Tuesday, September 13, 2011

இனியவனே! இது உண்மை, நீ இறைவனிடமிருந்தே வந்தாய்!




இனியவனே! இது உண்மை. கொழுந்துவிட்டு எரிகின்ற நெருப்பிலிருந்து அதே இயல்புடைய ஆயிரக்கணக்கான நெருப்புப் பொறிகள் எவ்வாறு உண்டாகின்றனவோ, அவ்வாறே அழிவற்ற இறைவனிலிருந்து பலவிதமான உயிரினங்கள் உண்டாகின்றன. அவரிலேயே ஒடுங்கவும் செய்கின்றன.

இறைவன் ஒளிமயமானவர், உருவமற்றவர், இதயத்தில் உறைபவர், அகமும் உறமும் நிறைந்தவர், பிறப்பவற்றவர், பிராணன் இல்லாதவர், மனம் இல்லாதவர், தூயவர், மேலானவர், பிரகிருதியைவிட உயர்ந்தவர்.

பிராணன், மனம், புலன்கள், வெளி, காற்று, நெருப்பு, நீர், அனைத்தையும் தாங்குகின்ற பூமி எல்லம் அந்த இறைவனிலிருந்தே தோன்றின.

அந்த இறைவனுக்கு சொர்க்கம் தலையாக அமைந்துள்ளது. சந்திர சூரியர்கள், கண்கள்; திசைகள், காதுகள்; வெளிப்பட்ட வாக்கு, வேதங்கள், காற்று, ப்ராணன், பிரபஞ்சம், மனம், பூமி, கால்கள். அந்த இறைவனே எல்லா உயிர்களின் உள்ளும் உறைகிறார்.

அந்த இறைவனிடமிருந்து வானுலகம் உண்டாயிற்று. சூரியன் அந்த வானுலகை ஒளிரச் செய்கிறான். சந்திரனிலிருந்து மேகங்கள் உண்டாயின. பூமியில் வளர்கின்ற செடிகொடிகள் மேகங்களின் காரனமாக உண்டாயின. ஆண் பெண்ணிடம் விந்துவை விடுவதன் மூலம் உயிர்கள் தோன்றின.
இவ்வாறு அந்த இறைவனிலிருந்தே பலவிதமான உயிரினங்கள் உண்டாகின்றன.

வேதங்கள், பாடல்கள், மந்திரங்கள், சடங்குகள், வேள்விகள், பல்வேறு கர்மங்கள், தட்சினைகள், காலம், வேள்விகளைச் செய்பவர்கள், சந்திரன் வளர்க்கவும் சூரியன் தகிக்கவும் செய்கின்ற உலகங்கள் ஆகிய அனைத்தும் அந்த இறைவனிலிருந்தே தோன்றின.

பல்வேறு தேவர்கள், சாத்யர்கள், மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், உள்மூச்சு, வெளிமூச்சு, நெல், பார்லி, தவம், சிரத்தை, உண்மை, சுயக்கட்டுப்பாடு, கடமைகள் எல்லாம் அந்த இறைவனிலிருந்தே தோன்றின.

அந்த இறைவனிடத்திலிருந்தே ஏழு புலன்கள், ஏழு சுடர்கள், ஏழு எரிபொருட்கள், ஏழு ஆஹுதிகள் எல்லாம் தோன்றின. இதயக்குகையில் பிராணன் செயல்படுகின்ற உயிர்னங்கள் வாழ்கின்ற ஏழு உலகங்களும் அவரிடமிருந்தே தோன்றின. அனைத்தையும் ஏழு ஏழாக அவரே படைத்தார்.

அந்த இறைவனிடமிருந்தே கடல்கள், மலைகள் எல்லாம் தோன்றின. பல்வேறு நதிகளும் அவரிடமிருந்தே பெருகி ஓடுகின்றன. செடிகொடிகள் அனைத்தும் அவரிடமிருந்தே உண்டாயின. இவ்வாறு அனைத்து இயற்கையாலும் சூழப்பட்டதாக உள்ளது ஆன்மா.

இனியவனே! இறைவந்தான் இந்த அனைத்துமாக இருக்கிறார். கர்மங்கள், தவம் என்று மட்டுமல்ல அழிவற்ற மேலான பிரம்மமாக இருப்பதும் அவரே. இதயக்குகையில் உறைகின்ற அவரை அறிபவன் அறியாமைத் தளையிலிருந்து இப்போதே விடுபடுகிறான்.

- முண்டக உபநிஷத்து


படியுங்கள் ---> ப்ளாக் ஹோல் ரகசியம்


2 comments:

Parthasarathy said...

ஐந்து புலன்கள், இரண்டு சுடர்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், அதென்ன, ஏழு புலன்கள், ஏழு சுடர்கள், ஏழு எரிபொருட்கள், ஏழு ஆஹுதிகள் என்று கொஞ்சம் விளக்கவும்.

hayyram said...

கண்,காது, மூக்கு, வாய் என இவற்றைத் தான் அப்படி விளக்குகிறார்கள். இவற்றால் நாம் அறியும், அனுபவிக்கும் விஷயங்களைச் சுடர்களாகவும், அவற்றால் செயலாற்றுவதை வேள்விகளாக அதாவது ஆஹுதியாகவும் உருவகிக்கிறார்கள். எல்லாம் உருவகம் தான். மற்றபடி சொல்லவரும் விளக்கம் என்னவெனில் அத்தனையும் பிரபஞ்சத்தின் மூல சக்தியிலிருந்து உதித்தவையே, அவற்றின் செயல் பாடுகளும் அதை நோக்கியே என்பதாகும்.