில் உறைவது, ஆகாயத்தில் உறைவது, நீரில் தோன்றுவது, பூமியில் தோன்றுவது, யாகத்தில் தோன்றுவது, மலையில் தோன்றுவது, பிரபஞ்ச நியதியாக விளங்குவது. பெரியது."

"நசிகேதா! பிராணனை மேலே இயக்குவதும், அபானனைக் கீழே தள்ளுவதுமான ஜீவன் உடம்பின் நடுவில் உள்ளது. எல்லா புலன்களும் அதனைச் சார்ந்திருக்கின்றன."

பிராணன் உடலின் உள்ளிருந்து மேலே எழும்பி வெளியேறக்கூடிய சக்தி. மூச்சு வெளியேறுவது அந்த மேல் நோக்கிய சக்தியால் தான். அபாணன் என்பது கீழ் நோக்கிய இயக்கம். உடலில் இருந்து வாயு குதம் வழியாக வெளியேறுவது. உடலில் இருக்கும் வாயு இந்த இரண்டு மார்கம் வழியாக சீரான அழுத்தத்தில் பிரிவதும் அது தடையற்ற முறையில் தொடர்ந்து நிகழ்ந்து வருவதுமே இந்த உடல் சரியாக இயங்குவதை வெளிப்படுத்தும். பூமிப்பந்தில் மட்டுமல்லாமல் பிரபஞ்சத்தின் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும் இந்த வாயுவானது உடலில் பத்து வகையான இயக்கங்களாக செயல்படுகிறது என ரிஷிகள் வகைப்படுத்தி இருக்கின்றனர்.

அவற்றைப் பார்ப்போம்.

பிராணன் - தொப்புளிலிருந்து மேல் நோக்கிய இயக்கம்.
அபானன் - தொப்புளுக்கு கீழ் நோக்கிய இயக்கம்
வியானன் - எல்லா பக்க இயக்கம்
உதானன் - மரண வேளையில் ஜீவன் வெளியேற உதவுதல் (சில வயோதிகர்கள் கழிவறையில் உயிர் நீப்பதை கேள்விப்பட்டிருப்போம், சிலருக்கு ஜீவன் வாய் வழியாகப் பிரியலாம், சிலர் கண்களை அகல விரித்து ஜீவனைத் துறப்பர். இத்தகைய வழிகளில் ஆன்மா வெளியேற உதவும் வாயு
உதானன்)
ஸமானன் - உணவு ஜீரணம், உனவை ரத்தம்போன்றவையாக மாற்றுதல். (உடல் செல்கள் ஆக்ஸிஜன் இல்லை என்றால் உயிர் வாழாதல்லவா, அவ்வாறு உடலின் ரத்த ஓட்டம் முதல் அனைத்து செல்களிலும் இருக்கும் வாயு ஸமானன்)
நாகன் - வாந்தி, ஏப்பம்
கூர்மன் - கண் இமைகளின் இயக்கம்
க்ருகலன் - பசி
தேவதத்தன் - கொட்டாவி
தனஞ்ஜயன் - உடம்பிற்கு ஆரோக்கியம் அளித்தல்

இவ்வாறு பத்து வகையாக வாயு நமது உடம்பில் செயல்பட்டு வருகின்றது என்கிறார்கள் ரிஷி முனிவர்கள். இந்த வாயுக்கள் அதனதன் வேலையை சீராக செய்யாமல் போனால் உடல் நோயுறக்கூடும். ஆக உடலின் அனைத்து இயக்கங்களும் இந்தப் பிராணனையே சார்ந்துள்ளன என்கிறார் எமதர்மன்.

"நசிகேதா! இவ்வாறான உடம்பிலிருந்து உயிர் பிரிந்தால் அங்கே என்ன மிஞ்சுமோ அதுவே நீ கேட்ட பொருள்."

"எந்த மனிதனும் பிராணனாலோ அபானனாலோ வாழ்வதில்லை. எதனை ஆதாரமாகக் கொண்டு இந்தப் பிராணனனும் அபானனும் இயங்குகின்றனவோ அதனை ஆதாரமாகக் கொண்டே அனைத்தும் வாழ்கின்றன."

வெறும் மூச்சு விடுவதால் நாம் வாழ்வதில்லை. உடலினுள்ளே இருக்கும் நிலையான பொருளான ஆன்மாவின் சக்தியே இந்த இயக்கங்களுக்கு காரணமாகிறது என்கிறார் எமதர்மன். அதாவது ஒரு மின் விசிறி ஓடுகிறாது என்றால் அதன் இறக்கையால் அல்ல. அதனுள்ளே ஓடும் கண்ணுக்குத் தெரியாத மின்சாரத்தால் தான் அல்லவா! அது போலவே உடலை ஆன்மா என்ற சக்தி இயக்குகிறது என்கிறார் எமதர்மன்.

"நசிகேதா! நல்லது. மரணத்திற்குப் பின்னால் உயிர் என்ன ஆகும் என்பது பற்றியும், ரகசியமானதும் அழிவற்றதுமான ஆன்மா பற்றியும் உனக்கு இப்போது சொல்கிறேன். மரணத்திற்குப் பிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர். சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப் பயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்"

"புலன்கள் தூங்கும் போது தனக்கு விருப்பமானவற்றை உருவாக்கியபடி எது விழித்திருக்கிறதோ அதுவே தூய, மரணமற்ற ஆன்மா என்று சொல்லப்படுகிறது. எல்லா உலகங்களும் அதனையே சார்ந்திருக்கின்றன. அதனைக் கடந்தவனாக யாரும் இல்லை."

உறக்கத்திலும் உயிர்ப்புடன் இருக்கிறோம், கனவுகளையும் நிஜம் போல உணர்கிறோம், விழிப்பு நிலையையும் உணர்கிறோம். இப்படி எல்லா நிலைகளிலும் நாம் உணர்வுடன் இருப்பதற்கு காரணமாக எப்போதும் நிலையான விழிப்புடன் இருப்பது எதுவோ அதுவே ஆன்மா என்கிறார்
எமதர்மன்.

"நசிகேதா! ஒன்றான அக்கினி உலகில் வந்து எவ்வாறு பல்வேறு பொருட்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறதோ அவ்வாறே எல்லா உயிர்களிலும் இருக்கின்ற ஆன்மா ஒன்றாக இருந்தாலும் பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது. அதே வேளையில், அந்த வடிவங்களுக்கு வெளியிலும் நிகழ்கிறது."


எந்தப் பொருளை எரித்தாலும் நெருப்பு ஒரே வடிவானதாகவே இருக்கிறது. அதே போலவே ஆன்மா மனிதன், விலங்குகள், பறவைகள் மற்றும் செடி கொடிகள் அனைத்திலுமே ஒரே தன்மை உடையதாகவே இருக்கிறது. மரத்தையும் நாம் கடவுளாக வணங்குவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக ஆன்மாவின் தன்மையை எமதர்மன் விளக்குகிறார்.

"எதைப் பற்றி பலரால் கேட்க முடியவில்லையோ, கேட்டும் பலரால் எதனை அறிய முடியவில்லையோ அந்த ஆன்மாவைப் பற்றி உபதேசிப்பவரும் அபூர்வம். கேட்பவரும் அபூர்வம். அத்தகைய அபூர்வமான ஒருவரைப் பின்பற்றி அதனை அறிபவரும் அபூர்வம்."

ஆன்மாவை அறிவோம்....


மரணத்திற்கு அப்பால் - 17

Wednesday, March 17, 2010

மரணத்திற்கு அப்பால் - 11



"ஆன்மா பிறப்பதில்லை, இறப்பதும் இல்லை. இது எதிலிருந்தும் உண்டானதில்லை. எதுவும் இதிலிருந்தும் உண்டாவதில்லை. இது பிறப்பற்றது, என்றென்றும் இருப்பது. நிலையானது, பழமையானது; உடம்பு அழிக்கப்பட்டாலும் அழியாதது."


ஐந்து குதிரைகளைக் கட்டுப்படுத்தி தேரைச் செலுத்தும் ஒரு தேரோட்டியைப் போல புலன்களை அடக்க வேண்டும் என்று எமதர்மன் விளக்குகிறார்.

இனி உலக மாயையும், புத்தியும், ஆன்மாவும் ஒன்றைவிட ஒன்று வலிமையானது என்பதை எமதர்மன் விளக்குகிறார்.

இந்த்ரியேப்ய: பராஹ்யர்த்தா: அர்த்தேப்யச்ச பரம் மன:|
மனஸஸ்து பரா புத்தி: புத்தேராத்மா மஹான் பர:|

"நசிகேதா! புலன்களைவிட உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை. பொருட்களைவிட மனம் வலிமை வாய்ந்தது. மனத்தைவிட புத்தி வலிமை வாய்தது. மகிமை வாய்ந்ததான ஆன்மா புத்தியைவிட வலிமை வாய்ந்தது."

மஹத: பரமவ்யக்தம் அவ்யக்தாத் புருஷ: பர:|
புருஷான்ன பரம் கிஞ்சித் ஸா காஷ்ட்டா ஸா பராகதி:|

"மகிமை வாய்ந்ததான ஆன்மாவைவிட அவ்யக்தம் வலிமை வாய்ந்தது.(அவ்யக்தம் என்றால் ப்ரபஞ்சத்தின் ஆற்றல்) அவ்யக்தத்தைவிட இறைவன் வலிமை வாய்ந்தவர். இறைவனைவிட வலிமை வாய்ந்தது எதுவும் இல்லை. அவரே அறுகிப் பொருள், அவரே கடைசிப் புகலிடம்".

இவ்வாரு உலக நிகழ்விகளிலிலிருந்து இறைவன் வரை உயர்வானதை எடுத்துக் கூறுகிறார் எமதர்மன். இவ்வாறு கூறக்காரணம் இறைவனை அடையும் லட்சியத்திலிருந்து அதாவது இறைநிலையை நம் ஆன்மா பெற்று, நாமே இறைவன் என்று இரண்டர கலக்கும் நிலையிலிருந்து நாம் எவ்வளவு தூரம் கீழே இருக்கிறோம் என்பதை இதை வைத்தே நாம் புரிந்து கொள்ளலாம்.

'புலன்களை விட உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை' என்கிறார். அதாவது உலகத்தில் இருக்கும் பொருட்கள் எல்லாமே நம் புலன்களைக் கவரக்கூடியதாக இருக்கிறது. இயற்கைக்கு மயங்குகிறோம். மலரைப் பார்த்தால் கண் மயங்குகிறது. வாசனை நாசியை இழுக்கிறது. அழகிய பறவைகள் கவனத்தை இழுக்கின்றன. அதன் சப்தங்கள் செவியை கவர்கின்றன. உணவின் சுவை நாவை கட்டுப்படுத்துகிறது. காமம் உடலைக் கவர்கிறது. இவ்வாறு உலகப் பொருட்கள் நம் புலன்கள் முழுவதையும் கவர்ந்து மனதைக் கவர்ந்து விடுவதால் புலன்களை விட உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை என்பதை தெளிவுபடுத்துகிறார் எமதர்மன்.

ஆக நாம் முதலில் நம் புலன்களைக் கட்டுக்குள் கொண்டுவந்து இந்த உலகப் பொருட்களைக் காணும்போது அதனால் கவரப்படாத அளவிற்கு மனதைப் பக்குவப்படுத்த வேண்டும். அப்போது தான் புலன்களை விட வலிமை வாய்ந்த உலக பொருட்கள் மீதான மயக்கத்தை நாம் வெல்ல முடியும்.

உலகப் பொருட்களின் மீதான மயக்கத்தை வென்றால் அதற்கடுத்தபடியாக வலிமை வாய்ந்ததான மனத்தை வெல்ல முடியும். இப்படி படிப்படியாக உயர்வை அடையும் போதே இறைவனை அடைய முடியும். இவை யாவும் தொடர் முயற்சியாலு அதனைச் செய்யத் துணிவதாலும் மட்டுமே நடக்கும். அப்படி படிப்படியாக செய்தாலும் நடக்குமா, இறைநிலையை நாம் அடைய முடியுமா என்ற கேள்விகள் எழலாம்?.




இமயத்தின் சிகரம் பார்த்து மலைக்கக் கூடாது. முதல் அடி நம் காலடியில் தானே இருக்கிறது. நாம் தான் அடியெடுத்து அருகிலிருக்கும் அடுத்த அடியைத் தாண்ட வேண்டும். நம் அருகில் இருக்கும் தரையில் நாம் காலெடுத்து வைக்கத் தயங்கினால் சிகரத்தை எப்படித் தொட முடியும். அதே போல் தான் நம் உடம்பில் இருக்கும் புலன்களை கட்டுப்படுத்தி முதலில் உலக பொருட்களின் மீது உண்டாகும் மயக்கத்திலிருந்து விடுவித்தால் அடுத்ததும் சாத்தியம் ஆகும்.

இந்தப் படிப்படியான உயர்வுகளையே ஒன்றைவிட ஒன்று எவ்வாறு வலிமையாக இருக்கிறது என்றும் இறைநிலையை அடைய எங்கிருந்து பயிற்சியைத் தொடங்க வேண்டும் என்றும் அழகாக எடுத்துரைக்கிறார் எமதர்மன்.



எமதர்மன் மேலும் தொடர்கிறார் "நசிகேதா! இந்த ஆன்மா எல்லா
உயிர்களிலும் மறைவாக உள்ளது; வெளிப்பட்டுத் தெரிவதில்லை. ஆனால் ஒருமைப்படுத்தப்பட்ட, நுண்ணிய புத்தியால் மகான்கள் இந்த ஆன்மாவைக் காண்கின்றனர்."

"அக நாட்டம் உடையவன் பேச்சை மனத்தில் ஒடுக்க வேண்டும். மனத்தை விழிப்புற்ற புத்தியில் ஒடுக்க வேண்டும். புத்தியை மகிமை வாய்ந்த ஆன்மாவில் ஒடுக்க வேண்டும். ஆன்மாவை அமைதியில் இருப்பிடமான இறைவனில் ஒடுக்க வேண்டும்."

பொதுவாக எண்ணங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத போது அதிகம் பேச்சு வெளிப்படும் என்பார்கள். பேச்சைக் குறைத்தால் எண்ணங்கள் குறையும். எண்ணங்கள் குறையும் போது புத்தி விழிப்படையும். குறிப்பாக தியானம் செய்பவர்கள் எண்ணங்களையே கட்டுப்படுத்துகிறார்கள். அதனால் அவர்களால் விழிப்புடன் பல விஷயங்களை கவனிக்க முடிகிறது.

உதாரணமாக தசாவதானி என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரே நேரத்தில் நடக்கும் பத்து விஷயங்களை கவனித்து ஒன்றன்பின் ஒன்றாக சரியாகச் சொல்வார்கள். இப்படி நூறு விஷயங்களைச் சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

உதாரணமாக ஒரு தசாவதானி அமர்ந்திருக்கிறார் என்று கொள்வோம். அவர் முன் ஒருவர் திருக்குறளை வரிசையாகப் படிக்கிறார். குறள் படிக்கும் போதே ஒரு மணியோசை ஒலிக்கும். அதே நேரத்தில் வேறு ஒருவர் ஒரு ஆங்கில வார்த்தையை உச்சரிப்பார். ஒரு சினிமா பாடலின் இரண்டு வரி பாடும், கடிகாரம் மணியடிக்கும். வாசலில் ஒருவன் காய்கறி கூவி விற்பான். இவை அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்கும். இந்த தசாவதானி திருக்குறள் என்னென்ன படிக்கப்பட்டது என்று திருப்பிச் சொல்லும்போதே, எத்தனை முறை மணியடித்தது என்றும், கடிகாரத்தின் நேரம் என்ன என்றும், அதே நேரத்தில் பாடிய சினிமாப் பாடல் வரி என்ன என்றும், அருகிலிருந்தவர் வாசித்த ஆங்கில வார்த்தை என்ன என்றும் தெருவில் போன காய்கறிக்காரன் என்னென்ன காய்களின் பெயர்களைச் சொல்லி கூவிவிட்டுப் போனான் என்றும் ஒன்று விடாமல் மிகச் சரியாகச் சொல்வார்.

இப்படி ஒரே நேரத்தில் நடக்கும் நூறு விஷயங்களைச் சொல்பவர்களும் நம் நாட்டில் உண்டு. சிறு வயதில் தூர்தர்ஷனில் ஒரு தசாவதானியை வைத்து இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தி காண்பித்தார்கள். மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாமும் தசாவதானி ஆக வேண்டும் போல இருந்தது. அதனாலேயே தியானத்தின் மீதும் ஆர்வம் புறப்பட்டது.

ஆனால் இன்றைய குழந்தைகள் பாவம். அவர்களுக்கு மனதை ஒருங்கினைக்கும் ஆவலைத் தூண்டுவதற்குப் பதிலாக மனதை சலனப்படுத்தும் விஷயங்களே தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டன. சரி விஷயத்திற்கு வருவோம்.

இப்படி பேச்சைக் குறைத்து எண்ணங்களை கட்டுப்படுத்தினால் மனம் வசியப்படும் என்றும் எமதர்மன் அழகாக எடுத்துரைக்கிறார். பேச்சைத்தானே குறைக்க வேண்டும். குறைந்த பட்சம் அதையாவது செய்து பார்ப்போமே.

மேலும் மரணத்தில் இருந்து யாரால் விடுபட முடியும் என்றும் எமதர்மன் போதிக்கிறார்.

(தொடர்ந்து கேட்போம்...)



மரணத்திற்கு அப்பால் - 12

Sunday, March 7, 2010

மரணத்திற்கு அப்பால் - 10




"ஆன்மா பிறப்பதில்லை, இறப்பதும் இல்லை. இது எதிலிருந்தும் உண்டானதில்லை. எதுவும் இதிலிருந்தும் உண்டாவதில்லை. இது பிறப்பற்றது, என்றென்றும் இருப்பது. நிலையானது, பழமையானது; உடம்பு அழிக்கப்பட்டாலும் அழியாதது."

"நசிகேதா! அணுவைவிட அணுவானதும், பெரியதை விடப் பெரியதுமான இந்த ஆன்மா உயிரினங்களில் இதயக் குகையில் இருக்கிறது. ஆசையற்றவன் அதனைக் காண்கிறான். மனத்தெளிவினால் ஆன்மாவின் மகிமையை உணர்கின்ற அவன் கவலைகளைக் கடந்து செல்கிறான்."


மேலும் ஆன்மாவின் வெவ்வேறு நிலைகளையும் என்னவெல்லாம் செய்யவல்லது என்பதையும் நசிகேதனுக்கு விளக்குகிறான் எமதர்மன்.


"அந்த ஆன்மா உட்கார்ந்தபடி வெகுதூரம் செல்கிறது. படுத்துக்கொண்டே எல்லா இடங்களுக்கும் செல்கிறது. அது இன்ப வடிவானது. துன்ப வடிவானதும் அதுவே. அது ஒளி மயமானது. என்னைத் தவிர வேறு யார் அதனை அறிவதற்குத் தகுதியானவன்?" என்றான் எமதர்மன்.


"என்னைத் தவிற யார் இதனைஅறிவதர்குத் தகுதியானவன்" என்று எமதர்மன் கேட்பதில் பொருள் இருக்கிறது. ஆன்மாவை ஆட்டுவிக்கும் அதிகாரம் அவனிடம் தானே இருக்கிறது. ஆட்டின் உடலுக்குள் என்னென்ன உறுப்புக்கள் எங்கெங்கே இருக்கிறது என்பதை கசாப்புக் கடைக்காரனைவிட சரியாகச் சொல்லமுடிபவர் யார் ?


ஆக ஆன்மாவின் எல்லைகளை அதன் போக்குக்களை மனிதன் இறப்பதையும் அவனே வினைப்பயனால் மீண்டும் பிறப்பதையும் தினசரி கண்டுகொண்டும் அவற்றை இயக்கிக் கொண்டும் இருக்கும் எமனைத் தவிற வேறு யார் இதனை அறிவதற்கும் எடுத்துச் சொல்வதற்கும் தகுதியானவன்.


எமதர்மன் மேலும் தொடர்கிறார். "ஆன்மா உடல்களில் உடலற்றது. நிலையற்ற பொருட்களில் நிலையானது. பெரியது. எங்கும் நிறைந்தது. புத்தி விழிப்புற்றவன் அதனை அறிந்து கவலைகல் நீங்கப் பெறுகிறான்."


ஆன்மா உடல்களில் உடலற்றது என்றால் என்ன?. ஆம் ஆன்மா உடலுக்குள் இருப்பது. ஆனால் உடலோடு ஒட்டாமல் தாமரை இலையின் மேல் தண்ணீர் போல உடலோடு பிணைப்பற்று இருக்கிறது. அதற்கென்று தனியே உடலோ உருவமோ இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறார்.


"நசிகேதா! சொற்பொழிவுகளாலோ, புலமையாலோ, பலவற்றைக் கேட்பதாலோ இந்த ஆன்மாவை அடைய இயலாது. யார் அதை அடைவதற்காக மன ஏக்கம் கொள்கிறானோ அவன் மட்டுமே அதனை அடைகிறான். அந்த ஆன்மா அவனுக்குத் தனது சொந்த இயல்பை வெளிப்படுத்துகிறது."


எமதர்மன் மேலும் தொடர்ந்தார் "தீய ஒழுக்கத்திலிருந்து விலகாதவன், புலனடக்கம் இல்லாதவன், மன ஒருமைப்பாடு இல்லாதவன், மனத்தின் பரபரப்பு அடங்கப் பெறாதவன் இத்தகையவன் எவ்வளவுதான் அறிவளியாக இருந்தாலும் ஆன்மாவை அடைவதில்லை."


"அறிவின் ஆற்றல், தோள் வலிமை இரண்டும் யாருக்கு உணவாக உள்ளதோ, மரணம் யாருக்கு ஊறுகாயாக உள்ளதோ அது எத்தகையது என்பதை யார் அறிவார்?" என்கிறார் எமதர்மன்.


பிறகு எமதர்மன் நசிகேதனுக்கு ஆன்மாவை விழிப்புடன் வைத்திருப்பதையும், ஒரு தேரோட்டி போல ஆன்மாவை நடத்துவதெப்படி என்பது பற்றியும் விளக்குகிறார்.


"நசிகேதா! செயல்களின் பலனை அனுபவிக்கின்ற இருவர் இந்த உடம்பில் உள்ளனர். அவர்கள் நிழலும் வெயிலும் போல் ஒருவருக்கொருவர் மாறுபட்டவர்கள். இந்த உடம்பிலுள்ள நுண்ணியதான இதயக்குகையில் புகுந்தவர்கள். மகான்களும், ஐந்து அக்கினியை உடையவர்களும், மூன்று முறை நசிகேத யாகம் செய்தவர்களும் இவ்வாறு கூறுகின்றனர்."


இதன் மூலம் எமதர்மன் போதிக்க விரும்புவது இதைத்தான். அதாவது செயல்களில் ஈடுபட்டு, சுகதுக்க அனுபவங்களைப் பெற்று, அவற்றின் பலனை அனுபவிப்பது ஜீவன் அல்லது உயிர். மனம் மற்றும் பிராணின் சேர்க்கை இது. எதிலும் பங்கெடுக்காமல் அனைத்தையும் பார்த்துக் கொண்டு சாட்சியாக நிற்கின்ற ஒன்றே ஆன்மா. அதாவது உயிர்வாழக் காரணாயிருக்கிற புறவாழ்க்கையை கவனிக்கின்ற ஜீவன் அல்லது மனம் மற்றும் ஆன்மா இவ்விரண்டையும் இருவர் எனக் குறிப்பிடுகிறார். இதில் ஆன்மாவுடன் நம்மை ஒன்றுபடுத்தி காணக்காண நாம் இறைநிலையை அடைவோம். மனத்துடன் அதன் போக்கிலேயே நம்மை ஒன்றுபடுத்தி காண்பவர்கள் உலகியலில் குழப்பங்களில் அழுந்துகிறார்கள். மனம் மற்றும் ஆன்ம இவ்விரண்டையும் பிரித்துணர்ந்து ஆன்மாவின் மீது கவனம் செலுத்தி தியானிப்பவர்கள் நிரந்தரமான அந்த ஸ்வரூபத்தை அறிகிறார்கள். பின்னர் அதனுடனேயே ஒன்றிப்போகிறார்கள்.





மனம் மற்றும் ஆன்மா இவ்விரண்டும் வெயிலும் நிழலும் போல என எமதர்மன் குறிப்பிடுவதால் இரண்டும் ஒன்றே ஆனால் அசலும் அதன் நகலும் போன்றே செயல் படுகிறது என்றும் அறியமுடிகிறது. உதாரணமாக மரம் என்பது ஆன்மா. அதன் நிழல் வெயிலின் காரணமாக பூமியில் தெரிவது. காலத்தால் நிழலின் தோற்றம் மாறுபாடு அடைந்து கொண்டே இருக்கிறது. ஆனால் மரம் அப்படியே இருக்கிறது. நிழலைப் போல அவை நீள்வதில்லை. சுருங்குவதில்லை. இருளாகும்போது மறைவதில்லை.


அதே போல தான் மனம் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாரு, துக்கம் அடைகிறது. மகிழ்ச்சி அடைகிறது. சில நேரங்களில் அமைதியாக இருக்கிறது. ஆனால் ஆன்மா சூழ்நிலைகளால் மாற்றமடைவதில்லை. அது நிலையாக இருக்கிறது. மனத்தின் செய்கைகளை வேடிக்கைபார்த்தபடி ஒரு சாட்சியைப் போல் நிற்கிறது. இதை உணர்பவர் யாரோ அவர் மனத்தின் செயல்பாடுகளைக் குறைத்து ஆன்மாவைக் கவனிக்கத் துவங்குவர். ஆன்மாவுடன் சேர்ந்து தானும் மனத்தைக் கவனிக்கக் துவங்குவர். அப்படி கவனிக்கத் துவங்குபவர்கள் ஆன்மாவின் ஸ்வரூபத்தை அடைந்து ஆன்மாவாகவே ஆகின்றனர்.


இந்த உடல் மன மாறுபாடுகளையும் ஆன்மாவின் நிலைத்தன்மையையுமே பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் இவ்வாறு அழகு பட எளிமையாக விவரிக்கிறார்.





"அர்ஜுனா! ஆத்மாவுக்கு இந்த உடலில் தான் குழந்தைப் பருவம், இளமைப் பருவம், மூப்பு எல்லாம் ஏற்படுகின்றன. ஆனால் ஆன்மாவோ நிலையானது. மரணத்திற்குப் பின் ஆன்மா மீண்டும் வேறு உடலை அடைகிறது."


"ஏ அர்ஜுனா! குளிர், வெப்பம் , இன்பம், துன்பம் ஆகியவை புலன்களாலேயே உணரப்படுகின்றன. மேலும் அவை தோன்றி, மறைதலும், நிலையாமையும் உடையவை. எனவே நீ அவற்றைப் பொறுத்துக் கொள். ஆனால் ஆன்மா இதனால் பாதிக்கப்படுவதில்லை" என்று ஆன்மாவின் நிலையான தன்மையைப் பற்றி கீதையில் குறிப்பிடுகிறார்.


எமதர்மன் மேலும் தொடர்கிறார் "நசிகேதா! அன்மா பயணம் செய்பவன், உடம்பு ஒரு தேர், புத்தி அதன் தேரோட்டி, மனம் கடிவாளம். புலன்கள் குதிரைகள்; உலகப் பொருட்கள் தான் அந்தக் குதிரைகள் செல்வதற்கான பாதைகள். 'உடம்பு, புலன்கள், மனம்' ஆகியவற்றுடன் கூடிய ஜீவன் தான் வாழ்க்கையை அனுபவிப்பவன் என்று மகான்கள் சொல்கின்றனர்."


"யார் விழிப்புறாதவனாக இருக்கிறானோ, பிளவுபட்ட மனத்தை உடையவனோ, அவனுடைய புலன்கள் தேரோட்டிக்கு அடங்காத குதிரைகள் போல் வசப்படாமல் போகின்றன"


மாறாக "யார் விழிப்புற்றவனோ, பொருந்திய மனத்தை உடையவனோ, அவனுடைய புலன்கள் தேரோட்டிக்கு அடங்கிய குதிரைகள் போல் வசப்படுகின்றன." "நசிகேதா! விழிப்பு நிலை இல்லாதவனும், அடங்காத மனத்தை உடையவனாக இருப்பவனும், தூய்மை இல்லாதவனாக இருப்பவனும் இறைநிலையை அடைய மாட்டான். உலக மாயைகளிலேயே அவன் ஆழ்ந்து விடுகிறான்."


"எனவே நசிகேதா! இறைநிலையை அடைய வேண்டுமானா, மனத்தில் செயல்பாடுகள் பற்றியும் ஆன்மா பற்றியும் விழிப்புள்ளவனாக இருக்க வேண்டும். மனத்தை அடக்கியவனாக அமைதி நிலையில் வைத்திருப்பவனாக இருக்க வேண்டும். எப்போதும் உளத்தூய்மை உடையவனாக இருத்தல் வேண்டும். அப்படி இருப்பவன் யாராகினும், அவன் எங்கே சென்றால் மீண்டும் பிறப்பு எய்துவதில்லையோ அந்த இறைநிலையை அடைகிறான்."





"எனவே யார் விழிப்புற்ற தேரோட்டியாக இருக்கின்றானோ, மனமாகிய கடிவாளத்தை கையில் பிடித்து சரியாக செலுத்தத் தெரிந்தவனாக இருக்கின்றானோ, அவனே தான் செல்ல வேண்டிய பாதையை முடிவு செய்யும் திறன் கொண்டவனாகிறான். அந்தப் பாதையின் முடிவை சரியாக அடைகிறான். அந்தப் பாதையே இறைவனின் மேலான இருப்பிடமாக இருக்கும்." என்றார் எமதர்மன்.


ஆர்வமுடன் அனைத்தையும் கேட்டுக்கொண்டு செயல்படுத்த ஆயத்தமானான் நசிகேதன்.


பிறகு எமதர்மன் ஆன்மாவின் வலிமை பற்றி எடுத்துரைக்கிறார்.


(இன்னும் கேட்போம்...)


மரணத்திற்கு அப்பால் - 11

Sunday, February 28, 2010

மரணத்திற்கு அப்பால் - 9







"ஆன்மா பிறப்பதில்லை, இறப்பதும் இல்லை. இது எதிலிருந்தும் உண்டானதில்லை. எதுவும் இதிலிருந்தும் உண்டாவதில்லை. இது பிறப்பற்றது, என்றென்றும் இருப்பது. நிலையானது, பழமையானது; உடம்பு அழிக்கப்பட்டாலும் அழியாதது."

"நசிகேதா! எல்லா வேதங்களும் எந்த லட்சியத்தை உபதேசிக்கின்றனவோ, எதற்காக எல்லா தவங்களும் செய்யப்படுகின்றனவோ, எதை விரும்பி பிரம்மச்சரிய விரதம் கடைபிடிக்கப் படுகிறதோ அந்த லட்சியத்தை அடைவதற்கான மந்திரத்தைச் சுருக்கமாக உனக்குச் சொல்கிறேன். அது "ஓம்".

"ஓம் என்ற இந்த மந்திரமே இறைவன் இந்த மந்திரம் மேலானது. இந்த மந்திரத்தை அறிந்து யார் எதை விரும்புகிறானோ அவனுக்கு அது கிடைக்கிறது." என்றான் எமதர்மன்.

ஆத்மாவை உணரும் சப்தம்....'ஓம்'. 'ஓம்' இது ப்ரபஞ்சத்தின் சப்தம்.

பொதுவாக நம்மில் மூச்சுப் பயிற்சி துவங்குபவர்கள் 'ஓம்' என்ற உச்சரிப்பை சில நிமிடங்கள் சொல்லிப் பயிற்சி எடுப்பார்கள்.


'ஓம்' என்ற ஒலி உடலின் நாடிகளை ஒருங்கே எழுப்பும் சக்தியாகும். அ, உ, ம் இந்த மூன்றும் .சேர்ந்ததே 'ஓம்' என்றார்கள் பெரியோர்கள். 'அ...' என்று சில வினாடிகள் சொல்லிப் பாருங்கள். அந்த நாதம் உங்கள் அடிவயிற்றிலிருந்து புறப்படுவதாக இருக்கும். அதாவது சப்தத்தின் அதிர்வு உங்கள் வயிற்றை மையமிட்டிருக்கும். 'உ...' என்று சில வினாடிகள் சொல்லிப் பாருங்கள். அந்த நாதம் உங்கள் மார்பிலிருந்து புறப்படுவதாக இருக்கும். சப்தத்தின் அதிர்வு உங்கள் மார்பை மையமிட்டிருக்கும். 'ம்...' என்று சில வினாடிகள் சொன்னால் அந்த சப்தத்தின் அதிர்வு உங்கள் முகத்தை மையப்படுத்தியிருக்கும். இந்த மூன்று மையங்களையும் ஒரே நேரத்தில் அதிர்வுக்குள்ளாக்கி உடலின் நாடிகளை ஒருசேர உயிர்ப்பிக்கும் மந்திரமே 'ஓம்'.

மேலும் 'ஓம்' என்ற மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்கும் போது உடல் ரீதியான நன்மைகளும் உண்டாவதுண்டு. வயிற்றிலிருந்து வெளியேற முடியாமல் இருக்கும் அசுத்தக் காற்று 'ஓம்' என்ற மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரிக்கும் போது வெளியேறி விடுகிறது. இதனால் உடல் காற்று சுத்தமாகி உள் உறுப்புக்கள் முதல் வெளித்தோல் வரை ஒவ்வொரு செல்லுகும் சுத்தமான ஆக்ஸிஜனின் சுழற்சி உண்டாகிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

'ஓம்' ப்ரபஞ்சத்தின் ஒலி என்பதனை தத்துவார்த்தமாக புரியவைக்கவே, திருச்செந்தூரில் கடற்கரையில் இருக்கும் சுவற்றில் உள்ள ஒரு துவாரம் வழியாக காதை வைத்து கேட்கச் சொல்வார்கள். கடலின் காற்று துவாரத்தின் வழியாக வெளியேறும் போது 'ஓம்' என்ற நாதம் போலவே சப்தம் உண்டாகும்.

எமதர்மன் மேலும் தொடர்ந்தான்.."நசிகேதா! இந்தப் பாதை சிறந்தது. இந்தப் பாதை மேலானது. இந்தப் பாதையை அறிந்து அதன் வழிச் செல்பவன் பிரம்ம லோகத்தில் சிறப்பு பெறுகிறான்."

இப்போது எமதர்மன் ஆன்மாவின் தன்மை பற்றி நசிகேதனுக்கு விளக்கினான். "நசிகேதா! நீ அறிந்து கொள்ள விரும்பும் இந்த ஆன்மா பிறப்பதில்லை, இறப்பதும் இல்லை. இது எதிலிருந்தும் உண்டாவதில்லை. இதிலிருந்தும் எதுவும் உண்டாவதில்லை. இது பிறப்பற்றது. என்றென்றும் இருப்பது. நிலையானது, பழமையானது. உடம்பு அழிக்கப்பட்டாலும் அழியாதது" என்று ஆன்மாவின் தன்மை குறித்து நசிகேதனுக்கு விளக்கினான்.

பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் கீதையிலும் இதையே குறிப்பிடுகிறார். போர்களத்தில் எதிரணியில் தனது குருமார்களும் சகோதரர்களுமே இருக்கிறார்கள். இவர்களைக் கொன்று நான் எதை வெல்லப் போகிறேன் என்று கலங்கி நிற்கும் அர்ஜுனனுக்கு போர்க்களம் என்று வந்து விட்டால் வீரன் நடந்து கொள்ள வேண்டிய முறைப் பற்றியும் ஆன்மாவைப் பற்றியும் எடுத்துரைக்கும் போது இவ்வாறு கூறுகிறார்.


"அர்ஜுனா! நானும், நீயும், இந்த அரசர்களும் ஒருபொழுதும் இல்லாமல் இருந்தது இல்லை. இனிமேலும் இந்த உடல்கள் அழிந்தாலும் நாம் எல்லோரும் இல்லாமல் போவதும் இல்லை."

"அர்ஜுனா! ஆன்மா நிலையானது. அழிவில்லாதது. இந்த ஆன்மாவைத் தாங்கும் உடல்கள் தான் அழியும் தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது. எனவே ஆத்மாவைப் பற்றியோ, தேகத்தைப் பற்றியோ நீ துக்கப்படுவதை விட்டு விட்டு போர் செய்யக் கடவாய்!" என்கிறார் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்.

"ஆன்மா ஒருபோதும் இறப்பதுமில்லை, பிறப்பதும் இல்லை. இதுவரை இல்லாமல் இருந்து மறுபடி புதிதாகத் தோன்றுவதும் இல்லை. ஆத்மா பிறப்பு, இறப்பு இல்லாதது, தேயாதது, வளராதது, நிரந்தரமானது. உடல் கொல்லப்பட்டாலும் ஆத்மா கொல்லப்படுவதில்லை" என்று ஆன்மாவின் நிலைத் தன்மை பற்றி கீதையில் கண்ணன் குறிப்பிடுகிறார்.

மேலும் ஆன்மா பற்றி க்ருஷ்ணர் இப்படி விளக்குகிறார். "எவ்வாறு ஒரு மனிதன் கிழிந்து போன பழைய ஆடைகளை நீக்கி விட்டு வேறு புதிய ஆடைகளை உடுத்திக் கொள்ளுகிறானோ, அது போல் ஆத்மா பழைய உடலை விட்டு நீங்கி வேறு புதிய உடலை அடைகிறது."

"அர்ஜுனா! ஆத்மாவை வெட்ட முடியாது. எரிக்க முடியாது. நனைக்க முடியாது. உலர்த்தவும் முடியாது. ஆத்மா நிரந்தரமானது. எங்கும் உள்ளது. நிலையானதாய், அசைவற்றதாய் எப்பொழுதும் உள்ளது." என்று ஸ்ரீ க்ருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஆன்மா நிலையானது என்பதைப் பற்றி விளக்குகிறார்.

இதுவே உபநிஷத்திலும் எமதர்மனால் போதிக்கப்படுகிறது. எமதர்மன் மேலும் தொடர்ந்தான்.


"நசிகேதா! தான் அடிப்பதாக நினைப்பவன், தான் அடிபட்டதாக நினைப்பவன் இருவருமே உண்மையை அறியாதவர்கள். ஆன்மா அடிப்பதும் இல்லை, அடிபடுவதும் இல்லை."

"நசிகேதா! அணுவைவிட அணுவானதும், பெரியதை விடப் பெரியதுமான இந்த ஆன்மா உயிரினங்களில் இதயக் குகையில் இருக்கிறது. ஆசையற்றவன் அதனைக் காண்கிறான். மனத்தெளிவினால் ஆன்மாவின் மகிமையை உணர்கின்ற அவன் கவலைகளைக் கடந்து செல்கிறான்."

மேலும் ஆன்மாவின் வெவ்வேறு நிலைகளையும் என்னவெல்லாம் செய்யவல்லது என்பதையும் நசிகேதனுக்கு விளக்குகிறான் எமதர்மன்.

(இன்னும் கேட்போம்...)

மரணத்திற்கு அப்பால் - 10

Thursday, February 11, 2010

மரணத்திற்கு அப்பால் - 7



"எதைப் பற்றி பலரால் கேட்க முடியவில்லையோ, கேட்டும் பலரால் எதனை அறிய முடியவில்லையோ அந்த ஆன்மாவைப் பற்றி
உபதேசிப்பவரும் அபூர்வம். கேட்பவரும் அபூர்வம். அத்தகைய அபூர்வமான ஒருவரைப் பின்பற்றி அதனை அறிபவரும் அபூர்வம்."

மனிதர்கள் எந்தெந்த சூழ்நிலைகளால் தம்மை வந்தடைகிறார்கள் என்பதைச் சொல்லத் துவங்கினான் எமதர்மன்.

"நசிகேதா! உலகமாயையின் நடுவில் வாழ்கின்ற மூடர்கள் தங்களை அறிவாளிகள் என்றும் பண்டிதர்கள் என்றும் கருதி குறுக்கு வழிகளைப் பின்பற்றுகிறார்கள். உலகச் சூழலில் சிக்கித்தவிக்கும் இவர்கள் நடைமுறை வாழ்வில் எது உயர்வானவை என்று மற்றவர்கள் கூறுகிறார்களோ அதையே உயர்வானது என கருதி உலகச்சூழலை விட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கிறார்கள்.

குருடனால் வழிகாட்டப்பட்ட குருடனைப் போல் இவர்கள் மீண்டும் மீண்டும் பிறவிச் சூழலில் உழல்கிறார்கள்.

குறுக்கு வழியில் மகிழ்ச்சியைத் தேடிச் செல்கின்ற, பணத்தாசையால் அறிவிழந்த, மனப்பக்குவ மற்றவர்களுக்கு மறுவுலக உண்மைகள் புரிவதில்லை. 'இந்த உலகம் தான் எல்லாம், வேறு எதுவும் கிடையாது' என்று கருதுகின்ற அவர்கள் மீண்டும் மீண்டும் என்னை அடைகிறார்கள்."

அதாவது அல்ப சந்தோஷங்களில் மனதை லயிக்கச் செய்து நிரந்தர அமைதியைத் தேடாதவர்கள் ஒவ்வொரு முறையும் எமனை அடைந்து மீண்டும் பிறப்பெய்துகிறார்கள். மரணத்திற்கு அப்பால் மனிதன் மீண்டும் பிறக்கிறான் என்பதை மிகத் தெளிவாக எமதர்மன் விவரிக்கிறான்.

எமதர்மன் மேலும் தொடர்கிறான் "நசிகேதா! எதைப் பற்றி பலரால் கேட்க முடியவில்லையோ, கேட்டும் பலரால் எதனை அறிய முடியவில்லையோ அந்த ஆன்மாவைப் பற்றி உபதேசிப்பவரும் அபூர்வம். கேட்பவரும் அபூர்வம். அத்தகைய அபூர்வமான ஒருவரைப் பின்பற்றி அதனை அறிபவரும் அபூர்வம்."

பூலோக வாழ்க்கையின் சுழற்சியில் சிக்கித்தவிக்கும் யாருக்கும் ஆத்மாவைப் பற்றிய தேடலுக்கு நேரமிருக்காது. அவ்வாறு தேடுபவர்கள் மிகச்சிலர் இருந்தாலும் அவர்களுக்கு உபதேசிக்க, ஆன்மா பற்றி உணர்ந்தரிந்தவர்கள் இருக்கமாட்டார்கள். சரி அப்படியென்றால் ஆன்மாவை எப்படி அறியலாம். இதோ எமதர்மன் தொடர்கிறான்.

"நசிகேதா! உலகியல் மனிதர்களால் கூறப்படும் போது இந்த ஆத்மா பற்றிய விபரங்கள் நன்றாக அறியப்படுவதில்லை. ஏனெனில் அவர்கள் வெவ்வேறு விதமாக விளக்கிவிடுகின்றனர்.

அனுபூதி பெற்றவர்கள் உபதேசம் செய்வதைப் பின்பற்றினால் குழப்பம் இல்லாமல் விளங்கும். உனக்கு நான் விளக்குகிறேன். நசிகேதா கேள்! ஆன்மா அணுவைவிட நுண்ணியது. எனவே வாதங்களுக்கு அப்பாற்பட்டது. அனுபவித்தே அறிந்து கொள்ளக்கூடியது. வெறும் விளக்கங்களால் புரிந்து கொள்ள முடியாதது."



எமதர்மன் தொடர்ந்தான். "அன்பிற்குரியவனே! நீ அடைந்துள்ள இந்த அறிவு வாதங்களால் அடையக்கூடியது அல்ல. உண்மையை உணர்ந்த ஒருவர் உபதேசித்து, அதைப் பின்பற்றும் போது அது ஒருவனை மேலான ஞானத்தைற்கு அழைத்துச் செல்கிறது. நசிகேதா! உண்மையை அடைவதில் நீ உறுதி உடையவனாக இருக்கிறாய். உன்னைப் போன்ற மாணவர்கள் எங்களுக்குக் கிடைக்க வேண்டும்."

"வினைப்பயன்கள் நிலையற்றவை என்று நான் அறிவேன். நிலையற்ற அவற்றால் ஆன்மாவை அடைய முடியாது. அதனால் தான் நிலையற்ற பொருட்களால் நசிகேத யாகத்தைச் செய்த நான் எம பதவியை அடைந்திருக்கிறேன்."

பொதுவாக புண்ணிய காரியங்கள் செய்தால் சொர்கம் கிடைக்கும் என்று சொல்வார்கள். ஆனால் எமதர்மனோ புண்ணியம் செய்தல் என்பது நீங்கள் ஆற்றும் வினைப் பயன். அவற்றால் மேலான ஒரு வாழ்க்கை கிடைக்கும். ஆனால் பிறப்பற்ற தன்மையான ப்ரம்மத்தை அடைதல் நடக்காது என்பதையே தெளிவுபடுத்துகிறார். நிரந்தரமான பரப்பிரம்மத்தோடு கலக்கவேண்டுமானால் ஆத்மாவை உணரவேண்டும் என்பது தெளிவாகிறது.

பிறகு ஆன்மாவின் தன்மையையும் அது இருக்கும் இடம் பற்றியும் எமதர்மன் நசிகேதனுக்கு விளக்குகிறான்.

"நசிகேதா! நீ கேட்ட ஆன்மா சிரமப்பட்டு அடைய வேண்டியது, மறைவான இடத்தில் இருப்பது, இதயக்குகையின் இருண்ட பகுதியில் ஒளிர்வது. பழமையானது. புத்தி விழிப்புற்றவன் ஒளிமயமான அந்த ஆன்மாவை அத்யாத்ம யோகத்தால் தியானித்து இன்ப துன்பங்களைக் கடக்கிறான்."

சரி, இதயக்குகை என்பது எது...

(பொறுங்கள் கேட்போம்.....)



மரணத்திற்கு அப்பால் - 8

Sunday, January 17, 2010

மரணத்திற்கு அப்பால் - 5



_________________________________________________________________________________________
நாம் யார்? நமது வடிவம் என்ன? நமது உணர்ச்சிகள் என்ன? நமது நிஜமான இருப்பிடம் என்ன? நாம் எங்கிருந்து வந்தோம்? எங்கே போகிறோம்?

இந்த வினாக்களையெல்லாம் புரிந்து கொள்ள நாம் அறிய வேண்டிய ஒரே மூலப் பொருள் "ஆத்மா".

ஆம் நாம் தான் அது. அது தான் நாம். அதன் வடிவம் என்னவோ அது தான் நமது நிரந்தர வடிவம். அதன் உணர்வு என்னவோ அதுதான் நமது நிரந்தர உணர்வு. அதன் நிரந்தர வசிப்பிடம் எதுவோ அங்கே செல்ல வேண்டி முயல்வது தான் நம்முடைய நிஜமான ஞானத்தின் அடித்தளம்.

"தத்வம் அஸி" - "நீ தான் அது" (அது = ஆத்மா) - இதை முதலில் உணர்ந்தால் அடுத்த கட்டமான "அஹம் ப்ரம்மாஸ்மி" என்பது உணரப்படும்.
________________________________________________________________________________________


தன்னை இன்னும் சிறிது நேரத்தில் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தப் போகிறான் அந்தச் சிறுவன் என்று தெரியாமலே நசிகேதனை வரவேற்கச் செல்கிறான் எமன்!.

வாயிலைக் கடந்த எமன் அங்கே சிறுவன் இருப்பதைப் பார்த்துத் திகைத்தான். நசிகேதனிடம் அன்புடன் பேசலானான்.

"தூயவனே, விருந்தாளியாக என் இருப்பிடத்தை வந்து சேர்ந்திருக்கிறாய். உன்னை உடனே வரவேற்க்க முடியாத நிலையில், நீ உணவின்றி என் இடத்தில் மூன்று இரவுகள் வசிக்க நேர்ந்தது. பசியால் உடல் வாடி இருக்க நேர்ந்தது. பாலகனே! உன் வருத்தத்தால் எனக்கு தீமை உண்டாகாமலிருக்க உனக்கு மூன்று வரங்கள் அளிக்கிறேன். கேள்!" என்றான் எமதர்மன்.

பொதுவாக எமன் என்றால் உயிரை எடுப்பவன் என்று தான் நமக்குத் தெரியும். ஆனால் எமன் தர்மவான் ஆவதும் சிறந்த மான்புகளால் மட்டுமே என்பது இங்கே தெளிவாகிறது. அதனால் தான் 'எமதர்மன்' என்று அழைக்கிறோம். விருந்தினரை உபசரிக்கும் மாண்பு எமதர்மனாக இருந்தாலும் மீறப்படக்கூடாது என்பது இங்கே அழகாக எடுத்துரைக்கப்படுகிறது.

இதையே திருவள்ளுவர் இவ்வாறு எடுத்துக் கூறுகிறார்..

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து

என்றார் வள்ளுவர். அதாவது அனிச்ச மலர் மோந்து பார்த்தாலே வாடிவிடுமாம். அதுபோல நம் முகம் மாறுபட்டு நோக்கினாலே விருந்தினர் உள்ளம் வாடிவிடுவார்கள் என்கிறார் வள்ளுவர் பெருந்தகையார்.

அப்படி உள்ளம் வாடியவனாக நசிகேதன் நின்று விடக்கூடாது என்ற பதற்றத்திலேயே எமதர்மனும் நசிகேதனுக்கு மூன்று வரங்களை அளிக்க முன்வருகிறான்.

எனவே உன் வருத்தத்தால் எனக்கு தீமை உண்டாகாமலிருக்க உனக்கு மூன்று வரங்கள் அளிக்கிறேன். கேள்!" என்றான் எமதர்மன்.

இதனால் உளம் மகிழ்ந்த நசிகேதன் எமதர்மனிடம் வரங்கள் கேட்க துவங்கினான். பொதுவாக எமலோகம் செல்பவர்கள் யாராக இருப்பார்கள்? இறந்தவர்கள் மட்டும் தான் எமலோகம் செல்ல முடியும். ஆனால் நசிகேதனோ தந்தையின் கட்டளைக்கினங்கியே எமதர்மனிடம் செல்கிறான்.

இறந்து மேலுலகம் செல்பவர்கள் மீண்டும் பூமிக்குத் திரும்புவரே ஆனால் அவரை ஆவியாக வந்திருப்பவர் அதாவது துர் தேவதையாகவே கருதுவர். அதனால் நசிகேதன் தனது முதல் வரத்தை அது குறித்து கேட்க முடிவு செய்தான்.

"எமதர்மனே! உன்னிடமிருந்து திரும்பிச் செல்கின்ற என்னை எனது தந்தை புரிந்து கொள்ள வேண்டும். நான் ஒதுக்கத்தக்கவன் அல்ல என்றும் துர் ஆத்மா என்றும் நினையாமல் என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு நான் அவரிடம் திரும்பிச் செல்லும் போது என் தந்தை என் மீது கோபம் இல்லாதவராகவும், தவறுகள் களைந்து தெளிந்த மனதுடையவராகவும் இருக்க வேண்டும். எனது தந்தையைப் பற்றிய இந்த கோரிக்கையை எனது முதல் வரமாக ஏற்றுக் கொள்வாயாக" என்று எமனிடம் தனது முதல் வரத்தைக் கேட்டான் நசிகேதன்.

இதனை ஏற்றுக் கொள்கிறான் எமதர்மன். "ஏ பாலகா! உன் விருப்பப் படியே உனது தந்தை உன்னைக் காணும்போது உன்னைப் புரிந்து கொள்வார். கோபங்கள் இல்லாமல் உன்னை அன்புடன் ஏற்றுக்கொள்வார். எனது அருளால் இரவில் சுகமாக உறங்குவார். உன் விருப்பப்படியே அவை நடந்தேறும்" என்றான்.

நசிகேதன் தனது இரண்டாவது வரத்தைக் கேட்கலானான். "எமதர்மனே! சொர்கத்தில் வாழ்பவர்கள் தேவத் தன்மையைப் பெறுகின்றனர். அங்கே அழைத்துச் செல்லக்கூடிய யாகத்தைப் பற்றி உனக்குத் தெரியும். கவனமுடன் புரிந்துகொண்டு அதன் படி நடந்து சொர்கத்தை அடைய விரும்பும் எனக்கு அத்தகைய யாகத்தைப் பற்றி சொல்வாயாக. இதனை எனது இரண்டாவது வரமாகக் கேட்கிறேன்" என்றான்.

எமதர்மனும் அதை ஏற்றுக்கொண்டு ஆதிகாலத்தில் நிகழ்த்தப்பட்ட அத்தகைய யாகங்களை விளக்கிச் சொன்னான். நசிகேதனும் அதனைக் கேட்டு புரிந்து கொண்டான். நசிகேதனின் கவனமும் புரிந்துகொள்ளும் தன்மையும் கண்ட எமதர்மன் மிகவும் மகிழ்ந்து போனான். வண்ணமயமான தனது மாலை ஒன்றை பரிசாகக் கொடுத்தான். பின் கூறினான் "நசிகேதா! சொர்கத்திற்கு அழைத்துச் செல்கின்ற யாகத்தைப் பற்றி நீ விரும்பிய படியே எடுத்துக் கூறிவிட்டேன். மக்கள் அந்த யாகத்தை இனி உன் பெயராலேயே அழைப்பார்கள். இனி மூன்றாவது வரத்தைக் கேள்!" என்றான்.

நசிகேதன் எமதர்மனை சங்கடத்தில் ஆழ்த்தப்போகிற வரத்தை இப்போது கேட்கலானான்.

"மரணத்திற்குப் பிறகு மனிதன் வாழ்கிறான் என்று சிலரும், இல்லை என்று சிலரும் கூறுகிறார்கள். இந்தச் சந்தேகத்தை உன்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். மரணத்திற்கு அப்பால் நடப்பது என்ன? என்று எனக்குச் சொல்லுங்கள். இதை எனது மூன்றாவது வரமாக கேட்கிறேன்" என்றான் நசிகேதன்.

சற்றே துனுக்குற்ற எமதர்மன் நசிகேதனை உற்றுப் பார்த்தான். திகைப்பில் பதில் சொல்ல சற்று தாமதித்தான். பின் நசிகேதனிடம் எடுத்துச் சொன்னான் "நசிகேதா! இந்த விஷயத்தில் தேவர்களுக்கும் கூட சந்தேகம் உள்ளது. இது முகவும் நுண்மையான விஷயம். எளிதாகப் அறிந்து கொள்ள முடியாது. என்னைக் கட்டாயப்படுத்தாதே, விட்டு விடு. நீ பாலகன், எனவே வேறு வரம் ஏதாவது கேள் தருகிறேன்! " என்றான்.

"ஓ, தேவர்களுக்கும் இந்த விஷயம் பற்றி சந்தேகம் உள்ளதா! எமதர்மனே! இதனை எளிதாக அறிய முடியாது என்று நீயும் சொல்கிறாய். அப்படியென்றால் இதை உபதேசிப்பதற்கு உன்னைப்போல் வேறொருவர் கிடைக்க மாட்டார். வேறு எந்த வரமும் இதற்கு இணையாக ஆகாது. எனவே இதுவே எனது இறுதி வரமாகக் கேட்கிறேன். நீயே சொல்லிவிடு. மரணத்திற்கு அப்பால் என்ன நடக்கிறது." என்றான் நசிகேதன்.

"ஓ பாலகா, புரிந்துகொள். பல நூறாண்டு ஆயுளைக் கேள் தருகிறேன். நூற்றாண்டு காலம் வாழும் மகன்கள் பேரண்களைக் கேள் தருகிறேன். ஏராளமான பொன்னும் பொருளும் கேள் தருகிறேன். ஆயிரக்கணக்கான பசுக்கள், யானை, குதிரைகள் போன்றவற்றைக் கேள் தருகிறேன். பூமியில் பரந்த அரசைக் கேள் தருகிறேன். நீ விரும்பும் வரை மரணம் உன்னைத் தழுவாது என்றும் வரம் கொடுக்கிறேன், ஏற்றுக்கொள். இதை மட்டும் கேட்காதே" என்றான் எமதர்மன்.

ஆனால் நசிகேதன் தனது நிலையில் உறுதியாக இருந்தான். "வேறு எந்த வரமும் இதற்கு இணையாக ஆகாது. எனவே இதுவே எனது இறுதி வரமாகக் கேட்கிறேன். நீயே சொல்லிவிடு. மரணத்திற்கு அப்பால் என்ன நடக்கிறது." என்றான் மீண்டும்.

அகண்ட தேகமும், மிகப் பெரிய உருவமும், முகத்தை மறைக்கும் மீசையும் சிவந்த கண்களும் கொண்ட எமன் நசிகேதனின் பிடிவாதமான இந்த நிலையை கண்டு திகைப்படைந்தான். நசிகேதனை அமைதியாக உற்றுப் பார்த்தான்...

(நாமும் பார்த்திருப்போம்...பொருங்கள்..)



மரணத்திற்கு அப்பால் - 6