Saturday, August 21, 2010

யோகிராஜ் வேதாந்திரி மகரிஷியின் பொன்மொழிகள்!




நாம் வாழும் காலத்தில் நன்மை செய்தால் இறந்த பின் சொர்கத்திற்குச் சென்று இன்பத்தை அனுபவிக்கலாம் என்றும் தீமைச் செய்தால் நரகத்திற்குச் சென்று துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்றும் பெறியோர்களால் கூறப்பட்டிருக்கிறது.

உண்மையில் சொர்கம் நரகம் என்று இருக்கிறதா என்றால் இல்லை. இவைகள் எல்லாம் அரியாத மக்களுக்கு ஆசைகாட்டியும் அச்சமூட்டியும் அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக பெரியவர்கள் சொல்லி வைத்த கற்பனைக் கதைகள்.

மனோதத்துவப்படி, மனிதன் ஒவ்வொரு செயலிலிருந்தும் ஒரு ஆதாயத்தை எதிர்பாக்கிறான். மனிதனுடைய இந்தத் தன்மையைப் பயன்படுத்தி ஞானிகள் சில கதைகளைக் கற்பித்தார்கள்.

"நீ நல்லது செய்தால் சொர்கத்திற்குச் செல்வாய் என்றும் தீமையைச் செய்தால் கொடிய நரகத்தில் தள்ளப்படுவாய் என்றும் எமலோகத்தில் துன்பத்தை அனுபவிக்க நேருமென்றும்" சொல்லி வைத்தார்கள். மக்கள் தீமையைச் செய்வதிலிருந்து தவிர்த்து அவர்களை நல்வழிப்படுத்தவே இது போன்ற தோற்ற மாயைகள் உருவாக்கப்பட்டன. இவைகள் யாவும் ஒரு வகை மனோவியல் காரணங்களுக்காகவே உண்டாக்கப்பட்டவை. இந்த நம்பிக்கைகள் இருப்பதால் தீங்கில்லை மாறாக நன்மைகளே விளைகின்றன.

'மரணம்' என்பது உண்மையில் என்னவென்று புரிந்து கொண்டால் அது பற்றிய கேள்விகளும் அச்சங்களும் நீங்க வாய்ப்பிருக்கிறது. மரணம் என்பது உடலியக்க விதியில் உண்டாகும் ஒரு மாற்றம் தான். வித்து, ஜீவகாந்தம், உயிர், உடல், புலன்கள், மனம் இவையனைத்தும் ஒரு இணைப்பாக இயங்குகிறது. அதுவே வாழ்வு என அழைக்கப்படுகிறது. இந்த இயக்கங்கள் முரண்பட்டு பிரிந்து விடும் நிலையையே மரணம் என்கிறோம்.

அதாவது உடல் தனது இயக்கத்திலிருந்து தளர்வடையும் போது அதனோடு இயங்கிக் கொண்டிருக்கும், அதன் இயக்கத்திற்குத் தேவையான கூட்டனுக்களும் இந்த உடலோடு இனி கூட்டாக இயங்க முடியாது என முடிவு செய்து விலகிச் சென்று தனித்தியங்கத் துவங்குகிறது. உதாரணமாக ஒரு நிறுவணம் நஷ்டத்தால் கலைக்கப்படுகிறது என்று கொள்வோம். அந்நிறுவனம் என்ற அமைப்பு கலைக்கப்படுகிறது. அந்த அமைப்பில் இருந்த பதவிகள் இல்லாமல் போகின்றன. ஆனால் அந்தப் பதவிகளில் பணி புரிந்து கொண்டிருந்த மனிதர்கள் வெவ்வேறு அமைப்புகளில் சேர்ந்து தனித்தியங்க துவங்குகிறார்கள். அது போலதான் மரணம் என்பதும். உடலிலிருந்து உயிர் பிரிந்தவுடன் உடலிலுள்ள அணுக்கள் குழு இயக்கம் பிரிந்து தனித்து இயங்க்குகின்றன. அவ்வளவே.


ஆக முற்றிலுமாக மரணம் என்பது நிகழ்வதே இல்லை. அணுக்களுடைய கூட்டு இயக்கச் சிறப்பு நிலைகள் மாற்றமடைவதும் அதே அணுக்கள் கூடி மற்றொரு உருவமாகத் திகழ்வதும் இயர்கையின் நியதி.

- யோகிராஜ் வேதாந்திரி மகரிஷி




4 comments:

jagadeesh said...

சொர்க்கம், நரகம் என்று இல்லையென்றாலும், அதை நீங்கள் சொல்லி இருக்க வேண்டாம். பின் நான் நினைத்ததை செய்வேன் என்று தவறு செய்வார்கள். நல்லது செய்து தான் என்ன கிழிக்கிறோம் என்று விட்டுவிடடுமா?

hayyram said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஜகதீஷ். விஷயத்திற்கு போகும் முன் .. படத்திலிருப்பது நீங்கள் தானா? U looks smart. விஷயத்திற்கு வருவோம்.. //நான் நினைத்ததை செய்வேன் என்று தவறு செய்வார்கள். நல்லது செய்து தான் என்ன கிழிக்கிறோம் என்று விட்டுவிடடுமா?// உங்கள் கேள்வி ஞாயமானது தான்? ஆனால் காலத்திற்கு தகுந்தாற்போல மனிதர்களுக்கு விஷய ஞாயம் புரிய வைக்கப்பட வேண்டும். உண்மையை எடுத்துச் சொல்லும் போது தான் நம் மக்களுக்கு நம் தர்மத்தின் மீது நம்பிக்கை வரும். மேலும் விளக்கங்கள் கொடுக்கப்படாமல் இருந்தால் குதர்க்க வாதிகள் கேள்விகளுக்கு அப்பாவிகள் பதில் சொல்ல முடியாமல் தோற்றுப் போய் நிற்பார்கள் அல்லவா? அந்தச் சூழல் அவர்களுக்கு நம் தர்மத்தின் மீதே உள்வெட்கம் கொள்ளச்செய்து விடும். அதனால் இவைகளை ஞான மார்க்கம் வழியாக எடுத்துச் சொல்லி புரியவைப்பது சாலச் சிறந்ததாகிறது. உதாரணமாக விதியைப் பற்றி http://hayyram.blogspot.com/2009/08/blog-post_06.html இப்படி புரிய வைக்கும் போது அதன் உள்ளர்த்தம் உணர்த்தப்படும். மக்கள் இறை நம்பிக்கைக்கும் சமூக சூக்ஷமங்களுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்வார்கள். உண்மையான ஞானம் தேட முயல்வார்கள். நாத்திக மற்றும் அந்நிய மத பயமுறுத்தல் காரர்களுக்கு அஞ்சவேண்டிய அவசியம் இல்லாமல் போகும். எனவே இவையாவும் நன்மை பொருட்டே அன்றி மக்களின் நம்பிக்கையை அசைக்க அல்ல என்பதை புரிந்து கொண்டால் மேலும் வலுவாக தொடரலாம். என்ன சொல்கிறீர்கள்?

jagadeesh said...

நன்றி அன்பரே! மனிதர்கள் தான் செய்யும் கர்மவினையால் தான் வேறுபட்ட பிறப்பை அடைகிறோம் என்று புரியாமல் இருக்கிறான், அதனால் நீங்கள் அதை சொல்லியதும் போட்ட கருத்து அது. நன்றி. இன்னொரு கேள்வி, உலகில் உள்ள மிருகங்கள் எல்லாம் தன் தீய பாவப்பதிவுகளால் தான் இந்த பிறப்பை பெற்றனவா?

hayyram said...

jagadeesh, பொதுவாக பிறப்பற்ற தன்மையை அடைய வேண்டுமானால் நல்வினை தீவினை என்ற இருவினைகளும் அற்ற ஆத்ம சமநிலை கொண்டிருக்க வேண்டும் என்றே கூறப்படுகிறது. இரு வேறு வினைகளுமே பிறப்பிற்கு காரணம் ஆகிறது. கொஞ்சம் கொஞ்சமாக இறை சிந்தனையில் ஆழ்ந்து உணர்வு ஆத்மா இரண்டும் பிரபஞ்ச நிகழ்வுகளோடு ஐக்கியமாகும் போது நாம் பிறப்பற்ற மூலத்தோடு கலக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அந்த சூழ்நிலையில் ஒரு மனிதர் கண்டிப்பாக சமூகவாழ்வில் இருக்க மாட்டார். அவ்வாறு ஆழ்ந்துணர்ந்து தனிமைப்பட்டவர்களே ரிஷிகளாகவும் முனிவர்களாகவும் சித்தர்களாகவும் விளங்குகின்றனர். அவர்கள் அதற்கும் மேல் பல படிகளைக் கடக்க முயற்சித்துக்கொண்டு இருக்கலாம். அது இன்னும் ஆழமான விஷயம் நம் வரை இப்போதைக்கு புரிய வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.

அதற்கு முன் கர்மாவின் தோற்றம் சுழற்சியும் பற்றி புரிந்து கொண்டால் இன்னும் எளிமையாக புரிந்து கொள்ளலாம்.

http://hayyram.blogspot.com/2010/07/16.html . இந்த சுட்டியில் இருக்கும் பின்னூட்ட பதில்களைப் படித்தால் மேலும் விளங்கிக்கொள்ளலாம் என்று நம்புகிறேன். முயற்சித்து விட்டுக் கூறுங்கள்.