Wednesday, July 1, 2009

உபநிஷத்து கதைகள்

ஒரு முனிவர் மீது ஒருவர் எச்சிலைத் துப்பி விடுகிறார். கோபத்தில் அந்த முனிவர் அவரைப் பார்த்து "அடேய் மூடனே! என்னை மதியாது என் மீது உமிழ்ந்து விட்டாய். நீ பன்றியாக மாறிப்போவாய் என உன்னை சபிக்கிறேன்" என்று சாபம் கொடுத்தார். சாபம் பெற்றவுடன் சந்நியாசியை உமிழ்ந்த மனிதருக்கு ஒரு பயம் வந்து விட்டது.

அவர் தன்னுடைய குழந்தைகளிடம் வந்தார். அவர் தன்னுடைய மூத்த புதல்வனைப் பார்த்து சொன்னார், "மகனே! நான் செய்த ஒரு தவறின் காரணமாக பன்றியாய் மாறும் சாபத்தை ஒரு முனிவர் எனக்கு அளித்து விட்டார். பன்றியானப் பிறகு நான் எப்படி வாழப்போகிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை. அதை நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கிறது. அதனால் எனக்கு நீ ஒரு உதவி செய்ய வேண்டும். நான் பன்றியான உடனே காட்டுக்குச் சென்றுவிடுவேன். நான் எங்கே இருந்தாலும் நீ தேடி வந்து என்னைக் கொன்று விடு! அந்த உருவத்தில் என்னால் வாழ முடியாது" என்று கூறுகிறார்.

சில நாட்களில் அவர் பன்றியாகி காட்டுக்குள் போய் விட்டார். தந்தையின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய காரணத்தால் மகன் தந்தையைத் தேடி காட்டுக்குள் செல்கிறான். குளம் குட்டைகளில் எல்லாம் தேடுகிறான். எங்கேயாவது கூட்டமாக பன்றிகளைப் பார்த்துவிட்டால் உடனே மகன் அதன் அருகிலே போய் "அப்பா" என்று அழைப்பான். அவைகள் எல்லாம் ஓடிவிடும். இவன் தன் அப்பாவை மனித ரூபத்தில் தெரியுமே தவிர‌ பன்றி ரூபத்தில் தெரியாதே! அதனால் தேடிக் கொண்டே இருந்தான்.

இப்படி இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. கடைசியாக ஒரு குளத்தங்கரை அருகிலே போய் நின்று அப்பா என்று கூப்பிட்டான். உடனே ஒரு பன்றி வந்து நின்றது. பின்னாலேயே இன்னொரு பன்றியும் ஓடிவந்தது. இரண்டு மூன்று குட்டிகளும் வந்தன. பன்றி ரூபத்தில் இருந்த தந்தை கேட்டார் "மகனே வந்துவிட்டாயா?!" , "ஆமாம் தந்தையே, நீங்கள் பன்றியான உடனே உங்களைக் கொன்றுவிட என்னிடம் சொன்னீர்களே! அதனால் தான் காடெல்லாம் தேடி உங்களை இப்பொழுது கண்டுபிடித்திருக்கிறேன். உங்களது கோரிக்கையை நிறைவேற்ற இப்போது உங்களைக் கொல்லட்டுமா?" என்று கேட்டான் மகன்.

அதற்கு தந்தை அவசரமாக "வேண்டாம் மகனே! கொல்லாதே. நான் இங்கேயே வாழ்ந்து இந்த இடத்திற்க்கேற்ப்ப ஒரு துணையையும் சேர்த்து மூன்று குட்டிகளையும் பெற்றாகி விட்டது. இப்பொழுது இதுவே எனக்கு போதுமானதாகி விட்டது. அதனால் என்னை இங்கேயே விட்டுவிடு" என்றார். இந்தக் கதை மூலமாக உபநிஷத்தில் சொல்லப்படும் தர்மம் என்னவென்றால் எங்கே போய் இருக்கிறாயோ அதுவே போதுமானது என்று இருக்கும் இடத்திற்க்கேற்ப்ப வாழப்பழகிக்கொள்வது பலவித துன்பங்களிலிருந்து நம்மை விடுவிக்கிறது என்பதாகும்.

"ரோம் நாட்டில் வாழும்போது ரோமானியனாக இரு" என்று ஆங்கிலத்தில் ஒரு வாசகம் சொல்வார்கள். இது தான் அது. சிலருக்கு தலையனை இல்லாமல் தூக்கம் வராது. யார் வீட்டுக்குப்போனாலும் படுக்கும் போது நல்ல தலையனை வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பார்கள். உறவுக்கார‌ர்களிடம் ஒரு தலையனைக்காக முகம் சுளித்து சலித்துக் கொள்வார்கள். இப்படி இருக்கும் இடத்திற்க்கு தகுந்தார் போல் சின்ன சின்ன விஷயத்தைக் கூட மாற்றிக் கொள்ள மனம் இல்லாதவர்கள் யாருடனும் சகஜமாக ஒத்துப் போக மாட்டார்கள்.

இன்ன சுவையில் தான் சாப்பிடுவேன், இன்ன மாதிரி இடத்தில் தான் தங்குவேன் , இன்ன மாதிரி மனிதர்களைப் பார்த்தால் தான் சிரிப்பேன் என்று சின்னச் சின்ன விஷயங்களில் பல விதமாக மனிதர்கள் தங்களைத் தாங்களே ஒரு விலங்கில் பினைத்துக் கொள்கிறார்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் நிம்மதியாகவும் மன கட்டுப்பாடும் இல்லாமல் தவிப்பவர்களாக இருப்பார்கள்.

இது போன்ற மன விலங்குகளை உடைத்து எரிந்து விட்டு மிகவும் திறந்த மனதுடன் வாழ்பவர்கள் எப்போதும் நிம்மதியாக இருப்பார்கள். இதுவே உபநிஷத்தில் அழகான கதையின் மூலம் இந்து தர்மத்தில் விளக்கப்படுகிறது.

நம்மவர்கள் இந்து தர்மத்தை கேலிசெய்தும் பழித்தும் பேசிவரும் தருணத்தில் அமெரிக்கா போன்ற நாடுகளில் வெள்ளையர்கள் இந்து தர்மத்தைப் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்து பல புத்தகங்களை வெளியிட்டு வருகிறார்கள். அவர்கள் உண்மையாக ஒத்துக் கொள்ளும் ஒரு விஷயம் என்ன தெரியுமா? எங்கள் நாட்டிலே மத ரீதியாக சொல்லிக்கொடுக்கப்படாத சில‌ விஷயங்கள் இந்து தர்மத்திலே மிக அழகாகவும் மிக ஆழமாகவும் மனதில் பதியும் வகையில் சொல்லிக்கொடுக்கப்படுகிறது.

அதாவது, மனக்கட்டுப்பாட்டுடன் வாழ்வது மற்றும் நிம்மதி என்ற ஒரு விஷயத்தை இந்து தர்மம் அழகாக போதிக்கிறது. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற எங்கள் கலாச்சாரத்தின் காரணமாக இங்கே ஒவ்வொரு தனி மனிதரும் சுய நிம்மதி என்பதை வாழ்க்கையில் உணராமலே மரித்துப் போய் விடுகிறார்கள். இந்து வாக வாழும் ஒவ்வொருவரும் நிம்மதியாக வாழ்வது என்பதை மிக அருமையாக உணர்ந்து இருக்கிறார்கள் என்று ஒத்துக்கொள்கிறார்கள்.

இப்படி நம்முடைய மனதை மிக எளிமையாகப் பக்குவப்படுத்த இந்து தர்மத்தைத் தவிர‌ வெறெதுவும் இருக்க முடியாது. மனிதன் ஒரு சாபத்தால் பன்றியாக முடியுமா என்று கருப்புச்சட்டை முட்டாளைப்போல் கேள்வி கேட்காமல் இந்தக் கதை சொல்லிக்கொடுக்கும் ஆழ்ந்த நோக்கத்தைப் புரிந்து கொள்ளுதலே உண்மையான பகுத்தறிவாகும். வளரும் குழந்தைகளுக்கு இது போன்ற கதைகளை சொல்லிக் கொடுத்தால் அவர்கள் எதிர்காலத்தில் மிகவும் பக்குவமான மனிதர்களாக வளர்வார்கள் என்பது நிச்சயம்.

அதனாலேயே சொல்கிறேன், இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.